என் மலர்tooltip icon

    இமாச்சல பிரதேசம்

    • இமாச்சல பிரதேசத்தில் 55 லட்சத்து, 74 ஆயிரத்து 793 வாக்காளர்கள் உள்ளனர்.
    • முதல்முறை வாக்காளர்கள் 43,173 பேர் ஆவார்கள். 68 தொகுதியில் 17 எஸ்.சி. பிரிவினருக்கானது. 3 தொகுதி எஸ்.டி. பிரிவினருக்கானது.

    ஷிம்லா:

    68 தொகுதிகளை கொண்ட இமாச்சல பிரதேச சட்டசபைக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்த தலைமை தேர்தல் கமிஷன் திட்டமிட்டு இருந்தது.

    அதன்படி இமாச்சல பிரதேச சட்டசபைக்கு நாளை (சனிக்கிழமை) வாக்குப்பதிவு நடக்கிறது. காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது.

    இந்த தேர்தலில் ஆளும் பா.ஜனதா, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய 3 கட்சிகள் களத்தில் நிற்கின்றன. இதனால் மும்முனை போட்டி நிலவுகிறது. தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலை ஓய்ந்தது. இதையொட்டி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தனர்.

    மொத்தம் உள்ள 68 தொகுதிகளில் 412 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். பா.ஜனதாவும், காங்கிரசும் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. ஆம் ஆத்மி 67 தொகுதிகளில் களத்தில் நிற்கிறது.

    இது தவிர மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு 11 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் கட்சி 53 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்டு ஒரு தொகுதியிலும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. மற்றவை 45 தொகுயில் நிற்கின்றன. சுயேட்சைகள் 99 பேர் போட்டியிடுகிறார்கள். 412 வேட்பாளர்களில் 24 பேர் பெண்கள் ஆவார்கள்.

    இமாச்சல பிரதேசத்தில் 55 லட்சத்து, 74 ஆயிரத்து 793 வாக்காளர்கள் உள்ளனர். இதில் முதல்முறை வாக்காளர்கள் 43,173 பேர் ஆவார்கள். 68 தொகுதியில் 17 எஸ்.சி. பிரிவினருக்கானது. 3 தொகுதி எஸ்.டி. பிரிவினருக்கானது.

    மொத்தம் 7,881 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 157 வாக்குப்பதிவு மையம் பெண்கள் மட்டுமே வாக்களிக்க கூடியதாகும். கடந்த தேர்தலை விட கூடுதலாக 356 வாக்கு சாவடிகள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளது.

    தேர்தலையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. தேர்தல் நேர்மையாகவும், அமைதியாகவும் நடைபெற அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் கமிஷன் செய்துள்ளது.

    இமாச்சல பிரதேசத்தை பொறுத்தவரை நீண்ட காலமாக ஒரு கட்சி தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சி அமைத்தது இல்லை. ஆட்சியை தக்க வைக்க பா.ஜனதாவும், ஆட்சியை மீண்டும் பிடிக்க காங்கிரசும் போராடி வருகிறது.

    • இமாசல பிரதேசத்தில் நாளை சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.
    • காங்கிரஸ் ஆட்சியில் நடந்த ஊழல்களை எண்ணுவதே கடினமாக உள்ளது.

    சுல்லா

    இமாசல பிரதேசத்தில் நாளை (சனிக்கிழமை) சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி அங்கு அரசியல் கட்சிகள் கடந்த சில நாட்களாக தீவிர பிரசாரம் மேற்கொண்டு வந்தன.

    இந்த பிரசாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்த நிலையில், பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    காங்ரா மாவட்டத்தின் சுல்லாவில் நடந்த பிரசார கூட்டம் ஒன்றில் பேசிய அவர், காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடினார். தனது பிரசாரத்தில் அவர் கூறியதாவது:-

    மத்தியில் கடந்த 2014-ம் ஆண்டு பா.ஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு, ஊழலை கண்டுபிடிப்பதே சிரமமாக உள்ளது. ஆனால் காங்கிரஸ் ஆட்சியிலோ நடந்த ஊழல்களை எண்ணுவதே கடினமாக உள்ளது.

