என் மலர்tooltip icon

    விருதுநகர்

    சாத்தூர் அருகே கள்ள நோட்டு தயாரித்த கும்பலை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ஜெராக்ஸ் எந்திரத்தை பறிமுதல் செய்தனர்.

    விருதுநகர்:

    அண்மைக்காலமாக தமிழகத்தில் கள்ளநோட்டு புழக்கம் அதிகரித்து வருகிறது. இதைதடுக்க போலீசார் பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

    தென்மாவட்டங்களில் கள்ள நோட்டுகளை தயாரித்து புழக்கத்தில் விடும் கும்பலை போலீசார் கைது செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் கள்ளநோட்டை புழக்கத்தில் விட்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.அதன் விபரம் வருமாறு:-

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சத்திரப்பட்டி பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் நேற்று இரவு மது குடிக்க ஒரு வாலிபர் வந்தார். அவர் மதுபாட்டில்களை வாங்கி விட்டு விற்பனையாளரிடம் 500 ரூபாய் நோட்டை கொடுத்துள்ளார்.

    அந்த நோட்டை பார்த்த போது விற்பனையாளருக்கு சந்தேகம் எழுந்தது. வழக்கமான ரூபாய் நோட்டை விட அதில் சில மாற்றங்கள் இருந்தன. இதுகுறித்து விற்பனையாளர் உடனே சாத்தூர் போலீசுக்கு தகவல் கொடுத்தார்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் 500 ரூபாய் நோட்டை சோதித்தபோது அது கள்ளநோட்டு என தெரியவந்தது. இதையடுத்து கள்ள நோட்டை மாற்ற முயன்ற வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர் சத்திரப்பட்டியைச் சேர்ந்த கார் டிரைவர் சந்தோஷ்குமார் (வயது 36) என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

    தொடர்ந்து அவரது வீட்டிலும் சோதனை செய்யப்பட்டது. அப்போது அங்கு ரூ. 1½ லட்சம் மதிப்புள்ள 500, 100 ரூபாய் கள்ள நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் கள்ளநோட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட கலர் ஜெராக்ஸ் எந்திரமும் பறிமுதல் செய்யப்பட்டது.

    தொடர்ந்து சந்தோஷ் குமாரிடம் நடத்திய விசாரணையில் கள்ள நோட்டு தயாரிக்க பெரிய கொல்லப்பட்டியைச் சேர்ந்த பெருமாள் சாமி (26) மைதீன் (25) ஆகியோர் உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து சந்தோஷ் குமார் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இவர்கள் கள்ளநோட்டை எங்கெங்கு மாற்றினார்கள் என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை 3,107 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்ட நிலையில் திட்டமிட்டபடி தடுப்பூசி போடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
    விருதுநகர்:

    நாடு முழுவதும் கடந்த 16-ந்் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. விருதுநகர் மாவட்டத்தில் 17 மையங்களில் தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. முதல்கட்டமாக மத்திய அரசு அறிவித்தபடி சுகாதார பணியாளர்களுக்கு அனுமதி கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. 10 ஆயிரம் பேர் தடுப்பூசி போடுவதற்கு முன் பதிவு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

    மாவட்டத்தில் தடுப்பூசி போடுவதற்காக 9,760 தடுப்பூசி மருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. தினசரி 100 பேருக்கு ஒவ்வொரு மையத்திலும் தடுப்பூசி போடப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.

    ஆனால் மாவட்டத்தில் தடுப்பூசி போடும் பணியில் எதிர்பார்த்த வேகம் இல்லை. முன்பதிவு செய்திருந்த சுகாதார பணியாளர்கள் கூட உடனடியாக தடுப்பூசி போடுவதற்கு முன்வராத நிலையில் உள்ளது. இதுவரை ஏழு மையங்களில் 3,107 பேருக்கு மட்டுமே தடுப்பூசிபோடப்பட்டுள்ளது. சராசரியாக தினசரி 250 முதல் 275 பேருக்கு மட்டுமே 7 மையங்களிலும் தடுப்பூசி போடப்படும் நிலை உள்ளது.

