என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    • காஞ்சிபுரம் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் கோரோல் சிங் (வயது 19).
    • மாம்பாக்கம் பகுதியில் இயங்கி வரும் தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார்.

    காஞ்சிபுரம் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் கோரோல் சிங் (வயது 19). இவர் காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரம் பகுதியில் தங்கி ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மாம்பாக்கம் பகுதியில் இயங்கி வரும் தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் கோரோல் சிங் தொழிற்சாலையில் வேலை செய்தபோது நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது அந்த வழியாக வந்த கிரேன் கோரோல் சிங் மீது பயங்கரமாக மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த கொரோல் சிங் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியான கோரோல் சிங்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    • பல்வேறு நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களுக்கான மனிதவள தேவைக்கு நேர்முக தேர்வினை நடத்தினர்.
    • இம்முகாமில் பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை அனைத்து வேலை நாடுநர்களும் கலந்துகொண்டனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டி மையம் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாமினை நடத்தியது. முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி துவக்கி வைத்தார்.

    இம்முகாமில் 11 தனியார் நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களுக்கான மனிதவள தேவைக்கு நேர்முக தேர்வினை நடத்தினர். இம்முகாமில் பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை அனைத்து வேலை நாடுநர்களும் கலந்துகொண்டனர். இம்முகாமில் தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குனர் அருணாகிரி, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் செந்தில்குமாரி மற்றும் அரசு அலுவலர்கள், மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டனர்.

    • போரூர் ஏரியின் நீர் அனைத்தும் குடிநீர் பயன்பாட்டிற்கு மற்றும் நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் இருக்கவே பயன்பட்டு வருகிறது.
    • ஏரியின் உபரி நீர் வெளியேறுவதற்கு வழியில்லாமல் கிராமங்களில் வெள்ள நீர் சூழ்ந்து மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட போரூர் ஏரி அருகே ரூ.100 கோடி மதிப்பீட்டில் வெள்ள தடுப்பு பணிகளை மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்கள் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது:

    சென்னை மாவட்டம் மதுரவாயல் வட்டம் காரம்பாக்கம் மற்றும் போரூர் கிராமத்திலும், காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் வட்டம் தெள்ளியகரம் கிராமத்திலும் அமைந்துள்ள போரூர் ஏரி நீர்வளத்துறையின் பராமரிப்பில் உள்ளது. இவ்வேரியின் நீர்பரப்பு 252 ஏக்கர் எனவும் கொள்ளளவு தற்பொழுது 67 மில்லியன் கன அடி ஆகும். இதன் வலது கரையோரம் 25 மீட்டர் நீளத்திற்கு உபரி நீர் வழிந்தோடி அமைந்துள்ளது. இவ்வேரியின் மொத்த கரையின் நீளம் 3092 மீட்டர் ஆகும். இவ்வேரியின் ஆயக்கட்டு பகுதிகள் அனைத்தும் நகர்மயம் ஆனதின் விளைவாக ஏரியின் நீர் அனைத்தும் குடிநீர் பயன்பாட்டிற்கு மற்றும் நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் இருக்கவே பயன்பட்டு வருகிறது.

    பல வருடங்களாக ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீரானது மௌலிவாக்கம், மதனந்தபுரம் மற்றும் முகலிவாக்கம் கிராம பட்டா நிலங்களின் வழியாக சென்று முகலிவாக்கத்தில் உள்ள இராமாபுரம் ஓடையில் கலந்து மணப்பாக்கம் மற்றும் இராமாபுரம் வழியாக சென்று அடையாறு ஆற்றில் சேரும்படி அமைந்திருந்தது.

    தற்பொழுது உபரி நீர் செல்லும் பட்டா நிலங்கள் முழுவதும் குடியிருப்பு பகுதிகளாக மாறிவிட்டதாலும், ஏரியின் குறுக்கே புறவழிச்சாலை அமைக்கப்பட்டதாலும் ஏரியின் உபரி நீர் வெளியேறுவதற்கு வழியில்லாமல் போரூர் ஏரியின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள கொளுத்துவான்சேரி, சீனிவாசபுரம், பரணிபுத்தூர், பட்டூர், மற்றும் அய்யப்பதாங்கல் கிராமங்களில் வெள்ள நீர் சூழ்ந்து இப்பகுதிகளில் உள்ள மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. கடந்த ஆண்டு பருவ மழையின் போது மேற்கண்ட பகுதிகள் பெரும் வெள்ள பாதிப்புக்கு உள்ளானது.

