என் மலர்tooltip icon

    சமையல்

    ஆண்கள் கேரட் சாப்பிட்டால், அவர்களது விந்தணுவின் அளவு அதிகரிப்பதோடு, அதன் தரமும் அதிகரிக்கும். எனவே குழந்தைப் பெற்றுக் கொள்ள நினைப்போர் தினமும் கேரட்டை தவறாமல் சேர்த்து வருவது நல்லது.
    தேவையான பொருட்கள் :

    கேரட் - 1,
    உருளைக்கிழங்கு - 1,
    வெங்காயம் - 1
    உப்பு - தேவையான அளவு,
    மிளகுத்தூள் - தேவையான அளவு,
    வெண்ணெய் - தேவைக்கு.

    செய்முறை:


    வெங்காயம், உருளைக்கிழங்கு, கேரட்டை தோல் நீக்கி விட்டு பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குக்கரில் வெண்ணெய் விட்டு உருக்கியதும் வெங்காயம், கேரட், உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கி தேவையான அளவு தண்ணீர் விட்டு மூடி 3 விசில் விட்டு இறக்கவும்.

    ஆறிய பிறகு திறந்து மத்தால் கடையவும்.

    பின்னர் தேவையான அளவு தண்ணீர் உப்பு, மிளகுத்தூள் சேர்த்து மீண்டும் கொதிக்க வைத்து இறக்கி பரிமாறலாம்.

    சூப்பரான கேரட் உருளைக்கிழங்கு சூப் ரெடி.

    திங்கள் கிழமை (30.8.21) கிருஷ்ண ஜெயந்தி அனுஷ்டிக்கப்படுகிறது. அன்று விதவிதமான நைவேத்தியம் படைத்து கிருஷ்ணரை வழிபடலாம். இன்று வெல்ல சீடை செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பச்சரிசி - 2 கப்
    உளுத்த மாவு - ஒரு பிடி ( வறுத்து அரைத்தது )
    வெல்லம் - 1 1/2 கப்  
    எள் - கொஞ்சம்
    ஏலப்பொடி பொடி - 1/4 டீஸ்பூன்
    நெய் -  1 டேபிள் ஸ்பூன்
    பொரிக்க - எண்ணெய்

    செய்முறை :

    முதலில் அரிசியை களைந்து உலர்த்தவும். இதை முதல் நாளே கூட செய்து வைக்கலாம். அரிசி காய்ந்ததும், மிக்சியில் மாவாக அரைத்து, சலித்து வைக்கவும். சலித்த மாவை வெறும் வாணலியில் வறுக்கவும்.

    எள்ளை சுத்தம் செய்து வைக்கவும்.

    ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு தூள் செய்த வெல்லத்தை போட்டு நன்றாக கலக்கவும். வெல்லம் கரைந்ததும், வடிகட்டி மீண்டும் அடுப்பில் வைத்து நன்கு கொதிக்கும் போது, எள், ஏலப்பொடி எல்லாம் போட்டு நன்கு கலக்கவும்.

    பின் அரிசிமாவு, வறுத்து அரைத்த உளுத்தம் மாவு, நெய் போட்டு இறக்கி வைத்து நன்கு கிளறவும்.

    கொஞ்சம் ஆறியதும் அழுத்தி பிசையவும்.

    ஒரு வெள்ளை துணி அல்லது எண்ணெய் தடவிய தாம்பாளத்தில் சின்ன சின்னதாக ஆனால் உப்பு சீடையை விட சற்று பெரியதாக மொத்த மாவையும் உருட்டி வைக்கவும்.

    அடுப்பில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கொஞ்சம் கொஞ்சமாக சீடைகளை அதில் போட்டு பொரித்து எடுக்கவும்.

    கரகரப்பான 'வெல்ல சீடை' ரெடி.

