என் மலர்
செய்திகள்

புதுவை அருகே இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை
புதுச்சேரி:
புதுவை சண்முகாபுரம் வடக்கு பாரதிபுரத்தை சேர்ந்தவர் சாமிநாதன். இவரது மகள் கிறிஸ்டினாள். வயது (21). பெற்றோரை இழந்த இவர் தனது பாட்டி சின்னப்பொண்ணு பராமரிப்பில் இருந்து வந்தார். கிறிஸ்டினாள் வழதாவூர் சாலையில் உள்ள ஐஸ்கிரீம் கடையில் வேலைசெய்து வந்தார்.
தற்போது கொரோனா தொற்றுநோய் காரணமாக ஐஸ்கிரீம் கடை மூடப்பட்டதால் வேலை இல்லாமல் கிறிஸ்டினாள் வீட்டிலேயே இருந்து வந்தார். இதற்கிடையே கிறிஸ்டினாள் செல்போனில் அடிக்கடி யாருடனே பேசி வந்தார். இதனை அவரது பாட்டி மற்றும் உறவினர்கள் கண்டித்து அவரிடமிருந்த செல்போனை பறித்து வைத்து கொண்டனர்.
இதனால் கிறிஸ்டினாள் விரக்தியில் இருந்து வந்தார். இதையடுத்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் அனைவரும் தூங்கிய பிறகு வீட்டின் கூரையில் இரும்பு கம்பியில் சேலையால் கிறிஸ்டினாள் தூக்குபோட்டு தொங்கினார்.
இதையடுத்து அவரை பாட்டி சின்னப்பொண்ணு மற்றும் உறவினர்கள் மீட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே கிறிஸ்டினாள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.






