என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    • செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதால் வரதராஜபுரம் பகுதிகளில் அதிகளவு தண்ணீர் தேங்குகிறது.
    • காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஓரத்தூர் ஏரியில் நீர் திறனை உயர்த்தி 4 டி.எம்.சி. தண்ணீர் தேக்க வேண்டும்.

    மிச்சாங் புயல் காரணமாக தாம்பரத்தை அடுத்த முடிச்சூர் வரதராஜபுரம் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

    மத்திய குழுவிடம் வரதராஜபுரம் நலமன்றங்களின் கூட்டமைப்பினர் கோரிக்கை மனுவை கொடுத்துள்ளனர். அதில் வெள்ளத்தை தடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி குறிப்பிட்டுள்ளனர்.

    2015-ம் ஆண்டு பெய்த கனமழை மற்றும் வெள்ளத்திற்கு பிறகு மாநில அரசு மாவட்ட நிர்வாகம் நீர் வழித்துறை அடையாறு ஆற்றை அகலப்படுத்துவது கரைகளை பலப்படுத்துவது, மதகுகள் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தன. ஆனாலும் வெள்ள சேதத்தை முழுமையாக தடுக்க முடியவில்லை.

    எதிர்காலத்தில் வெள்ள பாதிப்புகள் ஏற்படாத வகையில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உங்களிடம் தெரிவித்து கொள்கிறோம்.

    அடையாறு ஆறு மற்றும் கரைகளை ஆண்டுதோறும் தூர்வார வேண்டும். அடையாறு ஆற்றை 10 அடி உயரமும், 16 அடி அகலமும் கொண்டதாக அமைக்க வேண்டும். அடையாறு ஆற்றின் இருபுறமும் ஒரு சில இடங்களில் மட்டும் தடுப்புச் சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    ஆற்று பகுதி அனைத்து இருபுறத்திலும் தடுப்புச் சுவர்கள் அமைக்க வேண் டும். தற்போதுள்ள தடுப்பு சுவர் உயரத்தில் இருந்து கூடுதலாக 4 அடி உயரத்தில் கட்டப்பட வேண்டும். மழைக்காலங்களில் ராட்சத மோட்டார் பம்புகள் அமைத்து குடியிருப்பு பகுதிகளில் இருந்து மழைநீரை ஆற்றில் விட வேண்டும்.

    செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதால் வரதராஜபுரம் பகுதிகளில் அதிகளவு தண்ணீர் தேங்குகிறது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் அடையாறு ஆற்றில் விடுவ தற்கு பதிலாக முட்டுக்காடு வழியாக கடலுக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்.

    செம்பரம்பாக்கம் ஏரியை 4 அடிக்கு குறையாமல் தூர்வார வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் தூர்வார வேண்டும். இதனால் ஏரியின் கொள்ளளவு அதிகரிக்கும். அதிகபடியாக தண்ணீர் வெளியேற்றத்தை தடுத்தும் அடையாற்றின் மேல் வெளிவட்ட சாலையில் கட்டப்பட்ட பாலம் அகலம் குறைவாக உள்ளதால் ராயப்பா நகர் பகுதியில் வெள்ளம் ஏற்படுகிறது.

    எனவே ராயப்பா நகரில் கூடுதல் பாலம் அமைக்க வேண்டும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஓரத்தூர் ஏரியில் நீர் திறனை உயர்த்தி 4 டி.எம்.சி. தண்ணீர் தேக்க வேண்டும்.

    கடந்த காலங்களில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் சாலைகள் சேதமடைந்துள்ள வரதராஜபுரம் பகுதி முழுவதும் தரமான சாலைகள் அமைக்க வேண்டும்.

    அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், குடியிருப்போர் நல சங்கங்கள் உள்ளிட்டோர் அடங்கிய ஒரு சிறப்பு சுற்றுச்சூழல் மற்றும் நீர் மேலாண்மை குழுவை காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைக்க வேண்டும். இதற்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்து வெள்ளத்தை தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.

