என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு சத்தான உணவுகளை சாப்பிட கொடுப்பது நல்லது. இன்று குழந்தைகளுக்கு சத்தான சிக்கன் சூப் ரைஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    நாட்டுக்கோழி - 100 கிராம்
    வேகவைத்த சாதம் இரண்டு கப் (ஓரளவு குழைந்திருந்தால் நன்றாக இருக்கும்)
    சின்ன வெங்காயம் - 5
    தக்காளி - ஒன்று
    மிளகு - ஒரு டீஸ்பூன்
    சீரகம் -  ஒரு டீஸ்பூன்
    சோம்பு - ஒரு டீஸ்பூன்
    நறுக்கிய கொத்தமல்லித்தழை - அரைக்கால் கப்
    கறிவேப்பிலை - 4 அல்லது 5 இலைகள்
    பூண்டுப் பல் - ஒன்று
    நெய் (அ) நல்லெண்ணெய்  - ஒரு டீஸ்பூன்
    மஞ்சள்தூள்  - அரைக்கால் டீஸ்பூன்
    கொத்தமல்லித்தழை (அலங்கரிக்க) - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    நாட்டுக்கோழியை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    பூண்டு, சீரகம், மிளகு, சோம்பு ஆகியவற்றைத் தட்டி வைத்துக்கொள்ளவும்.

    குக்கரில் நெய் (அ) நல்லெண்ணெய் சேர்த்து, காய்ந்ததும் பூண்டு, சீரகம், மிளகு, சோம்பு, நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் நறுக்கிய தக்காளி, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

    அடுத்து நாட்டுக்கோழியை சேர்த்து அதனுடன் 2 கப் தண்ணீர் ஊற்றி உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கிளறவும்.

    குக்கரை மூடி, அடுப்பை மிதமான தீயில் வைத்து 25 நிமிடங்கள் வேகவிடவும்.

    பின்னர் குக்கரைத் திறந்து சூப்பை மட்டும் வடிகட்டி அதைச் சூடான சாதத்துடன் தேவையான அளவு சேர்த்து நன்றாகக் கிளறவும்.

    ரசம் சாதம் போல இருக்க வேண்டும். ருசி பார்த்து, தேவையானால் சிறிது உப்பு சேர்க்கவும்.

    கடைசியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி, லஞ்ச் பாக்ஸில் போட்டுக் கொடுத்தனுப்பவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு லஞ்ச பாக்சில் கொடுத்து அனுப்ப அவித்த முட்டை சாதம் சிறந்தது. இன்று இந்த சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    முட்டை - ஒன்று
    வெங்காயம் - ஒன்று
    தக்காளி - பாதியளவு
    வேகவைத்த சாதம் - ஒன்றரை கப்
    கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன்
    மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன்
    சீரகத்தூள் - அரை டீஸ்பூன்
    கொத்தமல்லித்தழை - 2 டீஸ்பூன்
    எண்ணெய் - 3 டீஸ்பூன்
    கொத்தமல்லித்தழை (அலங்கரிக்க) - சிறிதளவு
    உப்பு - தேவைக்கேற்ப



    செய்முறை :

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    முட்டையை வேக வைத்து ஓட்டை உடைத்து கொள்ளவும்.

    அவித்த முட்டையில் பாதியைச் சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து மேலும் வதக்கவும்.

    அடுத்து அதில் கொத்தமல்லித்தழை சேர்த்துக் கிளறவும்.

    இதனுடன் உப்பு, கரம் மசாலாத்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும்.

    இப்போது வெட்டி வைத்திருக்கும் அவித்த முட்டையைச் சேர்த்து, மஞ்சள் கரு மசாலாவுடன் நன்றாகக் கலக்கும்வரை கிளறவும்.

    வேகவைத்த சாதம் சேர்த்துக் கலந்து எடுக்கவும் (ஃப்ரைடு ரைஸ் செய்வது போல நன்றாகக் கிளறிவிட்டு எடுக்க வேண்டும்).

