என் மலர்tooltip icon

    ஈரோடு

    ஈரோடு கோபிசெட்டிபாளையத்தில் தனியார் மொத்த உர விற்பனை நிறுவன உரிமையாளர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையத்தில் தனியார் மொத்த உர விற்பனை நிறுவன உரிமையாளர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    நிலம் வாங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்ட புகாரில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான அலுவலகங்களிலும் ரெய்டு நடைபெற்றது.

    கோவை, ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள் 10 பேர் தீவிர சோதனை நடத்தினர்.

    இந்நிலையில் கோபிசெட்டிபாளையத்தில் தனியார் உரவிற்பனை நிறுவன உரிமையாளர் வீடு, அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    கொரோனாவில் இருந்து ஈரோடு கலெக்டர் சி.கதிரவன் குணமடைந்தார். அவர் நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து நேரில் ஆய்வு செய்தார்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவனுக்கு கடந்த 21-ந் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவருக்கு 25 சதவீத தொற்று இருந்ததால், கலெக்டர் முகாம் அலுவலகத்திலேயே அவர் தனிமைப்படுத்திக்கொண்டார்.

    அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை. வீட்டில் இருந்தபடியே கலெக்டர் சி.கதிரவன் அலுவலக பணிகளை செய்து வந்தார். செல்போன் மூலமாகவும், காணொலி காட்சி மூலமாகவும் பணியை தொடர்ந்தார்.

    இதற்கிடையே அவருக்கு கொரோனா மறு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று முடிவு வந்தது. நோய் தொற்றில் இருந்து குணமடைந்ததால், அவர் கடந்த 28-ந் தேதியில் இருந்து வெளியில் செல்லலாம் என்று டாக்டர்கள் அறிவுறுத்தினார்கள். இருந்தாலும், கலெக்டர் சி.கதிரவன் வெளிநிகழ்ச்சிகளில் உடனடியாக பங்கேற்காமல் இருந்து வந்தார்.

    இந்தநிலையில் ஈரோடு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.

    பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி மற்றும் பெருந்துறை தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ள கொரோனா நோயாளிகளையும் அவர் நேரில் பார்வையிட்டார்.

    அப்போது கொரோனா நோயாளிகளுக்கு தேவையான மருந்துகள் இருப்பு உள்ளதா? உணவுகள் முறையாக வழங்கப்படுகிறதா? சிகிச்சை அளிக்கப்படுகிறதா? என்று கேட்டறிந்தார்.

    இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் கூறியதாவது:-

    தமிழக அரசு 4-ம் கட்ட ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து உள்ளது. இதில் பொதுமக்களின் நலன் கருதி மாவட்டத்துக்குள் பஸ்கள் இயக்கப்படுகிறது. இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்படுகிறது. 100 சதவீத பணியாளர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இருந்தாலும், பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிந்து செல்லுதல், கை கழுவுதல், கிருமி நாசினி பயன்படுத்துதல் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும். கொரோனா தொற்று உறுதி செய்யப்படும் நபர்கள் அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின்போது மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி முதல்வர் டாக்டர் ஆர்.மணி, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் சவுண்டம்மாள் ஆகியோர் உடனிருந்தனர்.
    ஈரோடு மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் 34 ஆயிரம் மாணவ -மாணவிகள் சேர்க்கப்பட்டனர். தனியார் பள்ளிக்கூடங்களை விட அரசு பள்ளிக்கூடங்களில் மாணவர் சேர்க்கை அதிகரித்து உள்ளது.
    ஈரோடு:

    தமிழ்நாடு முழுவதும் கடந்த 17-ந்தேதி முதல் அரசு பள்ளிக்கூடங்களில் மாணவர் சேர்க்கை தொடங்கி நடந்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் தொடக்கத்தில் ஓரிரு நாட்கள் தனியார் பள்ளிக்கூடங்களில் எண்ணிக்கை அதிகரித்து இருந்தது. ஆனால் தற்போது அரசு பள்ளிக்கூடங்களில் மாணவர் சேர்க்கை அதிகரித்து இருக்கிறது.

