என் மலர்tooltip icon

    சிவகங்கை

    • இனிவரும் காலங்களில் வைகைநதி வற்றாத ஜீவநதியாக பாய ஆற்றுபகுதியில் கட்டிடங்களோ, மணல் குவாரிகளோ ஏதும் அமைக்க கூடாது.
    • வைகை ஆற்றில் இறைச்சி கழிவுகள், மருத்துவ கழிவுகள், குப்பைகளை கொட்டாமல் பாதுகாக்க வேண்டும்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வைகை ஆறு பூர்வீக பாசனபகுதிஆகும். பல ஆண்டுகளுக்கு முன் வைகை ஆற்று தண்ணீரைகொண்டு முப்போக விவசாயம் செய்துஉள்ளனர். ஆனால் பருவநிலை மாற்றத்தால் பல ஆண்டுகளாக தண்ணீரின்றி வறண்டு கடும் வறட்சியும் கண்டு உள்ளனர் இப்பகுதி விவசாயிகள்.

    மானாமதுரை வைகை ஆற்று பகுதிக்கு எப்போதும் தனி சிறப்பு உண்டு. காசியில் கங்கை நதி எப்படி உள்ளதோ அதேபோல் மேற்கில் இருந்து பாய்ந்து வரும் வைகை ஆறு வடக்கு தெற்கு பகுதியாக செல்லும் அமைப்பு மானாமதுரை வைகை ஆற்றுக்கு உள்ளது.

    இதேபோல் பல நூறுஆண்டுகாலமாக மானாமதுரை அருகே உள்ள திருப்புவனம் வைகைஆற்று கரையில் தான் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வருகின்றனர். அங்கு வரும் பக்தர்கள் ஆறு வறண்டு தண்ணீர் இல்லாமல் இருப்பதைகண்டு மணம் வருந்தி செல்லும் நிலை இருந்து வந்தது. ஆனால் தற்போது இந்த நிலை மாறி கடந்த 2 ஆண்டுகாலமாக வற்றாத ஜீவநதியாக மானாமதுரை வைகை ஆறு பாய்வதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    மானாமதுரையை சுற்றி ஏராளமான கண்மாய்கள் உள்ளன. அவகைளும் நிரம்பி மறுகால் பாய்கின்றன. இதைத் தொடர்ந்து விவசாய பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இனிவரும் காலங்களில் வைகைநதி வற்றாத ஜீவநதியாக பாய ஆற்றுபகுதியில் கட்டிடங்களோ, மணல் குவாரிகளோ ஏதும் அமைக்க கூடாது. கூடுதல் தடுப்பணைகள் அமைத்து தண்ணீரை சேமித்துத்து நிலத்தடி நீரை அதிகபடுத்தும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும்.

    வைகைஆறுமுழுவதும் நாணல் செடி, சீமை கருவேல் மரங்களை அகற்ற வேண்டும். ஆற்றில் இருந்து கால்வாய்களுக்கு செல்லும் பகுதியில் உள்ள மதகுகளை புதுபிக்க வேண்டும். வைகை ஆற்றில் இறைச்சி கழிவுகள், மருத்துவ கழிவுகள், குப்பைகளை கொட்டாமல் பாதுகாக்க வேண்டும்.

    வற்றாத ஜீவநதியாக செல்லும் கங்கை நதிக்கு இயற்கை அன்னைக்கு நன்றி சொல்லும் வகையில் வேகவதி எனும் வைகை நதிக்கும் ஆரத்தி எடுத்தும், புஷ்கரணி விழா நடத்தியும் வைகை நதிக்கு பெருமை சேர்க்க வேண்டும் என இப்பகுதியில் உள்ள விவசாயிகள், பொதுமக்கள், வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

