என் மலர்
காஞ்சிபுரம்
ஸ்ரீபெரும்புதூர் அருகே கத்தி முனையில் டாக்டர் தம்பதியிடம் 13 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூர்:
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த போந்துர் ஆதிபராசக்தி நகரை சேர்ந்தவர் அருள்தாஸ் (வயது 40). பிசியோதெரபி டாக்டர். இவரது மனைவி ஜோஸ் அனிஸ்டல் (37). ஓமியோபதி டாக்டர். அருள் தாஸ், மற்றும் ஜோஸ் அனிஸ்டல் இருவரும் வீட்டின் முன் பகுதியில் கிளினிக் வைத்துள்ளனர்.
நேற்று அதிகாலை அருள் தாஸ் குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் 4 பேர் வீட்டின் மாடி கதவின் பூட்டை உடைத்து வீட்டுக்குள் புகுந்தனர். சத்தம் கேட்டு அருள் தாஸ் மற்றும் குடும்பத்தினர் அலறி அடித்து எழுந்தனர். வீட்டில் புகுந்த மர்மநபர்கள் கத்திமுனையில் டாக்டர் தம்பதியை மிரட்டி பீரோவில் இருந்த 13 பவுன் நகை, ரூ.5 ஆயிரம் போன்றவற்றை கொள்ளையடித்து சென்றனர். அருள்தாஸ் வீட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருந்தது. கொள்ளையர்கள் செல்லும்போது கண்காணிப்பு கேமரா பதிவை எடுத்து சென்றனர். கொள்ளையர்கள் முக கவசம் மற்றும் கையுறை அணிந்து இருந்தனர்.
இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
படப்பை அருகே வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
படப்பை:
காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த சோமங்கலம் அருகே உள்ள புதுநல்லூர் அண்ணா நகர் தளபதி தெருவை சேர்ந்தவர் ஞானராஜ் என்கிற ஜேசுதாசன் (வயது 54). இவருடைய மகன் இஸ்ரவேல் மோசஸ் (26). தனியார் தொலைக்காட்சியில் நிருபராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு தந்தை, மகன் இருவரும் வீட்டில் இருந்தபோது இஸ்ரவேல் மோசசை ஒருவர் அழைத்துள்ளார்.
இஸ்ரவேல் மோசஸ் வீட்டின் வெளியே வந்து பார்த்தபோது அந்த பகுதியில் இருந்த மர்ம நபர்கள் அவரை தந்தையின் கண் முன்னே சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். பலத்த காயம் அடைந்த இஸ்ரவேல் மோசஸ் சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ஞானராஜ் சோமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
பழைய நல்லூர் பகுதியில் வசிக்கும் நவமணி (26) என்பவர் முன்விரோதம் காரணமாக தூண்டுதலின் பேரில்தான் அட்டை என்கிற வெங்கடேஷ், (19) எலி அப்பு என்கிற விக்னேஷ், (19) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் சேர்ந்து எனது மகனை கத்தியால் வெட்டி கொலை செய்தனர்.
எனவே இவர்கள் 4 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த கொலை சம்பவத்தை கண்டித்து பத்திரிகையாளர்கள் குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரி முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட நவமணி, வெங்கடேஷ், விக்னேஷ், 17 வயது சிறுவன் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம்:
தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா, பொதுமக்களை மட்டுமல்லாது, முக்கிய பிரபலங்களையும் விட்டுவைக்கவில்லை. அந்த வகையில் எம்.பி.க்கள், தமிழக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா உறுதி செய்யப்பட்ட மகேஸ்வரி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா, பொதுமக்களை மட்டுமல்லாது, முக்கிய பிரபலங்களையும் விட்டுவைக்கவில்லை. அந்த வகையில் எம்.பி.க்கள், தமிழக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா உறுதி செய்யப்பட்ட மகேஸ்வரி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேர் சாலை விபத்தில் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலந்தூர்:
சென்னை மயிலாப்பூர் கணேசபுரத்தை சேர்ந்தவர் மோசஸ் (வயது 22). தனியார் தண்ணீர் சுத்திகரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர், நங்கநல்லூரில் வேலை முடிந்து மயிலாப்பூருக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி சென்றார். இந்த நிலையில், அவர் ஆலந்தூர் கத்திப்பாரா மேம்பால சர்வீஸ் சாலையில் வந்து கொண்டிருந்தபோது, பெருங்குடி நோக்கி சென்ற தண்ணீர் லாரி ஒன்று, இவர் மோதியதில் தலை நசுங்கி பரிதாபமாக பலியானார்.
அதேபோல் ராமாபுரத்தில் உள்ள மருந்தகம் நிறுவனத்தில் தங்கி இருந்து பணிபுரிந்து வந்த நாமக்கல் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் (40), தர்மபுரியை சேர்ந்த திவாகர்(22) ஆகியோர் நேற்று அதிகாலை ஒரே மோட்டார் சைக்கிளில் நந்தம்பாக்கம் மவுண்ட் சாலையில் சென்றனர். அப்போது கிண்டி நோக்கி சென்ற கூரியர் வேன் இவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் இருவரும் நிலைத்தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தனர்.
