என் மலர்tooltip icon

    கடலூர்

    விருத்தாசலம் அருகே மர்மகாய்ச்சலால் அவதிப்பட்டு வந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள முதனை கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன். இவரது மனைவி வளர்மதி(வயது 45). இவருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு மர்ம காய்ச்சல் ஏற்பட்டது. உடனே அவரை புதுவையில் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்தநிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனளிக்காமல் வளர்மதி பரிதாபமாக இறந்தார்.

    மர்மகாய்ச்சலுக்கு பெண் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் தண்டனைபெற்ற 3 பேரை விடுதலை செய்தது வருத்தமளிக்கிறது என்று பலியான மாணவி காயத்ரியின் தந்தை வெங்கடேசன் கூறினார். #DharmapuriBusBurning #TNGovernor #BanwarilalPurohit
    விருத்தாசலம்:

    பஸ் எரிப்பு வழக்கில் கைதாகி தண்டனை பெற்று வேலூர் சிறையில் இருந்த 3 பேர் நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.

    பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து பலியான கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள பூவனூரை சேர்ந்த மாணவி காயத்ரியின் தந்தையும், முன்னாள் அரசு கல்லூரி முதல்வருமான வெங்கடேசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தர்மபுரி பஸ் எரிப்பு சம்பவத்தில் குற்றவாளிகளை விடுதலை செய்தது மிகவும் வருத்தம் அளிக்கிறது. அந்த 3 பேருக்கும் மரண தண்டனை என்று அறிவித்து, அதன்பிறகு அதனை ஆயுள் தண்டனை என மாற்றினார்கள். இதற்காக என்ன முயற்சி செய்தார் களோ? தெரியவில்லை.

    அன்றே நீதி தேவதை கண்ணீர் வடிக்க தொடங்கிவிட்டாள். என் மகளை பறிகொடுத்து 18 ஆண்டுகள் ஆகிவிட்டது. அந்த சம்பவத்தில் இருந்து நாங்கள் இன்னும் மீளவில்லை. பல இன்னல்களை, பல சோதனைகளை, பல வேதனைகளை அனுபவித்து வருகிறோம்.

    எங்கள் வீட்டு தெய்வமாக காயத்ரி இருக்கிறாள். இதற்கு மேல் என்னால் எதுவும் கூற முடியவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாணவி கோகிலவாணியின் தந்தை வீராசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    “கடந்த 2000-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ந் தேதி 3 மாணவிகளையும் தீ வைத்து கொளுத்திய நபர்களுக்கு ஒரு நீதிபதி தூக்கு தண்டனை விதிக்கிறார். மற்றொரு நீதிபதி ஆயுள் தண்டனை என்கிறார். அப்படி என்றால் முதல் நீதிபதி அளித்த தீர்ப்பு தவறா?. ஒரு கோர்ட்டு சொன்ன தீர்ப்புக்கு, மற்றொரு கோர்ட்டில் சீராய்வு மனு என்று ஒன்றை வைத்து உள்ளனர்.

    கோர்ட்டு தீர்ப்பை நிறைவேற்றாத அரசு எதற்கு?. இது ஜனநாயகமா?, சர்வாதிகாரமா?. நீதி, நேர்மை கெட்டு போய்விட்டது. கோகிலவாணி இறந்த பிறகு படுத்த படுக்கையான அவரது தாயார் கடந்த ஆண்டு இறந்தே போய்விட்டார்.



    இங்கு ஜனநாயகம் இல்லை. சர்வாதிகாரமாக இருக்கிறது. எதை எடுத்தாலும் லஞ்சம், லாவண்யம். நீதி எங்கு இருக்கிறது? ஏன் இந்த பித்தலாட்டம். முதல்-அமைச்சர் ‘உணர்ச்சி வசப்பட்டு விட்டார்கள்’ என கூறுகிறார். அதை எல்லாம் ஏற்க முடியாது. கவர்னர் முதலில் விடுவிக்க முடியாது என்று அறிவிக்கிறார்.

