என் மலர்
நீலகிரி
- கோழிக்கரை பகுதியில் மர்மமாக இறந்து கிடந்தது
- குட்டியை தேடி தாய் வருவதால் ஊழியர்கள் தீவிர கண்காணிப்பு
அருவங்காடு,
நீலகிரி மாவட்டத்தில் சமவெளி பகுதியில் இருந்து காட்டு யானைகள் உணவு தேடி மலைகளுக்கு இடம்பெயர்ந்து வருகின்றன. எனவே கோத்தகிரி, குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது.
இந்த நிலையில் குன்னூர் அருகே உள்ள கோழிக்கரை பகுதியில் பிறந்து சில நாட்களே ஆன ஒரு குட்டி பெண் யானை மர்மமாக இறந்து கிடந்தது. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்தில் குட்டி யானை சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து மாவட்ட உதவி வன பாதுகாவலர் தேவராஜ், குன்னூர் வனச்சரகர் ரவீந்திரன் முன்னிலையில் முதுமலை தெப்பக்காடு கால்நடை மருத்துவர் ராஜேஷ் பிரேத பரிசோதனை செய்தார்.
குட்டியானையின் இறப்பு தொடர்பாக குன்னூர் வனச்சரகர் ரவீந்திரன் கூறியதாவது:-
கோழிக்கரை பகுதியில் குட்டி யானை இறப்பு குறித்து தகவலறிந்ததும் சம்பவ இடத்துக்கு சென்றோம். அப்போது சடலத்தை சுற்றிலும் 3 பெரிய யானைகள் நின்றன. பின்னர் அவை தாமாகவே அடர்ந்த வனத்திற்குள் சென்று விட்டன.
இறந்த குட்டி யானையின் உடலை மீட்டு உடற்கூராய்வு செய்தோம். பின்னர் அந்த யானையின் உடல் பாகங்கள் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.
மலைச்சரிவில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. எனவே அந்த குட்டி யானை கால்தவறி பள்ளத்தாக்கில் விழுந்து பலியானதா, உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்ததா என்பது குறித்து பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறோம்.
இதற்கிடையே பலியான குட்டியின் தாய் யானை அடிக்கடி சம்பவ இடத்துக்கு வந்து செல்வதால், அந்த பகுதியில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பு கருதி, வனஊழியர்கள் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.
- பழவியாபாரியிடம் சீத்தாப்பழம் வாங்கி ருசிக்கிறது
- சுற்றுலா பயணிகள் செல்போனில் புகைப்படம் எடுத்து உற்சாகம்
அருவங்காடு,
தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகளில் மனிதர்கள் நடமாட்டம் இல்லாத அடர்ந்த வனப் பகுதியில் மட்டும் காணப்படுகிறது மலபார் அணில்.
இந்த அணில்கள் நீலகிரி, கேரளா, களக்காடு, உடுமலை போன்ற அடர்ந்த வனப்பகுதிகளில் மட்டுமே காண முடியும். அணில் வகையிலேயே உருவத்தில் மிகப்பெரியதாகவும் மற்றும் அழிந்து வரும் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
இதனை பராமரித்து பாதுகாப்பாக வைக்க வேண்டுமென சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் இந்த வகை அணில்கள் முகாமிட்டுள்ளது. 100 ஆண்டு கால பழமை வாய்ந்த வானுயர்ந்த மரங்கள் மற்றும் மூலிகைச் செடிகள் இந்த பூங்காவில் அதிகளவில் உள்ளன.
இதன் காரணமாக மலபார் அணில்கள் இங்கு சுற்றி திரிகின்றன. அவ்வப்போது வெளியில் வந்து சுற்றுலா பயணிகளுக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி செல்கின்றன.
சுற்றுலா பயணிகள் அணில்களை தங்கள் செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து கொள்கின்றனர்.
தற்போது, மலபார் அணில்கள், பூங்கா நுழைவு வாயில் முன்புள்ள பழக்கடைக்கு வந்து அங்கு வைத்திருக்க கூடிய பழங்களை ருசித்து செல்கிறது.
