விபத்தில் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிக்கு ரூ.2.40 லட்சம் செலவில் வீடு

சிவகங்கை அருகே விபத்தில் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிக்கு ரூ.2.40 லட்சம் செலவில் வீடு வழங்கப்பட்டது. இதனை கலெக்டர் மதுசூதன் ரெட்டி வழங்கி திறந்து வைத்தார்.
மாற்றுத்திறனாளி லட்சுமணனுக்கு வழங்கப்பட்ட வீட்டில் கலெக்டர் மதுசூதன் ரெட்டி குத்துவிளக்கு ஏற்றினார்.
மாற்றுத்திறனாளி லட்சுமணனுக்கு வழங்கப்பட்ட வீட்டில் கலெக்டர் மதுசூதன் ரெட்டி குத்துவிளக்கு ஏற்றினார்.
Published on

சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் நலனை கருத்தில் கொண்டு அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் வாயிலாக அவர்களை பயன்பெறச் செய்யும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சிறப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதில், சிவகங்கை ஊராட்சி ஒன்றியம், மேலப்பூங்குடி ஊராட்சி திருமன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி லட்சுமணன் கோவை மாவட்டத்தில் பணிபுரிந்த போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட சாலை விபத்தின் காரணமாக முதுகு தண்டு பாதித்து, கால்கள் செயலிழந்த நிலையில் உள்ளார்.

அவர் தற்போது தனது குடும்பத்தினரின் அரவணைப்பில் பாதுகாக்கப்பட்டு வருகிறார். அவருக்கு பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் அவரது இல்லத்திற்கு சென்று மருத்துவப் பராமரிப்பு வழங்கிடும் பொருட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் முதல்-அமைச்சரின் உத்தரவின்படி அவருக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் லட்சுமணனுக்கு பெரு நிறுவன சமூக பொறுப்புகள் திட்டநிதி 2021-22ன் கீழ் ரூ.2.40 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வீட்டினை கலெக்டர் மதுசூதன் ரெட்டி வழங்கி திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் உதவி இயக்குநர் (தணிக்கை) கந்தசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) ரத்தினவேலு, ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ஜெகநாதசுந்தரம், உதவி பொறியாளர் கிருஷ்ண குமாரி, ஒன்றிய பணி மேற்பார்வையாளர் மாலதி, ஊராட்சி மன்றத்தலைவர் கிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com