    மத்தியில் பிரதமர் மோடி, இமாசல பிரதேசத்தில் முதல்-மந்திரி ஜெய்ராம் தாகூர் இணைந்த இரட்டை என்ஜின் அரசு, ஐ.ஐ.டி., எய்ம்ஸ், மருத்துவக்கல்லூரிகள் என மாநிலத்தில் வளர்ச்சிக்கான அனைத்து வழிகளையும் திறந்துள்ளன. ஒவ்வொரு துறையிலும் வளர்ச்சியின் வரலாறு எழுதப்பட்டு இருக்கிறது.

    பிரதமர் மோடி ஆட்சியின் கீழ், பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் மீதான சர்ஜிகல் தாக்குதல், அயோத்தியில் ராமர் கோவில், புனித தலங்கள் சீரமைப்பு என ஏராளமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

    நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு மூலம் காங்கிரஸ் செய்த அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370 (காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து) எனும் தவறை பிரதமர் மோடி கடந்த 2019-ம் ஆண்டு சரி செய்து விட்டார்.

    தற்போது காஷ்மீர் நம்முடையதா இல்லையா? அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதா, இல்லையா?

    காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த 2004 முதல் 2014 வரையிலான 10 ஆண்டுகளில் நமது வீரர்களின் தலையை பாகிஸ்தான் துண்டித்து வந்தது. ஆனால் இந்த ஆட்சியில் அது குறித்த பேச்சு கூட இல்லை. உரி, புல்வாமா தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டு உள்ளது.

    ராகுல் காந்தி ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்தவுடன், ஒரு எதிர்மறை டுவீட்டை போட்டு விடுவார். ஆனால் மக்கள் அவர்களுக்கு செவிமடுப்பதில்லை.

    பரம்பரை அரசியல் செய்து வரும் ஒரு கட்சியில் (காங்கிரஸ்) கடின உழைப்பை கொடுக்கும் மக்களுக்கு இடமில்லை. அந்த கட்சியில் உங்களுக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டுமென்றால், புகழ்பெற்ற குடும்பத்தில் நீங்கள் பிறக்க வேண்டும்.

    நாம் ஜனநாயக நாட்டில் வாழ்கிறோம். ராஜா-ராணி காலம் ஓய்ந்து விட்டது.

    இவ்வாறு அமித்ஷா கூறினார்.

    • பிரியங்கா காந்தியை வரவேற்க காத்திருந்தவர்கள் நிர்மலா சீதாராமனை சந்தித்தனர்.
    • பெண்களுக்கு பெருமை சேர்ந்துள்ளதால் அவருடன் செல்பி எடுக்க விரும்பியதாக தகவல்.

    சிம்லா:

    இமாச்சலப் பிரதேச சட்டசபைத் தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் நிறைவுடைந்தது. இந்நிலையில் கடைசிநாள் பிரச்சாரத்திற்காக அம்மாநிலத்திற்கு வருகை தந்த காங்கிரஸ் பொதுச் செயாலாளர் பிரியங்கா காந்தியை வரவேற்க தலைநகர் சிம்லாவில் உள்ள மால் சாலையில் காங்கிரஸ் மகளிர் அணியினர் காத்திருந்தனர்.

    அப்போது அந்த வழியாக நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் காரில் சென்றார். அவரை கண்ட காங்கிரஸ் மகளிர் அணியை சேர்ந்த பெண்கள் கை அசைத்தனர். இதை கண்ட நிதி மந்திரி, காரை நிறுத்தி சொல்லி கீழே இறங்கி அவர்களை சந்தித்தார். அப்போது அவருடன் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பெண்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இதை சமூக வளைதளங்களில் அவர்கள் பகிர்ந்தனர். நிர்மலா சீதாராமன் பெண்களுக்கு பெருமை சேர்ந்துள்ளதால் அவருடன் செல்பி எடுக்க விரும்பியதாக இமாச்சல் பிரதேச மகிளா காங்கிரஸ் தலைவர் தெரிவித்துள்ளார்.

