என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • அகரப்பட்டி கிராம மக்கள் தொடர்பு முகாமில் ரூ.1. 55 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
    • 655 பயனாளிகள் பயனடைந்தனர்

    விராலிமலை,

    தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் குறைகளை மனுக்களாக பெற்று தீர்வு காணும் நோக்கத்தில் மாதம் தோறும் ஒரு குக்கிராமத்தை தேர்வு செய்து மக்கள் தொடர்பு முகாம் நடத்திட அறிவுறுத்தியுள்ளார்.அதன்படி அகரப்பட்ட்டி கிராமத்தில் நடைபெற்ற இம்முகாமிற்கு புதுக்கோட்டை கலெக்டர் மெர்சி ரம்யா தலைமை தாங்கி பல்லுயிர் பரவல், பசுமையாக்குதல் மற்றும் காலநிலைமாற்றம் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.இம்முகாமில் பல்வேறு துறைகளின் சார்பில் 655 பயனாளிகளுக்கு ரூ 1கோடியே 54லட்சத்தி 70ஆயிரத்து 104 மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.பின்னர் கலெக்டர் பேசியதாவது:-அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களில் பயன்பெறுவதற்கு பொதுமக்கள் அனைவரும் கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம். இம்மனுக்களின் மீது அலுவலர்களால் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை உறுதி செய்யும் வகையில் மாவட்ட ஆட்சியரகத்தில் கண்காணிப்பு அலுவலர் நியமிக்கப்பட்டு பொதுமக்களின் கோரிக்கை மனுக்களின் நிலை குறித்து அவ்வப்போது ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.எனவே பொதுமக்கள் அனைவரும் இதுபோன்ற முகாம்கள் மூலமாக அரசின் திட்டங்களை அறிந்துகொள்வதுடன் அவற்றின் மூலம் பயன்பெற வேண்டும் என்று தெரிவித்தார்.இம்முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதபிரியா, இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் குழந்தைசாமி, தாசில்தார் சதீஸ், ஊராட்சிமன்ற தலைவர் தனபாக்கியம் உள்பட அனைத்து துறை அரசு அலுவலர்களும் கலந்துகொண்டனர்.

    • கறம்பக்குடி கண்டியன் தெரு பகுதியில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது
    • புதிய மின்மாற்றியை கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் மா.சின்னத்துரை துவக்கி வைத்தார்

    கறம்பக்குடி, 

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பேரூராட்சி பகுதியைச் சேர்ந்த கண்டியன் தெருவில் வசிக்கும் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்ற பேரூராட்சி நிர்வாகம் மற்றும் மின்வாரியம் இப்பகுதியில் புதிய மின்மாற்றியை அமைத்தனர். இதற்கான நிகழ்ச்சியில் நகர தி.மு.க. செயலாளரும் பேரூராட்சி தலைவரும்மான உ முருகேசன் தலைமை தாங்கினார். புதிய மின்மாற்றியை கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் மா.சின்னத்துரை துவக்கி வைத்தார். மேலும் நிகழ்ச்சியில் கறம்பக்குடி ஒன்றிய பெருந்தலைவர் மாலா ராஜேந்திர துரை, கறம்பக்குடி வடக்கு ஒன்றிய செயலாளர் மனமடை முத்துகிருஷ்ணன், கவுன்சிலர் முருகேஸ்வரி மற்றும் கறம்பக்குடி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ஆறுமுகம், உதவி பொறியாளர் பிரதீப், பேரூராட்சி கவுன்சிலர்கள் மின் வாரிய அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும் பொது மக்களின் கோரிக்கையை ஏற்று புதிய மின்மாற்றி அமைத்துக் கொடுத்த அரசுக்கும் மின்வாரிய அலுவலகத்திற்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

    • புதுக்கோட்டையில் தேசிய சிறப்பு பயிற்சி மையம் அமைக்க எம்.பி. கோரிக்கை
    • நாடாளுமன்றத்தில் அப்துல்லா எம்.பி. கவன ஈர்ப்பு தீர்மானம் எழுப்பி உள்ளார்

