என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    பேரிகை அருகே விவசாயி வீட்டில் நகை, பணம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை அடுத்த ஏ.செட்டிப்பள்ளியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 45). விவசாயி. நேற்று இவர் குடும்பத்தினருடன் தோட்டத்திற்கு சென்று வேலை செய்து கொண்டிருந்தார். பின்னர் மதியம் வீட்டிற்கு திரும்பிய வெங்கடேஷ் வீட்டின் கதவு திறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டிற்குள் சென்று பார்த்த போது மர்ம நபர்கள் பூட்டை உடைத்து பீரோவில் வைத்திருந்த 10 பவுன் தங்க நகை மற்றும் ரூ.2 லட்சம் ஆகியவற்றை திருடி சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் வெங்கடேஷ் வீட்டில் பொருத்தப்பட்டிருந்தகண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இது தொடர்பாக பேரிகை போலீசில் வெங்கடேஷ் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
    ஊத்தங்கரை அருகே ஆசிரியர் வீட்டில் நகை திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஊத்தங்கரை:

    ஊத்தங்கரை அருகே உள்ள திப்பம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 42). ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றார். அந்த நேரம் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள், வீட்டில் இருந்த 5¼ பவுன் தங்க நகைகளை திருடி சென்றனர். இது குறித்து ஆசிரியர் ரமேஷ் ஊத்தங்கரை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    காவேரிப்பட்டணம் அருகே வாகனம் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காவேரிப்பட்டணம்:

    தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 60). கூலித்தொழிலாளி. இவர் காவேரிப்பட்டணம்-சாப்பரம் சாலையில் தாசம்பட்டி என்ற இடத்தில் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவர் மீது மோதியது. இந்த விபத்தில், தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புகையிலை பொருட்கள் விற்ற 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போலீசார் தீவிர ரோந்து சென்றனர். அப்போது கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றதாக அரியனப்பள்ளி முரளி (45), ஜெகதேவி சம்பத் (60), பனங்காட்டூர் அரசு (33), நாகலிங்கம் (40), சேகர் (42) ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    கிருஷ்ணகிரி அருகே மோட்டார் சைக்கிள் மீது கன்டெய்னர் லாரி மோதி பெயிண்டர் பலியானார். அவருடைய நண்பர் படுகாயம் அடைந்தார்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரியை அடுத்த பாலகுறி கிராமத்தை சேர்ந்தவர் சஞ்சய்பிரசாந்த் (வயது 20). அதே ஊரை சேர்ந்தவர் அனித்குமார்(20). பெயிண்டர்களான இவர்கள் 2 பேரும் நண்பர்கள். இவர்கள் இருவரும் மோட்டார்சைக்கிளில் கிருஷ்ணகிரி-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் அவதானப்பட்டி அருகே சென்று கொண்டிருந்தனர். மோட்டார்சைக்கிளை சஞ்சய்பிராசந்த் ஓட்டி சென்றார். பின்னால், அனித்குமார் அமர்ந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது பின்னால் வந்த கன்டெய்னர் லாரி, மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சஞ்சய்பிரசாந்த் தலையில் அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். அனித்குமார் படுகாயம் அடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கிருஷ்ணகிரி டேம் போலீசார் விரைந்து வந்து இறந்த சஞ்சய்பிரசாந்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கணேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ராயக்கோட்டை அருகே ஆண் யானை மர்மமான முறையில் செத்து கிடந்தது. இது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ராயக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் யானை உள்பட மொத்தம் 3 யானைகள் உணவுக்காக சுற்றித்திரிந்தன. அவை ராயக்கோட்டை அருகே ஊடேதுர்க்கம் வனப்பகுதியில் முகாமிட்டிருந்தன.

    இதில் 35 வயதுடைய ஆண் யானை உணவுக்காக வனப்பகுதியில் இருந்து நேற்று முன்தினம் வெளியேறியது. அந்த யானை அருகில் உள்ள யு.புரம் கிராமத்தில் விளை நிலங்களுக்குள் சென்று பயிர்களை தின்றது. நேற்று அதிகாலை அந்த யானை மீண்டும் வனப்பகுதிக்கு திரும்பி சென்றது.

    இந்த நிலையில் நேற்று காலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் விளை நிலத்தில் ஆண் யானை செத்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள், இதுகுறித்து ராயக்கோட்டை வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினார்கள்.