    • தேசிய ரூர்பன் திட்டத்தின் கீழ் ரூ.3.32 கோடியில் பணிகள் நடந்து வருவதை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.
    • உற்பத்தி பணியை அந்தந்த பஞ்சாயத்துகளில் உள்ள மகளிர் குழுக்கள் மூலம் செயல்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட தோட்டக்கலைத்துறை மூலமாக தேசிய ரூர்பன் திட்டம் வாணியங்குடி தொகுப்பின் கீழ் செயல்பட்டு வருகிறது. இதில் வாணியங்குடி, சோழபுரம், சக்கந்தி, காஞ்சிரங்கால், அரசனிமுத்துப்பட்டி, கொட்டகுடி, கீழ்பாத்தி மற்றும் இடையமேலூர் ஆகிய கிராம பஞ்சாயத்துகளில் தலா ரூ.47.42 லட்சம் வீதம் மொத்தம் ரூ.3.32 கோடி மதிப்பீட்டில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    ஒவ்வொரு பஞ்சா யத்திலும் சூரிய உலர்த்தி, கடலைமிட்டாய், பால்கோவா உற்பத்தி, கால்நடை தீவனம் உற்பத்தி, தேங்காய் எண்ணெய் உற்பத்தி மற்றும் சிறுதானிய மதிப்பு கூட்டுப்பொருட்கள் தயாரிப்பு ஆகிய 6 எந்திரங்கள் அமைக்கப்பட்டு உற்பத்தி பணி நடைபெற உள்ளது.

    உற்பத்தி பணியை அந்தந்த பஞ்சாயத்துகளில் உள்ள மகளிர் குழுக்கள் மூலம் செயல்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேற்கண்ட அனைத்து பஞ்சாயத்துகளிலும் தோட்டக்கலைத்துறை மூலம் எந்திரங்கள் நிறுவும் பணி மற்றும் காஞ்சிரங்கால் பஞ்சாயத்து கிராமத்தில் ரூ.25லட்சம் மதிப்பீட்டில் ஒரு ஹெக்டேர் பரப்ப ளவில் செயல்பட்டு வரும் சிவகங்கை மாவட்ட தோட்டக்கலை ரூர்பன் நர்சரி செயல்பாடுகளை கலெக்டர் மதுசூதன் ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின் போது, மகளிர் திட்ட அலுவலர் வானதி, தோட்டக்கலை துணை இயக்குநர் அழகுமலை, வேளாண்மை துணை இயக்குநர் தமிழ்செல்வி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
    • பங்களிப்புத் தொகையில் வரவு வைக்கப்பட்டு மீதி தொகையை குடியிருப்பு ஒதுக்கீடு செய்யும் பொழுது பயனாளிகள் செலுத்த வேண்டும்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மதுரைக் கோட்டத்தின் மூலம் "அனைவருக்கும் வீடு" திட்டத்தின் கீழ் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் திட்டம் சிவகங்கை மாவட்ட த்தில், சிவகங்கை தாலுகா, பையூர்பிள்ளை வயல் திட்டப்பகுதியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 608 அடுக்கு மாடி குடியிருப்புகளுக்கான பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    இந்த திட்டத்தில் ஒரு குடியிருப்புக்கான செலவுத் தொகையில் மத்திய மற்றும் மாநில அரசின் மானியத்தொகை போக மீதமுள்ள பங்குத்தொகையை பயனாளிகள் செலுத்த வேண்டும். மேலும் "அனைவருக்கும் வீடு" திட்ட விதிகளின்படி, நிபந்தனை களுக்கு உட்பட்டு மேற்கண்ட திட்டப்பகு திகளில் கட்டப்படுகின்ற அடுக்குமாடி குடியிருப்புகள் தேவைப்படுவோர் இந்தியாவில் எனது பெயரிலோ, எனது குடும்ப உறுப்பினர்கள் பெயரிலோ வேறு எங்கும் வீடுகள் இல்லை. எனது மாத வருமானம் ரூ.25 ஆயிரத்திற்கு மிகாமல் உள்ளது எனவும் சான்றளிக்க வேண்டும்.

