என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், நேற்று திடீரென மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு லேசாக தூறல் மழை பெய்தது. இந்த நிலையில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஆங்காங்கே மழை பெய்தது.

    புதுக்கோட்டையில் நேற்று பகல் 1.30 மணிக்கு மேல் திடீரென மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை இடைவிடாது சிறிது நேரம் ஒரே சீராக பெய்தது. இதனால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சிலர் மழையில் நனைந்தபடி இரு சக்கர வாகனங்களில் சென்றனர். சிலர் குடையை பிடித்தப்படி சென்றதை காணமுடிந்தது. இந்த கோடை மழை பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    இதேபோல் விராலிமலை பகுதியில் நேற்று காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. அதனை தொடர்ந்து காலை 7 மணி அளவில் குளிர்ந்த காற்று வீசி மழை பெய்தது. இந்த மழை சுமார் 40 நிமிடங்கள் நீடித்தது. இந்த மழையால் சாலைகளில் ஆங்காங்கே மழைநீர் வெள்ளம்போல் ஓடியது.

    திருவரங்குளம் வட்டார பகுதிகளில் உள்ள பூவரசகுடி, கைக்குறிச்சி, வம்பன் நாலுரோடு, வேப்பங்குடி, தோப்புக்கொல்லை, மேட்டுப்பட்டி, திருக்கட்டளை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று சிறிதுநேரம் மழை பெய்தது.

    ஆதனக்கோட்டை, கருப்புடையான்பட்டி, வண்ணராப்பட்டி, தொண்டைமான் ஊரணி, மோளுடையான்பட்டி, வாராப்பூர், நெம்மேலிபட்டி, மட்டையன்பட்டி, வெள்ளவெட்டான்விடுதி, பெருங்களூர், கருப்புடையான்பட்டி, குப்பையன்பட்டி, கூத்தாச்சிப்பட்டி, மாந்தாங்குடி, அரியூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் நேற்று காலை லேசானது முதல் மிதமான மழை பெய்தது. இதனால் இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    வடகாடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலையில் பலத்த மழை பெய்தது. தற்போது பெய்துள்ள மழையை பயன்படுத்தி இப்பகுதியில் மானாவாரி பயிராக பயிரிப்பட்டுள்ள கடலை செடிகளை அறுவடை செய்யும் பணிகளும் மும்முரமாக நடந்து வருகிறது.

    கீரமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் நேற்று அதிகாலையில் கன மழை பெய்தது. இந்த மழையால் கீரமங்கலம், செரியலூர், மேற்பனைக்காடு, பனங்குளம், கொத்தமங்கலம், நகரம், சேந்தன்குடி, குளமங்கலம் உள்பட சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த சில நாட்களாக அறுவடை செய்யப்பட்ட கடலைச் செடிகள் திடீர் மழையில் நனைந்து நாசமானது. பல இடங்களில் கடலையும் நனைந்துள்ளது. இதனால் விவசாயிகளுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டது.
    புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை பகுதியில் ஒரேநாளில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
    ஆதனக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை சுகாதார நிலைய வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில் நேற்று ஒரே நாளில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    புதுக்கோட்டையில் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்காத 2 தியேட்டர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
    புதுக்கோட்டை:

    கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிற நிலையில் தமிழக அரசு ஊரடங்கில் சில கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் நேற்று முதல் அமலுக்கு வந்தன. புதுக்கோட்டை மாவட்டத்திலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    புதுக்கோட்டை நகராட்சி பகுதியில் மாநகராட்சி பொறியாளர் ஜீவா சுப்ரமணியன் தலைமையில், சுகாதார ஆய்வாளர் பரக்கத்அலி மற்றும் நகராட்சி ஊழியர்கள் ஆங்காங்கே முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு ரூ.200 அபராதம் விதித்தனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. அவர்களது பெயர் விவரம், செல்போன் எண் ஆகியவற்றை சுகாதாரக்குழுவினர் சேகரித்து வைத்துக்கொண்டனர். புதுக்கோட்டை நகரின் முக்கிய பகுதியான கீழ ராஜவீதியில் அண்ணாசிலை அருகே நகராட்சி ஊழியர்கள் நின்று கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதேபோல போலீசாரும் இரு சக்கர வாகனங்களில் முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அபராதம் விதித்தனர்.

