என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    கெலமங்கலம் அருகே வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சிமருந்து குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
    ராயக்கோட்டை:

    கெலமங்கலத்தை அடுத்த தொட்டபேளூர் ஊராட்சி குட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 38). விவசாயி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். ரமேசுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. இதையடுத்து அவரிடம் குடும்பத்தில் உள்ளவர்கள் குடிப்பழக்கத்தை நிறுத்த சொல்லி வற்புறுத்தியதால் குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டார். 

    இந்தநிலையில் வீட்டில் யாரும் இல்லாதபோது பூச்சிமருந்து குடித்து விட்டார். இதையடுத்து அவருக்கு கெலமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதல் உதவி சிகிச்சை அளித்து மேல்சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனையிலும், பின்னர் தனியார் மருத்துவமனையிலும் சேர்த்து சிகிச்சை அளித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். 

    இதுகுறித்து அவரது தந்தை கிருஷ்ணன் கெலமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் கமலேசன் விசாரணை நடத்தி வருகிறார்.
    கிருஷ்ணகிரியில் கோரிக்கைகளை வலியுறுத்தி 2-வது நாளாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 168 பேரை போலீசார் கைது செய்தனர்.
    கிருஷ்ணகிரி:

    தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணாசிலை எதிரில், தொடர் மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்டம் நேற்று இரண்டாவது நாளாக நடந்தது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சந்திரன் தலைமை தாங்கினார்.

    மாவட்ட செயலாளர் நடராஜன் கோரிக்கை குறித்து விளக்கி பேசினார். மேலும் நிர்வாகிகள் கோபாலகிருஷ்ணன், முருகன், கோவிந்தராஜ், கல்யாணசுந்தரம், தேவராஜ், சிவா உள்ளிட்டோர் பேசினார்கள்.

    இதில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். 2019-ல் ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்றதற்காக சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்ட 5,068 பேர் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும். கொரோனாவை காரணம் காட்டி பறிக்கப்பட்ட அகவிலைப்படி, சரண்டர் உள்ளிட்ட உரிமைகளை பெற்றிட வேண்டும். அரசுத் துறையில் உள்ள 4.5 லட்சத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும். சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்கக் காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி ஊழியர்களை அரசு ஊழியர்களாக்கி கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும். 21 மாத ஊதிய நிலுவையை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். இதைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டதாக 86 பெண்கள் உள்பட 168 பேரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

    மத்தூர் அருகே விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் சின்னகசிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 19). இவர், தனது நண்பர் சுரேஷ் (19) என்பவருடன் வேலம்பட்டியில் நடைபெற்ற எருதுவிடும் திருவிழாவை காண வந்தார். பின்னர் அவர்கள் 2 பேரும்  வீடு திரும்பினர். கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே மூக்காகவுண்டனூர் பகுதியில் சென்றபோது சாலையோரம் இருந்த ஒரு கிணற்றின் தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் அருண்குமார் கிணற்றில் தூக்கி வீசுப்பட்டு தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் போச்சம்பள்ளி தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து அருண்குமாரின் உடலை மீட்டனர். தடுப்புச்சுவரில் மோதியதில் சுரேஷ் படுகாயம் அடைந்தார். அவர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
    ஓசூர் அருகே அரசு பஸ் மோதி குரங்கு பலியான சம்பவம் குறித்து கர்நாடக டிரைவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    ஓசூர்:

    தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் இருந்து கர்நாடகா மாநிலம் பெங்களூருக்கு அம்மாநில அரசு பஸ் நேற்றுமுன்தினம் இரவு புறப்பட்டது. பஸ்சை கனகபுராவை சேர்ந்த ஆனந்த் (வயது 28) என்பவர் ஓட்டினார்.

