என் மலர்
புதுக்கோட்டை
- கறம்பக்குடியில் மோட்டார் சைக்கிள் பள்ளத்தில் பாய்ந்து வாலிபர் பலியானார்
- இதுகுறித்து கறம்பக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தூர் பாண்டியன் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
கறம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே நரங்கிய பட்டு யாதவர் தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 27). வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு சொந்த ஊர் திரும்பி விவசாய பணியை செய்து வந்தார். இந்நிலையில் பாலகிருஷ்ணன் கறம்பக்குடியில் இருந்து புதுப்பட்டிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். பெரிய காட்டாற்று பாலம் அருகே சென்றபோது நிலை தடுமாறி, கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் அருகே உள்ள பள்ளத்தில் பாய்ந்தது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த பாலகிருஷ்ணனை, பொதுமக்கள் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலமாக கறம்பக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கறம்பக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தூர் பாண்டியன் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
- புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் உழவன் செயலியை பயன்படுத்திட வேண்டும் என வேளாண் இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்
- விவசாயிகள் இச்செயலியில் உரிய பதிவுகள் மேற்கொண்டு துறையின் திட்டப்பலன்களை அறிவதோடு, பயன்பெற்றும் வருகின்றனர்.
புதுக்கோட்டை,
அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் உள்ளிட்ட வேளாண்மைத்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் இடுபொருட்கள் ஆகியவற்றை பெற்று பயன்பெறுவதற்கு உழவன் செயலியில், புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று வேளாண்மை இணை இயக்குநர் மா.பெரியசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் 2021-22 ஆம் ஆண்டு முதல் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட கிராம பஞ்சாயத்துகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் நடப்பு 2023-24 ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட 98 கிராம பஞ்சாயத்துகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டங்களில் பயன்பெறுவதற்காக உழவன் செயலி என்ற உன்னதமான செயலி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. விவசாயிகள் இச்செயலியில் உரிய பதிவுகள் மேற்கொண்டு துறையின் திட்டப்பலன்களை அறிவதோடு, பயன்பெற்றும் வருகின்றனர். மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் தங்கள் கைபேசியில் உழவன் செயலியினை பதிவிறக்கம் செய்து திட்டப்பலன்களை பெற்றிட உரிய முன்பதிவுகள் மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.
- புதுக்கோட்டையில் நவீன சலவையகம்-ஆயத்த ஆடையகம் திறக்கப்பட்டது
- அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை நகராட்சியில், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், நவீன முறை சலவையகம் மற்றும் ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு திறப்பு விழா நடைபெற்றது. கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி கலந்து கொண்டு உற்பத்தி அலகினை திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:- புதுக்கோட்டை மாவட்டத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சலவைத் தொழில் புரிவோருக்கு, இலவச சலவைப் பெட்டி வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது இம்மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும், மாறிவரும் சூழலுக்கு ஏற்பவும் மிகவும் பிற்படுத்தப்பட்ட இன மக்களில் 10 நபர்களை இணைத்து ஒரு குழு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அந்த குழுவிற்கு ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் மின் சலவை இயந்திரம், மின் உலர் இயந்திரம், தேய்க்கும் மேசை மற்றும் மின்சார அயன்பாக்ஸ் ஆகியவற்றை கொண்ட நவீன முறை சலவையகம் புதுக்கோட்டை நகரம், சின்னப்பா நகர் அருகில், ஸ்ரீநகரில் மகளிர் சுய உதவிக்குழுவால் தொடங்கப்பட்டு உள்ளது.
