என் மலர்tooltip icon

    தேனி

    • ரூல்கர்வ் முறையை கைவிட வேண்டும் என தமிழக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
    • அணைக்கு 463 கனஅடி நீர் வருகிறது. 5916 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.

    கூடலூர்:

    கேரளா எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லை பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14,707 ஏக்கர் பரப்பளவில் இருபோக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது. மேலும் தேனி மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. இங்கு பாசனத்திற்கு போக வைகை அணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரின் மூலம் தேனி, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது.

    பருவமழை தொடங்கிய போது கடந்த அக்.17ம் தேதி கனமழை பெய்தது. இதனால் 132 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 6 அடி உயர்ந்து 138 அடியை எட்டியது.

    உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின் படி 142 அடிவரை தண்ணீர் தேக்கலாம் என்ற போதும் ரூல்கர்வ் விதிமுறைப்படி 18ம் தேதி கேரள பகுதிக்கு உபரிநீர் திறக்கப்பட்டது.

    மழை தொடர்ந்ததால் அணையின் நீர்மட்டம் 140 அடியை எட்டியது. இருந்த போதும் ரூல்கர்வ் முறைப்படி கேரள பகுதிக்கு 9 நாட்களுக்கு வீணாக தண்ணீர் திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மழை குறைந்ததாலும் தமிழக பகுதிக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்தது.

    எனவே ரூல்கர்வ் முறையை கைவிட வேண்டும் என தமிழக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். கேரளாவுக்கு எந்த பயனுமின்றி தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது மழை இல்லாததால் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. அந்த தண்ணீரை தேக்கி வைத்திருந்தால் தற்போது பாசனம் மற்றும் குடிநீருக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். எனவே தமிழக அரசு இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர்.

    கடந்த வாரம் 137.65 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று காலை 135.20 அடியாக குறைந்துள்ளது. இதனால் தமிழக பகுதிக்கு திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு 1820 கனஅடியில் இருந்து 1780 கனஅடியாக குறைக்கப்பட்டது. அணைக்கு 463 கனஅடி நீர் வருகிறது. 5916 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.

    71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 68.49 அடியாக உள்ளது. குடிநீர் மற்றும் கால்வாய் பாசனத்திற்கு என மொத்தம் 2049 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணைக்கு 1597 கனஅடி நீர் வருகிறது. 5442 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.

    • 49,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • வைகை ஆற்றங்கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் உள்ள 71 அடி உயரம்கொண்ட வைகை அணை நீர்மட்டம் வடகிழக்கு பருவமழை கை கொடுத்ததால் கடந்த மாதம் 27ம் தேதி அதிகபட்ச அளவாக 70.24 அடியை எட்டியது. இதனை தொடர்ந்து ராமநாதபுரம் பாசனத்திற்காக அக்.27ம் தேதி முதல் 31ம் தேதி வரை 624 மி.கனஅடி நீர் திறக்கப்பட்டது.

    அதனை தொடர்ந்து சிவகங்கை மாவட்ட பாசனத்திற்காக நவ.8ம் தேதி முதல் 772 மி.கனஅடி நீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் நேற்று முற்றிலும் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் இன்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 68.21 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1653 கனஅடி நீர் வருகிறது. அணையில் இருந்து 58ம் கால்வாய் வழியாக வினாடிக்கு 115 கனஅடியும், மதுரை, ஆண்டிபட்டி, சேடபட்டி குடிநீர் திட்டங்களுக்காக 69 கனஅடி, மதுரை மாவட்ட பூர்வீக பாசனத்திற்கு 1000 கனஅடி என மொத்தம் 1219 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 5372 மி.கனஅடியாக உள்ளது.

