என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    ஆலங்குடி அருகே எரிச்சி கிராமத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
    ஆலங்குடி:

    ஆலங்குடி அருகே எரிச்சி கிராமத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்ததில், அதில் இருந்தவர் ரூ.2 லட்சம் பணம் வைத்து இருந்தார். ஆனால் அந்த பணத்துக்கு உரிய ஆவணம் இல்லை. இதனையடுத்து அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் ஆலங்குடி தேர்தல் நடத்தும் அலுவலர் அக்பர் அலியிடம் ஒப்படைத்தனர்.
    மாத்தூரில் பணம் வைத்து சூதாடிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆவூர்:

    மாத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையில் போலீசார் நேற்று மாலை மாத்தூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, மின்வாரிய அலுவலகத்தின் பின்புறம் பணம் வைத்து சீட்டு விளையாடிய ஏர்போர்ட் வினோத் (வயது 30), பெருமாள் (30), குருமூர்த்தி (25), கே.கே. நகரை சேர்ந்த முனியசாமி (30), மண்டையூர் சரவணன் (36) ஆகிய 5 பேர் பிடிபட்டனர். பின்னர் 5 பேரையும் கைது செய்தனர்.
    புதுக்கோட்டை மாவட்டத்தில் சுகாதாரமான குடிநீர் வசதி செய்து தரப்படும் என்று கந்தர்வகோட்டையில் டி.டி.வி.தினகரன் பேசினார்.
    கந்தர்வகோட்டை:

    கந்தர்வகோட்டை பஸ் நிலையத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதியின் அ.ம.மு.க. மற்றும் தே.மு.தி.க. வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    அ.மு.மு.க. ஆட்சிக்கு வந்தால், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் காவிரி குண்டாறு இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு சுகாதாரமான குடிநீர் வசதி செய்து தரப்படும். குடும்பத்தில் உள்ள படித்த ஆண்கள், பெண்களில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும். ரேஷன் பொருட்கள் அனைவருக்கும் வீடு தேடி வரும். அனைத்து நகரப் பகுதிகளிலும் முறையான கழிவு நீர் வாய்க்கால்கள் அமைத்து தரப்படும்.

    தரமான சாலை வசதி செய்து தரப்படும். கல்வி, சுகாதாரம் பாதுகாக்கப்படும் . சாதி, மதம், இனம் கடந்து அனைத்து தரப்பு மக்களுக்கும் உரிய நலத்திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது அ.ம.மு.க. மற்றும் தே.மு.தி.க. வேட்பாளர்கள் பொதுமக்களை நோக்கி கும்பிட்டபடி நின்றனர்.
    ஆலங்குடி அருகே கார் மோதி 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆலங்குடி:

    தஞ்சாவூரிலிருந்து புதுக்கோட்டை நோக்கி ஒரு கார் சென்று கொண்டிருந்தது. முக்காணிப்பட்டி விலக்கு ரோடு அருகே வந்தபோது அந்த வழியாக சைக்கிளில் சென்று கொண்டிருந்த பெருங்கொண்டான் விடுதியை சேர்ந்த தங்கராஜ் (வயது 40) மற்றும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த அண்டக்குளம் அருகே உள்ள காலிங்கராயன்பட்டியை சேர்ந்த நாகராஜ் (45), பின்னால் அமர்ந்து சென்ற வீரக்குடியை சேர்ந்த குமார்(46) ஆகிய 3 பேர் மீதும் மோதியது.

    இதில், நாகராஜ், குமார் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். சைக்கிளில் சென்ற தங்கராஜ் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த விபத்து குறித்து ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அலாவூதீன், சம்பட்டிவிடுதி சப்-இன்ஸ்பெக்டர் அப்துல்ரஜாக் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கந்தர்வகோட்டை அருகே இன்று உரிய ஆவணம் இன்றி எடுத்து சென்ற ரூ.5.91 கோடி தங்க நகைகளை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    கந்தர்வகோட்டை:

    தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி வாக்களர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க புதுக்கோட்டை மாவட்டத்தில் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இவர்கள் மாவட்டத்தின் பல பகுதிகளில் வாகன சோதனை நடத்தி உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்படும் பணம் மற்றும் பரிசு பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