குறிப்பாக இங்கு பழக்கடை நடத்தி வரும் கமலா என்ற பெண்ணிடம் அவர் கடை திறக்கும் வரை காத்திருந்து அணிலுக்கு பிடித்த சீதா பழங்களை அவர் கைகளால் வாங்கி அணில்கள் ருசித்து செல்கின்றனர். இதுசுற்றுலா பயணிகளுக்கு ஆச்சரியத்தை கொடுத்து உள்ளது. அவர்கள் அதனை பார்த்து ரசித்து செல்கிறார்கள்.
- 13-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம்
- அன்றே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிப்பு
ஊட்டி,
ஊட்டி கோட்டாட்சியா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஊட்டி இளம் படுகா் சங்க நிா்வாக குழுவுக்கான தோ்தல் வருகிற 22-ந் தேதி நடக்க உள்ளது.
இதற்கான வேட்புமனு படிவங்கள் சங்க வளாகத்தில் உள்ள தோ்தல் அலுவலகத்தில் இதற்கென நியமனம் செய்யப்பட்ட அலுவலா் மற்றும் ஊட்டி மண்டல துணை தாசில்தாா் ஆகியோரிடமிருந்து நவம்பா் 9-ந் தேதி காலை 10 மணி முதல் 10-ந் தேதி மாலை 5 மணி வரை பெற்று கொள்ளலாம். இளம் படுகா் சங்கத்தில் நிா்வாகக் குழுவின் தலைவா், 2 துணைத் தலைவா்கள், செயலாளா், பொருளாளா், 6 நிா்வாகக் குழு உறுப்பினா்கள் ஆகிய 11 பதவிகளுக்கு தோ்தல் நடைபெற உள்ளது.
தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள், குறைந்த பட்சம் 2 ஆண்டுகள் சங்கத்தின் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும். ஒரு உறுப்பினா் ஒரு பதவிக்கு மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ய முடியும். வேட்பு மனுவுடன் ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டும். இது திரும்ப வழங்கப்படாது. 2011-2012-ம் நிதியாண்டின் இறுதி நாள் வரை சோ்ந்த உறுப்பினா்கள் மட்டுமே தோ்தலில் வாக்களிக்கலாம்.
பூா்த்தி செய்யப்பட்ட வேட்பு மனுக்களை வருகிற 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 3 மணிக்குள் இதற்காக நியமனம் செய்யப்பட்ட உதவி தோ்தல் அலுவலரிடம் வழங்க வேண்டும்.
இளம் படுகா் சங்க கட்டிடத்தில் வருகிற 22-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை தேர்தல் நடைபெறும். அன்றே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகளும் அறிவிக்கப்படும்.
தோ்தல் தொடா்பாக எழும் கோரிக்கைகள், முறையீடுகள் குறித்து தோ்தல் நடத்தும் அலுவலா் மற்றும் கோட்டாட்சியரின் முடிவே இறுதியானது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மாநில அளவிலான போட்டிக்கு தகுதிபெற்றனர்
- 7-ம் வார்டு நகர்மன்ற உறுப்பினர் விசாலாட்சி பங்கேற்பு
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் பெத்தலகம் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவிகள், மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில் பங்கேற்பதற்காக வெளியூருக்கு செல்கின்றனர்.
முன்னதாக அவர்கள் நீலகிரி எம்.பி ஆ.ராசாவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது மாவட்ட திட்டக்குழு உறுப்பினரும், 7-ம் வார்டு நகர்மன்ற உறுப்பிருமான விசாலாட்சி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.