    • ஏரியின் மதகு அருகே கரையில் திடீரென உடைப்பு ஏற்பட்டது.
    • ஏரி நீர் வீடுகளுக்குள் புகுந்ததால் பொருட்கள் அனைத்தும் சேதம் அடைந்தன.

    ஸ்ரீபெரும்புதூர்:

    மிச்சாங் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் ஏரி, குளங்கள் முழுவதும் நிரம்பி உள்ளன. சோமங்கலம் அடுத்த நடுவீரப்பட்டு பகுதியில் உள்ள ஏரியும் முழு அளவில் நிரம்பி காணப்பட்டது.

    இந்த ஏரியின் மதகு பகுதி சேதம் அடைந்து இருந்ததால் பாதுகாப்புக்காக மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் ஏரியின் மதகு அருகே கரையில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதனால் ஏரியில் இருந்த தண்ணீர் சீறிப்பாய்ந்து வெளியேறியது. இந்த தண்ணீர் நடுவீரப்பட்டு, திருவஞ்சேரி கிராமங்களுக்குள் பாய்ந்தது. அதிகாலை நேரம் என்பதால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்த பின்னரே வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்து வெளியே வந்தனர். அப்போது கிராமம் முழுவதும் ஏரி தண்ணீர் புகுந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதைத்தொடர்ந்து 2 கிராமங்களில் இருந்தவர்களும் பாதுகாப்பாக வெளியேறினர். அவர்கள் அங்குள்ள அரசு பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். திடீரென ஏரி நீர் வீடுகளுக்குள் புகுந்ததால் பொருட்கள் அனைத்தும் சேதம் அடைந்தன. சுமார் 300-க்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்து உள்ளது.

    தகவல் அறிந்ததும் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன், அமைச்சர் தா.மோ. அன்பரசன் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்தனர். உடனடியாக ஏரியின் உடைந்த கரையில் மணல் மூட்டைகள் அடுக்கி சரிசெய்யப்பட்டது. எனினும் ஏரியில் இருந்த சுமார் 50 சதவீத தண்ணீர் வெளியேறி விட்டது. இந்த ஏரி சுமார் 175 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. சுற்றி உள்ள கிராமங்களுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக நடுவீரப்பட்டு ஏரி இருந்தது. இந்த நிலையில் ஏரிக்கரை உடைந்து தண்ணீர் வெளியேறியதால் கிராமமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். ஏரிக்கரை தானாக உடைந்ததா? அல்லது வேறு யாரேனும் உடைத்து விட்டனரா?என்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். நடுவீரப்பட்டு ஏரியில் தண்ணீர் இருப்பை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். தண்ணீர்வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை அதிகாரிகள் செய்து வருகிறார்கள். ஏரிக்கரை உடைந்ததால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.

    • நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் மொத்தம் 909 ஏரிகள் உள்ளன.
    • 45 ஏரிகள் 25 முதல் 49 சதவீதத்துக்கு மேலும். நிரம்பி இருப்பதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் மொத்தம் 909 ஏரிகள் உள்ளன.

    இதில் 632 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளது. மேலும் 111 ஏரிகள் 75 சதவீதத்துக்கு மேலும், 121 ஏரிகள் 50 சதவீதத்துக்கு மேலும் 45 ஏரிகள் 25 முதல் 49 சதவீதத்துக்கு மேலும். நிரம்பி இருப்பதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • தற்காலிக கரை இதுவரை 5-வது முறையாக உடைந்துள்ளது.
    • வருடம்தோறும் ஏரியில் இருந்து நீர் வெளியேறிய பிறகு மணல் அடுக்குவதால் எந்த நன்மையும் இல்லை.

    படப்பை:

    காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்த ஒரத்தூர் பகுதியில் பொதுப்பணித்துறை சார்பில் ஒரத்தூர் ஏரியின் குறுக்கே ரூ.60 கோடி மதிப்பீட்டில் புதிய நீர்தேக்கம் அமைக்கும் பணி 3 ஆண்டு முன்பு தொடங்கியது. ஆனால் அந்த பணி இன்னும் முழுமையாக முடிவடையாமல் உள்ளது.

