என் மலர்tooltip icon

    சென்னை

    • மாதவரம் பஸ் நிலையத்தில் இருந்து வெள்ளி, சனி ஆகிய நாள்களில் தலா 20 பஸ்கள் இயக்கப்படும்.
    • பயணிகளின் தேவைக்கேற்ப தமிழகத்தின் அனைத்து ஊர்களில் இருந்தும் சிறப்புப் பஸ்கள் இயக்கப்படும்.

    தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வார இறுதி விடுமுறையையொட்டி, நாளை (21-ந்தேதி), நாளை மறுநாளும் (22-ந் தேதி) சென்னையில் இருந்து மற்ற இடங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கும் அதிகம் பேர் பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆகவே, பயணிகளின் வசதிக்காக தினசரி இயக்கும் பஸ்களுடன் கூடுதல் சிறப்புப் பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு நாளை (வெள்ளிக்கிழமை), நாளை மறுநாள் (சனிக்கிழமை) 340 சிறப்புப் பஸ்களும், சனிக்கிழமை (நவ.22) 350 சிறப்புப் பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஒசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு நாளை, நாளை மறுநாள் தலா 55 பஸ்கள் என மொத்தம் 110 சிறப்புப் பஸ்கள் இயக்கப்படும்.

    மாதவரம் பஸ் நிலையத்தில் இருந்து வெள்ளி, சனி ஆகிய நாள்களில் தலா 20 பஸ்கள் இயக்கப்படும். இதுதவிர, பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோவை ஆகிய இடங்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 100 சிறப்புப் பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல, வருகிற 23-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சொந்த ஊர்களில் இருந்து சென்னை, பெங்களூருக்கு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப தமிழகத்தின் அனைத்து ஊர்களில் இருந்தும் சிறப்புப் பஸ்கள் இயக்கப்படும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சேத்துப்பட்டில் மேம்படுத்தப்பட்ட சிறிய கால்பந்து மைதானம் என 20.89 கோடி ரூபாய் செலவில் 4 முடிவுற்றப் பணிகளை திறந்து வைத்தார்.
    • டாடா டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் சார்பில் ஆவடி, அன்னனூர், கோணாம்பேடு அரசு உயர்நிலைப் பள்ளிகளில் கூடுதல் பள்ளிக் கட்டிடங்கள், கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் குளிர்சாதன சேமிப்பு கிடங்குகள், புழல் மேட்டுபாளையத்தில் மேம்படுத்தப்பட்ட கால்பந்து மைதானம் மற்றும் சேத்துப்பட்டில் மேம்படுத்தப்பட்ட சிறிய கால்பந்து மைதானம் என 20.89 கோடி ரூபாய் செலவில் 4 முடிவுற்றப் பணிகளை திறந்து வைத்தார்.

     

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் 2024-ம் ஆண்டிற்கான இலக்கிய மாமணி விருதுகளை சென்னை, மாவட்டத்தைச் சேர்ந்த முனைவர் தெ. ஞானசுந்தரம் (மரபுத் தமிழ்), திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முனைவர் இரா. காமராசு (ஆய்வுத் தமிழ்), தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த க. சோமசுந்தரம் என்கிற கலாப்ரியா (படைப்புத்தமிழ்) ஆகியோருக்கு வழங்கி சிறப்பித்தார்.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் உயர்கல்வித் துறை சார்பில் கடலூர், விழுப்புரம், திருப்பத்தூர், அரியலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 59 கோடியே 93 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கல்விசார் கட்டடங்களை காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்து, தமிழ்நாட்டில் உள்ள 44 அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரிகளைத் திறன்மிகு மையங்களாக மேம்படுத்திடும் வகையில் டாடா டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

    மேலும், 190 உதவிப் பேராசிரியர்கள், 12 உதவி நூலகர்கள் மற்றும் 11 உதவி இயக்குநர் (உடற்கல்வி) பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