    தற்போது கவர்னர் ஒப்புதல் வழங்கி இருக்கிறார். இடையில் என்ன நடந்தது?. 3 மாணவிகளின் மரணத்துக்கு நீதி கிடைக்கவில்லை. கோர்ட்டு தீர்ப்பை கொடுத்து நிறைவேற்றாத அரசு ஒன்று இங்கு இருக்கிறது. எதற்கு சட்டம், ஒழுங்கு, நியாயம், தீர்ப்பு என்று வைத்து இருக்கிறார்கள். இதெல்லாம் பச்சை துரோகம்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #DharmapuriBusBurning #TNGovernor #BanwarilalPurohit
    மணிமண்டபத்தை கட்டி முடித்ததற்கு பணம் தராததால் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் கட்டிட தொழிலாளி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    கடலூர்:

    கடலூர் புதிய கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் தங்களது குறைகளை கோரிக்கை மனுக்களாக அளித்தனர்.

    விருத்தாசலம் அருகே உள்ள புதுப்பேட்டையை சேர்ந்தவர் ராஜாராம். கட்டிட தொழிலாளி. இவர் கலெக்டர் அலுவலகத்துக்கு கோரிக்கை மனுவுடன் இன்று வந்தார்.

    கலெக்டர் அலுவலக வளாகத்தில் அவர் மறைத்து வைத்திருந்த மண்எண்ணை பாட்டிலை எடுத்து திடீரென்று உடல் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

    பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அங்கு விரைந்து வந்து ராஜாராம் வைத்திருந்த மண்எண்ணை பாட்டிலை பறித்தனர். தொடர்ந்து அவர் உடல் மீது தண்ணீரை ஊற்றினர். இது குறித்து ராஜாராமிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறியதாவது:-

    கடலூர் மாவட்டம் நான்கோட்டிமுனை என்ற கிராமத்தில் உள்ள ஒருவரின் தாய்க்கு மணிமண்டபம் கட்டும் பணியை என்னிடம் ஒப்படைத்தனர்.

    அதற்கு அவர்கள் முன்பணமாக ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் கொடுத்தனர். மீதி பணத்தை நீங்களே போட்டு வேலையை முடியுங்கள். கடைசியில் நாங்கள் அந்த பணத்தை கொடுத்து விடுகிறோம் என்றனர். அவர்கள் சொன்னபடி நான் பலரிடம் கடன் வாங்கி அந்த மணிமண்டபத்தை கட்டி முடித்து கொடுத்தேன். ஆனால், அவர்கள் இது வரை எனக்கு தரவேண்டிய மீதி பணத்தை கொடுக்கவில்லை.

    இது குறித்து போலீசில் புகார் செய்தும் எந்தவித பயனும் இல்லை. மேலும் விருத்தாசலம் கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்துள்ளேன். அதுவும் நிலுவையில் உள்ளது.

    இந்த சம்பவத்தால் மிகுந்த மனம் உடைந்த நான் கடலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்றேன்.

    இவ்வாறு அவர் போலீ சாரிடம் கூறினார்.

    பின்னர் அவரை சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    கடலூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    கடலூர்:

    புயல், மழையால் பாதிக்கப்படும் கடலூர் மாவட்டத்தை பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும். டெங்கு, பன்றி காய்ச்சலை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    வட்ட செயலாளர் ஜெகத்ரட்சகன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் மணிவண்ணன் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் மேற்கண்ட கோரிக்கை களை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதில் மாவட்ட செயலாளர் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    நெய்வேலியில் மோட்டார் சைக்கிள் தடுப்பு சுவரில் மோதிய விபத்தில் என்.எல்.சி. தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
    நெய்வேலி:

    கடலூர் மாவட்டம் நெய்வேலி புதுநகர் பகுதியை சேர்ந்தவர் ஆரோக்யராஜ் (வயது52). இவர் நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தின் முதலாவது சுரங்கத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு நெய்வேலி 7-வது வட்டத்தில் உள்ள பெரியார் சாலை அருகே ஆரோக்யராஜ் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் உள்ள தடுப்பு சுவரில் ஆரோக்யராஜின் மோட்டார் சைக்கிள் எதிர் பாராதவிதமாக மோதியது.

    இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த ஆரோக்ய ராஜ்க்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உயிருக்கு போராடி கொண்டிருந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக என்.எல்.சி. பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு ஆரோக்யராஜை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து நெய்வேலி டவுன்ஷிப் போலீசில் புகார் செய்யபட்டது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ரவீந்தர்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 
    காட்டுமன்னார்கோவில் அருகே முன்விரோத தகராறில் பெணணை குத்திக்கொலை செய்த குற்றவாளியை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள ஈச்சம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் தவசீலன். இவரது மனைவி வெற்றிச்செல்வி (வயது 46).

