என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    செங்கம் அருகே கொரோனா உறுதி செய்யப்பட்ட மூதாட்டி மருத்துவமனைக்கு சென்றால் இறந்துவிடுவோம் என பயந்து கடந்த 23-ந்தேதி வீட்டை விட்டு வெளியேறினார்.
    செங்கம்:

    செங்கம் அடுத்த புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த 75 வயது மூதாட்டி ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

    இந்நிலையில் மருத்துவமனைக்கு சென்றால் இறந்துவிடுவோம் என பயந்து கடந்த 23-ந்தேதி மூதாட்டி வீட்டை விட்டு வெளியேறினார்.

    இந்நிலையில் கலசபாக்கம் அடுத்த கீழ்பாலூர் செவிலியர் குடியிருப்பு அருகே மூதாட்டி நேற்று இறந்து கிடந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த சுகாதார துறையினர் விரைந்து வந்து கடலாடி போலீசார் உதவியுடன், மூதாட்டி பிணத்தை மீட்டு அரசு வழிகாட்டுதலின் படி நல்லடக்கம் செய்ய சொந்த ஊரான புதுப்பாளையத்திற்கு கொண்டு சென்று அவரது மகளிடம் உடலை ஒப்படைத்தனர்.

    மூதாட்டியின் மகன், மருமகள், பேரக்குழந்தை ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு திருவண்ணாமாலை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.



    போளூர் பகுதியில் நேற்று ஒரே நாளில் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
    போளூர்:

    போளூர் பகுதியில் நேற்று ஒரே நாளில் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. போளூர் நகரில் மாலிக் தெரு, அம்பேத்கர் நகர் ஆகிய இடங்களில் தலா 2 பேருக்கும், மாரியம்மன் கோவில் தெரு, கோவிந்தசாமி தெரு ஆகிய இடங்களில் தலா ஒருவருக்கும் என 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதேபோல் போளூர் சுற்றி யுள்ள பால்வார்த்து வென்றான், காங்கேயனூர், வெண்மணி, மாம்பட்டு, பேட்டை, பார்வதிஅகரம் ஆகிய கிராமங்களில் தலா ஒருவருக்கும், கேளூரில் 3 பேருக்கும் என மொத்தத்தில் 16 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரையும் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சுந்தர் திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இப்பகுதியில் கிருமிநாசினி தெளித்து சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
    வந்தவாசி அருகே அருங்குணம் கிராமத்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கட்டிட தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
    வந்தவாசி:

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 11 வயது மதிக்கத்தக்க சிறுமி அங்குள்ள ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறாள். நேற்று முன்தினம் இரவு கிராமத்தில் நடந்த தெருக்கூத்து நிகழ்ச்சியை பார்த்து விட்டு சிறுமி வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தாள்.

    அப்போது அந்த வழியாக வந்த அருங்குணம் கிராமத்தைச் சேர்ந்த சர்க்கரையின் மகனும், கட்டிட தொழிலாளியுமான சதீஷ் (வயது 32) என்பவர் சிறுமியை அருகில் உள்ள விவசாய நிலத்துக்கு அழைத்துச் சென்று, அவளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தெரிகிறது.

    சிறுமியின் அலறல் சத்தத்தைக் கேட்டு அந்த வழியாகச் சென்ற கிராம மக்கள் விரைந்து சென்று சிறுமியை மீட்டனர். அந்தச் சிறுமியை சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

    இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பாட்டி வந்தவாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக போக்சோ சட்டத்தில் சதீஷ் கைது செய்யப்பட்டார். அவரை, கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் ஜெயிலில் அடைத்தனர்.

    கைதான சதீஷ் ஏற்கனவே 2 ஆண்டுகளுக்கு முன்பு 15 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுமியை பாலியல் தொந்தரவு கொடுத்து, போக்சோ சட்டத்தில் கைதாகி ஜாமீனில் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
    ஊரடங்கு காலத்திலும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று 12 ஜோடிக்கு திருமணம் நடந்தது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் திருமணம் செய்வது மணமக்கள் வாழ்கையை மிகவும் இனிமையாக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.

