search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dharmapuri bus burning case"

    தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் தண்டனைபெற்ற 3 பேரை விடுதலை செய்தது வருத்தமளிக்கிறது என்று பலியான மாணவி காயத்ரியின் தந்தை வெங்கடேசன் கூறினார். #DharmapuriBusBurning #TNGovernor #BanwarilalPurohit
    விருத்தாசலம்:

    பஸ் எரிப்பு வழக்கில் கைதாகி தண்டனை பெற்று வேலூர் சிறையில் இருந்த 3 பேர் நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.

    பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து பலியான கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள பூவனூரை சேர்ந்த மாணவி காயத்ரியின் தந்தையும், முன்னாள் அரசு கல்லூரி முதல்வருமான வெங்கடேசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தர்மபுரி பஸ் எரிப்பு சம்பவத்தில் குற்றவாளிகளை விடுதலை செய்தது மிகவும் வருத்தம் அளிக்கிறது. அந்த 3 பேருக்கும் மரண தண்டனை என்று அறிவித்து, அதன்பிறகு அதனை ஆயுள் தண்டனை என மாற்றினார்கள். இதற்காக என்ன முயற்சி செய்தார் களோ? தெரியவில்லை.

    அன்றே நீதி தேவதை கண்ணீர் வடிக்க தொடங்கிவிட்டாள். என் மகளை பறிகொடுத்து 18 ஆண்டுகள் ஆகிவிட்டது. அந்த சம்பவத்தில் இருந்து நாங்கள் இன்னும் மீளவில்லை. பல இன்னல்களை, பல சோதனைகளை, பல வேதனைகளை அனுபவித்து வருகிறோம்.

    எங்கள் வீட்டு தெய்வமாக காயத்ரி இருக்கிறாள். இதற்கு மேல் என்னால் எதுவும் கூற முடியவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாணவி கோகிலவாணியின் தந்தை வீராசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    “கடந்த 2000-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ந் தேதி 3 மாணவிகளையும் தீ வைத்து கொளுத்திய நபர்களுக்கு ஒரு நீதிபதி தூக்கு தண்டனை விதிக்கிறார். மற்றொரு நீதிபதி ஆயுள் தண்டனை என்கிறார். அப்படி என்றால் முதல் நீதிபதி அளித்த தீர்ப்பு தவறா?. ஒரு கோர்ட்டு சொன்ன தீர்ப்புக்கு, மற்றொரு கோர்ட்டில் சீராய்வு மனு என்று ஒன்றை வைத்து உள்ளனர்.

    கோர்ட்டு தீர்ப்பை நிறைவேற்றாத அரசு எதற்கு?. இது ஜனநாயகமா?, சர்வாதிகாரமா?. நீதி, நேர்மை கெட்டு போய்விட்டது. கோகிலவாணி இறந்த பிறகு படுத்த படுக்கையான அவரது தாயார் கடந்த ஆண்டு இறந்தே போய்விட்டார்.



    இங்கு ஜனநாயகம் இல்லை. சர்வாதிகாரமாக இருக்கிறது. எதை எடுத்தாலும் லஞ்சம், லாவண்யம். நீதி எங்கு இருக்கிறது? ஏன் இந்த பித்தலாட்டம். முதல்-அமைச்சர் ‘உணர்ச்சி வசப்பட்டு விட்டார்கள்’ என கூறுகிறார். அதை எல்லாம் ஏற்க முடியாது. கவர்னர் முதலில் விடுவிக்க முடியாது என்று அறிவிக்கிறார்.

