என் மலர்
திருப்பூர்
- பக்ரீத் பண்டிகையை முஸ்லிம்கள் தியாக திருநாளாக கொண்டாடி வருகிறார்கள்.
- மசூதிகளில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
திருப்பூர்:
உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் ஆண்டு தோறும் 2 பெருநாளை கொண்டாடுவார்கள். ஒன்று ரம்ஜான் பண்டிகை. மற்றொன்று பக்ரீத் பண்டிகை ஆகும். பக்ரீத் பண்டிகையை முஸ்லிம்கள் தியாக திருநாளாக கொண்டாடி வருகிறார்கள்.
அதன்படி இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது. புத்தாடை அணிந்து மசூதிகளுக்கு சென்று சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு பக்ரீத் பண்டிகையை கொண்டாடினர்.
திருப்பூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் சார்பாக திருப்பூர் பெரிய கடை வீதி நொய்யல் வீதி அரசுப்பள்ளி வளாகத்தில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.
மாவட்டத்தலைவர் நூர்தீன் தலைமையில் நடந்த சிறப்பு தொழுகையில், மாவட்ட ச்செயலாளர் யாசர் அரபாத், மாவட்ட பொருளாளர் சிராஜித், மாவட்ட துணை தலைவர் ஜாகீர் அப்பாஸ் , மாவட்ட துணைச்செயலாளர் காஜா பாய் ஆகியோர் உரை யாற்றினர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் சார்பாக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 28 கிளைகளில் தொழுகை நடைபெற்றது. இதே போல் திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்திற்குட்பட்ட தாராபுரம், உடுமலை உள்பட பல்வேறு இடங்க ளில் உள்ள மசூதிகளில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
காலை 7 மணியில் இருந்து சிறப்பு தொழுகை தொடங்கியது. தொழுகை முடிந்த பிறகு பிரார்த்தனை செய்தனர். உறவினர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். தொழுகைக்கு பிறகு குர்பானி கொடுக்கப்பட்டது. ஆடுகள் தனி நபராகவும், மாடுகள் கூட்டு குர்பானியாகவும் கொடுக்கப்பட்டது.
குர்பானி கொடுக்கப்பட்ட ஆட்டு இறைச்சியின் ஒரு பங்கை தாங்கள் வைத்து கொண்டனர். மற்ற 2 பங்குகளை உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும் பிரித்துக் கொடுத்தனர்.
சகோதரத்துவத்தை ஏற்படுத்தும் விதமாக தியாக திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக அதிகாலையிலேயே எழுந்து புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகையில் பங்கேற்றோம்.
பின்னர் ஆட்டு கிடாய்களை குர்பானி கொடுத்து அந்த இறைச்சியின் ஒரு பங்கை ஏழை-எளிய மக்களுக்கும், ஒரு பங்கை உற்றார், உறவினர்களுக்கும், ஒரு பங்கு எங்களுக்கும் என்று பிரித்து கொடுத்து உற்சாகமாக கொண்டாடினோம்.
உலக மக்கள் நோய் நொடி இல்லாமல் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்று சிறப்பு தொழுகையில் வேண்டிக்கொண்டோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- சுற்றுலா தளங்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.
- ஏராளமான சுற்றுலாப் பயணிகள் திருமூர்த்தி மலைக்கு வந்து செல்கின்றனர்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்திமலை உள்ளது. இங்குள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய கடவுள்கள் ஒருசேர ஒரே குன்றில் சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள்.
கோவிலுக்கு வருகின்ற வழியில் படகு இல்லம், சிறுவர் பூங்கா, நீச்சல் குளம், திருமூர்த்திஅணை உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன.அவற்றை பார்வையிடவும் அணைப் பகுதியில் அமர்ந்து புகைப்படம் எடுத்து மகிழவும் மலைமீது உள்ள பஞ்சலிங்க அருவியில் விழுகின்ற மூலிகை தண்ணீரில் குளித்து புத்துணர்வு பெறுவதற்காகவும் நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் திருமூர்த்தி மலைக்கு வந்து செல்கின்றனர்.
இதனால் உடுமலை பகுதியின் சிறந்த சுற்றுலா மற்றும் ஆன்மிகத் தலமாக திருமூர்த்திமலை விளங்கி வருகிறது. இந்த நிலையில் பக்ரீத் பண்டிகையையொட்டி பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டு உள்ளது. இதன் காரணமாக சுற்றுலா தளங்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் சுற்றுலாப் பயணிகள் கார், வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் திருமூர்த்தி மலைக்கு வருகை தந்தனர்.