அப்போது சுப்பிரமணியன் மீது வேன் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதையடுத்து, காயங்களுடன் கிடந்த திவாகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த 2 விபத்துகள் குறித்து பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
துபாயில் இருந்து சென்னை விமான நிலையம் வந்திறங்கிய சிறப்பு விமானத்தில் ரூ.70½ லட்சம் தங்கத்தை கடத்தி வந்த 6 பேரை கைது செய்து சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
ஆலந்தூர்:
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து வரும் சிறப்பு விமானத்தில் தங்கம் அதிகளவில் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. இதையடுத்து அதில் இருந்து வந்து இறங்கிய பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி தலைமையில் சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர்.
அப்போது ராமநாதபுரத்தை சோ்ந்த முகமது செரீப் (வயது 39), அஜ்மீர் ஹாஜா (26), நைனா முகமது (53), திருச்சியை சேர்ந்த ஜெகதீஷ் (55), புதுக்கோட்டையை சேர்ந்த சாகுல் அமீது (33), சென்னையை சேர்ந்த முகமது ஆசிப் (23) ஆகிய 6 பேரை சந்தேகத்தின் பேரில் அவர்கள் நிறுத்தி விசாரித்தனர்.
அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவர்களது உடமைகளை சோதனை செய்தபோது எதுவும் சிக்கவில்லை. இதைத்தொடர்ந்து, அவர்களை தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்ததில், அவர்களது கால் சட்டை மற்றும் உள்ளாடைக்குள் பிளாஸ்டிக் டப்பிகளில் மறைத்து வைத்து தங்கக் கட்டிகளை கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அந்த வகையில் அவர்கள் 6 பேரிடம் இருந்து ரூ.70 லட்சத்து 70 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 312 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 6 பேரை கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சீபுரம்:
பெரிய காஞ்சீபுரம் முனிசிபல் காலனி பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 28). மது குடிக்கும் பழக்கம் கொண்டவர். வயிற்று வலியால் அவதிப்பட்ட இவர் கடந்த 2 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் வயிற்று வலி தாங்க முடியாத வினோத்குமார் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பெரிய காஞ்சீபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சென்னை விமான நிலையத்தில் பள்ளி முதல்வரின் கைப்பையில் இருந்த துப்பாக்கி தோட்டா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆலந்தூர்:
சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்தில் இருந்து டெல்லிக்கு நேற்று காலை விமானம் சென்றது. முன்னதாக அந்த விமானத்தில் பயணம் செய்ய வந்திருந்த பயணிகளை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது உத்திரமேரூரை அடுத்த கருங்சோழி கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் பீட்டர் (வயது 42) என்பவர் அந்த விமானத்தில் செல்ல வந்தார். அவரது கைப்பையை பாதுகாப்பு அதிகாரிகள் ‘ஸ்கேனிங்’ செய்தபோது அதில் வெடிபொருள் இருப்பதாக அலாரம் ஒலித்தது.
உடனே பாதுகாப்பு அதிகாரிகள், அவரது கைப்பையை திறந்து பார்த்தனர். அதில் 9 எம்.எம். அளவு கொண்ட துப்பாக்கி தோட்டா ஒன்று இருந்தது. இதையடுத்து செல்வராஜ் பீட்டரின் விமான பயணத்தை ரத்து செய்த அதிகாரிகள், அவரை விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், செல்வராஜ் பீட்டர் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஒரு தனியாா் பள்ளியில் முதல்வராக பணியாற்றி வருவது தெரிந்தது. கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பள்ளிக்கு வந்த மாணவா்களை சோதனை செய்தபோது ஒரு மாணவனின் பையில் இருந்து அந்த துப்பாக்கி தோட்டாவை கண்டுபிடித்ததாகவும், அதை தனது பையில் போட்டு வைத்திருந்ததாகவும், தவறுதலாக அந்த பையை எடுத்து வந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.
இதுதொடர்பாக பள்ளி முதல்வரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
டாஸ்மாக் ஊழியர்களுக்கு 2019 மற்றும் 2020-ம் ஆண்டுக்கான தீபாவளி போனஸ் உடனடியாக வழங்க வலியுறுத்தி காஞ்சீபுரம், காக்களூரில் டாஸ்மாக் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சீபுரம்:
டாஸ்மாக் ஊழியர்களுக்கு 2019 மற்றும் 2020-ம் ஆண்டுக்கான தீபாவளி போனஸ் உடனடியாக வழங்க வேண்டும். ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அதிகப்படியான நேரம் வேலை வாங்காமல் 8 மணி நேரம் வேலை மற்றும் முறையான வார விடுமுறை அளிக்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஓரிக்கையில் உள்ள காஞ்சீபுரம் மாவட்ட மேலாளர் அலுவலகம் எதிரே டாஸ்மாக் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு அரசு தலைமை வகித்தார், மாவட்ட தலைவர் ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் போராட்டத்தின்போது மாநில அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். அரசு உடனடியாக தலையிடவில்லை என்றால் விரைவில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக எச்சரிக்கை விடுத்தனர்.