    இதற்கிடையே அரசு அறிவித்த வழிகாட்டு நெறிமுறைகளின்படி தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகள் மட்டும் அனுமதிக்க வேண்டும். ஆனால், நேற்று புதுக்கோட்டையில் நகரில் 2 தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. பிரபல நடிகர்களின் படம் திரையிடப்பட்டிருந்ததால் ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இந்தநிலையில் சுகாதார ஆய்வாளர் பரக்கத்அலி தலைமையிலான குழுவினர் அந்த தியேட்டர்களில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் 100 சதவீத இருக்கைகள் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து திரையரங்குகளின் உரிமையாளர்களுக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    இதேபோல நகரப்பகுதியில் முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு ரூ.3,200 அபராதம் வசூலிக்கப்பட்டது. இந்தநிலையில் 68 பேருக்கு கொரோனா மாதிரி எடுக்கப்பட்டன. இதேபோல பூ மார்க்கெட்டிலும் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
    கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட விராலிமலையை சேர்ந்த ராணுவ வீரர், வைரஸ் தொற்றுக்கு பலியாகி இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    விராலிமலை

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை டைமண்ட் நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வக்குமார் (வயது 34). ராணுவ வீரரான இவர் தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் பணியாற்றி வந்தார்.

    இவருக்கு திருமணமாகி புவனேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு ஏற்கனவே இரட்டை பெண் குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையே தற்போது புவனேஸ்வரி 9 மாத கர்ப்பிணியாக உள்ளார். ராணுவ வீரர் என்ற முறையில் செல்வக்குமார் தான் பணிபுரியும் இடத்திலேயே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

    இந்த நிலையில் அவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. காய்ச்சலும் இருந்துள்ளது. இதையடுத்து அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

    இதில் செல்வகுமாருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. உடனே அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இருந்த போதிலும் நேற்று மதியம் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட பிறகும் அவர் இறந்தது சக ராணுவ வீரர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. செல்வகுமார் இறந்த தகவல் கேட்டு அவரது குடும்பத்தினர் பேரதிர்ச்சி அடைந்தனர். அவரது மனைவி மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

    ராஜஸ்தானில் இருந்து இன்று சிறப்பு விமானம் மூலம் பலியான செல்வகுமாரின் உடல் திருச்சிக்கு கொண்டு வரப்படுகிறது. பின்னர் அங்கிருந்து அவரது சொந்த ஊரான திருச்சி-மணப்பாறை இடையே உள்ள மறவனூர் சத்திரம் கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அரசின் வழிகாட்டு நெறி முறைகளை பின்பற்றி உடல் அடக்கம் செய்யப்படுகிறது. இதனால் அவரது சொந்த கிராமம் மற்றும் விராலிமலை பகுதி சோகத்தில் மூழ்கியுள்ளது.

    இதற்கிடையே விராலிமலை ஈஸ்வரி நகர் பகுதியை சேர்ந்த 8 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு ஊராட்சி நிர்வாகம் சார்பில் தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது.

    தண்ணீருக்காக அமைக்கப்பட்ட பிளாஸ்டிக் தொட்டிகள் பல வருடங்களாக சுத்தம் செய்யாமல் பாசம் பிடித்து துர்நாற்றத்துடன் அசுத்த தண்ணீர் வருவதாக தமிழக வாழ்வுரிமை கட்சி புகார் கூறி உள்ளது.
    புதுக்கோட்டை: 