    பிலிகுண்டுலு அருகே பஸ்சை நிறுத்தி விட்டு வனப்பகுதி சாலையோரம் நின்ற குரங்குகளுக்கு டிரைவர் ஆனந்த் பழங்களை கொடுத்தார். பின்னர் பஸ்சை எடுத்த போது, பஸ்சில் அடிபட்டு 3 வயதான பெண் குரங்கு பரிதாபமாக இறந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்த அஞ்செட்டி வனச்சரகர் சீத்தாராமன் தலைமையிலான வனத்துறையினர் கர்நாடக மாநில பஸ்சை பறிமுதல் செய்தனர். இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் மாற்று பஸ்சில் ஏற்றி அனுப்பப்பட்டனர்.

    இதைத்தொடர்ந்து பஸ் டிரைவர் ஆனந்த் மீது வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின்படி அஞ்செட்டி வனத்துறை மூலம் குற்ற வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் டிரைவர் ஆனந்த்துக்கு ரூ.7 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அபராத தொகை செலுத்தியதால் பஸ் விடுவிக்கப்பட்டது.

    இதைதொடர்ந்து பஸ்சில் அடிபட்டி பலியான குரங்கின் உடலை அஞ்செட்டி வனச்சரக அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

    பெங்களூருவுக்கு சுற்றுலா சென்றபோது காவேரிப்பட்டணம் அருகே நின்று கொண்டிருந்த பஸ் மீது ஆம்னி வேன் மோதியதில் 6 பேர் பலியானார்கள்.
    காவேரிப்பட்டணம்:

    ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 24). இவரும், பவானி காமாட்சியம்மன் கோவில் பின்புறம் உள்ள திருநீலகண்டன் வீதியை சேர்ந்த திருத்தனிவாசன் மகன் லிங்கா என்கிற விக்னேஷ் (24), பவானி சீனிவாசபுரம் கல் தொழிலாளர் வீதியை சேர்ந்த கண்ணன் மகன் பிரசாந்த் (21), ராஜா மகன் சுரேந்தர் (22), பவானி சீனிவாசபுரம் ஜோதி விநாயகர் கோவில் வீதியை சேர்ந்த மணிகண்டன் மகன் கவுதம் (20), பவானியை சேர்ந்த பரணி (23), அசோக் (18) ஆகிய 7 பேரும் ஒரு ஆம்னி வேனில் நேற்று நள்ளிரவு பவானியில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு சுற்றுலா சென்றனர்.

    அவர்கள் சென்ற வேனை சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள வெள்ளரிவெள்ளி கிராமத்தைச் சேர்ந்த பூபதி (25) என்பவர் ஓட்டிச் சென்றார். அந்த வேன் நேற்று அதிகாலை 4 மணி அளவில் கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே திம்மாபுரம் கூட்டுரோடு பக்கமாக சென்று கொண்டிருந்தது.

    அந்த நேரம், சேலத்தில் இருந்து பெங்களூரு நோக்கி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சை டிரைவர் சாலையோரமாக நிறுத்தி பயணிகளை இயற்கை உபாதைக்கு சென்று வர அனுமதித்தார். 

    இதனால் பஸ்சில் பயணம் செய்த ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தை சேர்ந்த தேவராஜ் (29) என்பவர் பஸ்சின் பின்புறமாக தர்மபுரி-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையை கடந்து எதிர் 
    திசைக்கு செல்ல முயன்றார்.

    அப்போது ஆம்னி வேன் நிலைதடுமாறி, தேவராஜ் மீது மோதி விட்டு சாலையோரம் நின்ற பஸ்சின் பின்புறமாக பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் வேன் அப்பளம் போல நொறுங்கியது. 

    மேலும் இடிபாடுகளில் சிக்கி டிரைவர் பூபதி மற்றும் சுற்றுலா பயணிகள் சிவக்குமார், லிங்கா என்கிற விக்னேஷ், சுரேந்தர், பிரசாந்த் மற்றும் சாலையை கடந்த பயணி தேவராஜ் ஆகிய 6 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

    மேலும் வேனில் வந்த கவுதம், பரணி, அசோக் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அவர்கள் விபத்து குறித்து காவேரிப்பட்டணம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் கிருஷ்ணகிரி துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், காவேரிப்பட்டணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம், சப்-இன்ஸ்பெக்டர் அறிவழகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    அவர்கள் விபத்தில் படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பலியான 6 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து குறித்து கிருஷ்ணகிரி துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். விபத்து காரணமாக அந்த பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    காவேரிப்பட்டணத்தில் அரசு பஸ் மீது ஆம்னி வேன் மோதிய விபத்தில் 6 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    ஓசூரில், தமிழ் தேச குடியரசு இயக்கம் சார்பில், பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    ஓசூர்:

    ஓசூரில், தமிழ் தேச குடியரசு இயக்கம் சார்பில், பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஓசூர் ராம்நகர் அண்ணா சிலையருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்பின் மைய பொறுப்பாளர் தமிழரசன் தலைமை தாங்கினார். ராமமூர்த்தி வரவேற்றார். 

    இதில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஓசூர் தொகுதி செயலாளர் ராமச்சந்திரன், மாவட்ட தி.க. தலைவர் வனவேந்தன், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாவட்ட தலைவர் முகமது கலீல், எஸ்.டி.பி.ஐ. கட்சி மாவட்ட துணைத்தலைவர் ஷாநவாஸ் உள்பட பலர் பேசினார்கள். முடிவில், விக்னேஷ் நன்றி கூறினார்.

    வாகனம் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராயக்கோட்டை:

    கெலமங்கலம் அண்ணா நகரை சேர்ந்தவர் நவீன்குமார் (வயது 29). மருந்து கடையில் ஊழியராக வேலை செய்து வந்தார். நேற்று இரவு வேலை முடிந்து அவர் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார். மஞ்சளகிரி என்ற இடத்தில் சென்ற போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத ஒரு வாகனம், மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு சென்று விட்டது. இதில் படுகாயம் அடைந்த நவீன்குமார் சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த விபத்து குறித்து ராயக்கோட்டை இன்ஸ்பெக்டர் கமலேசன், கெலமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்தீபன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் இறந்த நவீன்குமாருக்கு அஸ்வினி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
    அ.தி.மு.க.வில் சேருவதற்கு டி.டி.வி. தினகரன் மன்னிப்பு கடிதம் கொடுத்தால் பரிசீலனை செய்யப்படும் என்று கே.பி.முனுசாமி தெரிவித்தார்.
    கிருஷ்ணகிரி:

    அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி எம்.பி. கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கட்சியில் இல்லாத சசிகலா அ.தி.மு.க. கொடியை அவர் சென்ற காரில் பயன்படுத்தி இருப்பது கண்டனத்திற்கு உரியது. அ.தி.மு.க.வில் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா மட்டுமே என முடிவு செய்யப்பட்டு சட்ட திட்டங்கள் மாற்றப்பட்டு, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்கிற பதவியை உருவாக்கி செயற்குழு, பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இந்த இயக்கம் செயல்பட்டு வருகிறது.

    ஆகையால் பொதுச்செயலாளர் ஜெயலலிதா மட்டும் தான். மற்றவர்கள் அவர்களின் சுய நலத்திற்காக கருத்துக்களை கூறுகிறார்கள். அதை ஏற்றுக்கொள்ள முடியாது. டி.டி.வி.தினகரன் பல்வேறு கோணங்களில் இந்த கட்சியை கைப்பற்ற முயற்சி செய்து பார்த்தார். தர்மமும், நியாயமும் உண்மையானவர்கள் பக்கம் உள்ளது. ஜெயலலிதாவால் 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்சியை விட்டு வெளியேற்றப்பட்ட நபர் இந்த கட்சியை கைப்பற்றுவோம் என சொல்வது கேலிக்குரியது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து அவரிடம் கேட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி:- சசிகலாவை ஏன் கட்சியில் இருந்து நீக்கவில்லை?

    பதில்:- அ.தி.மு.க.வில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு உறுப்பினர்கள் புதுப்பித்தபோது, அதில் சசிகலா தன்னை புதுப்பித்து உறுப்பினராக இணைத்துக் கொள்ளவில்லை. அப்படி கட்சியில் இல்லாத சசிகலாவை எப்படி நீக்க முடியும்.

    கேள்வி:- அ.தி.மு.க.வில், அ.ம.மு.க. இணைக்கப்படுமா?