    இந்நிலையில் இந்த நீர்த்தேக்கம் பணியின் போது ஏரியில் உள்ள நீர் வெளியேறாமல் இருப்பதற்கு தற்காலிக கரை அமைக்கப்பட்டது. தற்போது பெய்த மழையில் நீர்த்தேக்கம் அருகே உள்ள தற்காலிக கரை உடைந்து மழைநீர் வீணாக வெளியேறியது. தற்போது பொதுப்பணித்துறை அதிகாரிகள் மணல் மூட்டைகளை வைத்து உடைந்த கரையை சீரமைத்துள்ளனர்.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், 'இந்த தற்காலிக கரை இதுவரை 5-வது முறையாக உடைந்துள்ளது. ஒவ்வொரு மழைகாலத்திலும் இந்த தற்காலிக கரை குறிப்பிட்ட இடத்திலேயே உடைந்து ஏரி நீர் முழுவதும் வெளியேறுகிறது. அப்படி வெளியேறி வரும்போது பொதுப்பணித்துறை அதிகாரிகள் மணல் மூட்டை அடுக்குவதும் வாடிக்கையாக உள்ளது.

    வருடம்தோறும் ஏரியில் இருந்து நீர் வெளியேறிய பிறகு மணல் அடுக்குவதால் எந்த நன்மையும் இல்லை. அரசு பணம்தான் வீன். இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தற்காலிக கரை தொடர்ந்து ஒரே பகுதியில் உடைவது குறித்து அப்பகுதிக்கு சென்று ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவித்தனர்.

    • செரப்பணஞ்சேரி வருவாய் ஆய்வாளர் அலுவலகம் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.
    • அரசு ஆவணங்களை இழந்த பொது மக்கள் நகல் சான்றிதழ்களை பெற சிறப்பு முகாம்கள் நடைபெறும்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    குன்றத்தூர் வட்டத்தில் மிச்சாங், புயலின் தாக்கத்தால் மிக அதிக கனமழை பொழிந்து ஏற்பட்ட பெரு வெள்ளத்தின் காரணமாக சேதமடைந்த குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, பிறப்புச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் இருப்பிடச் சான்றிதழ், வாரிசு சான்றிதழ் பள்ளி கல்லூரி சான்றிதழ்கள் உள்ளிட்ட அரசு ஆவணங்களை இழந்தவர்கள் அவற்றின் நகல் சான்றிதழ்களை பெறுவதற்காக விண்ணப்பிக்க இன்று(11-ந்தேதி) முதல் முதல் 10.01.2024 வரை காலை 10 மணி முதல் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது.

    முகாம்கள் குன்றத்தூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகம், மாங்காடு வருவாய் ஆய்வாளர் அலுவலகம், கொளப்பாக்கம் வருவாய் ஆய்வாளர் அலுவலகம், வரதராஜபுரம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், செரப்பணஞ்சேரி வருவாய் ஆய்வாளர் அலுவலகம் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. எனவே மிச்சாங் புயலினால் ஏற்பட்ட பெரு வெள்ளத்தின் காரணமாக சான்றிதழ்கள் மற்றும் அரசு ஆவணங்களை இழந்த பொது மக்கள் நகல் சான்றிதழ்களை பெற சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடங்களில் கட்டணமின்றி விண்ணப்பிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • வெள்ள நீர் வடிந்து இயல்பு நிலைக்கு திரும்பியதையடுத்து அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளவர்கள் வீட்டுக்கு திரும்பி வந்தனர்.
    • அதிர்ச்சி அடைந்த 5 குடும்பங்களை சேர்ந்தவர்கள் இது குறித்து சோமங்கலம் போலீசில் புகார் அளித்தனர்.