    புதுக்கோட்டையில் நிலவி வரும் தண்ணீர் தட்டுப்பாட்டை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், புதுக்கோட்டை நகராட்சி அலுவலகத்திற்கு, சாப்பாட்டை எடுத்துக்கொண்டு கையில் கொட்டாங்குச்சி ஏந்தி, கொட்டாங்குச்சியிலாவது தண்ணீர் கொடுங்கள் என்று கூறி, நகராட்சி ஆணையரிடம் நூதன முறையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பாக  மனு அளிக்கப்பட்டது.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கடந்த சில மாதங்களாகவே புதுக்கோட்டை நகரில் குடிதண்ணீர் சரிவர வரவில்லை. கடந்த 25 நாட்களாக எந்தப் பகுதியிலும் முழுமையாகவே வரவில்லை. பணம் உள்ளவர்கள் அதற்கான மாற்று வழியாக பணம் கொடுத்து கேன் தண்ணீர் வாங்கிக் கொள்கிறார்கள். அன்றாடம் குடும்பம் நடத்தவே வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். ஒரு சில பகுதிகளில் தண்ணீர் வந்தாலும் அதில் கழிவுநீர் கலந்து வருவதாக, தகவல் வருகிறது. அப்படி வரும் தண்ணீரை மக்கள் பயன்படுத்தினால், பல நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. 

    மனு கொடுக்க வந்த நிர்வாகிகள்

    ஆகையால் புதுக்கோட்டை நகர மக்களின் அவஸ்தைகளை மனதில் கொண்டு இரண்டு நாட்களுக்கு ஒரு முறையாவது தண்ணீர் வரும்படி செய்யவேண்டும். அதற்கும் தாமதமாகும் நிலையில் அனைத்து நகர பகுதிகளுக்கும் நகராட்சி குடிநீர் வண்டியை அனுப்பி மக்களின் தண்ணீர் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும். 

    முன்புள்ள நடைமுறையில் தெருவுக்குத் தெரு அடி பம்புகள் அமைக்கப்பட்டிருந்தன அந்த அடி பம்புகள் அனைத்தையும் அப்புறப்படுத்தி தற்போது மின் மோட்டார் மூலம் பிளாஸ்டிக் தொட்டி அமைத்துள்ளீர்கள். ஊரை சுற்றிலும் தைல மரக்காடுகள் உள்ளதால் நிலத்தடியில் நீர் இல்லாத காரணத்தினால் மின் மோட்டார்கள் தண்ணீரை இழுக்க முடியாமல் ஒரு சில பகுதியில் பழுதடைந்து கிடக்கிறது. தண்ணீருக்காக அமைக்கப்பட்ட பிளாஸ்டிக் தொட்டிகள் பல வருடங்களாக சுத்தம் செய்யாமல் பாசம் பிடித்து துர்நாற்றத்துடன் அசுத்த தண்ணீர் வருகிறது. அதையும் சரி செய்து கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
    கட்டுமாவடியில் கடல் நீர் திடீரென உள்வாங்கியதால் மீனவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்பட்டது.
    மணமேல்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடியில் உள்ள கட்டுமாவடி மீன் பிடித்தளத்திலிருந்து தினமும் 300-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடித்து திரும்புவது வழக்கம்.

    அந்தவகையில் நேற்று முன்தினம் இரவு கடலுக்கு சென்று விட்டு கரை திரும்பிய மீனவர்கள் தங்களது நாட்டுப்படகுகளை கரையோரத்தில் நங்கூரமிட்டு நிறுத்தி விட்டு வீட்டிற்கு சென்றனர்.

    வழக்கம்போல கடலுக்கு செல்வதற்காக நேற்று காலை மீனவர்கள் வந்தபோது சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். படகுகளும் தரை தட்டி நின்றன.

    இதுகுறித்து மீனவர் கணேசபுரம் ராஜசேகர் கூறுகையில், தற்போது கிழக்கிலிருந்து மேற்காக கொண்டல் காற்று வீசுவதால் கடல் நீர் வெள்ளம்போல் கரைக்கு வந்து மீண்டும் கடலுக்கு சென்று விடும். கொண்டல் காற்று கடலில் வீசுவது நின்று விட்டால் கடல்நீர் இயல்பு நிலைக்கு மாறும். 

