search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடப்பாடி பழனிசாமி
    X
    எடப்பாடி பழனிசாமி

    எந்த காலத்திலும் மு.க.ஸ்டாலினால் ஜெயிக்க முடியாது- எடப்பாடி பழனிசாமி பேச்சு

    எந்த காலத்திலும் மு.க.ஸ்டாலினால் ஜெயிக்க முடியாது, மனுக்கள் வாங்கி வைத்த பெட்டியின் பூட்டை அவர் உடைக்கப்போவதும் இல்லை என எடப்பாடி பழனிசாமி பேசினார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் அ.தி.மு.க. வேட்பாளர் கார்த்திக்தொண்டைமானை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது திறந்த வேனில் நின்றபடி அவர் பேசியதாவது:-

    புதுக்கோட்டை மாவட்டத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால் அ.தி.மு.க. அரசு நாட்டு மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை என எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் செல்கிற இடம் எங்கும் பொய்யான அவதூறு செய்திகளை பரப்பி வருகிறார்.

    விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன் ரத்து செய்யப்பட்டு ரசீது வழங்கப்பட்டு வருகிறது. மகளிர் சுயஉதவி குழுவினர் வாங்கிய கடனும் ரத்து செய்து நிறைவேற்றப்பட்டு வருகிறது.

    கூட்டுறவு வங்கியில் பெண்கள் 6 பவுனுக்கு கீழ் குறைவாக நகைகளை அடமானம் வைத்து கடன் வாங்கியதை தள்ளுபடி செய்யப்போகிறோம். விவசாயிகளின் பம்பு செட்டுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் 6 கியாஸ் சிலிண்டர் இலவசமாக கொடுக்கப்படும். ஆனால் மு.க.ஸ்டாலின் பொய் பேசி வருகிறார். உண்மையை பேசுகின்ற கட்சி அ.தி.மு.க. மக்களுக்கு சேவை செய்கிற கட்சி அ.தி.மு.க. தான்.

    நிலம் இல்லாமல், வீடு இல்லாமல் இருப்பவர்களுக்கு அரசாங்கமே நிலம் வாங்கி கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும். தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் வீடுகள் பாதுகாப்பாக இல்லாத நிலையில் இருந்தால் அந்த வீட்டிற்கு பதிலாக புதிய வீடு கட்டித்தரப்படும். வீடுகளுக்கு கேபிள் கட்டணம் கிடையாது.

    விவசாயிகளை ஏமாற்ற முடியாது. உழைக்கப்பிறந்தவர்கள் விவசாயிகள். உழைப்பு, நேர்மை, விசுவாசம் எங்களிடம் உள்ளது. உங்களிடம் (தி.மு.க.) எதுவும் கிடையாது. நீங்கள் இன்னும் பாதாளத்திற்கு கீழே தான் போவீர்கள்.

    சட்டமன்றத்திலே அராஜகம் செய்த தி.மு.க.விடம் நாட்டை கையில் கொடுத்தால், நாடு வளம் பெறுமா? (அப்போது திரண்டிருந்த தொண்டர்கள் வளம் பெறாது என சத்தம் எழுப்பினர்). சட்டமன்றத்தில் அலங்கோல காட்சியை அரங்கேற்றியது தி.மு.க. .

    இன்றைக்கு ஒரு அராஜக கட்சி ஆட்சிக்கு வரணுமா? அடாவடி கட்சி ஆட்சிக்கு வரணுமா? (அப்போது தொண்டர்கள் வரக்கூடாது... வரக்கூடாது.. என சத்தமிட்டனர்). தி.மு.க. ஒரு ரவுடி கட்சி, அராஜக கட்சி. இந்த தேர்தலில் தி.மு.க.வை படுதோல்வி அடைய செய்யுமாறு வாக்காளர்களை கேட்டுக்கொள்கிறேன்.
    அமைச்சர் விஜயபாஸ்கரை ஆதரித்து முதல்-அமைச்சர் பழனிசாமி நேற்று தேர்தல் பிரசாரம் செய்த காட்சி.
    மு.க.ஸ்டாலின் பல்வேறு நாடகங்களை தினமும் நடத்தி வருகிறார். மக்களிடம் மனுக்களை வாங்கி, அதனை பெட்டியில் போட்டு வைத்து, அதனை சீல் வைத்து, முதல்-அமைச்சரான பின் 100 நாட்களில் தீர்ப்பேன் என கூறி வருகிறார். எவ்வளவு ஏமாற்று வேலை செய்கிறார் என பாருங்கள். ஏமாற்றுவதில் தி.மு.க.காரர்கள் கில்லாடிகள். அதன் தலைவர் அதை விட கில்லாடி.

    தி.மு.க. ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது மக்களை கண்டு கொள்ளவில்லை. மக்களின் பிரச்சினைகளை தீர்க்கவில்லை. தற்போது எதிர்க்கட்சியில் இருக்கும்போது மக்களை பார்த்து மனு வாங்கி செயல்படுத்துவேன் என்கிறார். மு.க.ஸ்டாலின் எந்த காலத்திலும் ஜெயிக்கப்போவதும் இல்லை. பூட்டை உடைக்க போவதும் இல்லை. அந்த பெட்டிக்கு இன்னொரு பூட்டு போட்டு பூட்டிவிட்டோம்.

    வருகிற சட்டமன்ற தேர்தலில் உங்களது வாக்குகளை இரட்டை சிலை சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

    இதேபோல விராலிமலை தொகுதியில் போட்டியிடும் சுகாதாரத்துறை அமைச்சர்டாக்டர் சி.விஜயபாஸ்கரை ஆதரித்தும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தேர்தல் பிரசாரம் செய்தார்.
    Next Story
    ×