    • 68 தொகுதிகளிலும் காங்கிரஸ் ஒரே நேரத்தில் பொதுக்கூட்டத்தை நடத்த உள்ளது.
    • சிர்மோர் தொகுதியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பிரியங்கா பேசுகிறார்.

    68 தொகுதிகளை கொண்ட இமாச்சல பிரதேச சட்டசபைக்கு வருகிற 12ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.

    இமாச்சல பிரதேசத்தில் ஆட்சியை தக்க வைத்து கொள்ளும் ஆர்வத்தில் பாஜக உள்ளது. காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கைப்பற்றும் வேட்கையில் உள்ளது. ஆம் ஆத்மியும் களத்தில் குதித்துள்ளது. இதனால் 3 முனை போட்டி நிலவுகிறது.

    பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் அங்கு தீவிர பிரசாரம் செய்து பாஜகவுக்கு வாக்கு சேகரித்தனர். காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுச் செயலாளர் பிரியங்கா தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டார்.

    இந்நிலையில், இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.

    நிறைவு நாளில் காங்கிரஸ் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டது. 68 தொகுதிகளிலும் காங்கிரஸ் ஒரே நேரத்தில் பொதுக்கூட்டத்தை நடத்த உள்ளது. சிர்மோர் தொகுதியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பிரியங்கா பேசுகிறார். அதே நேரத்தில் அவர் ஷிம்லாவில் வீடு வீடாக சென்றும் வாக்கு சேகரிக்கிறார்.

    • மாநிலத்தின் வளர்ச்சிக்கு பாஜக தொடர்ந்து ஆட்சியில் இருப்பது அவசியம் என பிரதமர் பேச்சு
    • இரட்டை எஞ்சின் ஆற்றலை பெற்றால் தான் புதிய உயரங்களை இமாச்சல் பிரதேச மாநிலம் எட்டும்.

    காங்க்ரா:

    இமாச்சல் பிரதேச மாநிலம் காங்க்ரா மாவட்டத்தில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

    காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது இந்த மாநிலத்திற்கு துரோகம் செய்தது, வளர்ச்சியின் எதிரியாகவும் இருந்தது. காங்கிரஸ் கட்சி மாநில முன்னேற்றத்தைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டது. எனவே, மாநிலத்தின் வளர்ச்சிக்கு பாஜக தொடர்ந்து ஆட்சியில் இருப்பது அவசியம்.

    இமாச்சல பிரதேசத்திற்கு நிலையான மற்றும் வலுவான அரசாங்கம் தேவை. மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சி என்பது போல் இரட்டை எஞ்சின் ஆற்றலையும் பெற்றால் தான் சவால்களையும் முறியடித்து புதிய உயரங்களை இமாச்சல் பிரதேச மாநிலம் எட்டும். ஊழல் மற்றும் மோசடிகளுக்கு காங்கிரஸ் தான் உத்தரவாதம் அளிப்பார்கள். காங்கிரஸ் கட்சியால் இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு ஒரு நிலையான ஆட்சியைக் கொடுக்க முடியாது.

    இப்போதைய நிலையில் காங்கிரஸ் கட்சி ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய இரண்டு மாநிலங்களில் மட்டுமே ஆட்சியில் உள்ளது. ஆனால் குறிப்பிட்ட இந்த இரண்டு மாநிலங்களும் வளர்ச்சி அடைந்ததாக எந்த செய்தியும் வரவில்லை.

