என் மலர்
புதுக்கோட்டை
கந்தர்வகோட்டை:
தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி வாக்களர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க புதுக்கோட்டை மாவட்டத்தில் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இவர்கள் மாவட்டத்தின் பல பகுதிகளில் வாகன சோதனை நடத்தி உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்படும் பணம் மற்றும் பரிசு பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் இன்று காலை கந்தர்வக்கோட்டை அருகே தச்சன்குறிச்சி என்ற இடத்தில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் ரூ.5.91 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் இருந்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து அந்த நகைகளை பறிமுதல் செய்த பறக்கும் படை அதிகாரிகள், புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணனுக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த எஸ்.பி., காரில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினார். இதில் காரை ஓட்டி வந்தவர் சேலம் மாவட்டத்தை சேர்ந்த மோகன் என்றும், அவருக்கு துணையாக வந்தவர் சந்தோஷ்குமார் என்பதும் தெரிந்தது.
இவர்கள் பெங்களூரில் இருந்து சேலம், தஞ்சை, பட்டுக்கோட்டை, குடந்தை ஆகிய பகுதிகளில் உள்ள பிரபல நகைக்கடைகளுக்கு இந்த நகையை கொண்டு சென்றது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து பறிமுதல் செய்த நகைகளை வருமானவரி அலுவலகத்தில் ஒப்படைத்தனர். கந்தர்வகோட்டையில் ரூ.5.91 கோடி தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.







ஜனநாயக நாட்டின் மிகப்பெரிய திருவிழாவாக கருதப்படும் தேர்தல் வந்துவிட்டாலே எதிர்பார்ப்புகளுக்கும், திருப்பங்களுக்கும் பஞ்சம் இருக்காது. கட்சி ரீதியாக கருத்து மோதல்கள் இருந்தாலும் அதில் ஆரோக்கியம் அதிகம் கலந்திருக்க வேண்டும் என்பது முன்னோர் மற்றும் மூத்த தலைவர்களின் ரத்தத்தில் ஊறியதாக இருந்தது. அதனை இன்றளவும் கடைபிடிக்கும் கட்சிகள் இருக்கத்தான் செய்கின்றன.
இருவேறு வேட்பாளர்கள் நேருக்குநேர் சந்தித்துக் கொள்வதும் இருவரும் தங்களுக்கு வாக்கு கேட்பதும், வெற்றிபெற வாழ்த்துகள் கூறிக்கொள்வது போன்ற ஆரோக்கியமான அரசியல் சந்திப்புகளும் நடந்து வருவது பெருமைக் குரியது. சில நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டை தி.மு.க. வேட்பாளரும், மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளரும் பிரசாரத்தின்போது நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டதும் சால்வை அணிவித்து, ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை கொண்டனர்.
இது ஒருபக்கம் இருக்க மற்றொரு பக்கம் வேட்பாளர்களின் சின்னங்களை சுவரில் வரைய தொண்டர்கள் போட்டிப் போட்டு சுவர்களைப் பிடித்து எழுதுவதும் வழக்கமானதுதான். ஆனால் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இவர்களுக்காக தொகுதி முழுவதும் இரட்டை இலை, உதயசூரியன் சின்னங்கள் தனித்தனி சுவர்களில் வரையப்பட்டுள்ளன.
ஆனால் விராலிமலை தொகுதியில் பல இடங்களில் ஒரே சுவரில் இரு சின்னங்களும் வரையப்பட்டுள்ளதால் பலரும் ஆச்சர்யமாக பார்க்கின்றனர். என்னதான் இருந்தாலும் இந்த இரு கட்சிகளும் ஒரே இடத்தில் பிறந்ததுதானே என்கிறார்கள். இது வாக்காளர்கள் மத்தியில் அரசியல் நாகரீகம் குறித்து பேச வைக்கிறது.