    இறுதியில் இன்னும் கொஞ்சம் கொத்தமல்லித்தழை தூவிக் கிளறவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தோசை, நாண், இட்லி, சாதம், புலாவ், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் மலபார் முட்டை கறி. இன்று இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    முட்டை - 6,
    வெங்காயம் - 2,
    இஞ்சி - சிறிய துண்டு,
    தக்காளி - 2,
    ப. மிளகாய் - 4,
    பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி,
    மிளகாய் தூள், மல்லி தூள் - தலா 1 தேக்கரண்டி,
    மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி,
    கரம் மசாலா - அரை தேக்கரண்டி,
    முதல் தேங்காய் பால் - ஒரு கப்,
    இரண்டாவது தேங்காய் பால் - ஒரு கப்,
    எண்ணெய் - 2 மேசைக்கரண்டி,
    கடுகு, சீரகம் - தலா கால் தேக்கரண்டி,
    கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    முட்டையை வேக வைத்து ஓட்டை எடுத்து விட்டு பாதியாக வெட்டி வைக்கவும்.

    பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம் தாளித்து வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கிய பின், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    பின்னர் மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா சேர்த்து பிரட்டவும்.

    அடுத்து தக்காளி சேர்த்து வதக்கவும்.

    தக்காளி, மசாலா நன்கு வதங்கிய பின் இரண்டாவது தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விடவும்.

    மசாலா வாசம் போனதும் முட்டையை சேர்த்து மீண்டும் ஒரு கொதி விடவும்.

    கடைசியாக முதல் தேங்காய பால் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து கொதி வர துவங்கியதும் இறக்கி பரிமாறவும்.

    சுவையான மலபார் முட்டை கறி தயார்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த கத்தரிக்காய் சட்னி. இன்று இந்த சட்னியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கத்தரிக்காய் - கால் கிலோ
    தக்காளி - 3
    கடுகு, உளுத்தம் பருப்பு - அரை டீஸ்பூன்
    மிளகாய் வத்தல் - 8
    பெரிய வெங்காயம் - 3
    எண்ணெய் - 2 ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :


    கத்தரிக்காய், வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி மிளகாயை வறுத்துக் கொள்ளவேண்டும்

    பிறகு கத்தரிக்காய், வெங்காயம், தக்காளியை சேர்த்து சுருள வதக்கவும்

    நன்கு ஆறிய பின் உப்பு சேர்த்து மிக்சியில் அரைத்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு சேர்த்து தாளித்து சட்னியில் சேர்த்து கலந்து பரிமாறவும்.

    சூப்பரான கத்தரிக்காய் சட்னி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வட இந்தியாவில் ஷக்கர்கந்தி என்று அழைக்கப்படும் சக்கரைவள்ளிக் கிழங்கு சாட் மிகவும் பிரசித்தம். சுவையான ஷக்கர்கந்தி சாட் ரெசிபி எப்படி செய்வது என்பதைப் பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்  :

    சர்க்கரைவள்ளிக் கிழங்கு - 250 கிராம்
    சீரகத்தூள், மிளகாய்த்தூள் - தலா அரை டீஸ்பூன்
    சாட் மசாலாத்தூள், மஞ்சள்தூள் - தலா கால் டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை :

    பாத்திரத்தின் தண்ணீர் ஊற்றி சூடானதும், சர்க்கரைவள்ளிக் கிழங்கை முக்கால் பதம் வேகவைக்க வேண்டும்.

    வேகவைத்த சர்க்கரைவள்ளிக் கிழங்கை தோலுரித்து சதுரங்களாக துண்டுகள் போடவும்.

    அதனுடன் உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள் தூவி பிசிறிக்கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கிழங்கு துண்டுகளைச் சேர்த்து மிதமான தீயில் வறுக்கவும். பிறகு எடுத்து, சாட் மசாலாத்தூள் தூவி பரிமாறவும்.

    இது வட மாநிலங்களில் குளிர்காலத்தில் விற்கப்படும் பிரபலமான சாட். சத்துக்கள் நிறைந்த சர்க்கரைவள்ளிக் கிழங்கு... இந்தப் பருவத்தில் அதிகம் விளையக் கூடியது.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    உடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கும் ஏராளமான சத்துகள் வெண்டைக்காயில் அடங்கியுள்ளன. இன்று சுவையான வெண்டைக்காய் பொரியல் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    வெண்டைக்காய் - 1/4 கிலோ,
    வெங்காயம் - 1,
    பச்சை மிளகாய் - 2,
    மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்,
    கடுகு - 1/4 டீஸ்பூன்,
    உளுந்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்,
    வரமிளகாய் - 1,
    பூண்டு - 2 பல்,
    தேங்காய் துருவியது - 3 டீஸ்பூன்,
    கறிவேப்பிலை - சிறிது,
    உப்பு - தேவையான அளவு,
    எண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை

    முதலில் வெண்டைக்காயை நன்கு கழுவி, அதனை ஒரு துணியால் துடைத்து விட்டு, சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுந்தம் பருப்பு, வரமிளகாய், கறிவேப்பிலை மற்றும் பூண்டு போட்டு தாளிக்க வேண்டும்.