    மதுரை மாவட்ட பூர்வீக பாசனத்திற்கு இன்று முதல் தொடர்ந்து 6 நாட்களுக்கு 428 மி.கனஅடி நீர் திறக்கப்பட உள்ளதாக நீர்வளத்துறையினர் தெரிவித்துள்ளனர். 1000 கனஅடி நீர் 7 சிறிய மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதன்மூலம் 49,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கண்மாய்களும் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே வைகை ஆற்றங்கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 135.65 அடியாக உள்ளது. வரத்து 617 கனஅடி, திறப்பு 1778 கனஅடி, இருப்பு 6030 மி.கனஅடி.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 126.28 அடியில் தொடர்ந்து நீடிப்பதால் அணைக்கு வரும் 15 கனஅடி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 100 மி.கனஅடி.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 44.80 அடியாகவும், சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 49.50 அடியாகவும் உள்ளது.

    • சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 126.28 அடியில் தொடர்ந்து நீடிக்கிறது.
    • அணைக்கு வரும் 83 கன அடி முழுவதும் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 100 மி.கன அடியாக உள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த 10 நாட்களுக்கு முன்பு கனமழை பெய்தது. இதனால் அணையின் நீர்பிடிப்பு பகுதியான கொட்டக்குடிஆறு, வருசநாடு உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது.

    கடந்த மாதம் 27ந் தேதி அணையின் நீர்மட்டம் 70.24 அடியாக உயர்ந்தது. அதன்பின்பு ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட பாசனத்திற்காக வைகை ஆற்றின் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டது. மேலும் மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்காக பெரியாறு பிரதான கால்வாய் வழியாகவும், 58-ம் கால்வாய் வழியாகவும் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 68.08 அடியாக உள்ளது. வரத்து 2176 கன அடி. திறப்பு 3499 கன அடி. இருப்பு 5338 மி.கன அடியாக உள்ளது.

    இதேபோல் முல்லைப்பெரியாறு அணையிலும் நீர்வரத்து சரிந்து வருகிறது. தற்போது அணையின் நீர்மட்டம் 137.10 அடியாக உள்ளது. வரத்து 927 கன அடி. திறப்பு 1800 கன அடி. இருப்பு 6395 மி.கன அடி.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 126.28 அடியில் தொடர்ந்து நீடிக்கிறது. அணைக்கு வரும் 83 கன அடி முழுவதும் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 100 மி.கன அடியாக உள்ளது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 44.80 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் நீர் இருப்பு 252 மி.கன அடியாக உள்ளது.

    சண்முகாநதி அணையின் நீர் மட்டம் 51.10 அடி. திறப்பு 14.47 கன அடி. இருப்பு 75.04 மி.கன அடி.

    • தமிழகத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு 400 கனஅடியாக குறைக்கப்பட்டது.
    • மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 44.80 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் மத்தியில் தொடங்கியபோது கேரளா மற்றும் தேனி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக கனமழை பெய்தது. இதனால் அணைகள், ஆறு, குளம், கண்மாய் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.

    முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து 10 ஆயிரம் கனஅடிக்கு மேல் அதிகரித்தது. மேலும் ரூல்கர்வ் நடைமுறையால் உபரியாக கேரளாவுக்கு தண்ணீர் வீணாக திறக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது மழை முற்றிலும் ஓய்ந்த நிலையில் அணைக்கு நீர்வரத்து 333 கனஅடியாக குறைந்துள்ளது. இதனால் தமிழகத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவும் 400 கனஅடியாக குறைக்கப்பட்டது. அணையின் நீர்மட்டம் 137.65 அடியாக உள்ளது. 6533 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.

    ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 69.11 அடியாக உள்ளது. 1823 கனஅடி நீர் வருகிற நிலையில் 1499 கனஅடி நீர் குடிநீர் மற்றும் பாசனத்திற்காக திறக்கப்படுகிறது. அணையில் 5601 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 44.80 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 126.28 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 139 கனஅடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது.

    சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 51.80 அடியாக உள்ளது. 4 கனஅடி நீர் வருகிறது. 14.47 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.

    • மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 44.80 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை.
    • சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. வடகிழக்கு பருவமழை கைகொடுத்ததால் அணையின் நீர்மட்டம் 70 அடியை எட்டியது. அதனை தொடர்ந்து கடந்த 27ம் தேதி வைகை பூர்வீக பாசன பகுதி 3ன் கீழ் உள்ள ராமநாதபுரம் மாவட்ட கண்மாய்களுக்கு 2500 கனஅடி நீர் திறக்கப்பட்டது. மறுநாள் 2000, அடுத்த நாள் 1500, 1000, நேற்று 222 கனஅடி நீர் திறக்கப்பட்டது. இன்று அந்த தண்ணீர் நிறுத்தப்பட்டு குடிநீர் மற்றும் மதுரை மாவட்ட பாசனத்திற்காக மட்டும் 1721 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. 1990 கனஅடி நீர் வருகிறது. அணையின் நீர்மட்டம் 69.03 அடியாக உள்ளது. 5579 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.

    இந்த நிலையில் நாளை முதல் வைகை பூர்வீக பாசன பகுதி 2ல் உள்ள சிவகங்கை மாவட்ட கண்மாய்களுக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது. முதல் 4 நாட்களுக்கு 2000 கனஅடியும், 5ம் நாள் 935 கனஅடியும் என மொத்தம் 5 நாட்களுக்கு 772 கனஅடி நீர் திறக்கப்பட உள்ளது. அதனை தொடர்ந்து வைகை பூர்வீக பாசன பகுதி 1ல் உள்ள மதுரை மாவட்ட கண்மாய்களுக்கு 6 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 137.85 அடியாக உள்ளது. 1515 கனஅடி நீர் வருகிறது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 1822 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 6584 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 44.80 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 160 கனஅடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது.

    சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 52.10 அடியாக உள்ளது. 7 கனஅடி நீர் வருகிற நிலையில் 14.47 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.

    • நிலக்கல்லில் வழக்கமாக நடப்பாண்டு 1500 வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • இந்த ஆண்டு கேரள அரசு சார்பில் 500 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.

    கூடலூர்:

    பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக வருகிற நவம்பர் 17-ந் தேதி நடை திறக்கப்பட்டு டிசம்பர் 27-ந் தேதி வரை பூஜைகள் நடைபெற உள்ளது.

    ஒரு மண்டலம் விரதம் இருந்து அய்யப்பனை தரிசனம் செய்ய தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தருவார்கள். அதனைத் தொடர்ந்து மகரவிளக்கு பூஜை காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.

    இந்நிலையில் பக்தர்களுக்கு செய்து தரப்பட்டுள்ள வசதிகள் குறித்து தேவசம்போர்டு செயலர் ராஜமாணிக்கம் கூறியதாவது:-

    சபரிமலைக்கு வரும் பக்தர்கள் தற்போது ஆன்லைன் மூலம் பல்வேறு சேவைகளை பெற்று வருகின்றனர். அவர்கள் வசதிக்காக ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் கூடிய பலமொழி தகவல் தொடர்பு செயலி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதில் தரிசனம், தங்கும்வசதி, அவசரதேவை, மருத்துவவசதி, காலநிலை உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் தெரிந்து கொள்ளலாம். ஒவ்வொரு தகவல்களையும் அதில் குறிப்பிட்டுள்ள எண்களை தொடர்பு கொண்டு பயனடையலாம்.

    நிலக்கல்லில் வழக்கமாக நடப்பாண்டு 1500 வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக வாகன பாதுகாப்பு, தடையற்ற இயக்கத்தை கண்காணிக்கும் வகையில் புதிதாக 3 கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்படும். இங்கிருந்து பத்தினம்திட்டா, எரிமேலி உள்ளிட்ட முக்கிய வழித்தடங்கள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும்.

    இந்த ஆண்டு கேரள அரசு சார்பில் 500 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். நிலக்கல்-பம்பை இடையே சுழற்சி முறையில் 24 மணி நேரமும் இந்த பஸ்கள் இயங்கும். இதய பாதிப்பு உள்ளிட்ட குறிப்பிட்ட நோய்களுக்கு உயர்தர மருத்துவ சேவைகள் தேவசம்போர்டு சார்பில் வழங்கப்படும். இதற்கான நிதி ஆதாரத்துக்காக ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் பக்தர்களிடம் விருப்ப கட்டணமாக ரூ.5 பெறப்படும்.