    கர்நாடகாவில் கத்தரிக்காய் சாதம் என்கிற வாங்கி பாத் மிகவும் பிரபலமான உணவுவாகும். இந்த உணவை செய்வதும் எளிது. இன்று வாங்கி பாத் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    அரிசி - 1 கப்
    கத்திரிக்காய் - 150 கிராம்
    எண்ணெய் - தேவையான அளவு
    வெங்காயம் - 2
    கடுகு - 1/2 டீஸ்பூன்
    கடலை பருப்பு - 1 டீஸ்பூன்
    பச்சை மிளகாய் - 2
    முந்திரி பருப்பு - 15
    கறிவேப்பிலை - 1 இணுக்கு
    பெருங்காயப்பொடி - 2 பின்ச்
    மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன் (விரும்பினால்)
    புளித்தண்ணீர் - கால் கப்
    உப்பு - தேவைக்கு.

    வாங்கி பாத் பொடி :

    முழு மல்லி - 3 ஸ்பூன்
    உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்,
    கடலை பருப்பு - 1 ஸ்பூன்,
    மிளகாய் வற்றல் - 2 ,
    பட்டை -  சிறு துண்டு,
    கிராம்பு - 1
    கொப்பரை தேங்காய் துருவியது - 2 டேபிள்ஸ்பூன்

    செய்முறை :

    அரிசியை உதிரியாக வடித்து ஆற வைக்கவும்.

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாங்கி பாத் பொடி செய்ய கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை வெறும் கடாயில் போட்டு நன்றாக வறுத்து ஆறவைத்து மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

    கத்தரிக்காயை மெல்லிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

    ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும்.

    ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கடலைபருப்பு, பெருங்காயப்பொடி போட்டு தாளித்த பின் முந்திரி பருப்பு, நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கிய பின்னர் பொடியாக நறுக்கிய கத்திரிக்காய், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து மூடி போட்டு நன்கு வேக விடவும்.

    கத்திரிக்காய் வெந்த பின்பு புளித்தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க விடவும்.

    இப்போது வாங்கி பாத் பொடி 3 ஸ்பூன் சேர்த்து நன்கு கலந்து விட்டு அடுப்பை சிம்மில் வைக்கவும்.

    எல்லாம் நன்கு சேர்ந்த பின்னர் வடித்த சாதம் சேர்த்து நன்கு கிளறி உப்பு சரி பார்த்து இறக்கவும்.

    சுவையான வாங்கி பாத் ரெடி.

    வாங்கி பாத் பொடி கடைகளில் கிடைக்கும்.

    ஜீரண சக்தியை அதிகப்படுத்துவதற்கு வேறு எந்த மருந்தை தேடி அலைய வேண்டியதில்லை ஒன்றே அல்லது இரண்டோ நல்ல கனிந்த மஞ்சள் வாழைப் பழங்களை சாப்பிட்டால் போதும்.
    தேவையான பொருட்கள் :

    வாழைப்பழம் - 2
    புளிக்காத தயிர் - 5 மேசைக்கரண்டி
    தேன் - 3 மேசைக்கரண்டி
    தேங்காய்ப் பூ - 2 மேசைக்கரண்டி
    ஏலக்காய் தூள் - ஒரு சிட்டிகை
    கொத்தமல்லி - சிறிதளவு

    செய்முறை :

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாழைப்பழத்தை தோலை நீக்கி விட்டு வட்டமாக வெட்டிக் கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வாழைப்பழம, தேன், தயிர், தேங்காய் பூ, ஏலக்காய் தூள் போட்டு நன்றாக கலக்கவும்.

    கடைசியாக கொத்தமல்லி தழை போட்டு பரிமாறவும்.

    மாங்காயில் ஊறுகாய், பச்சடி, தொக்கு செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று மாங்காயில் எளிய முறையில் சூப்பரான புலாவ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    உதிராக வடித்த சாதம் - 3 கப்,
    கிளி மூக்கு மாங்காய் (சிறிய சைஸ்), - ஒன்று,
    பச்சைப் பட்டாணி - கால் கப்,
    வெங்காயம், பச்சை மிளகாய் - தலா ஒன்று,
    முந்திரித் துண்டுகள் - ஒரு டேபிள்ஸ்பூன்,
    பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - ஒரு டேபிள்ஸ்பூன்,
    பட்டை - சிறு துண்டு,
    ஏலக்காய், கிராம்பு - தலா ஒன்று,
    சோம்பு - அரை டீஸ்பூன்,
    எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    மாங்காயை தோல் சீவி பொடியாக நறுக்கவும்.