    பயனாளிகள் குடும்பத்தலைவர் மற்றும் குடும்பத்தலைவி ஆகிய இருவருடைய ஆதார் மற்றும் வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றுடன் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், பையூர்பிள்ளைவயல் அடுக்குமாடி குடியிருப்பு திட்டப்பகுதி, சிவகங்கை என்ற முகவரியில் வருகிற 11, 12-ந் தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும் பயனாளிகள் ரூ.5 ஆயிரம் மதிப்பிற்கான கேட்பு காசோலையை The Executive Engineer TNUu DB PIU - I Sivaganga என்ற பெயரில் எடுத்து பயனாளியின் ஆதார் நகல் (கணவன் மற்றும் மனைவி), வண்ணப்புகைப்படம் - 2, குடும்ப அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை மனுவுடன் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

    இந்த தொகையானது பயனாளியின் பங்களிப்புத் தொகையில் வரவு வைக்கப்பட்டு மீதி தொகையை குடியிருப்பு ஒதுக்கீடு செய்யும் பொழுது பயனாளிகள் செலுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தேவகோட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் எச்சரிக்கை விளக்கு இல்லாததால் விபத்துகள் தொடர்ந்து நடந்து வருகிறது.
    • இந்த தேசிய நெடுஞ்சாலையின் உட்பிரிவு சாலையில் எச்சரிக்கை விளக்குகள் அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.

    தேவகோட்டை

    ராமநாதபுரம் மாவட்டம் கிளியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது58). கட்டிட தொழிலாளி.

    சம்பவத்தன்று இவர் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இருந்து திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலை புளியால் சந்திப்பில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் முருகேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    தேவகோட்டை தாலுகா போலீசார் உடலை மீட்டு பிரேத சோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலை தற்போது புதுப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த சாலையில் தேவகோட்டை அருகே உள்ள சடையன்காடு, தேவகோட்டை பிரிவு சாலை, உடப்பன் பட்டி, கன்னங்கோட்டை, மாரிச் சான்பட்டி, தளக்காவயல், மாவிடுத்திக்கோட்டை, புளியால் போன்ற இடங்களில் சாலையில் எச்சரிக்கை விளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் அதிகளவில் விபத்துக்கள் ஏற்படுகின்றன.

    ஒரே மாதத்தில் சுமார் 10-க்கும் மேற்பட்டோர் இந்த சாலையில் விபத்தில் சிக்கி உயிரிழக்கின்றனர். இந்த சாலையில் சுங்கவரி வசூல் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

    எனவே இந்த தேசிய நெடுஞ்சாலையின் உட்பிரிவு சாலையில் எச்சரிக்கை விளக்குகள் அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.

    • சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரியில் பாரதி உலா பேச்சரங்கம் நடந்தது.
    • விழாவில் மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள இடம்பெற்றன.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சேதுபாஸ்கரா வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் மற்றும் உரத்த சிந்தனை எழுத்தாளர் சங்கம் இணைந்து நடத்திய 9-ம் ஆண்டு பாரதி உலா நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

    கல்லூரி முதல்வர் கருணாநிதி தலைமை தாங்கினார். மாணவி பிரியதர்ஷினி வரவேற்றார். தாளாளர் சேது குமணன் முன்னிலை வகித்தார். இதில் "பாரதி பேச்சு, பாரதத்தின் மூச்சு" என்ற தலைப்பில் மாணவ-மாணவிகளின் பேச்சரங்கம் நடந்தது.

    திரைப்பட இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிச ளித்து சிறப்புரையாற்றி னார். கல்லூரி இயக்குனர் கோபால், உரத்த சிந்தனை சங்க பொதுச்செயலாளர் உதயம்ராம் சிறப்புரை வழங்கினர்.

    விழாவில் மாணவர்க ளின் கலைநிகழ்ச்சிகள இடம்பெற்றன. மாணவர் விக்னேஷ் நன்றி கூறினார்.

    • கலெக்டர் நேரடி ஆய்வு நடத்தி இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
    • கலெக்டர் நேரடி ஆய்வு செய்து பயிர் இழப்பீடு கணக்கெடுப்பு நடத்தி உரிய இழப்பீடு பெற்று தர வேண்டும்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் பில்லுர் ஊராட்சி அலுபிள்ளை தாங்கி கிராமத்தில் சுமார் 300 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளது.

    கடந்த ஆகஸ்டு மாதம் சம்பா நெல் சாகு படி செய்யப்பட்டது. தற்போது அறுவடைக்கு நெற்கதிர்கள் தயாராக உள்ள நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் போதிய அளவில் மழை இல்லை.