    இவருக்கும், தவசீலனின் தம்பி சதாசிவத்துக்கும் இடையே குடும்ப பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் வெற்றிச் செல்வி தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சதாசிவம், வெற்றிச்செல்வியை ஆபாசமாக திட்டினார்.

    சதாசிவத்திடம் ஏன் என்னை திட்டுகிறீர்கள்? என்று வெற்றி செல்வி கேட்டார். இதில் அவர்கள் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சதாசிவம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வெற்றிச்செல்வியின் வயிற்றில் சரமாரியாக குத்தினார்.

    இதில் பலத்த காயம் அடைந்த வெற்றி செல்வி ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். சதாசிவம் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

    அக்கம் பக்கத்தினர் வெற்றி செல்வியை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் வெற்றி செல்வி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து காட்டு மன்னார்கோவில் போலீசில் வெற்றிச்செல்வியின் மகன் கிருபாநிதி புகார் செய்தார். அதன் பேரில் சதாசிவம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் சேத்தியாதோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர்லால் உத்தரவின் பேரில் குற்றவாளியை பிடிக்க காட்டு மன்னார்கோவில் இன்ஸ் பெக்டர் ஷியாம் சுந்தர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. சதா சிவத்தை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    கள்ளக்காதல் பிரச்சினையில் அம்மி கல்லை தூக்கிப்போட்டு பெண்ணை படுகொலை செய்த வாலிபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கடலூர்:

    தஞ்சை கீழவாசல் வீதியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. இவரது மனைவி தனலட்சுமி (வயது 45). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெள்ளைச்சாமி இறந்து விட்டார். இதையடுத்து தனலட்சுமி தனது 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். அப்போது அதே பகுதியில் வேலைப்பார்த்து வந்த கடலூர் வாலிபர் ஒருவருடன் தனலட்சுமிக்கு பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

    இதையடுத்து அந்த வாலிபர் தனலட்சுமியை தஞ்சாவூரில் இருந்து கடலூருக்கு அழைத்து வர முடிவு செய்தார். அதன்படி தனலட்சுமியின் குழந்தைகளை தஞ்சையில் உள்ள உறவினர் வீட்டில் விட்டு விட்டு தனலட்சுமியை மட்டும் கடலூர் கூத்தப்பாக்கத்துக்கு அழைத்து வந்தார். பின்னர் அங்குள்ள பாரதியார் நகரில் அந்த வாலிபரும், தனலட்சுமியும் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

    நேற்று இரவு அவர்களுக்கிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அந்த வாலிபர் ஆத்திரம் அடைந்து தனலட்சுமியின் தலையில் அம்மி கல்லை தூக்கி போட்டார். இதில் தனலட்சுமி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

    உடனே அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இன்று காலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் ரத்த வெள்ளத்தில் தனலட்சுமி பிணமாக கிடப்பை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இது பற்றி திருப்பாதிரிப்புலியூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    கொலை செய்யப்பட்டு கிடந்த தனலட்சுமியின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கள்ளக்காதல் பிரச்சினையில் தனலட்சுமி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இது தொடர்பாக கடலூர் முதுநகரை சேர்ந்த வாலிபர் சரவணனை (வயது 39) போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கஜா புயலால் காரைக்கால் மாவட்டத்தில் ஏராளமான மின் கம்பங்கள், மரங்கள் சாய்ந்து விழுந்துள்ளன. இதனால் மின் விநியோகம் 4-வது நாளாக தடைப்பட்டதால் பல கிராமங்கள் இருளில் மூழ்கின. #gajacyclone #darkness

    காரைக்கால்:

    ‘கஜா’ புயலால் காரைக்கால் மாவட்டத்தில் பலத்த சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. ஏராளமான மின் கம்பங்கள், மரங்கள் சாய்ந்து விழுந்தன. வீடுகள், படகுகள் சேதமடைந்தன. மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்ததால் கடந்த 15-ந் தேதி முதல் மின் விநியோகம் தடைப்பட்டது. மாவட்டத்தில் பல கிராமங்கள் இருளில் மூழ்கின. பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்தனர்.

