என் மலர்
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம், கீழடியில் கடந்த பிப்ரவரி மாதம் 19-ந் தேதி 6-ம் கட்ட அகழாய்வை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.
கடந்த 16 நாட்களாக நடந்த அகழாய்வில் இரு வண்ண பானைகள், பானை ஓடுகள்,பாசிகள், கண்டறியப்பட்டன.
5-ம் கட்ட அகழாய்வில் கண்டறியப்பட்ட சுடுமண் குழாயின் தொடர்ச்சியை கண்டறிவதற்காக தமிழக தொல்லியல் துறை மீண்டும் கீழடியில் நீதியம்மாள் நிலத்தில் அகழாய்வை தொடங்கியது.
குழிகள் தோண்டப்பட்ட நிலையில் சுடுமண் குழாயின் தொடர்ச்சி கிடைக்கவில்லை. இதனையடுத்து சுடுமண் குழாய் கண்டறியப்பட்ட இடத்தின் மேற்கு பகுதியில் அகழாய்வு பணி கடந்த 2 நாட்களுக்கு முன்பு தொடங்கியது.
அப்போது 4 அடி ஆழத்தில் 2 அடுக்குகள் கொண்ட தரை தளம் தென்பட்டது. ஏற்கனவே 5-ம் கட்ட அகழாய்வின்போது கண்டறியப்பட்ட தரைதளத்தின் 10 அடி தூரத்திலேயே இந்த தரை தளம் கண்டறியப்பட்டதால் அதன் தொடர்ச்சியாக இருக்க வாய்ப்புள்ளது என தொல்லியல் துறையினர் தெரிவித்தனர். தரை தளம் கடந்த 5-ம் கட்ட தரை தளம் போல செங்கல் கட்டுமானத்திற்கு மேலே களிமண் பூச்சுடன் காணப்படுகிறது.
தற்போது தரைதளம் 3அடி தூரத்திற்கு உள்ளது. மேலும் அகழாய்வு நடைபெறும்போது முழுபகுதியும் கிடைக்க வாய்ப்புள்ளது. தற்போது கீழடி அகழாய்வை காண வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் அனுமதியின்றி செயல்படும் குடிநீர் ஆலைகள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
அதன்படி சென்னை உள்பட அனைத்து நகரங்களிலும் அனுமதியின்றி செயல்பட்டு வந்த 100-க்கும் மேற்பட்ட குடிநீர் ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நகர் பகுதிகளில் கேன் குடிநீர் பயன்படுத்துவோர் கடும் அவதியடைந்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் குடிநீர் ஆலைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது பொதுப்பணித்துறையின் உரிய அனுமதி பெறாமலும், உரிமம் காலாவதியானதன் அடிப்படையில் தங்கச்சி மடம், மண்டபம், ஆர்.எஸ்.மங்கலம், பரமக்குடி, ராமநாதபுரம், கமுதி உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டு வந்த 10 கேன் குடிநீர் ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
இதன் காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் கேன் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் கலெக்டர் ஜெயகாந்தன் உத்தரவின் பேரில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது தேவகோட்டை, தருப்பத்தூர், காரைக்குடி, சிவகங்கை நகர் பகுதிகளில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த 10 கேன் குடிநீர் ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
குடிநீர் கேன் உற்பத்தியாளர்களின் வேலை நிறுத்தம் காரணமாக குடிநீர் கேன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சிலர் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி குடிநீர் கேனை அதிக விலைக்கு விற்று வருவதாக புகார்கள் வந்துள்ளன.
கேன் குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் மீண்டும் மாநகராட்சி, நகராட்சிகள் மூலம் விநியோகிக்கப்படும் தண்ணீரை நாடிச்செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
காரைக்குடி:
மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள அரிட்டாபட்டியைச் சேர்ந்தவர் யோகேஸ்வரன் (வயது 29). இவர் கடந்த 2013-ம் ஆண்டு கோயம்புத்தூர் ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணியில் சேர்ந்தார்.
அதன் பின்னர் கடந்த 2018-ம் ஆண்டு சிவகங்கை மாவட்ட ஆயுதப்படை முகாமிற்கு மாற்றப்பட்டார். அங்கு பணியில் இருந்த யோகேஸ்வரன், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள இந்தியன் வங்கியின் பாதுகாப்பு பணிக்கு அனுப்பப்பட்டார்.
இன்று வங்கியில் உள்ள பாதுகாவலர் ஓய்வறையில் யோகேஸ்வரன் இருந்தார். காலை அந்த அறையில் இருந்து துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பாதுகாப்பு பணியில் இருந்த மற்ற காவலர்களும், வங்கி பணியாளர்களும் ஓய்வறைக்கு ஓடினர். அங்கு யோகேஸ்வரன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவர் பாதுகாப்புக்கு வைத்திருந்த துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்திருப்பதாக தெரிகிறது.
தகவல் கிடைத்ததும் உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடம் விரைந்தனர். அவர்கள் யோகேஸ்வரன் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பணிச்சுமையால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக, ஓய்வறையில் கதவை பூட்டிக் கொண்டு யோகேஸ்வரன் தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியை அடுத்த ஆவரங்காடு கிராமத்தை சேர்ந்தவர் முனியாண்டி. இவர் கடந்த 2010-ம் ஆண்டு ஆகஸ்டு் மாதம் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை சேர்ந்தவர்களை அழைத்து வந்து தனது வயலில் ஆட்டுக் கிடை அமைத்து இருந்தார்.
இதை அறிந்த அருகில் உள்ள கச்சநத்தம் கிராமத்தை சேர்ந்த சந்திரகுமார் தனது வயலிலும் ஆட்டுக்கிடை அமைக்கும்படி கேட்டார். இதற்கு முனியாண்டி எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதை தொடர்ந்து கடந்த 30.8.2010 அன்று முனியாண்டி தரப்பினர் சந்திரகுமார் ஆதரவாளர்களை ஆயுதங்களால் தாக்கினர். இதில் அல்லிமுத்து (55) என்ற விவசாயி கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக திருப்பாச்சேத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆவரங்காடு கிராமத்தை சேர்ந்த முனியாண்டி, அவருடைய மகன்கள் சேகர், பூசைமணி, பாண்டிவேல், வீரபத்திரன் மற்றும் அழகுபாண்டி, மற்றொரு முனியாண்டி, பழனியாண்டி, ராஜாங்கம், பிரபு, முத்துப்பாண்டி, மற்றொரு வீரபத்திரன், மைக்கேல், கணேசன், கருப்பையா, செல்வராஜ் மற்றும் ரதி, ராமாயி ஆகிய 18 பேரை கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு சிவகங்கையில் உள்ள மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது சேகர் மற்றும் கருப்பையா ஆகிய 2 பேர் இறந்துவிட்டனர். ரதி, ராமாயி ஆகிய பெண்கள் உள்பட 16 பேர் மீதான வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதையொட்டி 16 பேரும் கோர்ட்டில் ஆஜராகினர். நீதிபதி கார்த்திகேயன் தீர்ப்பு வழங்கினார். குற்றம் சாட்டப்பட்ட 2 பெண்கள் உள்பட 16 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.8 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார்.
இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டதையொட்டி ஆயுள் தண்டனை பெற்ற 16 பேரின் உறவினர்கள், குடும்பத்தினர் திரண்டு இருந்ததால் கோர்ட்டு வளாகம் பரபரப்பாக காணப்பட்டது. இதை தொடர்ந்து அதிரடி படை போலீசார் கோர்ட்டு வளாகத்தில் குவிக்கப்பட்டனர். தீர்ப்புக்கு பின்னர் 16 பேரையும் போலீசார் பலத்த பாதுகாப்புடன் வேனில் ஏற்றி மதுரை மத்திய சிறைக்கு கொண்டு சென்றனர்.
மானாமதுரை:
மானாமதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றியக்குழு அலுவலகத்தில் அனைத்து கட்சி கூட்டம் தி.க. மாவட்ட செயலாளர் ஆனந்தவேல் தலைமையில் நடந்தது.
தி.மு.க. நகர் செயலாளர் பொன்னுச்சாமி, இளைஞரணி செயலாளர் சுந்தர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் ஆண்டி, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் வீரையா, முனியராஜ், ராஜாராமன், முருகானந்தம்.
ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் அசோகன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நகர் செயலாளர் நாகராஜன், காங்கிரஸ் கட்சி தலைவர் பழனிவேல், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் மாணிக்கம், நகர் செயலாளர் செல்வராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பபெற வேண்டும், மானாமதுரை வைகை ஆற்றில் தொடர் மணல் திருட்டு நடந்து வருகிறது. இந்த வைகை ஆற்றில்தான் குடிதண்ணீர் பல்வேறு பகுதிகளுக்கு எடுத்து அனுப்பப்படுகிறது.
ஒரு நாளைக்கு ஒரு கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுகிறது. குடிதண்ணீருக்கு ஆதாரமாக உள்ள வைகையில் மணல் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதனை வலியுறுத்தி நாளை (25-ந்தேதி) பேரூராட்சி அலுவலகம் முன்பு போராட்டம் நடத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள மேலராங்கியம் கிராமத்தில் கடந்த 7-ந்தேதி முகம் சிதைக்கப்பட்ட நிலையில் வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். பழையனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி இறந்தவர் யார்? அவரை கொலை செய்தது யார்? என விசாரித்து வந்தனர். இந்த வழக்கு சம்பந்தமாக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இந்த கொலை தொடர்பாக மேலராங்கியம் பகுதியை சேர்ந்த நாகராஜ் (வயது48), உதயகுமார் (26), கண்ணன் என்ற மாயக்கண்ணன் (21) ஆகியோர் அந்த ஊரின் கிராம நிர்வாக அலுவலர் பல்லாக்கு என்பவரிடம் சரணடைந்தனர்.
இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர், போலீஸ் இன்ஸ்பெக்டர் உமாதேவிக்கு தகவல் தெரிவித்தார். அவர் விரைந்து வந்து கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தினார். அப்போது, கொலையானவர் மதுரை குலமங்கலம் அருகே சிவகாடு பகுதியை சேர்ந்த சிவானந்தம் (23) என்பது தெரியவந்தது. மேலும் நாகராஜ், உதயகுமார், கண்ணன் ஆகிய 3 பேரும் சேர்ந்து சிவானந்தம் முகத்தில் கல்லைபோட்டு கொலை செய்ததும் தெரியவந்தது.
மேலும் நாகராஜின் மகள் அதே பகுதியை சேர்ந்த ஒருவரை காதல் திருமணம் செய்து கொண்டதால், அவரது மகன் ஆத்திரம் தாங்காமல் சகோதரியை காதல் திருமணம் செய்தவரின் உறவினரை வெட்டியுள்ளார். இதனால் தற்போது சிறையில் உள்ளார். இந்த சம்பவத்துக்கு பழிவாங்க வந்திருப்பதாக எண்ணி அந்த வாலிபரை சந்தேகப்பட்டு 3 பேரும் சேர்ந்து கொலை செய்ததாக போலீசாரிடம் பரபரப்பு தகவலை தெரிவித்தனர். இதை தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் கைது செய்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம், கீழடியில் கடந்த 2014- 15-ம் ஆண்டு முதல் 2016-17-ம் ஆண்டுகள் வரை அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.
அப்போது 7,818 தொல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. அவை அந்தப்பகுதியில் சங்க கால மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகளாக அமைந்தன.
4-ம் கட்ட அகழாய்வு பணிகள் கடந்த 2018-19-ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டது. இதில் 34 குழிகள் அமைக்கப்பட்டு 5 ஆயிரத்து 820 தொல்பொருட்களும், பழந்தமிழரின் கட்டுமான பகுதியும் வெளிப்படுத்தப்பட்டன.
5-ம் கட்ட அகழாய்விலும் பல்வேறு வடிவிலான செங்கல் கட்டுமானப்பணிகள் உள்ளிட்ட 900 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்த பொருட்கள் அனைத்தும் கால கணிப்பு ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டன.
ஆய்வின் முடிவில் அவை 2 ஆயிரத்து 600 ஆண்டுகள் பழமையான நாகரீகத்துடன் தொடர்புடையவை என்று தெரியவந்தது.
கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பார்வையிட்டுள்ளனர்.
இந்த நிலையில் 6-ம் கட்ட அகழாய்வு பணியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
அதைத்தொடர்ந்து கீழடியில் அகழாய்வு பணிகள் தொடங்கியது. 6-ம் கட்ட அகழாய்வு பணி கீழடி மட்டுமின்றி அதன் அருகேயுள்ள அகரம், மணலூர், கொந்தகை ஆகிய கிராமங்களில் 10 ஏக்கர் பரப்பளவில் நடைபெற உள்ளது. இந்தப்பணிகள் வருகிற செப்டம்பர் மாதம் வரை நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் மேற்கொள்ளப்படுகிறது.
100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தினமும் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். கீழடியில் சர்வதேச தரத்தில் தொல்லியியல் அருங்காட்சியகம் அமைக்க முதல்-அமைச்சர் ரூ.12.21 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இதற்காக கீழடியில் 2 ஏக்கர் நிலப்பரப்பளவில் கட்டடம் கட்டுவதற்கான இடமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அகழாய்வு பணிகளை சுற்றுலா பயணிகள் காண வசதியாக தேவையான சாலை வசதி, குடிநீர் வசதி, பஸ் வசதி போன்றவை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ளது கீழடி. இங்கு கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை மத்திய அரசின் சார்பில் 3 கட்டங்களாக தொல்பொருள் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்டது.
அதன் பின்னர் கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை 4 மற்றும் 5-வது கட்ட அகழ்வாராய்ச்சி தமிழக தொல்லியல் துறை சார்பில் நடந்தது.
அகழ்வாராய்ச்சி பணியின் போது பண்டைய தமிழர்கள் பயன்படுத்திய தங்க ஆபரணங்கள், மண்பாண்ட பொருட்கள், சுடுமண் ஓடுகள், சுடுமண் உருவம், பானை ஓடுகள், தாயக்கட்டைகள், காதணி, உறைகிணறுகள், இரட்டைச் சுவர்கள், தண்ணீர் தொட்டிகள் உள்பட 15 ஆயிரம் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இவற்றின் மூலம் கீழடி நாகரீகம் 2,600 ஆண்டுகள் பழமையானவை என்பது உறுதியானது. கீழடியில் 5 கட்டங்களில் கிடைத்த தொல்பொருட்களை காட்சிப்படுத்தும் வகையில் கீழடியில் சர்வதேச தரத்தில் தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்க தமிழக அரசு ரூ.12.21 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.
இதற்காக கீழடி அரசு பள்ளி விளையாட்டு மைதானம் அருகே 2 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது கீழடி மற்றும் அதன் அருகில் உள்ள கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களில் 6-வது கட்ட அகழாய்வு பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து 6-ம் கட்ட அகழாய்வு பணியை இன்று பிற்பகல் 3.45 மணியளவில் சென்னையில் இருந்தபடி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இதற்காக கீழடியில் அகழாய்வு செய்யும் இடத்தில் கடந்த 2 நாட்களாக சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது.
கீழடியில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் கலெக்டர் ஜெயகாந்தன் மற்றும் தொல்லியல் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.






