என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டையில் பரவலாக மழை பெய்தது. நெற்கதிர்கள் சாய்ந்து ஈரப்பதமானதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். மேலும், கால்நடைகள் மேய்ச்சலுக்கு செல்ல முடியாமல் அவதியடைந்தன.
    புதுக்கோட்டை:

    தமிழகத்தில் கடலோர பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் மழை பெய்தது. புதுக்கோட்டையில் நேற்று முன்தினம் இரவு சாரல் மழை பெய்தது. தொடர்ந்து நள்ளிரவிலும் மழை பெய்தது.

    இந்த நிலையில் நேற்று காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து பகல் 11 மணிக்கு மேல் லேசாக தூறிய படி இருந்தது. அதன்பின் இந்த மழை பரவலாக இடைவிடாமல் பெய்தது. இந்த மழையினால் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் நனைந்தபடியும், சிலர் குடையை பிடித்தபடியும் சென்றனர்.

    இதேபோல் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. மார்கழி மாதத்தில் பொதுவாக பனிப்பொழிவு அதிகமாக இருக்கும். அதன்படி தான் தற்போதும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இந்த நிலையில் பருவ நிலையில் மாற்றத்தால் மழை பெய்தது. மார்கழியில் இப்படி மழை பெய்கிறதே என பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பேசினர்.

    தற்போது சம்பா நெல் சாகுபடி அறுவடைக்கு தயாராகி வருகிற நிலையில் மழை பெய்ததால் விவசாயிகள் சற்று கலக்கமடைந்துள்ளனர். அறுவடை காலத்தில் நெற்கதிர்கள் வீணாகி போகுமா? என அச்சமடைந்துள்ளனர்.

    இந்த நிலையில் மழையினால் நேற்று சில இடங்களில் அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அறுவடை எந்திரங்கள் வயலின் அருகே நிறுத்தப்பட்டிருந்தன. பெருமநாடு அருகே சில வயல்களில் நெற்கதிர்கள் சாய்ந்து ஈரப்பதமானதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

    இவ்வளவு நாள் பயிரிட்டு வளர்ந்து வந்த நிலையில் அறுவடை செய்கிற நேரத்தில் மழையினால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.

    கீரனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மதியம் ஆரம்பித்த மழை மாலை வரை சுமார் 4 மணி நேரம் இடைவிடாது கொட்டித் தீர்த்தது. இதனால் தாழ்வான இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. கீரனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கடலை மற்றும் நெற்பயிர்களை சாகுபடி செய்து உள்ளனர். தற்போது அறுவடை காலம் என்பதால் விவசாய பயிர்கள் மழையில் நனைந்து சேதம் அடையும் என்பதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

    கீரனூர் தாலுகா அலுவலக கட்டிடம் நூற்றாண்டு பழமை வாய்ந்தது. தற்போது மராமத்து பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் ஒரு பகுதியில் சார்பதிவாளர் அலுவலகம் உள்ளது. மராமத்து பணிகள் காரணமாக நேற்று பெய்த மழையால் சார்பதிவாளர் அலுவலகத்துக்குள் மழை நீர் கசிய ஆரம்பித்தது. இதனால் பத்திரப்பதிவு ஆவணங்கள் மழையில் நனைந்து சேதமடையும் நிலை ஏற்பட்டது.

    இதையடுத்து, ஊழியர்கள் அந்த ஆவணங்களை மாற்று இடத்தில் வைத்தனர். கட்டிடத்தில் மழைநீர் கசிவது குறித்து உயர் அதிகாரிகளுக்கு சார்பதிவாளர் அலுவலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

    விராலிமலை ஒன்றிய பகுதிகளில் நேற்று அதிகாலையில் இருந்து காலை 7 மணி வரை மிதமான மழை பெய்தது. மதியம் 2.15 மணியளவில் மாத்தூர், ஆவூர், நீர்பழனி, ஆலங்குளம், விராலிமலை உள்ளிட்ட பகுதிகளில் கருமேகம் சூழ்ந்து மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழையாகவும், மாலை 4 மணி வரை அடை மழையாகவும் பெய்தது.