    • ஆர்ப்பாட்டத்தில் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
    • வாக்காளர் திருத்தப்பட்டியலை சீரழிக்கும் முயற்சியில் தி.மு.க. ஈடுபட்டு வருகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணியில் ஆளும் தி.மு.க. அரசு அதிகாரத்தை பயன்படுத்தி பல்வேறு குளறுபடிகளை செய்து வருவதாக அ.தி.மு.க. குற்றம் சாட்டியது. இதனை கண்டித்து அ.தி.மு.க.வின் ஒருங்கிணைந்த சென்னை மாவட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகே நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தலைமை தாங்கினார். ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட செயலாளர்கள் பாலகங்கா, வி.என். ரவி, ஆதிராஜாராம், வி.எஸ்.பாபு, தி.நகர் சத்தியா, ராஜேஷ், அசோக், கே.பி.கந்தன் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் கண்டன முழக்கங்களை எழுப்பினர். அப்போது முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேசியதாவது:-

    சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த பணியில் தி.மு.க.வினர் தொடர்ந்து முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை மாவட்டத்தை பொறுத்தவரை மாவட்ட தேர்தல் அதிகாரியாக உள்ள ஆணையர், தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல் படி நடக்கவில்லை. இதுபோல் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலுக்கு எதிராக நடைபெறும் அதிகாரிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெற வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக மட்டுமே சிறப்பு வாக்காளர் தீவிர திருத்தப்பட்டியலை அ.தி.மு.க. தொடர்ந்து ஆதரிக்கிறது. இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும் இந்த ஜனநாயக முறைப்படியிலான வாக்காளர் திருத்தப்பட்டியலை சீரழிக்கும் முயற்சியில் தி.மு.க. ஈடுபட்டு வருகிறது. அதனை அதி.மு.க. ஒருபோதும் அனுமதிக்காது.

    அண்மைக்காலமாக தேர்தல் ஆணையம் வெளியிடும் வாக்காளர் பட்டியல்களில் 20 ஆண்டுகளாக முகவரி மாறியவர்கள், இறந்தவர்கள் நீக்கம் செய்ய வேண்டும் என தொடர்ந்து அ.தி.மு.க. வலியுறுத்தி வருகிறது. வாக்காளர் பட்டியலில் வெளிப்படை தன்மை இருக்க வேண்டும் என்பதற்காகவே, சிறப்பு வாக்காளர் தீவிர திருத்தப் பட்டியலை அ.தி.மு.க. ஆதரித்ததே தவிர, பா.ஜ.க. ஆதரிப்பதால், அ.தி.மு.க. ஆதரிக்கவில்லை.

    சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு எச்சரிக்கையாக சொல்கிறோம். நியாயமான முறையில் நடக்கவில்லை என்றால் இன்னும் 6 மாதத்தில் நீங்கள் தண்டிக்கப்படுவீர்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், பா.வளர்மதி, கோகுல் இந்திரா மற்றும் ராயபுரம் மனோ, தென் சென்னை மாவட்ட அவைத் தலைவர் தி.நகர் சுவாமி நாதன், எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட இணை செயலாளர் மாவட்ட இணை செயலாளர் ஆவின் அருள்வேல், லட்சுமி நாராயணன், பெரும்பாக்கம் ராஜசேகர், சைதை சொ.கடும் பாடி, எம்.என்.இளங்கோ, பகுதி செயலாளர் துறைமுகம் பயாஸ், ரோலக்ஸ் ஆர்.இஸ்மாயில், பட்மேடு டி.சாரதி, புரசை எம்.கிருஷ்ணன், சேவியர், வி.சுகுமார், ஜி.ஆர்.சதீஷ் குமார், வில்லிவாக்கம் ஜெய், சுரேஷ், பாலசுப்பிர மணியன், வில்லிவாக்கம் பிரபு காந்த், கேட்டரிங் ரமேஷ், எம்.ஆர். சந்திரன், ஜெய செல்வகுமார், வழக்கறிஞர் அருண், வட்ட செயலாளர் உதய வெற்றி, எழும்பூர் சரவணன், எம்.குமரவேல், எம்.பெருமாள், பி.சிவக்குமார், எழும்பூர் ஆர்.ரமேஷ், சேத்துப்பட்டு பிரகாஷ், நா.சுப்பிரமணியன், பகுதி செயலாளர்கள் ஏ.எம்.காமராஜ், வேளச்சேரி எம்.ஏ.மூர்த்தி, சி.கே.முருகன், சைதை சுகுமார், ஷேக்அலி, வழக்கறிஞர் சதாசிவம் மற்றும் வழக்கறிஞர் சரவணன், எம்.ஜி.ஆர். நகர் குட்டி, செயல் மோகன், பூவரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