    பா.ஜ.க.வுக்கு, நாடு மற்றும் ராணுவ வீரர்களின் பாதுகாப்பு மிக முக்கியமானது. மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சியில் இருந்தால் மட்டுமே விரிவான முன்னேற்றம் அடைய முடியும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    • தெலுங்கானா இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் டெபாசிட் இழந்தார்.
    • பிரச்சாரத்திற்கு வராததற்கு தெளிவான காரணம், பொறுப்பை ஏற்காமல் இருப்பதுதான்.

    சிம்லா:

    இமாச்சல பிரதேசத்தில் நடைபெறும் சட்டசபைத் தேர்தலில் அம்மாநில ஆளும் கட்சியான பாஜகவிற்கும், காங்கிரசுக்கும் இடையே போட்டி நிலவுகிறது. இந்நிலையில் சிம்லாவில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளதாவது:

    ராகுல் காந்தியை எங்கே, காணவில்லை? அவர் பாதயாத்திரையில் இருக்கிறார், ஆனால் இமாச்சல மாநிலம் குறித்து ஏன் இவ்வளவு அலட்சியம். காங்கிரசின் திறமையான தலைமை ஏன் இமாச்சல் (தேர்தல்) மீது இவ்வளவு அலட்சியம் காட்டுகிறது

    தேர்தல் பிரச்சாரம் ஓரிரு நாட்களில் முடிவடையும், ஆனால் ராகுலையும் அவரது தாயாரையும் (சோனியா காந்தி) இங்கு காணவில்லை. தேர்தலில் தோற்று விடுவோமோ என்ற பயத்தில் ராகுல்காந்தி இருக்கிறார். அதனால் இங்கு வராமல் தவிர்க்கிறார்.

    ராகுல் காந்தி ஏன் இமாச்சலில் பிரச்சாரம் செய்யவில்லை என நாங்கள் கேட்க விரும்புகிறோம். காங்கிரஸ் கட்சி தோல்வியை கண்டு பயப்படுகிறதா? அதற்கு காரணங்கள் உள்ளன, ஆறு மாநிலங்களில் ஏழு சட்டசபை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது, பாஜக 6 இடங்களில் போட்டியிட்டு 4 இடங்களில் வெற்றி பெற்றது.

    காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை, மேலும் டெபாசிட்டையும் இழந்துள்ளது. ராகுல் காந்தியின் யாத்திரை மகாராஷ்டிராவிற்குள் நுழையும் போது தெலுங்கானா இடைத்தேர்தலில் (முனுகோட் தொகுதி) காங்கிரஸ் வேட்பாளர் டெபாசிட் இழக்கிறார்.

    எனவே, ராகுல் காந்தி இமாச்சல பிரதேசத்தில் பிரச்சாரத்திற்கு வராததற்கு தெளிவான காரணம், பொறுப்பை ஏற்காமல் இருப்பதுதான். வெற்றியும் தோல்வியும் தேர்தலின் ஒரு பகுதி. ஆனால் அரசியல் செயல்முறையின் ஒரு பகுதியான (தேர்தலில்) மக்களுடன் தொடர்பு கொள்ளும்போது, ​​​​அவர்கள் விலகி இருப்பார்கள்.

    இது என்ன வகையான அரசியல்?. ராகுல் காந்தியும் சோனியா காந்தியும் இங்கு வர மாட்டார்கள் என்று நான் தெளிவாக நம்புகிறேன், ஏனெனில் முடிவு என்னவாக இருக்கும் என்பதை அவர்கள் புரிந்து கொள்கிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • பா.ஜ.க. ஆளும் இமாச்சலில் நவம்பர் 12-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.
    • ஆட்சியை தக்கவைக்க பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் பிரச்சாரம் செய்தனர்.

    சிம்லா:

    68 தொகுதிகளை கொண்ட இமாச்சல பிரதேச மாநில சட்டசபைக்கு ஒரே கட்டமாக வரும் 12-ம் தேதி தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே இருப்பதால் அங்கு பிரசாரம் சூடு பிடித்துள்ளது.

    ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்காக பா.ஜ.க. தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் அங்கு பிரச்சாரம் செய்து ஆதரவு திரட்டினர்.

    காங்கிரஸ் கட்சி அங்கு மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் ஆர்வத்தில் இருக்கிறது. பிரியங்கா கடந்த மாதம் 31-ம் தேதி இமாச்சல பிரதேசத்தில் பிரச்சாரத்தை தொடங்கினார். பூபேஷ் பாகல், பிரதாப் சிங் பஜ்வா, சச்சின் பைலட் போன்ற தலைவர்களும் காங்கிரசுக்கு பிரசாரம் செய்தனர்.

    இந்நிலையில், மாநில காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் பொது செயலாளர் உள்பட 26 பேர் அக்கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்துள்ளனர்.

    தேர்தலுக்கு சில தினங்களே உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியினரின் விலகல் இமாச்சலில் பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

    • காஷ்மீரை இந்தியாவிலிருந்து பிரிக்க தீர்மானம் போட்டவர்களுடன் பாத யாத்திரை செல்கிறார்.
    • சிதைந்து போன இந்தியாவைக் காண விரும்புவோரை ஆதரிக்கிறார்.

    சிம்லா:

    சட்டசபைத் தேர்தலையொட்டி இமாச்சல பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற பிரச்சார பொதுக் கூட்டத்தில் மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முந்தைய மக்களவைத் தேர்தலில் தனது கோட்டையான அமேதியில் தோல்வியடைந்தார், ஆனால் கேரளாவின் வயநாடு தொகுதியில் வெற்றி பெற்றார். ஆனால் அவர் எங்கு சென்றாலும், அங்கு நிலைமை என்ன? காங்கிரஸ் தொடர்ந்த தேர்தலில் தோல்வியை சந்தித்து வருகிறது.

    நாட்டை விமர்சித்தவர்களுடன் ராகுல்காந்தி பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார். கேரளாவில் மாடுகளை அறுத்து புகைப்படத்தை இணையத்தில் பதிவேற்றம் செய்தவர்களுடன் ராகுல்காந்தி பாத யாத்திரை மேற்கொண்டார்.

    காஷ்மீரை இந்தியாவிலிருந்து பிரிக்க வேண்டும் என்று தீர்மானம் போட்டவர்களுடன் அவர்கள் யாத்திரை நடத்தினார்கள். சிதைந்து போன இந்தியாவைக் காண விரும்புவோரை உங்கள் தலைவர் ஆதரிக்கும் போது, ​​உங்கள் (காங்கிரசார்) ரத்தம் கொதிக்காதா, உங்கள் தலைவர் பசுவைக் கொல்பவர்களின் முதுகில் தட்டும்போது, ​​உங்கள் ரத்தம் கொதிக்காதா?

    ஒருபுறம் தங்கள் தேசத்திற்காக அனைத்தையும் தியாகம் செய்பவர்களுக்கும், மறுபுறம், தங்கள் நாட்டை அவமானப்படுத்துபவர்களுக்கும், சிதைந்த இந்தியாவைக் காண விரும்புவோரை ஆதரிப்பவர்களுக்கும் இடையேதான் இந்த தேர்தல் நடைபெறுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • பிரதமர் மோடியின் தலைமையில், இந்தியா உலகின் வலிமையான நாடாக உருவெடுத்துள்ளது.
    • வான்வழித் தாக்குதல் நடத்தி பாகிஸ்தானுக்கு பிரதமர் மோடி பதிலடி கொடுத்தார்.

    காங்கரா: 

    வரும் 12ந் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. ஆளும் பாஜகவுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவும் நிலைவும் நிலையில் காங்கரா மாவட்டத்தில் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளதாவது:

    அவர்கள் (காங்கிரஸ்) கடந்த 10 ஆண்டுகள் ஆடசி செய்தார்கள். ஆனால் அவர்கள் பெரிய ஊழல்களில் ஈடுபட்டனர். இப்போது அவர்கள் இமாச்சல பிரதேச அப்பாவி மக்கள் ஏமாற்றுவதற்காக தேர்தல் வாக்குறுதியில் 10 உத்தரவாதங்களை அளிக்கிறார்கள். அதை யார் நம்புவார்கள்?. பிரதமர் மோடியின் தலைமையில், இந்தியா தற்போது உலகின் வலிமையான நாடாக உருவெடுத்துள்ளது.  

