என் மலர்
செங்கல்பட்டு
- மீன்வளத்துறை அதிகாரிகள் அப்பகுதியை ஆய்வு செய்து, அரசின் பார்வைக்கு கொண்டு சென்றது.
- நெம்மேலி ஊராட்சி தலைவர் ரமணி சீமான் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் அருகே உள்ள புதுகல்பாக்கம் மீனவர் பகுதியில் கடலரிப்பு ஏற்பட்டு, மணல்பரப்பு கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வந்தது., இதனால் மீனவர்கள் படகுகளை நிறுத்தி வைக்கவும், மீன்களை இறக்கவும், சிரமப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் மீன்வளத்துறை அதிகாரிகள் அப்பகுதியை ஆய்வு செய்து, அரசின் பார்வைக்கு கொண்டு சென்றது. அரசு 8 கோடி ரூபாய் மதிப்பில், 4 வரிசைகளில் நேர்கல் தடுப்புகளும், 2 வலை பின்னும் கூடங்களும் அங்கு கட்ட முடிவு செய்து அதற்கான கட்டுமான பணிகளை செய்து வந்தனர்., தற்போது பணிகள் நிறைவடைந்தது. அப்பகுதியை திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் பாலாஜி, திருப்போரூர் ஆத்ம வேளாண்மைக் குழுத் தலைவர் பையனூர் சேகர், நெம்மேலி ஊராட்சி தலைவர் ரமணி சீமான் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
- தினமும் தாய் கீர்த்தனா தான் மகளை மொபட்டில் பள்ளிக்கு அழைத்து சென்று விடுவார்.
- தன் கண் முன் மகள் இறந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த தாய் கண்ணீர் விட்டு கதறியது அங்கிருந்தவர்கள் கண்களை குளமாக்கியது.
தாம்பரம்:
சென்னையை அடுத்த கோவிலம்பாக்கத்தை சேர்ந்தவர் கீர்த்தனா. இவரது கணவர் சாப்ட்வேர் என்ஜினீயராக உள்ளார். இந்த தம்பதியின் மகள் லியோரா ஸ்ரீ (வயது 10) இவர் மடிப்பாக்கத்தில் உள்ள ஒரு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார்.
தினமும் தாய் கீர்த்தனா தான் மகளை மொபட்டில் பள்ளிக்கு அழைத்து சென்று விடுவார். இன்று காலை வழக்கம் போல அவர் மகளை மொபட்டில் ஏற்றிக்கொண்டு பள்ளிக்கு சென்றார்.
கோவிலம்பாக்கம் ரோட்டில் சென்றபோது கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதில் கீர்த்தனா சென்ற மொபட்டும் சிக்கி நிலை தடுமாறியது. இதனால் மொபட் சரிந்ததால் அதன் பின்னால் பயணம் செய்த லியோராஸ்ரீ தவறி கீழே ரோட்டில் விழுந்தார்.
அந்த சமயம் பின்னால் வேகமாக வந்த தண்ணீர் டேங்கர் லாரி அவர் மீது பயங்கரமாக மோதியது. கண் இமைக்கும் நேரத்தில் லாரி சக்கரத்தில் சிக்கிய மாணவி லியோராஸ்ரீ சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.
தன் கண் முன் மகள் இறந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த தாய் கண்ணீர் விட்டு கதறியது அங்கிருந்தவர்கள் கண்களை குளமாக்கியது. சம்பவம் பற்றி அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்று மாணவி உடலை மீட்டு மருத்துவ பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தால் அப்பகுதியில் கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து நடந்ததும் தண்ணீர் லாரியை ஓட்டி வந்த டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவிலம்பாக்கம் பகுதியில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்து வருவதாகவும் லாரிகள் போன்ற வாகனங்கள் தாறுமாறாக ஓடுவதால் இதுபோன்று விபத்துக்கள் நடந்து வருவதாகவும், இதனை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். தாயுடன் பள்ளிக்கு சென்றபோது மாணவி விபத்தில் உயிர் இழந்த சம்பவம் கோலிலம்பாக்கத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- விஜய் மது பழக்கத்திற்க்கு அடிமையானதால் காதலி பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தாம்பரம் அடுத்த ராஜகீழ்பாக்கம் அண்ணா தெருவை சேர்ந்தவர் விஜய் (27). இவர் இளம்பெண் ஒருவரை காதலித்து வந்தார். ஆனால் விஜய் மது பழக்கத்திற்க்கு அடிமையானதால் காதலி பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது.