    பின்பு அதில் மிளகாய் மற்றும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

    வெங்காயம் பொன்னிறமானதும், அதில் நறுக்கிய வெண்டைக்காய் போட்டு கிளறி, வெண்டைக்காய் வேகும் வரை அடுப்பில் வைத்து கிளற வேண்டும்.

    வெண்டைக்காய் வெந்ததும், அதில் மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.

    இறுதியில் அத்துடன் துருவி வைத்துள்ள தேங்காய் போட்டு கிளறி இறக்கி விட வேண்டும்.

    சூப்பரான வெண்டைக்காய் பொரியல் ரெடி!!!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    உடல்நலக்குறைவால் அவதிப்படுபவர்கள் அடிக்கடி சிக்கன் எலும்பு ரசம் வைத்து குடிப்பது உடலுக்கு வலிமை தரும். இன்று இந்த ரசத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சிக்கன் எலும்புடன் - 1/4 கிலோ (தோல் நீக்கியது)
    மஞ்சள் பொடி - 1 ஸ்பூன்
    தனி மிளகாய் பொடி - 1 ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    புளி - நெல்லிக்காய் அளவு
    தக்காளி - 1
    வெங்காயம் - 1
    எண்ணெய் - 2 ஸ்பூன்
    தண்ணீர் - 4 டம்ளர்
    கொத்தமல்லி தழை - சிறிதளவு

    ரசப் பொடி செய்ய :

    மிளகு - 2 ஸ்பூன்
    சீரகம் - 2 ஸ்பூன்
    பூண்டு - 2

    தாளிக்க :

    கடுகு,
    உளுத்தம் பருப்பு,
    வரமிளகாய் - 1,
    கறிவேப்பிலை



    செய்முறை :

    சிக்கன் எலும்பை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    புளியை 1 டம்ளர் தண்ணீரில் கரைத்து கொள்ளவும்.

    ரசப்பொடி செய்ய கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் கரகரப்பாக பொடித்து கொள்ளவும்.

    தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குக்கரில் சிக்கன் எலும்பை போட்டு 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி, மஞ்சள் தூள், தக்காளி, வெங்காயம், மிளகாய்த்தூள், உப்பு போட்டு வேக வைக்கவும்.

    இருப்புச்சட்டியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய்1, கறிவேப்பிலை போட்டு தாளித்து, குக்கரில் உள்ள சிக்கன் எலும்பு சாற்றை ஊற்றி, அதனுடம் கரைத்த புளிக்கரைசலை ஊற்றி, நுணுக்கி வைத்திருக்கும் ரசப்பொடியை அதில் போட்டு, ரசம் நுரைத்துக்கொண்டு வரும் பொழுது கொத்தமல்லி தழை தூவி இறக்கிவிட வேண்டும்.

    இந்த ரசத்தை சாதத்தில் ஊற்றி பிசைந்தும் சாப்பிடலாம், அல்லது அப்படியேயும் குடிக்கலாம்.

    சூப்பராக சிக்கன் எலும்பு ரசம் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு சீஸ், இறால் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று இந்த இரண்டையும் வைத்து சூப்பரான ஸ்நாக்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    கோதுமை மாவு - 2 கப்,
    எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்,
    வெதுவெதுப்பான தண்ணீர்,
    உப்பு - தேவைக்கு.
    இறால் -  200 கிராம்,
    சீஸ் - 100 கிராம்,
    வெங்காயம் - 2,
    பெங்களூர் தக்காளி - 1,
    குடைமிளகாய் - 1/4 கப்,
    கரம்மசாலாத்தூள், மிளகாய்த்தூள், சிக்கன் மசாலாத்தூள் - தலா 1/2 டீஸ்பூன்,
    கொத்தமல்லித்தழை - 1 கைப்பிடி,
    உப்பு, எண்ணெய் - தேவைக்கு.