    கேரட், வெங்காயம் பச்சை மிளகாயை ஆகியவற்றையும் பொடியாக நறுக்கவும்.

    அடுப்பில் வாணலியை வைத்து சிறிதளவு எண்ணெயை காயவிட்டு… பட்டை, கிராம்பு, உடைத்த ஏலக்காய், சோம்பு சேர்த்து சிவக்க வறுக்கவும்.

    இத்துடன் பட்டாணி, பச்சை மிளகாய், மாங்காய் மற்றும் காய்கறிகளைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.

    காய்கள் வெந்ததும் அடுப்பை தணித்து சாதத்தை சேர்த்து, உப்பு போட்டு கிளறவும்.

    பிறகு மீதமுள்ள எண்ணெயை ஊற்றி, கொத்தமல்லியை சேர்த்துக் கிளறி, முந்திரித் துண்டுகளை மேலாக தூவி இறக்கி பரிமாறவும்.

    சிறுதானியங்களில் பல்வேறு ருசியான சத்தான ரெசிபிகளை செய்யலாம். அந்த வகையில் இன்று சிறுதானிய வெஜ் நூடுல்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சிறுதானிய சத்து மாவு - ஒரு கப்,
    விரும்பிய காய்கறி கலவை (கேரட், பீன்ஸ், பட்டாணி) - ஒரு கப்,
    வெங்காயம் - ஒன்று,
    பச்சை மிளகாய் - 2  
    தக்காளி சாஸ் - ஒரு டீஸ்பூன்,
    இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்,
    கொத்தமல்லி தழை -சிறிதளவு
    எண்ணெய், உப்பு - தேவைக்கு.

    செய்முறை:

    காய்கறிகள், வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வெறும் வாணலியில் சிறுதானிய சத்துமாவை வாசனை வரும் வரை வறுத்து கொள்ளவும்.

    பின்னர் இதனுடன் உப்பு, சூடான தண்ணீர் விட்டு இடியாப்ப மாவு பதத்துக்கு பிசையவும்.

    மாவை இடியாப்ப அச்சில் போட்டு பிழிந்து ஆவியில் வேக விட்டு எடுத்து வைக்கவும்.

    வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    பிறகு உப்பு, தக்காளி சாஸ், வேக வைத்த நூடுல்ஸ் சேர்த்து கிளறவும். மசாலா எல்லாம் நூடுல்ஸ் உடன் சேர்ந்ததும் கொத்தமல்லிதழை தூவி இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான சிறுதானிய வெஜ் நூடுல்ஸ் ரெடி.

    மாலை நேரத்தில் டீ, காபியுடன் சாப்பிட அருமையாக இருக்கும் இந்த சிக்கன் போண்டா. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சிக்கன் கைமா - கால் கிலோ,
    சின்ன வெங்காயம் - 50 கிராம்,
    போண்டா மாவு - 250 கிராம்,
    சிக்கன் மசாலா - 3 டேபிள்ஸ்பூன்,
    மஞ்சள்தூள் - அரை டேபிள்ஸ்பூன்,
    காய்ந்த மிளகாய் - 2,
    பூண்டு - 5 பல்,
    கறிவேப்பிலை - 2 ஆர்க்கு,
    சோம்பு - ஒரு டேபிள்ஸ்பூன்,
    மிளகு - ஒரு டேபிள்ஸ்பூன்,
    தேங்காய்த் துருவல் - ஒரு கைப்பிடி அளவு,
    பொட்டுக்கடலை - 50 கிராம்,
    இஞ்சி - 2 சிறிய துண்டு,
    கொத்தமல்லித் தழை - சிறிதளவு.
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

    செய்முறை:

    சின்ன வெங்காயம், கொத்தமல்லி, இஞ்சி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    எலும்பில்லா சிக்கனை கொத்தி வாங்கவும். அதை நன்றாகக் கழுவி தண்ணீர் இல்லாமல் ஒரு கிண்ணத்தில் போடவும்.