பின்னர் அருவிக்கு சென்று குடும்பத்துடன் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.அதைத் தொடர்ந்து அடிவாரப் பகுதிக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகள் மும்மூர்த்திகளை சாமி தரிசனம் செய்து விட்டு திரும்பிச் சென்றனர். மழை பொழிவுக்கு பின்பு அருவியில் சீரான முறையில் நீர்வரத்து ஏற்பட்டு உள்ளதால் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது.
- கடந்த 10 மாதங்களாக பல லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளை அடித்ததை பன்னீர்செல்வம் ஒப்புக்கொண்டார்.
- விசாரணையில் பன்னீர்செல்வம் பணம் எடுப்பது போல் ஏ.டி.எம்.மிற்கு செல்வார்.
தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரம், காங்கேயம், பல்லடம் மற்றும் திண்டுக்கல், மதுரை, நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க வரும் முதியவர்களுக்கு உதவி செய்வது போல் அவர்கள் ஏ.டி.எம். கார்டை வைத்து பணம் திருடும் சம்பவங்கள் நடைபெற்று வந்தது. இது குறித்து தாராபுரம் போலீசாருக்கு புகார்கள் வரவே அதிரடி விசாரணை நடத்தினர்.
அப்போது திண்டுக்கல் மாவட்டம் மடூர், புகையிலைப்பட்டி, கிழக்கு தெருவை சேர்ந்த பன்னீர்செல்வம் (வயது 29) என்பவர் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பன்னீர்செல்வம் பணம் எடுப்பது போல் ஏ.டி.எம்.மிற்கு செல்வார். அங்கு பணம் எடுக்க வரும் முதியவர்களை முதலில் குறி வைப்பார். அதன் பிறகு அவர்களுக்கு தானாக வந்து உதவி செய்வது போல உதவி செய்வார் . அப்போது பணம் எடுக்க தெரியாத முதியவர்களுக்கு உதவி செய்வது போல நடித்து, முதியவர்கள் தெரிவிக்கும் 4 இலக்க பின் நம்பரை புத்திசாலித்தனமாக தன் நினைவில் வைத்து கொள்வார்.
அதன் பிறகு முதியவர்கள் கேட்கும் பணத்தை மட்டும் அவர்களது வங்கிக் கணக்கில் இருந்து எடுத்துக் கொடுக்கும் பன்னீர்செல்வம் முதியவர்களின் ஏடிஎம்., கார்டை அவர்களுக்கு திருப்பி கொடுக்க மாட்டார். அதற்கு பதிலாக அவர் ஏற்கனவே போலியாக வைத்திருந்த ஏ.டி.எம். கார்டை முதியவர்களிடம் கொடுத்து விடுவார்.
முதியவர்கள் ஏ.டி.எம்.மில் இருந்து சென்ற பிறகு அவர்களின் கார்டை வைத்து வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை ஏ.டி.எம். மூலம் எடுத்துள்ளார். இந்தநிலையில் தாராபுரத்தில் முதியவர்களின் ஏ.டி.எம்.மில் இருந்து பணம் தானாக எடுக்கப்படுவதாக தொடர்ந்து தாராபுரம் குற்றவியல் போலீசாருக்கு புகார்கள் வரவே, தாராபுரம் காவல் ஆய்வாளர் ரவி தலைமையில் தனிப்படை அமைத்து மோசடி நபரை தேடி வந்தனர்.
தாராபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு ஏ.டி.எம்.மில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்திய போது அவர் பன்னீர்செல்வம் என்பதும் , முதியவர்களின் ஏ.டி.எம். கார்டுகள் மூலம் மோசடியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. மாஸ், தொப்பி அணிந்து டிப்-டாப்பாக வலம் வந்த அவர், அப்பாவி மக்களை ஏமாற்றி பணம் கொள்ளையடித்து வந்துள்ளார். கடந்த 10 மாதங்களாக பல லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளை அடித்ததை பன்னீர்செல்வம் ஒப்புக்கொண்டார். கைதான அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- மருத்துவமனையில் நடைபெறும் புதிய கட்டிடப் பணிகள் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
- மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை அமைச்சர் சந்தித்து நலம் விசாரித்தார்.