    செய்முறை

    கொத்தமல்லி, குடை மிளகாய், தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    இறாலை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    கோதுமை மாவில், உப்பு, எண்ணெய், வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்து கலந்து நன்றாக பிசைந்து 2 மணி நேரம் ஊறவிட்டு, சப்பாத்திகளாக சுட்டு ஹாட்பாக்சில் போட்டு வைக்கவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத் போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    அடுத்து தக்காளி, குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.

    இறால், உப்பு, மசாலாத்தூள்கள் போட்டு சிறிது தண்ணீர் தெளித்து நன்கு வதக்கவும். தண்ணீர் எல்லாம் வற்றி திக்கான பதம் வந்தவுடன் அதில் கெர்த்தமல்லித்தழை தூவி கிளறி இறக்கவும்.

    சப்பாத்தியில் வெண்ணெய் தடவி இறால் கலவையை நடுவில் வைத்து அதன் மீது சீஸ் தூவி ரோல் செய்து மைக்ரோ ஓவனில் 2 நிமிடம் வைத்து இரண்டாக வெட்டி பரிமாறவும்.

    சூப்பரான இறால் சீஸ் ரோல் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    நாக்கை ஊறவைக்கும் சுவையான கேரளா ஸ்பெஷல் மீன் முளகிட்டது ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம். இந்த மீன் குழம்பை சூடான சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
    தேவையான பொருட்கள்

    மீன் - அரை கிலோ,
    வெங்காயம் - 2,
    சின்ன வெங்காயம் - 10,
    இஞ்சி - 2 மேசைக்கரண்டி,
    தக்காளி - 2,
    பூண்டு - 10 பல்,
    பச்சை மிளகாய் - 2,
    மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி,
    மிளகாய் தூள் - ஒன்றரை மேசைக்கரண்டி,
    மிளகுத் தூள் - அரை மேசைக்கரண்டி,
    ஊறவைத்த குடம் புளி - சிறிதளவு,
    உப்பு - தேவையான அளவு,
    தேங்காய் எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை,வெந்தயம் - தாளிக்க.



    செய்முறை

    சின்ன வெங்காயம், தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு மற்றும் வெந்தயம், சீரகம் சேர்த்து தாளித்த பின்னர் இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை, பச்சை மிளகாயைச் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.

    பின்னர் நறுக்கிய வெங்காயம், சின்ன வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

    பிறகு தூள் வகைகள் மற்றும் உப்புச் சேர்த்து பிரட்டவும். மசாலா நன்றாக சேர்ந்து வரும் போது அதனுடன் மீனை சேர்க்கவும்.

    அத்துடன் ஊற வைத்த குடம் புளிச் கரைசலைச் சேர்க்கவும்.

    பிறகு குழம்பிற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்கவிடவும்.

    பிறகு அடுப்பை சிம்மில் வைத்து மூடி போட்டு வைக்கவும்.

    15 நிமிடங்கள் கழித்து திறந்து கறிவேப்பிலை தூவி இறக்கிவிடவும்.

    சுவையான மீன் முளகிட்டது தயார்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    செட்டிநாடு சமையலில் நண்டு குழம்பு செய்து சூடான சாதத்தில் போட்டு சாப்பிட்டால் அருமையாக இருக்கும். இன்று இந்த குழம்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    நண்டு - 1/2 கிலோ
    வெங்காயம் - 2
    தக்காளி - 2
    சீரகம் - 1 டீஸ்பூன்
    சோம்பு - 1 டீஸ்பூன்
    பூண்டு - 5 பல்
    மிளகு - 1 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
    மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
    தனியா தூள் - 3 டீஸ்பூன்
    கொத்தமல்லி - சிறிது
    கறிவேப்பிலை - சிறிது
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை :

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    நண்டை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.

    பின்பு மிக்ஸியில் சீரகம், சோம்பு, பூண்டு மற்றும் மிளகு போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும்ம் தக்காளியை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் அதில் அரைத்து வைத்துள்ள சோம்பு, மிளகு கலவை சேர்த்து, அத்துடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

    அடுத்து, அதில் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.

    தண்ணீர் நன்கு கொதித்ததும், அதில் கழுவி வைத்துள்ள நண்டு சேர்த்து மூடி வைக்க வேண்டும்.