    கடந்த டிசம்பர் மாதம் சிவகங்கை பகுதியில் 2 நாட்களாக பெய்த மழையால் இங்கு பயிரிடப்பட்ட 300ஏக்கர் நெற்கதிர்கள் வயலிலேயே சாய்ந்து தேங்கி நிற்கும் தண்ணீரிலும், சேற்றிலும் புதைந்து அழுகி வீணாகியது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், மழையால் நெற்பயிர்கள் முழுமையாக சேதமடைந்து உள்ளதால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டதுடன் வாழ்வாதாரத்தையும் இழந்துள்ளோம். ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்து நெல் நடவு செய்துள்ள நிலையில், தற்போது நெற்கதிர்கள் சாய்ந்து விழுந்து வீணாகி உள்ளது.

    இது குறித்து கலெக்டர் மதுசூதன் ரெட்டியிடம், கடந்த டிசம்பர் 26-ந் தேதி புகார் தெரிவித்தோம். அவர் உடனடியாக நடவடிக்கை கள் எடுக்கவும் உத்தரவு விட்டார்.

    மேலும் வேளாண் துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரடியாக சென்று பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு அதனை போட்டோ எடுத்து சென்றனர். ஆனால் அதன் பின் அதிகாரிகள் நடவடிக்கை கள் எடுக்கவில்லை.

    எனவே இந்தப்பகுதியில் கலெக்டர் நேரடி ஆய்வு செய்து பயிர் இழப்பீடு கணக்கெடுப்பு நடத்தி உரிய இழப்பீடு பெற்று தர வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • தெரு நாய்கள் தொந்தரவை கட்டுப்படுத்த வேண்டும் என கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
    • வரும் காலங்களில் கவுன்சிலர்கள் கோரிக்கையின்படி மாதந்தோறும் நகர்மன்ற கவுன்சில் கூட்டப்படும் என்றார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சி கவுன்சில் கூட்டம் அதன் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மாரியப்பன் கென்னடி தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் பாலசுந்தரம், ஆணையாளர் சக்திவேல் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    தி.மு.க. கவுன்சிலர் சதீஷ் குமார் பேசுகையில், சொத்து வரி பெயர் மாற்றத்திற்கு விண்ணப்பித்தால் பல மாதங்கள் காத்திருக்கும் நிலை உள்ளது. இது குறித்து ஆணையாளரிடம் புகார் செய்தால் ஊழியர் பற்றாக்குறை என்று காரணம் சொல்கிறார்கள்.ஆணையாளரை சந்தித்து கோரிக்கை குறித்து பேச காத்திருக்கும் நிலை உள்ளது என்றார்.

    அ.தி.மு.க. கவுன்சிலர் தெய்வேந்திரன் பேசுகையில், புதிய வீடு கட்டுவதற்கு வரைபட அனுமதிக்கு விண்ணப் பித்தால் உடனடியாக அனுமதி கிடைப்பதில்லை.இந்த நிலை நீடித்து வருகிறது என்றார்.இதற்கு பதில் அளித்த ஆணையாளர், சொத்து வரி மாற்றம், கட்டிட வரைபட அனுமதி ஆகியவை ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டு விட்டது.

    ஏற்கனவே அலுவலகத்தில் தேங்கி யிருந்த அனைத்து விண்ணப்பங்களுக்கும் தீர்வு காணப்பட்டு வருகிறது. கட்டிட வரைபட அனுமதிக்கு முன்னர் மனையிட வரி செலுத்தினால்மட்டுமே கட்டிட வரைபட அனுமதி பெற முடியும்.

    இனி வரும் காலங்களில் இன்னும் விரைந்து இந்த விண்ணப்பங்களுக்கு தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். பா.ஜ.க. கவுன்சிலர் முனியசாமி பேசுகையில் எனது வார்டில் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லாத நிலை உள்ளது. இது குறித்து வலியுறுத்தினால் கண்டுகொள்வது கிடையாது. டெண்டர் சம்பந்தமான தகவல்கள் தரமறுக்கின்றனர் என்றார்.