மேலும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 10 நபர்களை இணைத்து ஒரு குழு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. குழுவிற்கு ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் மின் தையல் இயந்திரம், வெட்டும் இயந்திரம், மேசை மற்றும் ஓவர்லாக் இயந்திரம் ஆகியன வாங்கப்பட்டு, புதுக்கோட்டை நகரம், நிஜாம் காலனியில் சுய உதவிக்குழுவினரால் தொடங்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார். விழாவில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா, மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ஜி.அமீர் பாஷா, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
- தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ஆலங்குடியில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது
- இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஆலங்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி நாமபுரீஸ்வரர் திருக்கோலில் மற்ற கோவில்களில் இல்லாத சிறப்பாக ஆதி கால பைரவர் மற்றும் காசி கால பைரவர் என 2 பைரவர்கள் அருள்பாளித்து வருகின்றனர். இக்கோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவருக்கு பால், பன்னீர், தேன், சந்தனம், பஞ்சாமிர்தம், திராட்சை, சாத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு விபூதி அலங்காரத்தில் பைரவர் காட்சி அளித்தார். பின்னர் ஆலயத்தில் உட்புறமாக உற்சவ பைரவர் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் பைரவருக்கு உரிய நிறமான சிவப்பு நிறக்கயிறும், பிரசாதமும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- அறந்தாங்கியில் தி.மு.க. தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது
- தலைமை கழக பேச்சாளர் பொள்ளாச்சி சித்திக் கலந்து கொண்டு தி.மு.க. அரசின் ஈராண்டு சாதனைகள் குறித்து விளக்கிப் பேசினார்.
அறந்தாங்கி,
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் தி.மு.க. அரசின் ஈராண்டு சாதனைகள் குறித்து தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய இளைஞர் அணி சார்பில் நடைபெற்றக் கூட்டத்தில் ஒன்றியக்குழு தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன் தலைமை வகித்து சிறப்புரையாற்றினார். அழியாநிலை, பரவாக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தலைமை கழக பேச்சாளர் பொள்ளாச்சி சித்திக் கலந்து கொண்டு தி.மு.க. அரசின் ஈராண்டு சாதனைகள் குறித்து விளக்கிப் பேசினார்.
நிகழ்ச்சியில் மாநில விவசாய தொழிலாளர் அணி துணைத்தலைவர் சந்திரசேகர், கிழக்கு ஒன்றியச் செயலாளர் குமார், கூட்டமைப்பு தலைவர் மணிமொழியன், மாவட்டக்குழு உறுப்பினர் சரிதாமேகராஜன், ஒன்றிய அவைத்தலைவர் கருணாநிதி, ஒன்றியத் துணைச் செயலாளர்கள் மூர்த்தி, பாலு, ஊராட்சி மன்ற தலைவர்கள் அடக்கியப்பன், தமிழரசி அன்பழகன், ஆன்டியப்பன், ரவிச்சந்திரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் குணவிநாயகம், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் தமிழ்ராசு, ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் செந்தில், சரவணன் ஆகியோர் செய்திருந்தனர்.
- விராலிமலையில் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் குப்பை கழிவுகள் கொட்டப்படுகிறது
- தடுத்து நிறுத்த பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்
விராலிமலை,
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான இடத்தில் சிலர் குப்பைகளை கொட்டி சுற்றுச்சூழல் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாகவும், இதை தடுத்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி குறிச்சிப்பட்டி, கொண்டமநாயக்கன்பட்டி பொதுமக்கள் மற்றும் குளம் ஆயக்கட்டுதாரர்கள் இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலருக்கு புகார் மனு அளித்துள்ளனர்.
மேலும் அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- விராலிமலை அருகே உள்ள வடுகப்பட்டி ஊராட்சி தென்னங்குடி குளம் கரையில் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான இடம் காலியாக உள்ளது. அங்கு சிலர் விராலிமலை பகுதியில் இயங்கிவரும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் பல்வேறு நச்சு கழிவுகள், தொழிற்சாலையில் சேரும் குப்பைகளை வாகனம் மூலம் கொண்டு வந்து குளக்கரையில் உள்ள காலியிடத்தில் கொட்டுகின்றனர்.