    • தென் மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை யொட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
    • தமிழகத்தில் வருகிற 25-ந் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில் தென் மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை யொட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்று (வியாழக்கிழமை) முதல் வருகிற 25-ந் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது

    இந்த நிலையில், தமிழகத்தில் நாளை முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அந்த வகையில், கடலூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    மேலும், நாளை தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கடலூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது.

    கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும்,

    சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களில் 22, 23ம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளது.

    மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் வரும் 24ம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளது.

    விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் வரும் 25ம் தேதி கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • சென்னை அடையாறில் நடந்த கூட்டத்தில் மல்லை சத்யா தனது புதிய கட்சியின் பெயரை அறிவித்தார்.
    • ம.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பலரும் மல்லை சத்யாவின் 'திராவிட வெற்றிக் கழகம்' கட்சியுடன் இணைந்துள்ளனர்.

    ம.தி.மு.க. துணை பொதுச்செயலர் பதவியில் இருந்தும் அக்கட்சியில் இருந்தும் மல்லை சத்யா நீக்கப்பட்டார்.

    இதையடுத்து புதிய கட்சியின் பெயர் நவ.20-ந்தேதி அறிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்து இருந்தார்.

    இந்நிலையில் சென்னை அடையாறில் நடந்த கூட்டத்தில் மல்லை சத்யா தனது புதிய கட்சியின் பெயரை அறிவித்தார். அவர் 'திராவிட வெற்றிக் கழகம்' என்ற கட்சியை தொடங்கினார்.

    ம.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பலரும் மல்லை சத்யாவின் 'திராவிட வெற்றிக் கழகம்' கட்சியுடன் இணைந்துள்ளனர்.

    தி.மு.க.வில் அங்கம் வகித்த வைகோ, கலைஞர் கருணாநிதியுடன் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அக்கட்சியில் இருந்து வெளியேறி ம.தி.மு.க. என்ற புதிய கட்சியை தொடங்கினார். இதே போன்று ம.தி.மு.க.வில் அங்கம் வகித்த மல்லை சத்யா துரை வைகோவுடனான மோதல் போக்கு காரணமாக அக்கட்சியில் இருந்து விலகினார். இந்நிலையில் அவர் திராவிட வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கி உள்ளார்.

    • பீகார் தேர்தல் முடிவு என்பது ஜனநாயகத்தை கொன்று புதைக்கிற ஒரு சதி திட்டத்தின் விளைச்சல் தான்.
    • மக்களுக்கு ஜனநாயகத்தின் மீதான நம்பகத்தன்மையை சிதைப்பது என்கிற அடிப்படையில் தான் அது அரங்கேற்றப்பட்டிருக்கிறது.

    சென்னை:

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தனது எக்ஸ் வலை தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    எஸ்.ஐ.ஆர்.வேண்டாம் என்கிற கோரிக்கையை முன்வைத்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் 24-ந் தேதி காலை 10 மணி அளவில் சென்னையில் எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. எஸ்.ஐ.ஆர். என்பது பாரதிய ஜனதா கட்சியும் தேர்தல் ஆணையமும் சேர்ந்து நடத்துகிற ஒரு கூட்டுச் சதி. அவர்கள் குடியுரிமையை பறிப்பதற்கான ஒரு செயல் திட்டமாகவும் எதிர்ப்பு வாக்குகளை பட்டியலில் இருந்து நீக்குவதற்கான ஒரு செயல் திட்டமாகவும் இதை வடிவமைத்திருக்கிறார்கள்.

