என் மலர்tooltip icon

    சிவகங்கை

    சட்டவிதிகளை செயல்படுத்துவதில் போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் ஒரே முறைதான் கடைப்பிடிக்கப்படும்.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் கூறியதாவது:-

    இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும். அவ்வாறு செல்வதால் விபத்துகள் நடைபெறும் பொழுது உயிர்பலி ஏற்படுவது தவிர்க்கப்படும். இதனால் அனைவரும் தவறாமல் ஹெல்மெட் அணிய வேண்டும். முக்கியமாக போலீசார் இருசக்கர வாகனங்களில் செல்லும்போது கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும். ஹெல்மெட் அணியாமல் செல்லும் போலீசார் மீது போக்குவரத்து இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள் அபராதம் விதிப்பார்கள். சட்டவிதிகளை செயல்படுத்துவதில் போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் ஒரே முறைதான் கடைப்பிடிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    திருப்பத்தூர் அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் வாணியன் கோவில் தெருவைச்சேர்ந்தவர் பன்னீர்செல்வம் மகன் செழியன் (வயது 42). தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், செழியன் நேற்று மதியம் வீட்டின் உத்தரத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுபற்றி திருப்பத்தூர் நகர் இன்ஸ்பெக்டர் சுந்தரமகாலிங்கம் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
    சிங்கம்புணரி பகுதியில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் குறித்து மின்வாரியம் அறிவித்துள்ளது.
    சிங்கம்புணரி:

    சிங்கம்புணரி துணை மின் நிலையத்தில் நாளை(சனிக்கிழமை) பராமரிப்பு பணி நடைபெறுகிறது. எனவே சிங்கம்புணரி மற்றும் பிரான்மலை, வேங்கைப்பட்டி, வையாபுரிபட்டி, செல்லியம்பட்டி, செருதப்பட்டி, அரசினம்பட்டி, குமரிப்பட்டி, நாட்டார்மங்கலம், சதுர்வேதமங்கலம், அ.காளாப்பூர், கண்ணமங்களப்பட்டி, கருங்காலக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் செல்லத்துரை தெரிவித்து உள்ளார்.
    திருப்பத்தூர் அருகே 7 பவுன் நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அருகே தென்கரை கிளாமடம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெள்ளைத்துரை. இவருடைய மனைவி ரேவதி (வயது 32). இவர் நேற்று முன்தினம் மாலை தனது வீட்டிற்கு வந்த சித்தியை புதுக்கோட்டை மாவட்டம் சேந்தம்பட்டிக்கு மொபட்டில் கொண்டுபோய் விட்டு விட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பியுள்ளார். திருப்பத்தூர் அருகே சிறுகூடல்பட்டி ரோட்டில் வந்தபோது, சாத்தியனேந்தல் கண்மாய்கரை ரோட்டில் இவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் வழிமறித்து ரேவதியை கீழே தள்ளிவிட்டு அவர் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர். இது குறித்து ரேவதி கீழச்சிவல்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். சப்-இன்ஸ்பெக்டர் மான்சிங்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் துணை சூப்பிரண்டு, ஆத்மநாபன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
    கடந்த வாரம் ஆரணியில் உள்ள ஓட்டலில் உணவு சாப்பிட்ட சிறுமி ஒருவர் வாந்தி வயிற்று வலி ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பத்துக்கு மேற்பட்ட ஹோட்டல்களில் உணவு பாதுகாப்பு அதிகாரி வேல்முருகன் தலைமையில் உதவியாளர்கள் மாணிக்கம் கருப்பையா உள்ளிட்ட தனிப்படை குழுவினர் அதிரடி சோதனை செய்ததில் பெரியார் சிலை அருகே உள்ள தலப்பாக்கட்டு பிரியாணி, பாரடைஸ் பிரியாணி, நிலா ரெஸ்டாரன்ட், கிச்சன் ஆகிய ஓட்டல்களில் கெட்டுப்போன சுமார் 100 கிலோ அளவிலான மட்டன், சிக்கன், மீன் போன்றவற்றை தனிப்படையினர் பறிமுதல் செய்து அழித்தனர்.

    இதுகுறித்து உணவு பாதுகாப்பு அதிகாரி வேல்முருகன் கூறுகையில், காரைக்குடியில் 10 ஹோட்டல்களில் சோதனை செய்ததில் மேலே குறிப்பிட்டுள்ள ஹோட்டல்களில் மக்கள் உண்பதற்கு ஏற்ற வகையில் இல்லாத, கெட்டுப்போன, பூஞ்சை ஏற்பட்ட, அதிகளவிலான செயற்கை நிறமிகள் பயன்படுத்திய, உற்பத்தி தேதி இல்லாத பாக்கெட்டில் வரும் பதப்படுத்திய என பல்வேறு வகையிலான இறைச்சிகளை பறிமுதல் செய்து அழித்துள்ளோம்.

