என் மலர்tooltip icon

    கடலூர்

    கடலூர் அருகே கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூர்:

    கடலூர் அருகே சி.என்.பாளையம் பகுதியை சேர்ந்தவர் சின்னதுரை. இவரது மகன் செல்வகுமார் (வயது 20). இவர் நெய்வேலியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.எஸ்.சி படித்து வந்தார்.

    கடந்த ஒரு மாதமாக செல்வகுமார் கல்லூரிக்குப் போகாமல் வீட்டில் இருந்து வந்தார். நேற்று மழவராயநல்லூர் பகுதியிலுள்ள முந்திரி தோப்பில் திடீரென்று புடவையில் தூக்கு மாட்டி மயங்கிய நிலையில் கிடந்தார்.

    அப்போது அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து செல்வகுமாரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்வகுமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக பரிசோதனை செய்த டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விருத்தாசலம் அருகே தீ விபத்தில் ஷோரூமில் இருந்த 2 6புதிய வாகனங்கள் மற்றும் சர்வீசுக்கு வந்த 5 பழைய வாகனங்கள் என 31வாகனங்கள் மற்றும் 3லட்ச ரூபாய் மதிப்பிலான உதிரிபாகங்கள் முற்றிலுமாக எரிந்தது.

    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் விருத்தாசலம் அருகே வேப்பூரில் இருசக்கர வாகன ஷோரூம் வைத்துள்ளார்.

    இந்த ஷோரூமில் இன்று காலை புகை வெளியனதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் செந்தில்குமாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் வருவதற்குள் தீ மேலும் பரவி ஷோரூம் முழுவதுமாக பற்றி எரிந்தது.

    தகவலறிந்த வேப்பூர் மற்றும் விருத்தாசலம் தீயணைப்புத்துறையினர் நேரில் சென்று தீயை அணைத்தனர்.

    எனினும் இந்த தீ விபத்தில் ஷோரூமில் இருந்த 2 6புதிய வாகனங்கள் மற்றும் சர்வீசுக்கு வந்த 5 பழைய வாகனங்கள் என 31வாகனங்கள் மற்றும் 3லட்ச ரூபாய் மதிப்பிலான உதிரிபாகங்கள் முற்றிலுமாக எரிந்தது. அதன் சேதமதிப்பு ரூ. 50 லட்சம் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளது.

    இதுகுறித்து வேப்பூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    பண்ருட்டி அருகே ரோந்து சென்ற ஏட்டுவை ரவுடி வெட்டி கொல்ல முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள காட்டு கூடலூர் கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி. இவர் நெய்வேலி டவுன்ஷிப் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக உள்ளார்.

    இவர் நேற்று இரவு நெய்வேலி ஆர்ச்கேட் பகுதியில் ரோந்து சென்றார். அப்போது அந்த வழியாக ஒரு கார் வந்தது. காரில் வந்தவர்கள் மோட்டார் சைக்கிளில் 2 பேர் நின்று கொண்டு கத்தியை காட்டி மிரட்டுகிறார்கள் என்று தெரிவித்துவிட்டு சென்றுவிட்டனர்.

    உடனே ஏட்டு தண்டபாணி தனது மோட்டார் சைக்கிளில் காரில் வந்தவர்கள் தெரிவித்த தகவலின்படி பண்ருட்டி கீழக்கொள்ளை கிராமம் அருேக சென்றார். அப்போது 2 பேர் மோட்டார் சைக்கிளில் நின்றுகொண்டிருந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது திடீரென அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த 2 பேரில் ஒருவர் திடீரென பட்டா கத்தியால் ஏட்டு தண்டபாணியை வெட்டினார். இதில் அவர் ரத்தவெள்ளத்தில் கீழே சாய்ந்தார். அதோடு ஏட்டு தண்டபாணியின் மோட்டார் சைக்கிளை அடித்து நொறுக்கினர். பின்னர் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.

    அதிர்ச்சியடைந்த ஏட்டு தண்டபாணி உரக்க கத்தினார். சத்தம்கேட்டு கிராமத்தினர் திரண்டனர். உடனே மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரையும் துரத்தினர். சிறிது தூரம் சென்றதும் ஒருவரை மடக்கி பிடித்தனர். உடனடியாக அவர் காடாம் புலியூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரைபாண்டியன், முத்தாண்டிகுப்பம் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் ராஜாராம் ஆகியோர் வழக்குபிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் ஏட்டு தண்டபாணியை பட்டா கத்தியால் வெட்டிய நபர் வீரமணி (வயது 28) என்றும், நெய்வேலி அருகே உள்ள வடக்குத்து பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி என்பதும் தெரியவந்தது. உடனே போலீசார் வீரமணியை கைது செய்தனர்.

