என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • வெற்றி பெற முடியும் என்று எங்களுக்கு நம்பிக்கை இருந்தது.
    • ஹர்திக் விரைவாக பந்துவீச முடியும் என்பது வெளிப்பட்டுள்ளது.

    துபாய்:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 2வது லீக் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. போட்டி நிறைவுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் இந்திய கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:

    ரன்களை சேசிங் செய்யும் போது சூழ்நிலையைப் பொருட்படுத்தாமல் எங்களால் வெற்றி பெற முடியும் என்று எங்களுக்குத் தெரியும். எங்களுக்கு நம்பிக்கை இருந்தது. அவர் (ஹர்திக்) மீண்டும் வந்ததிலிருந்து, புத்திசாலித்தனமாக செயல்படுகிறார்.

    அவர் அணியில் இல்லாத போது, ​​தனது உடற்பயிற்சி முறைக்கு என்ன செய்ய வேண்டும் என்பதைக் கண்டுபிடித்தார். அவரது பேட்டிங் தரம் நாம் அனைவரும் அறிந்ததே, இப்போது அவர் மிகவும் அமைதியாக இருக்கிறார், மட்டைவீச்சு அல்லது பந்து வீச்சில் என்ன செய்ய வேண்டும் என்பதில் அதிக நம்பிக்கையுடன் இருக்கிறார்.

    ஹர்திக் விரைவாக பந்துவீச முடியும் என்பது இன்றைய தினம் வெளிப்பட்டுள்ளது. அவரால் மிக விரைவாக பந்துவீச முடியும். ஒரு ஓவருக்கு 10 ரன்கள் தேவை என்ற உயர் அழுத்தத்தில், நீங்கள் பீதி அடையலாம், ஆனால் அவர் ஒருபோதும் காட்டவில்லை. போட்டி கட்டுப்பாட்டில் இருப்பதை அறிந்திருந்தார், வெற்றி பெற்றதற்கான அனைத்து காரணங்களும் அவரையே சாரும். இவ்வாறு ரோகித் குறிப்பிட்டார்.

    • முதலில் ஆடிய பாகிஸ்தான் 147 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய இந்தியா 148 ரன் எடுத்து வென்றது.

    துபாய்:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 2வது லீக் ஆட்டம் நேற்று நடந்தது. இதில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வுசெய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 147 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அடுத்து ஆடிய இந்தியா 19.4 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 148 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

    தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா 12 ரன்னில் அவுட்டானார். முன்னதாக ரோகித் சர்மா 12 ரன்கள் எடுத்திருந்த போது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருந்த கப்திலை பின்னுக்குத் தள்ளினார். ரோகித் சர்மா இதுவரை 133 டி20 போட்டிகளில் விளையாடி 4 சதம், 27 அரைசதம் உள்பட 3,499 ரன்கள் எடுத்துள்ளார். 2-வது, 3-வது இடங்களில் முறையே கப்தில் (3,497 ரன்), விராட் கோலி (3,343 ரன்) ஆகியோர் உள்ளனர்.

    • உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் ஆஸ்திரேலியா மீண்டும் முதலிடம் பிடித்தது.
    • தரவரிசையில் இந்தியா நான்காம் இடத்தில் நீடிக்கிறது.

    துபாய்:

    இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் முடிவடைந்தது. இதில் இங்கிலாந்து அணி 85 ரன்கள் மற்றும் ஒரு இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் 1-1 என்று சமநிலை வகிக்கிறது.

    இந்தப் போட்டிக்கு பிறகான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை (2021- 2023) வெளியாகியுள்ளது. அணிகளின் வெற்றி சதவீதத்தின் அடிப்படையில் பட்டியலில் இடங்கள் தீர்மானிக்கப்படுகின்றன.

    இந்நிலையில், போட்டியில் அடைந்த தோல்வியின் மூலம் தென் ஆப்பிரிக்க அணி 66.67 சதவீத புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. இந்தப் பட்டியலில் 70 சதவீத புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியது.

    53.33 சதவீத புள்ளிகளுடன் இலங்கை அணி 3-வது இடத்திலும், 52.08 சதவீத புள்ளிகளுடன் இந்திய அனி 4-வது இடத்திலும், 51.85 சதவீத புள்ளிகளுடன் பாகிஸ்தான் அணி 5-வது இடத்திலும் உள்ளன.

    இந்தப் பட்டியலில் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடுவார்கள்.