    இந்த மழை மலம்பட்டி, கத்தலூர், வேலூர் உள்ளிட்ட விராலிமலை ஒன்றியத்தின் பெரும்பாலான பகுதிகளில் பெய்தது. இதனால் வயல்வெளிகள் மற்றும் சாலையோரங்களில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. பல்வேறு பகுதிகளில் விவசாயம் செய்துள்ள நெற்பயிர்கள் முற்றி அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் நேற்று பெய்த மழையால் அறுவடை பாதிக்கப்படும் என்றும் இந்த மழை மேலும் தொடர்ந்தால் நெற்கதிர்கள் வயலில் சாய்ந்து தண்ணீரில் மூழ்கி பாதிப்பு ஏற்படும் என்றும் விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.

    திருவரங்குளம் வட்டார பகுதிகளில் கடந்த 15 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் இரவு மழை பெய்தது. அதனைத்தொடர்ந்து அதிகாலை முதல் அடை மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது. மேலும், கால்நடைகள் மேய்ச்சலுக்கு செல்ல முடியாமல் அவதியடைந்தன.
    புதுக்கோட்டையில் 4¾ லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது. இதையொட்டி குடோன்களில் இருந்து பொருட்கள் ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
    புதுக்கோட்டை:

    தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகிற 14-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகத்தில் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசு தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

    இதில் பொங்கல் தயாரிக்க பயன்படுத்தக்கூடிய பொருட்களான பச்சரிசி, வெல்லம், முந்திரி, ஏலக்காய், திராட்சை, நெய் மற்றும் மளிகை பொருட்கள் பாசிப்பருப்பு, ரவை, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், மிளகு, கடுகு, சீரகம், புளி, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, கோதுமை, உப்பு, முழு கரும்பு உள்பட மொத்தம் 21 வகையான பொருட்கள் வினியோகிக்கப்பட உள்ளன.

    இதையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டையில் நுகர்பொருள் வாணிப கழக குடோனில் இருந்து பரிசு தொகுப்புகள் அடங்கிய மளிகை பொருட்கள் லாரிகளில் மூலம் மூட்டை, மூட்டையாக ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கும் பணி நேற்று நடைபெற்றது. இதில் லாரிகளில் அனுப்பப்பட்ட அந்த மூட்டைகள் ரேஷன் கடைகளில் இறக்கி வைக்கப்பட்டன. இதேபோல் மற்ற பொருட்கள் அடங்கிய தொகுப்புகளும் ரேஷன் கடைகளுக்கு வர வேண்டி உள்ளது.

    பொங்கல் பரிசு தொகுப்பை சென்னையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பயனாளிகளுக்கு வழங்கிய பின் மாவட்டங்களில் 21 வகையான பொருட்கள் வினியோகிக்கப்படும். புதுக்கோட்டை மாவட்டத்தில் 1,028 ரேஷன் கடைகளில் 4 லட்சத்து 82 ஆயிரத்து 187 ரேஷன் கார்டுதாரர்களுக்கும், இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் 968 அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
    புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தத்தில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் தொடர்பான பணிகள் நிறைவடைந்தது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

    கூட்டத்திற்கு புதுக்கோட்டை மாவட்டத்திற்கான வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மற்றும் தமிழ்நாடு கடல்சார் வாரிய துணை தலைவர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டருமான கவிதா ராமு முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் பாஸ்கரன் கூறுகையில், ‘‘வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தத்தில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் தொடர்பான பணிகள் நிறைவடைந்தது. இதையடுத்து, இறுதி வாக்காளர் பட்டியல் வருகிற 5-ந் தேதி வெளியிடப்படுகிறது. மேலும் வாக்காளர் பட்டியலில் மாவட்டத்தில் உள்ள முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட அனைவரது பெயரும் விடுபடாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அரசியல் பிரமுகர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டும்’’ என்றார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தங்கவேல், ஆர்.டி.ஓ.க்கள் அபிநயா, தண்டாயுதபாணி, சொர்ணராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    ஆங்கில புத்தாண்டையொட்டி கீரமங்கலத்தில் பூக்களின் விலை உயர்ந்தது.
    ஆலங்குடி:

    மதுரை, திருச்சி மாவட்டங்களுக்கு அடுத்தபடியாக புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் சுற்றியுள்ள செரியலூர், சேந்தன்குடி, கொத்தமங்கலம், குளமங்கலம், பனங்குளம், பாண்டிக்குடி,பெரியாளூர், நெய் வத்தளி, மேற்பனைக்காடு, கரம்பக்காடு, மாங்காடு, வடகாடு, வம்பன், மாஞ்சன் விடுதி, மழையூர், சம்மட்டி விடுதி உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பூக்களை அதிகளவில் பயிரிட்டு உள்ளனர்.