மேலும் பிளாஸ்டிக், ஆயில் கேன்கள் உள்ளிட்ட பொருட்களும் இக்குப்பை கழிவுடன் கொட்டப்படுவதால் மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகள் புற்களுடன் இக்குப்பைகளை உண்டால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்றும், குப்பைகளில் இருந்து கிளம்பும் துர்நாற்றத்தால் அப்பகுதி வழியாக பயணிக்கும் பொதுமக்களுக்கு தீங்கு விளைவித்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்படும் மேலும் சூற்றுச்சூழலை பாதிக்கும் எனவே கோவில் இடத்தை ஆக்கிரமித்து குப்பை கழிவுகளை கொட்டுபவர்களை கண்டறிந்து அவர்களை தடுத்து நிறுத்தி கோயில் இடத்தின் ஆக்கிரமிப்பை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறியுள்ளனர்.
- ஏ.டி.எம்.ல் பணம் எடுக்க வருவபவர்களுக்கு உதவுவது போல் நடித்து திருடியவர் கைது செய்யப்பட்டார்
- பல்வேறு வழக்குகளில் தொடர்பு அம்பலம்
பொன்னமராவதி,
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் உள்ள எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க வரும் பொதுமக்களிடம் உதவுவது போல நடித்து பணம் எடுத்து தருவதாக கூறி அவர்களிடமிருந்த ஏ.டி.எம். கார்டையும். ரகசிய எண்ணையும் கேட்டு தெரிந்து கொண்டு வாலிபர் ஒருவர் தொடர்ந்து மோசடி செயலில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து அந்த மர்ம நபரை பிடிக்க புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதாபாண்டே தலைமையில் உத்தரவின்பேரில் பொன்னமராவதி டி.எஸ்.பி. அப்துல் ரகுமான் மேற்பார்வையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் அன்பழகன், ஆனந்த் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. பொன்னமராவதியில் பணம் எடுக்க வருபவர்களிடம் குறிப்பாக சந்தை நாட்களானன சனி மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் அதிகம் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் குறிப்பிட்ட அந்த எஸ்.பி.ஐ. ஏ.டி.எம். மையத்தை போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில் கடந்த சனிக்கிழமையன்று பொன்னமராவதி அருகே சுந்தரசோழபுரத்தை சேர்ந்த பாக்கியலட்சுமி என்பவர் பணம் எடுக்க சென்றுள்ளார். அப்போது அங்கிருந்து இளைஞர் ஒருவர் அவரது ஏ.டி.எம். கார்டை பெற்று பணம் எடுப்பது போல் நடித்து தான் வைத்திருந்த போலி ஏ.டி.எம். கார்டை பாக்யலெட்சுமியிடம் கொடுத்துள்ளார்.
இதற்கிடையே அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.30 ஆயிரத்து 500 பணம் எடுத்து உள்ளதாக செல்போனுக்கு குறுஞ்செய்தி வரவே உடனடியாக அவர் பொன்னமராவதி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். உடனடியாக பொன்னமராவதி போலீசார் ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை அலசி ஆராய்ந்ததில் பாக்கியலட்சுமி மர்ம நபரை அடையாளம் காட்டியுள்ளார். அதில் இளைஞர் ஒருவர் ஏடிஎம் கார்டை மாற்றியதும் பிறகு அந்த கார்டை பயன்படுத்தி பணம் எடுததும் தெரிய வந்தது.
இதனையடுத்து அந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு அந்த மர்ம நபரை தனிப்படை போலீசார் மாறு வேடத்தில் அங்கும் இங்குமாக நின்று கொண்டு மீண்டும் அதே போன்று வேறு நபரிடம் மோசடியில் ஈடுபட முயன்றபோது கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்ததில் அவர் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா பாலமேடு பகுதியை சேர்ந்த வெங்கடசாமி என்பவரின் மகன் சரவணகுமார் (31) என்பது தெரியவந்தது.