    நண்டு நன்கு வெந்த பின், அதில் கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலையைத் தூவி இறக்கினால், செட்டிநாடு நண்டு குழம்பு ரெடி!!!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    நாட்டுக்கோழியை ஆந்திரா ஸ்டைலில் குழம்பு செய்து சாப்பிட்டால், ருசி அவ்வளவு அருமையாக இருக்கும். இன்று ஆந்திரா ஸ்டைல் நாட்டுக்கோழி குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போம்.
    தேவையான பொருட்கள்:

    நாட்டுக்கோழி - 1 கிலோ
    வெங்காயம் - 3,
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்,
    தக்காளி - 2
    தயிர் -2 டேபிள் ஸ்பூன்,
    பச்சை மிளகாய் - 3-4 ,
    மல்லி (தனியா)- 1 டேபிள் ஸ்பூன்,
    சீரகம் - 1/2 டேபிள் ஸ்பூன்,
    தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்,
    பூண்டு - 3 பல்
    மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்,
    மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்,
    கரம் மசாலா - 1 டீஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு,
    எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்,
    கொத்தமல்லி - சிறிது,
    தண்ணீர் - 1 கப்



    செய்முறை :

    வெங்காயம், கொத்தமல்லி, தக்காளி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    நாட்டுக்கோழியை நன்றாக சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    மல்லி, சீரகம், தேங்காய், பூண்டு ஆகியவற்றை வாணலியில் போட்டு வறுத்து, குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ள வேண்டும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து, 5 நிமிடம் நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.

    அடுத்து தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் அரைத்து வைத்துள்ள பேஸ்ட், கரம் மசாலா, தயிர் மற்றும் உப்பு சேர்த்து, 5 நிமிடம் வதக்க வேண்டும்.

    பின்பு கழுவி வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து, மசாலா சிக்கனில் படுமாறு நன்கு பிரட்டி, தண்ணீர் ஊற்றி, தீயை குறைவில் வைத்து, மூடி வைத்து 20 நிமிடம் சிக்கனை வேக வைக்க வேண்டும்.

    சிக்கனானது நன்கு வெந்த பிறகு, அதனை இறக்கி, அதில் கொத்தமல்லியை தூவினால், சுவையான ஆந்திரா ஸ்டைல் நாட்டுக்கோழி குழம்பு ரெடி.

    இந்த ஆந்திர ஸ்டைல் நாட்டுக்கோழிக் குழம்பை சூடான சாதத்துடனும், இட்லி, தோசை, சப்பாத்தி என எதனுடன் வைத்து சாப்பிட்டாலும், பக்காவாக இருக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    நீரிழிவு நோய்க்கும், சிறுநீரக கல்லுக்கும் வாழைப்பூ சிறந்த மருந்து. வாழைப்பூ மாதவிடாய் பிரச்சனைக்கும் சிறந்த மருந்து. இன்று இந்த துவையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வாழைப்பூ - ஒன்று
    புளி - எலுமிச்சையளவு
    கடலைப்பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
    உளுத்தம்பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
    சிவப்பு மிளகாய் - 3
    தேங்காய் - ஒரு கைப்பிடி
    எண்ணெய் - வதக்க

    தாளிக்க :

    கடுகு, கறிவேப்பிலை



    செய்முறை :

    வாழைப்பூவை கழுவிவிட்டு, நடுவில் உள்ள காம்பு பகுதியை நீக்கி சுத்தம் செய்த பின் பொடியாக நறுக்கி, மோர் கலந்த நீரில் போட்டு வைக்கவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு, மிளகாய் வற்றல் மூன்றையும் போட்டு சிவக்க வறுத்து எடுத்து கொள்ளவும்.

    அதே வாணலியில் வாழைப்பூவை போட்டு நன்றாக வதக்கி விட்டு லேசாக தண்ணீர் தெளித்து கிளறி நன்கு சுருளும் வரை வதக்கி அதோடு தேங்காய் துருவலையும் போட்டு வதக்கி எடுக்கவும்.

    வதக்கிய வாழைப்பூவுடன் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல், புளி, உப்பு சேர்த்து மிக்சியில் அரைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து சேர்த்து தாளித்து துவையலில் கொட்டி கிளறி பரிமாறவும்.

    சுவையான வாழைப்புத் துவையல் ரெடி.

    இதை சூடான சாதத்தில் நெய்/நல்லெண்ணெய் விட்டு சாப்பிடலாம். தயிர்சாதத்திற்கும் தொட்டு கொள்ளலாம்..

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×