    பதிவு செய்யும் பக்தர்கள் கேரளாவுக்குள் நுழைந்து வெளியேறும் வரை காப்பீட்டு திட்டத்தில் பல்வேறு வசதிகளை பெற இயலும். கூட்ட நெரிசலை தவிர்க்க பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நேரடி புக்கிங் செய்பவர்கள் நெரிசல் இல்லாத நேரங்களில் தரிசனத்துக்கு அனுப்பப்படுவார்கள். எனவே இயன்ற வரை ஸ்பார்ட் புக்கிங் செய்வதை தவிர்க்க வேண்டும். பக்தர்களுக்கு செய்து தர வேண்டிய மேலும் சில பாதுகாப்பு வசதிகள் குறித்து தேனி, இடுக்கி மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பெரியகுளம் அருகில் உள்ள கும்பக்கரை அருவியிலும் ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டதால் குளித்தனர்.
    • சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 52.30 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கம்பம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சுருளி அருவி அமைந்துள்ளது. இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். மேலும் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் இங்கு புனித நீராடி செல்கின்றனர். அமாவாசை உள்ளிட்ட நாட்களில் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு இங்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்துகின்றனர்.

    மேகமலை, தூவானம் உள்ளிட்ட நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த தொடர்மழையால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கடந்த 18ம் தேதி சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. அதன் பின்னர் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் தடை தொடரும் என வனத்துறையினர் அறிவித்தனர்.

    மேலும் நீர்வரத்தையும் அவர்கள் கண்காணித்து வந்தனர்.

    கடந்த சில நாட்களாக மழைப்பொழிவு வெகுவாக குறைந்துள்ளது. இதனால் சுருளி அருவியில் நீர்வரத்து சீரானது. அதனை தொடர்ந்து 13 நாட்களுக்கு பிறகு அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து உள்ளூர் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக சுருளி அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

    இதேபோல் பெரியகுளம் அருகில் உள்ள கும்பக்கரை அருவியிலும் ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டதால் குளித்தனர்.

    71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியாக உள்ளது. 1888 கனஅடி நீர் வருகிற நிலையில் அணையில் இருந்து மதுரை மாநகர குடிநீா மற்றும் பாசனத்திற்காக 2499 கனஅடி நீர் திறக்கப்படுகிறது அணையில் 5571 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.

    முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 137.95 அடியாக உள்ளது. 1830 கனஅடி நீர் வருகிறது. தமிழக பகுதிக்கு 1822 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 44.80 அடியாக உள்ளது. 9 கனஅடி நீர் வருகிற நிலையில் திறப்பு இல்லை.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் 119 கனஅடி.

    சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 52.30 அடியாக உள்ளது. 7 கனஅடி நீர் வருகிறது. 14.47 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.

    • வைகை அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 69.88 அடியாக உள்ளது.
    • மேகமலை, கும்பக்கரை அருவிகளில் வெள்ளப்பெருக்கு நீடித்து வருவதால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை தொடர்கிறது.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் உள்ள 71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் வடகிழக்கு பருவமழையால் 70 அடியை கடந்தது. இதன் காரணமாக தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு 3 கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    விவசாயிகள் கோரிக்கையை ஏற்று ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை மாவட்ட பூர்வீக பாசனத்திற்காக தண்ணீர் திறக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது. முதற்கட்டமாக ராமநாதபுரம் மாவட்ட பாசனத்திற்காக 2500 கன அடி நீர் நேற்று திறக்கப்பட்டது. இன்று 2-ம் நாளாக வினாடிக்கு 2000 கன அடி வீதம் 172.80 மி.கன அடி வெளியேற்றப்பட்டு வருகிறது. நாளை 1500 கனஅடி, 4-ம் நாள் 1000 கன அடி, 5-ம் நாள் 222 கன அடி என மொத்தம் 5 நாட்களுக்கு 624 மி.கன அடி நீர் ராமநாதபுரம் மாவட்ட கண்மாய்களுக்கு திறக்கப்படுகிறது.