    அந்த வகையில் இன்று காலை கந்தர்வக்கோட்டை அருகே தச்சன்குறிச்சி என்ற இடத்தில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

    அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் ரூ.5.91 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் இருந்தது தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து அந்த நகைகளை பறிமுதல் செய்த பறக்கும் படை அதிகாரிகள், புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணனுக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த எஸ்.பி., காரில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினார். இதில் காரை ஓட்டி வந்தவர் சேலம் மாவட்டத்தை சேர்ந்த மோகன் என்றும், அவருக்கு துணையாக வந்தவர் சந்தோஷ்குமார் என்பதும் தெரிந்தது.

    இவர்கள் பெங்களூரில் இருந்து சேலம், தஞ்சை, பட்டுக்கோட்டை, குடந்தை ஆகிய பகுதிகளில் உள்ள பிரபல நகைக்கடைகளுக்கு இந்த நகையை கொண்டு சென்றது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து பறிமுதல் செய்த நகைகளை வருமானவரி அலுவலகத்தில் ஒப்படைத்தனர். கந்தர்வகோட்டையில் ரூ.5.91 கோடி தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    இலுப்பூர் அருகே உள்ள திருநாடு பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    அன்னவாசல்:

    இலுப்பூர் அருகே உள்ள திருநாடு பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில், புதுக்கோட்டையை சேர்ந்த அசரப்அலி என்பவர் ரூ.75 ஆயிரம் பணம் எடு்த்து வந்துள்ளார். ஆனால் அந்த பணத்துக்கான உரிய ஆவணம் இல்லாததால் தேர்தல் அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த பணத்தை இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியரும், விராலிமலை சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருமான தண்டாயுதபாணியிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து, அந்த பணம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
    மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் தந்தைக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்தது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் பகுதியை சேர்ந்த 45 வயதுடைய விவசாயி ஒருவர் தனது 17 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதுதொடர்பாக சிறுமியின் தாய் அறந்தாங்கி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விவசாயியை கைது செய்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டாக்டர் சத்யா நேற்று தீர்ப்பளித்தார்.

    இந்த தீர்ப்பில் பெற்ற மகளுக்கே பாலியல் தொந்தரவு கொடுத்த அந்த சிறுமியின் தந்தைக்கு 2 பிரிவுகளில் தலா 7 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.30 ஆயிரம் அபராதமும் விதித்து, தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க தீர்ப்பளித்தார். அதன்படி, அவர் 7 ஆண்டு சிறை தண்டனையை அனுபவிக்க நேரிடும்.

    மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து அவரை திருச்சி மத்திய சிறையில் அடைக்க போலீசார் கொண்டு சென்றனர்.
    ஆவுடையார்கோவில் அருகே சரக்கு ஆட்டோ மோதி கொத்தனார் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆவுடையார்கோவில்:

    அறந்தாங்கி அருகே உள்ள மாங்குடி வடக்கு குடியிருப்பை சேர்ந்த குருநாதன் (வயது 33), அறந்தாங்கி அருகே உள்ள மேலப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன்(52) ஆகிய இருவரும் கொத்தனார்கள். ஆவுடையார்கோவில் பகுதியில் வேலைக்கு சென்று விட்டு நேற்று மாலை இரு சக்கர வாகனத்தில் இருவரும் ஊருக்கு சென்று கொண்டிருந்தனர்.

    ஆவுடையார்கோவிலிலிருந்து அறந்தாங்கி சாலையில் துரையரசபுரத்தை அடுத்த செட்டிவயல் அருகே சென்றபோது அறந்தாங்கியில் இருந்து ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த அசாருதீன் என்பவர் ஓட்டிவந்த சரக்கு ஆட்டோ அவர்கள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த குருநாதன் மற்றும் பாலகிருஷ்ணன் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி குருநாதன் இறந்தார். இந்த விபத்து குறித்து ஆவுடையார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    திமுக சார்பில் தற்போது எம்எல்ஏ-வாக இருக்கும் சிவ.வீ. மெய்யநாதனும், அதிமுக சார்பில் தர்ம.தங்கவேலும் போட்டியிடுகின்றனர்.
    தர்ம.தங்கவேல் சொத்து மதிப்பு

    1. கையிருப்பு: 5 லட்சம் ரூபாய்
    2. அசையும் சொத்து மதிப்பு: ரூ. 11,96,307
    3. அசையா சொத்து: 70 லட்சம் ரூபாய்

    புதுக்கோட்டை மாவட்டத்தில் முப்போகமும் விளையும் பகுதியாகவும், எப்போதும் செழிப்பாகவே காணப்படக் கூடியது பகுதியாக திகழ்வது ஆலங்குடி.