    சோமங்கலம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் அடுத்த வரதராஜபுரம் பகுதியில் மிக்ஜம் புயல் காரணமாக பெய்த கன மழையால் பல்வேறு குடியிருப்பு பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்தது. இந்நிலையில் ராஜீவ் காந்தி நகர் பகுதியில் வெள்ளநீர் அதிக அளவில் சூழ்ந்துள்ளதால் அப்பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் முதல் மாடியில் வசித்து வந்த விஜயலட்சுமி இரண்டாம் மாடியில் வசித்து வந்த சரத்குமார், கார்த்திக், சரத் பாபு, அருண் ஆகிய குடும்பங்களை சேர்த்தவர்கள் தங்கள் வீடுகளை பூட்டிக்கொண்டு மீட்பு குழுவினர் மூலம் படகில் சென்று அப்பகுதியில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

    இந்நிலையில் வெள்ள நீர் வடிந்து இயல்பு நிலைக்கு திரும்பியதையடுத்து அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளவர்கள் வீட்டுக்கு திரும்பி வந்தனர்.

    அப்போது முதல் தளத்தில் இருந்த விஜயலட்சுமி வீட்டின் கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோ லாக்கர் உடைக்கப்பட்டு அதில் இருந்த 7 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் ஆகியற்றை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

    இதைபோல இரண்டாம் மாடியில் வசித்து வரும் சரத்குமார் வீட்டில் 20 பவுன் நகை, ரூ.1 லட்சத்து 50 ஆயிரம், கார்த்திக் என்பவர் வீட்டில் 5 பவுன் நகை, சரத் பாபு வீட்டில் 11 பவுன் நகை, அருண் வீட்டில் 10 பவுன் நகை என மொத்தம் 5 வீட்டில் 53 பவுன் நகைகளை பீரோவை உடைத்து மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றனர்.

    இதைகண்டு அதிர்ச்சி அடைந்த 5 குடும்பங்களை சேர்ந்தவர்கள் இது குறித்து சோமங்கலம் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற சோமங்கலம் போலீசார் இது குறித்து விசாரணை செய்து பீரோ மற்றும் சுவற்றில் பதிவாகி இருந்த கைரேகைகளை சேகரித்தும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து நகைகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

    இது சம்பவம் குறித்து தகவல் வரதராஜபுரம் பகுதியில் காட்டு தீ போல் பரவியது. இதனைத் தொடர்ந்து முகாமில் தங்கி இருந்த மக்கள் முகாமிலிருந்து வீடுகளுக்கு படையெடுக்க தொடங்கினர். 

    • பலத்த மழை காரணமாக மாவட்டத்தில் 205 ஏரிகள் முழுவதும் நிரம்பி உள்ளது.
    • குன்றத்தூர் மணிகண்டன் நகரில் வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 8 பேர் படகு மூலம் மீட்கப்பட்டனர்.

    காஞ்சிபுரம்:

    மிச்சாங் புயல் வரலாறு காணாத மழையை கொட்டித்தீர்த்தது. இதானால் காஞ்சிபுரம் மாவட்டத்திலும் பலத்த வெள்ள சேதம் ஏற்பட்டு உள்ளது. பெரும்பாலான இடங்களில் மழை வெள்ளம் வடிந்தாலும் குன்றத்தூர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் மிக கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. மிச்சாங் புயல் மற்றும் மழை வெள்ளத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 162 வீடுகள் சேதம் இடிந்து சேதம் அடைந்து உள்ளன. மேலும் 65 கால்நடைகள் இறந்துள்ளன.

    பலத்த மழை காரணமாக மாவட்டத்தில் 205 ஏரிகள் முழுவதும் நிரம்பி உள்ளது. குன்றத்தூர் தாலுகாவில் வரதராஜபுரம் அய்யப்பன்தாங்கல், கெருகம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பல இடங்களில் இன்னும் மின்சாரம் தடைபட்டு உள்ளது. அதனை சரிசெய்யும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

    வரதராஜபுரம் ஊராட்சியில் வெள்ளநீர் சூழ்ந்த பகுதிகளான ராயப்பா நகரில் கலெக்டர் கலைச்செல்வி மோகன் படகில் சென்று மக்களிடம் குறைகளை கேட்டு அறிந்தார்.

