என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    குடும்ப தகராறில் 2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்றுவிட்டு தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே உள்ள அய்யம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்தி என்ற அருள்ராஜ் (வயது 30). மினிவேன் டிரைவர். இவருடைய மனைவி புஷ்பலதா (26). இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. சர்வேஷ் (2) என்ற மகனும், சஞ்சனா என்ற ஒரு வயதில் பெண் குழந்தையும் இருந்தனர்.

    கடந்த 21-ந் தேதி புஷ்பலதாவின் உறவினர் வீட்டில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு செல்லவேண்டும் என புஷ்பலதா, கணவர் அருள்ராஜிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அன்று இரவு கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் தூங்கச்சென்று விட்டனர்.

    கணவனுடன் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த புஷ்பலதா நள்ளிரவில் இரு குழந்தைகளுடன் காணாமல் போய்விட்டார். உறவினர்கள் உதவியுடன் பல இடங்களில் தேடினர். அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இந்த நிலையில் நேற்று காலை அதே கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில் புஷ்பலதா உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். ஒரு குழந்தை தண்ணீரில் இறந்து கிடந்தது. இதைபார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். உயிருக்கு போராடிய புஷ்பலதாவை பொதுமக்கள் கிணற்றில் இருந்து மீட்டனர்.

    பின்னர் இதுகுறித்து அவருடைய உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து புஷ்பலதாவிடம் விசாரித்தபோது குழந்தைகள் இருவரையும் கிணற்றில் வீசி கொன்றுவிட்டு, அவர் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து குழந்தைகளின் உடல்கள் மீட்கப்பட்டது.

    இந்த சம்பவம் குறித்து ததகவலறிந்த கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகுமார், சப்- இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி, 2 குழந்தைகளின் உடலையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ரெட்டி சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு, குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்ற தாய் புஷ்பலதாவிடம் விசாரணை நடத்தினார்.

    இது குறித்து கண்ணமங்கலம் போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து புஷ்பலதாவை கைது செய்தனர். குடும்ப தகராறில் 2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்றுவிட்டு தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    ஆந்திர மாநிலம் பீமவரம் பகுதியை சேர்ந்த மாதவி என்ற பெண் கடந்த 5 நாட்களாக ஒரு நாளைக்கு 2 கிலோ மீட்டர் வீதம் கிரிவலப் பாதையில் அங்கப்பிரதட்சணம் செய்து வருகிறார்.
    திருவண்ணாமலை :

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்குபின்புறம் உள்ள மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில்ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

    தற்போது, ஊரடங்கால் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலும், ஆந்திர மாநிலம் பீமவரம் பகுதியை சேர்ந்த மாதவி என்ற பெண் கொரோனா தொற்றில் இருந்து மக்கள் விடுபட வேண்டி கடந்த 5 நாட்களாக ஒரு நாளைக்கு 2 கிலோ மீட்டர் வீதம் கிரிவலப் பாதையில் அங்கப்பிரதட்சணம் செய்து வருகிறார்.

    இவர், ஏற்கனவே உலக நன்மைக்காக 3 முறை கிரிவலப்பாதையில் அங்கப்பிரதட்சணம் செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    சரக்கு வேனில் கடத்தப்பட்ட 1,250 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
    திருவண்ணாமலை:

    விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு ரேஷன் அரிசி கடத்தி வருவதாக திருவண்ணாமலை குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேகாமதிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது தலைமையில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, ஏட்டு கலையரசி மற்றும் போலீசார் நேற்று காலை திருவண்ணாமலை அருகில் உள்ள தண்டரை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது விழுப்புரத்தில் இருந்து வந்த சரக்கு வேனை போலீசார் வழிமறித்து சோதனை நடத்தினர். அதில் 50 கிலோ எடை கொண்ட 25 மூட்டை ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதன் மொத்த எடை 1,250 கிலோ ஆகும். இதையடுத்து ரேஷன் அரிசியை கடத்தி வந்த திருவண்ணாமலை தேனிமலை பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (வயது 46), வள்ளிவாகை பகுதியை சேர்ந்த ஏழுமலை (49) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் ரேஷன் அரிசியையும், சரக்கு வேனையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
    திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது குறைய தொடங்கி உள்ளது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது குறைய தொடங்கி உள்ளது. இந்த நிலையில் நேற்று திருவண்ணாமலை மாவட்டத்தில் 206 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதுமட்டுமின்றி 5 பேர் உயிரிழந்து உள்ளனர்.

    இதனால் நேற்று வரை மாவட்டம் முழுவதும் 47 ஆயிரத்து 700 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனா். இதில் 45 ஆயிரத்து 695 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து உள்ளனர். தற்போது ஆயிரத்து 445 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 560 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து உள்ளனர்.
    பேய் விரட்ட எடுத்த நடவடிக்கையால் மகன் இறந்து விட்டானே என்று அவரது தாய் கதறி அழுதார்.
    கண்ணமங்கலம்:

    வேலூர் அடுத்த அரியூர் ஜே.ஜே. நகரை சேர்ந்தவர் கார்த்தி. இவரது மனைவி திலகவதி (வயது 35). தம்பதியின் மகன் சபரி (7). கார்த்தி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். சபரி வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.