    வீரமணியுடன் வந்த அரவிந்தன் என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள். ரவுடி வீரமணி தாக்கியதில் காயமடைந்த போலீஸ் ஏட்டு தண்டபாணி பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    ரோந்து சென்ற ஏட்டுவை ரவுடி வெட்டி கொல்ல முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கடலூர் அருகே கணவன் கண்முன்னே மனைவி தீக்குளித்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.
    கடலூர்:

    கடலூர் அடுத்த திருபபணாம்பாக்கம் சேர்ந்தவர் தயாளன். சவுண்ட் சர்வீஸ் நடத்தி வருகிறார். இவரது மனைவி சுதா (வயது 45). சுதாவிற்கு கடந்த சில வருடங்களாக உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு வந்தக்காரணத்தினால் புதுவை மாநிலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சம்பவத்தன்று தயாளன் தனது மனைவி சுதாவிடம் உணவு கேட்டுள்ளார். அப்போது சுதா எனக்கு உடல்நிலை சரியில்லை என கூறினார்.

    இதனைத்தொடர்ந்து தயாளன் தனது மகள் ஆர்த்தியிடம் உணவு கேட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். இந்த நிலையில் திடீரென்று சுதா வீட்டில் இருந்த மற்றொரு அறைக்கு சென்று மண்ணெண்ணெய் தன் மீது ஊற்றி திடீரென்று தீ வைத்துக் கொண்டார். இதனை பார்த்த கணவர் மற்ற அக்கம்பக்கத்தினர் தீயை அணைத்து சுதாவை மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்‌. ஆனால் சுதா சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிர் இழந்தார்‌.

    இதுகுறித்து தூக்கணாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    விருத்தாசலம் திட்டக்குடி அருகே விளையாட்டு மைதானம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    திட்டக்குடி:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்துள்ள மாளிகை கோட்டம் ஊராட்சி பாபுஜிநகரில் சுமார் 200க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதி மக்களுக்கு 2008 ம் ஆண்டு இலவச மனைப்பட்டா வழங்கியவர்களுக்கு அளந்து அத்துகாட்ட வேண்டும், இடம் இல்லாத ஏழை மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும், சிமெண்ட் சாலை அமைக்க வேண்டும், இடிந்து விழும் நிலையில் உள்ள பாலத்தை அப்புறப்படுத்தி புதிய பாலம் கட்டித்தர வேண்டும், கழிப்பறை வசதி செய்து தரவேண்டும், செயல்படாத நிலையில் உள்ள நூலகத்தை மாணவர்கள் நலன் கருதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், குடிநீர் வசதி, விளையாட்டு மைதானம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 23 ம் தேதி சாலை மறியல் செய்யப்போவதாக அப்பகுதி மக்கள் அறிவித்திருந்தனர் .

    அப்போது பெண்ணாடம் போலீசார் அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தற்காலிகமாக சாலைமறியல் போராட்டம் கைவிடப்பட்டு திட்டக்குடி தாசில்தார் தலைமையில் நேற்று(4ந்தேதி) மாலை 3 மணி அளவில் தாசில்தார் அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடைபெற இருந்தது. இந்நிலையில் சம்பந்தப்பட்ட நல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு இரண்டு முறையும் வட்டாட்சியர் அவர்களுக்கு வராததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் அரியலூர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் பாலசிங்கம் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் திடீரென திட்டக்குடி விருத்தாசலம் மாநிலசாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த திட்டக்குடி இன்ஸ்பெக்டர் அன்னக்கொடி, தாசில்தார் கார்த்திக், சமூக நல திட்ட தாசில்தார் ரவிச்சந்திரன் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர். இதனால் விருத்தாசலம் திட்டக்குடி சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து தாசில்தார் அலுவலகத்தில் அமைதிப் பேச்சுவார்த்தை நடந்ததில் அனைத்து பிரச்சினைகளுக்கும் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    சிதம்பரம் அருகே சிறுமிக்கு திருமணம் நடந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் மீது போலீசார் போக்சோவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    சிதம்பரம்:

    சிதம்பரம் அருகே உள்ள கருவேப்பம்பட்டி வாய்க்கால்மேட்டு தெருவை சேர்ந்தவர் தணிகாசலம் (வயது 60). இவரது மகள் கவிதா (17). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஜெயராமன் என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    கர்ப்பிணியாக இருந்த கவிதா உடல்நலக்குறைவு ஏற்பட்டு கீர்த்தனகிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு பின்னர் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு கருகலைந்தது. கவிதாவுக்கு சிகிச்சை மேற்கொண்ட டாக்டர் அவருக்கு வயது குறைவாக இருப்பதை கண்டறிந்து தெரிவித்தார்.

    இதையடுத்து கவிதாவின் உறவினர் பிரியா என்பவர் புதுசத்திரம் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் குழந்தை திருமணதடுப்பு சட்டம் மற்றும் போக்சோ ஆகிய பிரிவுகளில் தணிகாசலம், அவரது மனைவி செல்வி, கவிதாவை திருமணம் செய்த ஜெயராமன் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    திட்டக்குடி அருகே மினி லாரி மீது கார் மோதிய விபத்தில் டிரைவர் பலியானார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திட்டக்குடி:

    திருச்சியில் இருந்து சென்னைக்கு மினி லாரி ஒன்று சென்றது. அது திட்டக்குடி அருகே மா புடையூர் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் செல்லும்போது பின்னால் அதிவேகமாக வந்த கார் ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரியின் பின்புறம் மோதியது.

    இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த திருவள்ளூர் மாவட்டம் நல்லாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி மகன் மனோஜ் படுகாயம் அடைந்தார். இவரை அக்கம் பக்கம் இருந்தவர்கள் மீட்டு வேப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் ஆம்புலன்ஸில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து ராமநத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூர் அருகே இன்று காலை கலெக்டர் பாலசுப்பிரமணியம் உரக்கிடங்கு மற்றும் கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்திற்கு திடீரென்று நேரில் வந்தார்.
    கடலூர்:

    கடலூர் அருகே திருக்கண்டேஸ்வரத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க உரக் கிடங்கு மற்றும் அலுவலகம் செயல்பட்டு வருகின்றது. இங்கு விவசாயிகள் தங்களுக்கு தேவையான உரங்களை வாங்கி சென்று வருகின்றனர். மேலும் கூட்டுறவு கடன் சங்கத்தில் பயிர்கடன், நகைக்கடன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று காலை கலெக்டர் பாலசுப்பிரமணியம் உரக்கிடங்கு மற்றும் கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்திற்கு திடீரென்று நேரில் வந்தார். பின்னர் உரக்கிடங்கு மற்றும் கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தை ஆய்வு செய்து பார்வையிட்டார். மேலும் உரங்கள் தட்டுப்பாடு இல்லாமல் உள்ளதா? மற்றும் சரியான முறையில் விவசாயிகளுக்கு உரம் வழங்கப்படுகிறதா ? என்பதனை கேட்டு அறிந்து ஆய்வு செய்தார் .

    மேலும் கூட்டுறவு கடன் சங்கம் மூலமாக பயிர் கடன், நகைக்கடன் போன்றவற்றை வழங்கப்பட்டு சரியான முறையில் வசூல் செய்யப்படுகிறதா? என்பதனை அரசு ஆவணங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் விவசாயிகளுக்கு அரசு அறிவித்த திட்டங்கள் மூலம் கடன்கள் வழங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.

    இதனைத் தொடர்ந்து ரேசன் கடையில் கலெக்டர் பாலசுப்ரமணியம் நேரில் சென்று இருப்பு உள்ள பொருட்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பொது மக்களுக்கு உணவு பொருட்கள் சரியான முறையில் வழங்கப்படுகிறதா? என்பதையும் பார்வையிட்டார்.

