என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    • ஒரு மாதவிடாய் சுழற்சி என்பது 21 நாளில் இருந்து 35 நாட்களுக்கு இடையில் நடக்கிறது.
    • கர்ப்பமாக இருப்பதில் சிரமம் ஏற்படும் வரை பலருக்கு தங்களுக்கு PCOS இருப்பது தெரியாது.

    ஒவ்வொருவரிடையேயும் மாதவிடாய் சுழற்சி வேறுபடும். குறிப்பிட்ட தேதியைவிட சிலருக்கு முன்னதாகவே மாதவிடாய் வந்துவிடும். சிலருக்கு நாட்கள் தள்ளிச்சென்று மாதவிடாய் வரும். சிலருக்கு ஆறு மாதம் என நீண்ட நாட்கள் மாதவிடாய் வராமலும் இருக்கும். பொதுவாக ஒரு மாதவிடாய் சுழற்சி என்பது 21 நாளில் இருந்து 35 நாட்களுக்கு இடையில் நடக்கிறது. எனவே மாதவிடாய் நாள் என்பது நபருக்கு நபர் மாறுபடுகிறது. உங்கள் மாதவிடாய் சுழற்சி 21 நாட்களுக்கு குறைவாக இருந்தாலோ அல்லது அடிக்கடி நீங்கள் மாதவிடாய்க்கு உள்ளானால் உங்கள் உடலில் எதாவது பிரச்சனை இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. அப்படியான சில சாத்திய காரணங்கள் குறித்து பார்ப்போம்.

    ப்ரீமெனோபாஸ்

    இது மாதவிடாய் நிறுத்தம் ஏற்படுவதற்கு முந்தைய காலமாகும். பொதுவாக நாற்பது வயது அல்லது அதற்கு பிறகு இது தொடங்குகிறது. இந்த நேரத்தில் ஹார்மோன்களின் அளவுகளில் கடுமையான ஏற்ற இறக்கங்கள் ஏற்படுகின்றன. இதனால் ஒவ்வொரு மாதமும் அண்ட விடுப்பு அதாவது மாதவிடாய் சரியாக நிகழாது. சிலருக்கு அடிக்கடி மாதவிடாய் ஏற்படவும் வாய்ப்புள்ளது.  மாதவிடாய் சுழற்சிகள் கணிக்க முடியாததாக இருக்கும். 

    தீவிர உடற்பயிற்சி

    தீவிர உடற்பயிற்சி ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சியை ஏற்படுத்தும் அல்லது உங்கள் மாதவிடாய் சுழற்சியை முற்றிலுமாக நிறுத்தலாம். பெரும்பாலும், பெண் விளையாட்டு வீரர்கள் பலருக்கு இந்த பிரச்சனை பொதுவாக காணப்படுகிறது. ஏனெனில் தீவிர உடற்பயிற்சி செய்யும்போது நாம் உண்ணும் உணவைவிட அதிகளவு ஆற்றம் தேவைப்படுகிறது. உடற்பயிற்சி செய்யும் போது, உங்கள் உடலின் கலோரி எரிப்பு அளவு அதிகரித்து, அது அதிக கலோரிகளை எரிக்க உதவுகிறது. இதனால் போதுமான ஆற்றல் இல்லாமல், உங்கள் உடல் அண்டவிடுப்பிற்கு தேவையான இனப்பெருக்க ஹார்மோன்களை உற்பத்தி செய்யாது. 

    எடை ஏற்ற, இறக்கங்கள்

    குறைந்த காலத்தில் அதிக எடை இழப்பு அல்லது எடை அதிகரிப்பு இவை இரண்டில் எது நடந்தாலும் அது உங்கள் ஹார்மோனில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இதனால் மாதவிடாயில் பாதிப்பு ஏற்படுகிறது. மாதவிடாய் சுழற்சி எடை மாற்றங்களுடனும் தொடர்புடையது. 

    மாதவிடாய் சுழற்சியில் மன அழுத்தம் முக்கிய பங்கு வகிக்கிறது

    மன அழுத்தம்

    மன அழுத்தம் பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கும். அதில் ஒன்று மாதவிடாய் பாதிப்பு. கடுமையான மன அழுத்தம் உங்கள் ஹார்மோன் அளவை சீர்குலைத்து, ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு வழிவகுக்கும். இவை உங்கள் வாழ்வில் நிகழும் அதிர்ச்சிகரமான சம்பவம் அல்லது வேறு சமபவங்களால் கூட நிகழலாம். காரணம் எதுவாக இருந்தாலும் மன அழுத்தத்தை குறைப்பதன் மூலம் மட்டுமே மீண்டும் ஹார்மோனை சகஜ நிலைக்கு கொண்டு வர முடியும்.

    பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (PCOS)

    பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (PCOS) என்பது ஹார்மோன் சமநிலையின்மையால் ஏற்படும் ஒரு பொதுவான நிலை. இது குழந்தை பிறக்கும் வயதின் அடிப்படையில் 10 பெண்களில் ஒருவரை பாதிக்கிறது. கர்ப்பமாக இருப்பதில் சிரமம் ஏற்படும் வரை பலருக்கு தங்களுக்கு PCOS இருப்பது தெரியாது. இது ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சிக்கு வழிவகுக்கும். மேலும் முகப்பரு, அதிகப்படியான முடி வளர்ச்சி மற்றும் கருவுறுதல் பிரச்சினைகள் போன்ற பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். 

    இது பொதுவாக மாதவிடாய் சுழற்சியை பாதிக்கும் காரணிகளாகும். சத்தான உணவுமுறை அல்லது உடலில் ரத்தம் இல்லையென்றாலும் மாதவிடாய் வருவது தள்ளிப்போகும். இதனால் மாதவிடாய் குறைவாக இருந்தாலோ அல்லது வராமல் இருந்தாலோ தாமதிக்காமல் மருத்துவரை அணுகுவது நல்லது. 

    • சமூகமே பெண் உணர்ச்சிவசப்பட முக்கிய காரணியாக இருக்கிறது.
    • எல்லாவற்றிலும் சுதந்திரமாக இருக்கும் ஆண், உணர்ச்சிகளை வெளிப்படுத்த மட்டும் சமூகம் அனுமதிப்பதில்லை.

    சின்ன விஷயத்திற்கு எல்லாம் அழுவாள். எப்போதும் புலம்பிக்கொண்டே இருப்பாள். எதாவது பேசிக்கொண்டே இருப்பாள் என பெண்ணை தங்கள் கணவன்மார்களோ அல்லது குடும்பத்தினரோ கூறுவர். இதனால் பெண் மிகவும் உணர்ச்சிமிக்கவள் என அனைவரிடமும் ஒரு பொதுக்கருத்து நிலவியுள்ளது. ஆனால் அது உண்மையல்ல. பெண்போல ஆணும் உணர்ச்சியுள்ளவனே. பாலினம் என்பதை பார்க்கமால் இங்கு ஆண், பெண் இருபாலருக்கும் உணர்ச்சிகள் உண்டு என்பதை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும். இங்கு குறிப்பிட்டு பார்க்கவேண்டிய விஷயம் என்னவென்றால், பெண்கள் தங்கள் உணர்ச்சிகளை உடனே வெளிப்படுத்துவார்கள். ஆண்கள் தாங்கள் 'ஆண்கள்', தங்களுக்கென்று சமூகத்தில் ஒரு பிம்பம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது எனக்கூறி உணர்ச்சிகளை அனைவரது முன்பும் வெளிப்படுத்தமாட்டர்கள். இதனாலேயே பெரும்பாலும் பெண்கள் அதிக உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள் என நாம் கூறுகிறோம். மேலும் இங்கு எதனால் பெண் உணர்ச்சிவசப்படுகிறாள் என்பதையும் கவனிக்க வேண்டும். பெண்கள் மீதான சமூகத்தின் பார்வை, சமூகம் அவர்களை செய்ய வைத்திருக்கும் வேலை, கலாச்சார எதிர்பார்ப்புகள் இவையனைத்துமே ஒரு பெண் உணர்ச்சிவசப்பட முக்கிய காரணங்களாக அமைகின்றன.

    பாலினம்...

    குழந்தை, சிறுமி, இளம்பெண், மனைவி என ஒவ்வொரு நிலையிலும் அவர்களின் உணர்வுகளை வெவ்வேறு விதமாக வெளிக்காட்ட கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். அவர்கள் அவர்களாக இருக்க சமூகம் அனுமதிப்பதில்லை. இளம்பெண் என்றால் விளையாடக்கூடாது, இதுபோல உடையணியக்கூடாது, இதை செய்யக்கூடாது, இவர்களுடன் பேசக்கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகள். தங்கள் சுதந்திரம் அனைத்தும் அடைக்கபடும்போது அந்த உணர்ச்சிகள் வேறுவிதமாக வெளிப்படும். இதற்கு நேர்மார் ஆண்களின் வாழ்க்கை. எல்லாவற்றிற்கும் சுதந்திரம் பெறும் ஆண், உணர்ச்சிகளை வெளிப்படுத்த மட்டும் சமூகம் அனுமதிப்பதில்லை. ஆண்கள் அழக்கூடாது என்பதுபோல. இதனால் பெண்கள் அதிக உணர்வுமயமானவர்கள் என்ற தோற்றம் ஏற்படுகிறது. 

    கலாச்சாரம்

    பெண்கள் என்றாலே சாந்தி. சாந்தமாக இருந்தால்தான் அவள் பெண். இல்லையென்றால் அடங்காப்பிடாரி, ராட்சசி, பொம்பளையா அவ என பல்வேறு பட்டங்கள். கலாச்சாரங்கள்படி பெண்கள் என்றால் அனுதாபம் கொள்ள வேண்டியவர்களாகவும், பாதுகாக்கப்படவேண்டியவர்களாகவும் காட்டப்படுகிறது. உணர்வுமயமாக இருப்பதுதான் பெண்களின் குணம் என்பதுபோல சித்தரிக்கப்படுகிறது. இப்படி இருந்தால்தான் அவள் பெண் என்ற பிம்பங்கள். கலாச்சாரத்தில் பெண்களுக்கு இருக்கும் சடங்குகளை ஒப்பிட்டால், ஆண்களுக்கு சடங்குகளே இல்லை. வயதுக்கு வந்தால் ஒரு சடங்கு, திருமணம் என்றால் ஒரு சடங்கு, குழந்தை தரித்தால் ஒரு சடங்கு, கணவன் இறந்தால் ஒரு சடங்கு இப்படி பெண்ணின் அனைத்து நிகழ்வுகளுக்கும் ஒரு சடங்கு. ஆனால் ஆண்களுக்கு இதுபோன்று எத்தனை சடங்குகள் உள்ளன? மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது என்றால் அந்தப் பெண்ணை சுற்றி அவ்வளவு பேர் இருப்பார்கள். மாதவிடாய் என்பது அப்போதுதான் அவளுக்கு முதலில் வந்திருக்கும். அதுகுறித்தே முழுதாக தெரியாமல் ஒருவித அச்ச, குழப்ப உணர்வில் இருப்பாள். எல்லோரும் தங்களை கொண்டாடுவதால் ஒரு சந்தோஷமும் இருக்கும்.


    பெண் தன் உணர்வுகளை அப்படியே வெளிப்படுத்துவாள்!

    அப்போது விழா நடத்துகையில் உறவினர்கள் மத்தியில் தான் மட்டும் கவனிப்படுவது ஒரு கூச்ச சுபாவத்தை கொடுக்கும். இதனை வெட்கம் எனக்கூறுவது. ஒரு ஆணை 100 பேருக்கு மத்தியில் உட்காரவைத்து அவனை மட்டும் பார்த்தால் அவனுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் வெட்கம்தான் வரும். அதுபோல வளையலணி விழா. தான் அம்மாவாகப்போவதை நினைத்து சந்தோஷத்துடன் பெண் இருப்பாள். ஆணும் அப்படித்தான் இருப்பான். ஆனால் பெண்ணுடைய உணர்வை மட்டும் இங்கு வெளிப்படுத்துவோம். அதுபோல இறப்பு சடங்கு. தன்துணை இறந்த சோகமே தாளாமல் இருக்கும்போது அவரை உட்காரவைத்து பூ, பொட்டு அழிப்பது. இது இன்னும் வலியை கொடுக்க அவள் அழுவாள். இப்படித்தான் இருபாலருக்கும் இருக்கும் உணர்வுகளை சமூகமே கலாச்சாரம் என்ற பெயரில் பெண்களுக்கு மட்டும் சாத்துகிறது. அதுபோல பெண்ணை சகுனமாக சித்தரிப்பது, இவள் ராசியில்லாதவள், இவள் வந்தால் விளாங்காது, அப்பாவை விழுங்கியவள், கணவனை விழுங்கியவள் என்று... ஆனால் நாம் என்றுமே ஒரு ஆணை ராசியில்லாதவன் எனக் கூறியதே இல்லை. 

    அன்பு...

    அன்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் பெண் உடனே தனது உணர்ச்சியை வெளிப்படுத்துவாள். சத்தமாக சிரிப்பது, பூரிப்படைவது, அன்பு கிடைக்காதபோது அதிகம் ஏங்குவது, உடைந்து அழுவது, கோபமாக கத்துவது என சூழ்நிலைக்கு ஏற்ப வெளிபடும் உணர்வுகளை அப்படியே வெளிப்படுத்துவாள். ஆனால் ஆண் எப்போதும் அனைத்து உணர்வுகளைவும் மனதுக்குள்ளேயே அடக்கிகொள்வான். வெகு சில நேரங்களிலேயே ஆண்கள் அழுவதை பார்க்கமுடியும். இதுபோன்ற காரணங்களால்தான் பெண்கள் அதிக உணர்ச்சிமிக்கவர்கள் எனக் கூறுகிறோம். ஆனால் ஆண்களுக்கும் உணர்ச்சிகள் உள்ளது.   

    • மெட்டி என்பதை நமது முன்னோர்கள் வெறும் சடங்காக மட்டும் வைத்துவிடவில்லை.
    • பெண்களுக்கு திருமணத்தின் போது மெட்டி அணிவிக்கின்றனர்.

    நமது திருமண சம்பிரதாயங்களில் மிக முக்கியமானது மெட்டி மாட்டுவது. முன்பு மெட்டி மாட்டுவது என்பது ஆண்களுக்கு மத்தியிலும் இருந்தது. காலப்போக்கில் ஆண்கள் மெட்டி மாட்டுவது மறைந்துவிட்டது.

    மெட்டி என்பதை நமது முன்னோர்கள் வெறும் சடங்காக மட்டும் வைத்துவிடவில்லை. மெட்டி அணிவது திருமணமான பெண் என்பதன் அடையாளத்தையும் தாண்டி சில அறிவியல் காரணமும் இருக்கின்றன.

    பொதுவாக மெட்டி 2-வது விரலில் தான் அணிவார்கள். அந்த 2-வது விரலில் இருந்து ஒரு நரம்பு கருப்பை மூலமாக இதயத்திற்கு செல்கின்றது. இந்த விரலில் மெட்டி அணிவதால் கருப்பை பலமாகிறது மற்றும் ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.

    இதனால் பெண்கள் கர்ப்ப காலத்தின் போது எந்த பிரச்சனையும் இருக்காது என்று கூறப்படுகிறது. மேலும் வெள்ளி மெட்டி பூமியின் துருவ ஆற்றல்களை ஈர்த்து உடம்பிற்குள் செலுத்துகின்றது என்று கூறப்படுகிறது. இவ்வளவு நல்ல விஷயங்கள் இருப்பதால் தான் பெண்களுக்கு திருமணத்தின் போது மெட்டி அணிவிக்கின்றனர்.

    • நம்முடைய தேவையும், வீட்டின் கட்டமைப்புதான், வாக்குவம் கிளீனரை தீர்மானிக்கின்றன.
    • சிறு குழந்தைகள் இருக்கும் வீடுகளாக இருந்தால், சத்தமில்லாத வாக்குவம் கிளீனர்களை தேர்ந்தெடுப்பது நல்லது.

    வீடுகளை சுத்தப்படுத்தும் வாக்குவம் கிளீனர்களை வாங்குவதாக இருந்தால், ஒருசில விஷயங்களை கவனத்தில் கொண்டு வாங்க வேண்டும். குறிப்பாக உங்கள் வீட்டுத் தேவைகளை முதலில் கருத்தில் கொள்ள வேண்டும். குப்பையை உறிஞ்சும் திறன், உங்கள் வீட்டின் தளம் (டைல்ஸ், தரைவிரிப்புகள், மரம்) போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு கிளீனரின் வகையை (கம்பியில்லா, தரைவிரிப்புக்கான, ரோபோடிக்) தீர்மானிக்க வேண்டும். கூடுதலாக, சக்கரங்கள், நீளமான வயர், குறைந்த சத்தம் மற்றும் நீடித்து உழைக்கும் தன்மையுடன் கூடிய சக்கரங்கள் போன்ற வசதிகளையும் கவனிக்க வேண்டும். அப்படி நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டியவை:

    * தரை வகைகள்

    உங்கள் வீட்டின் தரைப்பகுதியானது, எப்படி கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதை பொறுத்துதான், வாக்குவம் கிளீனரை தேர்வு செய்யமுடியும். தரைவிரிப்புகள், டைல்ஸ், மரம் சார்ந்த தரை வேலைப்பாடுகள் என மாறக்கூடிய கட்டமைப்புகளுக்கு ஏற்ப, அவற்றை சுத்தமாக்கக்கூடிய வாக்குவம் கிளீனரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

    * பயன்பாட்டு வகைகள்

    வயர் இணைப்பு கொண்ட வாக்குவம் கிளீனர், வயர் இல்லாத கையடக்க கிளீனர், தூசியை மட்டும் சுத்தம் செய்யும் கிளீனர், தூசியுடன் சேர்த்து அசுத்த நீரையும் உறிஞ்சி எடுக்கும் கிளீனர் என பல வகைகள் இருக்கின்றன. சமீபகாலமாக ரோபோட்டிக் வகையிலான, தானாக நகரும் வாக்குவம் கிளீனர்களும் உள்ளன. நம்முடைய தேவையும், வீட்டின் கட்டமைப்புதான், வாக்குவம் கிளீனரை தீர்மானிக்கின்றன.

    * உறிஞ்சி திறன்

    750 வாட்ஸ், 1000 வாட்ஸ், 1250 வாட்ஸ் என தூசியையும், அசுத்த தண்ணீரையும் உறிஞ்சக்கூடிய மோட்டார்களும், ஒவ்வொரு வாக்குவம் கிளீனருக்கு ஏற்ப மாறுபடும். அதனால், நீங்கள் தேர்ந்தெடுக்கக்கூடிய வாக்குவம் கிளீனர்கள், அதிகமாக உறிஞ்சும் திறனை பெற்றிருக்க வேண்டும்.

    * சுலபமான பயன்பாடு

    வாக்குவம் கிளீனர்களை கொண்டு, வீட்டின் எல்லா அறைகளையும் சுத்தம் செய்ய இருந்தால் சில விஷயங்களை கவனித்து வாங்க வேண்டும். அதாவது, சக்கரங்கள் இருக்கக்கூடியதாக, நீளமான மற்றும் பல்வேறு வடிவங்களை கொண்ட உறிஞ்சு குழாய் இருக்கக்கூடிய வாக்கும் கிளீனரை தேர்வு செய்வதன் மூலம் விரும்பிய இடங்களில் சுலபமாக நகர்த்தலாம், சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொள்ளலாம். மேலும் சிறு குழந்தைகள் இருக்கும் வீடுகளாக இருந்தால், சத்தமில்லாத வாக்குவம் கிளீனர்களை தேர்ந்தெடுப்பது நல்லது.

    • கொழுப்பு அதிகமானால் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
    • சில பெண்களுக்கு உடல் பருமன் காரணமாக ரத்த அழுத்தம் அதிகமாகும்.

    உடல் பருமனாக இருக்கும் பெண்கள் நிறைய பேருக்கு, பாலியல் உறவின்போது தாழ்வு மனப்பான்மை ஏற்படும். அவர்களுடைய தாழ்வு மனப்பான்மையால் அதிகமாக பாலியல் உறவு வைத்துக்கொள்ள மாட்டார்கள்.

    கருத்தரிப்பதற்கு தாம்பத்திய உறவு சரியாக இருக்க வேண்டும். அதிக எண்ணிக்கையில் தாம்பத்திய உறவில் ஈடுபட்டால்தான் கருத்தரிக்கின்ற வாய்ப்புகள் ஏற்படும்.

    அவர்களுக்கு உடல் பருமனை பற்றிய தாழ்வு மனப்பான்மை இருப்பதால், அவர்களுக்குள் ஒரு எதிர்மறை உணர்வு உருவாகும் நிலையில், கண்டிப்பாக தாம்பத்திய உறவில் பிரச்சனை வரும். அப்படி இருக்கும்போது கருத்தரிப்பதற்கான வாய்ப்புகளும் குறைவாகும். மேலும் நாளமில்லா சுரப்பிகளில் பாதிப்பை ஏற்படுத்துதல், மன அழுத்தத்தை உருவாக்குதல் ஆகியவையும் கருத்தரிப்பதை பாதிக்கும்.

    இவை தவிர உடல் பருமனால் பல பெண்கள் எதிர்நோக்குகின்ற முக்கியமான பாதிப்பு சர்க்கரை வியாதி. ஏனென்றால் கொழுப்பு அதிகமானால் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். அவர்களுக்கு குளுக்கோஸ் தன்மையில் மாறுபாடு ஏற்பட்டு சர்க்கரை நோய் வருவதால், பல நேரங்களில் இந்த பெண்களுக்கு கருத்தரிப்பதிலும் பிரச்சனை வரும், ஒருவேளை கருத்தரித்தால்கூட, கரு வளரும்போதும் பிரச்சனை வரும். மேலும் சர்க்கரை அதிகமாக இருப்பதால் இந்த பெண்களுக்கு முட்டைகளின் தரம் குறைவாகும்.

    ஏனென்றால் கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்பு ஆகியவை அதிகமாகும்போது, அதில் இருந்து வருகிற சில ரசாயனங்களால் கரு முட்டைகளுக்கான குரோமோசோம்களில் உள்ள இணைப்புகள் எல்லாம் பாதிக்கப்பட்டு, அதனால் கரு முட்டைகளின் தரம் பாதிக்கப்படும்.

    சில பெண்களுக்கு உடல் பருமன் காரணமாக ரத்த அழுத்தம் அதிகமாகும். சிலருக்கு இருதய நோய் ஏற்படலாம். மேலும் சில பெண்களுக்கு உடல் பருமன் அதிகமானால் மன அழுத்தம் ஏற்படும். இதுவும் கருமுட்டைகளின் தரம் பாதிக்கப்படுவதற்கு முக்கியமான காரணங்கள் ஆகும்.

    உடல் எடை குறைவாகும்போது அவர்களுக்குள் ஒரு நேர்மறை சிந்தனை வரும். அவர்களின் தாம்பத்திய உறவில் முன்னேற்றம் ஏற்படும். இதன் மூலமாக கருத்தரிக்கின்ற வாய்ப்புகள் அதிகமாகும்.

    • துணையின் கடந்த காலம் என்பது அவரிடம் அந்தரங்கம் சம்பந்தப்பட்டது.
    • நம்பிக்கையை சிதைப்பது உறவில் கடும் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

    மனிதர்களாகிய அனைவரும் ஏதேனும் ஒரு விஷயத்தில் குறைபாடுடையவர்கள்தான். ஆனால் துணையின் குறைபாடு பற்றியோ, அவரின் எரிச்சலூட்டும் பழக்கவழக்கங்கள் பற்றியோ மற்றவர்களிடம் பேசுவது சரியாக இருக்காது. அதுபற்றி அவருக்கு தெரியவரும்போது அவமானமாக உணரலாம்.

    தன்னுடைய குறையை மற்றவர்களிடம் பகிரங்கப்படுத்தி தன்னை அவமதிப்பதாக கருதலாம். எந்த சந்தர்ப்பத்திலும் துணையின் குறையை சுட்டிக்காட்டி மனம் நோகச்செய்யக்கூடாது. மற்றவர் முன்னிலையில் தன்னை மதிப்புடன் நடத்தவில்லை என்ற உணர்வை அவரிடத்தில் ஏற்படுத்திவிடும். அவரிடம் தென்படும் குறைகளை நிதானமாக புரியவைத்து திருத்துவதற்குத்தான் முயற்சிக்க வேண்டும். மனைவியிடம் குறையே இருந்தாலும் மற்றவர் முன்னிலையில் பாராட்டி பாருங்கள். அவர் தன் தவறை சரி செய்து, எந்த அளவுக்கு மாறி இருக்கிறார் என்பதை அடுத்த முறை நேரடியாகவே தெரிந்து கொள்ளலாம்.

    கடந்த காலம்

    துணையின் கடந்த காலம் என்பது அவரிடம் அந்தரங்கம் சம்பந்தப்பட்டது. அதை உங்களை நம்பி பகிர்ந்து கொண்டிருக்கலாம். அதை பற்றி மற்றவர்களுடன், குடும்பத்துடன் கூட விவாதிப்பது தேவையற்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். துணையை சங்கடப்படுத்தலாம். துணையின் தனிப்பட்ட தகவல்களை, அந்தரங்க விஷயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது மனஸ்தாபத்தை உண்டாக்கி விடும்.

    ஆளுமை

    துணையின் செயல்பாடுகளை விமர்சிப்பது, கேலி செய்வது அவமரியாதைக்குரிய செயலாகும். அதனை மற்றவர்கள் முன்னிலையில் திரும்ப திரும்ப விமர்சனம் செய்வது அவர் மீது எதிர்மறையான பிம்பத்தை உருவாக்கிவிடும். அதனை சரி செய்வது கடினம். உளவியல் ரீதியாக நீண்ட கால உறவுக்கு முட்டுக்கட்டை போடுவதாக அமைந்துவிடும். துணையின் ஆளுமை திறனை அவமதிப்பதாகிவிடும். விமர்சனத்தை விட பாராட்டு மற்றும் புரிதலுக்கு முன்னுரிமை கொடுங்கள். துணை மனம் நெகிழ்ந்து போய்விடுவார்.

    நிதிநிலை

    துணையின் நிதி நிலைமையை மற்றவர்களுக்கு வெளிப்படுத்துவது அவருடைய தனியுரிமையை மீறுவதாக அமைந்துவிடும். கடன், வருமானம் அல்லது செலவு செய்யும் பழக்கம் எதுவாக இருந்தாலும் அதனை மற்றவர்களிடம் கூற வேண்டியதில்லை. துணை வீண் செலவு செய்வதாக கருதினால் அதுபற்றி அவரிடம் பேசி நிதி நிலையை சீராக கையாள ஊக்குவிக்க வேண்டும்.

    அச்சம்

    மனைவியின் ஆள் மனதில் அச்சத்தையோ, அதிர்ச்சியையோ ஏற்படுத்திய விஷயங்கள் புதைந்திருக்கும். அது ஒருவித பயத்தையும், பாதுகாப்பின்மையையும் உருவாக்கி இருக்கும். நீண்ட நாட்களாக மனதை ஆட்கொண்டிருந்த அந்த விஷயங்களை தன் கணவரிடம் தெரிவித்து மன ஆறுதல் தேடி இருக்கலாம். அவர் மீது கொண்ட நம்பிக்கையின் காரணமாகவே அந்த விஷயங்களை கூறி இருக்கலாம்.

    அவை மற்றவர்களுக்கோ, குடும்பத்தினருக்கோ தெரிந்திருக்க வேண்டியதில்லை. தெரியப்படுத்த வேண்டிய அவசியமுமில்லை. அதனை புரிந்து கொள்ளாமல் மற்றவர்களிடம் கூறுவது கணவன் மீதான நம்பிக்கையை சீர்குலைத்துவிடும். ஒரு துணை தனக்கு ஏற்பட்ட பாதிப்பை கணவரிடம் வெளிப்படுத்தும்போது உணர்ச்சி ரீதியான பாதுகாப்பையும் எதிர்நோக்குகிறார். கணவர் தனக்கு ஆறுதலாக, பக்கபலமாக இருப்பார் என்று எதிர்பார்க்கிறார். அந்த நம்பிக்கையை சிதைப்பது உறவில் கடும் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

    தகவல் தொடர்பு

    எந்தவொரு வலுவான மற்றும் ஆரோக்கியமான உறவிற்கும் தகவல் தொடர்பு முதுகெலும்பாகும். நட்பாக இருந்தாலும் சரி, காதலாக இருந்தாலும் சரி, வேலையாக இருந்தாலும் சரி தகவல் தொடர்பு திறன் அவசியமானது. அது புரிதலை வளர்த்தெடுக்கும், தேவையற்ற மோதலை தடுக்கும். துணையிடம் எண்ணங்களையும் உணர்வுகளையும் தெளிவாக வெளிப்படுத்தும்போது தவறான புரிதல்கள் மற்றும் அனுமானங்களை தடுக்கும்.

    • கொழுப்பில் இருந்து வருகிற சில ஹார்மோன்கள் கருமுட்டைகளின் வளர்ச்சியை பாதிக்கும்.
    • உடல் பருமனாக இருக்கும் பெண்களுக்கு கண்டிப்பாக ஹார்மோன் பிரச்சனைகள் அதிகமாக இருக்கும்.

    உடல் பருமன் அதிகமாக இருக்கும் பெண்களுக்கு ஹார்மோன் சமநிலையின்மை பாதிப்பு ஏற்படும். இது பலருக்கும் தெரிந்த விஷயம்தான். ஏனென்றால் கொழுப்பில் இருந்து வருகிற சில ஹார்மோன்கள் கருமுட்டைகளின் வளர்ச்சியை பாதிக்கும்.

    குறிப்பாக ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் ஈஸ்ட்ராடியோல், கொழுப்பில் இருந்து வருகிற மற்றொரு ஹார்மோன் ஆன்ட்ரோஜன் டெஸ்டோஸ்டிரோன் ஆகிய அனைத்துமே கருமுட்டைகளின் வளர்ச்சியை பாதிக்கும் தன்மை கொண்டது.

    எனவே இந்த ஹார்மோன்களின் சமநிலையின்மை மாற்றங்கள் காரணமாக பல பெண்களுக்கு கருமுட்டை வளர்ச்சியில் குறைபாடுகள் ஏற்படும். அதன் மூலம் நாளமில்லா சுரப்பிகளிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டு, ஒழுங்கற்ற முறையில் மாதவிடாய் வரலாம். மேலும் பி.சி.ஓ.டி. எனப்படும் பாலிசிஸ்டிக் கருப்பை பாதிப்பும் வரலாம். இதனால் கருமுட்டைகளின் தரம் குறைவாகலாம்.

    எனவே உடல் பருமனாக இருக்கும் பெண்களுக்கு கண்டிப்பாக ஹார்மோன் பிரச்சனைகள் அதிகமாக இருக்கும். முக்கியமாக தைராய்டு பாதிப்பு இருக்கலாம். புரோலாக்டின் ஹார்மோன் அதிகமாக இருக்கலாம். ஒழுங்கற்ற மாதவிடாயும் ஏற்படலாம். இதனால் தான் அந்த பெண்கள் உடல் எடையை குறைக்கும்போது அவர்களுக்கு மாதவிலக்கு சரியாக வரும். உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைக்கும்போது மாதவிலக்கு சீராகும்.

    எனவே பெண்களின் உடல் எடை கூடுவது கண்டிப்பாக கருத்தரிப்பதற்கான வாய்ப்புகளை குறைக்கும். அதனால் தான் உடல் எடை அதிகமாக இருக்கும் பெண்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

    • திருமண உறவு நீண்ட காலம் நீடிக்க அன்பு மட்டுமே போதாது.
    • தம்பதியருக்குள் ஏதேனும் ஒரு காரணத்திற்காக சண்டை, சச்சரவுகள் ஏற்படலாம்.

    திருமண பந்தம் என்பது வாழ்வின் இறுதி காலம் வரை நீடித்து நிலைத்திருக்கக்கூடியது. அதனை வலிமையாக கட்டமைக்க மாதக்கணக்கிலோ, வருடக்கணக்கிலோ ஆகலாம். எந்த அளவுக்கு தம்பதியருக்குள் அசைக்கமுடியாத நம்பிக்கை நிலவுகிறதோ அதற்கேற்ப இந்த அளவுகோல் அமையும், மாறுபடக்கூடும். ஆனால் இருவருக்குமிடையேயான உறவில் விரிசல் ஏற்பட சில மணித்துளிகளே போதுமானதாகிவிடும். அதற்கு இடம் கொடுக்காமல் உறவை வலுப்படுத்த மனைவி பற்றி மற்றவர்களிடமோ, குடும்ப உறவினர்களிடமோ ஒருபோதும் பகிரக்கூடாத உளவியல் ரீதியான விஷயங்கள் குறித்து பார்ப்போம்.

    அன்பு

    திருமண உறவு நீண்ட காலம் நீடிக்க அன்பு மட்டுமே போதாது. வாழ்வில் எதிர்கொள்ளும் சோதனைகளை கடந்து உறவு நிலைத்திருக்க துணையின் மீது மரியாதை மற்றும் நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும். அவரிடம் வெளிப்படையாகவும், நேர்மையாகவும் நடந்து கொள்ள வேண்டும்.

    சண்டை

    தம்பதியருக்குள் ஏதேனும் ஒரு காரணத்திற்காக சண்டை, சச்சரவுகள் ஏற்படலாம். அது கருத்து மோதலாகவோ, வாக்குவாதமாகவோ மாறி இருவரும் ஒருவருக்கொருவர் மணிக்கணக்கில் பேசிக்கொள்ளாமல் இருக்கலாம். அதுபற்றி நண்பர்களிடமோ, குடும்பத்தினரிடமோ கூறி ஆலோசனை கேட்பது நல்லதல்ல. ஆரம்பத்தில் அவர்களின் ஆலோசனை ஏற்புடையதாகவோ, பிரச்சினைக்கு தீர்வு காண்பதாகவோ தோன்றினாலும் அது நிரந்தர தீர்வை ஏற்படுத்திக்கொடுக்காது.

    தம்பதியர் இருவருக்கும் இடையேயான தனிப்பட்ட விஷயங்கள் மற்றும் விவாதங்கள் பற்றி நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் பகிர்வது துணையை பற்றிய அவர்களின் பார்வையை மாற்றிவிடும். துணை மீது தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்திவிடும். உளவியலாளர்களின் கருத்துபடி, தம்பதியருக்கிடையே மோதல் ஏற்படுவது இயல்பானது. அதற்கு அவர்களே தீர்வு காண வேண்டும். மூன்றாம் நபரிடம் பகிரும்போது துணை பற்றி பெரும்பாலும் எதிர்மறையான எண்ணங்களே அவர்களின் மனதில் பதியும். அல்லது ஒருதலைபட்சமாக இருவரில் யாராவது ஒருவருக்கு அவர்கள் ஆதரவு கரம் நீட்டலாம். அது தம்பதியருக்கிடையே விரிசலை அதிகரிக்க செய்துவிடும்.

    • பிரிட்ஜ் சாதனத்தில் இப்போது நிறைய வசதிகள் கிடைக்கின்றன.
    • பெரும்பாலான பிரிட்ஜ்கள், சத்தமில்லாத செயல்பாட்டுடன் தான் வருகின்றன.

    வீட்டிற்கான அத்தியாவசிய மின்னணு சாதனங்களில் பிரிட்ஜ் எனப்படும் குளிர்சாதன பெட்டியும் ஒன்று. அத்தகைய பிரிட்ஜ் சாதனத்தை வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றால், இதையும் கொஞ்சம் கவனத்தில் வையுங்கள். அவை இதோ...

    * குடும்ப அளவு

    உங்கள் குடும்பத்தில் எத்தனை பேர் இருக்கிறார்கள், பிரிட்ஜை எந்தளவிற்கு பயன்படுத்த இருக்கிறோம் என்பதை பொறுத்து குளிர்சாதனப் பெட்டியின் அளவை தேர்ந்தெடுக்கவும். சிறிய குடும்பங்களுக்கு 180 லிட்டர் என்கிற அளவே போதுமானதாக இருக்கும். பெரிய குடும்பங்கள் 250 லிட்டருக்கு மேலாக இருக்கும் பிரிட்ஜை தேர்வு செய்யலாம்.

    * பிரிட்ஜ் வகை

    நேரடி குளிரூட்டல் (direct cool), உறைபனி இல்லாத குளிரூட்டல் (frost-free), இரட்டை கதவு (double door), மூன்று கதவு (triple door), சைட் பை சைட் (side by side) என பிரிட்ஜில் பல வகைகள் உள்ளன. உங்கள் தேவைக்கேற்ப இவற்றில் ஒன்றை தேர்ந்தெடுக்கலாம்.

    நேரடி குளிரூட்டல் வகை பிரிட்ஜின் பிரீசர் பாக்ஸ் அடிக்கடி பனிக்கட்டியால் நிரம்பிவிடும். அதை நாம்தான் உருக வைக்கவேண்டும். ஆனால் இந்த பிரச்சனை, நேரடி குளிரூட்டல் பிரிட்ஜை தவிர்த்து மற்ற பிரிட்ஜ் வகைகளில் இருக்காது. சில பிரிட்ஜ்களில், இப்போது பிரீசர் பாக்ஸை இயல்பான பிரிட்ஜ் போலவே பராமரிக்கும் முறைகளும் வந்துவிட்டன. அதனால், பிரிட்ஜ் வகைகளை தேர்ந்தெடுக்கையில், கொஞ்சம் கவனமாக இருங்கள்.

    * சேமிப்பு

    குறைந்த ஆற்றல் திறனில் (energy efficient) பிரிட்ஜை குளிரூட்டும் மாடல்களை தேர்ந்தெடுப்பது நல்லது. ஏனெனில் இந்த வகை மாடல்களை வாங்குவது மின்சார கட்டணத்தை சேமிக்க உதவும். அதனால் ஸ்டார் ரேட்டிங் அதிகமாக உள்ள மாடல்களை தேர்ந்தெடுங்கள்.

    * அளவு

    பிரிட்ஜ், பெரும்பாலும் சமையல் அறையை அலங்கரிக்கும் சாதனம். சமையலுக்கு தேவையான பொருட்கள் நிரம்பி இருக்கும் இடம். ஆனால் சில வீடுகளில் சமையல் அறையில் போதிய இட வசதியில்லாத காரணத்தாலும், சமையல் அறைக்கு ஏற்ற அளவுகளில் பிரிட்ஜை தேர்ந்தெடுக்காததாலும் பிரிட்ஜை வரவேற்பு அறையிலேயே வைத்திருப்பார்கள். அத்தகைய சூழலில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க, சமையல் அறையில் பொருந்தக்கூடிய பிரிட்ஜை தேர்ந்தெடுத்து வாங்குங்கள்.

    * வசதி

    பிரிட்ஜ் சாதனத்தில் இப்போது நிறைய வசதிகள் கிடைக்கின்றன. உதாரணத்திற்கு, பிரிட்ஜிற்குள் தண்ணீரை சேமித்து வெளிபுறம் தண்ணீர் பிடிக்கும் வகையிலான டிஸ்பென்சர் வசதி, ஐஸ் கட்டிகளை வெளியிலேயே பெறும் வசதி, பிரிட்ஜின் தகவல்களை டிஜிட்டல் டிஸ்பிளேவில் அறிந்து கொள்ளும் வசதி என ஏராளமான வசதிகள் வந்துவிட்டன. அதனால், உங்களுக்கு தேவையான வசதிகள் இருக்கும்படி, பிரிட்ஜை தேர்வு செய்யுங்கள்.

    * சத்தம்

    இப்போது பெரும்பாலான பிரிட்ஜ்கள், சத்தமில்லாத செயல்பாட்டுடன் தான் வருகின்றன. இயல்பான சத்தமும் இல்லாத பிரிட்ஜ் வகைகள் கூட, சந்தையில் கிடைக்கின்றன. அதனால், அதிலும் கவனம் செலுத்துங்கள்.

    • வாஷிங்மெஷினை போல, தண்ணீரை சூடாக்கி, பாய்ச்சி அடித்து பாத்திரங்களை ஊறவைக்கும்.
    • நம் ஊரில் பயன்படுத்தப்படும் பாத்திர வகைகளை கவனத்தில் கொண்டும், டிஷ்வாஷர்கள் தயாரிக்கப்படுகின்றன.

    நம் வீடுகளில் பிரிட்ஜ், வாஷிங்மெஷின், ஏ.சி., மைக்ரோவேவ் ஓவன்... போன்ற எலெக்ட்ரானிக் சாதனங்கள் இருக்கும். ஆனால், பாத்திரம் கழுவப்பயன்படும் டிஷ்வாஷர் வாங்கலாமா..? வேண்டாமா...? என்பது மட்டும் பெரிய கேள்விக்குறியாகவே இருக்கும். ஏனெனில், டிஷ்வாஷர் சுத்தமாக பாத்திரங்களை கழுவி கொடுக்குமா..? என்ற சந்தேகத்தில், டிஷ்வாஷரை மட்டும் வெயிட்டிங் லிஸ்டில் வைத்திருப்பார்கள். உண்மையில், இப்போது சந்தையில் இருக்கும் டிஷ்வாஷர்கள் நன்றாகவே சுத்தப்படுத்தி கொடுக்கின்றன.

    * இந்திய உணவுகள்

    ஆரம்பத்தில் மேலை நாடுகளின் உணவு வகைகள், உணவு பாத்திரங்கள், சமையல் முறைகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட டிஷ்வாஷர்கள்தான், சந்தையில் விற்பனையாகின. ஆனால் இப்போது இந்திய மக்களுக்காகவே பிரத்யேகமாக டிஷ்வாஷர்கள் தயாரிக்கப்படுகின்றன. குறிப்பாக, நம்ம ஊரு சமையல் முறைகளுக்கு ஏற்பவும், நம் ஊரில் பயன்படுத்தப்படும் பாத்திர வகைகளை கவனத்தில் கொண்டும், டிஷ்வாஷர்கள் தயாரிக்கப்படுகின்றன. கூடுதலாக, சுத்தப்படுத்தும் புரோகிராம்களும் இந்தியர்களுக்கு ஏற்ப பிரத்யேகமாக வடிவமைக்கப்படுவதால், எண்ணெய் பிசு பிசுப்பு, பாத்திரத்துடன் ஒட்டியிருக்கும் விடாப்பிடியான உணவுகள் வரை எல்லாவற்றையும் சுத்தமாக நீக்கிவிடுகிறது.



    * எப்படி சுத்தமாக்கும்?

    வாஷிங்மெஷினை போல, தண்ணீரை சூடாக்கி, பாய்ச்சி அடித்து பாத்திரங்களை ஊறவைக்கும். கூடுதலாக, வாஷிங்மெஷினில் பயன்படும் டிடர்ஜெண்ட் பொடி அல்லது திரவங்களை போல பாத்திரங்களை சுத்தமாக்கும் திரவங்கள், மாத்திரை போன்றவற்றை நிரப்பினால், அவை பாத்திரங்களை சுத்தமாக கழுவி கொடுக்கும். தண்ணீரை பீய்ச்சி கழுவிக்கொடுப்பதுடன், பாத்திரங்களை 90 சதவிகிதம் தண்ணீர் இல்லாமல் உலர்த்தி கொடுக்கும் வேலையையும், டிஷ்வாஷர்கள் செய்கின்றன.

    * டிஷ்வாஷர் அளவு

    6 கிலோ, 7 கிலோ, 8 கிலோ... என வாஷிங்மெஷின்களின் துவைக்கும் அளவை குறிப்பதுபோல, டிஷ்வாஷர்களை 'பிளேஸ் செட்டிங்' கணக்கில் குறிப்பிடுகிறார்கள். அதாவது 8 பிளேஸ் செட்டிங், 13 பிளேஸ் செட்டிங்... என பாத்திரங்களின் எண்ணிக்கை அதிகரிக்க, பிளேஸ் செட்டிங் கணக்கும் அதிகமாகும். அதனால், உங்களின் குடும்ப தேவைக்கு ஏற்ற பிளேஸ் செட்டிங் டிஷ்வாஷர்களை வாங்குவது நல்லது. முடிந்தவரை, இந்தியர்களுக்கு என பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட டிஷ்வாஷர்களை தேர்ந்தெடுங்கள். ரூ.15 ஆயிரம் தொடங்கி, டிஷ்வாஷர்களை வாங்கலாம்.

    • அறிகுறிகள் தோன்றிய பிறகு ஆண்களை விட பெண்கள் தாமதமாகவே மருத்துவமனையை அணுகுகின்றனர்.
    • ஆண்களுக்கு நிகரான விகிதத்தில் மருத்துவமனையில் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

    இந்தியா உள்ளிட்ட 50 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளில், ஆண்களை விட பெண்களே மோசமான இதய நோய்களால் அதிகம் பாதிக்கப்படும் அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

    இந்தியா, பிரேசில், சீனா, எகிப்து, அரபு நாடுகள் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட 50 நாடுகளில் இருந்து பெறப்பட்ட 15 ஆய்வு முடிவுகளின் அறிக்கை, மருத்துவ இதழ் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது.

    23 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களிடம் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட இந்த ஆய்வறிக்கையில், ஆண்களை விட பெண்களே மோசமான இதய நோயால் அதிகளவில் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதயநோய் அறிகுறிகளை கண்டறிதல், சிகிச்சை ஆகியவற்றில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையேயான வித்தியாசம் பிரமிக்க வைக்கும் அளவுக்கு பெரிதாக உள்ளது. அறிகுறிகள் தோன்றிய பிறகு ஆண்களை விட பெண்கள் தாமதமாகவே மருத்துவமனையை அணுகுகின்றனர். ஆண்களுக்கு நிகரான விகிதத்தில் மருத்துவமனையில் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

    இதுமட்டுமின்றி, இளம் வயது பெண்களிடம் மாரடைப்பு விகிதம் அதிகரித்து வருவதையும் இந்த ஆய்வு சுட்டிக்காட்டி உள்ளது. கடந்த 1995-2014-க்கு இடைப்பட்ட காலத்தில், 35 வயது முதல் 54 வயதுடைய பெண்களிடையே மாரடைப்பு விகிதம் 21 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதுவே ஆண்களுக்கான விகிதம் 30 சதவீதத்தில் இருந்து 33 சதவீ மாக உயர்ந்துள்ளது.

    பெண்கள் ஆண்டுதோறும் உடல் பரிசோதனை செய்து, தங்கள் உடல்நலனை கவனத்தில் வைக்க வேண்டும் என்பதையே இது காட்டுகிறது.

    • பாதாம் எண்ணெயை மட்டும் கருவளையத்தின் மீது தடவி மசாஜ் செய்யலாம்.
    • தேங்காய் எண்ணெயை பஞ்சில் தொட்டு கண்களுக்கு கீழ் மசாஜ் செய்து வரலாம்.

    முகத்தை வைத்துத்தான் ஒருவரின் அகத்தை எடை போடுகிறார்கள். ஆனால் சிலருக்கு கண்களுக்கு கீழ் உருவாகும் கருவளையம், அவர்களின் முக அழகையே கெடுத்து விடுகிறது.

    தூக்கமின்மை, மனஅழுத்தம், ரத்த சோகை, அதிக நேரம் லேப்டாப் மற்றும் மொபைல் பயன்படுத்துவது ஆகியவை முதன்மை காரணங்களாக இருந்தாலும், மரபணு மாற்றம், வாழ்க்கை முறை போன்றவற்றாலும் கண்ணில் கருவளையம் ஏற்படுகிறது.

    இதைச் சரிசெய்யும் முறைகளை பார்ப்போம்...

    * சிறிதளவு தக்காளிச் சாறுடன் எலுமிச்சைச் சாறு கலந்து கருவளையத்தின் மீது தடவி, 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவலாம்.

    * கற்றாழை ஜெல்லை கருவளையத்தின் மீது தடவி, 5-10 நிமிடங்கள் மசாஜ் செய்து, இரவு முழுவதும் விட்டு காலையில் கழுவலாம்.

    * உருளைக்கிழங்கு சாறை எடுத்து கண்களைச் சுற்றி தடவி உலர வைத்து, குளிர்ந்த நீரில் கழுவலாம்.

    * வெள்ளரிக்காயை வெட்டி கண் மீது வைத்து 15-20 நிமிடங்கள் கழித்து அகற்றலாம்.

     * காபித் தூளுடன் பாதாம் எண்ணெய், விளக்கெண்ணெய் கலந்து கருவளையத்தின் மீது தடவி மசாஜ் செய்து, காலையில் கழுவலாம்.

    * பாதாம் எண்ணெயை மட்டும் கருவளையத்தின் மீது தடவி மசாஜ் செய்யலாம்.

    * கிரீன் டீ போட்டவுடன் அதன் பேக்குகளை குளிர்பதனப் பெட்டியில் வைத்து, ஆறிய பின் கண்களில் வைத்து 10-15 நிமிடங்கள் கழித்து அகற்றலாம்.

    * தேங்காய் எண்ணெயை பஞ்சில் தொட்டு கண்களுக்கு கீழ் மசாஜ் செய்து வரலாம்.

    * ரோஸ் வாட்டரை பருத்தி துணி அல்லது பஞ்சில் நனைத்து கருவளையம் இருக்கும் பகுதியில் 15 நிமிடங்களுக்கு வைத்து எடுக்க வேண்டும். தினசரி இதனை தொடர்ந்து செய்து வர, கருவளையம் நீங்கும்.

    ×