அவினாசி:
கோவையில் நடைபெற்ற தி.மு.க. முப்பெரும் விழாவில் பங்கேற்ற மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று காலை அவிநாசி அரசு பொது மருத்துவ மனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது மருத்துவ மனையில் உள்ள மருந்தகம், ஆண்கள் - பெண்கள் மருத்துவ பகுதி, அறுவை சிகிச்சை அரங்கம் , மருத்துவ மனையில் நடைபெறும் புதிய கட்டிடப் பணிகள் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
மேலும் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை சந்தித்து நலம் விசாரித்து, அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.
- வனவிலங்குகளுக்கு தேவையான உணவு, தண்ணீர் தேவையை வனப்பகுதி பூர்த்தி செய்து அடைக்கலம் அளித்து வருகிறது.
- சேதத்திற்கு உரிய இழப்பீடு வழங்குமாறு விவசாயிகள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
உடுமலை:
உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, கரடி, சிறுத்தை, காட்டெருமை, செந்நாய், கடமான் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகிறது. வனவிலங்குகளுக்கு தேவையான உணவு, தண்ணீர் தேவையை வனப்பகுதி பூர்த்தி செய்து அடைக்கலம் அளித்து வருகிறது.
ஆனால் கோடை காலத்தில் வெப்பத்தின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் வனம் பொழிவு இழந்து ஆறுகளிலும் நீர் வரத்து நின்று விடுகிறது. இதனால் உயிரை காப்பாற்றிக்கொள்வதற்காக பசி, தாகத்தோடு யானை உள்ளிட்ட வனவிலங்குகள் அடிவார பகுதியை நோக்கி வருவது வாடிக்கையான நிகழ்வாகும்.
அந்த வகையில் இந்த ஆண்டு நிலவிய கோடை வெப்பத்தின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் ஏராளமான வனவிலங்குகள் அடிவாரப்பகுதிக்கு வந்து விட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மழை பெய்து வனம் பசுமைக்கு மாறினாலும் ஆறுகளில் பெரிதாக நீர்வரத்து இல்லை. இதனால் வனவிலங்குகள் வனப்பகுதிக்குள் திரும்பி செல்லாமல் அடிவாரப்பகுதியிலேயே முகாமிட்டு வருவதுடன் விளை நிலங்களுக்குள் புகுந்து சேதத்தையும் ஏற்படுத்தி வருகிறது.
அந்த வகையில் நேற்று முன்தினம் வளையபாளையம் கிராமத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள நிலங்களுக்குள் புகுந்த யானைகள் மின்சார வேலி மற்றும் தென்னங்கன்றுகளை சேதப்படுத்தியது. இது குறித்த தகவல் வனத்துறைக்கு தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் அங்கு வருகை தந்த வனத்துறையினர் பார்வையிட்டனர். சேதத்திற்கு உரிய இழப்பீடு வழங்குமாறு விவசாயிகள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
- நிலத்தடி நீர் நிறம் மாறி வருவது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- ஏராளமான சாய ஆலை தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஒன்றியம், கரைப்புதூர் ஊராட்சி பகுதியில் கடந்த சில நாட்களாக ஆழ்துளை கிணற்றில் இருந்து வரும் தண்ணீர் நிறம் மாறி பெட்ரோல் நிறத்தில் நுரையுடன் வெளி வருகிறது. ஆழ்துளை கிணறு அமைத்து அதில் கிடைக்கும் தண்ணீர் மூலம் விவசாயம் மற்றும் அன்றாட பயன்பாட்டுக்கு அப்பகுதி விவசாயிகள்- பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் நிலத்தடி நீர் நிறம் மாறி வருவது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து பொதுமக்கள் கூறியது:- கரைப்புதூர் ஊராட்சிக்கு உட்பட்டது லட்சுமி நகர், அபிராமி நகர். இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இந்த பகுதியில் ஏராளமான சாய ஆலை தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. மழை பெய்யும் போது சாய கழிவுநீரை நேரடியாக திறந்து விடுகின்றனர். இதன் காரணமாக ஆழ்துளை கிணறு தண்ணீர் மாசடைந்து நிறம் மாறி வருகிறது. அதனை பயன்படுத்திய சிலருக்கு சரும நோய்கள் ஏற்பட்டுள்ளது. எனவே மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து சாய ஆலை கழிவு நீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றனர்.
- காரில் இருந்து 500 கிலோ புகையிலை பொருட்களுடன் கார் பறிமுதல் செய்யப்பட்டது.
- டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ மீது மோதியது.
