என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் மரங்கள் வெட்டப்பட்டதை கண்டித்து மறியல்

    திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் மரங்கள் வெட்டப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை கிரிவல பாதை ரூ.65 கோடி மதிப்பில் விரிவாக்கம் செய்யப்பட்டது. அப்போது, கிரிவலப்பாதையில் உள்ள பழமையான மரங்களை வெட்டி அகற்ற நெடுஞ்சாலைத் துறையினர் முயன்றனர். இதற்கு பக்தர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இது தொடர்பாக பசுமை தீர்ப்பாயம், தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, மரங்களை அகற்றாமல் சாலை விரிவாக்கம் செய்ய உத்தரவிட்டது.

    இதனால், பல நூறு மரங்கள் தப்பின. அதே நேரத்தில், 50க்கும் மேற்பட்ட மரங்கள் திராவகம் மற்றும் தார் உள்ளிட்ட ரசாயன கழிவுகளை ஊற்றி அழிக்கப்பட்டது.

    இந்நிலையில் கிரிவலப் பாதையில் குபேரலிங்கம் அருகே உள்ள பழமையான மரங்கள் நேற்று வெட்டி சாய்க்கப்பட்டுள்ளன.

    இதனை கண்டித்து இயற்கை ஆர்வலர்கள், கிரிவலப் பாதையில் நேற்று இரவு திடீரென மறியலில் ஈடுபட்டனர்.

    அப்போது பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை மீறி பழமையான மரங்களை வெட்டி அகற்றும் நெடுஞ்சாலைத்துறையின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தனர்.

    மேலும் அவர்கள், இது குறித்து கலெக்டர் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். பின்னர் அவர்கள், நெடுஞ்சாலைத்துறைக்கு எதிராக கண்டன முழக்கமிட்டனர்.

    இதுகுறித்து தகவலறிந்த போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது அவர்களிடம், பசுமை தீர்ப்பாய உத்தரவை மீறி கிரிவலப்பாதையில் மரங்களை வெட்டி அழிக்கும் நெடுஞ்சாலைத் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    அதற்கு பதிலளித்த அதிகாரிகள், மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனையேற்று சுமார் 30 நிமிடங்கள் நடைபெற்ற சாலை மறியல் முடிவுக்கு வந்தது. 

    Next Story
    ×