    எனவே, இது உள்நோக்கம் கொண்ட ஒரு நடவடிக்கை. இந்த நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும். பழைய முறைப்படி எஸ்.ஆர்.என்கிற திருத்த முறையையே இந்த தேர்தலுக்கு முன்பு பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறோம்.

    பீகார் தேர்தல் முடிவு என்பது ஜனநாயகத்தை கொன்று புதைக்கிற ஒரு சதி திட்டத்தின் விளைச்சல் தான். பாராளுமன்ற ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்குவது. மக்களுக்கு ஜனநாயகத்தின் மீதான நம்பகத்தன்மையை சிதைப்பது என்கிற அடிப்படையில் தான் அது அரங்கேற்றப்பட்டிருக்கிறது.

    மேலோட்டமாக வாக்காளர் பட்டியல் சீராய்வு என்று சொல்லப்பட்டாலும் குடியுரிமையை பறிக்கிற தேசிய குடிமக்கள் பேரேட்டை உருவாக்குகிற சட்டத்தை நடை முறைப்படுத்துகிற சதி முயற்சிதான் இது. வெளிப்படையாக அவர்கள் சொல்லவில்லை என்றாலும் அதுதான் உண்மை என்பதை உணர வேண்டும். இது நாட்டுக்கு நல்லதல்ல.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • விவசாயிகளின் அழுகுரல் ஏன் கேட்கவில்லை? கண்ணீர் ஏன் தெரியவில்லை?
    • ஈரப்பத அளவிற்கான தளர்வைப் பலமுறை வழங்கிய ஒன்றிய அரசு தற்போது வழங்க மறுப்பது ஏன்?

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    கோவைக்கான மெட்ரோ ரெயில் திட்டத்தை நிராகரித்துவிட்டு, அதே கோவைக்கு எந்தவிதமான உறுத்தலும் இன்றி பிரதமர் வந்து சென்ற ஈரம்கூட இன்னும் காயவில்லை; அதற்குள் நெல் கொள்முதலில் ஈரப்பதம் தளர்வு தொடர்பான நமது கோரிக்கையை நிராகரித்துள்ளது ஒன்றிய அரசு பா.ஜ.க. அரசு.

    கனமழை காரணமாக ஈரப்பதம் அதிகமாகியுள்ள நெல்லினைக் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற தமிழ்நாட்டின் குரல் ஏன் பிரதமரின் காதுகளுக்குக் கேட்கவில்லை? விவசாயிகளின் அழுகுரல் ஏன் கேட்கவில்லை? கண்ணீர் ஏன் தெரியவில்லை?

    கடந்த ஆண்டுகளில், தமிழ்நாடு அரசின் கோரிக்கைகளின் அடிப்படையில், இத்தகைய ஈரப்பத அளவிற்கான தளர்வைப் பலமுறை வழங்கிய ஒன்றிய அரசு தற்போது வழங்க மறுப்பது ஏன்?

    கன மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்குக் கோரப்பட்ட நிவாரணமும் அளிக்காமல், ஈரப்பத அளவையும் அதிகரிக்காமல் இருப்பது விவசாயிகளுக்கு எந்தவிதத்தில் நன்மை செய்யும் என நினைக்கிறீர்கள்?

