search icon
என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    • குழந்தையை தூங்க வைப்பதற்கு தலாலாட்டு பாடல்கள் பாடினார்கள்.
    • தூங்க வைப்பதற்கு டிஸ்ஸு பேப்பரை பயன்படுத்தலாம்.

    பொதுவாக தாய்மார்கள் கஸ்டப்படுகின்ற விஷயம் என்னவென்றால் குழந்தையை தூங்க வைப்பது தான். நம் தாத்தா, பாட்டி எல்லாம் குழந்தையை தூங்க வைப்பதற்கு தலாலாட்டு பாடல்கள் பாடினார்கள். இதனை கேட்டவுடன் பிள்ளைகள் தூங்கிவிடும். ஆனால் இன்றைய காலகட்டத்தில் மொபைல் போனில் பாட்டை போட்டு குழந்தைகளை தூங்க வைக்கிறார்கள். இதனால் குழந்தைகள் அழுதுகொண்டே இருக்கின்றது. நாம் இந்த பதிவில் குழந்தைகளை எப்படி தூங்க வைப்பது என்பதைப்பற்றி தெரிந்துகொள்ளலாம்.

    குழந்தையை சீக்கிரம் தூங்க வைப்பதற்கு டிஸ்ஸு பேப்பரை பயன்படுத்தலாம். இதனை முகத்தில் தடவ வேண்டும். அதன்பிறகு டிஸ்ஸுவை கண்களில் முன் எடுத்துவந்து கண்களை சிமிட்டுவது போல செய்ய வேண்டும். இதுபோல செய்வதால் குழந்தைகள் சீக்கிரம் தூங்கிவிடும்.

    குழந்தைகள் நீரின் சத்தத்திற்கு அமைதியாகிவிடும். அதனால் குழாய்க்கு பக்கத்தில் நிற்க வேண்டும் என்று இல்லை. தண்ணீன் சத்தத்தை மொபைல் போனில் பிளே செய்யலாம். இதனால் குழந்தைகள் இதை கேட்டவுடன் சீக்கிரம் தூங்கிவிடும்.

    அதன்பிறகு அறையின் விளைக்கை அனைத்துவிட்டு குழந்தைகளை தூங்க வைக்க வேண்டும். வெளிச்சம் சிறிதளவு இருந்தால் மட்டும் போதும்.

    குழந்தைகளின் தலையை தடவி கொடுக்க வேண்டும். நெற்றியிலும் முதுகிலும் தடவி கொடுக்கலாம். இதன்மூலம் குழந்தைகள் அமைதியாகுவது மட்டுமில்லாமல் தூக்கத்தையும் வர வைக்க உதவுகிறது.

    தொட்டிலில் போட்டு குழந்தையை தூங்கவைக்க வேண்டும். அவ்வாறு தூங்க வைக்கும்போது இருபுறமும் துணி வைக்க வேண்டும். அதன் நடுவில் குழந்தையை போட்டு அணைத்தப்படி போட வேண்டும்.

    • தலைக்கு அதிகமாக குளிக்க வைக்கக் கூடாது.
    • மூன்று நாட்கள் வரை தலைக்குக் குளிக்க வைக்க வேண்டும்.

    பொதுவாக குழந்தைகளை தினமும் குளிக்க வைக்க வேண்டும். ஆனால் தலைக்கு அதிகமாக குளிக்க வைக்கக் கூடாது. குழந்தைகளை அதிக நேரம் குளிக்க வைத்தால் நன்றாக தூக்கம் வரும் எனப் பலரும் சொல்லுவார்கள் அது தவறு. இது போன்று தவறுகள் மீண்டும் செய்யாமல் இருப்பதற்கும், குழந்தைகளை எத்தனை நாட்களுக்கு ஒரு முறை தலைக்குக் குளிக்க வைக்க வேண்டும் என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

    தற்போது மழை மற்றும் குளிர்வாட்டி வருகிறது. எனவே குழந்தைகளை குளிக்க வைப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று. அதுவும் குழந்தைகளின் சருமம் தாங்கும் அளவிற்குத் தான் சூடான நீரில் குளிப்பாட்டவேண்டும்.

    * பச்சிளம் குழந்தை என்றால் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் வரை தலைக்குக் குளிக்க வைக்க வேண்டும். பச்சிளம் குழந்தை என்றால் முதலில் அந்த தண்ணீரை நம் கைகள் வைத்து வெதுவெதுப்பாக உள்ளதா எனப் பார்க்க வேண்டும். அதற்குப் பிறகு தான், குழந்தைகளின் காலில் ஊற்றி அதற்குச் சரியாக இருந்தால் மட்டும் குளிக்க வைக்க வேண்டும்.

    * ஆறு மாத குழந்தை என்றால் அந்த குழந்தையை வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு நாட்கள் தலைக்கு குளிக்க வைக்கலாம். ஆனால் சூடான நீராக இருந்தால் முதலில் நம்மால் தாங்க முடியும் என்றால் மட்டும் குழந்தைகளுக்குக் குளிக்க வைக்க வேண்டும். வெதுவெதுப்பான நீர் அல்லது குளிர்ந்த நீரில் குளிக்க வைக்கலாம்.

    * பச்சிளம் குழந்தை மற்றும் ஆறுமாதம், ஒரு வருடக் குழந்தையாக இருந்தாலும் அதிக நேரம் குளிக்க வைத்தால் தூக்கம் நன்றாக வரும் மற்றும் உடலுக்கு நல்லது எனச் சொன்னால் அது சரியில்லை. எந்த குழந்தையாக இருந்தாலும் 5-ல் இருந்து 7 நிமிடங்களுக்குள் குளிக்க வைக்க வேண்டும்.

    * கோடைக்காலத்தில் ஆறு மாதங்கள் ஆன குழந்தையாக இருந்தால் மிகவும் குளிர்ந்த நீர் பயன்படுத்தக் கூடாது. சாதாரண வெப்பநிலையில் உள்ள குளிர்ந்த நீரைப் பயன்படுத்தலாம்.

    * குளிர்காலத்தில் குளிர்ந்த நீர் பயன்படுத்தக் கூடாது. வெதுவெதுப்பான நீர் பயன்படுத்தி குழந்தைகளுக்கு பயன்படுத்து சோப்பு மற்றும் ஷாம்பு அல்லது வீட்டில் உள்ள கடலைமாவும் பயன்படுத்தி குளிக்க வைக்கலாம்.

    * ஆறுமாதம் ஆன குழந்தை என்றால் கைகள் மற்றும் கால்களை நன்றாக தேய்த்து குளிக்க வைக்க வேண்டும். குழந்தைகளின் தலைக்கு எனக் கடைகளில் விற்கும் ஷாம்பு அல்லது வீட்டில் தயாரிக்கும் ஷாம்பு கூட பயன்படுத்தலாம்.

    * குழந்தைகளின் தலைக்குக் குளிக்க வைக்கும் போது முகத்தில் தண்ணீர் வராமல் இருக்கக் கண்களுக்கு மேல் உள்ள இடத்தில் கைகள் வைத்துக் குளிக்க வைக்க வேண்டும்.

    * தலைக்குக் குளிக்க வைத்த பிறகு, உடலுக்குக் குளிக்க வைக்க வேண்டும். சளிப்பிடித்து இருந்தால் அதிகமாக தலைக்கு குளிக்கவைக்க கூடாது. வெதுவெதுப்பான நீரில் மட்டும் குளிக்க வைக்க வேண்டும். காய்ச்சல் இருந்தால் தலைக்கு குளிக்க வைப்பதை தவிர்க்க வேண்டும்.

    • குழந்தைகளுக்கு மிக எளிதாக உடல்நல பாதிப்பு ஏற்படும்.
    • குளிர்காலத்தின் பொதுவான நோய் என்றால் அது ஜலதோஷம் தான்.

    பொதுவாக குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு மிக எளிதாக உடல்நல பாதிப்பு ஏற்படும். குறிப்பாக குளிர்காலத்தில் வரக்கூடிய தொண்டை வலி, சளிப்பிடித்தல், காய்ச்சல், நிமோனியா, காது வலி, ஆஸ்துமா மற்றும் தோல் நோய்கள் போன்றவற்றால் குழந்தைகள் எளிதில் பாதிக்கப்படுவா்.

    மழை, பனிபொழிவு ஆகியவற்றால் குளிர்காலம் ஒரு மாயாஜால பருவமாக தென்படலாம். ஆனால் இது பல்வேறு விதமான நோய்கள் தலைதூக்கி குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய காலமாகும்.

    குளிர்கால தொற்றுகள்

    குளிர்காலத்தில் சமூக பரவல் காரணமாக குழந்தைகளுக்கு தொற்று ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி ஒவ்வாமை, மோசமான காற்றின் தரத்தால் மூக்கடைப்பு, ஆஸ்துமா போன்ற பிரச்சினைகளுக்கும் ஆளாகின்றனர். குளிர்காலத்தில் வேறு சில நோய்களும் குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். காய்ச்சல், தலைவலி மற்றும் உடல்வலி, தொண்டை வலி, சோர்வு, வலுக்குறைவு, தசைவலி, இருமல் ஆகியவை குளிகாலத்தில் ஏற்படும் நோய்கள் ஆகும்.

    ஜலதோஷம்

    குளிர்காலத்தின் பொதுவான நோய் என்றால் அது ஜலதோஷம் தான். குளிர்காலத்தில் ஒரு முறையாவது அனைவருக்கும் ஜலதோஷம் வந்துவிடும். இதனை பருவமாற்றத்தின் அறிகுறியாக கருதினாலும், ஜலதோஷம் இறுதியாக நிமோனியா மற்றும் சைனஸ் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

    சுவாசக்குழாய் தொற்று

    குளிர்காலத்தில் வறண்ட காற்றின் காரணமாக மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் நிமோனியா போன்ற சுவாசக்குழாய் தொற்றுகள் அதிகமாக ஏற்படும். மிகக் குளிர்ந்த வெப்பநிலையால் வெளிப்படும் நிமோனியாவால் லேசானது முதல் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே நிமோனியாவிற்கு சிகிச்சை அளிப்பதை விட வருமுன் காப்பதே சிறந்ததாகும். குளிர்காலத்தில் மூச்சுக்குழாய் அழற்சியானது , குழந்தைகள் மற்றும் ஆஸ்துமா நோயாளிகளுக்கு மிக அபாயமானதாகும். சின்சிடியல் வைரசால் தூண்டப்படும் சுவாசத் தொற்றே மூச்சுக்குழாய் அழற்சி என்றழைக்கப்படுகிறது.

    நோரோ வைரஸ்

    இந்த வைரஸ் இரைப்பை குடல் அழற்சிக்கு வழிவகுக்கும். வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவை நோரோவைரசின் அறிகுறிகள் என்று தேசிய சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உணவு உண்பதற்கு முன்பும், கழிவறையை பயன்படுத்திய பிறகும் கைகளை நன்றாக கழுவவும். சுகாதாரமான உணவை மட்டும் சாப்பிடுங்கள்.

    • குழந்தைகள் செய்யும் சேட்டைகளை அறியாமலேயே ரசித்துக் கொண்டு இருப்போம்.
    • குடும்ப உறவுகளுக்கு இடையே உள்ள பிணைப்பு வலுப்படும்.

    குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவது நம்முடைய உளவியல், நல்வாழ்வு மற்றும் தனிப்பட்ட வளர்ச்சியில் ஆழமான, நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என பல்வேறு உளவியல் ஆராய்ச்சிகளின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

    குழந்தைகள் செய்யும் சேட்டைகள், குறும்புத்தனம், சிரிப்பு, அழுகை என அவர்களின் செயல்பாடுகள் அனைத்தையும் நம்மை அறியாமலேயே ரசித்துக் கொண்டு இருப்போம். இந்த ரசனையே நமக்குள்ளும், நம்மைச் சுற்றியும் நேர்மறையான எண்ணங்களை தோற்றுவிக்கும். இது புதிதாக ஒரு இடத்திற்கு மேற்கொள்ளும் பயணத்தின்போது நமக்கு கிடைக்கும் அனுபவத்துக்கு இணையாக இருக்கும்.

    குழந்தைகளுடன் நேரத்தை செலவிடும்போது குடும்ப உறவுகளுக்கு இடையே உள்ள பிணைப்பு வலுப்படும். இது நீடித்த இனிமையான நினைவுகளை உருவாக்கும்.

    * பொறுமை, நன்றி உணர்வு, மகிழ்ச்சி என குழந்தைகளுடன் நேரத்தை செலவிடும்போது நமக்குள் பல நேர்மறையான மாற்றங்கள் ஏற்படும்.

    * குழந்தைகளுடன் விளையாடும்போது நம்முடைய பொறுப்புகளையும், கவலைகளையும் பற்றி சிந்திப்பதை தற்காலிகமாக ஒதுக்கி வைப்போம். இதன் மூலம் மன அழுத்தம் குறையும்.

    * குழந்தைகளிடம் பழகுவதற்கு பொறுமை அவசியமானது. தொடர்ந்து அவர்களிடம் பழகும்போது. காலப்போக்கில் நமக்குள் பொறுமை மற்றும் சகிப்புத் தன்மை தானாகவே உருவாகி விடும்.

    * குழந்தைகளின் உலகம் பெரும்பாலும் கற்பனை விளையாட்டு அல்லது புதிய படைப்புகளையே உள்ளடக்கி இருக்கும். அவர்களுடன் பழகுவது உங்களின் படைப்பாற்றல் மற்றும் கற்பனைத் திறனை மேம்படுத்திக் கொள்ள வழிவகுக்கும்.

