என் மலர்
உள்ளூர் செய்திகள்

மார்த்தாண்டபுரம் ஆரோக்கியா சிறுமியர் இல்லத்தில் கலெக்டர் ஆய்வு
- மார்த்தாண்டபுரம் ஆரோக்கியா சிறுமியர் இல்லத்தில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்
- சிறுமியர் இல்லத்தில் பராமரிக்கப்பட்டுவரும் பதிவேடுகளையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை நகராட்சி, மார்த்தாண்டபுரத்தில் செயல்பட்டுவரும் ஆரோக்கியா சிறுமியர் இல்லத்தில், கலெக்டர் மெர்சி ரம்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில், மாணவியர்களின் எண்ணிக்கைகள், அவர்கள் பயின்றுவரும் கல்வி நிலைகள், நடப்பு கல்வியாண்டில் பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவியர்கள், அவர்களின் படிப்பிற்காக இல்லத்தில் வழங்கப்படும் வசதிகள், இல்லங்களில் மாணவியர்களுக்கு வழங்கப்படும் உணவுகள், அவை சுகாதாரமான முறையில் சமைக்கப்படுகிறதா, மாணவியர்களுக்கு வழங்கப்படும் உணவு அட்டவணைகளையும் பார்வையிட்டு, அதன்படி தரமான முறையில் உணவு சமைக்கப்படுகிறதா என்பது குறித்தும் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் மாணவியர்கள் தங்கும் அறை, உணவுக் கூடம், சமையலறை, கழிவறை உள்ளிட்டவைகள் சுகாதாரமான முறையில் பராமரிக்கப்படுகின்றனவா, சிறுமியர் இல்லத்தில் பராமரிக்கப்பட்டுவரும் பதிவேடுகளையும் கலெக்டர் ஆய்வு செய்தார். பின்னர் கல்வி ஒன்றே உங்களின் எதிர்காலத்தை நிர்ணயிப்பதால், மாணவியர்கள் அனைவரும் தங்களது கல்வியில் முழு ஈடுபாட்டுடன் படித்து சமுதாயத்திற்கு நற்பெயரை ஈட்டித்தர வேண்டும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார். இந்த ஆய்வில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் வசந்தகுமார், வட்டாட்சியர் விஜயலெட்சுமி மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.