    தமிழக முதலமைச்சர் 04.12.2021 அன்று போரூர் ஏரியின் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு உடனடியாக வெள்ள பாதிப்புகளை தவிர்க்க பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியதன் அடிப்படையில், காஞ்சிபுரம் மற்றும் சென்னை மாவட்டங்களில் பருவமழைக் காலங்களில் வெள்ள பாதிப்பு ஏற்படாமல் தடுக்க அடையாறு மற்றும் கொசஸ்தலையாறுகளை அகலப்படுத்துதல், நீர் வழித்தடங்களை மேம்படுத்துதல், கரைகளை சீரமைத்து பலப்படுத்துதல் மற்றும் வடிகால்கள் அமைத்தல் போன்ற பணிகளை ரூ.250 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்துவதற்கு நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

    இதில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் போரூர் ஏரியில் வெள்ள பாதிப்பு ஏற்படாமல் தடுக்க காஞ்சிபுரம் மாவட்டம் போரூர் ஏரியின் உபரி நீர் கால்வாயினை மேம்படுத்துதல் மற்றும் நீர் ஒழுங்கி அமைத்தல் பணி, காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் வட்டம் தேசிய நெடுஞ்சாலையின் புறவழிசாலையில் கூடுதல் பெட்டி வடிவிலான கல்வெட்டுகள் Push through முறை மூலம் அமைத்தல் பணி (ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டுள்ளது), காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் வட்டம் கொளுத்துவான்சேரி சாலையில் தந்தி கால்வாயிலிருந்து போரூர் ஏரியின் உபரி நீர் கால்வாய் வரை புதியதாக மூடிய வடிவிலான கால்வாய் அமைத்தல் பணி, சென்னை மாவட்டம் ஆலந்தூர் வட்டம் போரூர் ஏரியில் புதிய மதகு அமைத்தல் மற்றும் போரூர் ஏரியிலிருந்து இராமாபுரம் ஓடை வரை மூடிய வடிவிலான கால்வாய் அமைக்கும் பணி ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

    இப்பணியால் போரூர் ஏரியின் அருகில் உள்ள தனலட்சுமி நகர், குமரன் நகர், ஸ்ரீ சாய் நகர், மதுரம் நகர், ஜோதி நகர், பாலாஜி நகர், சீனிவாசபுரம், மற்றும் மாங்காடு, கொளுத்துவான்சேரி, சீனிவாசபுரம், பரணிபுத்தூர், பட்டூர், பெரியபணிச்சேரி, அய்யப்பன்தாங்கல், கெருகம்பாக்கம், கொளப்பாக்கம், மதனந்தபுரம், முகலிவாக்கம் மற்றும் மணப்பாக்கம் கிராமங்களில் வெள்ள நீர் சூழாமல் அடையாறு ஆற்றினை சென்றடையும். இதனால் குடியிருப்பு பகுதிகளில் நீர் தேங்காமல் பொதுமக்கள் பாதுகாக்கப்படுவர். இவ்வாறு அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.

    • சுங்குவார்சத்திரம் அருகே 22 சாமி சிலைகளை சேதப்படுத்தி கோவிலுக்கு வெளியே வீசப்பட்டு இருந்தது.
    • இது குறித்து சுங்குவார்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரந்தாமன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    சுங்குவார்சத்திரம் அருகே உள்ள கண்டிவாக்கம் கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு மர்மநபர் அதே கிராமத்தில் இருக்கும் லஷ்மி அம்மன் கோவில் மற்றும் விநாயகர் கோவிலில் இருந்த நவகிராக சிலைகள், தட்சிணாமூர்த்தி, துர்கை சிலைகள், விநாயகர் சிலை உள்பட 22 சாமி சிலைகளை சேதப்படுத்தி கோவிலுக்கு வெளியே வீசப்பட்டு இருந்தது.

    இது குறித்து சுங்குவார்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரந்தாமன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

    விசாரணையில் எடையார்பாக்கம் ஊராட்சி மேட்டு காலனி, பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த சதிஷ் பிரேம் குமார் என்கிற துளசி (வயது40) என்பவர் சாமி சிலைகளை சேதப்படுத்தியது தெரியவந்தது.

    இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். கடவுள் நம்பிக்கை இல்லை என்பதால் மதுபோதையில் சாமி சிலைகளை சேதபடுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.

    • குன்றத்தூர் போரூர் ஏரி அருகே வெள்ள ரூ.100 கோடி மதிப்பீட்டில் தடுப்பு பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
    • நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.ஆர்த்தி, மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் படப்பை ஆ.மனோகரன் பங்கேற்பு

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் போரூர் ஏரி அருகே ரூ.100 கோடி மதிப்பீட்டில் வெள்ள தடுப்பு பணிகளை தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.ஆர்த்தி, மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் படப்பை ஆ.மனோகரன், குன்றத்தூர் ஒன்றியச் செயலாளர் ஏ.வந்தேமாதரம், திருவள்ளுவர் கொசஸ்தலையாறு வடிநில கோட்ட நீர்வள ஆதாரத் துறை செயற்பொறியாளர் சி.பொதுப்பணி திலகம் மற்றும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • தமிழகத்தின் பாரம்பரியக் கலைகளான குரலிசை, நாதசுரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய ஏழு கலைப் பிரிவுகளில் மூன்றாண்டு சான்றிதழ் பயிற்சி அளிக்கப்படுகிறது.
    • பயிற்சி வகுப்புகள் வார நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. 12 வயது முதல் 25 வயது வரை உள்ள ஆண், பெண் இருபாலரும் இப்பயிற்சியில் சேரலாம் பயிற்சிக் காலம் மூன்று ஆண்டுகள் ஆகும்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறையால் நடத்தப்படும் காஞ்சிபுரம் மாவட்ட அரசு இசைப்பள்ளியானது கோட்டைக்கால் கிராமம், (செவித்திறன குறை உடையோருக்கான அரசு உயர் நிலைப்பள்ளி அருகில்) சதாவரம், ஓரிக்கை அஞ்சல் என்கிற முகவரியில் இயங்கி வருகிறது.

    இப்பள்ளியில் தமிழகத்தின் பாரம்பரியக் கலைகளான குரலிசை, நாதசுரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய ஏழு கலைப் பிரிவுகளில் மூன்றாண்டு சான்றிதழ் பயிற்சி அளிக்கப்படுகிறது.

    பயிற்சி வகுப்புகள் வார நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. 12 வயது முதல் 25 வயது வரை உள்ள ஆண், பெண் இருபாலரும் இப்பயிற்சியில் சேரலாம் பயிற்சிக் காலம் மூன்று ஆண்டுகள் ஆகும்.

    பயிற்சி முடிவில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு சான்றிதழ் வழங்கப்படுகிறது. சேர்க்கை கட்டணமாக முதலாம் ஆண்டிற்கு ரூ.1500, இரண்டாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு கட்டணமாக ரூ.135 மட்டும் செலுத்தப்பட வேண்டும்.

    மாணவ, மாணவிகளுக்கு இலவச பஸ் பயணச்சலுகை 16, 17 வயதுடைய மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி மற்றும் மாதந்தோறும் ரூ.400 அனைத்து மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகை அளிக்கப்படுகிறது.

    இசைப்பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இசை ஆசிரியராக பணிபுரியவும் நாதஸ்வரம், தவில், தேவாரம் பயின்ற மாணவர்கள் அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பணிபுரியவும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படுகிறது.

    • பெண் பயணி ஒருவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவரிடம் தனியாக விசாரணை நடத்தி சோதனையிட்டனர்.
    • அவருடைய சூட்கேஸ் மற்றும் உள்ளாடைகளுக்குள் தங்க கட்டிகள் மறைத்து கடத்தி வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    ஆலந்தூர்:

    இலங்கையில் இருந்து சென்னைக்கு இன்று காலை பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அப்போது பெண் பயணி ஒருவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவரிடம் தனியாக விசாரணை நடத்தி சோதனையிட்டனர்.

    அவருடைய சூட்கேஸ் மற்றும் உள்ளாடைகளுக்குள் தங்க கட்டிகள் மறைத்து கடத்தி வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து அவரிடம் இருந்த ரூ.1 கோடி 59 லட்சம் மதிப்புடைய 3.42 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர் இலங்கையை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

    அவரிடம் தங்க கட்டிகளை கொடுத்தது யார்? அதனை சென்னை விமான நிலையத்தில் வாங்க வந்தவர் யார்? என்பது குறித்து அதிகாரிகள் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பாண்டிச்சேரியில் இருந்து சென்னை நோக்கி பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டு இருந்தது.
    • பாதிக்கப்பட்ட பயணிகள் ரெயில்வே போலீசுக்கு தகவல் அளித்தனர்.