இதனால் மனவேதனை அடைந்த விஜய் எறும்புகளை அழிக்க பயன்படுத்தும் டர்பண்ட் ஆயிலை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சேலையூர் போலீசார் விசாரனை நடத்தி வருகிறார்கள்.
- மாமல்லபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுற்றி திரியும் மாடுகளை பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
- மாடுகளின் உரிமையாளர்களை கண்டறிந்து அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.
மாமல்லபுரம்:
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள கிழக்கு கடற்கரை சாலை, பழைய மாமல்லபுரம் சாலை, டி.கே.எம். சாலை, கோவளம் சாலை, ஒத்தவாடை தெரு, ஐந்து ரதம் சாலை, திருக்கழுக்குன்றம் சாலை, கங்கை கொண்டான் மண்டபம் சாலை, மாதா கோவில் தெரு, அண்ணல் அம்பேத்கர் தெரு, ராஜீவ்காந்தி தெரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக மாடுகள் சாலையின் நடுவே ஆங்காங்கே சுற்றி திரிவதாக மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்தது. அதேபோல் சுற்றுலா வாகனங்கள் செல்லாதவாறு மாமல்லபுரம் நகரின் முக்கிய புராதன சின்ன சாலைகளில் சாலையிலேயே மாடுகள் படுத்திருப்பதாக புகார்கள் வந்தவண்ணம் இருந்தது.
இந்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கும் வகையில் மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் வி.கணேஷ், மாமல்லபுரம் பேரூராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்த்ராவ் ஆகியோர் மேற்பார்வையில் மாமல்லபுரம் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் ரகுபதி, துப்புரவு மேற்பார்வையாளர் தாமோதரன் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் மாமல்லபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுற்றி திரியும் மாடுகளை பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக சுற்றி திரிந்த மாடுகளை பிடித்தனர். பொதுமக்களுக்கு இடையூறாக மாடுகளை பொது வெளியில் திரிய விட்டதாக மாடுகளின் உரிமையாளர்களை கண்டறிந்து அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.
- லாரி சாலையின் நடுவில் உள்ள தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
- விபத்தில் லாரி டிரைவர் எந்தவித காயமும் இன்றி, அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
திருப்போரூர்:
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர், பழைய மாமல்லபுரம் சாலை வழியாக முக்கிய பகுதிகளுக்கு நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் நேற்று அதிகாலை பழைய மாமல்லபுரம் சாலையில் மாமல்லபுரத்தில் இருந்து திருப்போரூர் நோக்கி சென்று கொண்டிருந்த லாரி சாலையின் நடுவில் உள்ள தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி டிரைவர் எந்தவித காயமும் இன்றி, அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இருப்பினும் தடுப்புச்சுவரில் அமைக்கப்பட்டிருந்த உயர் கோபுர மின் விளக்கு கம்பம், கண்காணிப்பு கேமரா என ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்தது.
- மாணவர் அணி, மருத்துவ அணி சார்பில் திருவள்ளூர் மருத்துவக்கல்லூரி நுழைவு வாயில் அருகே உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
- தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ தலைமை தாங்கினார்.
செங்கல்பட்டு:
நீட்தேர்வை ரத்து செய்ய கோரியும், நீட் தேர்வை தொடர்ந்து திணிக்கும் மத்திய அரசை கண்டித்தும், கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்தும் தி.மு.க. இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணி சார்பில் தமிழகம் முழுவதும் இன்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
இதே போல் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூரிலும் தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி, மாணவர் அணி, மருத்துவ அணி சார்பில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை எதிரில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்த உண்ணாவிரதத்தை மாவட்டக் செயலாளர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்து கண்டன உரையாற்றினார்.