    மேலும் சில நாட்களாக கண்கள் இருண்டு மிகவும் சோர்வாக இருந்துள்ளார். சில நேரங்களில் அலறல் சத்தமும் போட்டுள்ளார். இதனால் தாய் திலகவதி சபரிக்கு பேய் பிடித்ததாக கருதினார். சபரியை பார்த்த சிலர் அவனுக்கு பேய் பிடித்துள்ளது. பேயை வந்தவாசியை சேர்ந்த ஒருவர் விரட்டி விடுவதாக கூறியுள்ளனர்.

    இதை நம்பியதாய் திலகவதி மகன் சபரியை அழைத்துக்கொண்டு தனது சகோதரிகள் கவிதா, பாக்கியலட்சுமி ஆகியோருடன் வந்தவாசிக்கு ஆட்டோவில் சென்றார்.

    வந்தவாசி செல்ல போதிய பணமில்லை என்பதால் ஆட்டோ டிரைவர் கண்ணமங்கலம் புதிய பஸ் நிலையத்தில் 4 பேரையும் இறக்கி விட்டுச் சென்றார்.

    அதற்குள் நள்ளிரவு நேரமாகிவிட்டதால் 4 பேரும் கண்ணமங்கலம் பேரூராட்சி அலுவலகம் முன்பு தங்கியுள்ளனர். இந்த நிலையில் அதிகாலை 3 மணி அளவில் சபரிக்கு வலிப்பும், மூச்சு திணறலும் அதிகமாக வந்தது.

    இதனால் திகைத்துபோன 3 பேரும் சபரியின் உடலில் பேய் உள்ளது. அவனை அடித்தால் பேய் ஓடிவிடும் என்று கருதி சிறுவனை தாக்கினர். அவனது கழுத்தை நெரித்துள்ளனர்.

    ஏற்கனவே மூச்சு திணறல் மற்றும் வலிப்பால் உடல் சோர்வடைந்த நிலையில் இருந்த சபரி இவர்களின் பேய் விரட்டும் நடவடிக்கையால் துடிதுடித்து பரிதாபமாக இறந்தான்.

    அப்போதுதான் அவர்கள் 3 பேருக்கும் சிறுவன் இறந்து விட்டது தெரியவந்தது. 3 பேரும் சிறுவன் உடலை பார்த்து கதறி அழுதனர். பேய் விரட்ட எடுத்த நடவடிக்கையால் மகன் இறந்து விட்டானே என்று அவரது தாய் கதறி அழுதார். அவர்கள் அடித்ததில் சிறுவனின் முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது.

    இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள். சிறுவனின் பிணத்தை பார்த்து கண்ணமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இன்ஸ்பெக்டர் சசிகுமார், சப்- இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் நடந்த சம்பவத்தை கூறினர்.

    சபரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    திலகவதியின் சொந்த ஊர் குடியாத்தம் அருகே உள்ள கே.வி.குப்பம். தற்போது வாடகை வீட்டில் அரியூரில் வசித்து வருகின்றனர் என போலீசார் தெரிவித்தனர்.

    சிறுவனின் தாய் திலகவதி மனநிலை பாதிப்படைந்தவர் போல் உள்ளார். அவரிடமும் கவிதா, பாக்கியலட்சுமியிடமும் போலீசார் விசாரணை நடத்தி கைது செய்தனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    சமூக விலகலை கடைப்பிடிக்காத 4 கடைகாரர்களுக்கு தலா ரூ.500 அபராதம் விதித்தனர். மொத்தம் ரூ.18,400 அபராதத்தொகையை வசூல் செய்தார்கள்.
    போளூர்:

    போளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சங்கர், தரணி, சிவகுமார் மற்றும் போலீசார் போளூர் டவுன் மற்றும் போலீஸ் எல்லையில் உள்ள 55 கிராமங்களில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    கடந்த 13-ந்தேதி முதல் நேற்று முன்தினம் வரை 6 நாட்களில் முககவசம் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகள், பாதசாரிகள் என 82 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதித்தனர். மேலும் சமூக விலகலை கடைப்பிடிக்காத 4 கடைகாரர்களுக்கு தலா ரூ.500 அபராதம் விதித்தனர். மொத்தம் ரூ.18,400 அபராதத்தொகையை வசூல் செய்தார்கள்.
    சப்-இன்ஸ்பெக்டர் வீடு மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பற்றி இன்று காலை தெரியவந்ததும் அப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் சுந்தர். இவர் திருவண்ணாமலை மத்தளகுளத் தெருவில் வசித்து வருகிறார். நேற்று நள்ளிரவு 12.30 மணி அளவில் மர்ம நபர்கள், சுந்தர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர்.