    பாண்டிச்சேரியில் இருந்து சென்னை நோக்கி பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டு இருந்தது. அந்த ரெயிலில் பயணிகள் சிலர் ரெயில் பெட்டியில் நடந்து செல்லும் வழியில் கும்பலாக அமர்ந்து பணம்வைத்து ரம்மி விளையாடினர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பயணிகள் ரெயில்வே போலீசுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து திரிசூலம் ரெயில் நிலையத்திற்கு வந்ததும் ரெயில் நிறுத்தப்பட்டது. பரங்கிமலை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் போலீசார் சோதனை நடத்தி பயணிகளுக்கு இடையூறாக அமர்ந்து பணம் வைத்து ரம்மி விளையாடிய 10 பேரை கைது செய்தனர். ரெயில்வே பாதுகாப்பு சட்டத்தின்படி அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.அவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    • கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் கோவிலில் இருந்த விநாயகர் சிலை, நவக்கிரக சிலைகளை உடைத்து சேதப்படுத்தினர்.
    • சாமி சிலைகளை சேதப்படுத்திய கும்பலை கைது செய்யக்கோரி 50-க்கும் மேற்பட்டோர் எடையார்பாக்கம்-பிச்சிவாக்கம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    சுங்குவார்சத்திரம் அடுத்த துலசபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கண்டிவாக்கம் கிராமத்தில் விநாயகர் கோவில் உள்ளது.

    நேற்று அதிகாலை கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் கோவிலில் இருந்த விநாயகர் சிலை, நவக்கிரக சிலைகளை உடைத்து சேதப்படுத்தினர். மேலும் சிலைகளை கோவில் அருகே தூக்கி வீசி சென்றுவிட்டனர்.

    இதேபோல் அதே பகுதியில் உள்ள ஸ்ரீலட்சுமி அம்மன் கோவிலில் பிரகாரத்தின் வெளியில் உள்ள அம்மன் சிலைகளை சேதப்படுத்தி உள்ளனர்.

    2 கோவில்களிலும் இருந்த நவக்கிரக சிலைகள், தட்சிணாமூர்த்தி, துர்க்கை உள்ளிட்ட 22 சிலைகள் பீடத்தில் இருந்து பெயர்த்து எடுத்து சேதப்படுத்தி தூக்கி வீசப்பட்டு இருந்தது. திரிசூலத்தையும் உடைத்து இருந்தனர்.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் சாமி சிலைகளை சேதப்படுத்திய கும்பலை கைது செய்யக்கோரி 50-க்கும் மேற்பட்டோர் எடையார்பாக்கம்-பிச்சிவாக்கம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் சுங்குவார்சத்திரம் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சாமி சிலைகளை சேதப்படுத்திய நபர்களை உடனே கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இதுகுறித்து சுங்குவார் சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரந்தாமன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். சாமி சிலைகள் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நன்றாக படிக்க வைப்பதாக கூறி பிளஸ்-2 மாணவியை பலமுறை போலி சாமியார் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
    • இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து போலி சாமியாரை கைது செய்தார். பின்னர் அவரை செங்கல்பட்டு போக்சோ கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    சுங்குவார்சத்திரம் அடுத்த ராமானுஜபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த். சாமியாரான இவர் அதே பகுதியில் உள்ள கோவிலில் குறி சொல்லி வந்தார்.

    இவரிடம் அப்பகுதி மக்கள் தங்களது குறைகளை கூறி பரிகாரம் கேட்டு வந்தனர். இதனால் சாமியார் பிரசாந்த் அப்பகுதியில் பிரபலமாக இருந்தார்.

    இந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவி ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு குறி கேட்பதற்காக சாமியார் பிரசாந்திடம் சென்றார்.

    அப்போது மாணவியை நன்றாக படிக்க வைப்பதாக ஆசைவார்த்தை கூறி தன்வசப்படுத்தினார். இதனால் மாணவி அடிக்கடி பிரசாந்தை சந்தித்து வந்தார்.