    குறிப்பாக கடந்த 17-ந் தேதி முதல் 27-ந் தேதி வரையிலான நாட்களில் மாணவர் சேர்க்கை அதிகரித்து இருக்கிறது. 27-ந் தேதிவரை அரசு மற்றும் மாநகராட்சி, ஒன்றிய பள்ளிக்கூடங்களில் 1-ம் வகுப்பில் 5 ஆயிரத்து 660 மாணவ -மாணவிகள் சேர்க்கப்பட்டு உள்ளனர். 2-ம் வகுப்பில் 408 பேர், 3-ம் வகுப்பில் 381 பேர், 4-ம் வகுப்பில் 394 பேர், 5-ம் வகுப்பில் 300 பேர் புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

    6-ம் வகுப்பில் 631 பேர் சேர்ந்து இருக்கிறார்கள். 7-ம் வகுப்பில் 46 பேரும், 8-ம் வகுப்பில் 39 பேரும் சேர்ந்து இருக்கிறார்கள். மொத்தமாக 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்புவரை அரசு பள்ளிக்கூடங்களில் 7 ஆயிரத்து 859 மாணவ -மாணவிகள் சேர்ந்து உள்ளனர். இதுபோல் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிக்கூடங்களில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடந்தது. இதில் 6-ம் வகுப்பில் 6 ஆயிரத்து 859 மாணவ -மாணவிகள் சேர்ந்து இருக்கிறார்கள்.

    7-ம் வகுப்பில் 303 பேரும், 8-ம் வகுப்பில் 298 பேரும், 10-ம் வகுப்பில் 95 பேரும் புதிதாக சேர்ந்து இருக்கிறார்கள். 11-ம் வகுப்பில் புதிதாக 8 ஆயிரத்து 730 பேர் சேர்ந்து உள்ளனர். 12-ம் வகுப்பில் 18 பேர் சேர்ந்து இருக்கிறார்கள். ஆக மொத்தம் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புவரை 27 ஆயிரத்து 448 மாணவ-மாணவிகள் சேர்ந்து உள்ளனர்.

    நிதி உதவி பெறும் பள்ளிக்கூடங்களிலும் வழக்கத்தை விட அதிகமான மாணவ-மாணவிகள் சேர்ந்து இருக்கிறார்கள். நிதி உதவி பள்ளிக்கூடங்களில் 1-ம் வகுப்பில் 949 மாணவ -மாணவிகள் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள். 2-ம் வகுப்பில் 45 பேர், 3-ம் வகுப்பில் 47 பேர், 4-ம் வகுப்பில் 42 பேர், 5-ம் வகுப்பில் 55 பேர், 6-ம் வகுப்பில் 90 பேர் என புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

    நிதி உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிக்கூடங்களில் 6-ம் வகுப்பில் 2 ஆயிரத்து 235 மாணவ-மாணவிகள், 7-ம் வகுப்பில் 61 பேர், 8-ம் வகுப்பில் 53 பேர், 9-ம் வகுப்பில் 588 பேர் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள். 11-ம் வகுப்பில் 5 ஆயிரத்து 931 பேர் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள். இவ்வாறு நிதி உதவி பெறும் பள்ளிக்கூடங்களில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புவரை 7 ஆயிரத்து 160 மாணவ -மாணவிகள் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள்.

    ஒட்டு மொத்தமாக 27-ந் தேதி வரை ஈரோடு மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிக்கூடங்களில் 34 ஆயிரத்து 608 மாணவ -மாணவிகள் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள். தனியார் பள்ளிக்கூட சேர்க்கையை ஒப்பிடும்போது இது அதிகம் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். 11-ம் வகுப்பில் தனியார் பள்ளிக்கூடங்களை விட மிக அதிக அளவில் மாணவ -மாணவிகள் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள். ஒட்டு மொத்தமாக அரசு பள்ளிக்கூடங்களை நோக்கி மாணவ -மாணவிகள் அதிகம் வந்து இருக்கிறார்கள்.

    ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகள் 3 பேருக்கு ஸ்கூட்டர்களை எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு ஆகியோர் வழங்கினர்.
    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகள் 3 பேருக்கு, கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. மேம்பாட்டு நிதியில் இருந்து தலா ரூ.63 ஆயிரம் மதிப்பிலான விலையில்லா ஸ்கூட்டர் வழங்கும் விழா ஈரோடு காலிங்கராயன் விருந்தினர் மாளிகையில் நடந்தது. விழாவில் எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டு ரூ.1 லட்சத்து 89 ஆயிரம் மதிப்பிலான 3 ஸ்கூட்டர்களை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கினார்கள்.

