என் மலர்tooltip icon

    சென்னை

    • தமிழக அரசின் சார்பில் முதலமைச்சர், அமைச்சர்கள் யாரும் கலந்துகொள்ள மாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • முதல்வரும், துணை முதல்வரும் இன்று மாலை தஞ்சையில் நடக்கும் திமுக மாநாட்டில் பங்கேற்கின்றனர்.

    கவர்னர் ஆர்.என்.ரவி கிண்டியில் உள்ள அவரது மாளிகையில் குடியரசு தினத்தையொட்டி தேநீர் விருந்து அளிப்பது வழக்கம். அந்த வகையில் இன்று மாலை 4.30 மணிக்கு தேநீர் விருந்து நடைபெறுகிறது.

    குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று மாலை ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தை தமிழ்நாடு அரசு புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.

    மேலும், தமிழக அரசின் சார்பில் முதலமைச்சர், அமைச்சர்கள் யாரும் கலந்துகொள்ள மாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முதல்வரும், துணை முதல்வரும் இன்று மாலை தஞ்சையில் நடக்கும் திமுக மாநாட்டில் பங்கேற்கின்றனர்.

    அதனால், முதலமைச்சர் பங்கேற்காதது உறுதியான நிலையில் அமைச்சர்களும் பங்கேற்க மாட்டார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழக அரசின் அதிகாரிகள் இந்த தேநீர் விருந்தில் பங்கேற்க உள்ளனர்.

    திமுக கூட்டணி கட்சிகள் ஆளுநரின் விருந்தை புறக்கணிப்பதாக ஏற்கனவே அறிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சிறந்த காவல் நிலையத்திற்கான கோப்பையை மதுரை மாநகரம் முதலாவதாக தட்டி சென்றுள்ளது.
    • 2-ம் பரிசு திருப்பூர் நகரத்துக்கும், 3-ம் பரிசு கோவை மாவட்டத்திற்கும் கிடைத்தது.

    சென்னை:

    மதநல்லிணக்கத்திற்காக பாடுபட்டு உயிர்நீத்த கோட்டை அமீர் பெயரால் ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு சார்பில் பதக்கம் வழங்கப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கோட்டை அமீர் மதநல்லிணக்க பதக்கத்தை திருப்பூர் மாவட்டம் பூநூல் காடு 3-வது வீதியில் வசித்து வரும் மு.கலிமுல்லா என்பவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடியரசு தின விழாவில் வழங்கி கவுரவித்தார்.

    அவருக்கு ரூ.5 லட்சத்திற்கான காசோலையும், சான்றிதழும் வழங்கப்பட்டது. கலிமுல்லா காங்கேயன் வட்டம், கணபதிபாளையம் கிராமத்தில் தனக்கு சொந்தமான 3 சென்ட் அளவுள்ள நிலத்தை விநாயகர் கோவில் கட்டுவதற்காக தானமாக வழங்கி உள்ளார். கோவில் கட்டுவதற்காக ரூ.3 லட்சம் நன்கொடையும் அளித்துள்ளார்.

    இவர் ஆர்.எம்.ஜே. ரோஸ் கார்டன் முஸ்லீம் சமாத் மசூதி சபா கமிட்டி தலைவராக செயல்பட்டு வருகிறார். 60-க்கும் மேற்பட்ட முறை ரத்த தானம் செய்துள்ளார். இவரை பாராட்டி கவுரவிக்கும் வகையில் கோட்டை அமீர் மதநல்லிணக்க பதக்கம் வழங்கப்பட்டு உள்ளது.

    அதிக உற்பத்தி திறன் பெறும் விவசாயிக்கான வேளாண்மை துறையின் சி.நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி ஜி.வீரமணிக்கு வழங்கினார்.

    விருதுடன் பரிசுதொகை ரூ.5 லட்சம், தங்கமுலாம் பூசப்பட்ட வெள்ளி பதக்கத்தையும் வழங்கினார். இந்த விவசாயி வேளாண்மை துறையின் மூலம் வழங்கப்பட்ட நவீன தொழில்நுட்ப பயிற்சிகளின் மூலமாக திருந்திய நெல்சாகுபடி முறையை நன்கு கற்று அதன் அடிப்படையில் நெல் சாகுபடியை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.

    இவர் செய்த சாகுபடியால் ஹெக்டருக்கு 14,925 கிலோ நெல் மகசூல் கிடைக்கப் பெற்றது. இது மாநிலத்திலேயே முதன்மையாக இருப்பதால் இந்த விருது இவருக்கு கிடைத்து உள்ளது.