    • ஆசிய கோப்பையில் இந்தியா பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
    • ஆட்ட நாயகன் விருது ஹர்திக் பாண்ட்யாவுக்கு அளிக்கப்பட்டது.

    புதுடெல்லி:

    ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் 2-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 19.5 ஓவரில் 147 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடக்க வீரர் முகமது ரிஸ்வான் 43 ரன்கள் அடித்து அவுட்டானார்.

    இந்தியா சார்பில் புவனேஷ்வர் குமார் 4 விக்கெட்டும், ஹர்திக் பாண்ட்யா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    அடுத்து ஆடிய இந்தியா 19. 4 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு148 ரன்கள் எடுத்து திரில் வெற்றி பெற்றது. விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா தலா 35 ரன்னும், பாண்ட்யா 33 ரன்னும் எடுத்தனர். ஆட்ட நாயகன் விருது பாண்ட்யாவுக்கு அளிக்கப்பட்டது.

    இந்நிலையில், ஆசிய கோப்பையில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இன்றைய ஆசிய கோப்பை போட்டியில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அந்த அணி சிறப்பான திறமையையும் வெளிப்படுத்தியுள்ளது. இந்திய அணியின் வெற்றிக்கு வாழ்த்துகள் என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

    • முதலில் ஆடிய பாகிஸ்தான் 147 ரன்னில் ஆல் அவுட்டானது.
    • அடுத்து ஆடிய இந்தியா 148 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

    துபாய்:

    ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் 2-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 19.5 ஓவர் முடிவில் 147 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

    தொடக்க வீரர் முகமது ரிஸ்வான் 43 ரன்கள் அடித்து அவுட்டானார். கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய ஷாநவாஸ் தஹானி 6 பந்தில் 16 ரன்கள் எடுத்தார்.

    இந்தியா சார்பில் புவனேஷ்வர் குமார் 4 விக்கெட்டும், ஹர்திக் பாண்ட்யா 3 விக்கெட்டும், அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டும், ஆவேஷ் கான் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களம் இறங்கியது.

    கே.எல்.ராகுல் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். ரோகித் சர்மாவுடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். கோலி பொறுப்புடன் ஆடினார். இந்த ஜோடி 49 ரன்கள் சேர்த்த நிலையில் ரோகித் சர்மா 12 ரன்னில் வெளியேறினார். அவரை தொடர்ந்து விராட் கோலி 35 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து இறங்கிய ரவீந்திர ஜடேஜா நிதானமாக ஆடினார். சூர்யகுமார் யாதவ் 18 ரன்னில் அவுட்டானார்.

    கடைசி 4 ஓவரில் வெற்றிக்கு 41 ரன்கள் தேவைப்பட்டது. 17வது ஓவரில் 9 ரன்கள் கிடைத்தது.

    18வது ஓவரில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி உள்பட 10 ரன்னும், 19வது ஓவரில் 3 பவுண்டரி உள்பட 14 ரன்னும் கிடைத்தது.

    ஜடேஜா, ஹர்திக் பாண்ட்யா ஜோடி 50 ரன்களை கடந்து அசத்தியது. ஜடேஜா 35 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில், இந்தியா 19.4 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 148 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. பாண்ட்யா 33 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    • பாகிஸ்தான் தொடக்க வீரர் ரிஸ்வான் 43 ரன்கள் அடித்தார்.
    • புவனேஷ்வர் குமார் 4 விக்கெட்களை கைப்பற்றினார்.

    துபாய்:

    ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் 2-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    இந்திய அணியில் ரிஷப் பண்ட்டிற்கு பதிலாக தினேஷ் கார்த்திக் இடம் பெற்றிருந்தார். முதலில் களம் இறங்கி பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான பாபர் ஆசம் 10 ரன் எடுத்த நிலையில் புவனேஷ்வர் குமார் பந்து வீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

    மற்றொரு வீரர் ரிஸ்வான் 43 ரன்கள் அடித்த நிலையில் ஹர்திக் பாண்ட்யாவிடம் வீழ்ந்தார். இப்திகர் அகமது 28 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். ஷாநவாஸ் தஹானி 16 ரன்களும், ஹரிஸ் ரவூப் 13 ரன்களும் எடுத்தனர்.