காங்கயம்:
திருப்பூரில் இருந்து ஒரு காரில் 500 கிலோ புகையிலை பொருட்களை கடத்தி செல்லப்படுவதாகவும், எனவே அனைத்து சோதனை சாவடிகளிலும் போலீசார் உஷாராக இருக்கும் படியும், சோதனை சாவடியை கடந்து செல்லும் வாகனங்களை முழுமையாக சோதனை செய்யுறுமாறும் அறிவுறுத்தப்பட்டது.
இதையடுத்து திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து போலீஸ் நிலைய போலீசாரும், சோதனை சாவடிகளில் பணியில் இருந்த போலீசாரும் வாகன தணிக்கையை தீவிரப்படுத்தினர்.
இந்தநிலையில் திருப்பூர்-காங்கயம் சாலையில் காங்கயத்தை அடுத்துள்ள ஊதியூர் போலீஸ் நிலைய பகுதி சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனை செய்தனர். அப்போது அந்த வழியாக வந்த வெளிமாநில பதிவு எண் கொண்ட காரை நிறுத்துமாறு போலீசார் சைகை காட்டினர். ஆனால் அந்த கார் நிற்காமல் தாராபுரம் நோக்கி அதிவேகமாக சென்றது.
இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் ஆகியோர் அந்த காரை பின்னால் விரட்டி சென்றனர். போலீசார் பின் தொடர்ந்து வருவதை கவனித்த கார் டிரைவர், காரின் வேகத்தை அதிகப்படுத்தினார். இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ மீது மோதியது. இந்த விபத்தில் ஆட்டோ கவிழ்ந்தது.
இதையடுத்து கார் டிரைவரை போலீசார் பிடித்து வந்து விசாரித்தனர். விசாரணையில் அவர் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த அருள் (வயது 24) என்பதும், அவர் ஓட்டி வந்த காரில் 500 கிலோ புகையிலை பொருட்கள் இருப்பதும், பெங்களூரில் இருந்து பழனிக்கு புகையிலை பொருட்களை கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து போலீசார் அருளை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் காரில் இருந்து 500 கிலோ புகையிலை பொருட்களுடன் கார் பறிமுதல் செய்யப்பட்டது. சினிமா பாணியில் காரில் புகையிலை பொருட்களை கடத்திய வாலிபரை போலீசார் விரட்டி சென்று மடக்கி பிடித்த சம்பவம் காங்கயம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- காலை 9 மணிக்கு மங்கலத்தில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறப்பு விழா மற்றும் தி.மு.க. கொடியேற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருப்பூர் வருகை தர உள்ளதால் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
திருப்பூர்:
தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை (சனிக்கிழமை) திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள தி.மு.க. கட்சி மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். காலை 9 மணிக்கு மங்கலத்தில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறப்பு விழா மற்றும் தி.மு.க. கொடியேற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
பின்னர் காலை 11 மணிக்கு திருப்பூர் அங்கேரிபாளையம் ஜெகா கார்டன் முத்துகிருஷ்ணன் திருமண மண்டபத்தில் நடக்கும் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 265 ஊராட்சிகளில் உள்ள வீரர், வீராங்கனைகளுக்கு 33 வகையான விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
பாராளுமன்ற தேர்தல் வெற்றிக்கு பிறகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருப்பூர் வருகை தர உள்ளதால் திருப்பூர் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். மேலும் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர்.
- ஒவ்வொரு கடைக்கும் தலா ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
- 15 கிலோ புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகரில் பல்வேறு இடங்களில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி விஜய லலிதாம்பிகைக்கு ரகசிய தகவல்கள் வந்தன.
இதையடுத்து இன்று காலை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி விஜயலலிதாம்பிகை தலைமையில் அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இணைந்து மங்கலம் ரோடு, மில்லர் பஸ் நிறுத்தம், போயம்பாளையம், தென்னம்பாளையம் ஆகிய பகுதிகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது 5 கடைகளில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து பொது மக்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது இதையடுத்து 5 கடைகளுக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர்.
மேலும் ஒவ்வொரு கடைக்கும் தலா ரூ. 25 ஆயிரம் அபராதமும் விதித்தனர். மேலும் பல்வேறு இடங்களில் பதுக்கி வைத்திருந்த 15 கிலோ புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் வியாபாரியான கேரளாவை சேர்ந்த முகமது பர்கான் (23) என்பவரை கைது செய்தனர். தொடர்ந்து திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
- கரைப்புதூர் உள்ளிட்ட ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைப்பதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
- கிராம ஊராட்சியை இணைத்தால் சொத்து வரி உள்ளிட்ட வரியினங்கள் உயர்த்தப்படும்.