    முன்னதாக நெல்லிக்குப்பத்தில் உள்ள ஒரு கடையை கலெக்டர் பாலசுப்பிரமணியம் திடீர் ஆய்வு செய்தார். அப்போது கூடுதல் விலைக்கு உரங்கள் விற்பனை செய்யப்படுகிறதா? ஏதேனும் உரங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்பதனையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர் நந்தகுமார், கடலூர் சரக துணை பதிவாளர் துரைசாமி, டான்பெட் மண்டல மேலாளர் சுரேஷ் குப்தா, கூட்டுறவு சார் பதிவாளர்கள் ராகனி, ராஜமுத்து, வேளாண்மைத்துறை இணை இயக்குனர் பொறுப்பு ரவிச்சந்திரன் வேளாண்மை துறை இயக்குனர் ஜெயகுமார்உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) நடன சபாபதி, அண்ணாகிராமம் உதவி இயக்குனர் சுரேஷ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
    வாழைத்தார் மற்றும் குப்பை கழிவுகளை சரியான முறையில் அகற்றப்படாததால் மலைபோல் குவிந்து உள்ளது.

    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் உழவர் சந்தை உள்ளது. இங்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் காய்கறிகள், வாழைத்தார்கள், பழவகைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கொண்டு வந்து விற்பனை செய்து செல்கின்றனர்.

    இதன்காரணமாக தினந்தோறும் டன் கணக்கில் தூக்கி வீசப்படும் வாழைத்தார்கள் மற்றும் கழிவுகள் ஏராளமாகக் குவிந்துள்ளது‌. இந்த நிலையில் வாழைத்தார் மற்றும் குப்பை கழிவுகளை சரியான முறையில் அகற்றப்படாததால் மலைபோல் குவிந்து உள்ளது.

    மேலும் சாலை ஓரத்தில் வாழைத்தார்கள் மலைபோல் குவிந்து உள்ளதால் அடிக்கடி வாகன போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகின்றன. மேலும் அந்த பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசி வருவதோடு கொசு உற்பத்தி அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் நிலவி வருகிறது.

    இது சம்பந்தமாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக மலைபோல் குவிந்து இருக்கும் வாழைதார்கள், குப்பைகளை அகற்றும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வேண்டி மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்றது.
    கடலூர்:

    கடலூர் மாவட்ட பிரிண்டர்ஸ் அசோசியேசன் சார்பில் அச்சக துறைக்கு தேவையான பேப்பர், பத்திரிகைகள், மை உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் வரலாறு காணாத வகையில் உயர்ந்து உள்ளதையும், ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வேண்டி மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்றது. இதற்கு தலைவர் பார்த்திபன் தலைமை தாங்கினார்.

    கவுரவ தலைவர்கள் செல்வமணி, ராஜேந்திரன், மனோகரன், குணசேகரன், தேவராஜன், வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடலூர் மாவட்ட அச்சக சேவை தொழில் கூட்டுறவு சங்க தலைவர் வெங்கடேசன் வரவேற்றார்.

    கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அ.தி.மு.க. மாவட்ட செயலாளரருமான எம்.சி.சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் மாதவன், மாவட்ட அ.தி.மு.க. அவைத் தலைவர் சேவல் குமார், காங்கிரஸ் கட்சி மாநில செயலாளர் வக்கீல் சந்திரசேகரன், ஒன்றிய அதிமுக செய லாளர் காசிநாதன், நிர்வாகி சிவகுமார், அனைத்து வர்தக்க சங்க பேரவை தலைவர் சரவணன், கவுரவத் தலைவர் ஆறுமுகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் அமர்நாத் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்கள். 

    முன்னதாக தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் நிர்வாகிகள் கிருஷ்ண ராஜ், குணா, குமார், பாக்கியராஜ், ராஜா, பன்னீர்செல்வம் நல்லதம்பி, ரமேஷ், மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு கான ஏற்பாடுகளை ஹரி நாராயணன் தண்டபாணி, ராஜாங்கம் ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் செயலாளர் சங்கர் நன்றி கூறினார்.
    கொரோனா காலத்தில் மாணவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பால், அவர்கள் பள்ளி செல்லா நிலை குறித்து கடலூர் மாவட்டம் முழுவதும் கல்வித்துறை சார்பில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
    கடலூர்:

    கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. வகுப்பறைக்குச்சென்று மாணவ, மாணவிகளால் பாடம் படிக்க முடியாத சூழலை ஏற்படுத்தியதோடு, தேர்வு இல்லாமலேயே தேர்ச்சி என்ற நிலையையும் எட்டியது.

    இதற்கும் மேலாக மாணவர்களின் பெற்றோர்களுக்கு வேலை இழப்பு, பொருளாதார பாதிப்பு, இட மாறுதல் போன்ற சூழல்கள் உருவானாதால், அதன் பாதிப்பும் மாணவர்களை நேரடியாக பாதித்த்து.