    இதில் அ.தி.மு.க. பகுதி செயலாளர்கள் கேசவமூர்த்தி, ஜெகதீஷ், தங்கமுத்து, ராமசாமி, மாணவர் அணி மாவட்ட செயலாளர் ரத்தன் பிரித்வி உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.
    ஈரோடு கொல்லம்பாளையத்தில் பொதுமக்கள் சாக்கடை கால்வாயை சுத்தம் செய்தனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாநகராட்சி கொல்லம்பாளையத்தில் சாக்கடை கால்வாய் ஒன்று உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு நன்னீர் ஓடையாக இருந்த இந்த கால்வாய், குடியிருப்புகள் அதிகரிப்பாலும் போதிய பராமரிப்பு இல்லாமலும் சாக்கடை கால்வாயாக மாறியது. இங்கு அந்த பகுதி பொதுமக்கள் குப்பைகளை கொட்டுவதும், தேவையற்ற பொருட்களை வீசியும் வருகிறார்கள்.

    இதனால் கொல்லம்பாளையம் ஓடையில் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு விடும். இவ்வாறு பல மாதங்காளாக ஓடை அடைபட்டு சாக்கடை தேங்கியது. அதுமட்டுமின்றி, கால்வாயில் இருந்து சாக்கடை கழிவு அருகில் உள்ள குடிநீர் குழாய்களிலும் கலந்தது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்தனர். சாக்கடையை சுத்தம் செய்யவும், தேங்கிக்கிடக்கும் குப்பைகளை அகற்றவும் மாநகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இந்த நிலையில் கொல்லம்பாளையம் தாயுமானசுந்தரம் வீதியை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று கூடி சாக்கடையை சுத்தம் செய்யவும், குப்பைகளை அகற்றவும் முடிவு செய்தனர். அதன்படி நேற்று ஒரு பொக்லைன் எந்திரம் மற்றும் குப்பை எடுத்துச்செல்லும் வாகனங்களை வாடகைக்கு எடுத்து சாக்கடையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். மேலும் அந்த பகுதியில் நீண்ட நாட்களாக குவிந்து கிடந்த குப்பைகளையும் அகற்றினார்கள்.

    இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் கூறும்போது, ‘கொரோனா காலத்தில் வீதிகளில் குப்பை சேருவது மிகவும் ஆபத்துக்கு உரியது. இந்த பகுதியில் சுமார் 200 வீடுகள் உள்ளன. பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாக உள்ளது. இங்கு தூய்மை பணி செய்யும் பணியாளர்கள் அவ்வப்போது வந்தாலும் முறையாக குப்பை அள்ளுவது இல்லை. சாக்கடை அடைப்பினையும் எடுப்பதில்லை. இதனால் ஏற்பட்ட பாதிப்பினை அகற்ற முடிவு செய்தோம். பொதுமக்கள் ஒன்று சேர்ந்து இந்த பணியை செய்து இருக்கிறோம். வருங்காலத்தில் இதுபோன்ற நிலைகள் ஏற்படாமல் இருக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.
    தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படுவதாக பெற்றோர்கள் புகார் அளித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூரில் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு எந்தவித கட்டணமும் வசூல் செய்யப்படவில்லை. தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படுவதாக பெற்றோர்கள் புகார் அளித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    மாணவர்கள் சேர்க்கைக்காகவும், மாணவர்களுக்கு வழங்கப்படும் பொருட்களுக்காகவும் மாணவர்களின் எண்ணிக்கையை பொறுத்து ஆசிரியர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வர வேண்டும்.

    நீட் தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு குறித்து முதல்-அமைச்சர் தகுந்த நடவடிக்கை மேற்கொள்வார். குழந்தை தொழிலாளர்களை நல்வழிப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இந்த ஆண்டு 1 லட்சத்து 72 ஆயிரம் குழந்தைகள் கூடுதலாக ஒன்றாம் வகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளனர். செப்டம்பர் வரையிலும் சேர்க்கை நடைபெறும் என்பதால் கூடுதல் சேர்க்கைக்கு வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    மாணவர்கள் சேர்க்கைக்கு ஏற்ப ஒவ்வொரு வகுப்பிற்கும் 20 ஆயிரம் புத்தகங்கள் தயார் நிலையில் உள்ளது. கொரோனா சிகிச்சை அளிக்க கோபி கலை கல்லூரி, அந்தியூர், தாளவாடி, பெருந்துறை ஆகிய பகுதிகளில் கூடுதல் மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    'அரியர் மாணவர்களின் அரசனே' என்று தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை புகழ்ந்து ஒரு விளம்பர தட்டி வைக்கப்பட்டு இருந்தது.
    ஈரோடு:

    கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழ்நாட்டில் நடக்க இருந்த பள்ளி, கல்லூரி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதுடன், இந்த தேர்வு எழுத இருந்த அனைத்து மாணவ-மாணவிகளும் தேர்ச்சி அடைந்ததாக தமிழக அரசு அறிவித்தது. அதைத்தொடர்ந்து கல்லூரிகளில் அரியர் (தோல்வி அடைந்த) பாடங்களை எழுதுவதற்கு தேர்வுக்கட்டணம் செலுத்தி இருந்தவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் அறிவித்தார். இது பல ஆண்டுகளாக கல்லூரிகளில் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற முடியாமல் இருந்த முன்னாள் மாணவர்களுக்கு மகிழ்ச்சியை அளித்து உள்ளது. இதை கொண்டாடும் வகையில் ஈரோடு கொல்லம்பாளையம் பகுதியில் நேற்று காலை ஒரு விளம்பர தட்டி வைக்கப்பட்டு இருந்தது. அதில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உருவப்படம் வைத்து 'அரியர் மாணவர்களின் அரசனே' என்று அவரை புகழ்ந்து வாசகங்கள் போடப்பட்டு இருந்தன.

    மேலும் ஒரு திருக்குறள் வாசகமும், ஐயா எடப்பாடியாரே நீர் வாழ்க வாழ்க என்ற வாசகங்களும் இடம் பெற்று இருந்தன. அரியர் மாணவர்கள் சார்பில் வைக்கப்பட்டு இருந்த இந்த விளம்பர தட்டியை அந்த வழியாக சென்ற பலரும் நின்று பார்த்து படித்து சிரித்துச்சென்றனர். இதுபற்றி தகவல் அறிந்த சூரம்பட்டி போலீசார் விரைந்து வந்து விளம்பர தட்டியை அங்கிருந்து அகற்றினார்கள். இதற்கிடையே இந்த விளம்பர தட்டி படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
    பவானியில் புதுமண தம்பதி திடீரென மாயமானார்கள். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பவானி:

    பவானி ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் மாதேஸ்வரன். இவரது மகள் கவுதமி (23). இவருக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது.

    குழந்தை இல்லாததால் கணவர் அவரை தாய் வீட்டிற்கு அனுப்பி வைத்தாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கவுதமிக்கும் அதே பகுதியை சேர்ந்த பார்த்தீபனுக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.

    இவர்கள் வெள்ளோடு பகுதியில் ஏரி கருப்பராயன் கோவிலில் கடந்த 3-ந் தேதி திருமணம் செய்துள்ளனர். பின்னர் ஈரோடு வேப்பம் பாளையம் பகுதியில் குடியிருந்து வந்தனர். இது பார்த்தீபனின் பெற்றோருக்கு தெரிய வந்தது.

    அவர்கள் மகனை அழைத்து சென்றதாகவும், கவுதமியுடன் பேசக் கூடாது என கூறி பார்த்தீபன் செல்போனை வாங்கி வைத்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ஈரோட்டுக்கு துணி எடுக்க செல்வதாக கூறி பார்த்தீபன் வந்துள்ளார். கொங்கம் பாளையம் பகுதியில் இருந்து கவுதமிக்கு போன் செய்து வர சொல்லி உள்ளார். அதன்படி கவுதமியும் வந்துள்ளார். இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர். அவர்களுடன் கவுதமியின் தந்தை- தாயும் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர்.

    பவானி பழைய பஸ் நிலையத்திற்கு அருகில் வரும் போது பார்த்தீபனும், கவுதமியும் மாயமாகி விட்டனர். இது குறித்து கவுதமி தந்தை மாதேஸ்வரன் பவானி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

    இன்ஸ்பெக்டர் குமரவேல், சப்-இன்ஸ்பெக்டர் வடிவேல் குமார் ஆகியோர் வழக்குபதிவு செய்து மாயமான பார்த்தீபன், கவுதமியை தேடி வருகிறார்கள்.

