search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    பண்ருட்டி அருகே ரோந்து சென்ற போலீஸ் ஏட்டுவை வெட்டிக்கொல்ல முயன்ற ரவுடி

    பண்ருட்டி அருகே ரோந்து சென்ற ஏட்டுவை ரவுடி வெட்டி கொல்ல முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள காட்டு கூடலூர் கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி. இவர் நெய்வேலி டவுன்ஷிப் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக உள்ளார்.

    இவர் நேற்று இரவு நெய்வேலி ஆர்ச்கேட் பகுதியில் ரோந்து சென்றார். அப்போது அந்த வழியாக ஒரு கார் வந்தது. காரில் வந்தவர்கள் மோட்டார் சைக்கிளில் 2 பேர் நின்று கொண்டு கத்தியை காட்டி மிரட்டுகிறார்கள் என்று தெரிவித்துவிட்டு சென்றுவிட்டனர்.

    உடனே ஏட்டு தண்டபாணி தனது மோட்டார் சைக்கிளில் காரில் வந்தவர்கள் தெரிவித்த தகவலின்படி பண்ருட்டி கீழக்கொள்ளை கிராமம் அருேக சென்றார். அப்போது 2 பேர் மோட்டார் சைக்கிளில் நின்றுகொண்டிருந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது திடீரென அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த 2 பேரில் ஒருவர் திடீரென பட்டா கத்தியால் ஏட்டு தண்டபாணியை வெட்டினார். இதில் அவர் ரத்தவெள்ளத்தில் கீழே சாய்ந்தார். அதோடு ஏட்டு தண்டபாணியின் மோட்டார் சைக்கிளை அடித்து நொறுக்கினர். பின்னர் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.

    அதிர்ச்சியடைந்த ஏட்டு தண்டபாணி உரக்க கத்தினார். சத்தம்கேட்டு கிராமத்தினர் திரண்டனர். உடனே மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரையும் துரத்தினர். சிறிது தூரம் சென்றதும் ஒருவரை மடக்கி பிடித்தனர். உடனடியாக அவர் காடாம் புலியூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரைபாண்டியன், முத்தாண்டிகுப்பம் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் ராஜாராம் ஆகியோர் வழக்குபிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் ஏட்டு தண்டபாணியை பட்டா கத்தியால் வெட்டிய நபர் வீரமணி (வயது 28) என்றும், நெய்வேலி அருகே உள்ள வடக்குத்து பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி என்பதும் தெரியவந்தது. உடனே போலீசார் வீரமணியை கைது செய்தனர்.

    வீரமணியுடன் வந்த அரவிந்தன் என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள். ரவுடி வீரமணி தாக்கியதில் காயமடைந்த போலீஸ் ஏட்டு தண்டபாணி பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    ரோந்து சென்ற ஏட்டுவை ரவுடி வெட்டி கொல்ல முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×