    புதுக்கோட்டை,

    தமிழ்நாடு விளையாட்டு வீரர்களின் திறமைகளை அங்கீகரித்து வளர்ப்பதற்காக, புதுக்கோட்டை மாவட்டத்தில் தேசிய சிறப்பு பயிற்சி மையம் ஒன்றை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி திமுக எம்.பி., அப்துல்லா மாநிலங்களவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்துள்ளார்.மாநிலங்களவையில் அவர் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தில், "மத்திய அரசு, இந்திய விளையாட்டு ஆணையத்தின் மூலம், நாடு முழுவதும் உள்ள திறமையான விளையாட்டு வீரர்களைக் கண்டறிந்து வளர்ப்பதற்காக தேசிய சிறப்பு பயிற்சி மைய திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. அத்திட்டத்தின் கீழ் மத்திய அரசு சர்வதேச மற்றும் தேசிய அளவில் சிறந்து விளங்கும் ஏராளமான விளையாட்டு வீரர்களை தொடர்ந்து உருவாக்கி வருவதாகச் சொல்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் உள்ள எத்தனையோ விளையாட்டு வீரர்களின் சாதனைகள் தொடர்ந்து நிரூபிக்கப்பட்டபோதும் இதுவரை ஒரு தேசிய சிறப்பு பயிற்சி மையம் கூட தமிழ்நாட்டில் நிறுவப்படவில்லை என்பது வியப்புக்குரியது.மேலும், கடந்த இரண்டு தேசிய விளையாட்டுப் போட்டிகளில் கூட தமிழ்நாடு ஒட்டுமொத்த பதக்கப் பட்டியலில் முதல் ஐந்து இடங்களைப் பிடித்து சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்கும் மாநிலம் என்பதை வெளிப்படுத்தியது. அதேபோல கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளின் ஒவ்வொரு பதிப்பிலும், பதக்கப் பட்டியலில் முதல் பத்து மாநிலங்களில் தமிழ்நாடு தொடர்ந்து இடம்பிடித்துள்ளது. இத்தகைய சாதனைகள் அனைத்தும் தமிழ்நாட்டின் விளையாட்டுத் திறனை அடிக்கோடிட்டுக் காட்டுவதுடன், தமிழ்நாட்டின் சிறப்பான திறமையை மேலும் மேம்படுத்துவதற்கும், ஆதரவளிப்பதற்கும் ஒரு தேசிய சிறப்பு பயிற்சி மையத்தின் அவசியத்தையும் எடுத்துக்காட்டுகிறது. தமிழ்நாட்டின் நிலையான செயல்பாடுகள் மற்றும் திறமையான விளையாட்டு வீரர்களை உருவாக்கும் சாதனைகள் ஆகியவற்றைப் பொறுத்தவரை, மாநிலத்தில் ஒரு தேசிய சிறப்பு பயிற்சி மையத்தை நிறுவ வேண்டியது அவசியம். இது எதிர்கால சாம்பியன்களை அடையாளம் கண்டு அவர்களை மேம்படுத்தவதற்கான வாய்ப்புகளை வழங்கும். எனவே தமிழ்நாட்டின் மத்திய மாவட்டங்களில் ஒன்றான புதுக்கோட்டையில் இத்தகைய தேசிய சிறப்பு பயிற்சி மையம் ஒன்றை நிறுவுவதன் மூலம், இந்தியாவின் ஒட்டுமொத்த விளையாட்டுத்துறையின் வெற்றிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குவதற்கான வாய்ப்பை தமிழ்நாடு பெரும் என்பதில் ஐயமில்லை. அதே நேரத்தில் சாதிக்க முயலும் விளையாட்டு வீரர்களுக்கு பெருமளவில் பயனளிக்கவும், விளையாட்டுத்துறையின் வளர்ச்சியை மேம்படுத்தவும் நிச்சயம் இது உதவும். எனவே, தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தில் தேசிய சிறப்பு பயிற்சி மையத்தை விரைவில் நிறுவுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு விரைந்து எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