    பாகிஸ்தான் அணி 19.5 ஓவர் முடிவில் 147 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தியா தரப்பில் புவனேஷ்வர்குமார் 4 விக்கெட்களையும், ஹர்திக் பாண்ட்யா 3 விக்கெட்களை கைப்பற்றினார். அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்களையும், ஆவேஷ்கான் ஒரு விக்கெட்டையும் எடுத்தனர். இதையடுத்து 148 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி இந்திய அணி களம் இறங்கி உள்ளது.

    • டாஸ் வென்ற ரோகித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
    • இந்தியா பாகிஸ்தான் போட்டி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

    துபாய்:

    ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகம் நாட்டில் நடைபெற்று வருகிறது. துபாயில் இன்று நடைபெறும் 2-வது லீக் ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

    இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு: இந்தியா: ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா அல்லது தினேஷ் கார்த்திக், புவனேஷ்வர்குமார், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல், அவேஷ்கான்.

    பாகிஸ்தான்: முகமது ரிஸ்வான், பாபர் அசாம் (கேப்டன்), பஹர் ஜமான், இப்திகார் அகமது, குஷ்தில் ஷா, ஆசிப் அலி, ஹசன் அலி, ஷதப் கான், முகமது நவாஸ், ஹாரிஸ் ரவுப், நசீம் ஷா.

    • ஒவ்வொரு இந்தியரும் காத்திருந்த போட்டிக்கான அந்த நாள் வந்துவிட்டது.
    • நாட்டு மக்கள் மற்றும் என் தரப்பில் இருந்து இந்திய அணிக்கு நல்வாழ்த்துக்கள்.

    ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 2-வது லீக் ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில் இன்று நடைபெறும் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஒவ்வொரு இந்தியரும் காத்திருந்த போட்டிக்கான அந்த நாள் வந்துவிட்டது. ஆசிய கோப்பையில் இன்று நடைபெறவுள்ள இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்காக நாங்கள் அனைவரும் மிகவும் ஆர்வமாக உள்ளோம். நாட்டு மக்கள் மற்றும் என் தரப்பில் இருந்து இந்திய அணிக்கு நல்வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    இதேபோல் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இந்தியா - பாகிஸ்தான் ஆசிய கோப்பை போட்டிக்கு ஆவலோடு காத்திருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் கடந்த 2003 ஆம் ஆண்டு உலக கோப்பையின் போது இந்தியா-பாகிஸ்தான் அணிகளின் வீரர்களுடன் மகிழ்ச்சியாக உரையாடும் புகைப்படம் ஒன்றையும் அவர் பகிர்ந்துள்ளார்.

    • கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் வந்ததை அடுத்து அவர் துபாய்க்கு சென்றுள்ளார்.
    • இடைக்கால பயிற்சியாளராக இருந்த லட்சுமணன் பெங்களூருக்கு திரும்பினார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் ஆசிய கோப்பையில் விளையாடவுள்ள சென்ற இந்திய அணியுடன் ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு செல்லவில்லை. இதையடுத்து இடைக்கால பயிற்சியாளராக லட்சுமணன் செயல்பட்டார்.

    இந்த நிலையில் ராகுல் ராவிட் கொரோனா பாதிப்பில் இருந்து தற்போது குணம் அடைந்துள்ளாார். அவரது கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் வந்ததை அடுத்து அவர் துபாய்க்கு சென்று இந்திய அணியுடன் இணைந்துள்ளார். இடைக்கால பயிற்சியாளராக இருந்த லட்சுமணன் பெங்களூருக்கு திரும்பினார்.

    • ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன.
    • இவ்விரு அணிகளும் மோதுகின்றன என்பதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    துபாய்:

    ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் 2-வது லீக் ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. இந்தியா, பாகிஸ்தான் மோதல் என்றாலே உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் குஷியாகி விடுவார்கள். ஐ.சி.சி. உலக கோப்பை, ஆசிய கோப்பை போட்டிகளில் மட்டுமே தற்போது இவ்விரு அணிகளும் மோதுகின்றன என்பதால் எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது.

    நடப்பு சாம்பியனான இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் களம் இறங்குகிறது. கேப்டன் ரோகித் சர்மா, துணை கேப்டன் லேகேஷ் ராகுல், முன்னாள் கேப்டன் விராட் கோலி ஆகியோர் இந்திய அணியின் பேட்டிங் தூண்களாக உள்ளனர். முக்கியமான இந்த ஆட்டத்தில் இவர்கள் சாதுர்யமாக விளையாட வேண்டியது அவசியம். ஒரு மாத ஓய்வுக்கு பிறகு புத்துணர்ச்சியுடன் களம் திரும்பும் கோலி ரன்மழை பொழிவாரா என ரசிகர்கள் ஏக்கத்துடன் காத்திருக்கிறார்கள்.