    இத்தொகுதிக்குட்பட்ட தமிழகத்தில் அதிக உயரத்தில் அதாவது 33 அடியில் குளமங்கலம் பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோயிலில் குதிரை சிலையும், கீரமங்கலத்தில் சிவன் சிலை மற்றும் புலவர் நக்கீரருக்கு முழு உருவ சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.

    ஆலங்குடி தொகுதி

    ஆலங்குடியானது மாநிலத்தில் கடலை சந்தைக்கு சிறப்பு பெற்றுள்ளது. வடகாடு, மாங்காடு, கீரமங்கலம் பகுதியில் விளையும் பலாப்பழம் ஆந்திரா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், மலர்களும் அதிகளவில் விளைகிறது.

    1962-க்கு முன்பு வரை ஆலங்குடி தொகுதி சென்னை மாகாணத்தில் இருந்தது. இத்தொகுதியில் கடந்த 1962--க்குப் பிறகு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க. 5 முறையும், தி.மு.க. 4, காங்கிரஸ், சுயேட்சை, இந்திய கம்யூனிஸ்ட் தலா 1 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

    ஆலங்குடி தொகுதி

    கடந்த 2011-ல் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் கு.ப. கிருஷ்ணன் 57,250 வாக்குகளும், பா.ம.க. வேட்பாளர் சுப. அருள்மணி 52,123 வாக்குகளும் பெற்றனர். இதில், கு.ப. கிருஷ்ணன் 5,127 வாக்குகள் வெற்றி பெற்றார். 2016 தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் சிவ.வீ. மெய்யநாதன் வெற்றி பெற்றார்.

    இத்தொகுதியில் முத்தரையர், முக்குலத்தோர் அதிகளவில் வசிக்கின்றனர். மேலும், இத்தொகுதியில் திருவரங்குளம் ஒன்றியத்தில் 48 ஊராட்சிகளும், ஆலங்குடி, கீரமங்கலம் ஆகிய 2 பேரூராட்சிகளும், அறந்தாங்கி ஒன்றியத்தில் 32 ஊராட்சிகளும் இணைந்துள்ளன.

    ஆலங்குடி தொகுதி

    இத்தொகுதியில் அதிகமாக ஆழ்துளை கிணறுகள் இருப்பதன் மூலம் மின் தேவையும் அதிகரித்திருப்பதால் ஆலங்குடியில் கோட்டப்பொறியாளர் அலுவலகம், மின் மாற்றி பராமரிப்பு நிலையம் அமைக்க வேண்டுமென விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

    மேலும், நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவருவதால் கடலில் கலக்கும் மழைநீரை இப்பகுதிக்கு கொண்டுவர வேண்டுமென கோரிக்கையும் நிறைவேறவில்லை.

    ஆலங்குடி தொகுதி

    கல்வி விழிப்புணர்வு உள்ள ஆலங்குடி தொகுதியில் அரசு கல்லூரிகள் கிடையாது. எவ்வித தொழில்சாலையும் இல்லாததால் வேலை வாய்ப்பு உறுதியற்ற சூழல் ஏற்பட்டுள்ளது.

    மேலும், தென்னை அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளதால் தென்னை விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க அரசு கொப்பரைத் தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டுமென்ற கோரிக்கைய அரசு கண்டுகொள்ளவே இல்லை என பொதுமக்கள் கூறுகின்றனர்.

    தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்:

    ஆலங்குடி தாலுகா (பகுதி)

    மேலப்பட்டி ராசியமங்கலம் (உடையார்), பாச்சிக்கோட்டை, குழந்தைவிநாயகர்கோட்டை, புதுக்கோட்டை, விடுதி, கீழப்பட்டி ராசியமங்கலம் (உடையார்), மேலாத்தூர், கீழாத்தூர், வடகாடு, புள்ளான் விடுதி, நெடுவாசல் மேல் பாதி, நெடுவாசல் கீழ்பாதி, ஆண்டவராயபுரம், செட்டியேந்தல், அணவயல், லெட்சுமிநரசிம்மபுரம், புளிச்சங்காடு, கறம்பக்காடு ஜமீன், செரியலூர், பனை குளம், குலமங்கலம் தெற்கு, குலமங்கலம் வடக்கு, கொத் தமங்கலம் தெற்கு, சேந் தன்குடி, நகரம், மாங் காடு கொத்தமங்கலம் வடக்கு, ஆலங்காடு, சூரன்விடுதி,

    கல்லாலங்க்குடி, பள்ளத்திவிடுதி, பத்தம்பட்டி, குப்பாக்குடி, ஆயிப்பட்டி, கோவிலூர், தேவஸ்தானம், கோவிலூர், கொத்தக் கோட்டை, மாஞ்சன்விடுதி, காயம்பட்டி, வேப்பங்க்குடி, இம்னாம்பட்டி, திருவரங்குளம், திருக்கட்டளை, கைக்குறிச்சி, விஜயரெகுநாதபுரம், பூவர சக்குடி, மணியம்பலம், வண் டக்கோட்டை, வலத்திராக் கோட்டை, களங்க்குடி, கன்னி யாபட்டி, நம்புக்குழி, கூடலூர், கத்தக்குறிச்சி, பாலையூர், முத்துப்பட்டிணம், குளவாய்ப் பட்டி, தட்சிணாபுரம், வெங்கிட குளம், வெண்ணாவல்குடி, அரையப்பட்டி, கீழையூர், சேந்தாக்குடி, மாலக்குடி, கொத்தமங்கலம், மற்றும் இசுகுபட்டி கிராமங்கள் உள்ளன.

    ஆலங்குடி தொகுதி

    செழிப்பு மிக்க இந்த தொகுதின் சொர்க்க பூமியாக நெடுவாசல் கிராமம் அமைந்துள்ளது. ஹைட்ரோ கார்பன் எடுக்கும் மத்திய அரசை கண்டித்து இந்த கிராமத்தில் 100 நாட்களை கடந்து நடைபெற்ற தன்னெழுச்சி போராட்டம் இந்தியாவை திரும்பி பார்க்க வைத்தது.

    கஜா புயலின் கோரதாண்டவத்தில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு தீர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை எதிர்பார்த்திருக்கும் ஆலங்குடி தொகுதியில் நடை பெற உள்ள சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று கோட்டைக்கு செல்லும் உறுப்பினர் தொகுதியை முன்மாதிரியாக மாற்றிக்காட்டுவார் என்ற நம்பிக்கையில் மக்கள் உள்ளனர்.

    ஆலங்குடி தொகுதி
    ஆலங்குடி தொகுதி

    1957 சின்னையா (காங்கிரஸ்)
    1962 முருகையன் (தி.மு.க.)
    1967 சுப்பையா (தி.மு.க.)
    1971 சுப்பையா (தி.மு.க.) 
    1977 புஷ்பராஜ் (காங்கிரஸ்)
    1980 திருமாறன் (அ.தி.மு.க.)
    1984 வெங்கடாசலம் (அ.தி.மு.க.)
    1989 சந்திரசேகரன் (தி.மு.க.)
    1991 சண்முகநாதன் (அ.தி.மு.க.)
    1996 வெங்கடாசலம் (சுயேட்சை)
    2001 வெங்கடாசலம் (அ.தி.மு.க.)
    2006 ராஜசேகரன் (இந்திய கம்யூ.)
    2011 கு.ப. கிருஷ்ணன் (அ.தி.மு.க.)
    2016 சிவ.வீ. மெய்யநாதன் (தி.மு.க.)
    விராலிமலை தொகுதியில் பல இடங்களில் ஒரே சுவரில் இரு சின்னங்களும் வரையப்பட்டுள்ளதால் பலரும் ஆச்சர்யமாக பார்க்கின்றனர்.