    • திருக்கோகர்ணம் பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஆதனக்கோட்டைக்கு அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்
    • புகார் மனு மீது நடவடிக்கை எடுக்காததால் அதிரடி மாற்றம்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டையை சேர்ந்தவர் வக்கீல் கலீல் ரகுமான். இவர் சவரியார் பட்டியை சேர்ந்த ஆரோக்கியராஜ்க்கும் அவரது மனைவிக்கு ஏற்பட்ட குடும்ப பிரச்சினையில், மனைவிக்கு ஆதரவாக ஆஜரானார்.இதனால் கோபமடைந்த ஆரோக்கியராஜ், வக்கீல் கலீல் ரகுமானை ஆபாச வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.இது தொடர்பாக திருக்கோகர்ணம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் போலிசார் வழக்குபதிவு செய்தனர் . ஆனால் ஆரோக்கியராஜை கைது செய்ய வேண்டும் எனவலியுறுத்தி வக்கீல்கள்  சாலைமறியலில் ஈடுபட்டனர்.போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கைது செய்வதாக கூறியதன்பேரில்போரட்டம் கைவிடப்பட்டது. சாலைமறியலில் ஈடுபட்ட வக்கீல்கள் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர் .இந்நிலையில் ஆரோக்கியராஜை கைது செய்ய நடவடிக்கை எடுக்கவி ல்லை என மீண்டும் வக்கீல்கள் போலீஸ் சூப்பிரெண்டு அலுவலகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர் .அப்போது குற்றவாளி ஆரோக்கியராஜை கைது செய்ய வேண்டும், அலட்சிய போக்கில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் சங்கீதாவை பணிமாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர் . விரைவில் ஆரோக்கியராஜ் கைது செய்யப்படுவார் என்றும், சப்-இன்ஸ்பெக்டர் ஆதனக்கோட்டை பணிமாற்றம் செய்யப்படுவார் என வக்கீல்களிடம் போலீசார் ெதரிவித்தனர் .அதன் பேரில் வக்கீல்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதை தொடர்ந்து மாவட்ட காவல் சூப்பிரெண்டு வந்திதா பாண்டே திருக்கோகர்ணம் சப்-இன்ஸ்பெக்டர் சங்கீதாவை ஆதனக்கோட்டை மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் போலீசார் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கந்தர்வகோட்டை அருகே லாரி மோதிய விபத்தில் கொத்தனார் படுகாயம் அடைந்தார்
    • போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    கந்தர்வகோட்டை, 

    கந்தர்வகோட்டை அருகே லாரி மோதியதில் கொத்தனார் படுகாயம்,புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அடுத்த நத்தமாடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரெங்கராஜ் மகன் அய்யாக்கண்ணு வயது 23 கொத்தனார்.நேற்று மாலை கந்தர்வகோட்டையில் இருந்து தனக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தில் அய்யாக்கண்ணு நத்தமாடி பட்டிக்கு திரும்பி செல்லும் போது கந்தர்வ கோட்டையில் இருந்து செங்கிப்பட்டி சென்ற சரக்கு லாரி வடுகப்பட்டி முனியன் கோவில் அருகே எதிர்பாராத விதமாக மோதியது.இதில் பலத்த காயம் அடைந்த அய்யாகண்ணு கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இது தொடர்பாக கந்தர்வகோட்டை உதவி ஆய்வாளர் கேசவ மூர்த்தி வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

    • புதுக்கோட்டையில கருணாநிதியின் நினைவு ஊர்வலம் தி.மு.க. சார்பில் நடைபெற்றது
    • ஏராளமான தி.மு.க.வினர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்