    இதனைத் தொடர்ந்து சிவகங்கை, மதுரை மாவட்டங்களுக்கு தண்ணீர் திறக்கப்படும். தற்போது திறக்கப்பட்டுள்ள தண்ணீர் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை வழியாக ராமநாதபுரம் செல்லும் என்பதால் கரையோரப்பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    வைகை அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 69.88 அடியாக உள்ளது. வரத்து 2338 கன அடி. திறப்பு 3699 கன அடி. இருப்பு 5796 மி.கன அடி.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 126.28 அடியில் தொடர்ந்து நீடிப்பதால் அணைக்கு வரும் 139 கன அடி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 44.60 அடியாகவும், சண்முகா நதி அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவில் 52.50 அடியிலும் நீடிக்கிறது.

    மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக சுருளி, மேகமலை, கும்பக்கரை அருவிகளில் வெள்ளப்பெருக்கு நீடித்து வருவதால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை தொடர்கிறது.

    கூடலூர், உத்தமபாளையம், தலா 1.8, பெரியகுளம் 4, வீரபாண்டி 6.2, அரண்மனைபுதூர் 1.6, வைகை அணை 1.4 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    • பெரியாறு நீர்மின் நிலையத்தில் 4 ஜெனரேட்டர்கள் கொண்டு மின் உற்பத்தி நடைபெறுகிறது.
    • சோத்துப்பாறை அணையின் நீர்மட்டமும் அதன் முழு கொள்ளளவான 126.28 அடியில் நீடிக்கிறது.

    கூடலூர்:

    தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின் தொடக்கத்திலேயே மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் கனமழை பெய்தது. இதனால் முக்கிய நீர் ஆதாரங்கள் அனைத்தும் வேகமாக நிரம்பின.

    71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் கடந்த 20-ந்தேதி 69 அடியாக உயர்ந்த நிலையில் அணையில் இருந்து வைகை ஆற்றில் உபரி நீர் திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்தும் தண்ணீர் வரத்து இருந்து வந்த நிலையில் நேற்று மதியம் அணையில் இருந்து வைகை ஆற்றில் உபரி நீர் திறக்கப்பட்டது. அதன்பின்பு ஆற்றில் திறக்கப்பட்ட உபரிநீர் நிறுத்தப்பட்டது.

    இன்று காலை அணையில் இருந்து பெரியாறு, திருமங்கலம் பிரதான கால்வாய்களில் பாசனத்திற்கு 1430 கன அடி, குடிநீர் திட்டங்களுக்கு வினாடிக்கு 69 கன அடி என மொத்தம் 1499 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 69.78 அடியாக உள்ள நிலையில் நீர் வரத்து 2287 கன அடியாக உள்ளது. நீர் இருப்பு 5771 மி.கன அடியாக உள்ளது.

    அணையின் நீர்மட்டம் எப்போது வேண்டுமானாலும் உயரலாம் என்பதால் மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு 3 கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்கிறது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழை காரணமாக கடந்த 18ந் தேதி அணையின் நீர்மட்டம் 138 அடியாக உயர்ந்தது. ரூல்கர்வ் விதிப்படி அணைக்கு வரும் தண்ணீர் உபரியாக இடுக்கி அணைக்கு திறந்து விடப்பட்டது. அதன்பிறகு மழை அளவும் குறைந்ததால் அணைக்கு வரும் நீர் வரத்தும் சரியத் தொடங்கியது. இன்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 138.05 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 4037 கன அடியாக உள்ள நிலையில் 1822 கன அடி நீர் உபரியாக திறக்கப்படுகிறது.

    இதன் காரணமாக பெரியாறு நீர்மின் நிலையத்தில் 4 ஜெனரேட்டர்கள் கொண்டு மின் உற்பத்தி நடைபெறுகிறது.

    இதேபோல் சோத்துப்பாறை அணையின் நீர்மட்டமும் அதன் முழு கொள்ளளவான 126.28 அடியில் நீடிக்கிறது. இதனால் அணைக்கு வரும் 181 கன அடி நீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 100 மி.கன அடியாக உள்ளது. சண்முகாநதி அணையின் நீர்மட்டமும் அதன் முழு கொள்ளளவான 52.50 அடியை எட்டியதால் அணைக்கு வரும் 9 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. 57 அடி உயரம் உள்ள மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 43.80 அடியாக உள்ளது. நீர் வரத்து 84 கன அடி.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அமைந்துள்ள அரிசிப்பாறையில் தொடர் மழை காரணமாக கடந்த 18ந் தேதி முதல் சுருளி அருவியில் வெள்ள ப்பெருக்கு ஏற்பட்டது.

    இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், அருவி பகுதிக்கு செல்லவும் இன்று 8-வது நாளாக தடை நீடிக்கிறது. இதேபோல் பெரியகுளம் அருகில் உள்ள கும்பக்கரை அருவியில் இன்று 15-வது நாளாக பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேகமலை அருவியிலும் தடை தொடருகிறது.

    சுருளி அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக குளிக்க அமைக்கப்பட்ட தடுப்பு கம்பிகள், அருவிக்கு செல்லும் சிமெண்டு படிக்கட்டுகள் சேதம் அடைந்தன. அருவியில் நீர்வரத்து சீரான பிறகு சேதம் அடைந்த இரும்பு கம்பிகள், படிகள் சீரமைக்கப்படும் என்றும் அதுவரை சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி கிடையாது என்றும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    பெரியாறு 24.2, தேக்கடி 9.8, சண்முகாநதி அணை 4.6, உத்தமபாளையம், கூடலூர் பகுதியில் தலா 2.4 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    • மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 41.80 அடியாக உள்ளது.
    • வருசநாடு பகுதியில் அமைந்துள்ள மேகமலை அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் மற்றும் கேரள மாநிலத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் தொடர்மழையால் முல்லை பெரியாறு, போடி கொட்டக்குடியாறு, மூல வைகையாறு, வராகநதி உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் குளம், கண்மாய் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் கடந்த 18ம் தேதி நீர்மட்டம் 62.66 அடியாக இருந்தது. தொடர்மழை காரணமாக நேற்று முன்தினம் அணையின் நீர்மட்டம் 69 அடியாக உயர்ந்தது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி 3ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு அணைக்கு வரும் நீர் முழுவதும் அப்படியே உபரியாக வெளியேற்றப்படுகிறது.

    நீர்வரத்தை பொறுத்து அணையில் இருந்து தண்ணீரை திறந்து விடும் அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக 69.13 அடியாக நிலைநிறுத்தி கண்காணித்து வருகின்றனர். அணையில் நீர்வரத்து 3463 கனஅடியாக உள்ளது. ஆற்றின் வழியாகவும், பாசனத்திற்கும், குடிநீருக்காகவும் என மொத்தம் அணையிலிருந்து 3073 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. 5605 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 41.80 அடியாக உள்ளது. 201 கனஅடி நீர் வருகிற நிலையில் திறப்பு இல்லை. தொடர்ந்து பெய்து வரும் மழையால் சோத்துப்பாறை அணை கடந்த 2 நாட்களுக்கு முன்பு முழு கொள்ளளவான 126.28 அடியை எட்டியது. இதனால் அணைக்கு வரும் 252.37 கனஅடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது. இதனால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் ஆற்றை கடக்கவோ, குளிக்கவோ கூடாது என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

    சண்முகாநதி அணையும் அதன் முழு கொள்ளளவான 52.50 அடியில் நீடிக்கிறது. அணைக்கு வரும் 16 கனஅடி நீர் உபரியாக திறக்கப்படுகிறது.

    கொடைக்கானலில் பெய்து வரும் தொடர் மழையால் கடந்த சில நாட்களுக்கு முன்பு கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இன்றும் 12-வது நாளாக நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து காணப்படுவதால் தடை தொடரும் என வனத்துறையினர் அறிவித்துள்ளனர். மேலும் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருவதால் 5வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் ஆண்டிபட்டி அருகே வருசநாடு பகுதியில் அமைந்துள்ள மேகமலை அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அங்கும் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஆண்டிபட்டி 12, அரண்மனை புதூர் 7.6, வீரபாண்டி 7.6, பெரியகுளம் 9.2, மஞ்சளாறு 12.6, சோத்துப்பாறை 8.2, வைகை அணை 13.2, போடி 16.2, உத்தமபாளையம் 6.8, கூடலூர் 3.8, பெரியாறு அணை 4.2, தேக்கடி 3.6, சண்முகாநதி 9.4 மி.மீ. மழையளவு பதிவாகி உள்ளது.