    யானைக்கு காது பகுதியில் காயம் ஒன்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து வனத்துறையினர், கால்நடை மருத்துவ குழுவினர் மூலம் யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்து வனப்பகுதியில் குழி தோண்டி புதைத்தனர். இந்த பிரேத பரிசோதனையின் முடிவிலேயே யானை எப்படி இறந்தது என தெரிய வரும் என வனத்துறையினர் தெரிவித்தனர். யானையை யாரேனும் துப்பாக்கியால் சுட்டார்களா?, அல்லது விஷ காய்களை தின்று இறந்ததா? என வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கடந்த 3-ந்தேதி ஜவளகிரி வனச்சரகத்தில் பெண் குட்டி யானை ஒன்று இறந்து கிடந்தது. விசாரணையில் அது துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார். அதன் தொடர்ச்சியாக இந்த மாதத்தில் 2-வதாக யானை இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    கட்டிட மேஸ்திரி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    ஊத்தங்கரை: 

    கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி அருகே உள்ள முக்கரம்பள்ளியை சேர்ந்தவர் திருப்பதி (வயது 27). கட்டிட மேஸ்திரி. இவருக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிறது. இவருடைய மனைவி ஊர்மிளா. இவர் 6 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் திருப்பதி பெற்றோருடன் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திருப்பதி வீட்டுக்கு வெளியில் படுத்து தூங்கிக்கொண்டு இருந்தார். பெற்றோர் மற்றும் சகோதரி ஆகியோர் வீட்டின் உள்ளே படுத்திருந்தனர். அப்போது மர்ம நபர்கள் சிலர் அங்கு வந்து திருப்பதியை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். அவருடைய அலறல் சத்தம் கேட்டு குடும்பத்தினர் எழுந்து வெளியே வந்தனர். இதைக்கண்ட மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். சிறிது நேரத்தில் திருப்பதி துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த சாமல்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்தமிழ்செல்வன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று திருப்பதியின் பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் கொலை செய்யப்பட்ட திருப்பதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கட்டிட மேஸ்திரி திருப்பதி தொழில் போட்டி காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து சாமல்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கட்டிட மேஸ்திரி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
    மத்தூர் அருகே பெண்ணிடம் நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மத்தூர்:

    மத்தூர் அருகே உள்ள கூச்சூரை சேர்ந்தவர் சிந்தாமணி (வயது 60). சம்பவத்தன்று அவர் மாடரஅள்ளி ராஜீவ் நகர் பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அந்த வழியாக 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ஸ்கூட்டரில் வந்தார். அவர் முகவரி கேட்பது போல சிந்தாமணியிடம் பேச்சு கொடுத்தார். திடீரென்று அவர் அணிந்திருந்த 3½ பவுன் நகையை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் சென்று விட்டார். இது குறித்த புகாரின்பேரில் மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தேன்கனிக்கோட்டை அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தேன்கனிக்கோட்டை: 

     தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கண்டகானப்பள்ளியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 55). கூலித்தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம்  இருந்தது. இதனை அவருடைய மனைவி கண்டித்ததால் மனமுடைந்த சீனிவாசன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து  தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    வவ்வால்கள் இருப்பதால்தான் தங்களது கிராமம் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக இருப்பதாக கிருஷ்ணகிரியில் உள்ள கிராம மக்கள் கருதுகின்றனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், பாகலூர் அருகே கொளதாசபுரம் என்ற கிராமம் உள்ளது. அங்கு சுமார் 500 பேர் வசித்து வருகிறார்கள். கிராமத்தின் மைய பகுதியில் ஏரி ஒன்று அமைந்துள்ளது. இதன் கரையோரத்தில் மா மரங்கள் உள்ளன. 

    இதில் நூற்றுக்கணக்கான வவ்வால்கள் வாழ்ந்து வருகின்றன. வவ்வால்கள் இருப்பதால்தான் தங்களது கிராமம் நோய்நொடியின்றி ஆரோக்கியமாக இருப்பதாக கருதும் கொளதாசபுரம் மக்கள், வெகுகாலமாக வவ்வால்களை துன்புறுத்தாமல் நேசித்துக் கொண்டிருக்கிறார்கள். வவ்வால்களும் கிராமத்திற்குள் சென்று மக்களுக்கு தொந்தரவு கொடுப்பதில்லை.