    அறந்தாங்கி,

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டுமவுன ஊர்வலம் மற்றும் அவரின் உருவ படத்திற்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.தமிழககம் முழுவதும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 5ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி திமுகவினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அறந்தாங்கியில் நகரச் செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் மவுன ஊர்வலம் நடைபெற்றது.கலைஞர் மன்றத்திலிருந்து தொடங்கிய ஊர்வலம் பெரியகடைவீதி, கட்டுமாவடிச்சாலை முக்கம் வழியாக அண்ணா சிலையை அடைந்தது. அதனை தொடர்ந்து அங்கே அமைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அதே போன்று நாகுடியில் தெற்கு ஒன்றியச் செயலாளர் பொன்கணேசன் தலைமையில் கருணாநிதியின் உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.நிகழ்ச்சியில் நகர்மன்றத்தலைவர் ஆனந்த்,ஒன்றியச் செயலாளர்கள் பொன்கணேசன், சீனியார், நகர்மன்றத் துணைத் தலைவர் முத்து, நகர கழக நிர்வாகிகள் பழனிச்சாமி, ராமசாமி, பிஎம்ஆர் ராஜேந்திரன், ராவுத்தர்கனி, அனந்தராமன், அருளாந்து, பழமாரியப்பன், சத்தியசீலன், செல்லத்துரை, வின்சென்ட்ராஜேந்திரன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மணிராஜன், மாவட்ட அணி அமைப்பாளர்கள் சக்திவேல், ஹரிவிமலாதி, நகர்மன்ற உறுப்பினர்கள் காசிநாதன், துளசிராமன், சரோஜா, பிச்சை முத்து, வட்ட கழக செயலாளர்கள் கைலாசம், தமிழ் மறைச் செல்வம், மதியழகன், ரமேஷ், காளிதாஸ், நசுருதீன், சுமங்கலி சாஜஹான், ரவி, மாவட்ட அணியின் துணை அமைப்பாளர்கள் அன்பழகன், சோம ஆறுமுகம், நாராயணன், ஆறுமுகம், வேணுகோபால், கருணாகரன், அடைக்கலராஜா, தமிழ் ராசு, நகர இளைஞர் அணி அமைப்பாளர் சேக் இஸ்மாயில், நகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் அய்யப்பன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • புதுக்கோட்டை டாஸ்மாக்கில் கள்ள நோட்டு கொடுத்து மது பானம் வாங்கிய வாலிபர் உள்ளிட்ட 2 பேர் கைது
    • 40 ஆயிரம் போலி ரூபாய் நோட்டுக்கள் பறிமுதல்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்ட கடலோரப் பகுதிகளான கட்டுமாவடி, மணமேல்குடி, கோட்டைப்பட்டினம், ஜெகதாபட்டினம்,மீமிசல் உள்ளிட்ட பகுதிகளில் சிலர் கள்ள நோட்டுகளை கொடுத்து பொருட்களை வாங்குவதாக மணமேல்குடி காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.தகவலின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் குணசேகரன் அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளில் யாரேனும் கள்ள நோட்டை கொடுத்து மதுபானம் வாங்குகிறார்களா என்பதை கண்காணிக்குமாறு போலீசாருக்கு உத்தரவிட்டார்.இந்த நிலையில் மணமேல்குடியில் உள்ள ஒரு மதுபான கடையில் அசேன் முகமது என்பவர் ரூ. 500 கொடுத்து மதுபானம் கேட்டுள்ளார்.அந்த ரூபாய் நோட்டை பெற்ற டாஸ்மாக் மதுபான கடை ஊழியர்கள் அந்த நோட்டு கள்ள நோட்டு என்பதை கண்டறிந்து மணமேல்குடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.தகவலின் பெயரில் இன்ஸ்பெக்டர் குணசேகரன் சம்பவ இடத்திற்கு சென்று அசேன் முகமதுவிடம் விசாரணை மேற்கொண்டார்.அப்போது அசேன் முகமது தன்னிடம் ரூபாய் நோட்டை கொடுத்தது ஹுமாயின் என்பவர் என தெரிவித்துள்ளார்.இதனை தொடர்ந்து போலீசார் ஹுமாயினை பிடித்து விசாரித்த போது அவரிடம் சுமார் 40 ஆயிரம் மதிப்புடைய 500 ரூபாய் கள்ள நோட்டுகள் இருந்ததை கண்டறிந்தனர்.உடனே இருவரையும் கைது செய்து அவர்கள் வைத்திருந்த கள்ளநோட்டை பறிமுதலீ செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் அறந்தாங்கி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • மழைக்காலங்களில் நீர் வழிப்பாதைகளில் நடவு செய்வதற்காக பனை விதைகளை சேகரிக்கும் பணியில் இளைஞர்கள் ஈடுபட்டனர்
    • ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனை விதைகளை சேகரித்து வருகின்றனர்

    கந்தர்வகோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுக்கா அண்டனூர் கிராமத்தைச் சேர்ந்த இளம் புயல் இளைஞர் மன்றத்தைச் சேர்ந்தவர்கள் குளங்களின் கறைகளிலும் நீர்வழி பாதைகளிலும் மழைக்காலங்களில் ஏற்படும் மண் அரிப்பை தடுக்கும் வகையிலும் மழைக்காலங்களில் நடவு செய்வதற்காக தங்களது கிராமத்தில் பனை விதைகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.தமிழகத்தின் மரமான பனை மரத்தின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையிலும் பல்வேறு பயன்களை தரக்கூடிய பனை மரத்தை மழைக்காலங்களில் நடவு செய்ய கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஆர்வமுடன் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனை விதைகளை சேகரித்து வருகின்றனர்.இந்த இளைஞர்களின் செயலை சமூக ஆர்வலர்களும் கிராம பொதுமக்களும் பாராட்டினார்கள்.