    இங்கு உற்பத்தி செய்யப்படும் பூக்கள் கீரமங்கலம் கொத்தமங்கலம் பூ கமி‌ஷன் மண்டிக்கு கொண்டு சென்று விவசாயிகள் விற்பனை செய்து வருகிறார்கள். கீரமங்கலம் பூ கமி‌ஷன் மண்டிக்கு சராசரியாக ஒரு நாளைக்கு 5 முதல் 10 டன் வரை பூக்கள் விற்பனைக்கு வரும். பண்டிகை,திருவிழா, சுபமுகூர்த்த நாட்களில் அதிக விலைக்கு பூக்கள் விற்பனையாகும். இந்நிலையில் இன்று (சனிக்கிழமை) ஆங்கில புத்தாண்டு என்பதால் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்தது.

    முல்லை பூ கிலோ ரூ.1,000- க்கும், மல்லிகை ரூ.700-க்கும், கனகாம்பரம், காட்டுமல்லி ரூ.600-க்கும் விற்பனையானது. தொடர் மழை காரணமாக பூக்களின் உற்பத்தி குறைந்து உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
    கீரனூர் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கீரனூர்:

    கீரனூரை அடுத்த குளவாய்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் துரைராஜ் (வயது 66), விவசாயி. இவர் சிறுநீரக கோளாறு காரணமாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் மன உளைச்சலில் இருந்த துரைராஜ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதையடுத்து, அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் துரைராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து உடையாளிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பயனாளிகளுக்கு முறையாக வழங்காமல் கிரைண்டர் மற்றும் பேன்களை சேமித்து வைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா கிரைண்டர் மற்றும் பேன் ஆகிய பொருட்கள் வழங்கப்பட்டன. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 4 லட்சத்து 82 ஆயிரம் பயனாளிகளுக்கு விலையில்லா பொருட்கள் வழங்கப்பட்டு மீதமிருந்த கிரைண்டர் மற்றும் பேன்கள் கிடங்கில் வைக்கப்பட்டிருந்தன.

    இந்தநிலையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கில் முந்தைய ஆட்சியில் வழங்கப்பட்ட அம்மா கிரைண்டர், மின் விசிறி பெட்டி பெட்டியாக கிடங்கில் குவித்து வைக்கப்பட்டிருந்து தற்போது துருப்பிடித்து கிடக்கின்றன. ஏழை, எளிய குடும்ப அட்டைதாரர்களுக்கு பயன்படும் வகையில் உள்ள கிரைண்டர் மிக்சி, பேன் இவைகளை வழங்காத முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

    மேலும் இதனால் பயனாளிகளுக்கு முறையாக வழங்காமல் கிரைண்டர் மற்றும் பேன்களை சேமித்து வைத்த மற்றும் மக்களின் வரிப்பணம் வீணாக காரணமாக இருந்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தற்போது புதுக்கோட்டை நுகர்பொருள் வாணிப கிடங்கில் உபயோக மற்றும் கிடக்கும் அரசின் மிக்சி, கிரைண்டர், மின் விசிறிகளின் மதிப்பு பல லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

    இதுபற்றி அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், பயனாளிகளுக்கு வழங்கியது போக எஞ்சியுள்ள பொருட்கள் குறித்து முறையாக அரசுக்கு தகவல் அளித்துள்ளதாக தெரிவித்தார்.