    * குழந்தைகளுடன் தொடர்புகொள்வது, நம் முடைய தகவல்தொடர்பு திறன்களை மேம்படுத்தும். அதன்மூலம் மற்றவர்கள் கூறுவதை சரியாக புரிந்து கொள்ளவும், உங்களுடைய கருத்துக்களை மற்றவர்களுக்கு தெளிவாக விளக்கவும். மற்றவர்கள் பேசுவதை கவனமாக கேட்கவும் முடியும்.

    * குழந்தைகளுடன் பழகி அவர்களின் உணர்ச்சிகள் மற்றும் தேவைகளை புரிந்துகொள்வது, உங்களுடைய இரக்க குணத்தை மேம்படுத்தும்.

    * படம் வரைவது. இசைக்கருவிகளை வாசிப்பது. விளையாடுவது என குழந்தைகளுடன் பலவிதமான செயல்பாடுகளில் ஈடுபடலாம். இது நமக்கான புதிய பொழுதுபோக்கை கண்டறியவும், நம்முடைய பழைய திறன்களையும், ஆர்வத்தையும் புதுப்பிக்கவும் உதவும்.

    * குழந்தைகளுக்கான தேவைகள் மற்றும் அவர் கள் எதிர்கொள்ளும் சவால்களை கையாள்வதன் மூலம். நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படும் சிக்கலை தீர்க்கும் திறனை மேம்படுத்த முடியும். எந்த ஒரு சூழ்நிலையிலும் மாற்றி யோசித்து தீர்வு காணும் திறன் உருவாகும்.

    * வாழ்வில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று குழந்தைகளுக்கு நாம் வழிகாட்டுவதன் மூலம். நம்முடைய தலைமைத் திறனை மேம்படுத்திக்கொள்ள முடியும்.

    * தற்போதைய தொழில்நுட்பக் கருவிகளை கையாள்வதில் பெரும்பாலான குழந்தைகள் பெரியவர்களை விட சிறந்து விளங்குகிறார்கள். அவர்களுடன் நேரத்தை செலவிடுவதன் மூலம், பல புதிய விஷயங்களை அறிந்துகொள்ள முடியும்.

    * குழந்தைகள் இந்த உலகை புதிய கண்ணோட்டத்துடன் பார்ப்பார்கள். அவர்களுடன் பழகும்போது நமக்கும் அனைத்து விஷயங்களையும் வேறுபட்ட கண்ணோட்டத்தில் அணுகக்கூடிய திறன் உண்டாகும்

    • பெண் குழந்தை இருந்தால் தந்தையின் ஆயுட்காலம் 74 வாரங்கள் அதிகரிக்கும்.
    • பெண் குழந்தைகளுக்கும், தந்தைக்கும் இடையேயான பந்தம் உணர்வுப்பூர்வமானது.

    பெண் குழந்தைகளுக்கும், தந்தைக்கும் இடையேயான பந்தம் உணர்வுப்பூர்வமானது. தந்தை மீது எப்போதுமே பெண் குழந்தைகள் அதிக பாசத்தை காண்பிப்பார்கள். பெண் குழந்தைகள் தந்தையின் ஆயுள் அதிகரிப்பதற்கு காரணமாக இருக்கிறார்கள் என்பது போலந்தில் உள்ள ஜெகில்லோனியன் பல்கலைக்கழகம் சமீபத்தில் நடத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

    ஒரு வீட்டில் ஒரு பெண் குழந்தை இருந்தால் தந்தையின் ஆயுட்காலத்தில் சுமார் 74 வாரங்கள் அதிகரிக்கும். பெண் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு ஏற்ப அந்த வீட்டு தந்தையின் ஆயுளும் அதிகமாகும் என்கிறது, அந்த ஆய்வு.

    இதற்கு எதிர்மாறாக தாயின் ஆயுட்காலம் அமைந்திருக்கிறது. ஒரு வீட்டில் மகன் அல்லது மகள், அல்லது இருவரும் இருந்தால் தாயின் ஆரோக்கியத்தை பாதிக்கச் செய்கிறார்கள். அவரது ஆயுளையும் குறைக்கிறார்கள். சராசரியாக தாயின் ஆயுட்காலம் 95 வாரங்கள் குறையும் என்கிறது அந்த ஆய்வு.

    • உங்கள் குழந்தைக்கு டயப்பர் மூலம் எரிச்சலோ/ அசௌகரியமோ ஏற்பட்டால், உடனடியாக உங்கள் குழந்தை மருத்துவரை அணுகவும்.
    • குழந்தை இருக்கும் அறை வெப்பநிலைக்கு ஏற்ப உடை உடுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

    தாய்மை என்பது ஒரு அற்புதமான உணர்வு. ஒரு குழந்தை வளரும் போது, அந்த வளர்ச்சி ஆரோக்கியமாகவும், சிறந்ததாகவும் அமைய பெற்றோருக்கு முயற்சிகளை மேற்கொள்வதில் பெரும் பங்கு உண்டு. அந்த முயற்சியின் போது வீடுகளை தயார்படுத்துவது முதல் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்வது வரை தங்கள் குழந்தையை மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும், அன்பாகவும் வைத்திருக்க பெற்றோர்கள் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறார்கள்.

    பல பெற்றோர்கள், குறிப்பாக முதல் முறையாக தாய்மை அடைபவர்களுக்கு இந்த பதிவு வழிகாட்டுதலாக இருக்கும். பெற்றோர் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தையைப் பராமரிப்பதில் ஏற்படும் சவால்கள் மற்றும் அதை கையாள பெற்றோருக்கு உதவும் நோக்கில் சென்னையில் உள்ள பார்வதி மருத்துவமனையின் சிறந்த குழந்தை நல மருத்துவர் டாக்டர். அஞ்சனா எஸ்.ஆர். கிருஷ்ணன் கூறியதாவது:

    பிறந்த குழந்தை பராமரிப்புக்கான 7 நிபுணர் குறிப்புகள்:

    குழந்தையை கையில் தூக்கும் போது: பெற்றோர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முதல் விஷயம், தங்கள் குழந்தையை எப்படிப் பிடிக்க வேண்டும் என்பதுதான். குழந்தைகள் மொத்த உடல் நீளத்தில் கிட்டத்தட்ட நான்கில் ஒரு பங்கு தலையுடன் பிறக்கின்றன. இதன் விளைவாக, அவர்களின் ஈர்ப்பு மையம், வயது, உடல் வடிவம் மற்றும் உட்காரும் தோரணைக்கு ஏற்ப மாறுகிறது.

    எனவே, புதிதாகப் பிறந்த குழந்தையைத் தூக்கிச் செல்லும்போது, தலை மற்றும் கழுத்தைத் தாங்கிப்பிடிக்க மறக்காதீர்கள். வேடிக்கைக்காக கூட கை, கால் மற்றும் இதர உடல் உறுப்புகளை அசைப்பது அல்லது ஜிக்கிங் செய்யாதீர்கள். இது உங்கள் முதல் குழந்தையாக இருந்தாலும் அல்லது ஐந்தாவது குழந்தையாக இருந்தாலும் சரி, பிரசவத்திற்குப் பிறகு புதிதாகப் பிறந்த குழந்தையை கையாளும் போது பார்த்து கையாள வேண்டும்.

    பிணைப்பு நேரம்: உங்கள் குழந்தையுடன் ஒன்றிணைந்து இருப்பது மகிழ்ச்சியானது. பெரும்பாலான பெற்றோருக்கு இது இயற்கையாகவே வந்தாலும், உங்கள் குழந்தையை கட்டிப்பிடிப்பது, மெதுவாகப் பேசுவது அல்லது உங்கள் குழந்தைக்கு மசாஜ் செய்வது போன்ற எளிய செயல்களைச் செய்வது, பிணைப்புக்கான சில அற்புதமான வழிகள். இது உங்கள் குழந்தை அழுதாலோ அல்லது அசௌகரியமாக இருக்கும் போது அவைகளைத் தீர்த்து வைக்க இவை உதவும்.

    சௌகரியமான உடை: உங்கள் குழந்தைக்கு மென்மையான துணிகளில் வசதியாக இருக்கும் படி உடுத்துங்கள். உங்கள் குழந்தை இருக்கும் சுற்றுப்புறத்திற்கு ஏற்ப உடல் வெப்பநிலையை கொடுக்க முடியாது. எனவே குழந்தை இருக்கும் அறை வெப்பநிலைக்கு ஏற்ப உடை உடுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

    டயப்பரிங் சரியாக செய்யுங்கள்: டயப்பரிங் என்பது கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கியமான விஷயம். உங்கள் செலவினங்களை பொறுத்து புதிதாகப் பிறந்த குழந்தைக்கு நீங்கள் தேர்வு செய்யலாம். எப்படியிருந்தாலும், புதிதாகப் பிறந்த குழந்தைகள் பெரிய குழந்தைகளை விட அதிகமாக சிறுநீர் கழிக்கும் மற்றும் மலம் கழிக்கும் என்பதால், நீங்கள் அடிக்கடி டயப்பர்களை மாற்றுகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் குழந்தையை அழுக்கடைந்த டயப்பரை நீண்ட நேரம் அணிய அனுமதிக்காதீர்கள், ஏனெனில் அது இதர பாதிப்புகளுக்கு வழிவகுக்கும். உங்கள் குழந்தைக்கு டயபர் மூலம் எரிச்சலோ/ அசௌகரியமோ ஏற்பட்டால், உடனடியாக உங்கள் குழந்தை மருத்துவரை அணுகவும். புதிதாகப் பிறந்த குழந்தை தினமும் குளிக்க தேவையில்லை. உங்கள் குழந்தை நடமாடும் வரை, வாரத்திற்கு மூன்று முதல் நான்கு முறை குளிக்க வைத்தால் போதும்.

    தொப்புள் கொடி ஸ்டம்ப் பராமரிப்பு: உங்கள் குழந்தைக்கு தொப்புள் கொடி ஸ்டம்ப் இருக்கும், அது 10 நாட்கள் முதல் மூன்று வாரங்களில் காய்ந்து விழும். இதற்கிடையில், உங்கள் பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியின் ஸ்டம்ப் எல்லா நேரங்களிலும் சுத்தமாகவும் உலர்ந்ததாகவும் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

    உங்கள் குழந்தையை குளிப்பாட்டிய பின், ஸ்டம்பைச் சுற்றியுள்ள பகுதி மென்மையான பஞ்சு போன்ற பொருட்களால் சுத்தம் செய்யப்படுவதை உறுதி செய்யவும். உங்கள் குழந்தையின் டயப்பரை எப்போதும் தொப்புளுக்குக் கீழே கட்டி, அந்தப் பகுதி வறண்டு இருப்பதை உறுதிசெய்யவும். எந்த நேரத்திலும் தொப்புள் கொடியை சுற்றி சீழ் அல்லது இரத்தம் காணப்பட்டால், உடனடியாக உங்கள் குழந்தையை சென்னையில் உள்ள பார்வதி மருத்துவமனையில் உள்ள குழந்தை மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள், ஏனெனில் அது தொற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்.

    ஆரோக்கியமான தூக்கம்: புதிதாகப் பிறந்த குழந்தைகள் 16 மணிநேரம் அல்லது அதற்கு மேல் தூங்குவார்கள் , ஒவ்வொரு தூக்க சுழற்சியும் இரண்டு முதல் நான்கு மணி நேரம் வரை நீடிக்கும். உங்கள் குழந்தையை தூங்க வைக்கும் போது பின்புறமாக திருப்பி படுக்க வையுங்கள். நீங்கள் தொட்டிலைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், குழந்தையை உள்ளே வைக்கும் போது நனையாத உறுதியான மெத்தையைத் தேர்ந்தெடுக்கவும். குழந்தை தூங்கும் தொட்டிலின் உள்ளே தளர்வான போர்வைகள், தலையணைகள், தொட்டில் பம்பர்கள் அல்லது மென்மையான பொம்மைகளை வைக்காமல் இருப்பது நல்லது.

    காய்ச்சல் மேலாண்மை: புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்குகாய்ச்சல் இருந்தால் எச்சரிக்கையுடன் கையாள வேண்டும். வயதான குழந்தைகளைப் போலல்லாமல், இரண்டு மாதங்களுக்கும் குறைவான புதிதாகப் பிறந்த குழந்தைகளில் 100.4 டிகிரி அல்லது அதற்கு மேற்பட்ட காய்ச்சல் இருந்தால், உடனடியாக ஒரு குழந்தை மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட வேண்டும்.

    குழந்தை வளர்ப்பு என்பது ஒரு ஆரோக்கியமான பொறுப்பு. அதில் சறுக்கல்கள் ஏற்பட்டால் கவலைப்படாதீர்கள். நீங்கள் எப்போதும் பார்வதி மருத்துவமனையில் உள்ள குழந்தை மருத்துவரிடம் பேசலாம் அல்லது எந்தச் சூழ்நிலையிலும் சிறந்த நடவடிக்கையைக் கண்டறிய மருத்துவரை தொடர்புகொள்ளலாம். உங்கள் குழந்தையை மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும் வைத்திருக்க உங்கள் உள்ளுணர்வை நம்புங்கள்.

    அடுத்தது என்ன?

    புதிதாகப் பிறந்த குழந்தையைக் கையாள்வது சில நேரங்களில் கொஞ்சம் அதிகமாக இருக்கும்.உங்கள் பெற்றோருக்குரிய திறமைகளை நீங்கள் மெருகூட்டும்போது, உங்கள் குழந்தையும் வளரும், நீங்கள் நினைத்ததை விட வேகமாக குழந்தைப் பருவத்திற்கு நகரும்!

    பார்வதி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை - சென்னையில் அவசர மருத்துவ தேவைகளுக்கு +91 98412 98412 அல்லது 044 2238 2248 / +91 98848 99091 என்ற எண்ணில் குழந்தை நல மருத்துவரிடம் பேச முன்பதிவு செய்யலாம்.

    - டாக்டர். அஞ்சனா எஸ்.ஆர். கிருஷ்ணன், பார்வதி மருத்துவமனை 

    • முதல் மூன்று மாதங்கள், குழந்தையின் வளர்ச்சிக்கு முக்கியமானவை.
    • இறப்பு விகிதத்தை குறைப்பது இந்த நாளின் நோக்கமாகும்.

    ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 7-ந் தேதி பச்சிளம் குழந்தைகள் (சிசு) பாதுகாப்பு தினம் கொண்டாடப்படுகிறது. பச்சிளம் குழந்தைகளை பாதுகாப்பதும், அவர்களின் இறப்பு விகிதத்தைக் குறைப்பதும் இந்த நாளின் நோக்கமாகும். இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை முதன்முதலில் ஐரோப்பா தொடங்கியது.

    பிரசவத்திற்குப் பிறகு, போதுமான கவனிப்பு மற்றும் பாதுகாப்பு இல்லாததால் வாழ்நாள் முழுவதும் குழந்தைகள் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். பிறந்த முதல் மூன்று மாதங்கள், குழந்தையின் வளர்ச்சிக்கு மிக முக்கியமானவை. இந்த நேரத்தில், அவர்கள் தங்கள் பெற்றோருடன் நல்ல தொடர்பை உருவாக்குகிறார்கள். மேலும் குழந்தையின் செவிப்புலன், பார்வை, கை, கால்கள் மற்றும் தகவல் தொடர்பு மேம்படும் என்பதால் குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த மாதங்கள் மிகவும் முக்கியமானது.

    ஐக்கிய நாடுகள் சபையின் பச்சிளம் குழந்தை இறப்பு அறிக்கையின்படி, 2018-ம் ஆண்டு இந்தியாவில் 7 லட்சத்து 21 ஆயிரம், குழந்தைகள் இறந்ததாக கண்டறிந்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின்படி, 2019-ம் ஆண்டு உலகளவில் பிறந்த முதல் மாதத்தில் 2.4 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் இறந்துள்ளனர். ஒவ்வொரு நாளும் உலகளவில் சுமார் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் இறப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

    இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தியதன் விளைவாக, தற்போது குழந்தை இறப்பு விகிதம் 1000 பிறப்புகளுக்கு 100-ல்இருந்து ௧௦ ஆக குறைந்துள்ளது. இந்த ஆண்டு சிசு பாதுகாப்பு தினத்தின் கருப்பொருளாக `ஒவ்வொரு குழந்தையின் வளர்ச்சிக்கும் உரிமையை உறுதி செய்தல்' என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் நாட்டின் எதிர் காலம். அவர்களுக்கு பிரகாசமான எதிர் காலத்தை உருவாக்குவது ஒவ்வொருவருடைய கடமை.

    • மன அழுத்தம் மட்டும் 90 சதவீத தற்கொலைகளுக்கு காரணமாகிறது.
    • மது பழக்கத்தினால் தவறான முடிவுகளை தேடுகிறவர்கள் பலர்.

    தற்கொலைகள் ஒரே ஒரு காரணத்தினால் நிகழ்வது போல தோன்றினாலும், உண்மை அதுவல்ல. ஒவ்வொரு தற்கொலையின் பின்னணியிலும் பல்வேறு உயிரியல், உளவியல் மற்றும் சமூக காரணிகள் உண்டு. மன அழுத்தம் மட்டும் 90 சதவீத தற்கொலைகளுக்கு காரணமாகிறது. மது பழக்கத்தினால் தவறான முடிவுகளை தேடுகிறவர்கள் பலர். குடும்பத்தில் நெருங்கிய உறவினர்களை தற்கொலையால் இழந்தால், அவர்களுக்கு அதே எண்ணம் ஏற்படுவதற்கான மரபணு சார்ந்த ஆபத்து உண்டு.

    இதைத்தவிர, உளவியல் ரீதியான பிரச்சனைகள் இன்றைய தலைமுறையினருக்கு அதிகம். உலகளவில் கடந்த 45 ஆண்டுகளில் தற்கொலை 60 சதவீதம் அதிகரித்துள்ளது. 15 முதல் 45 வயது வரை ஏற்படும் உயிரிழப்புகளுக்கு தற்கொலை ஒரு முக்கிய காரணம்.

    அம்மாக்களின் மன அழுத்தம் குழந்தைகளிடம் தாக்கத்தை ஏற்படுத்துவதால் அவர்கள் இளம் பருவத்தில் பிரச்சினைகளை சந்திக்கும்போது தற்கொலை முயற்சிக்கு செல்கிறார்கள் என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது. அதிலும் மனச்சோர்வு அதிகம் கொண்ட தாய்மார்களின் குழந்தைகளுக்கு இது 15 சதவீதம் அதிகமாக இருக்கும் என்று எச்சரிக்கப்படுகிறது.

    இளம்வயதினரின் தற்கொலை முயற்சிக்கு வேறு பல காரணங்கள் இருப்பினும் அந்த சூழ்நிலையை அவர்கள் கடப்பது தாய்மார்களின் எண்ணங்களை சார்ந்தது.

    தற்கொலை எண்ணங்களுக்கு மரபியல் அல்லது பிற காரணிகள் இருப்பினும் குழந்தைகள் பிரச்சினைகளை எதிர்கொள்ள தயார்படுத்துவது பெற்றோர்களின் கடமை. பெரும்பாலாக இளம் வயதினர் தங்கள் உணர்வுகளை யாரிடமும் சொல்லாமல் தனிமையை உணர்வதால் இளைஞர்களிடம் தற்கொலை எண்ணங்கள் தோன்றுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எனவே தங்கள் குழந்தைகளிடம் நண்பர்களாக இருந்து அவர்களின் எண்ணங்களை புரிந்துகொண்டு அதற்கேற்ப வழிநடத்துங்கள்.

    இந்தியாவை பொறுத்தவரை ஒரு நாளில் 36 மாணவர்கள் தற்கொலை செய்கின்றனர் என்று புள்ளி விவரங்கள் சொல்கின்றன. இதில் 13 வயது முதல் 20 வயது வரை உள்ள குழந்தைகளின் தற்கொலை எண்ணங்களுக்கு பெற்றோர்களின் மனநிலை காரணமாக இருக்கிறது என்று தெரியவந்துள்ளது.

    தற்கொலை எண்ணங்களை எவ்வாறு கண்டறிவது?

    * சில குழந்தைகள் சிறு விஷயத்திற்கு கூட கோபப்படுவது, காரணமே இல்லாமல் கோபமாக இருப்பது, எதற்கெடுத்தாலும் எரிந்து

    விழுவது என்று அவர்கள் காணப்பட்டால் உடனே கவனிக்க வேண்டும்.

    * முடிவெடுக்க முடியாமல் திணறுவது, குழம்பிப்போவது போன்ற காரணங்களாலும் ஏற்படும்.

    * முன்யோசனையின்றி முடிவுகளை எடுப்பது, ஒரு விஷயத்தை செய்வதற்கு முன்பே அதன் முடிவை கணித்து வருந்துவது.

    * எந்த ஒரு விஷயத்தையும் பொறுமையாக கையாளத்தெரியாது.

    * குழந்தைகளிடம் யாராவது தவறாக நடந்துகொண்டால் அதாவது உடல்ரீதியாகவோ, மனரீதியாகவோ முறைகேடாக நடந்துகொண்டாலும் அவர்களுக்கு தற்கொலை எண்ணங்கள் அதிகரிக்கிறது.

    * குழந்தைகள் வளரும் சூழ்நிலைகளும் அதாவது குடும்பத்தில் யாராவது தற்கொலை செய்திருந்தால் அதில் இருந்து மீண்டுவரமுடியாமல் தற்கொலை செய்துகொள்கின்றனர். மேலும் குடும்பத்தில் ஏற்படும் சண்டை சச்சரவுகள் மற்றும் தாய்-தந்தை கருத்துவேறுபாடு, பிரிதல் போன்றவையும் இதற்கு காரணமாக அமைகின்றன.

    * படிப்பில் ஏற்படும் ஏமாற்றம் அல்லது படிப்பு விஷயத்தில் ஆர்வமின்மை. அதனால் ஏற்படும் மன அழுத்தம் இவை எல்லாம் கூட தற்கொலை எண்ணத்துக்கு வழிவகுக்கின்றன.

    இளைஞர்கள் மற்றும் இளம் வயதினர் தற்கொலைகளுக்கு கல்வி சார்ந்த தோல்வி பயம், காதல் தோல்வி போன்றவை தான் முதன்மைக் காரணங்களாக உள்ளன. சில சமயங்களில் தேர்வு முடிவுகள் வெளியாகும் வரை கூட காத்திராமல் தற்கொலை செய்து கொள்வது போன்ற மிகவும் வேதனையான செயல்களும் நிகழ்வதுண்டு. தங்கள் வாழ்வில் சந்திக்கும் தோல்விகளையும், ஏமாற்றங்களையும், அவமானங்களையும் எதிர் கொள்ள துணிவில்லாமல் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள். இவை மட்டுமல்லாமல் தங்கள் குடும்பத்தில் தற்கொலைப் பிண்ணனி உள்ளவர்களுக்கு மரபணுக்கள் மூலமாகவும் தற்கொலை எண்ணங்கள் தோன்ற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

    மனச்சோர்வினால் தற்கொலை எண்ணம் கொண்டவரிடம் மனம் விட்டு பேசும் வாய்ப்பையும், சூழலையும் ஏற்படுத்திக் கொடுத்தால் அவர்களுடைய மனச் சோர்விற்கானக் காரணிகளையும் கண்டறிய முடியும். மேலும் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அவர்கள் தோள் சாய. தோள் தந்து மனச்சோர்விலிருந்து விடுபட உதவி புரிய வேண்டும். இதற்கு அவர்களின் மனக் குமுறல்களுக்கும், குழப்பங்களுக்கும் செவி சாய்ப்பது மிகவும் அவசியமானது. அன்புடனும், அக்கறையுடனும் நாம் அவர்களின் மனக்குமுறல்களுக்கு செவி சாய்த்தோமேயானால் அவர்களின் மன பாரம் வெகுவாக குறைந்து மன அழுத்தத்திலிருந்து விடுபடவும் உதவியாக இருக்கும். மேலும் அது போன்ற சமயங்களில் வாக்கு வாதங்களைத் தவிர்த்து அவர்களுக்கு ஆதரவாகவும், உறுதுணையாகவும் இருப்பது மிகவும் சிறந்தது.




    • சிலருக்கு மரபியல் ரீதியாகவும் இந்த பழக்கம் ஏற்படக்கூடும்.
    • அத்தகைய நடத்தைக்கான அடிப்படை காரணங்களைக் கண்டறியுங்கள்.

    தங்களுடைய குழந்தைகள் அடிக்கடி நகம் கடித்திறார்கள் என்று பல பெற்றோர்கள் வருத்தப்படுவார்கள். 30 முதல் 60 சதவிகிதம் குழந்தைகளுக்கு நகம் கடிக்கும் பழக்கம் இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. புதியவற்றை தெரிந்துகொள்ளும் ஆர்வம், சலிப்பு, மன அழுத்தம், மற்றவரைப் பார்த்து தானும் செய்வது போன்ற காரணங்களால், குழந்தைகளுக்கு நகம் கடிக்கும் பழக்கம் உண்டாகலாம் என்று உளவியல் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். சிலருக்கு மரபியல் ரீதியாகவும் இந்த பழக்கம் ஏற்படக்கூடும்.

    நாளடைவில் பெரும்பாலான குழந்தைகளிடம் இந்த பழக்கம் மறைந்துவிடும். ஆனால் சிலருக்கு பெரியவர்கள் ஆனாலும் இது தொடர்கதையாகவே நீடிக்கும். அந்த வகையில் குழந்தைகளின் நகம் கடிக்கும் பழக்கத்தை தடுப்பது பற்றிய சில விஷயங்கள்.

    குழந்தைகளிடம் இருந்து ஒரு பழக்கத்தை நிறுத்துவதற்கு முயற்சி செய்வதற்கு முன்பு அவர்களின் அத்தகைய நடத்தைக்கான அடிப்படை காரணங்களைக் கண்டறியுங்கள். வளரும்போது பல குழந்தைகளுக்கு சூழ்நிலை காரணாமாக பதற்றம் மற்றும் மன அழுத்தம் ஏற்படுகிறது ஆனால் பெற்றோரால் இதை உணர முடிவது இல்லை.

    பெற்றோருக்கு இடையே நடக்கும் சண்டை, புதிய வகுப்பு சூழ்நிலை, தேர்வு பதற்றம் ஆகியவை கூட அவர்களுக்கு இந்த பழக்கத்தை ஏற்படுத்தி இருக்கலாம். எனவே காரணத்தை முதலில் தெரிந்து கொண்டு அதற்கான தீர்வை கண்டறியுங்கள். உங்கள் குழந்தைக்கு `நகம் கடிப்பது தவறான பழக்கம்' என்பதை சுட்டிக்காட்டி புரிய வையுங்கள். நகம் கடிப்பதால் ஏற்படும் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சினைகளைப் பற்றி அவர்களிடம் கூறி விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.

    கைகளை பல இடங்களில் தொட்டு விட்டு, வாயில் வைத்து கடித்தால் கிருமித்தொற்று ஏற்படும் என்பதை விளக்குங்கள். ஒவ்வொரு முறை குழந்தைகள் நகத்தை கடிக்கும் போதும் அவர்களை சுதாரிப்படையச் செய்யுங்கள். இதன் மூலம் காலப்போக்கில் நகம் கடிக்கும் பழக்கம் மறைந்துவிடும்.