    அத்துடன் சின்ன வெங்காயம், பொட்டுக்கடலை, காய்ந்த மிளகாய், சோம்பு, மஞ்சள்தூள், பூண்டு, இஞ்சி, மிளகு, சிக்கன் மசாலா, உப்பு, கறிவேப்பிலை, தேங்காய்த் துருவல் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு, நறுக்கிய கொத்தமல்லித்தழை, அரைத்த சிக்கன் கலவையைப் போட்டு நன்றாக வதக்கவும்.

    முக்கால் பாகம் வெந்ததும், ஆறவிட்டு உருண்டைகளாக உருட்டவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.

    போண்டா மாவைக் கரைத்து, அதில் சிக்கன் உருண்டைகளை மாவில் தோய்த்து எடுத்து, எண்ணெயில் (மிதமான சூட்டில்) பொரித்து எடுக்கவும்.

    அரைத்து வெந்த சிக்கன் பஞ்சு போல் மிருதுவாக இருப்பதால், சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடுவார்கள்.

    சூப்பரான சிக்கன் போண்டா ரெடி.

    அமுக்கிரா கிழங்கு என்று அழைக்கப்படும் அஸ்வகந்தா சக்தி வாய்ந்த நோய் எதிர்ப்பு பூஸ்டராக செயல்படும். வைரஸ்கள் மற்றும் தொற்றுநோய்களுக்கு எதிராக பாதுகாப்பை வலுப்படுத்த அஸ்வகந்தாவை தேநீராக தயாரித்து பருகலாம்.
    தற்போதைய சூழ்நிலையில் கொரோனா போன்ற கொடிய வைரஸ்கள், நோய் தொற்றுகளிடம் இருந்து தற்காத்துக்கொள்வதற்கு நோய் எதிர்ப்புசக்தியை அதிகரித்துக்கொள்ள வேண்டியது அவசியமானது. அதனால் பலரும் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை கொண்ட பொருட்களை தேடிப்பிடித்து உபயோகப்படுத்த தொடங்கிவிட்டார்கள். அமுக்கிரா கிழங்கு என்று அழைக்கப்படும் அஸ்வகந்தா சக்தி வாய்ந்த நோய் எதிர்ப்பு பூஸ்டராக செயல்படும் தன்மை கொண்டது. அஸ்வகந்தா செடி முழுவதுமே மருத்துவப் பயன்கள் கொண்டது. வேர் மற்றும் தூள் வடிவில் நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், வைரஸ்கள் மற்றும் தொற்றுநோய்களுக்கு எதிராக பாதுகாப்பை வலுப்படுத்தவும் அஸ்வகந்தாவை தேநீராக தயாரித்து பருகலாம். உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கும் உதவியாக இருக்கும். ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், மன அழுத்தத்தை குறைக்கவும் உதவும். ரத்தசோகை பிரச்சினையில் இருந்தும் தற்காத்துக்கொள்ளலாம். பெண்களின் கருத்தரிப்புக்கும் நன்மை பயக்கும்.

    அஸ்வகந்தா தேநீரை எளிதாக தயாரித்து பருகலாம்.

    அகன்ற பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்கவைக்கவும்.

    கொதிக்க தொடங்கியதும் ஒன்று அல்லது இரண்டு அஸ்வகந்தா வேர் துண்டுகளை போட்டு 10 நிமிடங்கள் வேகவிடவும்.

    அல்லது ஒரு டீஸ்பூன் அஸ்வகந்தா தூளை போட்டு கொதிக்கவிடவும்.

    நன்கு கொதித்ததும் கீழே இறக்கவும்.

    அதனுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு, தேன் கலந்து வடிகட்டி பருகலாம்.

    இந்த தேநீரை காலை, மாலை இரு வேளை பருகலாம். இதில் சேர்க்கப்படும் மூன்று பொருட்களுமே நோய் எதிர்ப்பு சக்தியையும், ஆரோக்கியத்தையும் மேம்பட செய்துவிடும்.

    அஸ்வகந்தா:இது மன அழுத்தத்தையும், பதற்றத்தையும் குறைக்க உதவும். இது தவிர, நோய் எதிர்ப்பு சக்தியையும் மேம்படுத்தும்.