- இணையம் மூலம் கையொப்பத்தை பதிவுசெய்தார்
- மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்பு
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் தி.மு.க சார்பில் நீட் விலக்கு கையெழுத்து இயக்கம் நடந்து வருகிறது. இதற்காக அவர்கள் மாவட்ட அளவில் பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் கழக துணை பொது செயலாளரும், நீலகிரி எம்.பி.யுமான ஆ.ராசா ஊட்டி முகாம் அலுவலகத்துக்கு வந்திருந்தார். அப்போது அவர் மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் முன்னிலையில் இணையம் மூலம் கையெழுத்தை பதிவுசெய்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், மாவட்ட பொருளாளர் நாசர்அலி, மாநில ஆதிதிராவிடர் நலகுழு துணைசெயலாளர் பொன்தோஸ், பொதுக்குழு உறுப்பினர்கள் சதகத்துல்லா, தொரை, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் இமயம் சசிகுமார், துணை அமைப்பாளர்கள் பாபு, நாகராஜ், கீழ்குந்தா பேரூர் செயலாளர் சதீஷ்குமார், மாணவரணி துணை அமைப்பாளர் ஜெகதீஷ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் தலைமையில் திரண்டு வந்தனர்
- பொன்னாடை அணிவித்து ஆசிபெற்றனர்
ஊட்டி,
நீலகிரி மாவட்ட அ.தி.மு.க.வில் புதிதாக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் அவர்கள் மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் தலைமையில் கோவைக்கு புறப்பட்டு வந்தனர்.
அங்கு அவர்கள் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து, பூங்கொத்துகள் வழங்கி வாழ்த்து பெற்றனர்.
இதில் முன்னாள் எம்.பி கே.ஆர்.அர்ஜுணன், மாநில இளைஞரணி இணைச் செயலாளர் பாலநந்தகுமார், பாசறை மாவட்டசெயலாளர் அக்கீம்பாபு, மாநில எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் தேனாடு லட்சுமணன், பொதுக்குழு உறுப்பினர் மாதன், குந்தா கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் ஆர்.எஸ்.வசந்தராஜன், இளைஞரணி மாவட்ட செயலாளர் குருமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- கடந்த சில நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
- மலை ரெயில் பாதையில் சரிந்து கிடக்கும் மண் மற்றும் மரங்களை அப்புறுப்படுத்தும் பணியை மேற்கொண்டனர்.
உலக பாரம்பரிய சின்னமான நூற்றாண்டு பழமை வாய்ந்த நீலகிரி மலைரெயில் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் ரெயில்நிலையத்தில் இருந்து ஊட்டிக்கு தினசரி இயக்கப்பட்டு வருகிறது.
உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளையும் இந்த மலைரெயில் பெரிதும் கவர்ந்து வருகிறது.
இம்மலை ரெயில் மழை காலங்களில் இதன் பாதையில் ஏற்படும் மண் சரிவுகளால் சரிவர இயங்க இயலாமல் அடிக்கடி தடைபட்டு நிற்கிறது.
கடந்த சில நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்றிரவும் பலத்த மழை பெய்தது.
இந்த மழைக்கு கல்லார் ரெயில் நிலையம் முதல் அடர்லி ரெயில் நிலையம் வரை பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு தண்டவாள பாதை புதைந்து போனது. மேலும் மரங்களும் சாய்ந்து தண்டவாளத்தில் விழுந்தன.
இதனால் இன்று காலை வழக்கம் போல் மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் இருந்து காலை 7.10 மணிக்கு குன்னூருக்கு சுற்றுலா பயணிகளுடன் புறப்பட வேண்டிய மலைரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.மேலும் மண் சரிவு ஏற்பட்டுள்ள பகுதியில் சீரமைப்பு பணியில் 20க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அவர்கள் மலை ரெயில் பாதையில் சரிந்து கிடக்கும் மண் மற்றும் மரங்களை அப்புறுப்படுத்தும் பணியை மேற்கொண்டனர்.
ரெயில் பாதையில் ஏற்பட்ட மண் சரிவுகள் இன்று மாலைக்குள் சீர் செய்யப்பட்டு நாளை வழக்கம் போல் மலைரயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- உரிய அனுமதியின்றி நில அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் புகார்கள் வருகிறது.
