என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    விழுப்புரத்தில் சித்தி கொடுமையால் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    வானூர்:

    விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் அருகே உள்ள முளைச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் அருள் (வயது 48). கூலித் தொழிலாளி. இவரது மகன் நரேஷ் (24). இவர் திண்டிவனம் வெல்டிங் பட்டறையில் வேலைபார்த்து வருகிறார்.

    இந்தநிலையில் அருள் மனைவி இறந்து விட்டார். இதையடுத்து அருள் 2-வது திருமணம் செய்து கொண்டார்.

    இதையடுத்து நரேஷ் சித்தி சரிவர சாப்பாடு கொடுக்காமல் கொடுமை படுத்தி வந்தனர். இதனால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அதையடுத்து நேற்று மாலை தகராறு ஏற்பட்டது. அப்போது அருள் மற்றும் நரேசுக்கு வாக்கு வாதம் ஏற்படது. ஆத்திரம் அடைந்த இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

    இதில் மனம் உடைந்து நரேஷ் காணப்பட்டார். இதையடுத்து நேற்று இரவு முளைச்சூர் சுடுகாடு பகுதிக்கு நரேஷ் சென்றார். அங்கிருந்த வேப்பமரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கிளியனூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்டட்டது.

    சப்-இன்ஸ்பெக்டர் பாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். தற்கொலை செய்த நரேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு புதுவை தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மரக்காணம் அருகே நண்பர்களுடன் கடலில் குளித்த சென்னை என்ஜினீயர் மாணவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மரக்காணம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள கரிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மோகன் (வயது 22). என்ஜினீயரான இவர் சென்னையில் உள்ள தனியார் கார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். ஊரடங்கு அமலில் உள்ளதால் சொந்த ஊருக்கு வந்திருந்தார்.

    அதே பகுதியை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவன் முருகவேல் (17). நேற்று மோகன், முருகவேல் மற்றும் அவர்களது நண்பர்கள் 5 பேருடன் மரக்காணம் தீர்த்தவாரி கடல் பகுதியில் குளிக்க சென்றனர். முருகவேல், மோகன் ஆகியோர் கடலின் ஆழப்பகுதிக்கு சென்று குளித்தனர். திடீரென எழுந்த ராட்சத அலை அவர்களை இழுத்து சென்றது. இதில் 2 பேரும் கடலில் மூழ்கினர். அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் ஓடிவந்தனர். அவர்களின் உதவியுடன் கடலில் இறங்கி 2 பேரையும் தேடினர். ஆனால், கிடைக்கவில்லை.

    கடலோர காவல்படையினர் கடலில் மூழ்கிய 2 பேரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.வெகுநேரமாக தேடியும் அவர்களின் உடல் கிடைக்கவில்லை. இரவு நேரமாகி விட்டதால் தேடும் பணி கைவிடப்பட்டது. இன்று காலை தீர்த்தவாரி கடல் பகுதியில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் உள்ள கடற்கரையில் மோகன், முருகவேல் உடல்கள் கரை ஒதுங்கியது.போலீசார் அங்கு விரைந்து வந்து 2 பேரின் உடல்களையும் கைப்பற்றினர்.
    புதுச்சேரியில் 2 மாதங்களுக்கு பிறகு மதுபானக் கடைகள் திறக்கப்பட்ட நிலையில், நீண்ட வரிசையில் காத்திருந்து மதுபிரியர்கள் மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர்.
    புதுச்சேரி:

    கொரோனா பரவலை தடுக்கும் விதமாக 4-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கில், புதுச்சேரியில் இன்று முதல் மதுபானக்கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

    காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை மதுபானங்கள் விற்க அனுமதிக்கப்பட்ட நிலையில், தமிழகத்துக்கு இணையாக 3 மடங்கு வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் மதுபிரியர்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி மதுபாட்டில்களை வாங்கிச் செல்கின்றனர்.

    இதனிடையே முந்தைய நாட்களில் தடையை மீறி மதுவிற்ற 102 கடைகள் மட்டும்  திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 
    புதுச்சேரியில் மின்சார வினியோகத்தை தனியார்மயமாக்குவதை ஏற்க முடியாது என முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கடந்த 4 நாட்களாக புதுச்சேரியில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து உள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதை தடுக்க புதுவைக்கு அனுமதி இல்லாமல் வருபவர்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். மத்திய அரசு அறிவித்த நிதி உதவி திட்டங்கள் ஏழை மக்களுக்கும் சிறு சிறு தொழிற்சாலைகளுக்கும் பயனளிக்க கூடியதாகும். மக்களின் வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்தினால் அவர்களது வாங்கும் சக்தி அதிகரிக்கும்.