    ஆனால் சாமியார் பிரசாந்துக்கு மாணவி மீது ஆசை ஏற்பட்டது. அவரை நன்றாக படிக்க வைப்பதாக கூறி வசப்படுத்தி மாணவியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும் இதுபற்றி யாரிடமும் கூறக்கூடாது என்று சாமியார் பிரசாந்த் மிரட்டியதாகவும் தெரிகிறது.

    இதற்கிடையே சாமியார் பிரசாந்த்தின் பாலியல் தொல்லை எல்லை மீறியதால் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து மாணவி தனது பெற்றோரிடம் கூறி அழுதார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் ஸ்ரீபெரும்புதூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர்.

    விசாரணையில் போலி சாமியார் பிரசாந்த் ஆசை வார்த்தை கூறி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து போலி சாமியார் பிரசாந்த்தை கைது செய்தார். பின்னர் அவரை செங்கல்பட்டு போக்சோ கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.

    • திருமண மண்டபங்களில் பொதுமக்களின் எண்ணிக்கை 100 நபர்கள் இருப்பதை உறுதி செய்திட வேண்டும்.
    • இறப்பு வீடுகளில் 50 நபர்களுக்கு மேல் இருத்தல் கூடாது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டு உள்ள அறிவிப்ப்பில் கூறியிருப்பதாவது:-

    ஒவ்வொருவரும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் முகக்கவசம் அணியாமல் வெளியில் செல்பவர்களுக்கு கட்டாயமாக அபராதம் விதிக்கப்படும். பொது இடங்களில் ஒருவருக்கொருவர் 5 அடி தூரம் இடைவெளி விட்டு நிற்க வேண்டும்.

    அனைத்து வணிக விற்பனை கூடங்கள் மற்றும் உணவகங்களில் கை சுத்தம் செய்தல் கட்டாயமாக்கப்படுகிறது. நுழைவு வாயிலில் கைகளை சுத்தம் செய்திடும் கிருமிநாசினி வைக்கப்பட வேண்டும். மேலும் உடல் வெப்பநிலையை கருவி மூலம் கண்காணிக்க வேண்டும். பெரிய வணிக வளாகங்களில் குளிர்சாதன உபகரணம் (ஏ.சி.) பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது.

    பொதுமக்கள் அவசியமின்றி பொது இடங்களுக்கு செல்வதையும் மற்றும் மக்கள் கூட்டம் அதிகமுள்ள இடங்களுக்கு செல்வதையும் தவிர்க்க வேண்டும்.

    திருமண மண்டபங்களில் பொதுமக்களின் எண்ணிக்கை 100 நபர்கள் இருப்பதை உறுதி செய்திட வேண்டும் மற்றும் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும்.

    இறப்பு வீடுகளில் 50 நபர்களுக்கு மேல் இருத்தல் கூடாது. அனைவரும் முதல் தவணை இரண்டாம் தவணை மற்றும் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசிகள் கட்டாயமாக போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சுப்பிரமணி இருந்த அறையில் உள்ள ஏ.சி.யில் இருந்து மின்கசிவு ஏற்பட்டு கரும்புகை வந்தது.
    • ஏ.சி.யில் மின்கசிவு ஏற்பட்டது எப்படி என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ஆலந்தூர்:

    நங்கநல்லூர், 19-வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் சுப்பிரமணியன்(வயது 84). இவருக்கு இரண்டு கால்களும் செயலிழந்து விட்டன. இவருடைய மனைவி அன்னபூரணி. இருவரும் தனியாக வசித்து வந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை 7 மணியளவில் சுப்பிரமணி இருந்த வீட்டின் அறையில் உள்ள ஏ.சி.யில் இருந்து மின்கசிவு ஏற்பட்டு கரும்புகை வந்தது. சிறிது நேரத்தில் தீ மளமளவென அறை முழுவதும் பரவி கரும்புகை ஏற்பட்டது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அன்னபூரணி கூச்சலிட்டார். அக்கம்பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றும் முடியவில்லை. தகவல் அறிந்ததும் கிண்டி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

    அப்போது வீட்டில் உள்ள அறையில் எரிந்த நிலையில் சுப்பிரமணியம் இறந்து கிடந்தார். அவர் தீயில் சிக்கி வெளியேற முடியாமல் இறந்து இருப்பது தெரிந்தது. அவரது உடலை பழவந்தாங்கல் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஏ.சி.யில் மின்கசிவு ஏற்பட்டது எப்படி? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ×