search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tea"

    • சமூக வலைதள வீடியோ மூலம் வைரலானவர் டாலி.
    • உலக பணக்காரர்களில் ஒருவரான பில் கேட்ஸ் வாடிக்கையாளர் ஆனார்.

    உலகில் வித்தாயசமான சேட்டைகள் செய்வதில் இந்தியர்கள் எப்போதும் விசேஷமானவர்கள் எனலாம். செய்யும் எல்லாவற்றிலும் வித்தியாசத்திற்கு பழகி வரும் இந்தியர்கள் மத்தியில், சமூக வலைதள வீடியோ மூலம் வைரலானவர் டாலி (dolly) என்ற டீ மாஸ்டர்.

    அணிந்திருக்கும் உடையில் துவங்கி, வாடிக்கையாளர்கள் கையில் டீ கிளாசை கொடுக்கும் வரை சுறுசுறுப்பு கொஞ்சம் ஓவர்டோசாகவே காணப்படுபவர் தான் டோலி. தனது நேர்த்தியான டீ போடும் விதத்தால் பிரபலமானவர். டாலியின் உடல் பாவனை ரஜினிகாந்த் போன்று இருந்ததும் இவர் வைரலாக காரணமானது.

     


    தற்போது டாலியின் கடைக்கு உலக பணக்காரர்களில் ஒருவரான பில் கேட்ஸ் வாடிக்கையாளராகி இருக்கிறார். டாலி டீ போடும் விதத்தை பார்க்கவும், அந்த டீ எப்படி இருக்கிறது என்பதை சுவைத்து பார்க்கவும் பில் கேட்ஸ் முடிவு செய்தார்.

    இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பில் கேட்ஸ் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். இதனிடையே பில் கேட்ஸ், டாலி கடையிலும் ஒரு டீயை வாங்கி சுவைத்தார். மேலும் இது தொடர்பான வீடியோவை தனது இன்ஸ்டாகிராமிலும் அவர் பகிர்ந்துள்ளார்.

    அந்த பதிவில், "எளிமையான ஒரு கப் தேநீரில் துவங்கி, இந்தியாவில் எங்கு திரும்பினாலும் புதுமையை பார்க்க முடியும்," என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.



    • குளிர்காலத்தில் அதிக கலோரிகள் கொண்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்.
    • கிரீன் டீ பருகுவது உடலுக்கு வெப்பத்தை அளிக்கும்.

    குளிர்காலத்தில் நொறுக்குத்தீனிகளை அதிகம் சாப்பிடுவதற்கு மனம் விரும்பும். அவை அதிக கலோரிகளை கொண்டிருக்கும் பட்சத்தில் உடல் எடை கூடுவதற்கு காரணமாகிவிடும். உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் குளிர்காலத்தில் அதிக கலோரிகளை கொண்ட உணவுகளை தவிர்க்க வேண்டும். உண்ணும் ஒவ்வொரு உணவிலும் கலோரிகளின் அளவுகளை கணக்கில் கொள்ள வேண்டும். சூடான பானத்தை பருக விரும்புபவர்கள் குறிப்பிட்ட சில பானங்களை ருசிக்கலாம். அவை உடல் எடை குறைவதற்கு வித்திடும். அத்தகைய பானங்கள் குறித்து பார்ப்போம்.

    கிரீன் டீ

    குளிர்காலத்தில் ஒரு கப் கிரீன் டீ பருகுவது உடலுக்கு வெப்பத்தை அளிக்கும். இந்த மூலிகை தேநீரில் உடல் எடையை பெருமளவில் குறைக்க உதவும் சேர்மங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக என்சைம்கள் மற்றும் காபின் உள்ளன. இவை கொழுப்பை கரைப்பதற்கு உதவும். வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கச் செய்யும். உடல் எடையை குறைப்பதற்கு வித்திடும்.

    எலுமிச்சை - தேன்

    எலுமிச்சை, தேன் இவை இரண்டும் உடல் எடையை குறைக்கும் அற்புத நன்மைகளை கொண்டிருக்கின்றன. ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் அரை டீஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு டீஸ்பூன் தேன் சேர்க்கவும். இந்த பானத்தை காலையில் பருகுவது உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க உதவும். குறிப்பாக பசியைக் குறைத்து, குடல் இயக்கத்தை சீராக்கும். எலுமிச்சை இயற்கையாகவே நச்சுக்களை நீக்கக்கூடியது. அதனுடன் தேனும் சேர்வது உடல் எடையை குறைக்க உதவும்.

    ஓமம்

    ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் ஒரு டீஸ்பூன் ஓமம் விதையை சேர்த்து பருகலாம். இது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும். குடலின் ஆரோக்கியத்தை பலப்படுத்தும். ஓமம் தண்ணீர் உணவின் மூலம் கலோரிகள் உட்கொள்ளும் அளவை குறைக்க உதவும். உடல் எடையை விரைவாக குறைக்க விரும்புபவர்கள் தினமும் உடற்பயிற்சி செய்யும் வழக்கத்தை பின்பற்ற வேண்டும். அதனை செய்து முடித்த பிறகு ஓமம் தண்ணீரை பருகும் வழக்கத்தை தொடர வேண்டும்.

    பெருஞ்சீரகம்

    குளிர் காலத்தில் பசி உணர்வை கட்டுப்படுத்தும் தன்மை பெருஞ்சீரகத்துக்கு உண்டு. ஒரு டீஸ்பூன் பெருஞ்சீரகம் விதைகளை இரவில் தண்ணீரில் ஊறவைத்து விட்டு, காலையில் அந்த தண்ணீரை குடிக்கவும். இந்த தண்ணீர் குடல் ஆரோக்கியத்தை பராமரிக்கும். அத்தியாவசிய வைட்டமின்கள், தாதுக்களை உறிஞ்சுவதை மேம்படுத்தும். தொடர்ந்து பெருஞ்சீரக தண்ணீரை பருகி வந்தால் உடல் எடையை கட்டுக்குள் வைத்துக்கொள்ளவும் உதவி புரியும்.

    லவங்கப்பட்டை தேநீர்

    லவங்கப்பட்டை தேநீர் பருகுவதும் உடல் எடையை குறைக்க வித்திடும். கொதிக்கும் நீரில் ஒரு டீஸ்பூன் தேன், லவங்கப்பட்டை துண்டு மற்றும் சில துளிகள் எலுமிச்சை சாறு கலந்து பருகுவது உடல் எடையை குறைக்க உதவும். இதில் ஆன்டி ஆக்சிடென்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் ஏராளம் இருப்பதால் கெட்ட கொழுப்பை எரிக்கவும் செய்யும்.

    • வெளியில் இருந்து வீட்டுக்கு வந்த பிரபாகரன் மனைவியிடம் குடிக்க டீ தருமாறு கேட்டார்.
    • அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தார்.

    அம்பத்தூர்:

    அயனாவரம், பாளையம் பிள்ளை நகரை சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மனைவி சுப்ரியா(வயது34). இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டு ஆகிறது. கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் வெளியில் இருந்து வீட்டுக்கு வந்த பிரபாகரன் மனைவியிடம் குடிக்க டீ தருமாறு கேட்டார். ஆனால் சுப்ரியா டீ தயார் செய்ய தாமதமானதாக தெரிகிறது.

    நீண்ட நேரம் கழித்து அவர், கணவர் பிரபாகரனுக்கு சூடான டீயை கொடுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த பிரபாகரன் அந்த சூடான டீயை வாங்கி மனைவி சுப்ரியாவின் மீது ஊற்றினார். இதில் சுப்ரியாவின் தோள்பட்டை மற்றும் கை வெந்தது. அவர் அலறி துடித்தார். பின்னர் அவர் கணவரிடம் கோபித்துக்கொண்டு கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனது தந்தை வீட்டுக்கு சென்றுவிட்டார். உடல் வெந்த சுப்ரியாவை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தார். அங்கு சுப்ரியா சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து அயனாவரம் போலீஸ்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்த பிரபாகரனை கைதுசெய்தனர்.

    • வேலையிடத்தில் பசியைப் போக்க தேநீரோ மற்ற பானங்களோதான் அவருக்கு உணவு என்று ஆகிப்போனது.
    • தேநீரும் சத்து பானங்களும்தான் என அனிமாவின் உணவுமுறை அமைந்துவிட்டது.

    மேற்குவங்க மாநிலம், ஹூக்ளி மாவட்டம், சியாம் பஜார் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பெல்தியா கிராமத்தைச் சேர்ந்தவர் அனிமா சக்ரவர்த்தி. 76 வயதான இவர், மகன், பேரன்பேத்திகளையும் பார்த்துவிட்டார்.

    இளம் வயதில் குடும்ப சூழ்நிலை காரணமாக, வீட்டு வேலைசெய்து அந்த வருவாயில் குடும்பத்தை நடத்தி வந்தார். அப்போது வேலை செய்யும் இடங்களில் தரப்படும் மீந்துபோன உணவை, வீட்டுக்கு எடுத்துவந்து பிள்ளைகளுக்கு கொடுத்துவந்துள்ளார்.

    அதில் பெரும்பாலும் அவருக்கென எதுவும் மிஞ்சாது. வேலையிடத்தில் பசியைப் போக்க தேநீரோ மற்ற பானங்களோதான் அவருக்கு உணவு என்று ஆகிப்போனது.

    வாழ்க்கையோட்டத்தில் அந்த வேலையை அவர் விட்டு விட்டபோதும், உணவுப் பழக்கம் மாறவில்லை. தேநீரும் சத்து பானங்களும்தான் என அனிமாவின் உணவுமுறை அமைந்துவிட்டது.

    கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளாக அவர் திட உணவு உட்கொள்ளவில்லை என்றபோதும், ஆரோக்கியமாகவே இருக்கிறார். முதலில் அந்த கிராமத்துக்காரர்களுக்கே இதுகுறித்து தெரியாமல் இருந்தது.

    தெரிந்தபிறகு அவர்கள் வியப்பும் திகைப்பும் அடைந்தனர். ஆனால் உரிய ஊட்டச்சத்துகள் கிடைத்தால் போதும்; திட உணவுதான் எடுக்கவேண்டும் என்பது அவசியம் இல்லை என்கிறார்கள், மருத்துவர்கள்.

    மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் நோயாளிகளுக்கு, திரவ வடிவில்தானே உடலுக்குத் தேவையான ஊட்டம் வழங்கப்படுகிறது. அவர்களுக்கு இதனால் எந்த பாதகமும் இல்லைதானே என விரிவான விளக்கத்தையும் மருத்துவர்கள் அளிக்கிறார்கள்.

    • வாலன்டின் திட்டமிட்டு ஒரு மணி நேரத்தில் நிமிடத்திற்கு 4 கப்க்கும் மேல் தேநீர் என மொத்தம் 250 தேநீர் தயாரித்தார்.
    • 2018-ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் உள்ள மலைக்கிராமம் காட்டுத்தீயால் அழித்த பிறகு, சுற்றுலாவை மேம்படுத்த சாதனை முயற்சி.

    தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த இங்கார் வாலன்டின் என்கிற பெண் ஒரு மணி நேரத்தில் 249 தேநீர் தயாரித்து உலக சாதனை படைத்துள்ளார்.

    இந்த சாதனையை அடைய ஒரு மணி நேரத்திற்குள் குறைந்தபட்சம் 150 கப் தேநீர் தயாரிக்க வேண்டும் என்பது இலக்காக இருந்தது.

    ஆனால் அவர் ரூயிபோஸ் வகை தேநீரில் அசல், வெண்ணிலா மற்றும் ஸ்டாபெரி என மூன்று வகைகளில் 249 கப் தேநீர் தயாரித்துள்ளார்.

    தென்னாப்பரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட தாவரமான அஸ்பலதஸ் லீனரிஸ் என்கிறத புதர் இலைகளிலிருந்து தயாரிக்கப்படும் சிவப்பு மூலிகை தேநீரை ரூயிபோஸ் என்று அழைக்கப்படுகிறது.

    சாதனை முயற்சியின்போது வாலன்டின் தெளிவான மனதை கொண்டு, விறுவிறுப்பாக ஒவ்வொரு டீ கோப்பையிலும் 4 தேநீர் பைகளை போட்டார். சரியான ரூயிபோஸ் தேநீராகத் தகுதிபெற ஒவ்வொரு தேநீர் பையும் குறைந்தது இரண்டு நிமிடங்களுக்கு நன்கு ஊற வேண்டும். முதல் மூன்று தேநீர் கோப்பைகளில் தேநீர் பைகளை நிறப்பிய பிறகு, அடுத்த கோப்பையை நிறப்பினார்.

    இப்படி வாலன்டின் திட்டமிட்டு ஒரு மணி நேரத்தில் நிமிடத்திற்கு 4 கப்க்கும் மேல் தேநீர் என மொத்தம் 250 தேநீர் தயாரித்தார். இதில் ஒரு கப் மட்டும் அளவில் பூர்த்தியாகாததால் நீக்கப்பட்டது.

    சாதனை முயற்சியின் ஒரு பகுதியாக, பள்ளி மாணவர்கள் மற்றும் உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்துக் கொண்டு தேநீரை அருந்தினர்.

    2018-ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் உள்ள மலைக்கிராமம் காட்டுத்தீயால் அழித்த பிறகு, சுற்றுலாவை மேம்படுத்தவும், வுப்பர்தல் சமூகத்தின் மீள்தன்மையைக் கொண்டாடும் விதமாகவும் இங்கார் வாலன்டின் உலக சாதனையில் முயற்சியில் ஈடுபட்டார். மேலும், இந்த சாதனையின் மூலம், தங்களின் வுப்பர்தல் சமூகம் குறித்து மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும் கூறினார்.

    • கடந்த கடந்த 2020-ம் ஆண்டு மீன்வளத்துறைக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது
    • சென்னை துறைமுக பராமரிப்பு பணிக்காக ரூ.98 கோடி செலவிடப்பட்டுள்ளது.

    ஊட்டி 

    மீன் பிடி, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள துறை மத்திய இணை மந்திரி சஞ்சீவ் பல்யான் நீலகிரி மாவட்ட பாரதீய ஜனதா செயல் வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்றார். இதை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறிய தாவது:-

    நான் தற்போது தான் முதல்முறையாக நீலகிரி மாவட்டத்திற்கு வந்துள்ளேன். கடந்த கடந்த 2020-ம் ஆண்டு மீன்வளத்துறைக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. அதில் ரூ.1,565 கோடி தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. சென்னை துறைமுக பராமரிப்பு பணிக்காக ரூ.98 கோடி செலவிடப்பட்டுள்ளது. இது முழுவதும் மத்திய அரசின் நிதி ஆகும்.

    இதேபோல் மத்திய அரசு நிதி மூலம் சென்னையில் கடல்வாழ் தாவரங்களுக்காக புதிய பூங்கா அமைக்கப்பட உள்ளது. கொரோனா காலகட்டத்தின் போது ஒரு லட்சத்து 75 ஆயிரம் மீனவர்களுக்கு ரூ.25 கோடி வழங்கப்பட்டுள்ளது.

    ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இந்தியாவில் உள்ள மிகப் பெரிய தொண்டு நிறுவனமாகும். மக்கள் நலனுக்காக ஆர்.எஸ்.எஸ். அமைப்பு உழைப்பதால், அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    படுகர் இன மக்களை எஸ்.டி. பிரிவில் மீண்டும் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி தேயிலை விலை குறைவாக இருப்பதால் பாதுகாப்பு துறை மூலம் தேயிலை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இதேபோல் நீலகிரி மாவட்டத்தில் செக்சன் பிரிவு பகுதியில் உள்ள 7000 ஆயிரம் வீடுகளுக்கு மின் இணைப்பு இல்லாமல் உள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு வீட்டிற்கும் மின் இணைப்பு, கழிப்பறை, கியாஸ் இணைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இருக்க வேண்டும் என பிரதமர் மோடி விரும்புகிறார். எனவே இந்த பிரச்சினைகளுக்கு சரியான தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.

    ஆ.ராசா எம்.பி.யின் பேச்சு எனக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாவட்ட பா.ஜ.க. தலைவர் மோகன்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிர்வாக ஆலோசனை கூட்டத்தில்மாவட்ட பொதுச்செயலாளர் ஈஸ்வரன், பரமேஸ்வரன், நளினி, குமார், மண்டல தலைவர் பிரவீன், மண்டல பொதுச்செயலாளர் சுரேஷ், கார்த்தி, ராஜேந்திரன், மற்றும் கதிர்வேல், பாலகுமார், முருகேசன், மாரிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    • 60 ஆயிரம் சிறு, குறு விவசாயிகள் தேயிலை விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • இளம் தண்டு மற்றும் கொழுந்துகளை கொப்புள நோய் தாக்குகிறது.

    அரவேணு

    நீலகிரி மாவட்ட மக்களின் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. சுமார் 60 ஆயிரம் சிறு, குறு விவசாயிகள் தேயிலை விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. அத்துடன் மேகமூட்டமான சீதோஷ்ண நிலை நிலவுவதால், தேயிலை செடிகளை கொப்புள நோய் தாக்கி வருகிறது.

    இதனால் இயல்பான வளர்ச்சி பாதிக்கப்பட்டு உள்ளது. போதிய சூரிய வெளிச்சம் இல்லாததாலும், இளம் தண்டு மற்றும் கொழுந்துகளை கொப்புள நோய் தாக்குகிறது. இதனால் 50 சதவீதம் வரை மகசூல் குறையும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

    ஏற்கனவே தேயிலையின் கொள்முதல் விலை வீழ்ச்சியடைந்து உள்ள நிலையில், தேயிலை செடிகளில் கொப்புள நோய் பாதிப்பும் ஏற்படுவதால் தேயிலை விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றனர்.

    இதுகுறித்து தேயிலை வாரிய அதிகாரிகள் கூறியதாவது:- தேயிலை செடிகளில் கொப்புள நோயை கட்டுப்படுத்த தேயிலை தோட்டங்களில் அதிக நிழல் தரும் மரங்கள் இருக்க வேண்டும். மேலும் அதன் கிளைகளை அகற்றி, தேயிலை செடிகள் மீது சூரிய வெளிச்சம் படுமாறு செய்ய வேண்டும்.

    செடிகளில் கொப்புள நோய் பாதிப்பது தெரியவந்தால், பாதிக்கப்பட்ட இலைகள் மற்றும் கொழுந்துகளை கவாத்து மூலம் அகற்றிவிட வேண்டும். எக்ஸோ கன்சோல் 200 மில்லி லிட்டர் மற்றும் காப்பர் ஆக்ஸி குளோரைடு 210 கிராம் ஆகியவற்றின் கலவையை 7 நாட்கள் இடைவெளி விட்டு தெளிப்பான் மூலம் தேயிலை செடிகளுக்கு தெளிக்க வேண்டும்.

    இதேபோல பிராப்பிகானாசோல் 125 மில்லி லிட்டர் மற்றும் காப்பர் ஆக்ஸிகுளோரைடு 210 கிராம் கலவையை தெளிப்பதன் மூலம் இந்த நோயை கட்டுப்படுத்த முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • சித்தோடு அருகே வயிற்று வலி குணமாகவில்லை என கூறி வாழ்க்கையில் வெறுப்படைந்த இளம்பெண் டீயில் எலி மருந்தை கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • இதுகுறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சித்தோடு:

    ஈரோடு மாவட்டம் சித்தோடு அடுத்த சக்தி மூவேந்தர் நகரை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி சோபனா (37). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். சரவணன் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் சோபனாவுக்கு வயிற்று வலி இருந்து வந்துள்ளது. இதற்காக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். எனினும் வயிற்றுவலி குணமாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த சோபனா தற்கொலை செய்ய முடிவு எடுத்து சம்பவத்தன்று டீயில் எலி மருந்தை கலந்து குடித்துள்ளார்.

    இதையடுத்து சோபனாவை அவரது உறவினர்கள் சிகிச்சைக்காக பவானி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். பின்னர் அவர் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார்.

    அதன் பிறகு அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சோபனா பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நாம் கடன் வாங்கி தேயிலை இறக்குமதி செய்வதை தவிர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
    • மின்சார செலவை மிச்சப்படுத்துவதற்காக இரவு 8.30 மணிக்கெல்லாம் சந்தைகளை மூட வேண்டும் என ஏற்கனவே அவர் தெரிவித்து இருந்தார்.

    இஸ்லாமாபாத்:

    அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்து வருவதால் பாகிஸ்தானில் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வீண் செலவுகளை குறைக்க அந்நாடு திட்டமிட்டு வருகிறது.

    குறிப்பாக இறக்குமதி மூலம் ஏற்படும் பொருளாதார இழப்பை அந்நாட்டு அரசு சரி செய்ய திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் பொருளாதார பாதிப்பில் இருந்து மீள பொதுமக்கள் டீக்குடிப்பதை குறைத்துக்கொள்ள வேண்டும் என அந்நாட்டு மந்திரி ஆஷான் இக்பால் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பாகிஸ்தான் உலகின் மிகப்பெரிய தேயிலை இறக்குமதி நாடுகளில் ஒன்றாக இருக்கிறது. கடந்த நிதியாண்டில் 8000 கோடி ரூபாய் இந்த தேயிலை இறக்குமதிக்காக செலவிடப்பட்டுள்ளது. இந்த தொகை நாம் கடன் வாங்கிய தொகையாகும். நாம் கடன் வாங்கி தேயிலை இறக்குமதி செய்வதை தவிர்க்க வேண்டும். இதற்கு பாகிஸ்தான் மக்கள் தினம் டீக்குடிப்பதை 1 அல்லது 2 கப் அளவில் குறைத்துகொள்ள வேண்டும்.

    இவ்வாறு இக்பால் தெரிவித்துள்ளார்.

    இக்பாலின் இந்த கருத்துக்கு மக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதேபோல் அவர், பாகிஸ்தான் வணிகர்கள் மின்சார செலவை மிச்சப்படுத்துவதற்காக இரவு 8.30 மணிக்கெல்லாம் சந்தைகளை மூட வேண்டும், அவ்வாறு செய்வது நாம் பெட்ரோல் இறக்குமதி செலவை குறைக்க உதவும் என ஏற்கெனவே கூறியிருந்தார்.

    பெருஞ்சீரகத்தில் உள்ள கால்சியம், மாங்கனீசு, மக்னீசியம், ஆன்டிஆக்ஸிடெண்டுகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, உடலில் கொழுப்பு படிவதைத் தடுக்கும்.
    உடல் எடைக் குறைப்பு முயற்சியில், உடற்பயிற்சிக்கு அடுத்தபடியாக இருப்பது தேநீர். அதிலும் சாதாரணத் தேநீரை விட மூலிகைத் தேநீர் அதிக பலன் கொடுக்கும். மன அழுத்தத்தை குறைத்து, தினசரி வாழ்வை சீராக்க உதவும், உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்கும்.

    உடல் எடையை சீராக்கும். உணவுப் பழக்கத்தில் மாற்றங்களை மேற்கொள்ளவும் உதவியாக இருக்கும்.

    இதில் பலரும் விரும்புவது கிரீன் டீ. குறைந்த நாட்களில் மிதமான எடைக் குறைப்புக்கு உதவும். தினமும் இரண்டு வேளை பருகலாம். இதில் உள்ள மூலக்கூறுகள் உடலின் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும். கொழுப்பைக் கரைக்கும். குடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, உடல் எடையைக் குறைக்க உதவும்.

    லெமன்கிராஸ், இஞ்சி, லவங்கப்பட்டை கலந்த டீயை பகல் வேளையில் குடிக்கலாம். இது உணவை எளிதில் செரிக்க உதவும். லெமன்கிராஸில் உள்ள வேதிப்பொருட்கள் மனச்சோர்வை நீக்கி, உற்சாகத்தை ஏற்படுத்தும். மேலும், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

    ஆவாரம் இலைகள், பெருஞ்சீரகம், இஞ்சி, லவங்கப்பட்டை, மிளகுக் கீரை மற்றும் பச்சை தேயிலை சாறு கலந்து மூலிகை தேநீர் குடிக்கலாம். பெருஞ்சீரகத்தில் உள்ள கால்சியம், மாங்கனீசு, மக்னீசியம், ஆன்டிஆக்ஸிடெண்டுகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் ஆகியவை பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சினையைச் சீராக்கும். இது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, உடலில் கொழுப்பு படிவதைத் தடுக்கும்.  

    செம்பருத்தி, லவங்கப்பட்டை, துளசி, இஞ்சி, கொத்தமல்லி விதைகள், மஞ்சள், சோம்பு, வெந்தயம், அன்னாசி பூ மற்றும் ஏலக்காய் போன்ற மசாலா பொருட்களைக் கலந்து தேநீர் தயாரித்துப் பருகலாம். சுவையும் மணமும் உள்ள இந்த தேநீர் ஆரோக்கியமான உடல் எடைக் குறைப்புக்கு உதவும்.

    செம்பருத்தியில் உள்ள வைட்டமின் சி ஊட்டச்சத்து, உடலின் திசு சிதைவை கட்டுப்படுத்தி புதிய திசுக்களின் வளர்ச்சிக்கு உதவும். இதில் உள்ள கொலாஜன் மற்றும் இரும்புச்சத்து உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, ரத்த அழுத்தத்தை சீராக்குவதற்கு உதவும். மேலும், உடலில் உள்ள நச்சுக்களை சிறுநீர் வழியே வெளியேற்றி, வெப்பத்தைக் குறைக்கும்.

    இது உடலில் உள்ள இன்சுலின் அளவைக் கட்டுப்படுத்தி, இயற்கையான முறையில் உடல் எடையைக் குறைக்க உதவும். குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
    கிரீன் டீ பருகியவுடன் அதிக உற்சாகத்தை பெற்றுவிட்டு, சில நிமிடங்களிலேயே சோர்வடைந்துவிட்டால் அதனை பருகுவதை தவிர்த்துவிட வேண்டும்.
    கிரீன் டீ மூலம் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் கிடைப்பதால் அனைத்து தரப்பினரும் அதனை பருகுவதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள். எனினும் குழந்தைகள் கிரீன் டீ பருகலாமா? என்ற கேள்வி எழாமல் இல்லை.

    ‘‘கிரீன் டீ இளம் வயதிலிருந்தே வலுவான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க உதவுகிறது. மற்ற பானங்களுடன் ஒப்பிடும்போது, இது ஆரோக்கியமானது. மேலும் நிறைய ஊட்டச்சத்து குணங்களை கொண்டுள்ளது. இருப்பினும் தேநீரில் உள்ள காபினின் செயல்பாட்டை பொறுத்தே குழந்தைகளை கிரீன் டீ பருக அனுமதிக்க வேண்டும்.

    குறிப்பாக கிரீன் டீ பருகியவுடன் அதிக உற்சாகத்தை பெற்றுவிட்டு, சில நிமிடங்களிலேயே சோர்வடைந்துவிட்டால் அதனை பருகுவதை தவிர்த்துவிட வேண்டும். மேலும் தூக்கமின்மை, கவனமின்மை, கவனச்சிதறல் போன்ற பிரச்சினைகளை எதிர்கொண்டால் கிரீன் டீயை குழந்தைகளுக்கு பருகக் கொடுக்கக்கூடாது. இத்தகைய பாதிப்புகள் ஏதும் இல்லாவிட்டால் சிறிதளவு பருகக்கொடுக்கலாம். எனினும் மருத்துவ ஆலோசனை பெற்று பருகுவதுதான் சிறந்தது’’ என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள்.

    கிரீன் டீயின் பொதுவான நன்மைகள்:

    வாய் ஆரோக்கியம்: கிரீன் டீ பல் சிதைவைத் தடுக்க உதவுகிறது. அதிலிருக்கும் கேடசின்கள், துர்நாற்றத்தை உருவாக்கும் பாக்டீரியா மற்றும் சல்பர் மூலக்கூறுகளுக்கு எதிராக செயல்பட்டு வாய் சுகாதாரத்தை பேண உதவும்.

    காய்ச்சல்: கிரீன் டீயில் ஆன்டிவைரல் போன்ற ஏஜெண்டுகள் உள்ளன. இவை காய்ச்சல் மற்றும் பிற நோய்களிலிருந்து பாதுகாக்கும். இருப்பினும் குழந்தைகள் ஒரு கப் போதுமானது.

    எலும்பு அடர்த்தி: கிரீன் டீ எலும்பு அடர்த்தியை மேம்படுத்த உதவும். கிரீன் டீயை தவறாமல் உட்கொள்வது எலும்பு அடர்த்தியை மேம்படுத்தவும், ஆஸ்டியோபோரோசிஸை தடுக்கவும் உதவும் என்பது ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.

    குழந்தைகளுக்கு கிரீன் டீ தரும் பக்கவிளைவுகள்:

    கிரீன் டீயில் காபின் மற்றும் சர்க்கரை இருப்பதால் தூக்க சுழற்சியை பாதிக்கும். மேலும் காபின் குழந்தையின் உடல் செயல்பாடுகளையும் பாதிக்கலாம். ரத்தத்தில் போதுமான இரும்புச்சத்து இல்லாதபோது ரத்த சோகை ஏற்படுகிறது. கிரீன் டீயில் டானின் உள்ளது. இது இரும்புச்சத்து நிறைந்த மூலங்களிலிருந்து இரும்பை உறிஞ்சும். அதனால் உடலின் சக்தியை குறைக்கும். குழந்தைகளின் உடலில் இருந்து இரும்பு அதிகம் உறிஞ்சப்படும்போது பாதிப்பு அதிகரிக்கும். அதனால் கிரீன் டீயை அதிகம் பருகுவது நல்லதல்ல. குழந்தைகள் வெறும் வயிற்றிலோ அல்லது ஒரு நாளைக்கு 400 மில்லி கிராமுக்கு அதிகமாகவோ கிரீன் டீ பருகுவது வாந்திக்கு வழிவகுக்கும். பாலிபினால்கள் எனப்படும் டானின்கள் வயிற்றில் அமிலம் அதிகரிக்க வழிவகுக்கும். அதன் காரணமாக வயிற்று வலி, குமட்டல், எரிச்சல் உணர்வு மற்றும் மலச்சிக்கலை ஏற்படுத்தக்கூடும்.
    டீ, இந்தியாவை எட்டிப்பார்ப்பதற்கு முன்னால் இங்கு சூடான கிராமிய காபி வகைகள் பருகப்பட்டு வந்தன. அவை கருப்பட்டி அல்லது வெல்லத்தில் தயார் செய்யப்பட்டது.
    காபி, தேநீர் இரண்டும் உலக அளவில் எல்லோரும் விரும்பும் பானங்கள். ஆனால் இவை இரண்டின் ருசியும் உலக நாடுகள் அனைத்திலும் ஒரே மாதிரி இருப்பதில்லை. ‘தினமும் நான் ஏழெட்டு டீ குடிப்பேன். டீ குடிக்கவில்லை என்றால் எனது தலையே வெடித்துப்போய்விடும்’ என்று சொல்கிற இந்திய டீ பிரியர்கள் கனடாவுக்கோ, ஆஸ்திரேலியாவுக்கோ போகும்போது அங்கு கிடைக்கும் டீயை ஆசையோடு ஒரு மிடறு குடித்துவிட்டு, ‘கலரைப் பார்த்து மயங்கிட்டேன். இப்படி ஒரு டீயை குடித்தால் என் நாக்கே செத்துப்போயிடும்’ என்று முகத்தை சுளித்தபடி சொல்லிவிட்டு, அந்த நாட்டு பயணம் முடியும்வரை ‘டீ’ என்று சொன்னாலே ‘ஆளை விட்டுருங்கப்பா..!’ என்று, இடத்தை காலிசெய்துவிடுவார்கள்.

    ஆக உலக நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறவர்கள் எளிதாக இந்த உண்மையை புரிந்துகொள்வார்கள். எல்லா நாடுகளிலும் ஆண்களும், பெண்களும் ஒரே மாதிரி இருந்தாலும் அவர்களது மொழி, இயல்பு, கலாசாரங்களில் நாட்டுக்கு நாடு வேறுபாடு இருக்கத்தான் செய்யும். அதுபோல் உலகம் முழுக்க காபி, டீ என்ற பொதுப்பெயரில் சூடான பானங்கள் அழைக்கப்பட்டாலும், நாட்டுக்கு நாடு அதன் சுவைகளில் வித்தியாசங்கள் இருக்கத்தான் செய்யும். எல்லா நாடுகளிலும் தயாரிக்கப்படும் டீ வகைகளும் எல்லோருக்கும் பிடிக்கும் என்று கூறுவதற்கில்லை.

    சுவையின் அடிப்படையில் டீயில் 100-க்கும் மேற்பட்ட வகைகள் இருக்கின்றன. டீ டேஸ்ட்டர்கள், அந்தந்த நாட்டு மக்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு டீ யில் சுவையூட்டி வழங்குகிறார்கள். ஊருக்கு தக்கபடி, ஆளுக்கு தக்கபடி, நிகழ்ச்சி களுக்கு தக்கபடி, இப்படி நிறைய மாற்றங்களை சந்தித்து வந்திருக்கும் பானம், டீ என்றால் அது மிகையில்லை. அதனால் சில ஊர்களில் தயாரிக்கப்படும் டீ, அந்த நாட்டு மக்களே விரும்பும் ருசியாக மாறி விடுவதுண்டு. அப்படிப்பட்ட ஒன்று, ‘சுலைமானி’. இது கேரளாவில் மலபார் பகுதி மக்கள் விரும்பி பருகும் பானம். தென்னிந்தியாவிலும் இது பிரபலமாகியுள்ளது.

    தனித் தேநீரான கட்டன் டீயில் எலுமிச்சை சாறு கலந்த சூடான பானத்திற்கு சுலைமானி என்று பெயர். தேவைப்படும்போது இதில் இஞ்சிச்சாறும் சேர்க்கப்படுகிறது. இதன் சரித்திரம் என்னவென்று தெள்ளத்தெளிவாக தெரியவில்லை. ஆனால் சாலமன் மன்னரின் சபையில் இது பரிமாறப்பட்டதால், சாலமானி என்று அழைக்கப்பட்டு, பின்பு சுலைமானி என்று மருவி இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. முதலில் இந்த பானம் மத சம்பிரதாயங்களோடு தொடர்புடையதாக இருந்திருக்கிறது. பின்பு பொதுமக்களுக்கானதாக மாறி கல்யாணம், விருந்து, விழாக்களில் மக்கள் விரும்பி பருகும் பானமாக மவுசு பெற்றுள்ளது.

    தற்போது மக்கள் பல்வேறு விதவிதமாக டீயை பருகிவருகிறார்கள். ஆனால், டீ அறிமுகமாவதற்கு முன்பு மக்கள் இதமான ருசிக்காக வேறு எந்த பானத்தை பருகினார்கள்?

    டீ, இந்தியாவை எட்டிப்பார்ப்பதற்கு முன்னால் இங்கு சூடான கிராமிய காபி வகைகள் பருகப்பட்டு வந்தன. அவை கருப்பட்டி அல்லது வெல்லத்தில் தயார் செய்யப்பட்டது. அவைகளில் சுக்கு, மல்லி, மிளகு போன்றவைகளை கலந்து, ‘சுக்கு காபி’, ‘மல்லி காபி’ என்ற பெயர்களில் அழைத்தார்கள். அவைகள் உடலுக்கு உற்சாகத்தையும், ஆரோக்கியத்தையும் கொடுத்தன.

    இந்திய கிராம மக்கள் இந்த வகை காபிகளுக்கு அடிமையாகிப்போயிருந்த காலகட்டத்தில்தான், இந்தியாவை அடிமைப்படுத்த ஆங்கிலேயர்கள் இங்கே வந்தார்கள். 19-ம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் இருந்து வருகை தந்த டாக்டர் கிறிஸ்டி, நீலகிரியின் குளிருக்கு தனது மனதை பறிகொடுத்தார். அந்த இதமான குளிருக்கு சூடாக ஒரு கப் டீ பருகினால் நன்றாக இருக்குமே என்று, அவர் மூளையில் மின்னலாக எழுந்த ஆசைதான் நீலகிரியில் தேயிலை செடியின் அறிமுகத்திற்கு வித்திட்டது. அவர் 1832-ல் நீலகிரியில் தேயிலை செடியை நட்டார். பின்னர் அது மூணாறு மலை உச்சிகளில் எல்லாம் கிளைபரப்பி பரந்து விரியத் தொடங்கியது.

    தேயிலை பயிர் வெற்றிகரமாக வளர்ந்தது. பறிக்கப்பட்ட தேயிலை எல்லாம் பதப்படுத்தப்பட்டது. ஆனால் அதை ஆங்கிலேயர்கள் மட்டும் பயன்படுத்தினால் போதாதே. விளைந்த தேயிலையை எல்லாம் மக்களிடம் கொண்டுபோய் சேர்த்து அவர்களை பயன்படுத்த வைக்கவேண்டும் அல்லவா!

    ஆனால் தொடக்கத்தில் மக்கள் தேயிலையை திரும்பிகூட பார்க்கவில்லை. அவர்கள் மல்லி காபியிலும், சுக்கு காபியிலுமே மதிமயங்கி நின்றார்கள். அத்தகைய காபி விரும்பிகளை, தேயிலை விரும்பிகளாக எப்படி மாற்றினார்கள் தெரியுமா?

    இன்று புதிதாக அறிமுகமாகிற பொருட்களை, அதனை தயாரிக்கும் நிறுவனங்கள் முதலில் ‘சாம்பிள் பாக்கெட்’களாக இலவசமாக கொடுத்து மக்களை பயன்படுத்தச்செய்து தன்வசப்படுத்தும். பின்பு தொடர்ந்து அந்த பொருளை மக்கள் வாங்கும்படி தூண்டும். இது மார்க்கெட்டை பிடிக்க பலரும் செய்யும் வியாபார தந்திரம்.