    • வைகை அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 3,463 கனஅடியாக உள்ளது.
    • அணையில் இருந்து குடிநீர் மற்றும் விவசாய பாசனத்திற்காக 3,416 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

    தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

    71 அடி உயரம் கொண்ட வைகை அணை நீர்மட்டம் தற்போது 69.13 கன அடியாக உள்ளது. வைகை அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 3,463 கனஅடியாக உள்ளது.

    அணை நிரம்பி உள்ளதால் நீர்ப்பிடிப்பு பகுதியானது கடல் போல காட்சியளிக்கிறது. அணையில் இருந்து குடிநீர் மற்றும் விவசாய பாசனத்திற்காக 3,416 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

    அணை கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வந்த 67 ஆண்டுகளில் 36-வது முறையாக நீர் நிரம்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    5 மாவட்டங்களுக்கு முக்கிய நீராதாரமாக விளங்கும் வைகை அணை தற்போது நிரம்பி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
    • அரசு மாணவியர் விடுதியில் தங்கியிருந்தவர்களிடமும் வெள்ள பாதிப்பு குறித்து கேட்டறிந்து அவர்களுக்கு உரிய தேவைகளை வழங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. போடி ஒன்றியத்திற்கு உட்பட்ட உப்புக்கோட்டை ஊராட்சியில் பெய்த கனமழை காரணமாகவும், முல்லை ஆற்றில் திறந்து விடப்பட்ட அதிக தண்ணீர் காரணமாகவும் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது.

    கம்பம் பகுதியில் நெல் வயல்களில் மழைநீர் புகுந்ததால் அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் பாதிக்கப்பட்டன. இதனால் விவசாயிகள் கவலையடைந்தனர். தீபாவளி பண்டிகைக்காக விற்பனைக்கு வாங்கி வைத்திருந்த ஆடுகள், பண்ணையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.

    திராட்சை செடிகளும் மழை வெள்ளத்தால் சேதமடைந்துள்ளதால் வாழை பயிரிட்டிருந்த வயல்களுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது.

    நேற்று மழை சற்று குறைந்த நிலையில் இன்று காலை முதல் மீண்டும் மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.

    பெரியகுளம் சுற்று வட்டார பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கும்பக்கரை அருவியில் இன்று 11வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே சுற்றுலா பயணிகள் தடை நீடிக்கிறது. இதேபோல் மேகமலை மற்றும் சுருளி அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கபட்டுள்ளது. இதனால் விடுமுறை நாளில் குடும்பத்தினருடன் ஏராளமானோர் வைகை அணைக்கு குவிந்தனர். அங்கு 7 மதகுகள் வழியாக தண்ணீர் திறந்து விடப்படும் நிலையில் அதனை கண்டு ரசித்தனர்.

    மழை வெள்ளத்தால் பயிர்கள், ஆடு, கோழிகள், குடியிருப்புகள் சேதமடைந்துள்ள நிலையில் இதுகுறித்து பார்வையிட்டு கணக்கீடு செய்யும் பணியில் மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் வருவாய்த்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் குடியிருப்புகளால் சேதமடைந்த மக்கள் மாற்று இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு தேவையான உணவு, உடை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களும் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    உப்புக்கோட்டை பகுதியில் பட்டாளத்தம்மன் கோவில் தெரு, பெருமாள் கோவில் தெரு ஆகிய பகுதிகளை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பார்வையிட்டுள்ளார். அங்குள்ள அரசு மாணவியர் விடுதியில் தங்கியிருந்தவர்களிடமும் வெள்ள பாதிப்பு குறித்து கேட்டறிந்து அவர்களுக்கு உரிய தேவைகளை வழங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தார். அவருடன் முன்னாள் எம்.பி.ரவீந்திரநாத் உள்பட கட்சி நிர்வாகிகள் சென்றனர். 

    ×