திருவள்ளூரை அடுத்த காக்களூரில் உள்ள டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகம் முன்பு நேற்று திருவள்ளூர் மாவட்ட டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்கங்கள் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் 5 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் எஸ்.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சந்திரன், ஏ.ஐ.டி.யு.சி மாவட்ட தலைவர் தாமோதரன், அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் பிரகாஷ்பாபு, பஞ்சாட்சரம், மோசஸ், சேகர், முரளி, சத்யா, ஜெயப்பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் கே.ராஜேந்திரன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
இதில் திரளான டாஸ்மாக் பணியாளர்கள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் டாஸ்மாக் கடை பணியாளர்களுக்கு 30 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும், அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் இ.எஸ்.ஐ. என்ற திட்டத்தை அமல்படுத்த வேண்டும், டாஸ்மார்க் தொழிலாளர்கள் நலன் கருதி விற்பனை நேரத்தை காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை அமல்படுத்த வேண்டுமென கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது திடீரென பெய்த மழையிலும் டாஸ்மாக் ஊழியர்கள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.
கியாஸ் சிலிண்டர் ஏற்றி வந்த லாரி சக்கரத்தில் சிக்கி, சென்னை மாநகராட்சி பெண் அதிகாரி பலியானார்.
தாம்பரம்:
செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கத்தைச் சேர்ந்தவர் சுரேந்தர்குமார் (வயது 35). தனியார் கார் நிறுவன ஊழியர். இவருடைய மனைவி மோனிஷா (29). இவர், சென்னை மாநகராட்சி ஆலந்தூர் மண்டலத்துக்கு உட்பட்ட 165-வது பிரிவு ஆதம்பாக்கம் சுகாதார அலுவலகத்தில் சுகாதார ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார்.
நேற்று காலை மோனிஷா, தன்னுடன் பணிபுரியும் சுகாதார ஆய்வாளரான மணிகண்டன் (33) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் பணிக்கு வந்து கொண்டிருந்தார்.
புதுபெருங்களத்தூரில் ஜி.எஸ்.டி. சாலையில் வந்தபோது வலதுபுறம் பஸ் வந்ததால் இடதுபுறத்தில் ஓரமாகச் செல்ல தன் இருசக்கர வாகனத்தை மணிகண்டன் திருப்ப முயன்றார்.
அப்போது அவர்களுக்கு பின்னால் படாளத்தில் இருந்து மேடவாக்கம் நோக்கி கியாஸ் சிலிண்டர் ஏற்றிவந்த லாரி, இவர்களது இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் இருவரும் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தனர்.
இதில் லாரியின் பின்பக்க சக்கரத்தில் சிக்கிய மோனிஷா, சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். மணிகண்டனுக்கு வலது தோள்பட்டையில் எலும்பு முறிவும், முகத்தில் பலத்த காயமும் ஏற்பட்டது. இது குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவரான நாகப்பட்டினம் மாவட்டம், அம்மன் கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகன் (40) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
காஞ்சீபுரம் காவலான் கேட் அருகே விவசாயிகள் கூட்டியக்கத்தின் சார்பில் மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் காவலான் கேட் அருகே விவசாயிகள் கூட்டியக்கத்தின் சார்பில் மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைத்தலைவர் சாரங்கன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் முத்துகுமார், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் நேரு, லாரன்ஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் விவசாயத்தை சீரழிக்கும் 3 வேளாண் மசோதாக்களை நிறைவேற்றியதை கண்டித்து கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சீபுரம் அருகே வேன் மோதி மின்வாரிய ஊழியர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரத்தை அடுத்த திம்மசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் கருணாகரன் (வயது 52). இவர் தாமலில் உள்ள மின்சாரத்துறை அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் ஒலிமுகமதுப்பேட்டையில் இருந்து திம்மசமுத்திரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். காஞ்சீபுரத்தை அடுத்த ஏரிவாக்கம் பகுதியில் கருணாகரன் சென்றபோது எதிரே வந்த ஒரு வேன் கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கருணாகரன் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
துபாயில் இருந்து சென்னைக்கு சிறப்பு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.42½ லட்சம் மதிப்புள்ள 890 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இதுதொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.
ஆலந்தூர்:
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி தலைமையிலான சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.
அந்த விமானத்தில் வந்த சென்னையைச்சோ்ந்த முகமது (வயது 28) என்பவரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். அவர் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர். ஆனால் அதில் எதுவுமில்லை.
பின்னர் அவரை தனியறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர். அதில் அவர் உள்ளாடைக்குள் தங்க கட்டிகளை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.18 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 360 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.
அதேபோல் துபாயில் இருந்து வந்த மற்றொரு சிறப்பு விமானத்தில் வந்த மதுரையை சேர்ந்த ராசிக்அலி ஹாஜாமைதீன் (45) என்பவரை சந்தேகத்தின்பேரில் தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர்.
அதில் அவர் உள்ளாடைக்குள் பிளாஸ்டிக் டப்பிகளில் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூ.24 லட்சம் மதிப்புள்ள 530 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.
சென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.42 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 890 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக 2 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.