    போலி மதுபான ஆலை, கள்ளச்சாராயம் கடத்தல் ஆகியவற்றை கண்டறிந்து சிறப்பான நடவடிக்கை மேற்கொண்ட 5 போலீஸ் அதிகாரிகளுக்கு காந்தியடிகள் காவலர் பதக்கங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    1.விழுப்புரம் மண்டலம் மத்திய நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் பி.நடராஜன், 2.ஆரோவில் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் எம்.சத்திய நந்தன், 3. சின்ன சேலம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் எஸ்.மணிகண்டன், 4. கடலூர் மாவட்டம் புத்தூர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் கே.நடராஜன், 5. சேலம் மாவட்டம் மத்திய நுண்ணறிவு பிரிவு ஏட்டு வி.பி.கண்ணன்.

    சிறந்த காவல் நிலையத்திற்கான கோப்பையை மதுரை மாநகரம் முதலாவதாக தட்டி சென்றுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்ஸ்பெக்டர் பூமிநாதனிடம் கோப்பையை வழங்கினார்.

    2-ம் பரிசு திருப்பூர் நகரத்துக்கும், 3-ம் பரிசு கோவை மாவட்டத்திற்கும் கிடைத்தது. இதற்கான கோப்பையை இன்ஸ்பெக்டர் பிரேமா, சின்னகாமனன் பெற்றுக் கொண்டனர்.

    • வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
    • பல இடங்களில் சாலைகள் முழுவதும் தண்ணீரில் மூழ்கியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர்.

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக இரவிலும், அதிகாலையிலும் பனியின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் கடந்த 3 நாட்களாக பரவலாக விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது.

    வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று அதிகாலை திடீரென பலத்த மழைகொட்டியது. பின்னர் மழை ஓய்ந்து இருந்த நிலையில் நேற்று மாலை முதல் மீண்டும் சாரல் மழையாக நீடித்தது. பின்னர் இரவு கனமழையாக கொட்டித்தீர்த்தது. இரவு முழுவதும் விடிய,விடிய மழை பெய்தது.

    நேற்றுஇரவு பெய்த பலத்த மழையின் காரணமாக கோயம்பேடு மேம்பாலம், மதுரவாயல் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் ஊர்ந்து சென்றன. கனமழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இன்று காலை முதல் சில இடங்களில் விட்டு விட்டு சாரல் மழை நீடித்தது. வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

    திருமழிசை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான வெள்ளவேடு, நசரத்பேட்டை உள்ளிட்ட இடங்களில் நேற்று இரவு தொடங்கி இன்று அதிகாலை வரை விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. நீண்ட நேரமாக இடைவிடாமல் பெய்த மழையால் தாழ்வான இடங்களில் குளம்போல் தண்ணீர் தேங்கியது. தொடர் கனமழை காரணமாக சாலைகளில் மழைநீர் வெள்ளப்பெருக்கெடுத்து ஆறுபோல் ஓடியது. பல இடங்களில் சாலைகள் முழுவதும் தண்ணீரில் மூழ்கியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர்.

    அப்பகுதியில் மழைநீர் வடிகால் வசதி போதிய அளவில் இல்லாததே தண்ணீர் பாதிப்பிற்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். உடனடியாக மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதேபோல் திருவள்ளூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளிலும் விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தாம்பரம், வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் சாரல் மழை நீடிக்கிறது.

    நேற்று காலை முதல் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக சென்னை குடிநீர் ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. இன்று காலை நிலவரப்படி புழல் ஏரிக்கு 210 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மில்லியன் கனஅடி. இதில் தற்போது 3078 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரியில் இருந்து குடிநீர் தேவைக்கு 184 கனஅடிநீர் வெளியேற்றப்படுகிறது.

    இதேபோல் சோழவரம் ஏரிக்கு 71 கனஅடி தண்ணீர் வருகிறது. மொத்த கொள்ளளவான 1081 மி.கன அடியில் 518 மி.கனஅடி தண்ணீர் நிரம்பி உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு 50 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. மொத்த கொள்ளளவான 3645 மி.கன அடியில் 3432 மி.கன அடி தண்ணீர் உள்ளது. பூண்டி ஏரிக்கு 50 கனஅடி தண்ணீர் வருகிறது. ஏரி முழு கொள்ளளவான 3231 மி.கனஅடி முழுவதும் நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கிறது.