    அதைத் தொடர்ந்து பேசிய பெண் கவுன்சிலர்கள் உள்ளிட்ட அனைத்து கவுன்சிலர்களும் தங்கள் வார்டுகளில் மின்விளக்கு வசதி, வடிகால் வசதி, குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். கொசுதொல்லை அதிகரித்து விட்டது.

    வார்டு முழுவதும் கொசுமருந்து அடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நகரில் நாய் தொல்லை அதிகரித்து விட்டது. தினமும் 10 க்கும் மேற்பட்டோர் நாய் கடிக்கு ஆளாகின்றனர்.நாய்களிடம்இருந்து பொதுமக்களை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    இதற்கு பதிலளித்த தலைவர், கவுன்சிலர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகம் முழுவதும் இந்த தொந்தரவு உள்ளது. நாய்களை கொல்ல முடியாது.நாய்களை கட்டுப்படுத்த புளு கிராஸ் நிர்வாகத்திடம் பேசி முடிவு எடுக்கப்படும். வரும் காலங்களில் கவுன்சிலர்கள் கோரிக்கையின்படி மாதந்தோறும் நகர்மன்ற கவுன்சில் கூட்டப்படும் என்றார்.

    • இளையத்தங்குடியில் ஆருத்ரா தரிசன தேரோட்டம் நடந்தது.
    • விழாவிற்கான பாதுகாப்பு பணியில் திருப்பத்தூர் மற்றும் கீழசேவல் பட்டி போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா கீழசேவல்பட்டி அருகே உள்ள இளையத்தகுடியில் கைலாசநாதர் நித்திய கல்யாணி சமேத கோவிலில் மார்கழி ஆருத்ரா தரிசன தேர்த்திருவிழா இன்று நடந்தது.

    முன்னதாக கைலாச நாதர் நாதருக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. அதனை தொடர்ந்து நடராஜர் தேரிலும் சிவகாமி அம்பாள், சுந்தரர் ஆகியோர் சப்பரத்தில் எழுந்தருளினர். அதன்பின் பக்தர்கள் வடம்பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கினர். இளையத் தங்குடியில் உள்ள முக்கிய வீதிகளில் தேர் வலம் வந்தது.

    தேர் திருவிழாவை காண இளையதங்குடி மற்றும் அதனை சுற்றிஉள்ள 28 கிராமத்தைச் சேர்ந்த நாட்டார்கள், நகரத்தார்கள், ஊர் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் ஒன்று கூடி மகிழ்ச்சியோடு தேரை வலம் பிடித்து இழுத்து வந்து சாமி தரிசனம் பெற்றனர்.

    இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இளையாத் தங்குடி கைலாசநாதர் கோவில் தேவஸ்தானம் நிர்வாகிகள் செய்திருந்தனர். விழாவிற்கான பாதுகாப்பு பணியில் திருப்பத்தூர் மற்றும் கீழசேவல் பட்டி போலீசார் ஈடுபடுத்தப் பட்டனர்.

    கடந்த எட்டாம் நூற்றாண்டில் இருந்து இக்கோவிலில் தேர் திருவிழா தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • சிவகங்கை அருகே விபத்தில் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிக்கு ரூ.2.40 லட்சம் செலவில் வீடு வழங்கப்பட்டது.
    • இதனை கலெக்டர் மதுசூதன் ரெட்டி வழங்கி திறந்து வைத்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் நலனை கருத்தில் கொண்டு அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் வாயிலாக அவர்களை பயன்பெறச் செய்யும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சிறப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதில், சிவகங்கை ஊராட்சி ஒன்றியம், மேலப்பூங்குடி ஊராட்சி திருமன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி லட்சுமணன் கோவை மாவட்டத்தில் பணிபுரிந்த போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட சாலை விபத்தின் காரணமாக முதுகு தண்டு பாதித்து, கால்கள் செயலிழந்த நிலையில் உள்ளார்.

