என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    தொழிற்சாலையில் பணிபுரியும் 500-க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் திருவள்ளூர் மாவட்டம் சிறுவானூர் அருகே சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் அருகே செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது.

    இந்த தொழிற்சாலையில் சென்னை மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் ஷிப்டு முறையில் வேலை செய்து வருகின்றனர்.

    வெளி மாவட்டங்களில் இருந்து வந்து வேலை செய்யும் தொழிலாளர்களை, தொழிற்சாலை நிர்வாகம் ஆங்காங்கே விடுதிகள் எடுத்து தங்க வைத்து உணவு வசதி ஏற்படுத்தி கொடுத்துள்ளனர்.

    இந்நிலையில் நேற்று பூந்தமல்லி அருகே விடுதியில் வழங்கிய உணவை சாப்பிட்ட பெண்கள் 200 பேருக்கு திடீரென்று வாந்தி- மயக்கம் ஏற்பட்டது.

    உடனடியாக அவர்கள் பூந்தமல்லியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட 8 பெண்கள் திடீரென காணாமல் போனதாக கூறப்படுகிறது. அந்த பெண் ஊழியர்கள் கெட்டுபோன உணவு சாப்பிட்டு இறந்து இருக்கலாம் என்ற தகவல் தொழிலாளர்கள் மத்தியில் காட்டு தீ போல பரவியது.

    இதனால் ஆத்திரம் அடைந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்-ஆண் தொழிலாளர்கள் ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம், ஓரகடம், வட்டம்பாக்கம், ஆகிய 4 இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த போராட்டம் நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கியது. இந்த போராட்டம் காரணமாக சுங்குவார்சத்திரத்தில் சென்னை-பெங்களூரு தேசிய நெஞ்சாலையில் போக்குவரத்து முடங்கியது.

    இதே போல் தாம்பரம்-வாலாஜாபாத் சாலை மறியல் போராட்டத்தால் சாலைகள் ஸ்தம்பித்து வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன.

    சுங்குவார்சத்திரம் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பெண்-ஆண் தொழிலாளர்கள் ஏராளமானோர் திரண்டு நின்றதால் அங்கு சென்னை-வேலூர் இடையேயும், வேலூர்-சென்னை இடையேயும் போக்குவரத்து தடைபட்டது.

    சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. முதலில் வாகன ஓட்டிகள் இறங்கி வந்து ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் அவர்கள் போராட்டத்தை கைவிடவில்லை.

    தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். விடிய விடிய நடந்த இந்த போராட்டம் காலையிலும் தொடர்ந்தது.

    போராட்டம் பற்றி தகவல் அறிந்த காஞ்சிபுரம் மாவட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். போராட்டம் நடத்திய தொழிலாளர்களை விட போலீசாரின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் சாலை மறியல் செய்த தொழிலாளர்களை போலீசாரால் கட்டுப்படுத்த முடியவில்லை.

    இதையடுத்து இன்று காலையில் மாவட்டம் முழுவதும் உள்ள போலீசார் வரவழைக்கப்பட்டனர்.

    அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் பொதுமக்கள் சமரசம் அடையவில்லை.

    இதையடுத்து போக்குவரத்தை ஒழுங்குப்படுத்துவதற்காக போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை அப்புறப்படுத்தும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர்.

    சாலையில் நின்ற பொதுமக்களை போலீசார் இருபுறமும் சாலையில் இருந்து அப்புறப்படுத்தினார்கள். மேலும் சாலையில் இருந்து வெளியேற மறுத்த சில ஆண் தொழிலாளர்களை தாக்கி, சட்டையை பிடித்து இழுத்து, போலீஸ் வாகனத்தில் ஏற்றினார்கள்.