    உடனடியாக இவற்றை மறுபரிசீலனை செய்வதோடு, தமிழ்நாட்டின் கோரிக்கைகள் மீது நல்லதொரு முடிவெடுத்து வேளாண் பெருங்குடி மக்களுக்கு ஒன்றிய அரசு நன்மை செய்யும் என நம்புகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திருத்தணியில் இருந்து மதியம் 12.35 மணிக்கு சென்டிரல் வரும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.
    • பட்டாபிராம்-திருவள்ளூர் இடையேயான மின்சார ரெயில் சேவை முழுவதும் ரத்து செய்யப்படுகிறது.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை சென்டிரல்-அரக்கோணம் வழித்தடத்தில் உள்ள திருநின்றவூர் ரெயில்வே பணிமனையில் வருகிற 23-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் மாலை 3.40 மணி வரையில் (8 மணி நேரம் 40 நிமிடம்) பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    * சென்னை கடற்கரையில் இருந்து காலை 5.40, 6.10, 9.55, மதியம் 1.05 ஆகிய நேரங்களில் திருவள்ளூர் செல்லும் மின்சார ரெயிலும், கடற்கரையில் இருந்து மதியம் 2.25 மணிக்கு அரக்கோணம் செல்லும் மின்சார ரெயிலும், கடற்கரையில் இருந்து மதியம் 12.10 மணிக்கு திருத்தணி செல்லும் மின்சாரரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.

    * சென்டிரலில் இருந்து காலை 6.50, 7.45, 8.05, 8.40, 9.15, 9.35, 10.40, 11.30 மதியம் 12, 1, 1.50, 2.40 ஆகிய நேரங்களில் திருவள்ளூர் செல்லும் மின்சார ரெயில்களும், திருவள்ளூரில் இருந்து காலை 6.50, 7.30, 8.10, 8.20, 8.30, 9.10, 9.25, 10.05, 11.30 மதியம் 1.05, 2.40, 3.05 ஆகிய நேரங்களில் சென்டிரல் வரும் மின்சார ரெயில்களும் ரத்து செய்யப்படுகிறது.

    * சென்டிரலில் இருந்து காலை 9.55, 11.45 மதியம் 2.15 ஆகிய நேரங்களில் திருத்தணி செல்லும் மின்சார ரெயில்களும், மதியம் 12.40, 1.25 ஆகிய நேரங்களில் அரக்கோணம் செல்லும் மின்சார ரெயில்களும், காலை 10.30 மணிக்கு கடம்பத்தூர் செல்லும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.

    * அரக்கோணத்தில் இருந்து காலை 6.40, 7.10, 11.15, மதியம் 12, 1.40 ஆகிய நேரங்களில் சென்டிரல் வரும் மின்சார ரெயிலும், திருநின்றவூரில் இருந்து காலை 7.55 மணிக்கு சென்டிரல் வரும் மின்சார ரெயிலும், திருத்தணியில் இருந்து மதியம் 12.35 மணிக்கு சென்டிரல் வரும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.

    * எண்ணூரில் இருந்து காலை 6.35 மணிக்கு திருவள்ளூர் செல்லும் மின்சார ரெயிலும், திருவள்ளூரில் இருந்து மதியம் 12 மணிக்கு ஆவடி செல்லும் மின்சார ரெயிலும், கடம்பத்தூரில் இருந்து மதியம் 12.05 மணிக்கு கடற்கரை வரும் மின்சார ரெயிலும், திருவள்ளூரில் இருந்து மதியம் 1.30 மணிக்கு கடற்கரை வரும் மின்சார ரெயிலும், ஆவடியில் இருந்து காலை 5 மணிக்கு எண்ணூர் வரும் மின்சார ரெயிலும் என மொத்தம் 49 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

    * கடற்கரை மற்றும் சென்டிரலில் இருந்து ஆவடி மற்றும் பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் செல்லும் ரெயில்கள் இருமார்க்கமாகவும் வழக்கமான அட்டவணைபடி இயங்கும்.

    * வருகிற 23-ந்தேதி மதியம் 12.10 மணி முதல் மாலை 3.40 மணி வரையில் பட்டாபிராம்-திருவள்ளூர் இடையேயான மின்சார ரெயில் சேவை முழுவதும் ரத்து செய்யப்படுகிறது.