    இலுப்பூர் அருகே மணல் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அன்னவாசல்:

    இலுப்பூர் பகுதியில் வாகனங்களில் மணல் கடத்தி செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து இலுப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா உள்ளிட்ட போலீசார் இலுப்பூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அந்த டிப்பர் லாரியை பறிமுதல் செய்த போலீசார் வேப்பங்கணிபட்டியை சேர்ந்த சின்னக்கண்ணு மற்றும் குறிச்சிப்பட்டியை சேர்ந்த சேவக பெருமாள் ஆகிய இருவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோபாலபட்டினத்தில் நகை கொள்ளை சம்பவம் இன்னும் முடிவுக்கு வராத நிலையில் இன்று கிழக்குக் கடற்கரை சாலையில் மீண்டும் கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த கோட்டைப்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் கலந்தர் (வயது 25). இவர் அதே பகுதியில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் வியாபாரத்தை முடித்துக் கொண்டு, கலந்தர் மற்றும் கடை ஊழியர்கள் கடையை பூட்டி விட்டுச் சென்றனர். அப்போது சமயம் பார்த்து காத்திருந்த மர்ம நபர்கள் கடையின் ஜன்னல் பகுதியை உடைத்து உள்ளே சென்றுள்ளனர்.

    அங்கிருந்த டி.வி., மைக்ரோவேவ் ஓவன் உள்ளிட்ட ரூ.ஒரு லட்சம் மதிப்பிலான பர்னிச்சர் பொருட்களை திருடிச் சென்றுள்ளனர். இந்நிலையில் இன்று காலை கடை ஊழியர்கள் கடையை திறந்து பார்க்கையில் உள்ளே இருந்த பீரோல் உள்ளிட்ட பொருட்கள் உடைக்கப்பட்டு சிதறிக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    அதனையடுத்து கடை உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த கடை உரிமையாளர் கலந்தர் கோட்டைப்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கோபாலபட்டினத்தில் நகை கொள்ளை சம்பவம் இன்னும் முடிவுக்கு வராத நிலையில் இன்று கிழக்குக் கடற்கரை சாலையில் மீண்டும் கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது போலீசாருக்கு மிகுந்த சவாலாகவும், பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 
    புதுக்கோட்டையில் தடைச்செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை மற்றும் ஆன்லைன் லாட்டரி விற்பனையை முற்றிலும் தடுக்கும் விதமாக போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஆன்லைன்லாட்டரி விற்பனை நடைபெற்று வருவதாக போலீசாருக்கு தகவல் வந்துள்ளது இதனை தொடர்ந்து போலீசார் அப்பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது, மேலதானியம் பேரூந்து நிலையம் அருகே ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்த உசிலம்பட்டியை சேர்ந்த சரவணன்(33), கல்லுகுடியிருப்பு மாரியம்மன் கோவில் பின்புறம் ஆன்லைன் லாட்டரி விற்பனைசெய்த அதே பகுதியை சேர்ந்த கணேசன்(28), அரிமளத்தில் மாமரத்து பஸ் நிறுத்தத்தில் ஆன்லைன் லாட்டரிவிற்பனை செய்த மணமேல்குடியை சேர்ந்த லெட்சுமணன்(21), அய்யப்பன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஒடிய அய்யப்பனை தவிர மற்ற 3 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அய்யப்பனை வலை வீசி தேடி வருகின்றனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து, ஆன்லைனில் லாட்டரி விற்பனை செய்ய பயன்படுத்திய நான்கு செல்போன்கள், நோட் புக் 3, பில் புக் 19, ரொக்கம் ரூ.7,450 மற்றும் இருச்சக்கர வாகனம் ஒன்றை பறிமுதல் செய்துள்ளனர்.

    சிறுவனின் இடது தலையில் மிகவும் ஆழமாக துப்பாக்கி குண்டு புகுந்துள்ளதால் அதனை அகற்றும் முதல்கட்ட சிகிச்சையில் டாக்டர்கள் ஈடுபட்டுள்ளனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகில் உள்ள அம்மாசத்திரம் பகுதியில் மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசாருக்கான (சி.ஐ.எஸ்.எப்.) துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு திருச்சி மண்டலத்தை சேர்ந்த போலீசார் மற்றும் சிறப்பு காவல் படையினர் தினமும் வருகை தந்து துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபடுவார்கள்.

    புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகேயுள்ள கொத்தமங்களத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கலைச்செல்வன், கூலித் தொழிலாளி. இவரது மகன் புகழேந்தி (வயது 11). இவன் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறான்.

    தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதால் நார்த்தாமலையில் உள்ள தனது தாத்தா முத்து என்பவரது வீட்டிற்கு வந்திருந்தான். இன்று காலை சிறுவன் புகழேந்தி தனது பாட்டி வீட்டில் அமர்ந்து காலை உணவு சாப்பிட்டுக் கொண்டு இருந்தான்.

    அப்போது அங்கிருந்து சுமார் 1½ கி.மீ. தூரத்தில் உள்ள துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில் இருந்து பயிற்சியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் ஒருவரின் துப்பாக்கியில் இருந்து வெளியான 2 தோட்டாக்கள் மின்னல் வேகத்தில் வந்தன. அதில் ஒரு குண்டு வீட்டின் சுவரிலும், மற்றொரு குண்டு சிறுவன் புகழேந்தியின் இடது தலையிலும் பாய்ந்தது.

    அடுத்த விநாடி சிறுவன் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தான். இதைப்பார்த்த வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். உடனடியாக அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சிறுவனை காரில் தூக்கிக்கொண்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வந்தனர்.

    உடனடியாக மருத்துவக் கல்லூரி டீன் மற்றும் தலைமை மருத்துவர்கள் சிறுவனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். சிறுவனின் இடது தலையில் மிகவும் ஆழமாக துப்பாக்கி குண்டு புகுந்துள்ளதால் அதனை அகற்றும் முதல்கட்ட சிகிச்சையில் டாக்டர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    சம்பவம் நடந்த இடத்திற்கு புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் மற்றும் போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர். இது தொடர்பாக நார்த்தாமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஆனாலும் ஆபத்தான நிலையில் சிறுவன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து அவனது தந்தை கலைச்செல்வன் கூறுகையில், எனது மகன் பள்ளி விடுமுறை விடப்பட்டுள்ளதால் பாட்டி வீட்டிற்கு வந்திருந்தான். இன்று காலை அவன் சாப்பிட்டுக்கொண்டு இருந்தபோது அருகிலுள்ள துப்பாக்கி சுடும் மையத்தில் இருந்து பறந்து வந்த குண்டு மகனின் தலையில் பாய்ந்து விட்டது.

    என்ன செய்வதென்று தெரியாமல் கதறிய நாங்கள் உடனடியாக புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்துள்ளோம். டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள் என்று கண்ணீருடன் தெரிவித்தார்.

    இதுதொடர்பாக கந்தர்வக்கோட்டை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. நார்த்தாமலை ஆறுமுகம் கூறுகையில், துப்பாக்கி குண்டு பாய்ந்து ஆபத்தான நிலையில் இருக்கும் சிறுவனை காப்பாற்ற டாக்டர்கள் போராடி வருகிறார்கள். இந்த துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தின் அருகிலேயே ஏராளமான குடியிருப்புகள் அமைந்துள்ளதால் அதனை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

    ஆனால் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இடையில் சில மாதங்கள் கலெக்டர் தலையிட்டதன் பேரில் பயிற்சி மையம் மூடப்பட்டது. தற்போது மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது. இன்று ஒரு சிறுவனின் தலையில் குண்டு பாய்ந்துள்ளது என்றார்.


    பொன்னமராவதி சுற்றுவட்டார பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்த 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொன்னமராவதி:

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி சுற்றுவட்டார பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வருவதாக காவல் துறைக்கு தொடர்ந்து தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன.

    இதையடுத்து பொன்னமராவதி காவல் ஆய்வாளர் தனபாலன் தலைமையிலான காவலர்கள் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.

    அப்போது லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து வந்த சிவகங்கை மாவட்டம் கல்லங்கா லப்பட்டியை சேர்ந்த அய்யாக்கண்ணு மகன் அழகு சாமி (வயது 54), பொன்னமராவதி பூங்குடி வீதியைச் சேர்ந்த சாமிநாதன் மகன் ரவிராஜன் (39), பொன்னமராவதி பெருமாள் கோவில் வீதியைச் சேர்ந்த ராமசாமி என்பவரின் மகன் சிவகுமார் (37), பொன்னமராவதி அம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த பொன்னுச்சாமியின் மகன் நாச்சியப்பன் (50),பொன்னமராவதி பாண்டிமான் கோவில் தெருவைச் சேர்ந்த கதிரேசன் என்பவரின் மகன் நிஜந்தன் (30) ஆகியோர் பொன்னமராவதி போலீசார் கைது செய்தனர்.