    இதை கண்ட பெண் தொழிலாளர்கள் போலீஸ் வாகனத்தை சுற்றி வளைத்து முற்றுகையிட்டனர். இதனால் போலீசாருக்கும் தொழிலாளர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    இதற்கிடையே சம்பவ இடத்துக்கு கலெக்டர் ஆர்த்தி, போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் ஆகியோர் விரைந்து சென்றனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    தொழிலாளர்கள் யாரும் இறக்கவில்லை. இறந்ததாக வதந்தி பரப்பி விட்டுள்ளனர். அவர்கள் வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்று கூறினார்கள்.

    மேலும் காணாமல் போனதாக கூறப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் 3 பேரை செல்போனில் வீடியோ காலில் பேச வைத்தனர். இதையடுத்து பொதுமக்கள் சமரசம் அடைந்தனர்.

    காலை 9 மணிக்கு பிறகு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து செல்ல தொடங்கினார்கள். முதலில் சுமார் 10 ஆயிரம் பேர் அங்கிருந்து சென்றனர். மீதமுள்ள 10 ஆயிரம் பேர் சாலை ஓரத்திலேயே நின்று கொண்டிருந்தனர். சுமார் 11 மணி அளவில் அவர்களும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இந்த போராட்டம் காரணமாக சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 9 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இன்று காலை 9 மணிக்கு பிறகு போக்குவரத்து சீரானது.

    இதே போல் இந்த தொழிற்சாலையில் பணிபுரியும் 500-க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் திருவள்ளூர் மாவட்டம் சிறுவானூர் அருகே சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 4.30 மணி முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருவள்ளூர் கோட்டாட்சியர் ரமேஷ், வட்டாட்சியர் செந்தில்குமார், திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.


    தனியார் நிறுவன ஊழியர்களின் போராட்டம் நீடிப்பதால் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
    ஸ்ரீபெரும்புதூர்:

    திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு அருகே ஜமீன்கொரட்டூரில் தனியார் கப்பல் என்ஜினீயரிங் கல்லூரி வளாகம் உள்ளது. தற்போது செயல்படாமல் உள்ள இந்த கல்லூரி வளாகத்தில் உள்ள 7 தளங்கள் கொண்ட மாணவர் விடுதியை, காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் செயல்படும் தனியார் தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்காக  வாடகைக்கு எடுத்துள்ளது. 

    இதில் தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் தங்கி உள்ளனர். இரண்டு நாட்களுக்கு முன்பு இங்கு தங்கி உள்ள  பெண் ஊழியர்களுக்கு 400 பேருக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உடனே அவர்களை சக ஊழியர்கள் ஆம்புலன்ஸ் மூலம் பூந்தமல்லியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    இது குறித்து தகவலறிந்த பொதுசுகாதார துறை அதிகாரிகள், வருவாய்த் துறை அதிகாரிகள் மற்றும் வெள்ளவேடு போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் அவர்கள் சாப்பிட்ட உணவில் ஏற்பட்ட நச்சுத்தன்மையால் வாந்தி பேதி ஏற்பட்டது தெரிந்தது. 

    தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் பெண் ஊழியர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.  இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த 8 பேரின் நிலைமை குறித்து தெரியவில்லை என்று தனியார் பெண் ஊழியர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். அவர்கள் இறந்திருக்கலாம் என்றும் ஆனால் பெற்றோர்களுக்கு தனியார் நிறுவனம் தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை என்றும் மற்ற பெண் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து  500 பெண் ஊழியர்கள் 
    தொடர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் 

    தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவன ஊழியர்கள்

    புதுச்சத்திரம் சாலையில் அமர்ந்து அவர்கள் மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையின் இரு புறமும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண் ஊழியர்களிடம் காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும் போராட்டத்தை கைவிட பெண் ஊழியர்கள் மறுத்ததால் அந்த பகுதியில் பதற்றமான சூழல் காணப்படுகிறது.
    காஞ்சிபுரம் மாவட்டத்தில் குற்றச்செயல்களில் ஈடுபட நினைக்கும் ரவுடிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எச்சரித்துள்ளார்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எம்.சுதாகர் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களை குற்றவாளியான காஞ்சிபுரம் வள்ளல் பச்சையப்பன் தெருவை சேர்ந்த ராஜசேகர் (வயது 27), தேவராஜ் (25) ஆகியோரை விஷ்ணுகாஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ் தலைமையிலான குழுவினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    மேலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் குற்றச்செயல்களில் ஈடுபட நினைக்கும் ரவுடிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எச்சரித்துள்ளார்.
    உத்திரமேரூரில் குடும்ப தகராறு காரணமாக பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    உத்திரமேரூர்:

    உத்திரமேரூர் துர்க்கை அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜெயகுமார் (வயது 48). இவரது மனைவி காமாட்சி (45). இவர்களுக்கு கல்லூரியில் படிக்கும் ஒரு மகனும், பிளஸ்-1 படிக்கும் ஒரு மகளும் உள்ளனர். இந்தநிலையில், ஜெயகுமார் வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு வந்ததால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் நேற்று முன்தினம் காலை மனமுடைந்த காமாட்சி வீட்டில் யாரும் இல்லாதபோது பூச்சி மருந்தை குடித்துவிட்டு வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தார். இதையடுத்து, உடனடியாக அவரை மீட்டு, உத்திரமேரூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர், மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி காமாட்சி பரிதாபமாக பலியானார். இதுகுறித்து தந்தை சண்முகம் உத்திரமேரூர் போலீசில் அளித்த புகாரின்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.
    ஸ்ரீபெரும்புதூர்-செங்கல்பட்டு சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது நிலைத்தடுமாறி கீழே விழுந்து டிரைவர் பலியானார்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 36). இவர் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த போந்தூர் கிராமத்திலுள்ள தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்தார்.

    இந்தநிலையில் இவர் நேற்று முன்தினம் தன்னுடன் பணியாற்றும் சக ஊழியரின் மோட்டார் சைக்கிளை எடுத்து கொண்டு ஸ்ரீபெரும்புதூர் நோக்கி சென்றார்.

    பின்னர், ஸ்ரீபெரும்புதூர்-செங்கல்பட்டு சாலையில் வந்தபோது திடீரென மோட்டார் சைக்கிளில் நிலைத்தடுமாறி சதீஷ்குமார் கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்து அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்தார். அப்போது உயிருக்கு போராடிய அவரை மீட்க ஆள் இல்லாததால் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு பலியாகி கிடந்த சதீஷ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு வாரத்தில் குட்கா பதுக்கி விற்ற 60 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காஞ்சிபுரம்:

    குட்கா, பான்மசாலா விற்பனைக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. எனினும் தடையை மீறி கடைகளில் குட்கா விற்கப்பட்டு வருகின்றன.

    காஞ்சிபுரம் மாவட்டத்திலும் குட்கா விற்பனை நடந்து வருகிறது. இதையடுத்து குட்கா விற்பனையில் ஈடுபடுபவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் உத்தரவிட்டுள்ளார்.

    மேலும் குற்றச் செயல்களை தடுக்கும் வகையில் தலைமறைவு ரவுடிகள், கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டு இருந்தார்.

    இதையடுத்து மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கினார். இதில் கடந்த ஒரு வாரத்தில் குட்கா, பான்மசாலா விற்பனையில் ஈடுபட்ட 60 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சரித்திர பதிவேடு ரவுடிகளான பெரிய காஞ்சிபுரம் முகமது இலாகி, ரமேஷ், சிறுபாக்கம் ஆனந்தன், கிளார் ராஜா, தாமல் இளவரசு உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர்.

    ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நரசிங்கபுரம் தண்டபாணி, வடமங்கலம் விஜய், அஸ்சாம் மாநிலத்தை சேர்ந்த ருகல் அகமது உள்ளிட்டோரும் சிக்கினர்.