    எலுமிச்சை:இதில் இருக்கும் வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். இது ஆன்டி ஆக்சிடன்ட் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது. ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் சிறந்தது.

    தேன்:இதிலும் ஆன்டிஆக்சிடன்ட்கள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு கூறுகள் நிறைந்துள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.

    இதையும் படிங்க.. ஓணம் சத்யா: எரிசேரி
    ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தில் ருசியான உணவுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. அந்த வகையில் இன்று எரிசேரி ரெசிபிவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சேனைக்கிழங்கு - 100 கிராம்
    நேந்திரங்காய் - ஒன்று
    கறிவேப்பிலை - தேவைக்கு
    மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி
    உப்பு - தேவைக்கு
    தேங்காய் எண்ணெய் - 100 கிராம்
    தேங்காய் துருவல் - ஒரு கப்
    சீரகம் - ஒரு தேக்கரண்டி
    நெய் - 25 கிராம்
    கடுகு - ஒரு தேக்கரண்டி
    கறிவேப்பிலை - தேவைக்கு

    செய்முறை:

    சேனையையும், நேந்திரங்காயையும் துண்டுகளாக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் நறுக்கிய காய்கறிகளை போட்டு கறிவேப்பிலை, மிளகு தூள், உப்பு, தேங்காய் எண்ணெய், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக வேகவையுங்கள்.

    கால் கப் தேங்காய் துருவலில் சீரகம் சேர்த்து அரைத்து அதை வேகவைத்த காய்கறியில் சேருங்கள்.

    மீதமுள்ள தேங்காய் துருவலை நன்றாக அரைத்து, எண்ணெயை சூடாக்கி அதில் கொட்டி வறுத்து பிரவுன் நிறமாகும்போது எடுத்து குழம்பில் சேருங்கள்.

    நெய்யை சூடாக்கி கடுகு, கறிவேப்பிலை தாளித்து குழம்பில் கலந்து பரிமாறலாம்.

    இதையும் படிங்க... திருவோணம் ஸ்பெஷல்: ஓலன்
    உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், பீட்ரூட்டை சாறு எடுத்து குடித்து வந்தால், இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கலாம். செரிமானப் பிரச்சனையை நீக்கும்.
    தேவையான பொருட்கள்

    பீட்ரூட் - 2 துருவியது
    தேங்காய் துருவல் - அரை கப்
    கடுகு - 1 டீஸ்பூன்
    சீரகம் - அரை டீஸ்பூன்
    பச்சை மிளகாய் - 1
    இஞ்சி - சிறிய துண்டு
    தயிர் - அரை கப்
    காய்ந்த மிளகாய் - 2
    கறிவேப்பிலை - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு
    தண்ணீர் - தேவையான அளவு

    செய்முறை

    ஒரு வாணலியில் துருவிய பீட்ரூட், தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து நன்றாக கிளறி 10 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.

    துருவிய தேங்காய், கடுகு, சீரகம், பச்சை மிளகாய், இஞ்சி, தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.

    அதை பீட்ரூட் உடன் சேர்த்து கிளறவும்.

    இந்த கலவையை 7 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும்.

    நன்றாக கொதித்து சிறிது கெட்டியானதும் தயிர், உப்பு சேர்த்து கிளறவும். கலவை கொதிப்பதற்கு முன்பு அடுப்பை அணைத்து விடவும்.

    சிறிய வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து பீட்ரூட் கலவையுடன் சேர்க்கவும்.

    சுவையான பீட்ரூட் பச்சடி ரெடி.