    • தங்கம் தினந்தோறும் உயர்ந்து புதிய உச்சத்தில் விற்பனையாகிறது.
    • தங்கத்துக்கு போட்டியாக வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.

    சென்னை:

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை காலை, மாலை என இருவேளைகளில் உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தில் விற்பனையாகிறது. இதனால் சுபநிகழ்ச்சிகளுக்காக தங்கம் வாங்க நினைப்போருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

    இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. கிராமுக்கு 275 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.15,025-க்கும் சவரனுக்கு 2,200 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 200 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இதன் மூலம் தங்கம் புதிய உச்சத்தில் விற்பனையாகிறது.

     

    தங்கத்துக்கு போட்டியாக வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 375 ரூபாய்க்கும் பார் வெள்ளி 3 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    25-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,18,000

    24-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,18,000

    23-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,16,400

    22-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,600

    21-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,15,320

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    25-1-2026- ஒரு கிராம் ரூ.65

    24-1-2026- ஒரு கிராம் ரூ.365

    23-1-2026- ஒரு கிராம் ரூ.345

    22-1-2026- ஒரு கிராம் ரூ.340

    21-1-2026- ஒரு கிராம் ரூ.345

    • படிவங்களை வாங்கும் பணியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
    • 87 ஆயிரத்து 579 பேரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்வதற்கான விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 19-ந்தேதி வெளியிடப்பட்டது. அதில் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளனர். அதில் 66 லட்சம் பேர் இடம் மாறி சென்றவர்களாக காட்டப்பட்டுள்ளனர். தற்போது வாக்காளராக சேர்வதற்கு வருகிற 30-ந் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

    இடம் மாறி சென்ற வாக்காளர்கள், அந்த இடத்திற்கான வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் படிவம் எண் 6-ஐ அளித்து தங்களை வாக்காளராக மீண்டும் சேர்த்துக்கொள்ள முடியும். இந்த படிவங்களை வாங்கும் பணியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    அவர்களுக்கு அரசியல் கட்சிகளின் தேர்தல் முகவர்கள் உதவி புரிந்து வருகின்றனர். அந்த வகையில், இதுவரை 15 லட்சத்து 65 ஆயிரத்து 454 பேர் தங்களை வாக்காளராக சேர்த்துக்கொள்வதற்கு புதிதாக விண்ணப்பித்துள்ளனர். அதேபோன்று, 87 ஆயிரத்து 579 பேரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்வதற்கான விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளதாகவும் தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

    • முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், குடியரசு தின விழா நடைபெறும் இடத்துக்கு வந்தார்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பசுமை கூடை வழங்கி, கவர்னரை வரவேற்றார்.

    இந்தியாவின் 77-வது குடியரசு தினவிழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே இன்று குடியரசு தின விழா நடைபெற்றது.

    தமிழக போக்குவரத்து காவல் படையினரின் வாகன அணிவகுப்புடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், குடியரசு தின விழா நடைபெறும் இடத்துக்கு வந்தார். அவரை தொடர்ந்து ராணுவ வாகன அணிவகுப்புடன் கவர்னர் ஆர்.என்.ரவி, விழா நடைபெறும் இடத்துக்கு வந்தார். அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பசுமை கூடை வழங்கி, கைகுலுக்கி வரவேற்றார்.

    இதைத்தொடர்ந்து காலை 8 மணியளவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில், கவர்னர் ஆர்.என்.ரவி தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.
    • சி.எம்.டி.ஏ., குரு ராகவேந்திரா நகர், சீனிவாச நகர், நடராஜ் நகர்.

    சென்னை:

    சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (27.01.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,

    அடையாறு: கெனால் பங்க் சாலை, புற்றுநோய் மருத்துவமனை, காந்தி நகர், கெனால் குறுக்குத் தெரு, விவேக் ஷோரூம், கிரசண்ட் அவென்யூ, காமராஜ் கல்லூரி, பம்பிங் ஸ்டேஷன், மலர் மருத்துவமனை, மல்லிபூ நகர், கருணாநிதி தெரு, பாண்டிச்சேரி சாலை, வரதாபுரம் லேக் வியூ சாலை, இந்திரா நகர், காமராஜ் அவென்யூ, டீச்சர்ஸ் காலனி, ஜஸ்டிஸ் ராமசாமி அவென்யூ, கஸ்தூரிபாய் நகர், ECR மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