    எனவே மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே திட்டமிட்டபடி 10 ஆயிரம் சுகாதார பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடுவதற்காக நடவடிக்கையை வேகப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து தடுப்பூசி போட முன்வரும் பொதுமக்களுக்கும் தடுப்பூசி போட வேண்டிய நிலை உள்ளதால் முதல் கட்ட தடுப்பூசி போடும் பணியை விரைந்து முடிக்க வேண்டியது அவசியமாகும். இதனைத்தொடர்ந்தே அடுத்த கட்டமாக தடுப்பூசி போடும் நடவடிக்கைகளில் எதிர்பார்க்கும் வேகம் இருக்க வாய்ப்புள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும். மத்திய அரசு தமிழகத்தில் தடுப்பூசி போடுவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளநிலையில் மாவட்டங்களிலும் இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமாகும்.
    விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்து 549 ஆக உயர்ந்துள்ளது.
    விருதுநகர்:

    மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 3 லட்சத்து 91 ஆயிரத்து 33 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 16,545 பேருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. 16,290 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 24 பேர் அரசு ஆஸ்பத்திரி களில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். வீடுகளில் யாரும் தனிமைப்படுத்தப்படவில்லை.

    மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்து 549 ஆக உயர்ந்துள்ளது. ஆயிரத்து 110 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்த நிலையில் ஆயிரத்து 633 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. தொடர்ந்து மாவட்டத்தில் மருத்துவ பரிசோதனை முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
    சாத்தூர் அருகே மது விற்பனையில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சாத்தூர்:

    சாத்தூர் உட்கோட்ட போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது மதுபாட்டில் விற்ற காளிராஜ் (வயது 22), செல்வராஜ் (54), மணிராஜ் (41), ராஜ்குமார் (36), குணசேகர் (55) ஆகிய 5 பேரிடம் இருந்து 53 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தனர்.

    சாத்தூர் அருகே போத்திரெட்டிபட்டி கிராமத்தில் சுகாதார வளாகத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    சாத்தூர்:

    போத்திரெட்டிபட்டி கிராமத்தில் 1,200 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டது.

    2 ஆண்டுகள் தான் இந்த சுகாதார வளாகம் பயன்பாட்டில் இருந்தது. அதன்பின்னர் சரியான முறையில் பராமரிக்கப்படவில்லை. எனவே தற்போது இந்த சுகாதார வளாகம் பயன்பாடற்ற நிலையில் உள்ளது.

    இந்த கிராமத்தில் உள்ள மக்கள் பெரும்பாலும் விவசாயம் மற்றும் விவசாய கூலி தொழிலாளிகளாக உள்ளனர். பெரும்பாலோனோர் வீடுகளில் கழிவறை வசதி இல்லை.

    இந்தநிலையில் இங்குள்ள பெண்கள் சுகாதார வளாகமும் பயன்பாடற்று போனதால் திறந்தவெளியை கழிவறையாக பயன்படுத்தி வருகின்றனர். ஆதலால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.

    இதுகுறித்து அப்பகுதி பெண்கள் கூறியதாவது:-

    சுகாதார வளாகம் கட்டிய சிலர் ஆண்டுகள் பெண்கள் சுகாதார வளாகத்தை பயன்படுத்தி வந்தனர். பின்னர் சரியான முறையில் சுகாதார வளாகத்தை பராமரிக்கவில்லை.

    ஆதலால் தற்போது சுகாதார வளாகம் பயன்பாடற்ற நிலையில் உள்ளது. இதனால் இந்த பகுதியில் உள்ள பெண்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

    பயன்பாடு இல்லாததால் சுகாதார வளாகத்தை சுற்றி செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டிக்காணப்படுகிறது.

    எனவே தேவையற்ற செடிகளை அகற்றி, சுகாதார வளாகத்தை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என முத்தரசன் கூறினார்.
    ராஜபாளையம்:

    புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்திய விவசாயிகளின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து ராஜபாளையம் ஜவகர் மைதானத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு அந்த கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தலைமை தாங்கினார்.