    தற்போது கவர்னர் ஒப்புதல் வழங்கி இருக்கிறார். இடையில் என்ன நடந்தது?. 3 மாணவிகளின் மரணத்துக்கு நீதி கிடைக்கவில்லை. கோர்ட்டு தீர்ப்பை கொடுத்து நிறைவேற்றாத அரசு ஒன்று இங்கு இருக்கிறது. எதற்கு சட்டம், ஒழுங்கு, நியாயம், தீர்ப்பு என்று வைத்து இருக்கிறார்கள். இதெல்லாம் பச்சை துரோகம்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #DharmapuriBusBurning #TNGovernor #BanwarilalPurohit
    தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் தொடர்புடைய 3 அ.தி.மு.க.வினரை விடுவிக்கும் முயற்சிகளில் தமிழக அரசு மீண்டும் ஈடுபட்டுள்ளது. இது தொடர்பாக கவர்னருக்கு புதிய ஆவணம் அனுப்பப்பட்டுள்ளது. #Dharmapuribusburningcase
    சென்னை:

    ஜெயலலிதா முதல்- அமைச்சராக இருந்த போது வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் வாங்கி குவித்ததாக பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    அதில் பிளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்கும் ஒன்றாகும்.

    கடந்த 2000-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ந்தேதி அந்த வழக்கில் சிறப்பு கோர்ட்டு தீர்ப்பளித்தது. ஜெயலலிதாவுக்கு ஓராண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டது. இதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தர்மபுரி புறநகரான இலக்கியம் பட்டியில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பஸ் மீது அ.தி.மு.க.வினர் பெட்ரோல் குண்டு வீசி தீ வைத்தனர். இதில் ஹேமலதா, காயத்ரி, கோகிலவாணி ஆகிய 3 மாணவிகள் தீயில் கருகி பலியானார்கள். 16 மாணவிகள் காயம் அடைந்தனர்.

    தமிழக மக்களை பதை பதைப்புக்குள்ளாக்கிய இந்த கொடூர சம்பவம் தொடர்பாக தர்மபுரி ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் ராஜேந்திரன், தர்மபுரி நகர முன்னாள் செயலாளர் நெடுஞ்செழியன், எம்.ஜி.ஆர். மன்ற நிர்வாகி ரவீந்திரன், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் முனியப்பன் உள்பட 31 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகிய மூவருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. 24 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

    தூக்கு தண்டனையை எதிர்த்து 3 பேரும் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தனர். அந்த வழக்கை விசாரித்த சுப்ரீம்கோர்ட்டு, மூன்று பேரின் தண்டனையை கடந்த 2016-ம் ஆண்டு ஆயுள் தண்டனையாக குறைத்தது. அதன் பேரில் 3 பேரும் சிறை தண்டனையை அனுபவித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் எம்.ஜி.ஆர். பிறந்த தின நூற்றாண்டு விழாவைக் கொண்டாடிய தமிழக அரசு சுமார் 1,600 கைதிகளை விடுதலை செய்தது. அப்போது தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் சிக்கி 11 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் ரவீந்திரன், நெடுஞ்செழியன், முனியப்பன் ஆகிய மூவரையும் விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்தது.


    ஆனால் அவர்களை விடுதலை செய்ய ஒப்புதல் கோரிய அரசின் ஆவணத்தை கவர்னர் பன்வாரிலால் ஏற்க மறுத்து விட்டார். 3 பேரை விடுவிப்பதை மறுபரிசீலனை செய்ய அறிவுறுத்திய அந்த ஆவணத்தை கவர்னர் திருப்பி அனுப்பி விட்டார்.

    இந்த நிலையில் அந்த 3 பேரையும் விடுவிக்கும் முயற்சிகளில் தமிழக அரசு மீண்டும் ஈடுபட்டுள்ளது. இது தொடர்பாக கவர்னருக்கு புதிய ஆவணம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், “பஸ் எரிப்பு திட்டமிட்டு நடந்தது அல்ல. உணர்ச்சி வேகத்தில் நடந்து விட்ட ஒன்று” என்று தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.

    தமிழக அரசின் இந்த புதிய விளக்கத்தை கவர்னர் பன்வாரிலால் ஏற்றுக் கொள்வாரா? என்று தெரியவில்லை. #Dharmapuribusburningcase
    ×