    இதன் காரணமாக அன்று காலை 6.30, 8.20, 11 மணிக்கு சென்டிரல் -அரக்கோணத்துக்கும், காலை 7, 7.25, 9.10 மணிக்கு சென்டிரல்-திருத்தணிக்கும், காலை 10.45 மணிக்கு சென்டிரல்-ஆவடிக்கும், காலை 9.50 மணிக்கு சென்டிரல்- திருப்பதிக்கும், காலை 8.15, 8.55, 10 மணிக்கு அரக்கோணம்- சென்டிரலுக்கும், காலை 7 மணிக்கு திருவள்ளூர்- சென்டிரலுக்கும், காலை 10.15 மணிக்கு திருத்தணி- சென்டிரலுக்கும், காலை 6.20, 7.35, 8 மணிக்கு அரக்கோணம்-கடற்கரைக்கும், காலை 8.50 மணிக்கு திருத்தணி-கடற்கரைக்கும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.

    இதேபோல் காலை 11.15, மதியம் 12.55, 1.40, மாலை 3.45 மணிக்கு திருவள்ளூர்-திருத்தணிக்கும், மதியம் 12, 2.15 மாலை 3 மணிக்கு திருவள்ளூர்-அரக்கோணத்துக்கும், காலை 10.30, 11.15 மதியம் 12, 1.30, 2.15 மணிக்கு அரக்கோணம்-திருவள்ளூருக்கும், மதியம் 12.35 மணிக்கு திருத்தணி-திருவள்ளூருக்கும் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்துள்ளது.
    • வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது.

    சென்னை:

    தங்கம் விலையில் ஏற்ற-இறக்கம் தொடர்ந்து நீடிக்கிறது. கடந்த 13-ந்தேதி வரை விலை கிடுகிடுவென அதிகரித்து வந்து, பின்னர் குறைந்து காணப்பட்டது. அதன்படி, நேற்று முன்தினம் விலை சரிந்து ஒரு சவரன் ரூ.91,200-க்கு விற்பனை ஆனது.

    இந்த நிலையில் நேற்று மீண்டும் விலை அதிகரித்து இருந்தது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 400-க்கும், ஒரு சவரன் ரூ.91 ஆயிரத்து 200-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    காலையில் கிராமுக்கு ரூ.100-ம், சவரனுக்கு ரூ.800-ம், பிற்பகலில் அதேபோல் கிராமுக்கு ரூ.100-ம், சவரனுக்கு ரூ.800-ம் என மொத்தம் நேற்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.200-ம், சவரனுக்கு ரூ.1,600-ம் அதிகரித்து ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 600-க்கும், ஒரு சவரன் ரூ.92 ஆயிரத்து 800-க்கும் விற்பனை ஆனது.

    இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.92 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.11,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 குறைந்து ரூ.173-க்கும், கிலோவுக்கு மூவாயிரம் குறைந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 73 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

     

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    19-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.92,800

    18-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.91,200

    17-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.92,320

    16-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.92,400

    15-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.92,400

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    19-11-2025- ஒரு கிராம் ரூ.176

    18-11-2025- ஒரு கிராம் ரூ.170

    17-11-2025- ஒரு கிராம் ரூ.173

    16-11-2025- ஒரு கிராம் ரூ.175

    15-11-2025- ஒரு கிராம் ரூ.175

    • நம் தாய் அமைப்பான நீதிக்கட்சி தலைதூக்கிய நாள் இன்று.
    • நீதிக்கட்சியின் நீட்சியே நம் திராவிட மாடல் ஆட்சி எனத் தொடர்ந்து மெய்ப்பிப்போம்!

    சென்னை:

    தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    நம் உரிமைக்குரலின் உதயம்!