    யூனியன் பிரதேசங்களில் மின்சார வினியோகம் தனியார் மயமாக்கப்படும் என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். தமிழகம், புதுச்சேரியில் விவசாயிகள், ஏழை மக்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. மின்சார வினியோகம் தனியார் மயமாக்கப்பட்டால் இலவச மின்சாரம் வழங்குவது பாதிக்கப்படும்.

    எனவே தனியார் மயத்தை நாம் ஏற்கமுடியாது. தற்போதைய நிலை நீடித்தால் தான் விவசாயிகளுக்கும், ஏழைகளுக்கும் இலவச மின்சாரம் கிடைக்கும் என நான் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளேன். மின்சாரம் வினியோகம் தனியார் மயமானால் யாருக்கும் பலன் கிடைக்காது. எனவே மின்சார வினியோகத்தை தனியாரிடம் ஒப்படைக்க கூடாது என்பதுதான் எங்கள் கொள்கை.

    மத்திய அரசானது எந்த நிபந்தனையுமின்றி மாநிலங்களுக்கு நிதி ஆதாரங்களை தர வேண்டும். இந்த நேரத்தில் அரசியல் செய்யக்கூடாது. மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட வேண்டும். புதுவையில் மதுக்கடைகளை திறக்க 2 முறை அமைச்சரவை கூடி முடிவெடுத்து அதற்கு கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார். அதாவது தமிழகம், புதுவையில் ஒரே விதமான விலையை நிர்ணயம் செய்து ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மாகி, ஏனாமிலும் மதுக்கடைகளை திறக்க கோப்புகளை அனுப்ப உள்ளோம்.

    மஞ்சள் நிற ரேஷன் கார்டுகளுக்கும் இலவச அரிசி வழங்க ஒப்புதல் கிடைத்துள்ளது. இந்த திட்டத்தை அடுத்த வாரம் நிறைவேற்றுவோம். தமிழகத்தில் தி.மு.க. எம்.பி. ஆர்.எஸ் பாரதி மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் இருந்து அவர் விரைவில் மீண்டு வருவார்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    புதுச்சேரி சிவில் சர்வீஸ் அதிகாரிகள் 6 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 14 அதிகாரிகளுக்கு கரண்ட் டியூட்டி சார்ஜ் என்ற பெயரில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    புதுச்சேரி சிவில் சர்வீஸ் அதிகாரிகள் (பி.சி.எஸ்.) 6 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 14 அதிகாரிகளுக்கு கரண்ட் டியூட்டி சார்ஜ் என்ற பெயரில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி காரைக்கால் குடிமைப்பொருள் வழங்கல் துறை துணை இயக்குனர் ரேவதி காரைக்கால் உள்ளாட்சித்துறை துணை இயக்குனராகவும், மாகி நகராட்சி ஆணையர் அஷிஸ் கோயல் திட்ட செயலாக்க முகமை இணை திட்ட இயக்குனராகவும், இந்து சமய அறநிலைய துறை ஆணையர் சச்சிதானந்தம், புதுச்சேரி வடிசாராய ஆலை மேலாண் இயக்குனராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இதேபோல் காரைக்கால் வட்டார வளர்ச்சி அதிகாரி பிரேமா காமராஜர் பொறியியல் கல்லூரி நிர்வாக இயக்குனராகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த தயாளன் பி.ஆர்.டி.சி. நிர்வாக பொதுமேலாளராகவும், காரைக்கால் உள்ளாட்சி துறை துணை இயக்குனர் பாஸ்கரன் காரைக்கால் பேரிடர் மேலாண்மை துறை துணை இயக்குனராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். பதவி உயர்வு வழங்கப்பட்ட 14 அதிகாரிகளுக்கும் துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    புதுவையில் நேற்று வரை 25 பேருக்கு கொரோனா தொற்று இருந்த நிலையில், மேலும் 5 பேருக்கு இன்று கொரோனா தொற்று உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    இந்தியாவில் கொரோனா பரவ தொடங்கிய போது புதுவையில் 3 பேருக்கு மட்டுமே கொரோனா அறிகுறி இருந்தது. நாளடைவில் மேலும் பரவ தொடங்கியது.

    அதுவும் சென்னை சென்று வந்தவர்கள் மற்றும் வெளிநாடு சென்று புதுவை திரும்பியவர்களுக்கே கொரோனா தொற்று இருந்தது.

    நேற்று மேலும் வட மங்கலம், குரும்பாபேட், வேல்முருகன் நகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    இவர்கள் அனைவரும் கொரோனா தொற்று உடையவர்களுடன் தொடர்பில் இருந்ததால் அவர்களுக்கும் தொற்று ஏற்பட்டது தெரிய வந்தது.