    ஜனநாயக நாட்டின் மிகப்பெரிய திருவிழாவாக கருதப்படும் தேர்தல் வந்துவிட்டாலே எதிர்பார்ப்புகளுக்கும், திருப்பங்களுக்கும் பஞ்சம் இருக்காது. கட்சி ரீதியாக கருத்து மோதல்கள் இருந்தாலும் அதில் ஆரோக்கியம் அதிகம் கலந்திருக்க வேண்டும் என்பது முன்னோர் மற்றும் மூத்த தலைவர்களின் ரத்தத்தில் ஊறியதாக இருந்தது. அதனை இன்றளவும் கடைபிடிக்கும் கட்சிகள் இருக்கத்தான் செய்கின்றன.

    இருவேறு வேட்பாளர்கள் நேருக்குநேர் சந்தித்துக் கொள்வதும் இருவரும் தங்களுக்கு வாக்கு கேட்பதும், வெற்றிபெற வாழ்த்துகள் கூறிக்கொள்வது போன்ற ஆரோக்கியமான அரசியல் சந்திப்புகளும் நடந்து வருவது பெருமைக் குரியது. சில நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டை தி.மு.க. வேட்பாளரும், மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளரும் பிரசாரத்தின்போது நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டதும் சால்வை அணிவித்து, ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை கொண்டனர்.

    இது ஒருபக்கம் இருக்க மற்றொரு பக்கம் வேட்பாளர்களின் சின்னங்களை சுவரில் வரைய தொண்டர்கள் போட்டிப் போட்டு சுவர்களைப் பிடித்து எழுதுவதும் வழக்கமானதுதான். ஆனால் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இவர்களுக்காக தொகுதி முழுவதும் இரட்டை இலை, உதயசூரியன் சின்னங்கள் தனித்தனி சுவர்களில் வரையப்பட்டுள்ளன.

    ஆனால் விராலிமலை தொகுதியில் பல இடங்களில் ஒரே சுவரில் இரு சின்னங்களும் வரையப்பட்டுள்ளதால் பலரும் ஆச்சர்யமாக பார்க்கின்றனர். என்னதான் இருந்தாலும் இந்த இரு கட்சிகளும் ஒரே இடத்தில் பிறந்ததுதானே என்கிறார்கள். இது வாக்காளர்கள் மத்தியில் அரசியல் நாகரீகம் குறித்து பேச வைக்கிறது.

    எந்த காலத்திலும் மு.க.ஸ்டாலினால் ஜெயிக்க முடியாது, மனுக்கள் வாங்கி வைத்த பெட்டியின் பூட்டை அவர் உடைக்கப்போவதும் இல்லை என எடப்பாடி பழனிசாமி பேசினார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் அ.தி.மு.க. வேட்பாளர் கார்த்திக்தொண்டைமானை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது திறந்த வேனில் நின்றபடி அவர் பேசியதாவது:-

    புதுக்கோட்டை மாவட்டத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால் அ.தி.மு.க. அரசு நாட்டு மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை என எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் செல்கிற இடம் எங்கும் பொய்யான அவதூறு செய்திகளை பரப்பி வருகிறார்.

    விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன் ரத்து செய்யப்பட்டு ரசீது வழங்கப்பட்டு வருகிறது. மகளிர் சுயஉதவி குழுவினர் வாங்கிய கடனும் ரத்து செய்து நிறைவேற்றப்பட்டு வருகிறது.

    கூட்டுறவு வங்கியில் பெண்கள் 6 பவுனுக்கு கீழ் குறைவாக நகைகளை அடமானம் வைத்து கடன் வாங்கியதை தள்ளுபடி செய்யப்போகிறோம். விவசாயிகளின் பம்பு செட்டுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் 6 கியாஸ் சிலிண்டர் இலவசமாக கொடுக்கப்படும். ஆனால் மு.க.ஸ்டாலின் பொய் பேசி வருகிறார். உண்மையை பேசுகின்ற கட்சி அ.தி.மு.க. மக்களுக்கு சேவை செய்கிற கட்சி அ.தி.மு.க. தான்.