    இந்த மண்ணின் மைந்தர்களுக்குக் கல்வி - வேலைவாய்ப்பு - அதிகாரத்தில் உரிய பங்கைப் பெற்றுத் தந்து, சமூகநீதியை நிலைநாட்டியே தீருவது என்ற #NonBrahminManifesto-வைச் செயல்படுத்திக் காட்ட, நம் தாய் அமைப்பான நீதிக்கட்சி தலைதூக்கிய நாள் இன்று.

    நீதிக்கட்சியின் நீட்சியே நம் திராவிட மாடல் ஆட்சி எனத் தொடர்ந்து மெய்ப்பிப்போம்! சூழும் ஆரிய சூழ்ச்சிகளை எல்லாம் சுக்குநூறாக உடைத்தெறிவோம்! என்று பதிவிட்டுள்ளார். 



    • தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    • 4 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யக்கூடும்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இம்மாதம் தொடக்கத்தில் இருந்து சற்று தொய்வு ஏற்பட்டாலும், கடந்த 3 நாட்களாக மீண்டும் பரவலாக பெய்யத் தொடங்கி உள்ளது. அதிலும் டெல்டா, தென் மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. இதன் தொடர்ச்சியாக 22-ந்தேதி (நாளை மறுநாள்) இலங்கையையொட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்ந்து மேலும் வலுப்பெறக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 24-ந்தேதி (திங்கட்கிழமை) வரையிலான 4 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யக்கூடும் என டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்தார்.

    இதனையடுத்து, மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி 24-ந்தேதி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. 22-ந்தேதி உருவாகக்கூடிய தாழ்வுப் பகுதி மேலும் வலுவடைந்து புயலாக மாறுமா? அல்லது அந்தமான் கடல் பகுதியில் புதிதாக உருவாகி வரக்கூடிய தாழ்வுப் பகுதி புயலாக மாறுமா? என்பது 26-ந்தேதிக்கு பிறகு தான் சொல்ல முடியும் என டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் கூறினார்.

    • ஒரு பெட்டியில் சுமார் 23 டன் பார்சல்கள் ஏற்றி செல்ல முடியும்.
    • ரெயில்வே அனுமதித்த பொருட்கள் மட்டுமே எடுத்துசெல்ல முடியும்.

    சென்னை:

    தெற்கு ரெயில்வேயில் முதன் முறையாக பார்சல்களை அனுப்புவதற்கான 12 பெட்டிகள் கொண்ட தனி ரெயில் அடுத்த மாதம் 12-ந்தேதி முதல் இயக்கப்படவுள்ளன. கர்நாடக மாநிலம் மங்களூருவில் இருந்து சென்னை ராயபுரம் வரை இயக்கப்பட உள்ளது. ஒவ்வொரு பெட்டியிலும் ஒரு குறிப்பிட்ட ரெயில் நிலையங்களுக்கான பார்சல்களை ஏற்றுவதற்கு ஒதுக்கப்படும்.

    ஒரு பெட்டியில் சுமார் 23 டன் பார்சல்கள் ஏற்றி செல்ல முடியும். வாரத்தில் ஒரு நாள் இயக்கப்படும் இந்த ரெயில் மங்களூருவில் இருந்து டிசம்பர் 12-ந் தேதி புறப்பட்டு 13-ந் தேதி மதியம் 1.30 மணிக்கு சென்னை ராயபுரம் வந்தடையும். பின்னர், 16-ந்தேதி மாலை 3.45 மணிக்கு ராயபுரத்தில் இருந்து புறப்பட்டு மங்களூரு சென்றடையும்.

    இதில் ரெயில்வே அனுமதித்த பொருட்கள் மட்டுமே எடுத்துசெல்ல முடியும். ரெயிலில் அனுப்பப்படும் பார்சல்களுக்கு 3 பிரிவில் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து செல்லும் இந்த ரெயிலானது சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, கோழிக்கோடு, கன்னூர் உள்ளிட்ட 12 ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். அடுத்தக்கட்டமாக சென்னையிலிருந்து திருச்சி, மதுரை வழியாக திருவனந்தபுரத்துக்கு இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த தகவலை தெற்கு ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×