    அவர் தற்போது தனது குடும்பத்தினரின் அரவணைப்பில் பாதுகாக்கப்பட்டு வருகிறார். அவருக்கு பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் அவரது இல்லத்திற்கு சென்று மருத்துவப் பராமரிப்பு வழங்கிடும் பொருட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    மேலும் முதல்-அமைச்சரின் உத்தரவின்படி அவருக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் லட்சுமணனுக்கு பெரு நிறுவன சமூக பொறுப்புகள் திட்டநிதி 2021-22ன் கீழ் ரூ.2.40 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வீட்டினை கலெக்டர் மதுசூதன் ரெட்டி வழங்கி திறந்து வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் உதவி இயக்குநர் (தணிக்கை) கந்தசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) ரத்தினவேலு, ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ஜெகநாதசுந்தரம், உதவி பொறியாளர் கிருஷ்ண குமாரி, ஒன்றிய பணி மேற்பார்வையாளர் மாலதி, ஊராட்சி மன்றத்தலைவர் கிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கிருங்காகோட்டை ஜல்லிக்கட்டில் புதிய நாச்சி காளைக்கு பரிவட்டம் கட்டும் நிகழ்ச்சி நடந்தது.
    • கிராம மக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஒன்றியம் கிருங்காகோட்டையில் ஜெயமனி என்பவருக்கு சொந்தமான நாச்சி காளை தமிழக அளவில் 7 வருடங்களாக 500-க்கும் மேற்பட்ட ஜல்லிகட்டு போட்டிகளில் வெற்றி வாகை சூடி, ஜல்லிக்கட்டு பந்தயங்களில் புகழ் பெற்றுள்ளது.

    கடந்த டிசம்பர் 22-ந் தேதி அன்று திடீரென நாச்சி காளை மரணமடைந்தது. இந்த காளைக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு ஜெயமனிக்கு சொந்தமான தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

    இதைத்தொடர்ந்து தாங்கள் சாமியாக கும்பிடும் ஜல்லிக்கட்டு காளை இறந்தால் அதை ஈடுகட்டும் விதமாக கிராம வழக்கப்படி பாரம்பரிய முறைப்பட்டி புதிய காளைக்கு பரிவட்டம் கட்டப்படும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    கிருங்காக்கோட்டையில் உள்ள குலதெய்வமான பெரிய நாச்சி கோவிலில் வைத்து தட்டில் திருநீற்றில் சூடம் ஏற்றி தீபாராதனை காட்டப்பட்டு, புதிய நாச்சி காளைக்கு பரி வட்டம் கட்டப்பட்டது.

    அதனைத்தொடர்ந்து அங்கு நின்ற பெண் பக்தருக்கு அருள் வந்தது. காளைக்கு முன் நின்று திருநீரை கையில் எடுத்து புதிய காளையை நாச்சி என்று அழைத்தார். அதை கேட்டவுடனே ஆக்ரோச மாக துள்ளிய புதிய காளை நாச்சி சூடம் ஏற்றி வைக்கப்பட்ட தட்டை முன்பக்க காலை வைத்து தட்டி விட்டு சென்றது.

    அருள் வந்த பெண் தங்கள் நாச்சி காளை தட்டை தட்டி விட்டு சத்தியம் செய்ததாக எடுத்துக்கொண்டு வந்து ட்டாட நாச்சி... வத்துட்டாட நாச்சி... என கூறிய இந்த காட்சி இடம் பெற்ற வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    • தி.மு.க. ஆட்சியில் வீடுகள் இல்லாத மக்கள் தேர்வு செய்யப்பட்டு 27 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.
    • கிராம மக்களுடன் தாசில்தார் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே எஸ்.வி.மங்கலத்தில் 1997-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் வீடுகள் இல்லாத மக்கள் தேர்வு செய்யப்பட்டு 27 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. இதில் 7 நபர்களுக்கு தகுதி அடிப்படையில் பட்டா ரத்தானதாக கூறப்படுகிறது. 25 ஆண்டுகளுக்கு மேல் கடந்த நிலையில் அவர்களுக்காக தேர்வு செய்யப்பட்ட இடம் அளவீடு செய்து கொடுக்காமல் அதிகாரிகள் காலம் தாழ்த்தி விட்டனர்.