    இந்த கடைகளுக்கு உணவு பாதுகாப்பு சட்டம் செக்ஷ 55ன் படி எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கியுள்ளோம்.மீண்டும் இந்த தவறு நிகழுமானால் அவர்கள் மீது குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு அந்த ஹோட்டல்களுக்கு சீல் வைக்கப்படும் என்றார். இதுகுறித்து சமூக ஆர்வலர் தென்னரசு கூறுகையில், ஆரணியில் ஒரு சிறுமி இறந்ததால்தான் இப்படியான சோதனைகள் செய்யப்பட்டது.


    மேலும் அதிகாரிகள் எச்சரிக்கை நோட்டீஸ் மட்டுமே கொடுத்துள்ளார்கள்.இதைப்போன்ற தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் சம்பந்தப்பட்ட ஹோட்டல்களுக்கு பெரிய அளவிலான அபராதம் விதித்து, சீல் வைத்திருக்கவேண்டும்.அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தி இருக்க வேண்டும்.வெறும் எச்சரிக்கை நோட்டீஸ் மட்டுமே வழங்கி உள்ளது வேதனை அளிக்கிறது.இதைப் போன்ற சோதனை மீண்டும் ஒரு உயிர் பலியான பின்பு செய்யாமல் அடிக்கடி அதிரடி சோதனைகளை உணவு பாதுகாப்பு துறை மேற்கொள்ள வேண்டும் என்றார்.செட்டிநாட்டின் அடையாளங்களில் முக்கியமானது செட்டிநாட்டு சமையல்.அதில் இவ்வாறான முறைகேடுகள் நடைபெறாமல் பாதுகாப்பது அதிகாரிகளின் கடமையாகும்.மேலும் தொடர்ந்த சோதனைகளில் காரைக்குடி அருகே உள்ள புதுவயலில் உள்ள ஹோட்டல்களில் 25 கிலோ இறைச்சிகளும், காளையார்கோவிலில் உள்ள ஹோட்டல்களில் 10 கிலோ இறைச்சிகளும் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.


    சிங்கம்புணரி சுடுகாட்டில் தலையில் வெட்டு காயத்துடன் 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிணமாக கிடந்தார். அவர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சிங்கம்புணரி:

    சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி சுடுகாட்டில் தலையில் வெட்டு காயத்துடன் 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிணமாக கிடந்தார். அவர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சிங்கம்புணரியை சுற்றி பொது குளியல் தொட்டிகளில் தண்ணீர் இல்லாததால் இந்தப்பகுதி இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் சிங்கம்புணரி சுடுகாட்டில் உள்ள நீர்தொட்டியில் குளிப்பார்கள்.

    இன்று காலை குளிக்க சென்ற ஒருவர் அங்கு தலையில் வெட்டுக்காயத்துடன் கிடந்தவரை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இது குறித்து சிங்கம்புணரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    ஆய்வாளர் சீராளன் சம்பவ இடத்தை பார்வை யிட்டு விசாரணை நடத்தினார். அவர் கூறுகையில், இறந்த நபரின் இரத்தம் இன்னும் உறையாத நிலையில் இருப்பதால் இந்த சம்பவம் அதிகாலையில் நடந்திருக்கலாம் என தெரிவித்தார்.

    கொலையாளிகள் இறந்த நபரை தலையில் தாக்கிவிட்டு பின்னர் முகத்தை சிதைத்து அருகில் கிடந்த குப்பை மற்றும் துணிகளை போட்டு எரிக்க முயற்சித்துள்ளனர்.

    டிப்-டாப் உடையுடன் இருப்பதால் இவர் வைத்திருந்த பணம் அல்லது நகைக்காக கொலை செய்திருக்க வாய்ப்பு உள்ளதா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இறந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக சிங்கம்புணரி தாலுகா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    சிவகங்கையில் பழிக்குப்பழியாக பா.ஜ.க. நிர்வாகி கொலை செய்யப்பட்டாரா? 3 பேர் கும்பலை பிடிக்க போலீஸ் தீவிரம்

    சிவகங்கை:

    சிவகங்கை அருகே உள்ள வைரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (வயது 43).

    பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த இவர் சமீபத்தில் தான் சிவகங்கை மாவட்ட மீனவரணி துணை தலைவராக நியமிக்கப்பட்டார். கட்சி பணியில் தீவிரமாக இருந்த முத்துப்பாண்டி நேற்று மாலை வீட்டின் அருகே உள்ள டீக்கடையில் நின்று கொண்டிருந்தார். அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் 3 பேர் கொண்ட ஒரு கும்பல் அங்கு வந்தது.

    அவர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் அரிவாள், வாளால் முத்துப்பாண்டியை வெட்ட வந்தனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உயிர்பிழைக்க அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.

    ஆனால் அந்த வெறி பிடித்த கும்பல் துரத்தி சென்று முத்துப்பாண்டியை சரமாரியாக வெட்டியது. இதில் ரத்த வெள்ளத்தில் அவர் சரிந்து விழுந்தார்.

    இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்ப முயன்றது. ஆனால் அவர்கள் கொண்டு வந்திருந்த மோட்டார் சைக்கிள் ஸ்டார்ட் ஆகவில்லை. இதையடுத்து அவர்கள் மோட்டார் சைக்கிளை அங்கேயே விட்டு, விட்டு மற்றொரு மோட்டார் சைக்கிளில் 3 பேர் தப்பிச் சென்றனர்.

    இதனிடையே உயிருக்கு போராடிக் கொண்டிருந்த முத்துப்பாண்டியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் பா.ஜ.க. பிரமுகர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து அங்கு கடைகள் அடைக்கப்பட்டன.

    கொலை குறித்து தகவலறிந்த சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து அங்கு பதட்டம் நிலவியதால் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

    சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் முத்துப்பாண்டி இறந்த தகவலறிந்த அவரது உறவினர்கள், பா.ஜனதா கட்சியினர் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    அவர்கள் குற்றவாளிகளை உடனே கைது செய்யவேண்டும் என கோ‌ஷமிட்டவாறு ஆஸ்பத்திரி முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் முத்துப்பாண்டியின் உடலை பிரேத பரிசோதனை அறைக்கு கொண்டு செல்ல முடியாமல் கட்சியினர் சூழ்ந்து கொண்டனர். இதையடுத்து போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்திய பின் முத்துப்பாண்டி உடல் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

    சிவகங்கை நகரில் பெரும் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்திய இந்த கொலை தொடர்பாக சிவகங்கை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

    கொலை செய்யப்பட்ட முத்துப்பாண்டி மீது கொலை வழக்கு, கட்ட பஞ்சாயத்து, பல ஆண்டுகளுக்கு முன்பு அயல்நாட்டு வேலைக்கு சென்ற இடத்தில் ஒரு பெண்ணை திருமணம் செய்து அந்த பெண்ணிடம் பண மோசடி செய்தது, கந்துவட்டி பிரச்சினை, இடம் விற்பதில் தகராறு என பல்வேறு புகார்கள் உள்ளன.

    கடந்த 2016-ம் ஆண்டு சிவகங்கையை அடுத்த சாமியார்பட்டியில் செல்வம் என்பவர் கொலை செய்யப்பட்டார். இதில் முத்துப்பாண்டிக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே பழிக்கு பழியாக அவர் கொலை செய்யப்பட்டாரா?அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முத்துப்பாண்டிக்கும், அதே ஊரைச் சேர்ந்த ஒருவருக்கும் இடையே நிலப்பிரச்சினையும் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் நிலப் பிரச்சினையால் அவர் தீர்த்துக்கட்டப்பட்டாரா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

    இந்த கோணத்திலும் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

    இதனிடையே கொலையாளிகள் விட்டுச் சென்ற மோட்டார் சைக்கிளை வைத்து அவர்களை பிடிக்கும் பணியை போலீசார் முடுக்கி விட்டுள்ளனர்.

    மேலும் நகரின் உள்ள சி.சி.டி.வி. காமிரா பதிவுகளில் கொலையாளிகள் நடமாட்டம் குறித்தும் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

    முத்துப்பாண்டியை வெட்டிக் கொன்றது 18 வயது முதல் 20 வயதுக்குட்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது. எனவே கூலிப்படையை வைத்து இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.

    கொலையாளிகள் பிடிபட்ட பின்பு முத்துப்பாண்டி கொலைக்கான உண்மையான காரணம் தெரியவரும்.

    கொலையுண்ட முத்துப்பாண்டிக்கு ஸ்வேதா என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். 