    மாவட்டத்தில் சட்ட விரோதமான நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.

    கடந்த ஒரு வாரத்தில் போலீசாரின் அதிரடி சோதனையில் 4 ரவுடிகள், கஞ்சா விற்பனை செய்த 10 பேர் மற்றும் குட்கா விற்ற 60 பேர் சிக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    உள்கட்சி தேர்தலுக்காக தனியார் திருமண மண்டபங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. காலை முதல் ஏராளமான கட்சி தொண்டர்கள் குவிந்து விண்ணப்ப படிவங்களை வாங்கி சென்றனர்.

    காஞ்சிபுரம்:

    அ.தி.மு.க. அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்கட்சி தேர்தல் இன்றும், நாளையும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி அ.தி.மு.க. உறுப்பினர் தேர்தல் விறு விறுப்பாக தொடங்கியது. கிளைக் கழக செயலாளர், நகராட்சி, பேரூராட்சி, ஒன்றியத்தில் அவைத் தலைவர், இணைச் செயலாளர், துணைச் செயலாளர்கள், பொருளாளர், மேலமைப்பு பிரதிநிதிகள், பேரூராட்சி வார்டு செயலாளர், அவைத் தலைவர், நகர வார்டு செயலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.

    காஞ்சிபுரம் மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்களாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், முன்னாள் எம்.பி.விஜயகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாங்காடு, குன்றத்தூர், ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத், காஞ்சிபுரம், உத்திரமேரூர் உள்ளிட்ட 17 இடங்களில் உள்கட்சி தேர்தல் நடைபெற்றது.

    அதிமுக

     

    மாங்காடு பேரூராட்சியில் நடந்த உள்கட்சி தேர்தலில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், முன்னாள் எம்.பி. விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டு கட்சியினரிடம் விண்ணப்ப படிவத்தை வழங்கினர்.

    இதில் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சோம சுந்தரம், கழக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா. கணேசன், குன்றத்தூர் ஒன்றிய செயலாளர் கே.பழனி மற்றும் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    திருவள்ளூர் மாவட்டத்திலும் உள்கட்சி தேர்தல் விறுவிறுப்பாக நடந்தது. தேர்தல் பொறுப்பாளர்களாக முன்னாள் எம்.பி. மைத்ரேயன், முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன், முன்னாள் எம்.எல்.ஏ. அசோக் ஆகியோர் நியமிக்கப்பட்டு இருந்தனர்.

    உள்கட்சி தேர்தலுக்காக தனியார் திருமண மண்டபங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. காலை முதல் ஏராளமான கட்சி தொண்டர்கள் குவிந்து விண்ணப்ப படிவங்களை வாங்கி சென்றனர்.

    திருவள்ளூர் வடக்கு மாவட்ட கிளை செயலாளர் பதவிக்கு விண்ணப்ப கட்டணமாக ரூ.250, பேரூராட்சி வார்டு செயலாளர்-ரூ.300, அவைத் தலைவர், இணைச் செயலாளர், துணைச் செயலாளர்கள், பொருளாளர், மேலமைப்பு பிரதிநிதிகளுக்கு ரூ.200, நகர வார்டு செயலாளர்-ரூ.500 விண்ணப்ப கட்டணமாக பெறப்பட்டது. நாளையும் அ.தி.மு.க. உள்கட்சி தேர்தல் நடைபெறுகிறது.

    ஆவடி வடக்கு பகுதி செயலாளர் தீனதயாளன் மரணம் அடைந்ததையடுத்து திருவள்ளூர் தெற்கு மாவட்ட தேர்தல் இன்று நடைபெறவில்லை. நாளை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    விண்ணப்ப படிவங்கள் வழங்கும் இடத்தில் ஒன்றியத்தில் அடங்கிய ஊராட்சிகள் வாரியாக மேஜைகள் அமைக்கப்பட்டு படிவங்கள் வழங்கப்பட்டன. நகராட்சி, பேரூராட்சிகளுக்கு தனித்தனியாக மேஜைகள் அமைக்கப்பட்டு இருந்தது.