    குன்றத்தூர் சோமங்கலம் பெரிய ஏரியில் கரை பலவீனமாகி மண் சரிவு ஏற்பட்டதால் நீர்வளத் துறை சார்பில் மண் மூட்டைகளை அடுக்கி கரையை பலப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    ஸ்ரீபெரும்புதூர் அருகே பிள்ளைப்பாக்கம் ஏரி வளர்புரம் ஏரி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட ஏரிகளின் உபரிநீர் செம்பரம்பாக்கம் ஏரிக்கு தொடர்ந்து வருகிறது. ஸ்ரீபெரும்புதூர் அருகே தண்டலம் பகுதியை கடந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் செல்லும் கிருஷ்ணா கால்வாயில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

    குன்றத்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட பரணிபுத்தூர் ஊராட்சியில் ஜோதி நகர் லட்சுமி நகர் ஆகிய பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. அய்யப்பன்தாங்கல் பகுதியில் பிரபு நகரில் வீட்டிலிருந்து வெளியே வர முடியாத அளவுக்கு மழைநீர் தேங்கி நின்றது. இதில் சிக்கிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மாத குழந்தை உட்பட 5 பேரை தீயணைப்பு வீரர்கள் படகு மூலமாக பத்திரமாக மீட்டனர்.

    குன்றத்தூர் மணிகண்டன் நகரில் வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 8 பேர் படகுமூலம் மீட்கப்பட்டனர். மாங்காடு, சாதிக்நகர், ஓம்சக்தி நகர், சக்கரா நகர், கொளப்பாக்கம், மனப்பாக்கம், பழந்தண்டலம் உள்ளிட்ட பகுதியில் மழை நின்றும் வெள்ளநீர் வடியாததால் மக்கள் தவித்து வருகிறார்கள்.

    • சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நேற்று மாலை முதலே பலத்த மழை பெய்து வருகிறது.
    • பூண்டி ஏரியை பொறுத்தவரை மொத்தமுள்ள 35 அடியில் 31.74 அடி வரை மட்டுமே தண்ணீர் உள்ளது.

    'மிச்சாங்' புயலையொட்டி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும், நாளையும் கனமழை மற்றும் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.

    இந்த நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நேற்று மாலை முதலே பலத்த மழை பெய்து வருகிறது.

    இதன் காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன. 24 அடி உயரம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 21.23 அடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு வினாடிக்கு 600 கன அடி தண்ணீர் வருகிறது. 3-வது நாளாக ஏரியில் இருந்து 3 ஆயிரம் கனஅடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. 21.20 அடி உயரம் கொண்ட புழல் ஏரியில் தற்போது 19.27 அடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 522 கன அடி தண்ணீர் வருகிறது. ஏரியில் இருந்து 2 ஆயிரம் கனஅடி உபரிநீர் திறந்து விடப்படுகிறது.

    சோழவரம் ஏரியின் உயரம் 18.86 அடி அகும். இங்கு தற்போது நீர்மட்டம் 16.65 அடியாக உள்ளது. ஏரியில் இருந்து வினாடிக்கு 600 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. பூண்டி ஏரியை பொறுத்தவரை மொத்தமுள்ள 35 அடியில் 31.74 அடி வரை மட்டுமே தண்ணீர் உள்ளது. இந்த ஏரிக்கு வினாடிக்கு 370 கன அடி தண்னீர் வருகிறது.

    இன்று முதல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் செம்பரம்பாக்கம், புழல், சோழவரம் ஏரிகளின் நீர்மட்டத்தை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

    • குடிநீர் மற்றும் பிற தேவைகளுக்காக 285 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
    • செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    காஞ்சிபுரம்:

    செம்பரம்பாக்கம் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 200 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 24 அடி, தற்பொழுது நீர் இருப்பு 21.23 அடியாக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் மொத்தம் 3645 டிஎம்சி தண்ணீரை தேக்கி வைக்க முடியும் தற்பொழுது தண்ணீரின் அளவு 2916 டி.எம்.சி. ஆக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து ஆனது 609 கன அடியாக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் வெளியேற்றப்படும் அளவு 3000 கன அடியாக உள்ளது மேலும் குடிநீர் மற்றும் பிற தேவைகளுக்காக 285 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    மொத்தமாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 3285 கன அடியாக உள்ளது. தொடர்ந்து செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    • சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களிலும் நாளை, நாளை மறுநாள் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
    • 50 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