இளைஞரணி அமைப்பாளர் கோல்டு டி.பிரகாஷ் தலைமை தாங்கினார். மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பேராசிரியர் பிரபு, மருத்துவ அணி அமைப்பாளர் செந்தில் குமார் வரவேற்றனர்.
இதில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, க.செல்வம் எம்.பி., மீ.அ.வைத்தியலிங்கம், எம்.எல்.ஏ.க்கள் இ.கருணாநிதி, வரலட்சுமி மதுசூதனன், எஸ்.ஆர்.ராஜா, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் து.மூர்த்தி, விசுவநாதன், மாவட்ட ஊராட்சித் தலைவர் படப்பை ஆ.மனோகரன், செம்பருத்தி, துர்கேஷ், மேயர் வசந்தகுமாரி, துணை மேயர் காமராஜ் ஆகியோர் கண்டன உரையாற்றினர். உண்ணாவிரதத்தில் செல்வம் எம்.பி., எஸ்.எஸ்.பாலாஜி, பகுதி செயலாளர்கள் ஜோசப் அண்ணாதுரை, வந்தே மாதரம், பம்மல் வே.கருணாநிதி, ஏ.கே.கருணாகரன், உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
திருவள்ளூர் ஒருங்கிணைந்த தி.மு.க. இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணி சார்பில் திருவள்ளூர் மருத்துவக்கல்லூரி நுழைவு வாயில் அருகே உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர்கள் ஆவடி சா.மு.நாசர், கும்மிடிப்பூண்டி டி.ஜெ. கோவிந்தராஜன், திருத்தணி எஸ். சந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினர். எம்.எல்.ஏக்கள் பூந்தமல்லி ஆ.கிருஷ்ணசாமி, திருவள்ளூர் வி.ஜி.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ம.கிரண், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் ஏ.முரளி சேனா, மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் ஆ.சாம் ஜெபராஜ் ஆகியோர் வரவேற்றனர்
இதில் மாநில இளைஞரணி செயலாளர் பிரபு கஜேந்திரன், மாநில மாணவரணி அமைப்பாளர் பூவை ஜெரால்ட், எழுத்தாளர் மணிமாறன், தலைமை செயற்குழு உறுப்பினர் திருத்தணி எம்.பூபதி, மாநில விவசாய அணி துணைச் செயலாளர் ஆர்.டி.இ.ஆதிசேஷன், மாநில நெசவாளர் அணி துணை தலைவர் ஓ.ஏ.நாகலிங்கம், மாவட்ட நிர்வாகிகள் கே.திராவிட பக்தன், டாக்டர்.வி.சி.ஆர்.குமரன், சி.ஜெயபாரதி, உதயமலர் பாண்டியன், எம்.மிதுன் சக்கரவர்த்தி, பொதுக்குழு உறுப்பினர்கள் ப.சிட்டிபாபு, எஸ்.கே.ஆதாம், வி.கிஷோர், மு.சுப்பிரமணி, ராஜேஸ்வரி ரவீந்திரநாத் இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் த.மோதிலால், டி.கே.பாபு டி.ஆர்.திலீபன், மா.புவனேஷ் குமார் உள்பட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி, மாணவரணி, மருத்து வரணி சார்பில் காஞ்சிபுரம் பெரியார்தூண் அருகில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ தலைமை தாங்கினார். இதில் காஞ்சிபுரம் தொகுதி எம்.பி க.செல்வம், இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர் அப்துல் மாலிக், மருத்துவர் அணி கதிரவன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.
உண்ணாவிரத போராட்டத்தில் மாநகர செயலாளர் தமிழ்ச்செல்வன், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், பொருளாளர், சன்பிராண்ட் ஆறுமுகம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் யுவராஜ், மாணவரணி, ஏ.வி சுரேஷ்குமார், மாநகர அவைத் தலைவர் செங்குட்டுவன், துணை செயலாளர் முத்து செல்வன், ஜெகநாதன், பகுதி செயலாளர் கே, சந்துரு, திலகர், தசரதன்,வெங்கடேசன், தலைமை செயற்குழு உறுப்பினர் எம். எஸ். சுகுமார், ஒன்றிய செயலாளர்பி. எம்.குமார், சேகர், ஞானசேகரன், குமணன் ,படுநெல்லி பாபு தொ.மு.ச. கே.ஏ. இளங்கோவன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- ராமச்சந்திரன், பாண்டியன், விக்னேஷ் ஆகிய 3 பேரும் சேர்ந்து சின்னதம்பியை உருட்டு கட்டையால் சரமாரியாக தாக்கினர்.