திருட்டில் ஈடுபட்டு வந்த சரவணகுமாரிடம் பல்வேறு கோணத்தில் விசாரணைகளை மேற்கொண்ட போலீசார் ஏற்கனவே மதுரை பகுதியில் ஏ.டி.எம். மையங்களில் இதே போன்று திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டதாக ஆறு வழக்குகள் இருப்பதை உறுதி செய்தனர். மேலும் அவரிடமிருந்து ரூ.18000 ரூபாய் ரொக்க பணத்தையும் கைப்பற்றிய போலீசார் பின்னர் பொன்னமராவதி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- தெப்பகுளத்தில் விழுந்து உயிரிழந்த வாலிபர் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கப்பட்டது
- அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்
ஆலங்குடி,
ஆலங்குடி அருகே திருவரங்குளம் அரங்குளநாதர் கோயில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு தெப்ப திருவிழா நடைபெற்றது. தெப்பத் திருவிழாவின் போது திருக்கட்டளை வெள்ளாளர் தெருவைச் சேர்ந்த செல்லமுத்து மகன் சுந்தர் என்பவர் எதிர்பாராத விதமாக குளத்தில் மூழ்கி உயிரிழந்தார் இதனை தொடர்ந்து இறந்து போன சுந்தர் இல்லத்திற்கு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்ய நாதன் நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி நிவாரண உதவி வழங்கினார். மேலும் அரசின் மூலம் கிடைக்க வேண்டிய நிவாரண உதவிகளை விரைந்து பெற்றுத்தர அவரது பெற்றோரிடம் உறுதியளித்தார். தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் தங்கமணி தெற்கு ஒன்றிய செயலாளர் அரு.வடிவேல் உட்பட பலர் உடன் இருந்தனர்.
- குற்றவாளிகளை கைது செய்யக்கோரி மறியல் போராட்டம் நடத்தினர்
- அறந்தாங்கி அருகே மது-கஞ்சா போதையில் ரகளையில் ஈடுபட்டனர்
அறந்தாங்கி,
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே துரையரசபுரத்தில் அரசின் டாஸ்மாக் கடை அருகே உரிய அனுமதியின்றி மதுபானக்கூடம் செயல்பட்டு வருகிறது. இதனால் அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் எந்நேரமும் மது போதையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் சாலை ஓரத்தில் மது அருந்தி விட்டு, கஞ்சாவும் புகைத்துக் கொண்டு அவ்வழியாக செல்லக் கூடிய பொது மக்களை அச்சுறுத்தி ரகளையில் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டு இருந்து வந்தது.
இந்நிலையில் நேற்று பஞ்சாத்தி கிராமத்தை சேர்ந்த ஒருவர் அவ்வழியாக சென்று கொண்டிருக்கையில், அவரிடம் தகராறு செய்த போதை ஆசாமிகள், அவரிடமிருந்த 7 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் அணிந்திருந்த இரண்டரை சவரன் சங்கிலியை அறுத்துவிட்டு, அடித்து துன்புறுத்தியுள்ளனர். இதில் அந்த நபர் படுகாயமடைந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி அறந்தாங்கி ஆவுடையார்கோவில் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் தெரிவிக்கையில் துரையரசபுரம், அறந்தாங்கி போன்ற பகுதிகளில் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. இதனால் இளைஞர்கள் கெட்டுப்போவதோடு பல்வேறு குற்றச்சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. அதோடு மட்டுமல்லாது துரையரசபுரத்தில் அனுமதியின்றி இயங்கி வரும் மதுபானக் கூடத்தில் 24 மணி நேரமும் மது கிடைக்கிறது. இதனால் கஞ்சா புகைப்போர் அங்கேயே குடியாக கிடக்கின்றனர். மேலும் அவ்வழியாக செல்வோரை அடித்து, வழிப்பறி செய்கின்றனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து புழக்கத்தில் உள்ள கஞ்சா விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும், துரையரசபுரத்தில் குடியிருப்பு பகுதியில் உள்ள மதுபானக்கடையை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். போராட்டத்தினை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த துணை போலீஸ் சூப்பிரண்டு தினேஷ்குமார், இன்ஸ்பெக்டர் சாந்தகுமாரி உள்ளிட்ட போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி குற்றவாளிகளை விரைவில் கைது செய்வோம் என உறுதி அளித்தனர். அதிகாரிகளின் உறுதியளிப்பை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். மறியல் போராட்டத்தால் அறந்தாங்கி-ஆவுடையார்கோவில் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