    இவ்வாறு கொரோனா காலத்தில் மாணவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பால், அவர்கள் பள்ளி செல்லா நிலை குறித்து கடலூர் மாவட்டம் முழுவதும் கல்வித்துறை சார்பில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

    கடலூர் மாவட்டத்தில் 15,120 மாணவமாணவிகள் கல்வியை பாதியில் நிறுத்தியது தெரியவந்தது. இவ்வாறு இடைநின்ற மாணவர்களை மீட்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.பூபதி கூறியதாவது:

    கடலூர் மாவட்டத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, கொரோனா காலத்தில் 15,120 மாணவ மாணவிகள் பள்ளிப்ப டிப்பை பாதியில் நிறுத்தியது தெரியவந்தது. அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கையின் காரணமாக 4,150 பேர் மீண்டும் பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர்.

    பல்வேறு காரணங்களுக்காக மாணவர்கள் குடும்பத்தோடு பல்வேறு இடங்களுக்கு இட மாறுதலாகி உள்ளனர்.

    இவர்களில் 1,084 மாணவர்கள் புதுவை உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு இடமாறுதலாகி உள்ளனர். 446 பேர் சென்னை, விழுப்புரம், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். 9,426 பேர் பாலிடெக்னிக், பட்டயப்படிப்புகளில் சேர்ந்துள்ளது தெரியவந்தது.

    கணக்கெடுப்பில் விடுபட்டவர்கள் இருந்தாலோ அல்லது பள்ளிச்செல்லும் வயதில் பள்ளிக்குச்செல்லாமல் மாணவர்கள் இருந்தாலோ அருகிலுள்ள அரசுப் பள்ளிகளில் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    அக்னி நட்சத்திரம் இன்று தொடங்குவதற்கு முன்பு கடலூர் மாவட்டத்தில் 100 டிகிரி வெயில் அடித்தது குறிப்பிடத்தக்கதாகும்.
    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் கோடை வெயில் கடந்த மார்ச் மாதம் இறுதியிலிருந்து கொளுத்தி வருகிறது. இதற்கிடையில் மாவட்டத்தில் பரவலாக பல இடங்களில் மட்டும் மழை பெய்தது.

    இது பொதுமக்களுக்கு சற்று ஆறுதலை தந்தது. இருந்தபோதிலும் அக்னி நட்சத்திரம் இன்று தொடங்குவதற்கு முன்பு கடலூர் மாவட்டத்தில் 100 டிகிரி வெயில் அடித்தது குறிப்பிடத்தக்கதாகும். இதற்கிடையில் அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெயில் இன்று (4ந்தேதி) தொடங்கியது.

    இந்த கத்திரிவெயில் வருகிற 28ந் தேதி வரை தொடர உள்ளது. கோடை வெயிலை சமாளிக்க பொதுமக்கள் சுற்றுலா தலங்களுக்கு படையெடுத்து உள்ளனர். கடலூர் நகர மக்கள் மாலை வேளையில் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சுக்கு சென்று பொழுதை கழிப்பதையும் காண முடிந்தது. மேலும் நேற்று ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஏராளமான முஸ்லிம்கள் தங்கள் குடும்பத்துடன் தேவனாம்பட்டினம் கடற்கரைக்கு சென்றனர்.

    இன்று வழக்கத்தை விடசூரியன் சுட்டெரித்த நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. பகல் நேரத்தில் வெளியே பொதுமக்கள் செல்ல முடியாத அளவுக்கு வெப்பம் அதிகமாக இருந்தது. சாலைகளில் அனல் காற்று வீசியதால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். பெண்கள் துப்பட்டாவால் முகத்தை மூடிய படியும், குடை பிடித்தபடியும் சென்றதை காண முடிந்தது.

    பெரியவர்கள் துண்டை தலையில் போட்ட படி நடந்து சென்றதையும் பார்க்க முடிந்தது. ஆண்கள் ஹெல்மெட் அணிந்தபடியும், கைக்குட்டையால் கண்கள் மட்டும் தெரியும் படி முகத்தை மூடியபடியும் சென்றனர். தாகத்தை தணிக்கும் இளநீர், தர்பூசணி விற்பனை சூடுபிடித்தது. நுங்கு, பழச்சாறு கடைகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. வெயிலில் தாக்கம் மாலை வரை நீடித்தது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
    ×