    வடபெரும்பாக்கம்: சி.எம்.டி.ஏ., குரு ராகவேந்திரா நகர், சீனிவாச நகர், நடராஜ் நகர், 200 அடி சாலை, ஆதிநாத் நகர், இபிஎம் நதி, ஜி ஸ்கொயர், வள்ளி பூங்கா, ராமலட்சுமி கல்யாண மண்டபம் சாலை, ஏரிக்கரை, பாலாஜி நகர், ஓமக்குளமேடு, கில்பர்ன் நகர், ஆர்ஆர் நகர், சாரங்கபாணி நகர், சண்முகசுந்தரம் நகர், சீதாபதி 1 முதல் 5-வது தெரு வரை, MRH சாலை.

    • வேற்றுமையில் ஒற்றுமை என்பது நூற்றாண்டுகள் கடந்த நாட்டுணர்வுப் பண்பு.
    • இந்தியாவின் ஒவ்வொரு மொழியும், இனமும், பண்பாடும் தனித்துவமானவை.

    சென்னை:

    நாடு முழுவதும் 77-வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாட்டு மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

    பரந்துபட்ட இந்தியா! எண்ணற்ற மொழிகள் இனங்கள், பண்பாடுகள், நம்பிக்கைகள் தழைக்கும் நாடு.

    வேற்றுமையில் ஒற்றுமை என்பது நூற்றாண்டுகள் கடந்த நாட்டுணர்வுப் பண்பு.

    நாம் அனைவரும் சுயமரியாதை உணர்வுடன், நம்பிக்கையுடன் சுதந்திரத்துடன் வாழும்போது ஒட்டுமொத்த இந்தியாவும் ஒருசேர உயர்கிறது.

    இந்தியாவின் ஒவ்வொரு மொழியும், இனமும், பண்பாடும் தனித்துவமானவை. அவை ஒன்றை ஒன்று மதித்து வளப்படுத்துகின்றன.

    நமது பலம் என்பது ஒற்றைத்தன்மை அல்ல, பன்முகத்தன்மையே. அந்த பன்முகத்தன்மை காக்கப்படுவதே இந்தியாவைக் காக்கும்.

    பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவைப் போற்றுவோம்! பெருமிதத்துடன் என் மனமார்ந்த குடியரதின நல்வாழ்த்துகள் என்று கூறியுள்ளார். 

    • புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
    • நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

    சென்னை:

    குமரிக்கடல் பகுதிகளிலிருந்து வடக்கு கேரள கடலோரப் பகுதிகள் வரை ஒரு கிழக்கு வளிமண்டல காற்றலை நிலவுகிறது. இதன் காரணமாக இன்று உள் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் இன்று காலை 10 மணி வரை 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    • தமிழகத்தைச் சேர்ந்த 13 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
    • சாதனைகளைப் படைத்து, சமூகத்துக்குச் சேவையாற்றிட இந்த அங்கீகாரம் ஊக்கமளிக்கும் என நம்புகிறேன்.

    சென்னை:

    நடப்பு ஆண்டிற்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் 5 பத்ம விபூஷண், 13 பத்ம பூஷண் மற்றும் 113 பத்மஸ்ரீ விருதுகள் என மொத்தம் 131 பத்ம விருதுகளை வழங்க ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். இதில் தமிழகத்தைச் சேர்ந்த 13 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த பத்ம விருதாளர்களுக்குத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், தமிழ்நாட்டில் இருந்து பத்ம பூஷன் விருது பெறத் தேர்வாகியிருக்கும் ராமசாமி பழனிசாமி, மயிலானந்தன் ஆகியோருக்கும், பத்ம ஸ்ரீ விருது பெறத் தேர்வாகியிருக்கும் எச்.வி. ஹண்டே, சிவசங்கரி, காயத்ரி பாலசுப்ரமணியன் மற்றும் ரஞ்சனி பாலசுப்ரமணியன், ராமசாமி, விஜயகுமார், ஓதுவார் திருத்தணி சுவாமிநாதன், புண்ணியமூர்த்தி நடேசன், ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், திருவாரூர் பக்தவத்சலம், வி. காமகோடி ஆகியோருக்கும் எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தங்களது துறைகளில் தாங்கள் தொடர்ந்து சாதனைகளைப் படைத்து, சமூகத்துக்குச் சேவையாற்றிட இந்த அங்கீகாரம் ஊக்கத்தினை வழங்கிடும் என நம்புகிறேன்.