- ஆலங்குடி அருகே லோடு வேனில் 1 டன் ரேஷன் அரிசி கடத்தப்பட்டது
- ஒருவர் கைது, டிரைவர் தப்பி ஓட்டம்
ஆலங்குடி,
ஆலங்குடி அருகே லோடு வேனில் ரேஷன் அரிசி கடத்திய வரை குடிமை பொருள் வழங்கள் குற்ற புலனாய்வுத்துறை போலீசார் கைது செய்து ரேஷன் அரிசி மற்றும் அதனை கடத்திய வாகனத்தை பறிமுதல் செய்தனர். புதுகோட்டை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை போலீசார், மாந்தங்குடி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த லோடு வேனை நிறுத்தி சோதனை நடத்தினர். அந்த வண்டியில் 1 டன் ரேசன் அரிசி கடத்தப்படுவது தெரிய வந்தது. லோடு வாகனத்தில், வந்த அதன் உரிமையாளர் செம்பட்டிவிடுதியை சேர்ந்த தொப்புளான் மகன் ரெகுநாதன் என்பவர் அரிசியை கடத்தி செல்வது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து ரெகுநாதனை கைது செய்த, புதுக்கோட்டை குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை போலிசார், அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் தப்பியோடிய லோடு வேன் டிரைவரை தேடி வருகின்றனர்.
- அறந்தாங்கியில் சிட்டங்காடு மாயம்பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
- அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டார்
அறந்தாங்கி,
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தாலுகா சிட்டங்காடு கிராமத்தில் உள்ள மாயம்பெருமாள் கோவில் திருப்பணிகள் முடிவுற்றதை, தொடர்ந்து கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. இதற்காக 7ம் தேதி அக்னி பிரதிஷ்டையுடன் யாகசாலை பூஜை தொடங்கியது. 3 நாட்களாக நான்கு கால யாக பூஜை நடைபெற்று வந்தது. யாகசாலை பூஜை நிறைவடைந்ததை தொடர்ந்து, பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பெற்று பூஜிக்கப்பட்ட புனித நீரோடு கடம் புறப்பாடு நடைபெற்று, ஆதித்ய பட்டச்சாரியார் தலைமையில் வேத மந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். கும்பாபிஷேகத்தில் அப்பகுதியை சுற்றியுள்ள கிராம மக்கள், ஆன்மீக மெய்யன்பர்கள் ஏராளமானோர் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
- ரூ.15 லட்சம் கேட்டு இளம் பெண்ணை வரதட்சணை கொடுமை செய்துள்ளனர்
- கணவர், மாமனார், மாமியார உட்பட 7 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது
அறந்தாங்கி,
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே இடையன்காடு பகுதியைச் சேர்ந்தவர் சாஹர்பான் (வயது 27) இவருக்கும் புதுக்கோட்டை டைமண்ட்நகர் பகுதியைச் சேர்ந்த நிஷ்க்அஹமெட் என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் முடிவுற்று 4 ஆண்டுகளில் குழந்தை ஏதும் இல்லாத சூழ்நிலையில் கணவன் மனைவியிடையே அடிக்சுடி சண்டை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஓராண்டிற்கு முன்பு கணவர் நிஷ்க்அகமெட், மாமியார் அக்பியாபர்வீன், மாமனார் ரபியுதீன் ஆகியோர் சாஹர்பானுவிடம் ரூ. 15 லட்சம் வரதட்சணைக் கேட்டு அடித்து துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து மனஉளைச்சலுக்கு ஆளான சாஹர்பான் அங்கிருந்து கிளம்பி தனது தந்தை வீட்டில் வாழ்ந்து வருகிறார். மேலும் இது தொடர்பாக புதுக்கோட்டை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்த நிலையில் அதன் வழக்கு அறந்தாங்கி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. மேலும் வழக்கை விசாரித்த காவல் உதவி ஆய்வாளர் சாந்தி, ஆய்வாளர் சாந்தகுமாரி தலைமையில் கணவர், மாமியார், மாமனார் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. 15 லட்சம் வரதட்சணைக் கேட்டு பெண்ணை அடித்து துன்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