    பதில்:- டி.டி.வி. தினகரன் தனிப்பட்ட முறையில் அரசியல் செய்வதற்காக தொடங்கப்பட்டது அ.ம.மு.க.. அப்படிப்பட்ட ஒரு கட்சியை இணைப்பதற்கு வாய்ப்பு இல்லை. வேண்டும் என்றால் டி.டி.வி. தினகரன், அ.தி.மு.க.வுக்கு எதிராக செய்த தவறுகளை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கடிதம் கொடுத்து தன்னை அ.தி.மு.க.வில் இணைக்க கோரினால்அ.தி.மு.க. தலைமை அக்கடிதம் தொடர்பாக பரிசீலனை செய்யும்.

    அப்படி பரிசீலனையின் அடிப்படையில் அவரை ஏற்றுக் கொள்வதாக முடிவெடுத்தால் ஏற்றுக்கொள்ளலாம். அவர் கட்சியில் சேருவதற்கு தகுதியில்லாத நபர் என்றால் அவரின் மன்னிப்பு கடிதம் குப்பைத்தொட்டிக்கு சென்று விடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    கிருஷ்ணகிரி அருகே சாலையோரம் நின்றிருந்த பேருந்து மீது வேன் மோதிய விபத்தில் 6 பேர் பலியாகினர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி அருகே காவிரிப்பட்டணம் என்ற இடத்தில் சாலையோரம் நின்ற அரசு பேருந்து மீது வேன் மோதியது.

    இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். உயிரிழந்த அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

    தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், இறந்தவர்கள் உடலை மீட்டு விசாரணைநடத்தி வருகின்றனர்.
    சிங்காரப்பேட்டை அருகே எல்ஐசி முகவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஊத்தங்கரை:

    சிங்காரப்பேட்டை அருகே உள்ள பெரியதள்ளப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 45). எல்.ஐ.சி. முகவர். இவர் தனது குடும்ப செலவிற்காக பலரிடம் கடன் பெற்றார். போதிய வருமானம் இன்றி பணத்தை அவர்களுக்கு சுப்பிரமணி திரும்ப கொடுக்க முடியவில்லை. இதையடுத்து கடன் கொடுத்தவர்கள் அவரிடம் பணத்தை திரும்ப கேட்டு வந்தனர். இதனால் மனமுடைந்த சுப்பிரமணி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சிங்காரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கிருஷ்ணகிரியில் ஆட்டோ டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரியில் சென்னை சாலையில் ஆட்டோ ஸ்டேண்டு உள்ளது. இந்த ஸ்டேண்டு சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. தற்போது சாலையின் நடுவில் தடுப்புச்சுவர் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதனால் ஆட்டோ ஸ்டேண்டை மாரியம்மன் கோவில் அருகில் மாற்றி கொள்ளுமாறு கூறியதாக தெரிகிறது. இதற்கு ஆட்டோ டிரைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினார்கள். இது குறித்து அவர்கள் கூறுகையில், நாங்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பகுதியில் ஆட்டோ ஸ்டேண்டு வைத்துள்ளோம். எங்களால் போக்குவரத்துக்கு எந்த இடையூறும் இல்லை. ஆனால் சென்னை சாலையில் உள்ள பஸ் நிறுத்தத்தில் நிறுத்தப்படும் பஸ்கள் பயணிகளை ஏற்றிச் செல்ல சுமார் 15 நிமிடங்கள் நிற்கின்றன. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுகிறது. எனவே இந்த பகுதியில் பஸ்கள் உடனடியாக நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஆட்டோ ஸ்டேண்டை தொடர்ந்து இதே இடத்தில் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர். ஆட்டோ டிரைவர்களை போலீசார் சமாதானம் செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.
    பணம் வைத்து சூதாடிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராயக்கோட்டை:

    கெலமங்கலம் போலீசார் முதுகானப்பள்ளி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த தளி வேலு (வயது 29), டி.கொத்தூர் குபேந்திரன் (33), அலேநத்தம் ரங்கப்பா (33), அரசகுப்பம் சுதாகர்ரெட்டி (30) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
    ×