    ஓணம் பண்டிகையில் நடக்கும் ஓணம் சத்யா விருந்தில் பல்வேறு சுவையான மற்றும் வித்தியாசமான ரெசிபிக்கள் சமைக்கப்படும். அதில் ஒன்று தான் ஓலன் ரெசிபி.
    தேவையான பொருட்கள்:

    நீர் பூசணி/வெள்ளை பூசணி - 1 1/2 கப்
    தட்டைப்பயறு - 1-2 கப்
    பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது)
    மிகவும் நீர் போன்ற தேங்காய் பால் - 1 கப்
    கெட்டியான தேங்காய் பால் - 1 கப்
    கறிவேப்பிலை - சிறிது
    தேங்காய் எண்ணெய் - 1 டீபூன் *
    உப்பு - சுவைக்கேற்ப
    தண்ணீர் - தேவையான அளவு

    செய்முறை:

    முதலில் நீர் பூசணிக்காயின் தோலை நீக்கிவிட்டு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

    பின் தட்டை பயறை நீரில் ஒரு 8 மணிநேரம் ஊற வைத்துக் கொண்டு, பின் அதை குக்கரில் போட்டு, சிறிது நீர் ஊற்றி அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 5 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.

    ஒரு பாத்திரத்தில் அரை கப் நீர் ஊற்றி, அத்துடன் ஒரு கப் நீர் போன்றுள்ள தேங்காய் பால் ஊற்றி, அதோடு நீர் பூசணிக்காய் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து அடுப்பில் வைத்து, காயை நன்கு வேக வைக்க வேண்டும்.

    நீர் பூசணி நன்கு வெந்ததும், அத்துடன் வேக வைத்துள்ள தட்டை பயறை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி, பின் கெட்டி தேங்காய் பாலை ஊற்றி, கொதிக்க ஆரம்பிக்கும் முன்பே அடுப்பை அணைத்து விட வேண்டும்.

    பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அதில் ஊற்றினால், ஓணம் சத்யா ஸ்பெஷல் ஓலன் தயார்.

    குறிப்பு:

    நீர் பூசணிக்காய் மற்றும் தட்டைப் பயறு நன்கு மென்மையாக வெந்திருந்தால் தான், அது தேங்காய் பாலை நன்கு உறிஞ்சியிருக்கும்.

    கெட்டியான தேங்காய் பால் சேர்த்த பின் நீண்ட நேரம் அடுப்பில் வைத்திருக்கக்கூடாது. இல்லாவிட்டால், அது திரிய ஆரம்பித்துவிடும்.

    சமைத்து முடித்த பின் குறைந்தது அரை மணிநேரம் கழித்து சாப்பிட பரிமாறினால் தான், தேங்காய் பாலுடன் காய்கறிகள் நன்கு ஊறி இருக்கும்.

    ஓலன் ரெசிபிக்கு நீர் பூசணியுடன், மஞ்சள் பூசணியையும் சேர்த்துக் கொள்ளலாம்.
    ஆப்பிள் சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு சூப்பாக செய்து கொடுக்கலாம். இதில், வைட்டமின்கள், புரதச்சத்துக்கள் அதிகம் உள்ளன. இன்று ஆப்பிள் சூப் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ஆப்பிள் - 2,
    எலுமிச்சை சாறு - ஒரு டேபிள்ஸ்பூன்,
    நாட்டு சர்க்கரை - ஒரு டீஸ்பூன்,
    வெண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
    மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்,
    பால் - ஒரு டம்ளர்.

    செய்முறை:

    ஆப்பிளை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து வெண்ணெய் போட்டு உருக்கியதும், பொடியாக நறுக்கிய ஆப்பிள் சேர்த்து லேசாக வதக்கி, 5 டம்ளர் நீர் சேர்த்து வேகவிடவும்.

    ஆப்பிள் நன்றாக வெந்ததும் நாட்டு சர்க்கரை, மிளகுத்தூள், பால் சேர்த்துக் கலக்கவும்.

    பரிமாறும் முன் விருப்பப்பட்டால், எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கொள்ளலாம்.

    சத்தான சுவையான ஆப்பிள் சூப் ரெடி.

    பலன்கள்: ஆப்பிள் சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு சூப்பாக செய்து கொடுக்கலாம். இதில், வைட்டமின்கள், புரதச்சத்துக்கள் அதிகம் உள்ளன. எந்த நோயும் உடலைத் தாக்காமல் காப்பதுடன், உடலை வலுவாக்கும். சருமம் பொலிவாகும். உடல் எடையைக் குறைக்கவும், உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.
    ×