    இதில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் லிங்கம், அழகிரிசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி, நகர செயலாளர் ரவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தின் முடிவில் முத்தரசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    டெல்லியில் நடைபெற்ற பேரணியில் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தியது கண்டனத்துக்குரியது.

    டெல்லியில் நடைபெற்ற டிராக்டர் பேரணிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் அவர்களுக்கு ஆதரவாக டிராக்டர் பேரணி நடத்த போலீசார் அனுமதி அளிக்கவில்லை.

    விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். அதேபோல போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளையும் தள்ளுபடி செய்ய வேண்டும். அவ்வாறு தவறினால் போராட்டத்தில் ஈடுபடுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ. கூறினார்.
    காரியாபட்டி:

    காரியாபட்டி அருகே ஜோகில்பட்டி, பந்தனேந்தல், கீழ உப்பிலிகுண்டு, மந்திரி ஓடை ஆகிய கிராமங்களில் தி.மு.க. சார்பில் நடத்தப்பட்ட விழாவை முன்னிட்டு வெற்றிபெற்றவர்களுக்கு பரிசினை தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ. வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் பொங்கல் விழாவை முன்னிட்டு பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசு வழங்குவது வழக்கமான ஒன்றாகும். இதேபோன்று தி.மு.க. சார்பில் திருச்சுழி தொகுதி முழுவதும் விளையாட்டு போட்டி, பெண்களுக்கான கோலப்போட்டி வைத்து அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டு வருகிறது. திருச்சுழி தொகுதியில் காரியாபட்டி, நரிக்குடி, திருச்சுழி பகுதிகளில் சென்ற மாதம் பெய்த மழையால் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

    எனவே மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு நிவாரணமாக ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் என மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

    நானும் விருதுநகர் மாவட்ட கலெக்டரை சந்தித்து நிவாரண வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளேன்.

    காரியாபட்டி பகுதியில் முதியோர் உதவித் தொகை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி உள்ளேன்.

    திருச்சுழி தொகுதியில் தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தான் பல்வேறு நலத்திட்டங்கள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் செல்லம், கண்ணன், மாவட்ட கவுன்சிலர் தங்க தமிழ்வாணன், நகர செயலாளர் செந்தில், கீழஉப்பிலிக்குண்டு ஊராட்சி செயலாளர் குருசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 16,544 ஆக உயர்ந்துள்ளது.
    விருதுநகர்:

    மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 16,544 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 3 லட்சத்து 89 ஆயிரத்து 394 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 16,542 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தது. தொடர்ந்து மாவட்டத்தில் பரிசோதனை முடிவை தெரிவிப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
    தைமாத பிரதோஷத்தையொட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று தை மாத பிரதோஷத்தையொட்டி தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே தாணிப்பாறை வனத்துறை கேட்டின் முன்பு குவிந்தனர்.

    காலை 6.50 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் உடல் வெப்ப பரிசோதனை மற்றும் கைகளை கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்த பின்னரே மலைப்பாதை வழியாக பக்தர்கள் கோவிலுக்கு அனுமதிக்கப்பட்டனர்.

    பிரதோஷத்தையொட்டி கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக மதியம் 2 மணி முதல் 4 மணி வரை சுந்தரமகாலிங்கம், சந்தன மகாலிங்கம் சாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர், விபூதி, சந்தனம், வாசனைத்திரவியங்கள் உள்பட 18 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

    இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தைமாத பிரதோஷம் என்பதாலும், குடியரசு தின விடுமுறை நாள் என்பதாலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு தேவையான உணவு மற்றும் அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
    சிவகாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருத்தங்கல், நாரணாபுரம் ஆகிய இடங்களில் புதிய தொடக்கப்பள்ளிகள் தொடக்க விழாவில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு திறந்து வைத்தார்.
    சிவகாசி:

    சிவகாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருத்தங்கல் ஸ்டேண்டர்டு காலனி, நாரணாபுரம் என்.லட்சுமியாபுரம் ஆகிய இடங் களில் புதிய தொடக்க பள்ளிகள் தொடக்க விழா நேற்று காலை நடைபெற்றது.

    விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி புதிய பள்ளிகளை தற்காலிக கட்டிடங்களில் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஏழை மாணவர்களுக்கும் தரமான கல்வியை கொடுக்க வேண்டும் என்பதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோடிக்கணக்கான நிதி உதவிகளை கல்வி வளர்ச்சிக்காக ஒதுக்கி வருகிறார். மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், வண்ண சீருடைகள், காலணிகள், மிதிவண்டி, மடிக்கணினி ஆகியவை வழங்கி ஊக்குவித்து வருகிறார்.

    தற்போது தற்காலிக கட்டிடங்களில் திறக்கப்பட்டுள்ள இந்த 2 பள்ளிகளுக்கும் அனைத்து வசதிகளுடன் புதிய கட்டிடம் கட்ட முதல்-அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன்.

    விரைவில் அதற்கான பணிகள் தொடங்கும். புதிய பள்ளிகள் தொடங்கப்படுவதன் நோக்கம். மாணவர்கள் பள்ளிக்காக தொலைத்தூரங்களுக்கு செல்ல வேண்டாம் என்பது தான். வீட்டின் அருகில் பள்ளி இருப்பது பாதுகாப்பானது. புதிய பள்ளிகளுக்கு தேவையான ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அரசு அறிவித்த பின்னர் பள்ளிகள் செயல்படும். தற்போது தொடங்கப்பட்டுள்ள பள்ளிகள் வரும் காலங்களில் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட வாய்ப்பு உள்ளது.

    பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும். புதிய பள்ளிகள் தொடங்க அனுமதி அளித்த முதல்-அமைச்சருக்கும், கல்வி அமைச்சருக்கும் தொகுதி மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் சந்திரபிரபா எம்.எல்.ஏ., மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி, மாவட்ட கல்வி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சுபாஷினி, வேளாண் உற்பத்தி குழு தலைவர் தெய்வம், நாரணாபுரம் பஞ்சாயத்து தலைவர் வேதராஜன், வார்டு உறுப்பினர் மகேஸ்வரி, அ.தி.மு.க. நிர்வாகிகள் ரவிச்சந்திரன், பொன்சக்திவேல், கருப்பசாமி, முத்தையா, ஆ.செல்வம், பொன்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிவகாசி:

    சிவகாசி ரிசர்வ்லைன் இந்திராநகரில் வசித்து வந்தவர் சிவக்குமார் (வயது 38). கட்டிட தொழிலாளி. இந்தநிலையில் பள்ளபட்டி பகுதியில் நடைபெறும் கட்டிட பணிக்காக சிமெண்டு கலவை எந்திரத்தை கொண்டு சென்றபோது ரோட்டில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த சைக்கிளை சிவக்குமார் எடுத்து அருகில் இருந்த வீட்டின் முன்பு நிறுத்தி வைத்த போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவரது மனைவி சுப்புலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சாத்தூர் அருகே மது விற்ற 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சாத்தூர்:

    சாத்தூர் டவுன் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது. சாத்தூர் குருலிங்காபுரத்தில் வைத்து மதுபாட்டில் விற்ற அதேபகுதியை சேர்ந்த மகேந்திரன் (வயது 61), படந்தால் கிராமத்தில் மதுவிற்ற கருப்பாயி (50) ஆகிய 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து மொத்தம் 35 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். அதேபோல் சாத்தூர் தாலுகா போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது பெரிய கொல்லபட்டி விலக்கு அருகே வைத்து மதுபாட்டில் விற்ற அமீர்பாளையத்தை சேர்ந்த ராமு (41), கன்மாய்சூரங்குடி பகுதியில் மதுபாட்டில் விற்ற அதேகிராமத்தை சேர்ந்த மாரியப்பன் (53) ஆகிய 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து மொத்தம் 14 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
    ×