    இதனால் நேற்று வரை புதுவையில் 25 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது.

    இந்த நிலையில் புதுவையில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    இதில் 4 பேர் கதிர்காமம் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியிலும், ஒருவர் ஜிப்மர் ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    இந்த தகவலை புதுவை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரியில் நாளை முதல் மதுக்கடைகள் திறக்கப்படும், கூடுதல் வரி 3 மாதங்கள் அமலில் இருக்கும் என அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரியில் நாளை முதல் மதுபானக்கடைகள் திறக்கப்படும். நாளை காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை மதுக்கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது மதுபானங்கள் மீது உயர்த்தப்பட்ட வரிகள் 3 மாதங்களுக்கு அமலில் இருக்கும் என அம்மாநில அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

    முன்னதாக தமிழகத்தின் டாஸ்மாக் விலைக்கு நிகராக புதுச்சேரியில் மதுபானங்கள் விலையை உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் விற்கப்படாத மதுபானங்களை புதுச்சேரியில் விற்றால் கூடுதலாக 25% கொரோனா வரி, சாராயத்திற்கு 20 சதவீத கொரோனா வரி என அரசாணை வெளியிடப்பட்டது.
    புதுவை அருகே இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை சண்முகாபுரம் வடக்கு பாரதிபுரத்தை சேர்ந்தவர் சாமிநாதன். இவரது மகள் கிறிஸ்டினாள். வயது (21). பெற்றோரை இழந்த இவர் தனது பாட்டி சின்னப்பொண்ணு பராமரிப்பில் இருந்து வந்தார். கிறிஸ்டினாள் வழதாவூர் சாலையில் உள்ள ஐஸ்கிரீம் கடையில் வேலைசெய்து வந்தார்.

    தற்போது கொரோனா தொற்றுநோய் காரணமாக ஐஸ்கிரீம் கடை மூடப்பட்டதால் வேலை இல்லாமல் கிறிஸ்டினாள் வீட்டிலேயே இருந்து வந்தார். இதற்கிடையே கிறிஸ்டினாள் செல்போனில் அடிக்கடி யாருடனே பேசி வந்தார். இதனை அவரது பாட்டி மற்றும் உறவினர்கள் கண்டித்து அவரிடமிருந்த செல்போனை பறித்து வைத்து கொண்டனர்.

    இதனால் கிறிஸ்டினாள் விரக்தியில் இருந்து வந்தார். இதையடுத்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் அனைவரும் தூங்கிய பிறகு வீட்டின் கூரையில் இரும்பு கம்பியில் சேலையால் கிறிஸ்டினாள் தூக்குபோட்டு தொங்கினார்.

    இதையடுத்து அவரை பாட்டி சின்னப்பொண்ணு மற்றும் உறவினர்கள் மீட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே கிறிஸ்டினாள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வெளி மாநிலங்களில் இருந்து இ-பாஸ் இல்லாமல் வருபவர்களை புதுச்சேரிக்குள் அனுமதிக்க வேண்டாம் என கலெக்டர் அருண் உத்தரவிட்டார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரியில் கொரோனா பரவாமல் தடுக்க அரசும், மாவட்ட நிர்வாகமும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்தநிலையில் கலெக்டர் அலுவலகத்தில் வெளியூர், வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பதை தீவிரப் படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் அருண் தலைமை தாங்கினார்.

    இதில் போலீஸ் அதிகாரிகள், தாசில்தார்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் மாநில எல்லைகளில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகளில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டு கண்காணிக்க முடிவு செய்யப்பட்டது. அப்போது வெளியூர்களில் இருந்து வருபவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு அவருடைய வீட்டில் நோட்டீஸ் ஒட்டி, 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவார்கள். கொரோனா அறிகுறி இருப்பதாக சந்தேகப்படும் நிலையில் அவர்களை மாவட்டத்துக்குள் அனுமதிக்கக் கூடாது. அவர்களை கண்காணிப்பு மையத்தில் வைத்து மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும். அதன் பின்னரே அவர்கள் மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். வெளி மாநிலங்களில் இருந்து இ-பாஸ் இல்லாமல் வருபவர்களை புதுச்சேரிக்குள் அனுமதிக்க வேண்டாம் என கலெக்டர் அருண் உத்தரவிட்டார்.
    புதுச்சேரி எல்லைப் பகுதிகளில் கட்டுப்பாடுகளை தீவிரமாக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவையில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மக்களிடையே அச்சம் காணப்படுகிறது. தொற்றினால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவது ஆட்சியாளர்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

    இதையடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், தலைமை செயலாளர் அஸ்வனி குமார், சுகாதாரத்துறை செயலாளர் பிரசாந்த் குமார் பாண்டே, இயக்குனர் மோகன் குமார், கலெக்டர் அருண், போலீஸ் டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவஸ்தவா, சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    அப்போது புதுவையில் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களால் தான் எண்ணிக்கை உயருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் குறித்த தகவல்கள் புதுவை அரசுக்கு முறையாக தெரிவிக்கப்படுவதில்லை. இதனால் அவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்க முடியாத சூழ்நிலை ஏற்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    எனவே வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் குறித்த விவரங்களை பெற்று அவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து கலெக்டர் தலைமையில் அதிகாரிகள் குழுவினை அமைத்து விமான நிலையங்களில் இருந்து தகவல்களை பெற திட்டமிடப்பட்டுள்ளது.

    அதுமட்டுமின்றி தற்போது எல்லைப் பகுதிகளில் தளர்வுகள் கடைபிடிக்கப்படாததால் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எளிதாக புதுச்சேரிக்குள் நுழையும் வாய்ப்பு உள்ளது. எனவே கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு முதல்- அமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டார். இ-பாஸ் இல்லாமல் யாரையும் அனுமதிக்க வேண்டாம் என்றும் அதிகாரிகளை அவர் கேட்டுக்கொண்டார்.
    ஜெயலலிதா இல்லம் நினைவிடமாக மாற்றம் செய்யப்பட்டதற்கு தமிழக முதல்-அமைச்சருக்கு புதுவை அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஓம்சக்தி சேகர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்திசேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அனைவருக்கும் வழிகாட்டியாக முன்னோடியாகப் புரட்சித் திட்டங்களைச் செயல்படுத்தி மக்கள் தொண்டாற்றியவர் மறைந்த தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆவார். தொட்டில் குழந்தைத் திட்டம், பெண் காவலர்கள், அம்மா உணவகம் என உலகமே வியந்து பாராட்டும் திட்டங்கள், அத்தனையும் ஏழை எளியவர்க்கும் பெண்களுக்குமான வாழ்வியல் திட்டங்கள்.

    பெண்குலத்தின் பொன்விளக்காகத் திகழ்ந்து தமிழக மக்களின் நல்வாழ்வுக்காகத் தம்மையே அர்ப்பணித்துத் தவ வாழ்க்கை வாழ்ந்த வேதா இல்லம் புரட்சியின் விலாசம்.

    பல்வேறு அரசியல் எதிர்ப்புகளுக்கிடையிலும், வேதா இல்லத்தை அரசுடைமை ஆக்கிய தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகிய இருவருக்கும் மற்றும் 1½ கோடித் தொண்டர்களும், பத்துக்கோடித் தமிழ்மக்களும் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

    இல்லம் நினைவிடமாக மாற வேண்டும் என்பது ஒவ்வொரு அ.தி.மு.க. தொண்டனின் எண்ணம். புரட்சித்தலைவி அம்மா அவர்களின் கோடான கோடி உண்மைத் தொண்டர்களில் நானும் ஒருவனாக புதுவை மக்களின் சார்பாகவும் அ.தி.மு.க. தொண்டர்களின் சார்பாகவும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    புதுச்சேரியில் மின்துறையை தனியார்மயமாக்கத்தை கண்டித்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    புதுச்சேரி:

    புதுவை மின்துறையை தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவெடுத்து அறிவித்துள்ளது.

    இதனை கண்டித்து புதுவை மாநில மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் காந்திவீதி ஈஸ்வரன் கோவில் அருகே தர்ணா போராட்டம் நடந்தது.

    போராட்டத்துக்கு மாநில செயலாளர் ராஜாங்கம் தலைமை வகித்தார். மத்தியக்குழு உறுப்பினர் சுதாசுந்தர்ராமன், தமிழ் மாநிலக்குழு உறுப்பினர் பெருமாள், மூத்த தலைவர் முருகன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

    செயற்குழு உறுப்பி னர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மத்திய பா.ஜனதா அரசு மின்துறையை தனியாரிடம் தாரை வார்க்கும் முடிவை கைவிட வேண்டும்.

    புதுவை அரசு மின் துறையை அரசு துறையாக பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பப்பட்டது.

    இதேபோல் பாகூர், மதகடிப்பட்டு, திருக்கனூர், வில்லியனூர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட இடங் களில் மார்க்சிஸ்டு கட்சியினர் கையில் பதாகைகளை ஏந்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    ×