    காஞ்சிபுரம்:

    வங்கக்கடலில் 'மிச்சாங்' புயல் சின்னம் உருவாகி உள்ளது. இந்த புயலானது வரும் 5-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை நெல்லூருக்கும், மசூலிபட்டனத்துக்கும் இடையே கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    இந்த புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களிலும் நாளை, நாளை மறுநாள் (ஞாயிறு, திங்கள்) கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    இந்நிலையில், 'மிச்சாங்' புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 50 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

    இதில் 25 பேர் கொண்ட குழு மாங்காடு பகுதிகளுக்கும், மீதமுள்ள 25 பேர் கொண்ட குழு காஞ்சிபுரம் பகுதியிலும் பணியில் ஈடுபடவுள்ளனர்.

    • குழந்தைகளை அரசு பள்ளிகூடத்திற்கு அனுப்பாமல் காலவரையற்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்து உள்ளனர்.
    • ஏகனாபுரம் பகுதியில் உள்ள நடுநிலைப்பள்ளியில் 111 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    காஞ்சிபுரம்:

    சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது. இதற்கு பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களில் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. புதிய விமான நிலையத்துக்கு எதிராகவும், விவசாய நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்தும் கிராமமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக புதிய விமான நிலைய அறிவிப்பு வந்த நாள் முதல் போராட்டம் நீடித்து வருகிறது. மேலும் இது தொடர்பாக கிராமசபை கூட்டங்களிலும் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.

    இந்நிலையில் பரந்தூர் விமான நிலையத்துக்கு நிலம் கையகப்படுத்தும் அரசாணையை கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசு வெளியிட்டது. இதனால் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 13 கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

    இதற்கிடையே ஏகனாபுரத்தை மையமாக வைத்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் பரந்தூர் உள்ளிட்ட 13 கிராம மக்கள் புதிய போராட்டத்தை அறிவித்து உள்ளனர்.

    பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு நிலம் எடுக்க போடப்பட்ட அரசாணையை திரும்ப பெறும்வரை நாளை (1-ந்தேதி)முதல் தங்களது குழந்தைகளை அரசு பள்ளிகூடத்திற்கு அனுப்பாமல் காலவரையற்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்து உள்ளனர்.

    ஏகனாபுரம் பகுதியில் உள்ள நடுநிலைப்பள்ளியில் 111 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் பள்ளிக்கு செல்வதில்லை என்று தெரிவித்து உள்ளனர்.

    இதேபோல் விமான நிலையம் நில எடுப்பில் அதிகம் பாதிக்கப்படும் கிராமங்களான நாகப்பட்டு நெல்வாய், மேலேறி கிராமத்தைச் சேர்ந்தவர்களும் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் புறக்கணிப்பில் ஈடுபட உள்ளனர். இதனால் பரந்தூர் மற்றும் ஏகனாபுரம் பகுதியில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

    • சென்னை மற்றும் அதன்புறநகர் பகுதிகளில் நேற்றிரவு கனமழை பெய்தது.
    • சில இடங்களில் 12 செ.மீட்டருக்கும் அதிகமான மழை கொட்டித்தீர்த்தது.

    இலங்கையை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும், வங்கக்கடலில் நிலைகொண்டு இருக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாகவும் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில நேற்றிரவு மழை வெளுத்து வாங்கியது. நேற்று இரவு 7 மணிக்கு தொடங்கிய கனமழை இரவு முழுவதும் நீடித்தது. இன்று காலை ஏழு மணி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    நேற்று இரவு சுமார் மூன்று மணி நேரத்திற்குள் சில இடங்களில் 12 செ.மீட்டருக்கும் அதிகமான மழை பெய்துள்ளது. இதனால் செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளுக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.


    செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீர்வரத்து அதிகமாக உள்ளது. இன்று மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஏரியில் இருந்து 1500 கனஅடி உபரி நீர் திறந்து விடப்பட்ட நிலையில், அது 2429 அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. பின்னர் உபரி நீர் திறப்பு 6000 கனஅடியாக அதிகரித்துள்ளது.

    ×