    இதனால் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி மிகவும் வசதிபடைத்தவர்களும் கோவிலில் திருமண நிகழ்ச்சியை முடித்துவிட்டு விருந்து உள்ளிட்ட நிகழ்வுகளை திருமண மண்டபத்தில் நடத்துவார்கள்.சில சுபமுகூர்த்த நாட்களில் 100 திருமணங்கள் வரை நடைபெறும்.

    இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட இருப்பது பற்றி அறியாமல் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று திருமணத்தை நடத்துவதற்கு சில மாதங்களுக்கு முன்பே 12 குடும்பத்தினர் பதிவு செய்திருந்தனர்.

    இதைத்தொடர்ந்து நேற்றே திருவண்ணாமலைக்கு வந்துவிட்ட சில திருமண கோஷ்டியினர் இன்று காலை 6 மணி முதல் 7.30 மணிவரையிலான உள்பட 3 முகூர்த்த நேரத்தில், திருமணத்தை நடத்துவதற்காக கோவில் முன்பு திரண்டனர்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்குள் செல்ல காத்திருந்த திருமண கோஷ்டியினர்.

    இன்று முழு ஊரடங்கு என்பதாலும் கொரோனா விதிமுறைகள் கடைபிடிக்கப்படுவதாலும் கோவிலுக்குள் ஒரு திருமணம் முடிந்த பின்னரே, அடுத்த திருமண கோஷ்டியை அனுமதிக்க முடியும் என்று கோவில் ஊழியர்கள் உறுதிபட கூறிவிட்டனர்.

    இதனால் குறிப்பிட்ட முகூர்த்த நேரம் முடிந்து விடும் என திருமண கோஷ்டியினர் தெரிவித்து தங்களை கோவிலுக்குள் அனுமதிக்கும்படி வற்புறுத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து ஒரு ஜோடி முகூர்த்த நேரம் முடித்துவிட கூடாது என்று தங்களின் திருமணத்தை உற்றார் உறவினர் முன்னிலையில் கோவிலுக்கு முன்பே நடத்தி கொண்டனர். இதனால் பிரச்சினை எதுவும் இல்லாமல் திருமணங்கள் நடந்தேறின.

    மணமக்களின் உறவினர்கள் ஊரடங்கு காலத்திலும் அருணாசலேஸ்வரர் கோவில் முன்பு திருமணம் செய்ய முடிந்ததே என்று மிகவும் மகிழ்ச்சியுடன் சென்றனர்.

    செய்யாறு அருகே மது குடிக்க பணம் தராததால் ஆத்திரமடைந்து மனைவியை எரித்து கொன்ற கணவரும் தற்கொலை செய்து கொண்டார்.

    செய்யாறு:

    செய்யாறு அடுத்த முளைகிரிபட்டு பகுதியை சேர்ந்தவர் சங்கர் (வயது 55). இவரது மனைவி பார்வதி (50). சங்கர் தனது மனைவி மற்றும் மகன்களுடன் சென்னையில் தங்கி வேலை செய்து வந்தார்.

    தற்போது சங்கர் வேலை இல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு முளகிரிபட்டில் சங்கர் வீடு கட்டினார்.

    நேற்று முன்தினம் கணவன்- மனைவி இருவரும் முளகிரிபட்டு வந்தனர். நேற்று இரவு சங்கர் தனது மனைவியிடம் மது குடிப்பதற்கு பணம் கேட்டார். அதற்கு அவரது மனைவி ஏற்கனவே மது குடித்துவிட்டு இருக்கிறீர்கள் மேலும் பணம் தரமுடியாது என கூறினார்.

    இதனால் கணவன்- மனைவி இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. விரக்தியடைந்த பார்வதி தன் தற்கொலை செய்து கொள்வதாக கூறினார்.

    இதனைக் கேட்டு ஆத்திரம் அடைந்த சங்கர் நீ என்ன தற்கொலை செய்துகொள்வது நானே உன்னை கொளுத்தி விடுகிறேன் என கூறி வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து வந்து பார்வதி மீட்டு மீது ஊற்றி தீ வைத்தார்.

    இதில் பார்வதி உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இதனால் வலி தாங்காமல் அவர் அலறி துடித்தார்.

    அப்போது சங்கர் தன் மீதும் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டார். தீ மளமளவென உடல் முழுவதும் பரவியது. இதனால் வலி தாங்காமல் வீட்டின் சுவர் ஏறி குதித்து அருகில் இருந்த குட்டையில் விழுந்தார். இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து அனக்காவூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    சப்-இன்ஸ்பெக்டர் கன்னியப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பார்வதி உடல் கருகி இறந்து கிடந்தார்.

    இதையடுத்து குட்டையில் கருகி கிடந்த சங்கரை மீட்டு செய்யாறு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை சங்கர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    கீழ்பென்னாத்தூர் அருகே 15 வயது பள்ளி மாணவியை கடத்தி சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    கீழ்பென்னாத்தூர்:

    கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள சோ.பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் 15 வயது மாணவி. 10-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் வீட்டில் இருந்து திடீரென மாயமானார். அவரை பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் கழிகுளம் கிராமத்தைச் சேர்ந்த பிரசாந்த் (வயது 26) என்பவர் தனது மகளை கடத்தி சென்று விட்டதை அறிந்த மாணவியின் தாய் கீழ்பென்னாத்தூர் போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து, மாணவியை மீட்டனர். மேலும் பிரசாந்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் மரங்கள் வெட்டப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை கிரிவல பாதை ரூ.65 கோடி மதிப்பில் விரிவாக்கம் செய்யப்பட்டது. அப்போது, கிரிவலப்பாதையில் உள்ள பழமையான மரங்களை வெட்டி அகற்ற நெடுஞ்சாலைத் துறையினர் முயன்றனர். இதற்கு பக்தர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இது தொடர்பாக பசுமை தீர்ப்பாயம், தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, மரங்களை அகற்றாமல் சாலை விரிவாக்கம் செய்ய உத்தரவிட்டது.

    இதனால், பல நூறு மரங்கள் தப்பின. அதே நேரத்தில், 50க்கும் மேற்பட்ட மரங்கள் திராவகம் மற்றும் தார் உள்ளிட்ட ரசாயன கழிவுகளை ஊற்றி அழிக்கப்பட்டது.

    இந்நிலையில் கிரிவலப் பாதையில் குபேரலிங்கம் அருகே உள்ள பழமையான மரங்கள் நேற்று வெட்டி சாய்க்கப்பட்டுள்ளன.

    இதனை கண்டித்து இயற்கை ஆர்வலர்கள், கிரிவலப் பாதையில் நேற்று இரவு திடீரென மறியலில் ஈடுபட்டனர்.

    அப்போது பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை மீறி பழமையான மரங்களை வெட்டி அகற்றும் நெடுஞ்சாலைத்துறையின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தனர்.

    மேலும் அவர்கள், இது குறித்து கலெக்டர் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். பின்னர் அவர்கள், நெடுஞ்சாலைத்துறைக்கு எதிராக கண்டன முழக்கமிட்டனர்.

    இதுகுறித்து தகவலறிந்த போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது அவர்களிடம், பசுமை தீர்ப்பாய உத்தரவை மீறி கிரிவலப்பாதையில் மரங்களை வெட்டி அழிக்கும் நெடுஞ்சாலைத் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    அதற்கு பதிலளித்த அதிகாரிகள், மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனையேற்று சுமார் 30 நிமிடங்கள் நடைபெற்ற சாலை மறியல் முடிவுக்கு வந்தது. 

    திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிய உச்சமாக வங்கி மேலாளர் உள்பட 201 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

    மேலும் முக கவசம் அணியாதவர்களுக்கு சுகாதாரத்துறை மற்றும் போலீசார் மூலம் அபராதம் விதிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஒற்றை இலக்க எண்ணில் இருந்து தற்போது புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

    அதாவது நேற்று ஒரே நாளில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 201 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 576 ஆக உயர்ந்துள்ளது.

    இதில் 20 ஆயிரத்து 236 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். 1048 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் இதுவரை 292 பேர் உயிரிழந்து உள்ளனர்.

    வந்தவாசியில் ஒரே வீட்டில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து நகராட்சி ஆணையாளர் உஷாராணி உத்தரவின்பேரில் சுகாதார மேற்பார்வையாளர் லோகநாதன் மற்றும் பணியாளர்கள் அவர்கள் வசிக்கும் தெரு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து, இரும்பு தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டது.

    மேலும் அந்த பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. பிளீச்சிங் பவுடர்கள் தூவப்பட்டன.

    கண்ணமங்கலத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளை மேலாளர், கணக்காளர், பெண் உதவியாளர் ஆகிய 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அனைவரும் நேற்று மாலை அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

    இதன் காரணமாக பிற்பகலில் வங்கியில் வாடிக்கையாளர்களை அனுமதிக்கவில்லை.

    முன்னதாக வங்கியில் பணிபுரியும் ஆண் பணியாளருக்கு தொற்று ஏற்பட்டது. பின்னர் அவரது மனைவிக்கும் தொற்று கண்டறிப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை என்று கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்தார்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை நகராட்சி பகுதிக்கு உட்பட்ட வேட்டவலம் சாலை சிமெண்டுகார தெருவில் நேற்று சுகாதாரத் துறை சார்பில் காய்ச்சல் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமை கலெக்டர் சந்தீப்நந்தூரி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து திருவண்ணாமலை நகர பகுதியில் கொரோனா தடுப்பு வழிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது திருவண்ணாமலை சன்னதி தெருவில் உள்ள ஒரு பாத்திரக்கடையில் சமூக இடைவெளியின்றி ஏராளமான மக்கள் நிற்பதை கண்ட கலெக்டர் கடைக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கு சமூக இடைவெளி இல்லாமல் மக்கள் இருந்ததை தொடர்ந்து உடனடியாக அக்கடைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்க நகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    பின்னர் மாட வீதியில் உள்ள ஒரு ஓட்டலிலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காததால் அந்த ஓட்டலுக்கும் நேரில் சென்று எச்சரிக்கை விடுத்து ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தார். அதேபோன்று சமூக இடைவெளியை கடைபிடிக்காத ஒரு நகைக்கடைக்கும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து திருவூடல் தெருவில் உள்ள ஒரு நகை கடையில் கூட்டம் அதிகம் இருப்பதை கண்ட கலெக்டர் அந்த கடைக்கு சென்று பார்வையிட்டு, கடை உரிமையாளரை அழைத்து அரசு உத்தரவுகளை பின்பற்ற மாட்டீர்களா என்று எச்சரிக்கை விடுத்தார். ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கவும் நகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    அதற்கு நகராட்சி அலுவலர்கள் கடந்த வாரம் இந்த கடைக்கு அபராதம் விதிக்கப்பட்டது என்று தெரிவித்தனர். தொடர்ந்து விதிமுறைகளை மீறினால் கடைக்கு சீல் வைக்கப்படும் என்று கடை உரிமையாருக்கு கலெக்டர் எச்சரிக்கை விடுத்தார்.

    தொடர்ந்து அந்த கடையின் மேல்தளத்தில் உள்ள தங்க நகை விற்பனை பிரிவுக்கு சென்று பார்த்தார். அங்கும் ஏராளமானோர் நின்று கொண்டிருந்தனர். இதையடுத்து மேலும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்க உத்தரவிட்டார். பின்னர் கடையில் தேவையின்றி நின்றவர்கள் அனைவரையும் வெளியேற்ற உத்தரவிட்டார். கலெக்டரின் அதிரடி நடவடிக்கையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    பின்னர் அவர் திருமஞ்சன கோபுர வீதியில் நடைபெற்ற காய்ச்சல் சிறப்பு முகாமை பார்வையிட்டார். அப்போது அப்பகுதியில் உள்ள கடைக்காரர்களுக்கும் கொேரானா பரிசோதனை மேற்கொள்ள முகாம் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று சிகிச்சைக்காக தற்போது 1,500 படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளது. இதில் 30 சதவீதம் படுக்கைகள் நிரப்பப்பட்டு உள்ளது. கொரோனா தொற்று சிகிச்சைக்கு தேவையான மருந்துகள், படுக்கைகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. மேலும் மாவட்டத்தில் காய்ச்சல் சிறப்பு முகாம்களை அதிகப்படுத்துவதற்காக 54 நடமாடும் மருத்துவ குழு பயன்படுத்தப்படுகிறது. அதுமட்டுமின்றி 99 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இந்த காய்ச்சல் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள 73 மினி கிளினிக் டாக்டர்களையும் அந்தந்த பகுதியில் உள்ள கொேரானா தொற்று கண்டறியப்பட்ட பகுதிகளில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டு உள்ளது.

    கடந்த ஒரு வாரமாக தினமும் சுமார் 2 ஆயிரம் பேருக்கு கொரோனா பாிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் முககவசம் அணியாதது, சமூக இடைவெளியை பின்பற்றாதது போன்ற கொரோனா வழிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்க சுகாதாரத் துறை, வருவாய்த் துைற, நகராட்சி மற்றும் போலீசார் மூலம் 25 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. ஒரு நாளுக்கு சுமார் ரூ.2 லட்சம் வரை அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. 2 முறை அபராதம் விதிக்கப்பட்டும் கொரோனா வழிமுறையை பின்பற்றாத கடைக்கு சீல் வைக்கப்படும்.

    45 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஒரு நாளைக்கு சுமார் 2,000 பேர் தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். தேவையான அளவு கொரோனா தடுப்பூசி இருப்பு உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.
    கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக திருவண்ணாமலை சித்ரா பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் வரவேண்டாம் என கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார்.
    திருவண்ணாமலை :

    பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாட்களில் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு பின்புறம் உள்ள மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் தூரம் பக்தர்கள் கிரிவலம் சென்று வருகின்றனர்.

    இதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகிறார்கள். கார்த்திகை தீப திருவிழாவுக்கு அடுத்து சித்ரா பவுர்ணமியில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

    தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதன் காரணமாக திருவண்ணாமலையில் கிரிவலத்துக்கும் தடை விதிக்கப்பட்டது. ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் 10 லட்சம் பக்தர்கள் கிரிவலம் செல்லும் சித்ரா பவுர்ணமி வருகிற 26-ந் தேதி (திங்கட்கிழமை) மதியம் 12.16 மணிக்குதொடங்கி 27-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9.59 மணி வரை உள்ளது.

    இந்த சித்ரா பவுர்ணமியில் திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து கலெக்டர்சந்தீப்நந்தூரி கூறியதாவது:-

    திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமியில் கிரிவலம் செல்ல பக்தர்கள் வரவேண்டாமென கேட்டுக்கொள்ளப்படுகிறது. தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி கொரோனா தொற்று பரவாமல் பொதுமக்களை பாதுகாப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைக்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அவர் தெரிவித்து உள்ளார்.
    தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையை கட்டுப்படுத்த அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
    வந்தவாசி:

    தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையை கட்டுப்படுத்த அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கட்டாயம் முககவசம் அணியவேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வந்தவாசி பஜார் வீதியில் உள்ள ஒரு பேக்கரியில் முககவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் வியாபாரம் செய்ததாக வந்தவாசி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மஞ்சுநாதன் ரூ.500 அபராதம் விதித்தார். பின்பு அங்கிருந்தவர்களுக்கு முககவசம் கொடுத்து அதை அணியுமாறு போலீசார் வலியுறுத்தினர். பின்னர் நடந்து செல்லும் பொதுமக்களை முககவசம் அணிந்து செல்லுமாறு தலைமை காவலர் விஜயன், பெண் காவலர்கள் அருள் தேவி, பிரியா ஆகியோர் வலியுறுத்தினார்கள்.
    போளூர் அருகே இளம்பெண் மாயமானது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் அவரை தேடி வருகிறார்கள்.
    போளூர்:

    போளூரை அடுத்த செங்குணம் கிராமத்தில் விவசாயி ஒருவரின் 21 வயது மதிக்கத்தக்க மகள் பிளஸ்-2 படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். அவரை, 15-ந்தேதியில் இருந்து காணவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து இளம்பெண்ணின் தந்தை போளூர் போலீசில் நேற்று புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி வழக்குப்பதிவு செய்து மாயமான இளம்பெண்ணை தேடி வருகிறார்.
    ×