    பத்ம பூஷன் பெறவுள்ள டென்னிஸ் வீரரும் எனது நண்பருமான விஜய் அமிர்தராஜ், திரைக்கலைஞர் மம்மூட்டி, பத்ம ஸ்ரீ விருது பெறவுள்ள நடிகர் மாதவனுக்கும் எனது சிறப்பு வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.

    • தமிழகம் முழுவதும் போராட்ட களமாக மாறிவிட்டது.
    • இந்த தேர்தல் தி.மு.க.வுக்கு இறுதி தேர்தல் ஆகும்.

    சென்னை:

    சென்னை சூளை பகுதியில் ஜெயின் சமூகத்தினரின் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார்.

    ஜெயின் சமூக பாரம்பரியபடி எடப்பாடி பழனிசாமிக்கு தலையில் சாபா கட்டப்பட்டது. அதனை தொடர்ந்து மணமக்கள் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மோதிரம் மாற்றிக் கொண்டனர். அங்கு எடப்பாடி பழனிசாமியை நிருபர்கள் சந்தித்தனர். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இனி எப்போதும் திராவிட முன்னேற்ற கழக ஆட்சி தமிழகத்தில் வராது. இந்த தேர்தல் தி.மு.க.வுக்கு இறுதி தேர்தல் ஆகும்.

    2021 சட்டமன்ற பொது தேர்தலின்போது தி.மு.க. அறிவித்த தேர்தல் அறிக்கையில் 4-ல் ஒரு பங்கு தேர்தல் அறிக்கை கூட நிறைவேற்றப்படவில்லை. எல்லா தரப்பு மக்களும் போராட்டத்தில் இறங்கி விட்டார்கள்.

    அரசு ஊழியர்கள் ஒரு பக்கம் போராட்டம், பகுதி ஆசிரியர்கள் போராட்டம், இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம், டாக்டர்கள் ஒரு பக்கம் போராட்டம், சத்துணவு அமைப்பாளர்கள் போராட்டம், இன்று தமிழகம் முழுவதும் போராட்ட களமாக மாறிவிட்டது. எங்கு பார்த்தாலும் மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

    அந்த அளவுக்கு மக்களுடைய வெறுப்பை சம்பாதித்த அரசு தி.மு.க. அரசு. அதனால் இந்த தேர்தலோடு மக்கள் தி.மு.க.வுக்கு விடை கொடுத்து விடுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழக முதலமைச்சரின் மெச்சத்தக்க நுண்ணறிவுப் பதக்கம் மற்றும் மெச்சத்தக்க சிறப்பு செயலாக்கப் பதக்கம்’ வழங்க மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.
    • விருதுகள் பெறுவோர் ஒவ்வொருவருக்கும் தலா 10 கிராம் எடையுடன் கூடிய தங்கப் பதக்கமும், 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கப்படும்.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக காவல்துறையில் மெச்சத்தக்க நுண்ணறிவு மற்றும் மெச்சத்தக்க சிறப்பு செயலாக்க பிரிவில் மிகச் சிறப்பாகப் பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணி புரிந்ததை பாராட்டும் வகையிலும் காவல்துறை அதிகாரிகள், பணியாளர்களுக்கு 2026-ம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக முதலமைச்சரின் மெச்சத்தக்க நுண்ணறிவு மற்றும் மெச்சத்தக்க சிறப்பு செயலாக்கப் பணிப் பதக்கங்கள் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    அதன்படி 2026-ம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு, காவல் துறையில் மெச்சத் தக்க நுண்ணறிவு மற்றும் மெச்சத்தக்க சிறப்பு செயலாக்கப் பிரிவில் பணியாற்றிய 43 காவல்துறை அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் 1 தனிப் பிரிவு உதவியாளர், நுண்ணறிவுப் பிரிவு ஆகியோருக்கு 'தமிழக முதலமைச்சரின் மெச்சத்தக்க நுண்ணறிவுப் பதக்கம் மற்றும் மெச்சத்தக்க சிறப்பு செயலாக்கப் பதக்கம்' வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

    விருதுகள் பெறுவோர் ஒவ்வொருவருக்கும் தலா 10 கிராம் எடையுடன் கூடிய தங்கப் பதக்கமும், 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கப்படும். மேற்கண்ட விருதுகள், முதலமைச்சரால் பிறிதொரு விழாவில் வழங்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×