என் மலர்
செய்திகள்

பவானியில் புதுமண தம்பதி திடீர் மாயம்
பவானி:
பவானி ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் மாதேஸ்வரன். இவரது மகள் கவுதமி (23). இவருக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது.
குழந்தை இல்லாததால் கணவர் அவரை தாய் வீட்டிற்கு அனுப்பி வைத்தாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கவுதமிக்கும் அதே பகுதியை சேர்ந்த பார்த்தீபனுக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.
இவர்கள் வெள்ளோடு பகுதியில் ஏரி கருப்பராயன் கோவிலில் கடந்த 3-ந் தேதி திருமணம் செய்துள்ளனர். பின்னர் ஈரோடு வேப்பம் பாளையம் பகுதியில் குடியிருந்து வந்தனர். இது பார்த்தீபனின் பெற்றோருக்கு தெரிய வந்தது.
அவர்கள் மகனை அழைத்து சென்றதாகவும், கவுதமியுடன் பேசக் கூடாது என கூறி பார்த்தீபன் செல்போனை வாங்கி வைத்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ஈரோட்டுக்கு துணி எடுக்க செல்வதாக கூறி பார்த்தீபன் வந்துள்ளார். கொங்கம் பாளையம் பகுதியில் இருந்து கவுதமிக்கு போன் செய்து வர சொல்லி உள்ளார். அதன்படி கவுதமியும் வந்துள்ளார். இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர். அவர்களுடன் கவுதமியின் தந்தை- தாயும் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர்.
பவானி பழைய பஸ் நிலையத்திற்கு அருகில் வரும் போது பார்த்தீபனும், கவுதமியும் மாயமாகி விட்டனர். இது குறித்து கவுதமி தந்தை மாதேஸ்வரன் பவானி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
இன்ஸ்பெக்டர் குமரவேல், சப்-இன்ஸ்பெக்டர் வடிவேல் குமார் ஆகியோர் வழக்குபதிவு செய்து மாயமான பார்த்தீபன், கவுதமியை தேடி வருகிறார்கள்.