    இந்த நிலையில் மாவட்டத்தில் காரைக்கால், திருநள்ளாறு உள்ளிட்ட சில பகுதிகளில் சாய்ந்து விழுந்த மின்கம்பங்கள் சரி செய்யப்பட்டு மின் விநியோகம் செய்யப்பட்டது.

    ஆனால், நிரவி, தூதுபோன மூலை, மானாம்பேட்டை, ஓடுதுறை, விழுதியூர் உள்ளிட்ட 5 கிராமங்கள் மற்றும் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள நேருவீதி ஆகிய பகுதிகளுக்கு இன்னும் மின்சாரம் வழங்கப்படவில்லை. இதனால் அந்த பகுதி கடந்த 4 நாட்களாக இருளில் மூழ்கியுள்ளது.

    அங்கு வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர். குடிநீர் பிரச்சினையும் நிலவி வருகிறது. அவர்கள் கடைகளுக்கு சென்று குடிநீர் கேன் வாங்கி பயன்படுத்தும் நிலைமை ஏற்பட்டுள்ளன.

    செல்போனுக்கு சார்ஜ் செய்ய முடியாமல் உறவினர்களுடன் தொடர்பு கொண்டு பேச முடியாத நிலையில் உள்ளனர்.

    புயலால் கீழே சாய்ந்து விழுந்த மின் கம்பங்களை சரி செய்யும் பணியில் மின் ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இன்று மாலைக்குள் மின்கம்பங்கள் சரி செய்யப்பட்டு மின் விநியோகம் வழங்கப்படும் என்று தெரிகிறது.

    ‘கஜா’ புயலால் வீட்டில் இருந்த ஏராளமான பொருட்கள் சேதமடைந்தன. அந்த பொருட்களை சாலையில் போட்டு செல்கின்றனர். தற்போது அதில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. மேலும் தொற்று நோய் ஏற்படும் அபாயமும் உள்ளது.

    இதனை சீர்படுத்த மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். புயலால் சாய்ந்து விழுந்த மரங்கள் வெட்டப்பட்டு சாலையோரம் குவித்து வைத்துள்ளனர். அதனை உடனடியாக அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #gajacyclone #darkness

    திட்டக்குடி அருகே உண்டியலை உடைத்து இரண்டு கோவில்களில் ஒன்றரை லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. #Robbery
    பெண்ணாடம்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்த மேல்ஆதனூர் கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த சில நாட்களுக்கு முன்புதான் கும்பாபிஷேகம் நடந்தது.

    கோவிலின் பூசாரியாக வேலாயுதம் என்பவர் இருந்து வருகிறார். அவர் வழக்கம்போல் பூஜைகளை முடித்து கொண்டு நேற்று இரவு கோவிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.

    இதனை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் நள்ளிரவில் கோவிலின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அங்கிருந்த 2 உண்டியல்களை அடியோடு பெயர்த்து எடுத்தனர். பின்னர் அம்மன் கழுத்தில் கிடந்த ½ பவுன் நகையையும் திருடினர்.

    இதைத்தொடர்ந்து இந்த கோவிலின் அருகே இருந்த அய்யனார் கோவிலுக்குள் புகுந்தனர். அங்கிருந்த உண்டியலையும் பெயர்த்து எடுத்து 3 உண்டியல்களையும் வெளியே கொண்டு சென்றனர். அதனை உடைத்து பணத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். கொள்ளையடிக்கப்பட்ட நகை, பணத்தின் மதிப்பு ரூ.1½ லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில் இன்று காலை வழக்கம்போல் மாரியம்மன் கோவிலை திறக்க வந்த பூசாரி வேலாயுதம் கோவிலில் கொள்ளை நடந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இதுகுறித்து ராமநத்தம் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    அப்போது கோவிலில் கொள்ளபோன உண்டியல்கள் உடைந்த நிலையில் அருகில் உள்ள வயல்வெளியில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. நகை மற்றும் உண்டியல் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

    கோவிலுக்குள் புகுந்து நகை, பணத்தை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    கஜா புயலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நானை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நிவாரணம் வழங்கலாம் என்று கடலூர் கலெக்டர் அறிவித்துள்ளார் #GajaCyclone
    கஜா புயல் வேதாரண்யம் அருகே கரையை கடந்தது. அப்போது திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர் மாவட்டங்களை கஜா புயல் மோசமாக தாக்கியது. தற்போது மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் பாதிக்கப்பட்டு, மீட்பு பணிகள் நடந்து வருகிறது.

    பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்து கிடப்பதால் சாலை போக்குவரத்து, மின்சார வசதிகள் வழங்க தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் பால், குடிநீர் போன்ற அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கலாம். குடிநீர் பாட்டில்கள், போர்வை, உடைகள், பிஸ்கட் போன்ற பொருட்களை வழங்கலாம். இவற்றை ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கலாம் என்று கடலூர் ஆட்சியர் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.
    கடலூர் மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட படகுகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். #gajacyclone #ministerjayakumar #cyclone

    கடலூர்:

    தமிழகத்தை மிரட்டிய ‘கஜா’ புயல் நேற்று முன்தினம் நள்ளிரவில் நாகப்பட்டினம்- வேதாரண்யம் இடையே கரையை கடந்தது. இதன் காரணமாக கடலோர மாவட்டமான கடலூர், நாகப்பட்டினம், தஞ்சை, திருவாரூர், திருச்சி மற்றும் காரைக்கால் போன்ற பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.

    கடலூர் மாவட்டத்திலும் ஏராளமான மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன. இந்த மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட அமைச்சர் ஜெயக்குமார் இன்று காலை கடலூர் வந்தார். பின்னர் அவர் துறைமுகம் பகுதிக்கு சென்று ஆய்வு செய்து பார்வையிட்டார். அப்போது கலெக்டர் அன்புச்செல்வன் மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர்.

    அதன் பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ‘கஜா’ புயல் குறித்து வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டது. இதைத்தொடர்ந்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தினார்.

    அப்போது முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி அந்தந்த மாவட்டங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதன் காரணமாக அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் புயல் எச்சரிக்கை நடவடிக்கை தீவிரமாக எடுக்கப்பட்டது.

    இதன் காரணமாக ‘கஜா’ புயலில் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு பல்வேறு கட்சியினர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

    ‘கஜா’ புயல் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்லவில்லை. எனவே மீனவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

    ஆனால், கடற்கரையோரம் படகுகள் நிறுத்தப்பட்டு இருந்ததால் ஒருசில படகுகள் சேதமடைந்துள்ளன. அது குறித்து கணக்கெடுக்கும் பணியில் அந்தந்த மாவட்டங்களில் 6 பேர் கொண்ட குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த பணி முடிந்ததும் அவர்கள் இது குறித்த விரிவான அறிக்கையை அரசிடம் சமர்ப்பிப்பார்கள். அதனை தொடர்ந்து படகுகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி அரசு சார்பில் வழங்கப்படும். புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை அந்தந்த பகுதி அமைச்சர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    கடலூர் துறைமுகத்தில் படகுகள் நிறுத்த நெருக்கடி அதிகமாக உள்ளது. இதன் காரணமாக முதுநகர் துறைமுகத்தை சீரமைக்க ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டுக்குள் துறைமுகம் சீரமைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #gajacyclone #ministerjayakumar #cyclone

    பெண்ணாடம் அருகே மழையில் நனைந்தபடி நடந்து சென்ற 65 வயது மதிக்கத்தக்க பெண் மீது வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    பெண்ணாடம்:

    பெண்ணாடம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று இரவு முதல் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

    இந்த நிலையில் பெண்ணாடத்தை அடுத்த நந்த பாடி கிராமத்தில் 65 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர்  மழையில் நனைந்த படி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் மீது அந்த வழியாக வந்த வாகனம் ஒன்று திடீரென மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் அந்தபெண் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    தகவல் அறிந்த விருத்தாசலம் உதவி போலீஸ் சூப்பிரண்டு தீபாசத்தியன், பெண்ணாடம் இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். வாகனம் மோதி இறந்த பெண்ணின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். ஆனால் அந்த பெண் யார்? எந்த ஊர் என்ற விபரம் தெரியவில்லை.

    இதையடுத்து அந்த பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    ×