என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேபி முனுசாமி
    X
    கேபி முனுசாமி

    அதிமுகவில் சேருவதற்கு டிடிவி தினகரன் மன்னிப்பு கடிதம் கொடுத்தால் பரிசீலனை செய்யப்படும்- கே.பி.முனுசாமி

    அ.தி.மு.க.வில் சேருவதற்கு டி.டி.வி. தினகரன் மன்னிப்பு கடிதம் கொடுத்தால் பரிசீலனை செய்யப்படும் என்று கே.பி.முனுசாமி தெரிவித்தார்.
    கிருஷ்ணகிரி:

    அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி எம்.பி. கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கட்சியில் இல்லாத சசிகலா அ.தி.மு.க. கொடியை அவர் சென்ற காரில் பயன்படுத்தி இருப்பது கண்டனத்திற்கு உரியது. அ.தி.மு.க.வில் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா மட்டுமே என முடிவு செய்யப்பட்டு சட்ட திட்டங்கள் மாற்றப்பட்டு, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்கிற பதவியை உருவாக்கி செயற்குழு, பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இந்த இயக்கம் செயல்பட்டு வருகிறது.

    ஆகையால் பொதுச்செயலாளர் ஜெயலலிதா மட்டும் தான். மற்றவர்கள் அவர்களின் சுய நலத்திற்காக கருத்துக்களை கூறுகிறார்கள். அதை ஏற்றுக்கொள்ள முடியாது. டி.டி.வி.தினகரன் பல்வேறு கோணங்களில் இந்த கட்சியை கைப்பற்ற முயற்சி செய்து பார்த்தார். தர்மமும், நியாயமும் உண்மையானவர்கள் பக்கம் உள்ளது. ஜெயலலிதாவால் 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்சியை விட்டு வெளியேற்றப்பட்ட நபர் இந்த கட்சியை கைப்பற்றுவோம் என சொல்வது கேலிக்குரியது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து அவரிடம் கேட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி:- சசிகலாவை ஏன் கட்சியில் இருந்து நீக்கவில்லை?

    பதில்:- அ.தி.மு.க.வில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு உறுப்பினர்கள் புதுப்பித்தபோது, அதில் சசிகலா தன்னை புதுப்பித்து உறுப்பினராக இணைத்துக் கொள்ளவில்லை. அப்படி கட்சியில் இல்லாத சசிகலாவை எப்படி நீக்க முடியும்.

    கேள்வி:- அ.தி.மு.க.வில், அ.ம.மு.க. இணைக்கப்படுமா?

    பதில்:- டி.டி.வி. தினகரன் தனிப்பட்ட முறையில் அரசியல் செய்வதற்காக தொடங்கப்பட்டது அ.ம.மு.க.. அப்படிப்பட்ட ஒரு கட்சியை இணைப்பதற்கு வாய்ப்பு இல்லை. வேண்டும் என்றால் டி.டி.வி. தினகரன், அ.தி.மு.க.வுக்கு எதிராக செய்த தவறுகளை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கடிதம் கொடுத்து தன்னை அ.தி.மு.க.வில் இணைக்க கோரினால்அ.தி.மு.க. தலைமை அக்கடிதம் தொடர்பாக பரிசீலனை செய்யும்.

    அப்படி பரிசீலனையின் அடிப்படையில் அவரை ஏற்றுக் கொள்வதாக முடிவெடுத்தால் ஏற்றுக்கொள்ளலாம். அவர் கட்சியில் சேருவதற்கு தகுதியில்லாத நபர் என்றால் அவரின் மன்னிப்பு கடிதம் குப்பைத்தொட்டிக்கு சென்று விடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×