    பட்டா இருந்தும் இடம் கிடைக்காமல் விரக்தியடைந்த பயனாளிகள் தங்களுக்கு பட்டாவிற்கான இடத்தை அளவீடு செய்து கொடுக்குமாறு பட்டாவுடன் எஸ்.வி.மங்கலம் கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது அலுவல் சம்பந்தமாக அந்தவழியாக சென்ற தாசில்தார் சாந்தி பொதுமக்களை கண்டதும் அவர்களை சந்தித்தார். அப்ேபாது அவர் ஒரு வாரத்திற்குள் அளவீடு செய்து தருவதாக உறுதியளித்தார்.அதனை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த நிலையில் பயனாளிகளை தாசில்தார் சாந்தி பேச்சுவார்த்தைக்கு அழைத்து 2 வாரங்களில் நில அளவீடு செய்து தருவதாக உறுதியளித்துள்ளார்.

    • வேலுநாச்சியார் பெயரில் பெண் போலீசாருக்கான பயிற்சி கல்லூரி அமைக்க இடம் தேர்வு செய்யப்படுகிறது.
    • வேலுநாச்சியார் நினைவு மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர் பெரியகருப்பன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    சிவகங்கை

    வீரமங்கை வேலு நாச்சியாரின் 293-வது பிறந்த நாளை முன்னிட்டு, சிவகங்கை-சூரக்குளத்தில் அமைந்துள்ள வேலு நாச்சியாரின் நினைவு மண்டபத்தில் அவரது சிலைக்கு, அமைச்சர் பெரியகருப்பன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    அதனைத்தொடர்ந்து கலெக்டர் மதுசூதன் ரெட்டி, கார்த்திசிதம்பரம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தமிழரசி, மாங்குடி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பிரமுகர்கள் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினர்.

    அதனைத்தொடர்ந்து, அதே வளாகத்தில் உள்ள வீரத்தாய் குயிலியின் நினைவுச்சின்னத்திலும் அனைவரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பெரியகருப்பன் பேசியதாவது:-

    இந்திய வரலாற்றில் முதல் பெண்மணியாக சுதந்திரத்திற்காக தனித்து நின்று போராடிய வீர மங்கை வேலுநாச்சியார் பிறந்த சிவகங்கை மாவட்டத்தில், இந்த வீரப் பெண்மணிக்கு நினைவு மண்டபம் அமைத்து, ஆண்டுதோறும் அவரது பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது.

    இந்திய விடுதலைப் போரில் தமிழர்களின் பங்களிப்பை வெளிக்கொ ணரவும், தமிழ் சமூகத்தின் கலாச்சாரம், பண்பாட்டை மீட்டெடுக்கும் நடவடிக்கையாகவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீரமங்கை வேலுநாச்சியாரின் வரலாறு கூறும் இசையார்ந்த நாடகத்தை சென்னையில் தொடங்கி வைத்தார்.

    அந்த நிகழ்ச்சி தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் நடந்தது.

    இதுபோன்று சுதந்திரப் போராட்ட தியாகிகளை போற்றும் வகையில் அவர்களை கவுரவிக்கும், இளைய தலைமுறையினருக்கு முன்மாதிரியாக திகழும் வகையிலும், முதல்-அமைச்சர் சிறப்பான நடவ டிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

    சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர், சிவகங்கை மாவட்டத்தில் வீரமங்கை வேலுநாச்சியார் பெண்கள் காவலர் பயிற்சி கல்லூரி அமைத்துத்தருமாறு அரசிடம் வைத்துள்ள கோரிக் கையின் அடிப்படையில், அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளும் வகையில், இடம் தேர்வு செய்தல் போன்ற நடவடிக்கைகளும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், செய்தி- மக்கள் தொடர்பு அலுவலர் சண்முகசுந்தரம், சிவகங்கை ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் மஞ்சுளா பாலசந்தர், சிவகங்கை நகர்மன்றத் தலைவர் துரைஆனந்த், ஆவின் பால்வளத்தலைவர் சேங்கைமாறன், காஞ்சிரங்கால் ஊராட்சி மன்றத்தலைவர் மணிமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

    ×