    குழந்தைகளின் ஓய்வு நேரத்தில் அவர்களுக்குப் பிடித்த பொழுதுபோக்குகளில் ஈடுபட அனுமதியுங்கள். இதன் மூலம் சலிப்பு காரணமாக அவர்களுக்கு நகம் கடிக்க வேண்டும் என்ற எண்ணம் வராது. நகம் கடிக்கும் பழக்கத்தை குறைத்தால், அதை ஊக்குவிக்கும் வகையில் சிறு சிறு பரிசுகள் கொடுத்து பாராட்டுங்கள்.

    நகம் கடிக்கும் குழந்தைகளை அன்பால் மட்டுமே திருத்த முயற்சிக்க வேண்டும். கண்டிப்பு காட்டுவது, அவர்களுக்கு மேலும் மன அழுத்தத்தை உண்டாக்கி நகம் கடிக்கும் பழக்கத்தை தீவிரப்படுத்தும்.

    குழந்தையின் நகம் கடிக்கும் பழக்கம். அதிகமானாலோ, அதனால் விரல்களில் காயங்கள் ஏற்பட்டாலோ, குழந்தையின் நகம் சீரற்று இருந்தாலோ, உளவியல் ஆலோசகரிடம் அழைத்துச்செல்லது நல்லது.

    • பலரும் தங்களுக்கு ஞாபகத்திறன் இல்லை என்று வருந்துகிறார்கள்.
    • 20 நிமிடங்கள் என பிரித்து பாடங்களைப் படியுங்கள்

    படித்த பாடங்களை மறக்காமல் நினைவில் வைத்துக்கொள்வது மாணவர்கள் பலருக்கும் சவாலான விஷயமாக இருக்கிறது. பலரும் தங்களுக்கு ஞாபகத்திறன் இல்லை என்று வருந்துகிறார்கள். ஆனால் பாடங்களை படிக்கும்போது ஒரு சில நுட்பங்களை கையாண்டால் அவற்றை எளிதாக மனதில் பதிய வைக்க முடியும். இவ்வாறு நினைவாற்றல் நுணுக்கங்களை கடைப்பிடிக்கும் மாணவர்கள், மற்றவர்களை விட சிறப்பாக செயல்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அது பற்றிய சில குறிப்புகள் உங்களுக்காக...

    நீங்கள் படிக்கும் பாடங்களை ஒலிப்பதிவு (ரெக் கார்டு) செய்து வைத்துக் கொண்டு, அதை ஒரு நாளுக்கு இரண்டு முறையாவது ஒலிக்கச் செய்து கேளுங்கள். உங்களுடைய குரலில் பதிவு செய்யப்படும் தகவல்களை முளை சீக்கிரமாகவே உள்வாங்கிக்கொள்ளும்.

    20 நிமிடங்கள் என பிரித்து பாடங்களைப் படியுங்கள். முதல் இருபது நிமிடங்கள் படித்த பாடத்திற்கும். அடுத்த 20 நிமிடங்கள் படிக்கப்போகும் பாடங்களுக்கும் எவ்வித தொடர்பும் இருக்கக்கூடாது. இவ்வாறு செய்வதால் புதிய பாடங்கள் எளிதாக மனதில் பதியும்.

    படித்த பாடங்களை எழுதிப் பார்ப்பது, அவற்றை மனதில் நிறுத்துவதற்கான வழி என்பது அனைவருக்கும் தெரியும். அதைப்போலவே 'மைண்ட் மேப் எனப்படும் மன வரைபடம் செய்யும் முறையும் அதிக பலன் தரும். ஆகையால் ஒவ்வொரு பாடத்திற்கும் 'மைண்ட் மேப்' செய்யுங்கள்.

    தூங்குவதற்கு முன்பு அன்றைய நாளில் படித்த பாடங்களை ஒரு கதை போல நினைவுபடுத்துங்கள்.

    முக்கியமான வினாக்கள் அல்லது மறந்து போகக்கூடிய வினாக்களை அடிக்கடி படியுங்கள். பெற்றோர் மற்றும் நண்பர்களிடம் அவற்றை திரும்பத்திரும்ப சொல்லிப் பாருங்கள்.

    பாடங்களை சில பொருட்கள் அல்லது சூழ் நிலைகளுடன் தொடர்புப்படுத்தி மனப்பாடம் செய்யுங்கள். உங்களுடைய பாடத்தை ஒரு கதை போல உருவாக்கி அதை உங்கள் நண்பர்களிடம் சொல்லிப் பாருங்கள்.

    படித்த பாடங்களில் உள்ள தகவல்களை 'மைண்ட் மேப்' செய்யும் முறை:

    முதலில் மனதுக்குள் ஒரு பெரிய வட்டத்தை வரைந்து, அதன் நடுவில் ஒரு சிறிய வட்டம் வரையுங்கள். அதற்கு நீங்கள் படிக்கப்போகும் பாடத்தின் முதன்மை தலைப்பை வையுங்கள். அதைச் சுற்றிலும் பல வட்டங்களை வரைந்து, அவற்றில் எல்லா துணை தலைப்புகளையும் அடுக்குங்கள். அவற்றின் கீழ் அந்த தலைப்புகளுக்கான இதர தகவல்களை ஒவ்வொன்றாக அடுக்குங்கள். இவ்வாறு கற்பனை செய்து படிக்கும்போது நீங்கள் படித்தது எளிதாக மனதில் பதியும்.

    நண்பர்களுடன் சேர்ந்து விவாதியுங்கள். தெரிந்ததை பகிர்ந்தும், தெரியாததை விளக்கியும் உரையாடுங்கள். நீங்கள் படிக்கும் பாடத்தின் பொருள் புரியவில்லை என்றால். அதை புரிந்து கொண்ட பிறகு மனப்பாடம் செய்யுங்கள்.

    பாடங்களை உணர்ந்து படியுங்கள். உதாரணமாக உடற்கூறியல் தேர்வுக்கு படிக்கும்போது, உடற் கூறு மாதிரிகளை எடுத்து ஒவ்வொரு பகுதியையும் உணர்ந்து, அவற்றின் பெயர்களை உரக்கச் சொல்லி படியுங்கள், உங்களுக்கு பிடித்த பாடல்களின் ராகத்தில், பாடங்களை அமைத்துப் பாடிய படி படியுங்கள். இவ்வாறு செய்யும்பொது பாடங்கள் நினைவில் பதியும். உலகம் முழுவதும் இந்த முறையை பின்பற்றுகிறார்கள்.

    • தொடுதல் பற்றிய விழிப்புணர்வை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.
    • குழந்தைகளுக்கு ஆடை இன்றி இருக்கக்கூடாது என்று சொல்லிக்கொடுக்க வேண்டும்.

    பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் முடிந்த அளவு நேரம் செலவிட வேண்டும். குழந்தைகளோடு உட்கார்ந்து பேச வேண்டும். விளையாட வேண்டும். குடும்பத்தோடு உட்கார்ந்து பேச வேண்டும். குழந்தைகள் சொல்வதை காது கொடுத்து கேட்க வேண்டும். பெற்றோர்கள் பிசியாகி விடுவதால் நிறைய குழந்தைகள் கெட்ட நண்பர்களுடன் சேர்ந்து சிகரெட், பாக்கு போன்ற போதை வஸ்துகளுக்கு ஆளாகிறார்கள். மனதில் உள்ள பிரச்சினையை வெளியில் சொல்ல முடியாமல் மன உளைச்சலுக்கும் ஆளாகிறார்கள்.

    குழந்தைகளை வளர்ப்பதற்கும் பாதுகாப்பதற்கும் பெற்றோருக்கு முதன்மை பொறுப்பு உள்ளது என்பது அங்கீகரிக்கப்பட்டது. குழந்தைகள் ஆளுமையின் முழுமையான இணக்கமான வளர்ச்சிக்கு, அவர்கள் ஒரு குடும்ப சூழலிலும், மகிழ்ச்சி, அன்பு மற்றும் புரிதல் கொண்ட சூழ்நிலையிலும் வளர வேண்டும்

    * ஆணோ, பெண்ணோ எந்த குழந்தையாக இருந்தாலும் தொடுதல் பற்றிய விழிப்புணர்வை குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும். நல்ல தொடுதல் என்றால் என்ன? தவறான தொடுதல் என்றால் என்ன? என்பதை பற்றி பெற்றோர்கள் குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே கற்றுக்கொடுக்க வேண்டும்.

    * மேலாடை இன்றியோ, ஆடை இன்றியோ குழந்தைகள் உங்களுக்கு குழந்தையாக தெரியலாம். ஆனால் எல்லோருக்கும் அப்படியே தெரியும் என்று எண்ணிவிடக்கூடாது. எனவே குழந்தைகளுக்கு ஆடை இன்றி இருக்கக்கூடாது என்று சொல்லிக் கொடுக்க வேண்டும்.

    * குழந்தைகளை தனியே கடைக்கு அனுப்பும் போது கவனம் தேவை. நெடுநேரம் குழந்தை நிற்க வைக்கப்பட்டாலோ, பொருட்கள் மிகுதியாகவோ, இலவசமாகவோ வழங்கப்பட்டாலோ கவனமாக இருக்க வேண்டும்.

    * பள்ளிக்கு ஏதோ ஒரு வாகனத்தில் தனியாகவோ, பிற குழந்தைகளுடனோ அனுப்பினால் அந்த வாகன ஓட்டுனரின் முழு விவரமும் தெரிந்துகொள்ளுங்கள். அவர் வீட்டு முகவரி உள்பட வாகன ஓட்டுனரின் நடத்தையிலும், பழக்க வழக்கத்திலும் கவனமாக இருக்க வேண்டும்.

    * தன்னை எல்லா சூழல்களிலும் தானே பார்த்துக்கொள்ள, தற்காத்துக்கொள்ளத் தேவையான அடிப்படை விஷயங்களை நிச்சயம் சொல்லிக்கொடுக்க வேண்டும்.

    * எடுத்த எடுப்பிலேயே ஒருவர் மீது அளவுகடந்த நம்பிக்கை காட்டுவதோ அல்லது வெறுப்பைக் காட்டுவதோ கூடாது, மற்றவர்களிடம் இருக்கும் குறைகளைவிடவும், நல்ல விஷயங்களை முதன்மையாக எடுத்துக்கொண்டு, யார் மனதும் புண்படும்படி நடந்துக்கொள்ளக் கூடாது என்பதைப் புரியவைக்க வேண்டும்.

    * நியாயமான முறையில் தன் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கான ஆற்றலும், மனநிலையும் உருவாகும் படி அவர்களை பக்குவப்படுத்த வேண்டும். பெண் குழந்தையின் ஒவ்வொரு நல்ல முயற்சியையும் மனதார பாராட்டி ஊக்கப்படுத்த வேண்டும்.

    • பச்சிளம் குழந்தைகளுக்கு தினமும் மசாஜ் செய்வது அவசியமானது.
    • எலும்புகளுக்கும் வலு சேர்க்கும்.

    பச்சிளம் குழந்தைகளுக்கு தினமும் மசாஜ் செய்வது அவசியமானது. அது குழந்தைகளின் சருமத்துக்கும், எலும்புகளுக்கும் வலுசேர்க்கும். உடல் எடை, வளர்ச்சிக்கும் வழிவகை செய்யும்.

    * முதலில் குழந்தையின் தலையில் கைகளை வைத்து சிறிது எண்ணெய் தடவி மெதுவாக மசாஜ் செய்ய தொடங்க வேண்டும். கைவிரல்களின் அழுத்தம் மென்மையாக இருக்க வேண்டும். ஏனெனில் குழந்தைகளின் எலும்பு பகுதிகளும், இணைப்பு பகுதிகளும் வலிமையாக இருக்காது.

    * மூக்கு, காது மடல்களை மென்மையாக வருடிவிட வேண்டும்.

    * பின்னர் இரு கைகளையும் மார்பு பகுதியில் வணங்குவது போல் குவித்து வைத்து மெதுவாக நீவி விட வேண்டும்.

    * வயிற்று பகுதியில் மசாஜ் செய்யும்போது அடி வயிற்றில் கையை வைத்து கடிகார முட்கள் சுழலுவது போல் மெதுவாக அழுத்திவிட வேண்டும்.

    * மேலும் குழந்தையின் முட்டியையும், பாதங்களையும் பிடித்தபடி வயிற்றை நோக்கி மெதுவாக அமுக்க வேண்டும்.

    * பின்னர் தொடை பகுதியில் இருந்து உள்ளங்கால் வரை நீவி விட வேண்டும்.

    * அதேபோல் தோள்பட்டையில் இருந்து உள்ளங்கை வரைக்கும் மென்மையாக அழுத்தம் கொடுக்க வேண்டும்.

    * குழந்தையின் மணிக்கட்டை அனைத்து திசைகளிலும் மெதுவாக திருப்பி மசாஜ் செய்து விட வேண்டும்.

    * அதன்பிறகு குழந்தையின் உள்ளங்கால்களில் பெருவிரலை கொண்டு நீவ வேண்டும்.

     * குழந்தையின் கால்களின் பத்து விரல்களையும் உங்கள் பெருவிரல் மற்றும் ஆள்காட்டி விரல்களை கொண்டு மெதுவாக சொடுக்கு எடுத்து விட வேண்டும்.

    * இறுதியில் குப்புற படுக்கவைத்து விரல் நுனிகளால் குழந்தையின் முதுகெலும்புகளை மேலிருந்து கீழாக மெதுவாக நீவி விட வேண்டும்.

    இவ்வாறு தொடர்ந்து குழந்தைகளுக்கு மசாஜ் செய்து வந்தால் ரத்த ஓட்டம் மேம்படும். செரிமானம் சீராக இருக்கும். மலச்சிக்கல் பிரச்சினையும் வராது.

    ×