    • ஆலங்குடி அரசு மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார விழா நடைபெற்றது.
    • தாய்ப்பால் கொடுப்பதின் அவசியம் குறித்தும் பெண்களுக்கு எடுத்து கூறப்பட்டது

    ஆலங்குடி,

    ஆலங்குடி அரசு மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார விழா நடைபெற்றது. தலைமை மருத்துவர் பெரியசாமி தலைமை வகித்தார். டாக்டர் அருண் குமார் முன்னிலை வகித்தார். .இந்நிகழ்ச்சியில் பிரசவித்த தாய்மார்கள், மற்றும் கற்பிணி பெண்களுக்கு நினைவுப்பரிசாக சேலை வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தாய்ப்பால் கொடுப்பதின் அவசியம் குறித்தும் இதனால் தாய்க்கும் குழந்தைகளுக்கும் கிடைக்கும் பலன்கள் குறித்தும் மருத்துவர் பெரியசாமி சிறப்புரையாற்றினார் முடிவில் டாக்டர் மங்கையர்கரசி நன்றி கூறினார். நிகழ்ச்சியில் செவிலியர்கள் வேலுமணி,செல்வகுமாரி,சசிரேகா,உமா,ஜான்,நந்தினி,சிவசங்கரி,மற்றும் அனைத்து மருத்துவமனை பசியாளர்களும் கலந்துகொண்டனர்.

    • புதுக்கோட்டையில் 65 கிலோ கடத்தல் புகையிலை பொருட்களை பிடிபட்டது
    • வழக்கு பதிவு செய்த போலீசார் ஒருவரை கைது செய்துள்ளனர்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம், உடையாளிப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாயழகு மற்றும் போலீசார் கீரனூர் அருகே அண்டக்குளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேனை மறித்து போலீசார் சோதனை நடத்தினர். சோதனையில் சரக்கு வேனில் 65 கிலோ புகையிலை பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் புதுக்கோட்டை மச்சுவாடி பகுதியை சேர்ந்த டிரைவர் சையது அபுதாஹிரை (வயது 44) என்பவரை கைது செய்து, 586 பண்டல்கள் கொண்ட 65 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, சையது அபுதாஹிர் சிறையில் அடைத்தனர்.

    • புதுக்கோட்டையில் மூதாட்டியிடம் 6 பவுன் தங்க சங்கிலி அபேஸ் செய்யப்பட்டு உள்ளது
    • மயக்கம் தெளிந்து அதிர்ச்சி அடைந்த மூதாட்டி போலீசில் புகார்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டையை சேர்ந்தவர் தனலட்சுமி (வயது 70). இவர் காய்கறிகள் வாங்குவதற்காக சக்கரவர்த்தி அய்யங்கார் சந்து அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மயக்கம் ஏற்படுவது போல இருந்ததால், உட்கார்ந்து விட்டார். இதையடுத்து அங்கு வந்த மர்மநபர் ஒருவர் பேச்சுக்கொடுத்ததாகவும், மயக்கம் தெளிந்த பின் பார்த்த போது தனது கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்கச்சங்கிலி திருட்டு போனது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கணேஷ்நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 5-ந் தேதி முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜராகி இருந்தார்.
    • முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மனைவி ரம்யாவும் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

    புதுக்கோட்டை:

    அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. வருமானத்திற்கு அதிகமாக ரூ.35 கோடியே 79 லட்சத்து 90 ஆயிரத்து 81 மதிப்பில் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17-ந் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதில் அவரது மனைவி ரம்யாவின் பெயரும் இடம்பெற்றுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் உள்ள அவரது வீடு, கல் குவாரிகள், நிறுவனங்கள், சென்னையில் உள்ள அவரது வீடு உள்பட மொத்தம் 56 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சோதனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா மீது மொத்தம் 210 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை புதுக்கோட்டை கோர்ட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த மே மாதம் தாக்கல் செய்தனர்.

    இந்த வழக்கு தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 5-ந் தேதி முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜராகி இருந்தார். இந்நிலையில், வருகிற 29-ந் தேதி ஆஜராக கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. அப்போது அவரது மனைவி ரம்யாவையும் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

    ×