    நிலம் இல்லாமல், வீடு இல்லாமல் இருப்பவர்களுக்கு அரசாங்கமே நிலம் வாங்கி கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும். தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் வீடுகள் பாதுகாப்பாக இல்லாத நிலையில் இருந்தால் அந்த வீட்டிற்கு பதிலாக புதிய வீடு கட்டித்தரப்படும். வீடுகளுக்கு கேபிள் கட்டணம் கிடையாது.

    விவசாயிகளை ஏமாற்ற முடியாது. உழைக்கப்பிறந்தவர்கள் விவசாயிகள். உழைப்பு, நேர்மை, விசுவாசம் எங்களிடம் உள்ளது. உங்களிடம் (தி.மு.க.) எதுவும் கிடையாது. நீங்கள் இன்னும் பாதாளத்திற்கு கீழே தான் போவீர்கள்.

    சட்டமன்றத்திலே அராஜகம் செய்த தி.மு.க.விடம் நாட்டை கையில் கொடுத்தால், நாடு வளம் பெறுமா? (அப்போது திரண்டிருந்த தொண்டர்கள் வளம் பெறாது என சத்தம் எழுப்பினர்). சட்டமன்றத்தில் அலங்கோல காட்சியை அரங்கேற்றியது தி.மு.க. .

    இன்றைக்கு ஒரு அராஜக கட்சி ஆட்சிக்கு வரணுமா? அடாவடி கட்சி ஆட்சிக்கு வரணுமா? (அப்போது தொண்டர்கள் வரக்கூடாது... வரக்கூடாது.. என சத்தமிட்டனர்). தி.மு.க. ஒரு ரவுடி கட்சி, அராஜக கட்சி. இந்த தேர்தலில் தி.மு.க.வை படுதோல்வி அடைய செய்யுமாறு வாக்காளர்களை கேட்டுக்கொள்கிறேன்.
    அமைச்சர் விஜயபாஸ்கரை ஆதரித்து முதல்-அமைச்சர் பழனிசாமி நேற்று தேர்தல் பிரசாரம் செய்த காட்சி.
    மு.க.ஸ்டாலின் பல்வேறு நாடகங்களை தினமும் நடத்தி வருகிறார். மக்களிடம் மனுக்களை வாங்கி, அதனை பெட்டியில் போட்டு வைத்து, அதனை சீல் வைத்து, முதல்-அமைச்சரான பின் 100 நாட்களில் தீர்ப்பேன் என கூறி வருகிறார். எவ்வளவு ஏமாற்று வேலை செய்கிறார் என பாருங்கள். ஏமாற்றுவதில் தி.மு.க.காரர்கள் கில்லாடிகள். அதன் தலைவர் அதை விட கில்லாடி.

    தி.மு.க. ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது மக்களை கண்டு கொள்ளவில்லை. மக்களின் பிரச்சினைகளை தீர்க்கவில்லை. தற்போது எதிர்க்கட்சியில் இருக்கும்போது மக்களை பார்த்து மனு வாங்கி செயல்படுத்துவேன் என்கிறார். மு.க.ஸ்டாலின் எந்த காலத்திலும் ஜெயிக்கப்போவதும் இல்லை. பூட்டை உடைக்க போவதும் இல்லை. அந்த பெட்டிக்கு இன்னொரு பூட்டு போட்டு பூட்டிவிட்டோம்.

    வருகிற சட்டமன்ற தேர்தலில் உங்களது வாக்குகளை இரட்டை சிலை சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

    இதேபோல விராலிமலை தொகுதியில் போட்டியிடும் சுகாதாரத்துறை அமைச்சர்டாக்டர் சி.விஜயபாஸ்கரை ஆதரித்தும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தேர்தல் பிரசாரம் செய்தார்.
    அறந்தாங்கியில் ஆண் பிணம் கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அறந்தாங்கி: 

     அறந்தாங்கி கட்டுமாவடி சாலையில் உள்ள ரெயில்வே கேட் பகுதியில் 50 வயது மதிக்க தக்க ஆண் பிணம் ஒன்று கிடந்தது. தகவல் அறிந்த அறந்தாங்கி போலீசார்  சம்பவ இடத்துக்கு வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக  வழக்குப்பதிவு செய்து, அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×