    இப்படி மனிதர்களுக்கும், வவ்வால்களுக்கும் ஏற்பட்ட நெருக்கத்தின் பலனாக தீபாவளி நாட்களில் கொளதாசபுரம் கிராம மக்கள் வவ்வால்களை பயமுறுத்தும் வகையில் பட்டாசு வெடிப்பதில்லை. மேலும் வவ்வால்களுக்கு தொந்தரவு கொடுக்கக் கூடாது என்பதற்காக மா மரங்களில் ஏறி மாங்கனிகளையும் பறிப்பதில்லை. 

    மேலும், அதே மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி தாலுகாக்களில் வனப்பகுதியையொட்டி உள்ள உரிகம், தொட்டமஞ்சி போன்ற கிராம மக்களும் பட்டாசு வெடிப்பதை தவிர்த்து வருகிறார்கள். வன விலங்குகள் மிரண்டு ஓடும் என்பதால் பட்டாசு வெடிப்பதைத் தவிர்த்து எளிமையாக தீபாவளியை கொண்டாடுகிறார்கள்.
    பர்கூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதியதில் பெங்களூருவை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலியானார்கள்.
    பர்கூர்:

    கர்நாடக மாநிலம் பெங்களூரு மெஜஸ்டிக் லட்சுமணபுரி பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாத். இவரது மகன் பால் எபினேசர் (வயது 22). இவரது நண்பர்கள் பெங்களூரு கத்ரகுப்பே பகுதியை சேர்ந்த பாபு (20), புனித்பாபு (18). இவர்கள் அனைவரும் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தனர்.

    இவர்களது மற்றொரு நண்பரான காட்டன்பேட் பகுதியில் உள்ள பிரிண்டிங் பிரசில் வேலை செய்யும் லட்சுமணபுரியை சேர்ந்த கமலேசன்(19) என 4 பேரும் 2 மோட்டார் சைக்கிள்களில் சென்னையில் உள்ள பால் எபினேசரின் உறவினர் பிறந்தநாள் விழாவில் பங்கேற்க நேற்று முன்தினம் இரவு 12.30 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்பட்டனர்.

    பால் எபினேசர், பாபு ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளிலும், புனித்பாபு, கமலேசன் ஆகியோர் மற்றொரு மோட்டார் சைக்கிளிலும் சென்று கொண்டிருந்தனர். கிருஷ்ணகிரி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணகிரி அடுத்த ஒரப்பம் அருகே உள்ள வெத்தலைதோட்டம் என்ற பகுதியில் நேற்று முன்தினம் அதிகாலை 2.30 மணி அளவில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது பால் எபினேசர், பாபு சென்ற மோட்டார் சைக்கிளின் மீது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்கள். இதுகுறித்து தகவல் அறிந்ததும் பர்கூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல், கந்திகுப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி, சப்-இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவிகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தினால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இந்த விபத்து குறித்து கந்திகுப்பம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை ஓட்டி வந்த டிரைவர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஊத்தங்கரை அருகே கட்டிட தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஊத்தங்கரை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், சாமல்பட்டி அடுத்துள்ள முக்காரம் பள்ளி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மகன் திருப்பதி (வயது 27). இவருக்கு கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு ஊர்மிலா என்ற பெண்ணுடன் திருமணம் ஆனது. பின்னர் அவரது மனைவி ஊர்மிலா ஒரு வருடத்திற்கு முன்பு இறந்து விட்டார்.

    இந்த நிலையில் தனியாக இருந்து வந்த திருப்பதி கட்டிட வேலைக்காக திருப்பூர், சேலம் போன்ற இடங்களில் வேலை செய்து வந்துள்ளார்.

    கடந்த 4 நாட்களுக்கு முன்பு இவர் சொந்த ஊரான கிருஷ்ணகிரி மாவட்டம், முக்காரம் பள்ளி பகுதிக்கு வந்துள்ளார். அங்கு நேற்று இரவு கழுத்து அறுக்கப்பட்டு மர்மமான முறையில் திருப்பதி இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து சாமல்பட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    அப்போது கழுத்து அறுக்கப்பட்டு இறந்த நிலையில் கிடந்த திருப்பதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக போலீசார் முதற்கட்ட விசாரணையில் நடத்தியதில் கள்ளத்தொடர்பு காரணமாக திருப்பதி கொலை செய்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×