- நில அபிவிருத்தியாளர்கள் மீது நகர் ஊரமைப்பு சட்டம் 1971 பிரிவு 47ஏ, 56 மற்றும் 57-ன் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
ஊட்டி,
நீலகிரி மாவட்ட கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நீலகிரி மாவட்ட எல்லைக்குள் உரிய அனுமதியின்றி கட்டிடங்கள் கட்டப்பட்டு வருவதாகவும், விவசாய நிலங்களை அழித்து விவசாயம் அல்லாத நோக்கத்திற்காக அனுமதியற்ற முறையில் மனைப்பிரிவுகள் அமைக்கப்பட்டு வருவதாகவும், உரிய அனுமதியின்றி நில அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் புகார்கள் வருகிறது.
அந்த புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு விதிமீறல்கள் தெரியவரும் போது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
எனவே முறையான அனுமதி ஏதும் பெறப்படாமல் அமைக்கப்படும் மனைப்பிரிவுகளில் பொதுமக்கள் யாரும் மனைகளை வாங்கி ஏமாற வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறது
மேலும் பொதுமக்கள் யாரும் முறையான கட்டிட அனுமதி பெறப்படாமல் பணிகள் மேற்கொள்ளப்படும் பட்சத்தில் அனுமதியற்ற கட்டிடங்களை இடிக்கவோ அல்லது மூடி முத்திரையிடவோ தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் மலையிட கட்டிட விதிகள் 1993, தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998(திருத்தப்பட்டது 2022)ன் படி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் நில அபிவிருத்தியாளர்கள் மீது நகர் ஊரமைப்பு சட்டம் 1971 பிரிவு 47ஏ, 56 மற்றும் 57-ன் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
எனவே நீலகிரி மாவட்டத்தில் உரிய அனுமதியின்றி பொதுமக்கள் யாரும் கட்டிடம் கட்ட வேண்டாம் எனவும், மனைப்பிரிவு, நில அபிவிருத்தி பணிகள் மற்றும் அணுகுசாலை அமைக்கும் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- குன்னூர்-ஊட்டி சாலையை சீரமைப்பது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
- பெண்கள் உள்பட 32 பேரை போலீசார் கைது செய்தனர்.
அருவங்காடு,
நீலகிரிக்கு வரும் சுற்றுலா வாகனங்கள் குன்னூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக ஊட்டி செல்வது வழக்கம்.
ஆனால் இந்த ரோடு தற்போது வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது.
இதனால் வாகனங்கள் பழுது அடைவதுடன் போக்குவரத்து பாதிப்பும் ஏற்படுகிறது.
குன்னூர்-ஊட்டி சாலையை சீரமைப்பது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அமைப்பாளர் சுதாகர் தலைமையில், குன்னூர் லெவல்கிளாஸ் பகுதியில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.
அப்போது சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.தொடர்ந்து சாலைமறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட வி.சி.க நிர்வாகிகள் 32 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
- கூட்டத்தில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைத்துதுறை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
- கிராமசபை கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் அளித்தனர்.
அருவங்காடு,
குன்னூர் அருகே உள்ள பர்லியார் ஊராட்சி சார்பில் கோடமலை ஒசட்டி பகுதியில் கிராம சபை கூட்டம் நடந்தது. ஊராட்சி தலைவர் சுசீலா தலைமைதாங்கினார்.
துணைத்தலைவர் தீனதயாளன் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைத்துதுறை அதிகாரிகளும் கலந்துகொண்டனர். கிராமசபை கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் அளித்தனர். அவற்றை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பிவைத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென உறுதிஅளிக்கப்பட்டது.
மேலும் கூட்டத்தில் பங்கேற்ற தோட்டக்கலை துறை அதிகாரிகள் மங்குஸ்தான் உள்ளிட்ட 5 வகை பழக்கன்றுகள், தேயிலை நாற்றுகள் ஆகியவை விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும்.
ஒரு ஏக்கருக்கு மேல் உள்ள தேயிலை தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சுவதற்காக ஸ்பிங்லர் கருவி மற்றும் இயற்கை உரங்கள் வழங்கப்படும் என உறுதியளித்தனர்.
- பிளாஸ்டிக் பொருட்கள் இல்லாததை உறுதி செய்யும் பொருட்டு அனைத்து வாகனங்களும் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றன.
- தடையை மீறி தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவோர் மீது அதிகபட்ச அபராத தொகை விதிக்கப்படும்
ஊட்டி,
நீலகிரி மாவட்ட கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை ஐகோர்ட்டு 2019-ம் ஆண்டு மே மாதம் வெளியான தீர்ப்பில் நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள், பிளாஸ்டிக்கில் அடைக்கப்பட்டுள்ள குளிர்பானங்கள் மற்றும் பிளாஸ்டிக்கில் அடைக்கப்பட்டுள்ள உணவுப்பொருட்கள் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது.
அரசாணை நிலை எண் 84-ன்படி சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, 2018-ல் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கும் தமிழ்நாடு முழுவதும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதன் தொடர்ச்சியாக நீலகிரி மாவட்டத்தில் தொடர் பிளாஸ்டிக் ஒழிப்பு பணிகள் மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்சமயம், சென்னை ஐகோர்ட்டு உத்தரவின் அடிப்படையில், நீலகிரி மாவட்டத்திற்குள் நுழையும் அனைத்து அரசு மற்றும் தனியார் வாகனங்களில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இல்லாததை உறுதி செய்யும் பொருட்டு அனைத்து வாகனங்களும் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றன.
மேலும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் நீலகிரி மாவட்டத்திற்குள் பயன்படுத்துவதையும், விற்பனை செய்வதையும், கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டு, தொடர் கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தும், பயன்படுத்துவோர் மீது அபராதம் விதிக்கப்பட்டும் வருகிறது.
எனவே, அரசு மற்றும் சென்னை ஐகோர்ட்டின் அறிவுரைகளை முறையாக செயல்படுத்தும் பொருட்டு, நீலகிரி மாவட்டத்திற்குள் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை யாரும் கொண்டு வர வேண்டாம் எனவும், நீலகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வேண்டாம் எனவும் பொது மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். மேலும், நீலகிரி மாவட்டத்திற்கு வரும் அனைத்து வாகனங்களையும், மாவட்ட எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் நிறுத்தி பரிசோதனைக்கு உட்படுத்தி வரும்படி தெரிவிக்கப்படுகிறது.
மேலும், தடையை மீறி தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவோர் மீது அதிகபட்ச அபராத தொகை விதிக்கப்படும் எனவும், தடையையும் மீறி தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை உடனடியாக மூடி முத்திரையிடப்படும் எனவும் எச்சரிக்கப்படுகிறது.
மேற்கண்ட மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரைகளை பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் வியாபாரிகள் முழுவதுமாக பின்பற்றி நீலகிரி மாவட்டத்தினை தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இல்லா மாவட்டமாக மாற்ற ஒத்துழைப்பினை நல்க வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் அருணா கூறியுள்ளார்.
- கரோலினா பகுதியில் 150 அடி உயரத்தில் இருந்து திடீரென மண்சரிவு ஏற்பட்டது.
- அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை.
அருவங்காடு,
நீலகிரி மாவட்டம் குன்னூரில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது.இதனால் அங்குள்ள ஒரு சில இடங்களில் லேசான மண்சரிவு, மரங்கள் முறிந்து விழும் சம்பவங்கள் தொடர்கதையாக உள்ளது.
இந்த நிலையில் குன்னூர் உபதலை ஊராட்சிக்கு உட்பட்ட கரோலினா பகுதியில் 150 அடி உயரத்தில் இருந்து திடீரென மண்சரிவு ஏற்பட்டது.இதனால் அந்த வழியாக செல்லும் சாலை சேதமடைந்து உள்ளது. அங்கு கனரக வாகனங்கள் செல்லும்போது விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.
எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.