    பூர்த்தி செய்த விண்ணப்பபடிவத்துடன் உறுப்பினர் அடையாள அட்டை நகல் இணைக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

    செங்கல்பட்டுகிழக்கு மற்றும் மேற்கு அ.தி.மு.க. உள்கட்சி தேர்தல் இன்று நடைபெற்றது.

    செங்கல்பட்டு மேற்கு மாவட்ட தேர்தல் பொறுப்பாளராக அமைப்பு செயலாளர் ஆர்.டி.ராஜாராம் நியமிக்கப்பட்டு இருந்தார். ஏராளமான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் போட்டி போட்டு விண்ணப்ப படிவத்தை வாங்கி சென்றனர்.

    செங்கல்பட்டு மேற்கு மாவட்டத்தில் தாம்பரம், பல்லாவரம், செங்கல்பட்டு, மறைமலைநகர், பம்மல், அனாகபுத்தூர், செம்பாக்கம் ஆகிய 7 நகரங்களிலும் சில்லப்பாக்கம், திருநீர்மலை, நந்திவரம் கூடுவாஞ்சேரி, மாடம்பாக்கம், பெருங்களத்தூர் ஆகிய 6 பேரூராட்சிகளிலும் பரங்கிமலை மேற்கு, காட்டாங்கொளத்தூர் மேற்கு, காட்டாங்கொளத்தூர் கிழக்கு, காட்டாங்கொளத்தூர் வடக்கு ஆகிய 4 ஒன்றியங்களிலும் தேர்தல் நடைபெற்றது.

    முக்கிய பதவிகளை பிடிப்பதற்கு கடும் போட்டி நிலவியது. அவர்கள் கட்சியின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு கேட்டு வருகின்றனர்.

    இதையும் படியுங்கள்... 10 ஆண்டுகள் பயன்படுத்திய சாலைகளில் சுங்க கட்டணம் விதிக்க தடைவிதிக்க வேண்டும்- அன்புமணி அறிக்கை

    ஸ்ரீபெரும்புதூர் அருகே பக்கத்து வீட்டு தகராறை தடுத்த வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூரை அடுத்த சேலையனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது38).

    இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் சந்திரசேகர். இவரது வீட்டுக்கு நேற்று இரவு அதே பகுதியைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி மற்றும் அவரது உறவினர்கள் வந்து தகராறில் ஈடுபட்டனர்.

    இதனை சுரேஷ் கண்டித்து தடுத்தார். இதனால் சுரேசுக்கும், தட்சிணாமூர்த்தி தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

    இதில் சுரேசை அடித்து கீழே தள்ளியதாக தெரிகிறது. கீழே விழுந்ததில் சுரேசுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். சுரேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் வழக்குப்பதிவு செய்து தட்சிணாமூர்த்தி உள்பட 3 பேரை தேடி வருகிறார்.

    தட்சிணாமூர்த்திக்கும், சந்திரசேகருக்கும் நேற்று இரவு தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் அவர்கள் வீட்டுக்கு சென்றுள்ளனர். இந்த மோதல் தட்சிணாமூர்த்தி தனது உறவினர்களிடம் தெரிவித்ததால் அவர்கள் சந்திரசேகர் வீட்டுக்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

    இதனை தடுக்க முயன்ற சுரேஷ் அடித்துக் கொலை செய்யப்பட்டு இருக்கிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஒரே நாளில் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகளில் வழக்காடிகளுக்கு உள்ளேயே விசாரணை மேற்கொள்ளப்பட்டு உடனடி தீர்வுகள் நீதிபதிகளால் வழங்கப்பட்டது.

    காஞ்சிபுரம்:

    நாடு முழுவதும் நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளை தீர்த்து வைத்து வழக்காடிகள் பயன்பெற தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறும்.

