search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பா.ஜனதா ஆட்சியில் ஊழலை கண்டுபிடிப்பதே கடினம்: அமித்ஷா
    X

    அமித்ஷாவுக்கு, வேட்பாளர் ஒருவர் திரிசூலம் ஒன்றை பரிசளித்தபோது எடுத்த படம்.

    பா.ஜனதா ஆட்சியில் ஊழலை கண்டுபிடிப்பதே கடினம்: அமித்ஷா

    • இமாசல பிரதேசத்தில் நாளை சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.
    • காங்கிரஸ் ஆட்சியில் நடந்த ஊழல்களை எண்ணுவதே கடினமாக உள்ளது.

    சுல்லா

    இமாசல பிரதேசத்தில் நாளை (சனிக்கிழமை) சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி அங்கு அரசியல் கட்சிகள் கடந்த சில நாட்களாக தீவிர பிரசாரம் மேற்கொண்டு வந்தன.

    இந்த பிரசாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்த நிலையில், பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    காங்ரா மாவட்டத்தின் சுல்லாவில் நடந்த பிரசார கூட்டம் ஒன்றில் பேசிய அவர், காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடினார். தனது பிரசாரத்தில் அவர் கூறியதாவது:-

    மத்தியில் கடந்த 2014-ம் ஆண்டு பா.ஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு, ஊழலை கண்டுபிடிப்பதே சிரமமாக உள்ளது. ஆனால் காங்கிரஸ் ஆட்சியிலோ நடந்த ஊழல்களை எண்ணுவதே கடினமாக உள்ளது.

    மத்தியில் பிரதமர் மோடி, இமாசல பிரதேசத்தில் முதல்-மந்திரி ஜெய்ராம் தாகூர் இணைந்த இரட்டை என்ஜின் அரசு, ஐ.ஐ.டி., எய்ம்ஸ், மருத்துவக்கல்லூரிகள் என மாநிலத்தில் வளர்ச்சிக்கான அனைத்து வழிகளையும் திறந்துள்ளன. ஒவ்வொரு துறையிலும் வளர்ச்சியின் வரலாறு எழுதப்பட்டு இருக்கிறது.

    பிரதமர் மோடி ஆட்சியின் கீழ், பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் மீதான சர்ஜிகல் தாக்குதல், அயோத்தியில் ராமர் கோவில், புனித தலங்கள் சீரமைப்பு என ஏராளமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

    நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு மூலம் காங்கிரஸ் செய்த அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370 (காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து) எனும் தவறை பிரதமர் மோடி கடந்த 2019-ம் ஆண்டு சரி செய்து விட்டார்.

    தற்போது காஷ்மீர் நம்முடையதா இல்லையா? அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதா, இல்லையா?

    காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த 2004 முதல் 2014 வரையிலான 10 ஆண்டுகளில் நமது வீரர்களின் தலையை பாகிஸ்தான் துண்டித்து வந்தது. ஆனால் இந்த ஆட்சியில் அது குறித்த பேச்சு கூட இல்லை. உரி, புல்வாமா தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டு உள்ளது.

    ராகுல் காந்தி ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்தவுடன், ஒரு எதிர்மறை டுவீட்டை போட்டு விடுவார். ஆனால் மக்கள் அவர்களுக்கு செவிமடுப்பதில்லை.

    பரம்பரை அரசியல் செய்து வரும் ஒரு கட்சியில் (காங்கிரஸ்) கடின உழைப்பை கொடுக்கும் மக்களுக்கு இடமில்லை. அந்த கட்சியில் உங்களுக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டுமென்றால், புகழ்பெற்ற குடும்பத்தில் நீங்கள் பிறக்க வேண்டும்.

    நாம் ஜனநாயக நாட்டில் வாழ்கிறோம். ராஜா-ராணி காலம் ஓய்ந்து விட்டது.

    இவ்வாறு அமித்ஷா கூறினார்.

    Next Story
    ×