- மாமல்லபுரம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
மாமல்லபுரம்:
குன்றத்தூர் அடுத்த கொல்லஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். ஊர் ஊராக சென்று குடை ரிப்பேர் செய்யும் வேலை பார்த்து வருகிறார். இவர் மாமல்லபுரம் அடுத்த பட்டிபுலம் கிழக்கு கடற்கரை சாலையோரம் கடந்த சில மாதங்களாக கொட்டகை போட்டு தங்கி அங்கு குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இவரது மகனுக்கு இன்று காதுகுத்து விழா குலதெய்வ கோவிலில் நடைபெற இருந்தது. இதில் கலந்து கொள்வதற்காக உறவினர்களை நேற்று இரவே தனது வீட்டிற்கு அழைத்து இருந்தார். இதையடுத்து உறவினரான செங்கல்பட்டு, கோழிப்பண்ணை பகுதியை சேர்ந்த சின்னதம்பி (வயது28) மற்றும் பட்டினபாக்கத்தை சேர்ந்த பாண்டியன், விக்னேஷ் ஆகிய 3 பேரும் நேற்று இரவு வந்தனர்.
பின்னர் அவர்களுக்கு ராமச்சந்திரன் மது விருந்து வைத்தார். அனைவரும் மது போதையில் இருந்தபோது மொய் செய்வது தொடர்பாக சின்னத்தம்பிக்கும், மற்றவர்களுக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. பின்னர்இது மோதலாக மாறியது.
ராமச்சந்திரன், பாண்டியன், விக்னேஷ் ஆகிய 3 பேரும் சேர்ந்து சின்னதம்பியை உருட்டு கட்டையால் சரமாரியாக தாக்கினர்.இதில் படுகாயம் அடைந்த சின்னதம்பி சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ராமச்சந்திரன் உள்பட 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
தகவல் அறிந்ததும் மாமல்லபுரம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கொலையுண்ட சின்னத்தம்பி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அதே பகுதியில் பதுங்கி இருந்த ராமச்சந்திரன், பாண்டியன், விக்னேஷ் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களில் பாண்டியன், விக்னேஷ் ஆகியோர் மீது கேளம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் திருட்டு வழக்குகள் உள்ளன.
சின்னத்தம்பி கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மாமல்லபுரத்தில் சர்வதேச அலைச்சறுக்கு போட்டி கடந்த 12-ந்தேதி தொடங்கியது.
- வீராங்கனைகள் சாரா வகிதா முதலிடமும், ஷினோ மட்சுடா 2-ம் இடமும் பிடித்து சாதனை படைத்தனர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரத்தில் சர்வதேச அலைச்சறுக்கு போட்டி கடந்த 12-ந்தேதி தொடங்கியது.நேற்று அரையிறுதி மற்றும் இறுதி சுற்று போட்டியுடன் நிறைவடைந்தது. இதில் ஆண்கள் இறுதி போட்டியில் ஜப்பான் நாட்டை சேர்ந்த டென்ஷி இவாமி முதலிடம் பிடித்தார். சுவீடன் நாட்டை சேர்ந்த கியான் மார்ட்டின் 2-ம் இடத்தை பிடித்தார். பெண்கள் இறுதி போட்டியில் ஜப்பான் நாட்டை சேர்ந்த வீராங்கனைகள் சாரா வகிதா முதலிடமும், ஷினோ மட்சுடா 2-ம் இடமும் பிடித்து சாதனை படைத்தனர்.
நிகழ்ச்சியில் கூடுதல் தலைமை செயலர் அதுல்யா மிஸ்ரா, இளைஞர் நலன் விளையாட்டுத்துறை உறுப்பினர்செயலர் மேகநாதன், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் ஆகியோர் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுகளை வழங்கினர்.