    அதன்படி காஞ்சிபுரம் மாவட்டம், வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் காஞ்சிபுரத்திலுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மாவட்ட நீதிபதி ஜெ.சந்திரன் தலைமையில் நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள 7 நீதிமன்றங்களில் பல வருடங்களாக தீர்த்து வைக்கப்படாமல் உள்ள சொத்து பிரச்சினை வழக்குகள், விபத்து காப்பீடு பிரச்சினைகள், குடும்ப உறவுகள் பிரச்சினைகள், உள்ளிட்ட பல்வேறு வழக்குகளை தீர்த்து வைக்கும் வகையில் மக்கள் நீதிமன்றம் செயல்பட்டது.

    இன்று ஒரே நாளில் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகளில் வழக்காடிகளுக்கு உள்ளேயே விசாரணை மேற்கொள்ளப்பட்டு உடனடி தீர்வுகள் நீதிபதிகளால் வழங்கப்பட்டது.

    அதன்படி 15 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துப் பிரச்சினைகளும், விபத்து காப்பீடு பிரச்சினைகளும் தீர்த்து வைக்கப்பட்டதாக மாவட்ட நீதிபதி ஜெ.சந்திரன் தெரிவித்தார். மேலும் நீதிமன்றங்களில் தீர்வு ஏற்படாமல் தேங்கிக்கிடக்கும் வழக்குகளை தேசிய மக்கள் நீதிமன்றத்தின் மூலம் தீர்த்துக்கொள்ள வழக்காடிகளும் வழக்கறிஞர்களும் முன்வர வேண்டும் என நீதிபதி வேண்டுகோள் விடுத்தார்.

    தேசிய மக்கள் நீதிமன்றம் நிகழ்ச்சியில் நீதிபதிகள் இளங்கோவன், திருஞான சம்பந்தம், ராஜேஸ்வரி, சரண்யா செல்வம், செந்தில் குமார், சரவணகுமார், மற்றும் வழக்கறிஞர்கள் சங்க தலைவர்கள் கார்த்திகேயன், ஜான், பார்த்தசாரதி, மற்றும் வழக்கறிஞர்களும், வழக்காடிகளும், காப்பீட்டு நிறுவன ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

    பசுமை காடு வளர்ப்பு திட்டத்திற்காக வளர்க்கப்பட்ட இந்த மரக் கன்றுகள் குறிப்பிட்ட காலத்திற்குள் விவசாயிகளுக்கு அளிக்கப்படவில்லை. இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் சுமார் 4 அடி உயரத்துக்கு வளர்ந்து விட்டன.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் பசுமை காடுகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் வளர்த்து வேளாண்மை துறை மூலம் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

    குன்னவாக்கம் ஊராட்சிக்குட்பட்ட வெண்டிவாக்கம் மற்றும் மலையாங்குளம் கிராமங்களில் தேக்கு, நெல்லி, நாவல், குமிழ், மகாகனி, வேங்கை, நீர்மத்து, பூவரசன், வேப்பம், இலுப்பை உள்ளிட்ட 20 வகையான மரக்கன்றுகள் சுமார் 3 லட்சத்து 65 ஆயிரம் எண்ணிக்கையில் பராமரித்து வளர்க்கப்பட்டு உள்ளது.

    கடந்த ஜூன் மாதம் முதல் வளர்க்கப்பட்டு வரும் இந்த மரக்கன்றுகள் செப்டம்பர் மாதத்தில் வேளாண்மைத்துறை மூலமாக விவசாயிகளுக்கு இலவசமாக அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    மேலும் இந்த மரக்கன்றுகளை பெற விரும்பும் விவசாயிகள் இணையதளத்தில் விண்ணப்பித்து பட்டா சிட்டா அடங்கல் போன்ற ஆவணங்களை காண்பித்தால் மட்டுமே அளிக்கப்படும் என்று வேளாண்மை துறை மூலமாக கூறப்பட்டதாக தெரிகிறது.