    தனியார் பள்ளியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளுக்கு குப்பை வண்டியில் உணவு சப்ளை செய்யப்பட்டதால் அதை கண்டித்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்துள்ளது. மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட, குறைவான பாதிப்புடைய குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என 51 பேர் அந்தியூர் அருகே உள்ள பருவாச்சி செம்புளிச்சாம் பாளையத்தில் உள்ள தனியார் பள்ளிளில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

    இவர்களுக்கு எந்த வித அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை. குடிநீர் வசதிகள் ஏற்பாடு செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. மாத்திரை உட்கொள்வதற்கு சுடு தண்ணீர் தர மறுப்பதாகவும், கழிவறையில் தண்ணீர் வசதியில்லை. குப்பைகள் சுத்தப்படுத்தப்படாமல் தேங்கி இருப்பதாக முகாமில் தங்கி உள்ளவர்கள் குற்றம் சாட்டினர்கள்.

    தூய்மை பணியாளர்கள் பணி செய்ய வர மறுப்பதாகவும், தங்களுக்கான உணவு பொருட்களை குப்பை வண்டியில் வைத்து கொண்டு வந்து வினியோகிப்பதாகவும் தெரிவித்தனர். இது போன்ற சூழல் தங்களை மேலும் அதிக அளவிலான நோய் தொற்றுக்கு கொண்டு செல்லும் என அச்சம் தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து நோயாளிகள் அனைவரும் தாங்கள் தங்க வைக்கப்பட்டுள்ள பள்ளி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை நோயாளிகளில் ஒருவரே தனது செல்போனில் படம் பிடித்து சமூக வலை தளத்தில் வெளியிட்டார்.

    இதனை தொடர்ந்து பவானி தாசில்தார் அங்கு சென்று நோயாளிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அவர்களது அனைத்து தேவைகளும் உடனடியாக நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார்.

    அம்மாபேட்டை பகுதிகளில் நாளை பராமரிப்பு பணி நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

    அம்மாபேட்டை:

    கோனேரிப்பட்டி துணை மின் நிலையம் மற்றும் பூனாச்சி துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் நாளை (வெள்ளிக்கிழமை) அம்மாபேட்டை, நெருஞ்சிப்பேட்டை, சித்தார், எஸ்.பி.கவுண்டனூர், ஊமா ரெட்டியூர், சிங்கம் பேட்டை, ஆனந்தம் பாளையம், காடப்பநல்லூர், கல்பாவி, கேசரிமங்கலம், கோனேரிப்பட்டி பிரிவு, சின்ன பள்ளம், பட்லூர் நால்ரோடு, ஒலகடம், ஒட்ட பாளையம், தாளபாளையம், பூனாச்சி, முளியனூர், மூணாஞ்சாவடி, பூதப்பாடி, செம்படாபாளையம், சமயதாரணுர், பூசாரியூர், கோண மூக்கனூர், குறிச்சி, மாணிக்கம்பாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.

    இந்த தகவலை கோபி மின் பகிர்மான வட்டம், பவானி உட்கோட்ட செயற்பொறியாளர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

    சென்னிமலை அருகே குடியிருப்பு பகுதியில் கியாஸ் பங்க் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை அருகே குடியிருப்பு பகுதியில் கியாஸ் பங்க் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட கலெக்டருக்கு எழுதியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    சென்னிமலை யூனியன், முகாசிபிடாரியூர் ஊராட்சி, பி.ஆர்.எஸ். ரோடு, பூங்கா நகர் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். குடியிருப்புக்கு அருகில் தனியார் இடத்தில் கியாஸ் பங்க் அமைக்க பணிகள் நடக்கிறது.

    இந்த இடத்தில் கியாஸ் பங்க் அமைந்தால் சுற்றிவசிக்கும் மக்கள் அச்சத்துடன் வசிக்கும் நிலை ஏற்படும். மேலும் அந்த இடத்தில் அதிக அளவில் விசைத்தறி பட்டறைகள் இருப்பதால் பாதிக்கப்படும். இதனால் அந்த இடத்தில் கியாஸ் பங்க் வைக்க அனுமதி அளிக்க கூடாது. இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் கூறியுள்ளனர்.

    அந்தியூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அந்தியூர்:

    அந்தியூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற உள்ளிருப்பு போராட்டத்தில், வட்டார சங்க தலைவர் கிருஷ்ண மூர்த்தி தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கவேல், கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வி, மண்டல வட்டார வளர்ச்சி அலுவலரும், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க வட்டார செயலாளருமான சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில வட்டார பொருளாளர் சுப்பிரமணியன், துணை தலைவர் தேவராஜ், துணை செயலாளர் மகேந்திரன், ஊராட்சி செயலர்கள் மணிமுத்து, பெரியசாமி, எட்வின் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    ×