    சிவகங்கை அருகே ரூ.10 ஆயிரத்துக்காக ஒரு ஆண்டாக ஆடு மேய்க்கும் தொழிலில் 2 சிறுவர்கள் ஈடுபட்டனர். அவர்களை தொழிலாளர் துறையினர் மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர்.
    சிவகங்கை:

    சிவகங்கையை அடுத்த ஒக்கூர் பகுதியில் ஆடு மேய்க்கும் தொழிலில் குழந்தை தொழிலாளர்கள் ஈடுபடுவதாக சிவகங்கை மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் முத்துக்கழுவன், தொழிலாளர் நல உதவி ஆணையாளர் ராஜ்குமார், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ராமச்சந்திரன், குழந்தைகள் பாதுகாப்பு குழு ஒருங்கிணைப்பாளர் ஆனந்தபாபு, சமூக ஆர்வலர் உமா, வருவாய் ஆய்வாளர் கலாவதி, கிராம நிர்வாக அலுவலர் கவுரிசங்கர் மற்றும் போலீசார் ஒக்கூர் கொழக்கட்டை பட்டிரோடு பகுதியில் சோதனை செய்தனர்.

    அப்போது அங்கு 14 வயதான 2 சிறுவர்கள் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தனர். இதைத்தொடர்ந்து அவர்களை அந்த குழுவினர் மீட்டு விசாரணை நடத்தினர்.

    அப்போது அதில் ஒரு சிறுவன் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியை அடுத்த பெத்தநாச்சி வயல் கிராமத்தை சேர்ந்தவரென்றும் இவனை காளையார்கோவிலை அடுத்த பூதகுடி கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் அவனுடைய தந்தைக்கு ரூ.10,000 கொடுத்து சிறுவனை அழைத்து வந்தது தெரிய வந்தது. அந்த சிறுவன் கிருஷ்ணனுக்கு சொந்தமான செம்மறி ஆடுகளை கடந்த ஒரு ஆண்டாக ஊர் ஊராகச் சென்று கிடை அமைத்து மேய்த்து வருவது தெரிந்தது.

    மற்றொரு சிறுவனும் அதே ஊரைச் சேர்ந்தவன் என்றும் அவனுக்கு தந்தை இல்லை என்றும் அவனை காளையார்கோவிலை அடுத்த பூதகுடி கிராமத்தைச் சேர்ந்த தர்மலிங்கம் என்பவர் ரூ,10,000 கொடுத்து அழைத்து வந்ததும் அவனும் கடந்த ஒரு ஆண்டாக ஊர் ஊராக சென்று ஆடுகளை மேய்த்து வந்ததும் தெரிய வந்தது. மேலும் கடந்த ஒரு வருடமாக இவர்களுக்கு மூன்று வேளை உணவு மட்டும் வழங்கப்பட்டு வந்து உள்ளது.

    இதைத்தொடர்ந்து கோட்டாட்சியர் அந்த 2 சிறுவர்களையும் மீட்டு காப்பகத்தில் சேர்க்க உத்தரவிட்டார். மேலும் அந்த 2 சிறுவர்களையும் குழந்தை தொழிலில் ஈடுபடுத்திய அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மதகுபட்டி போலீசில் கிராம நிர்வாக அலுவலர் கவுரிசங்கர் புகார் செய்தார்.இந்த தொடர்பாக மதகுபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காளையார்கோவில் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மற்றொரு தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
    காளையார்கோவில்:

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே தெற்கு காவனூரைச் சேர்ந்தவர்கள் பாண்டி மகன் கோவிந்தராஜ் (வயது 32) மற்றும் வேலு மகன் பாக்கியராஜ் (42). இவர்கள் இருவரும் உறவினர்கள்.

    இருவரும் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் உள்ள போர்வெல் போடும் நிறுவனத்தில் சுண்ணாம்பு காளவாசல் பகுதியில் தங்கி பணியாற்றினர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அறையில் தங்கி இருந்த போது குடிபோதையில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோவிந்தராஜ், பாக்கியராஜை தாக்கியுள்ளார். பிறகு இருவரும் தூங்க சென்று விட்டனர்.

    நள்ளிரவில் தூக்கத்தில் இருந்து எழுந்த பாக்கியராஜ், இரும்பு குழாயை எடுத்து கோவிந்தராஜை அடித்தார். இதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து அவர் பரிதாபமாக இறந்தார்.

    பின்னர் பாக்கியராஜ் வெளியே சென்று தூங்கி விட்டார். நேற்று காலை வேலைக்கு சென்ற சக தொழிலாளர்கள் கோவிந்தராஜ் வராததை அறிந்து அவரை தேடி சென்றனர். அவர் அறையில் கொலை செய்யப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து காளையார்கோவில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து கொலை செய்யப்பட்ட கோவிந்தராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்தியதில் பாக்கியராஜ் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் அடித்து கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து அவரை கைது செய்தனர்.
    கீழடி அகழாய்வில் கிடைத்த பொருட்களை ஆவணப்படுத்தும் பணி தீவிரம் அடைந்து உள்ளது.
    திருப்புவனம்:

    திருப்புவனம் யூனியனை சேர்ந்த கீழடியில் 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. இத்துடன் சேர்த்து கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய பகுதிகளிலும் குழிகள் தோண்டி பணிகள் நடைபெற்று வருகிறது. கீழடியில் சேதமுற்ற சிறிய பெரிய பானைகள், மண்பாண்ட ஓடுகள், சிறுவர்கள் விளையாடும் சில்லுவட்டுகள், தந்தத்தால் ஆன தாயக்கட்டை, பெண்கள் காதில் அணியும் தங்க ஆபரணம் உள்பட பல பொருட்கள் கிடைத்துள்ளன.. இதேபோல் கொந்தகையில் 20-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள், 10-க்கும் மேற்பட்ட மனித முழு உருவ எலும்புக்கூடுகள் ஆகியவை கண்டறியப்பட்டன. முதுமக்கள் தாழிகளை ஆய்வு செய்ததில் உள்ளே இருந்து மனித மண்டை ஓடு, விலா எலும்பு, தசை எலும்பு, கை-கால் எலும்பு, சிறிய மண் கிண்ணம், இரும்பினால் ஆன வாள், மற்றும் கருப்பு சிவப்பு கலரில் சிறிய பானைகள் உள்பட பல பொருட்கள் கண்டறியப்பட்டன. அகரத்தில் சிறிய -பெரிய நத்தை ஓடுகள், சேதமுற்ற நிலையில் சிறிய -பெரிய பானைகள், சுடுமண் உறை கிணறுகள் உள்பட பல பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் கீழடியில் கண்டுபிடிக்கபட்ட பொருட்களை ஆவணப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் வரைபடம் மூலம் குழியில் பொருட்கள் கிடைத்த உயரம், அகலம் ஆகியவை குறித்தும் கிடைத்த பொருட்களில் நீளம், அகலம் குறித்தும் அளவீடு செய்யப்பட்டு ஆவணப்படுத்துதல் பணி நடைபெற்று வருகிறது. 7 கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளுக்கு இந்த மாதம் முடிய அரசு அனுமதி வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
    சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 16 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை மற்றும் வீட்டு தனிமையில் உள்ளவர்கள் உள்பட 135 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். நேற்று ஒரே நாளில் 17 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.
    சிவகங்கை அருகே விபத்தில் பெண் டாக்டர் பலியான சம்பவம் தொடர்பாக மதகுபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம், மதகுபட்டியைச் சேர்ந்தவர் ஆதப்பன். இவரது மனைவி இந்திரா (வயது 60). டாக்டரான இவர் மதுரையில் கிளீனிக் வைத்து நடத்தி வருகிறார்.

    இன்று காலை சிவகங்கை மாவட்டம், நாட்டரசன்கோட்டையில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு சொந்த ஊர் வழியாக காரில் மதுரைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். காரை அவரே ஓட்டி வந்தார். சிவகங்கை அருகே ஒக்கூர் என்ற இடத்தில் கார் வந்து கொண்டிருந்தது.

    அப்போது திருப்பத்தூரில் இருந்து சிவகங்கை நோக்கி ஜல்லி கற்கள் ஏற்றிக்கொண்டு டிப்பர் லாரி சென்றது. எதிர்பாராத விதமாக டிப்பர் லாரி கட்டுப்பாட்டை இழந்து டாக்டர் சென்ற கார் மீது மோதி அப்படியே கவிழ்ந்தது. இதில் லாரிக்கு அடியில் கார் சிக்கி அப்பளம் போல் நொறுங்கியது.

    இந்த விபத்தில் காருக்குள் சிக்கிய டாக்டர் இந்திரா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து அறிந்ததும் அங்கு ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். அவர்கள் காரை மீட்க முயன்றனர். ஆனாலும் முடியவில்லை.

    தகவல் கிடைத்து போலீசார் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் ஜே.சி.பி. எந்திரம் மூலம் லாரியின் அடியில் சிக்கி சேதமடைந்த காரை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். டாக்டர் இந்திரா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து காரணமாக மானாமதுரை பைபாஸ் ரோட்டில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக மதகுபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×