    உரி மற்றும் புல்வாமா தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தான் மீது சர்ஜிக்கல் மற்றும் வான்வழித் தாக்குதல் நடத்தி பிரதமர் மோடி பதிலடி கொடுத்தார். இந்தியாவின் எல்லைகளில் குழப்பம் விளைவிப்பவர் அதற்கு உரிய விலையை கொடுக்க வேண்டும் என்ற செய்தியை இதன் மூலம் உலகிற்கு அவர் அறிவித்தார்.

    ரஷியா நடத்திய வரும் போர் காரணமாக உக்ரைனில் இந்திய மாணவர்கள் சிக்கித் தவித்த போது, இரு நாட்டு அதிபர்களிடமும் பேசி இந்தியர்கள் வெளியேற இரண்டு நாட்கள் போரை நிறுத்துமாறு பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். அதன் மூலம் இந்திய மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த முறை இமாச்சல பிரதேச மாநிலத்தில் சட்டசபை மட்டுமல்ல பாராளுமன்ற தேர்தலிலும் பாஜக வெற்றி பெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

    • சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளரான106 வயது ஷியாம் சரண் நேகி காலமானார்.
    • 2014ல் இமாச்சல பிரதேச தேர்தல் ஆணையம் நேகியை தேர்தல் விழிப்புணர்வுத் தூதராக அறிவித்தது.

    தர்மசாலா:

    சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளரான ஷியாம் சரண் நேகி (106), காலமானார். இமாச்சலப் பிரதேச மாநிலம் கின்னௌர் மாவட்டத்தில் உள்ள தன் சொந்த ஊரான கல்பாவில் நேற்று அவர் இயற்கை எய்தினார்.

    கடல்மட்டத்தில் இருந்து 10 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள கல்பா கிராமத்தில் 1951 அக்டோபர் 25-ம் தேதியன்று முதல் முதலில் நேகி பொதுத்தேர்தலில் வாக்களித்தார்.

    கல்பா கிராமத்தை உள்ளடக்கிய அப்போதைய மண்டி- மகசு மக்களவைத் தொகுதியில் கடும் குளிர், பனிப்பொழிவு காரணமாக, முன்கூட்டியே முதல் பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது. நாட்டின் மற்ற பகுதிகளில் 1952 ஜனவரி, பிப்ரவரி மாதங்களில்தான் வாக்குப்பதிவு நடைபெற்றது. சியாம் சரண் நேகி அப்போது பள்ளி ஆசிரியராக இருந்த நிலையில், கல்பா கிராம வாக்குச்சாவடிக்கு முதல் ஆளாகச் சென்று தன் வாக்கைப் பதிவுசெய்தார். ஆனால், தன்னுடைய வாக்குதான் இந்தியாவின் முதல் வாக்கு என அவருக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை. அப்போதிருந்து வாக்களிக்க மட்டும் நேகி தவறவே இல்லை.

    2014-ம் ஆண்டில் இமாச்சலப்பிரதேச தேர்தல் ஆணையம், நேகியை தேர்தல் விழிப்புணர்வுத் தூதராக அறிவித்தது குறிப்பிடத்தக்கது

    • காங்ராவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உரையாற்றினார்
    • இளைஞர்களின் எதிர்காலத்தை பாழாக்கும் போதைப்பொருட்களை ஒழிக்க காங்கிரஸ் கட்சி போராடும் என பேச்சு

    காங்ரா:

    இமாச்சல பிரதேசத்தில் வரும் 12ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. பல்வேறு வாக்குறுதிகளையும் கொடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில், காங்ராவில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் பேசும்போது, இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியமைத்தால் ஒரு லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் என்றும், பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என்றும், குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1500 ரூபாய் வழங்குவோம் என்றும் வாக்குறுதி அளித்தார்.

    இளைஞர்களின் எதிர்காலத்தை பாழாக்கும் போதைப்பொருட்களை ஒழிக்க காங்கிரஸ் கட்சி போராடும். ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் ஆங்கில வழிப் பள்ளிகளைக் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரியங்கா காந்தி கூறினார்.

    இமாச்சல பிரதேசத்தை ஆளும் பாஜகவை கடுமையாக சாடிய அவர், பாஜக ஆட்சியின் கீழ் மாநிலம் கடனில் மூழ்கியுள்ளது என்றும, 63,000 அரசு பணியிடங்கள் காலியாக உள்ளன என்றும் தெரிவித்தார்.

    தற்போது காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் மேற்கொள்ளப்பட்ட பணிகளை சுட்டிக்காட்டிய பிரியங்கா, அதேபோன்று இமாச்சல பிரதேசத்திலும் தேர்தல் வாக்குறுதிகளை காங்கிரஸ் நிறைவேற்றும் என உறுதி அளித்தார்.

    • இமாச்சல பிரதேசத்தில் ஆளுங்கட்சியாக உள்ள பாஜக மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள கடும் முயற்சி செய்து வருகிறது.
    • ஏற்கனவே இமாச்சலப் பிரதேசத்தில் ஆட்சி செய்து வந்த காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடிக்க கடுமையாக போராடி வருகிறது.

    சிம்லா:

    இந்தியாவின் மிகச்சிறிய மாநிலங்களில் ஒன்றான இமாச்சல பிரதேச சட்டமன்ற தேர்தல் வரும் 12-ந் தேதி நடைபெற உள்ளது. 68 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட இங்கு கடந்த மாதம் 17-ந் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. டிசம்பர் 8-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

    தேர்தல் பிரசார களம் சூடுபிடித்துள்ளது, பா.ஜ.க, காங்கிரஸ், ஆம் ஆத்மி, கம்யூனிஸ்ட் கட்சியினர் தங்களது வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    அனைத்து கட்சியிலும் கிரிமினல் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். பா.ஜ.க சார்பில் 68 வேட்பாளர்களில் 12 பேரும், ஆம் ஆத்மியில் 12 பேரும், காங்கிரசில் 36 பேரும், பகுஜன் சமாஜ் கட்சியில் 2 பேரும், கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர்கள் 7 பேர் மீதும் குற்ற வழக்குகள் உள்ளன.

    இதில் 12 பேர் கடுமையான குற்ற வழக்குகளில் சிக்கியவர்களாகவும், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்ட 5 பேரும், கொலை வழக்குகளில் ஈடுபட்ட 3 பேரும், கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட 3 பேரும் உள்ளனர்.

    மொத்தம் 412 வேட்பாளர்களில் 94 பேர் 23 சதவீதத்தினர் கிரிமினல் வேட்பாளர்களாக உள்ளனர்.

    கடந்த 2017-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் மொத்தம் 338 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டனர். இதில் 61 வேட்பாளர்கள் 18 சதவீதம் பேர் கிரிமினல் வழக்குகளில் தொடர்புடையவர்களாக இருந்தனர்.

    இமாச்சல பிரதேசத்தில் ஆளுங்கட்சியாக உள்ள பாஜக மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள கடும் முயற்சி செய்து வருகிறது.

    ஏற்கனவே இமாச்சலப் பிரதேசத்தில் ஆட்சி செய்து வந்த காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடிக்க கடுமையாக போராடி வருகிறது.

    ஆம் ஆத்மியும் தற்போது மற்ற கட்சிகளுக்கு இணையாக வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது.

    ×