    இதேபோல் மிடில் வரிசையில் ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார் யாதவ் கைகொடுத்தால் வலுவான ஸ்கோரை எட்டலாம். தினேஷ் கார்த்திக்குக்கு இடம் கிடைப்பது சந்தேகம் தான். ஒரு வேளை அவர் வாய்ப்பு பெற்றால், ரவீந்திர ஜடேஜா வெளியே உட்கார வேண்டி வரும்.

    பந்து வீச்சில் புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹலைத் தான் இந்திய அணி அதிகமாக நம்பி இருக்கிறது.

    பாகிஸ்தான் அணியை எடுத்துக் கொண்டால் அந்த அணிக்கு கேப்டன் பாபர் அசாமும், துணை கேப்டன் முகமது ரிஸ்வானும் முதுகெலும்பாக உள்ளனர். பாபர் அசாம் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து ரன்கள் குவிக்கும் எந்திரமாகத் திகழ்ந்து வருகிறார். 

    பாகிஸ்தானில் நசீம் ஷா, முகமது நவாஸ், ஷதப் கான், ஹாரிஸ் ரவுப் என்று தரமான பவுலர்களுக்கு குறைவில்லை.

    மொத்தத்தில் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சாகித் அப்ரிடி சொன்னது போல, உச்சக்கட்ட அழுத்தம் நிறைந்த இந்த போட்டியில் அதை எந்த அணி திறம்பட கையாள்கிறதோ அந்த அணிக்கே முடிவு சாதகமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

    இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:

    இந்தியா: ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா அல்லது தினேஷ் கார்த்திக், புவனேஷ்வர்குமார், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல், அவேஷ்கான்.

    பாகிஸ்தான்: முகமது ரிஸ்வான், பாபர் அசாம் (கேப்டன்), பஹர் ஜமான், இப்திகார் அகமது, குஷ்தில் ஷா, ஆசிப் அலி, ஹசன் அலி, ஷதப் கான், முகமது நவாஸ், ஹாரிஸ் ரவுப், நசீம் ஷா.

    இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

    • தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்டில் ஆண்டர்சன் 6 விக்கெட் வீழ்த்தினார்.
    • ஆட்ட நாயகன் விருது பென் ஸ்டோக்சுக்கு வழங்கப்பட்டது.

    மான்செஸ்டர்:

    இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா இடையிலான 2வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 85 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்தப் போட்டியில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் இரு இன்னிங்சிலும் சேர்த்து 6 விக்கெட் வீழ்த்தினார்.

    இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனை படைத்தார்.

    இதுவரை டெஸ்டில் 664, ஒருநாள் போட்டியில் 269 மற்றும் டி20-ல் 18 என 367 போட்டிகளில் மொத்தம் 951 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

    முன்னதாக, இலங்கையின் முத்தையா முரளிதரன் (1347), ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்ன் (1001), இந்தியாவின் அனில் கும்ப்ளே (956) ஆகியோர் முதல் 3 இடங்களில் உள்ளனர்.

    • உலக பேட்மிண்டனில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் சாத்விக், சிராக் ஜோடி வெண்கலம் வென்றது.
    • உலக பேட்மிண்டன் தொடரில் பதக்கம் வென்ற முதல் இந்திய ஜோடி என்ற வரலாற்று சாதனையை படைத்தது.

    டோக்கியோ:

    27-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.

    இதில் நேற்று நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி, மலேசியாவின் ஆரோன் சியா-சோ யூ யிக் ஜோடியைச் சந்தித்தது.

    இந்த ஆட்டத்தில் 22-20 என முதல் செட்டில் முன்னிலை பெற்ற சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி அடுத்த இரண்டு செட்களில் 18 - 21,16 - 21 என்ற புள்ளிக்கணக்கில் போராடி தோல்வியுற்றனர். இதன்மூலம் அவர்களுக்கு வெண்கலம் கிடைத்தது. இந்த வெண்கலப் பதக்கத்தின் மூலம் உலக பேட்மிண்டனில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்திய ஜோடி என்ற வரலாற்று சாதனையை படைத்தனர்.

    ×