- விசாரணை அமைப்புகள் பாஜகவின் அணிகளாக உள்ளன.
- நீட்டுக்கு எதிராக அதிமுக எதையும் செய்யவில்லை.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் கலைஞர் திருவுருவச்சிலை மற்றும் பேனா வடிவிலான சிலையை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
பின்னர் உரையாற்றிய அவர், விசாரணை அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்து பேசினார்.
அப்போது அவர், " விசாரணை அமைப்புகள் பாஜகவின் அணிகளாக உள்ளன" என்றார்.
மேலும் அவர் கூறியதாவது:-
பாஜக என்ற கட்சியே தமிழ்நாட்டிற்கு தேவையற்றது. எல்லா கட்சிகளிலும் பல அணிகள் உள்ளது. அதேபோல, சி.பி.ஐ, இ.டி (அமலாக்கத்துறை), ஐ.டி போன்ற பல அணிகள் பாஜகவில் உள்ளது.
நாங்கள் இடி பார்த்தும் பயப்பட மாட்டோம், மோடியை பார்த்தும் பயப்பட மாட்டோம். நீட்டுக்கு எதிராக அதிமுக எதையும் செய்யவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- பெண்கள் இறுதி போட்டியில் சாரா வகிதா முதலிடம் பிடித்தார்.
- ஆண்கள் இறுதி போட்டியில் டென்ஷி இவாமி முதலிடம் பிடித்தார்.
தமிழ்நாடு அலைசறுக்கு சங்கம் மற்றும் இந்திய அலைசறுக்கு கூட்டமைப்பு இணைந்து நடத்தும் சர்வதேச லீக் போட்டி மாமல்லபுரத்தில் கடந்த 12ம் தேதி துவங்கியது. இன்று அரையிறுதி மற்றும் இறுதி போட்டியுடன் நிறைவடைந்தது.
ஆண்கள் இறுதி போட்டியில் ஜப்பான் நாட்டை சேர்ந்த டென்ஷி இவாமி 16.30 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்தார். ஸ்வீடன் நாட்டை சேர்ந்த கியான் மார்ட்டின் 14.70 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்தார்.
பெண்கள் இறுதி போட்டியில் ஜப்பான் நாட்டு வீராங்கனை சாரா வகிதா 13.50 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்தார். ஜப்பான் வீராங்கனை ஷினோ மட்சுடா 13.10 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்தார்.
இளைஞர் நலன் விளையாட்டுத்துறை கூடுதல் தலைமை செயலர் அதுல்யா மிஸ்ரா, உறுப்பினர்-செயலர் மேகநாதன், செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் ஆகியோர், வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுகளை வழங்கினர்.
- மாவட்ட மகளிர் அணி அமைப்பாளரும், ஒன்றிய குழு பெருந்தலைவருமான உதயாகருணாகரன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
- முடிவில் வண்டலூர் ஊராட்சி மன்ற துணை தலைவர் கவிதா சத்யநாராயணன் நன்றி கூறினார்.
கூடுவாஞ்சேரி:
வண்டலூர் ஊராட்சியில் மு.க.ஸ்டாலின் பிரதான சாலையை ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கவும், வண்டலூர்- வாலாஜாபாத் நோக்கி செல்லும் மேம்பாலம் கீழ்பகுதியில் காஞ்சிபுரம் எம்.பி.யின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் பேருந்து நிறுத்தம் அமைப்ப தற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா காட்டாங் கொளத்தூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளரும், ஒன்றிய குழு துணை பெருந்தலைவருமான வி.எஸ்.ஆராமுதன் தலைமையில் நடைபெற்றது. வண்டலூர் ஊராட்சி மன்ற தலைவர் முத்தமிழ் செல்வி விஜயராஜ், தி.மு.க. கிளை செயலாளர்கள் சத்ய நாராயணன், வாசு, காசி, லோகநாதன், குணசேகரன், கார்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட மகளிர் அணி அமைப்பாளரும், ஒன்றிய குழு பெருந்தலைவருமான உதயாகருணாகரன் அனைவரையும் வரவேற்று பேசினார். விழாவில் செல்வம் எம்.பி., வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு சாலை மற்றும் பேருந்து நிறுத்தம் அமைப்பதற்காக பூமி பூஜை போட்டு, அடிக்கல் நாட்டி சிறப்புரையாற்றினர்.
இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கட்ட ராகவன், ஊராட்சி மன்ற தலைவர்கள் மண்ணிவாக்கம் கெஜலட்சுமி சண்முகம், நெடுங்குன்றம் வனிதா ஸ்ரீசீனிவாசன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் வண்டலூர் குணசேகரன், காரணைப் புதுச்சேரி பத்மநாபன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் வண்டலூர் ஊராட்சி மன்ற துணை தலைவர் கவிதா சத்யநாராயணன் நன்றி கூறினார்.
- தினந்தோறும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாகவும், சுமார் 500-க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாகவும் உள்ளனர்.
- ஆபத்தான கட்டத்தில் உள்ள நோயாளிகள் சென்னைக்கு சென்று சேர்வதற்குள் உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரி 65 ஆண்டுகளுக்கு முன்னர் கடந்த 1967-ம்ஆண்டு 100 படுக்கை வசதியுடன் உருவானது. தற்போது மருத்துவக்கல்லூரியுடன் சுமார் 240 ஏக்கரில் செயல்படுகிறது. இந்த ஆஸ்பத்திரியில் நவீன சிகிச்சை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. தற்போது 1500 படுக்கை வசதியுடன் உள்ளது. அனைத்து துறையை சேர்ந்த 30 மூத்த டாக்டர்கள் மற்றும் 90 உதவி மருத்துவர்கள், 140 செவிலியர்கள் ஆகியோர் தற்போது அரசு மருத்துவமனையில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இங்கு செங்கல்பட்டு மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதி மக்கள் மற்றும் விழுப்புரம், திருவண்ணாமலை , காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டம் மற்றும் சென்னை புறநகரை சேர்ந்த நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கிறார்கள். தினந்தோறும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாகவும், சுமார் 500-க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாகவும் உள்ளனர்.
அவசர சிகிச்சை பிரிவு, புறநோயாளிகள் பிரசவ வார்டு, எலும்பு முறிவு , இருதய அறுவை சிகிச்சை பிரிவு, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் பரிவு, காய்ச்சல், கொரோனா சிகிச்சை உள்பட அனைத்துக்கும் தனித்தனி பிரிவுகள் உள்ளன.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய மருத்துவ கல்லூரி எனினும் இந்த ஆஸ்பத்திரியில் தீக்காய பிரிவு மற்றும் தலை காய அவசர சிகிச்சை பிரிவு இல்லை. இதனால் தீக்காயம் மற்றும் விபத்துக்களில் தலையில் பலத்த காயம் அடைந்து வருபவர்களுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியாத நிலை இருக்கிறது.
நோயாளிகளை சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பும் நிலை தொடர்கிறது. இதனால் ஆபத்தான கட்டத்தில் உள்ள நோயாளிகள் சென்னைக்கு சென்று சேர்வதற்குள் உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியிலேயே தீக்காயம் மற்றும் தலைக்காயம் சிறப்பு சிகிச்சை பிரிவுகள் தொடங்கப்பட்டால் உயிரிழப்புகளை குறைக்க முடியும் என்று நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இது தொடர்பாக பொதுமக்கள் கூறும்போது, செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் தீக்காயம், மற்றும் தலைக்காயம் சிகிச்சை பிரிவை தொடங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்போது உள்ள வாகன நெரிசலில் உயர்சிகிச்சைக்கு சென்னை சென்று சேர்வதற்குள் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. மேலும் பிரசவ வார்டில் எல்லாவற்றிற்கும் பணம் கேட்டு தொல்லை கொடுக்கிறார்கள். கழிப்பறைகளில் கதவுகள் இல்லை. தண்ணீர் பற்றாக்குறையும் உள்ளது என்றனர்.