    கொண்டல் காற்று கடலில் பலமாக வீசியதால் சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கி உள்ளது. இது இயல்பாக நடக்கும் ஒன்றுதான். பயப்படதேவையில்லை என்று கூறினார். பின்னர் தரை தட்டிய படகுகளை கடலுக்கு இழுத்துச் சென்று மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். கடல் நீர் திடீரென உள்வாங்கியது மீனவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    ஆலங்குடி பகுதியில் பலாப்பழம் விற்பனை பாதியாக குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி, கீரமங்கலம், கொத்தமங்கலம், வடகாடு மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் முக்கனிகளில் ஒன்றான பலாப்பழம் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இங்கு விளையும் பலாப்பழங்கள் மிகவும் சுவை மிகுந்ததாக இருப்பதால் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநில வியாபாரிகளால் விரும்பி வாங்கப்படுகிறது.

    கடந்த ஆண்டு கொரோனா பொது முடக்கத்தால் பலாப் பழங்களை வாங்குவோர் இன்றி மரங்களிலேயே பழுத்து வீணாகியது. இதனால் விவசாயிகளுக்கு பல லட்சம் இழப்பு ஏற்பட்டது. இந்த ஆண்டும் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக தங்களிடம் இருந்த பலாமரங்களை குத்தகை மற்றும் ஒட்டு மொத்தமாக வியாபாரிகளிடம் கொடுத்து பணம் வாங்கி தங்களது சிறு, சிறு தேவைகளை விவசாயிகள் நிவர்த்தி செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் பலா மரங்களை குத்தகைக்கு விட்டதால் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பதுபோல தங்களது பலா மரங்களில் இருந்து தாங்களே பலாப்பழங்களை ருசிக்க முடியாத நிலையில் உள்ளனர்.

    பெரும்பாலான பல மரங்களை அடமானம் வைத்து பணம் பெற்றுள்ளதால் இப்பகுதிகளில் உள்ள கமிஷன் கடைகளுக்கு குறைந்த அளவிலான பலாப்பலங்கள் மட்டுமே விற்பனைக்கு வருகிறது. இதனால் விற்பனையும் சற்று மந்தமாக நடைபெற்று வருகிறது. மேலும் குத்தகை வியாபாரிகள் பலாப்பழங்களை மொத்தமாக பறித்து வெளியூர்களுக்கு கொண்டு சென்று விடுகின்றனர்.

    இதற்கிடையே நாள்தோறும் பழங்களின் விலை அதிகரித்து வரும் நிலையில் இப்பகுதி விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். மேலும் தமிழ் வருடப்பிறப்பு மாதமான சித்திரை மாதம் பிறக்க இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால் அப்போது முதல் பலாப்பழ விற்பனை சூடுபிடிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

    வடகாடு அருகே கீழாத்தூரில் தெற்கு பகுதியில் உள்ள அரசு நடுநிலை பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் கூலி தொழிலாளர்களே அதிக அளவில் வாக்களித்தனர்.
    வடகாடு:

    வடகாடு அருகே கீழாத்தூரில் தெற்கு பகுதியில் உள்ள அரசு நடுநிலை பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் கூலி தொழிலாளர்களே அதிக அளவில் வாக்களித்தனர். தற்போது கடலை செடிகளை அறுவடை செய்யும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இதனால் இப்பகுதியில் உள்ள விவசாய கூலி தொழிலாளிகள் காலையில் வாக்களித்துவிட்டு மீட்டு தங்கள் தொழிலை மேற்கொண்டனர்.
    கறம்பக்குடி அருகே விபத்தில் விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
     கறம்பக்குடி:

    தஞ்சாவூர் மாவட்டம் நரிப்பத்தை கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியதம்பி (வயது 65) விவசாயி. இவரது உறவினர் சித்தாரிக் காட்டைச் சேர்ந்த கண்ணன் ( 35). இவர்கள் இருவரும் மோட்டார்சைக்கிளில் ஆலங்குடி கடலை அரவை மில்லுக்கு சென்றுகொண்டிருந்தனர். கறம்பக்குடி அக்னி ஆற்று பாலம் அருகே சென்றபோது எதிரே மங்கான் கொல்லைபட்டியைச் சேர்ந்த சிவக்குமார் (30), மணிகண்டன் (28) ஆகியோர் வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் படுகாயமடைந்த பெரியதம்பி, கண்ணன் ஆகியோர் 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துமனைக்கு கொண்டு செல்லபட்டனர். ஆனால் செல்லும் வழியிலேயே பெரியதம்பி இறந்தார். படுகாயமடைந்த கண்ணன் புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிவக்குமார், மணிகண்டன் ஆகியோருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்கள் இருவரும் கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து கறம்பக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தமிழகத்தில் இன்று 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. அதில் புதுக்கோட்டையில் 72.94 சதவீத வாக்குப்பதிவு பதிவாகின.
    புதுக்கோட்டை :

    தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்ற தேர்தலில் 71.79 சதவீத வாக்குகள் பதிவாகின.

    அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 78 சதவீதம் வாக்குகளும், குறைந்தபட்சமாக சென்னை மாவட்டத்தில் 59.40 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

    புதுக்கோட்டையில் 72.94 சதவீத வாக்குப்பதிவு பதிவாகின. தேர்தல் ஆணைய செயலியில் உள்ள தகவலின் அடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தொகுதிகள் வாரியாக பதிவான வாக்குகள் விவரம்:-

    ஆலங்குடி- 78.44%
    அறந்தாங்கி - 70.37%
    கந்தர்வக்கோட்டை - 75.40%
    புதுக்கோட்டை - 72.94%
    திருமயம் - 75.89%
    விராலிமலை - 85.43%
    ஆலங்குடி வாக்குச்சாவடியில் மின்னணு வாக்கு இயந்திரத்தை குடிபோதையில் ஒருவர் அடித்து நொறுக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    புதுக்கோட்டை:

    தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக 234 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணி முதல் வாக்கு பதிவு நடைபெற்று வருகிறது. இரவு 7 மணி வரை வாக்களிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் வாக்காளர்கள் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் ஆலங்குடி வாக்குச்சாவடியில் மின்னணு வாக்கு இயந்திரத்தை குடிபோதையில் ஒருவர் அடித்து நொறுக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி பஞ்சாயத்து ஆலங்குடி கிராமத்தில் குடிபோதையில் தகராறு செய்த ஆனந்தன் என்பவர் அரிவாளை கொண்டு வாக்குப்பதிவு இயந்திரத்தை அடித்து நொறுக்கினார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதையடுத்து அறந்தாங்கி காவல் ஆய்வாளர் அவரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்.
    புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளில் பாதுகாப்பு பணியில் 3 ஆயிரத்து 400 போலீசார் ஈடுபடுவதாக போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தெரிவித்தார்.
    புதுக்கோட்டை:

    சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 8 துணை ராணுவ படை கம்பெனிகள் வந்துள்ளன.

    மேலும் மாவட்டத்தில் போலீசாரும் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதவிர கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து போலீசார், ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணிக்காக புதுக்கோட்டைக்கு வந்துள்ளனர்.

    இந்தநிலையில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் போலீசார் உடன் பாதுகாப்பு பணியில் ஈடுபடக்கூடிய ஊர்க்காவல் படையினர், முன்னாள் ராணுவ படையினர், தேசிய மாணவர் படையினர் நேற்று புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானம் வரவழைக்கப்பட்டனர்.

    6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் பாதுகாப்பு பணிக்கு அவர்கள் பிரித்து அனுப்பப்பட்டனர். அவர்களுடன் வெளிமாநில ஊர்க்காவல் படையினருக்கும் பணி ஒதுக்கப்பட்டது. அவர்களை அழைத்து செல்வதற்காக வேன்கள் வசதியும் ஏற்படுத்தப்பட்டிருந்தன.

    தேர்தல் பாதுகாப்பு பணி குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணனிடம் கேட்ட போது கூறியதாவது:-

    புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவை அமைதியாகவும், பாதுகாப்பாகவும் நடத்திட அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. 27 இடங்களில் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 3 ஆயிரத்து 406 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    வாக்குச்சாவடி மையங்கள் முன்பும், ரோந்தும் பணியும், நடமாடும் போலீஸ் குழுவும், சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கவும் என பாதுகாப்பு பணி பிரிக்கப்பட்டுள்ளது. துணை ராணுவ படையினரும் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். 125 பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதலாக பாதுகாப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது''.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×