    மேலும் அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த பரிசுச்சீட்டுடன் ரூ.81,340 ரொக்கம் பறிமுதல் செய்த போலீசார் திருமயம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். விசாரணை செய்த நீதிபதி அவர்கள் 5 பேரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே தொழிலதிபர் வீட்டில் கொள்ளை போனதாக கூறப்பட்ட 750 பவுன் நகை பின்புற பாழடைந்த கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மீமிசல் பகுதியை அடுத்த கோபாலன்பட்டினம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் ஜகுபர் சாதிக் (வயது 55). தொழில் அதிபரான இவர் கடந்த 30 ஆண்டுகளாக புருனே நாட்டில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார்.

    அவருக்கு மகாதீர்முகமது (20), நஜீர்முகமது (12) ஆகிய 2 மகன்களும், ஜாஹிரா பானு (15) என்ற ஒரு மகளும் உள்ளனர். அவர்களில் மகாதீர் முகமது, கோபாலன்பட்டினத்தில் உள்ள அவரது அத்தை சாதிக்காபீவி வீட்டில் வசித்து வருகிறார்.

    கோபாலன்பட்டினத்தில் உள்ள ஜகுபர் சாதிக்கின் வீட்டை அவரது சகோதரி சாதிக்காபீவி குடும்பத்தினர் பராமரித்து வருகின்றனர். சாதிக்கா பீவி, கடந்த 24-ந் தேதி ஜகுபர்சாதிக் வீட்டிற்கு சென்று வீட்டை சுத்தம் செய்து விட்டு, பின்னர் வீட்டை பூட்டிவிட்டு அவரது வீட்டிற்கு சென்று விட்டார்.

    இந்த நிலையில் கடந்த 27-ந்தேதி காலை 10.30 மணியளவில் சாதிக்காபீவியின் மகள் உம்மல்ஹமீலா (35), ஜகுபர் சாதிக்கின் வீட்டிற்கு சென்றபோது வீட்டின் கதவு ஓரம் மிளகாய் பொடி பரவி கிடப்பதை பார்த்தார். உடனே அவர் இதுகுறித்து தனது தாய் சாதிக்காபீவிக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார். அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார்.

    பின்னர் இருவரும் உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டின் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதன் வழியாக உள்ளே புகுந்த மர்மநபர்கள் வீட்டின் உள் அறைகள் மற்றும் மேல்தளத்தில் உள்ள ஒரு அறையில் இருந்த பீரோ, அலமாரி மற்றும் பெட்டிகளை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த சுமார் 750 பவுன் நகைகளை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றிருந்தது தெரிய வந்தது.

    இதனைபார்த்து அதிர்ச்சி அடைந்த சாதிக்கா பீவி, புருணையில் உள்ள ஜகுபர் சாதிக்கை செல்போனில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். இதுகுறித்த புகாரின் பேரில் மீமிசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் கோபாலன்பட்டினம் ஜாபர் சாதிக் வீட்டில் கடந்த 27-ந்தேதி கொள்ளை போன 750 பவுன் நகைகளை இன்று அவரது வீட்டின் பின்புறம் உள்ள பாழடைந்த கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது. ஒரு பாலித்தீன் கவரில் சுற்றி உள்ளே வீசப்பட்டு இருந்தது.

    அதனை அறந்தாங்கி போலீஸ் துணை சூப்பிரண்டு தினேஷ்குமார் தலைமையிலான போலீசார் கிணற்றுக்குள் இறங்கி மீட்டனர். அந்த நகைகளை போலீசார் நகை மதிப்பீட்டாளர்களை கொண்டு கணக்கிடும் பணியில் ஈடுபட்டனர்.

    உண்மையிலேயே நகை கொள்ளை போனதா அல்லது வேண்டுமென்றே நகைகளை பாலித்தீன் பையில் மறைத்து கிணற்றுக்குள் வீசிவிட்டு புகார் கொடுத்த ஜாபர் சாதிக் நாடகம் ஆடுகிறாரா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×