பல்லடம்:
திருப்பூர் மாநகராட்சியை விரிவாக்கம் செய்யும் வகையில், அருகில் உள்ள கிராம ஊராட்சிகளை இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பல்லடம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஆறுமுத்தாம்பாளையம், கணபதிபாளையம், கரைப்புதூர் உள்ளிட்ட ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைப்பதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மாநகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு அறிவொளி நகர் பகுதியில் உள்ள அரசு ஆரம்பப்பள்ளி முன்புள்ள சாலையில் இன்று காலை 9 மணி முதல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:- திருப்பூர் மாநகராட்சியுடன் ஆறுமுத்தாம்பாளையம் கிராம ஊராட்சியை இணைத்தால் சொத்து வரி உள்ளிட்ட வரியினங்கள் உயர்த்தப்படும். மேலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், 15- வது நிதிக்குழு மானிய திட்டம், பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் ரத்து செய்யப்படும். இந்த ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தை நம்பி ஏராளமான ஏழை, எளிய மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும்.
எனவே திருப்பூர் மாநகராட்சியுடன் ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சியை இணைக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தியும், மாநகராட்சி நிர்வாக அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- காவேரி கூக்குரல் மூலம் மரம் சார்ந்த விவசாயத்தை உலகம் முழுவதும் எடுத்து செல்கிறோம்.
- காவேரி நதியை மீட்டெடுக்க காவேரி கூக்குரல் இயக்கம் 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் இந்தாண்டு திருப்பூர் மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களில் 3,00,000 மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டு உள்ளது. சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இன்று (01-06-2024) நடைபெற்ற இதன் தொடக்க விழாவில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் அவர்கள் மரக்கன்றுகளை நட்டும், விவசாயிகளுக்கு வழங்கியும் இந்நிகழ்வை தொடங்கி வைத்தார்.
தமிழ்நாட்டில் காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் இந்தாண்டு (24-25 நிதியாண்டில்) 1.21 கோடி மரங்கள் நட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாவட்டம் தோறும் இதன் தொடக்க விழாக்கள் தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றன.
அந்த வகையில் திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தில் உள்ள அண்ணன்மார் சுவாமி திருக்கோவில் வளாகத்தில் இதன் துவக்க விழா நடைப்பெற்றது.
இவ்விழாவில் காவேரி கூக்குரல் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் பேசுகையில் "மரம் நடுவதில் நீண்ட பாரம்பரியமும், அனுபவமும் எங்களுக்கு இருக்கிறது. நாங்கள் 2000-ஆம் ஆண்டு முதல் இதற்காக இயங்கி வருகிறோம். 2006 ஆம் ஆண்டு நடந்த விழாவில் கலைஞர் அவர்கள் மரக்கன்று நட்டு துவங்கி வைத்த இயக்கம், இன்று உலக அளவில் பெயர் பெரும் வகையில் வளர்ந்து இருக்கிறது. இவ்வியக்கத்தை ஐநாவின் 4 அமைப்புகள் அங்கீகரித்து உள்ளது.
காவேரி கூக்குரல் மூலம் மரம் சார்ந்த விவசாயத்தை உலகம் முழுவதும் எடுத்து செல்கிறோம். விவசாயத்துடன் மரங்களை நடும் போது விவசாயிகளின் பொருளாதாரம், மண்ணின் வளம் மற்றும் நிலத்தடி நீர் மட்டமும் உயரும். சுற்றுச்சூழலையும், பொருளாதாரத்தையும் இணைத்து சத்குரு கொடுத்தார்கள். வெப்ப மண்டல நாடுகளில் இந்த காவேரி கூக்குரல் திட்டம் தான் சரியான தீர்வு என்று கூறி ஐநா அமைப்பு இதனை அங்கீகரித்து உள்ளது" எனக் கூறினார்.
மேலும் அமைச்சர் சாமிநாதன் அவர்கள் பேசுகையில் "கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த போது ஈஷா இயக்கத்தின் மரக்கன்றுகள் நடுகிற நிகழ்ச்சி சென்னை கிண்டியில் நடைப்பெற்றது. அது இன்னும் பசுமையாக என் மனதில் நினைவு இருக்கிறது. காரணம் நானும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். அன்று நெடுஞ்சாலை துறையின் சார்பாக சாலை ஓரங்களில் மரங்கள் நடப்படுவதை அவர் பெருமையாக சுட்டிக்காட்டினார். அன்று அத்துறையின் அமைச்சராக நான் இருந்தேன் என்பதை பெருமையாக கருதுகிறேன்.
கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்த போது தன்னை பார்க்க வருகிறவர்கள் பரிசுப் பொருளை விட ஒரு மரக் கன்றை நடுவதாக இருந்தால் நேரில் வரவில்லை என்றாலும் கூட பாராட்டுவேன், வாழத்துவேன் என்றுக் கூறினார். வெப்பம் அதிகரித்து இருக்கும் தற்போதைய கடுமையான சூழலில் நாம் சிரமபட்டுக் கொண்டு இருக்கிறோம். இந்த சூழலில் மரக்கன்றுகள் நடுவதும் அதனை பராமரிப்பதும் இந்த மாதிரியான இயக்கங்கள் மட்டும் இல்லாமல் ஒவ்வொருவரின் தலையாய கடமை ஆகும். இந்நேரத்தில் காவேரி கூக்குரல் இயக்கத்திற்கு என்னுடையப் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் கூறினார்.
காவேரி நதியை மீட்டெடுக்க காவேரி கூக்குரல் இயக்கம் 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இவ்வியக்கம் தமிழகம் மற்றும் கர்நாடக மாநில காவேரி வடிநிலப் பகுதிகளில் பசுமை பரப்பை அதிகரிக்க விவசாய நிலங்களில் மரம் சார்ந்த விவசாயத்தை முன்னெடுக்கிறது. இதன் மூலம் மண்ணின் தரமும், அதன் நீர்பிடிப்பு திறனும் மேம்படுவதோடு, விவசாயிகளுக்கு பொருளாதார நலன்களும் கிடைக்கின்றது.
மேலும் இவ்வியக்கம் விவசாயிகள் மரம் நடுவதற்கும், தொடர்ந்த பராமரிப்பிற்கு தேவையான தொழில்நுட்ப உதவிகளையும் இலவசமாக வழங்கி வருகிறது. மண்ணுக்கேற்ற மரங்கள் தேர்வு, நீர் மேலாண்மை, களை மேலாண்மை, ஊடுபயிர் சாகுபடி போன்ற ஆலோசனைகளை காவேரி கூக்குரல் பணியாளர்கள் விவசாய நிலங்களுக்கு சென்று வழங்கி வருகின்றனர். விவசாயிள் கூடுதல் தகவலுக்கும், மரக்கன்றுகள் தேவைக்கும் 80009 80009 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
- தலைமறைவாக இருந்த சிவக்குமாரை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- கைது செய்யப்பட்டுள்ள சிவக்குமார் மீது பல மோசடி வழக்குகள் உள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் பல்லடம் ரோடு தென்னம்பாளையத்தை சேர்ந்தவர் ரத்தினசாமி (வயது 62). கடந்த ஆண்டு மே மாதம், இவரிடம், பல்லடம், வேலப்ப கவுண்டன்பாளையத்தை சேர்ந்த சிவக்குமார் (53) என்பவர் 2 கோடி ரூபாய் லோன் வாங்கி தருவதாக கூறி, நில ஆவணம் மற்றும் ரூ.10.75 லட்சம் ரூபாய் பெற்றார். ஆனால் கூறியபடி லோன் பெற்று தராமல் காலம் கடத்தினார்.
இதையடுத்து ரத்தினசாமி, சிவகுமார் அலுவலகத்தை தொடர்பு கொண்ட போது முறையாக பதில் அளிக்கப்படவில்லை. தொடர்ந்து, ரத்தினசாமி போன்று பலரிடம் லோன் வாங்கி தருவதாக கூறி, நிலத்தின் ஆவணம் மற்றும் குறிப்பிட்ட தொகையை பெற்று சிவக்குமார் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதுதொடர்பாக ரத்தினசாமி திருப்பூர் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்தார். திருப்பூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் சிவக்குமார் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வந்த நிலையில், தென்காசியில் தலைமறைவாக இருந்த சிவக்குமாரை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும், கைது செய்யப்பட்டுள்ள சிவக்குமார் மீது பல மோசடி வழக்குகள் உள்ளது. இதனால் அவரை அடுத்தடுத்து வழக்குகளில் போலீசார் கைது செய்து வருகின்றனர்.