    இதில் தீப்பற்றி அவரது வீட்டின் சுவர் கரும்புகை படர்ந்து காணப்படுகிறது. இன்று அதிகாலை தூங்கி எழுந்த அவர்கள் வீட்டில் கரும்புகை இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    அப்போதுதான் அவர்களுக்கு பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருப்பது தெரியவந்தது.

    தனது வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வெடி குண்டு வீசிய நபர்கள் யார்? என்பது அவருக்கு தெரிய வில்லை.

    தனது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் இந்த சம்பவம் நடந்துள்ளது என்பதை புரிந்து கொண்ட அவர் இதுபற்றி இன்று காலை கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து முன்விரோதம் காரணமாக குற்றவாளிகள் யாரும் இந்த செயலில் ஈடுபட்டார்களா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சப்-இன்ஸ்பெக்டர் வீடு மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பற்றி இன்று காலை தெரியவந்ததும் அப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

    தையல் தொழிலாளி குடிபோதையில் அய்யம்பாளையம் கிராமத்தில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் இருந்த மா மரத்தில் மாங்காய் பறிக்க ஏறியதாகக் கூறப்படுகிறது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையை அடுத்த பண்டிதபட்டு பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 34),தையல் தொழிலாளி. இவர் குடிபோதையில் அய்யம்பாளையம் கிராமத்தில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் இருந்த மா மரத்தில் மாங்காய் பறிக்க ஏறியதாகக் கூறப்படுகிறது.

    அப்போது அவர் மரத்தில் இருந்து தவறி அருகில் இருந்த கிணற்றில் விழுந்தார். அதை பார்த்த அக்கம் பக்கத்தினர் திருவண்ணாமலை தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புப்படை வீரர்கள் கிணற்றில் தவறி விழுந்த சுரேசை பிணமாக மீட்டனர்.

    அவரின் உடலை போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவண்ணாமலையில் தற்போது 1,664 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 540 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைய தொடங்கி உள்ளது. இந்த நிலையில் நேற்று 197 பேர் தொற்றுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர். அதுமட்டுமின்றி 2 பேர் உயிரிழந்து உள்ளனர்.

    இதுவரை 46 ஆயிரத்து 951 பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனா். இதில் 44 ஆயிரத்து 747 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து உள்ளனர். தற்போது 1,664 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 540 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
    பெரணமல்லூரில் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் சாவடி தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 48). கூலித்தொழிலாளி. இவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த அவர் நேற்று விஷத்தை குடித்து விட்டார். உடனடியாக அவரை செய்யாறு அரசு ஆஸ்பத்திரியிலும், பின்னர் அங்கிருந்து வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியிலும் சேர்த்தனர்.

    ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் இறந்து விட்டார். இதுகுறித்து பெரணமல்லூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் திருநீலகண்டன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று 246 பேர் தொற்றுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர். அதுமட்டுமின்றி 7 பேர் உயிரிழந்து உள்ளனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது குறைந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று 246 பேர் தொற்றுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர். அதுமட்டுமின்றி 7 பேர் உயிரிழந்து உள்ளனர்.

    நேற்று வரை 46 ஆயிரத்து 753 பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனா். இதில் 44 ஆயிரத்து 88 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து உள்ளனர். தற்போது 2 ஆயிரத்து 127 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 538 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து உள்ளனர்.
    திருவண்ணாமலை மாவட்டத்திலும் நேற்று முன்தினம் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது. டாஸ்மாக் கடைகளில் மது பிரியர்கள் நீண்ட வரிசையில் நின்று மதுபானங்களை வாங்கி சென்றனர்.
    திருவண்ணாமலை:

    கொரோனா தொற்றின் 2-ம் அலையை கட்டுப்படுத்த தமிழகத்தில் கடந்த மாதம் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து கடந்த மாதம் 9-ந் தேதி டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டது. அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் 219 கடைகளும் மூடப்பட்டது.

    கொரோனா தொற்று பரவல் குறைய தொடங்கியதையடுத்து தமிழகத்தில் சில மாவட்டங்களை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் அரசு தரப்பில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இதில் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் டாஸ்மாக் கடைகளும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது.

    திருவண்ணாமலை மாவட்டத்திலும் நேற்று முன்தினம் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது. டாஸ்மாக் கடைகளில் மது பிரியர்கள் நீண்ட வரிசையில் நின்று மதுபானங்களை வாங்கி சென்றனர்.

    டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட முதல் நாளான நேற்றுமுன்தினம் ஒரே நாளில் ரூ.5 கோடிக்கு மதுபானம் விற்பனை நடைபெற்று உள்ளது. தொடர்ந்து நேற்றும் பெரும்பாலான டாஸ்மாக் கடைகளில் மதுபிரியர்கள் வரிசையில் நின்று மதுபானம் வாங்கி சென்றனர்.
    ×