    இந்த வியாபார தந்திரத்திற்கு முன்னோடியே ஆங்கிலேயர்கள்தான். அவர்கள் தேயிலை மூலம்தான் இந்த இலவச அறிமுக திட்டத்தை அமல் படுத்தினார்கள். அவர்கள் தனித்தனி குழுக்களாக பிரிந்து, பொதுமக்கள் கூடும் இடங்களில் அவர்களை சந்தித்து, டீயை தொடக்ககாலத்தில் இலவசமாக வழங்கினார்கள். தேனீராக அவர்கள் தயார் செய்து மக்களுக்கு வழங்கி, அதை மீண்டும் மீண்டும் சுவைக்கத் தூண்டினார்கள். ஆனாலும் இந்த திட்டம் எளிதாக வெற்றியடையவில்லை.

    இலவசமாக கிடைத்தபோது ஆர்வமாக பருகிய மக்கள் பின்பு தாமதமாக கொஞ்சம் கொஞ்சமாகத்தான் காசு கொடுத்து வாங்கி அதனை பயன்படுத்த முன்வந்தார்கள். அதுவரை இந்திய சமையல் அறை அடுப்புகளில் நீங்காத இடம் பிடித்திருந்த சுக்கு காபி தயாரிக்கும் பாத்திரங்கள் கீழ் இறக்கப்பட்டன. தேயிலை தயார் செய்யும் கைப்பிடி கொண்ட பாத்திரங்கள் அடுப்புகளில் அழகாக அமரத் தொடங்கின.

    ‘கறுப்புதான் எனக்கு பிடிச்ச கலரு’ என்று கருப்பட்டி காபியின் புகழ் பாடிக்கொண்டிருந்தவர்களும், கண்ணைக்கவரும் விதத்திலான டீயை விரும்பத் தொடங்கினார்கள். குறிப்பிட்ட அந்த காலகட்டத்தில் தினமும் டீ பருகுகிறவர்கள் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து கொண்டவர்கள் என்ற எண்ணமும் உருவாக்கப்பட்டது. ‘அதனால் நாங்களும் மாறிட்டோம்ல..’ என்று போட்டிபோட்டுக்கொண்டு பலர் டீயின் பக்கம் சாய்ந்தார்கள். தங்களுக்கு பிடித்தமானவர்களை அழைத்து டீ பார்ட்டி நடத்தி, தங்கள் சமூக அந்தஸ்தையும் உயர்த்தினார்கள். இப்படித்தான் டீ குடிக்கும் பழக்கம் இந்தியாவில் வளர்ந்தது.

    இப்படி மக்கள் டீயை அதிகமாக பயன்படுத்த தொடங்கிய பின்பு அதில் தங்களுக்கு பிடித்தமான பொருட்களை சேர்த்து ருசி மாற்றங்களை உருவாக்கினார்கள். அதில் சிறந்ததாகி, கிட்டதட்ட இருநூற்றாண்டுகள் பழமைவாய்ந்ததாக இருப்பதுதான் சுலைமானி. இதனை பெரும்பாலும் பிரியாணி சாப்பிட்ட பின்பு மக்கள் பருகும் வழக்கம் உள்ளது.

    இதில் கட்டன் டீ, எலுமிச்சை சாறு, இஞ்சி சாறு போன்றவை சேர்க்கப்படுவதால் ஜீரணத்திற்கு துணைபுரிகிறது. உடல் சீராக இயங்கவும், வயிற்றுப்புண்கள் குணமாகவும் உதவுகிறது. தேனீரிலும், எலுமிச்சை சாறிலும் உடல் எடையை குறைக்கும் சக்தி இருக்கிறது. நோய் எதிர்ப்புசக்தியும் இதில் உள்ளது. அதனாலும் மக்கள் சுலைமானியை விரும்பி பருகுகிறார்கள். சாதாரண டீயை அதிகம் பருகுவது நல்லதல்ல. ஆனால் இதனை அடிக்கடி பருகலாம். இதில் சிறிதளவே சர்க்கரை சேர்க்கவேண்டும்.

    இந்த சுலைமானிபோல் வட இந்தியாவிலும் வித்தியாசமான ருசிகளில் டீயை தயார்செய்து ருசிக்கிறார்கள். அதுபோல் உலகில் பல இடங்களிலும் டீயை வித்தியாசமான சுவைகளில் தயாரிக் கிறார்கள். அதற்கு வித்தியாசமான பெயர்களும் சூட்டியிருக்கிறார்கள். நீங்கள் எந்த நாட்டிற்கு சென்றாலும் அங்கு, அந்த நாட்டு பாரம்பரியப்படி தயார் செய்யப்படும் டீயை பருக மறந்துவிடாதீர்கள். ஏன்என்றால் அது உங்களுக்கு மறக்க முடியாத சுவையை தந்து, அந்த நாடு எப்போதும் உங்கள் நினைவில் நிற்க துணைபுரியும்.

    வெளிநாடுகளுக்கு செல்லும்போது அங்கே உள்ள விசேஷமான உணவுகளை பற்றி முதலிலே இன்டர்நெட் மூலம் தெரிந்து கொண்டு, அவைகளில் பிடித்தமானவற்றை சாப்பிட முயற்சி செய்யுங்கள். ஏன்என்றால் வெளிநாட்டு பயண அனுபவம் என்பது அந்தநாட்டு உணவுகளை ருசிப்பதையும் உள்ளடக்கியதுதான்! அதனால் எல்லாநாட்டு ருசி அனுபவங்களையும் பெறுங்கள்.

    - முனைவர் ஜெ.தேவதாஸ்,

    (உணவியல் எழுத்தாளர்) சென்னை.
    ×