    ஆனால் இதுவரை இந்த மரக்கன்றுகளை வேளாண்மைத்துறையினர் வனத்துறையில் இருந்து பெறவில்லை.

    குறிப்பிட்ட காலத்துக்குள் மரக்கன்றுகளை வாங்காததால் சுமார் 25 ஆயிரம் மரக்கன்றுகள் அழுகி சேதம் அடைந்து விட்டதாக கூறப்படுகிறது. சரியான நேரத்தில் மரக்கன்றுகள் கிடைக்காததால் விவசாயிகளும் பொது மக்களும் வேதனை அடைந்து உள்ளனர்.

    இது தொடர்பாக விவசாயிகள் கூறும்போது, பசுமை காடு வளர்ப்பு திட்டத்திற்காக வளர்க்கப்பட்ட இந்த மரக் கன்றுகள் குறிப்பிட்ட காலத்திற்குள் விவசாயிகளுக்கு அளிக்கப்படவில்லை. இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் சுமார் 4 அடி உயரத்துக்கு வளர்ந்து விட்டன. இனி இதை நட்டும் பலன் இல்லை. மரக்கன்றுகளை வழங்குவதில் அதிகாரிகள் மெத்தனமாக உள்ளனர் என்றனர்.

    இதற்கிடையே மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு வழங்கப்படாததற்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்து உள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், காஞ்சிபுரம் மாவட்டம் மலையாங்குளம் கிராமத்தில் பசுமை காடு வளர்ப்பு திட்டத்திற்காக வனத்துறை வளர்த்து வைத்துள்ள சுமார் 3½ லட்சம் மரக்கன்றுகள் இன்று வரை பொதுமக்களுக்கு வழங்கப்படவிடவில்லை. வேளாண்துறையினரின் அலட்சியம் தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

    இந்த மரக்கன்றுகளை வேளாண்துறை பெற்று மக்களுக்கு வழங்க வேண்டும். வேளாண்துறை முன்வராத நிலையில், வனத்துறை கேட்டுக் கொண்டால் அம்மரக்கன்றுகளை பொது மக்களுக்கு வழங்க காஞ்சிபுரம் மாவட்ட பா.ம.க.வும், பசுமைத்தாயகம் அமைப்பும் தயாராக உள்ளன என்று தெரிவித்து உள்ளார்.

    காஞ்சிபுரம் அருகே குடும்பத்தகராறு காரணமாக வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கச்சிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 29). இவர் அதே பகுதியில் கோழிக்கறி விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தார். இவருக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சண்முகத்திற்கும் அவருடைய மனைவிக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான சண்முகம் வீட்டை விட்டு வெளியே சென்றார்.

    இந்த நிலையில் நீண்ட நேரம் ஆகியும் வீட்டுக்கு திரும்பி வராததால் அக்கம்பக்கத்தில் தேடியுள்ளனர்.

    அப்போது சண்முகம் அருகில் உள்ள காட்டுப்பகுதியில் மரத்தில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் ஸ்ரீபெரும்புதூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
    கிராமத்தில் பசுமை வீடு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் பணிகளை கலெக்டர் ஆர்த்தி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வாலாஜா பாத் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கிராமங்களில் ஆய்வு செய்தார். ஏகனாம் பேட்டை கிராமத்தில் நடைபெற்ற மழைநீர் சேமிப்பு பணியை பார்வையிட்டு அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். உள்ளாவூர் கிராமத்தில் பசுமை வீடு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் பணிகளை கலெக்டர் ஆர்த்தி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அயிமிச்சேரி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கலெக்டர் ஆர்த்தி ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    மேலும் அப்பகுதியில் நடைபெறும் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு இணைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய் மற்றும் அப்பகுதியில் உள்ள நூலகத்தை கலெக்டர் ஆர்த்தி ஆய்வு மேற்கொண்டார்.

    ×