என் மலர்tooltip icon

    தரவரிசை

    ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, அர்ஜூன், ஆஷிமா நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘கொலைகாரன்’ படத்தின் விமர்சனம்.
    அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் விஜய் ஆண்டனி, தன்னுடைய வீட்டிற்கு எதிரே இருக்கும் ஆஷிமா நர்வாலை தினமும் பார்த்து விட்டுதான் செல்வார். இருவருக்குள்ளும் ஒரு நட்பு இருந்து வருகிறது. 

    இந்நிலையில், பாதி உடல் எரிந்த நிலையில் ஒரு சடலம் போலீசுக்கு கிடைக்கிறது. இதை உயர் அதிகாரியான அர்ஜூன் விசாரிக்க ஆரம்பிக்கிறார். விசாரணையில் இறந்த நபர் ஆந்திராவில் இருக்க கூடிய அமைச்சரின் தம்பி என்று தெரிய வருகிறது. மேலும் இறந்த நபர், ஆஷிமாவிற்கு நீண்ட நாட்களாக தொந்தரவு கொடுத்திருப்பதால், இந்த கொலையை ஆஷிமாவும் அவரது தாய் சீதாவும் சேர்ந்துதான் செய்திருப்பார்கள் என்ற கோணத்தில் அவர்களை விசாரிக்க ஆரம்பிக்கிறார்.

    இந்த கொலைக்கு எதிர் வீட்டில் இருக்கும் விஜய் ஆண்டனி உதவியிருக்க கூடும் என்றும் சந்தேகிக்கிறார். விஜய் ஆண்டனியை பற்றி விசாரிக்கும் போது, ஆந்திரா போலீஸில் முன்னாள் அதிகாரியாக இருந்தவர் என்று தெரிந்துக் கொள்கிறார் அர்ஜூன்.



    இறுதியில் அந்த கொலையை செய்தவர் யார் என்று அர்ஜூன் கண்டுபிடித்தாரா? ஆஷிமாவிற்கும் இறந்தவருக்கும் என்ன சம்பந்தம்? விஜய் ஆண்டனி ஆந்திரா போலீஸில் இருந்து வெளியே வந்ததற்கு காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

    விஜய் ஆண்டனி இறுக்கமான முகத்துடன் படம் முழுக்க வலம் வருகிறார். கடைசி வரை முகத்தில் மர்மம் இருப்பதை உணர்த்தி நடித்திருக்கிறார். மிடுக்கான போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார் அர்ஜூன். கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.



    மற்ற படங்களில் நடிக்கும் நாயகி போல் இல்லாமல் இப்படத்தில் ஆஷிமாவிற்கு முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. அதை உணர்ந்து நடிப்பில் பளிச்சிடுகிறார். தன்னுடைய அனுபவ நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் சீதா. 

    ஒரு கொலை, அதன் பின்னணியில் நடக்கும் சம்பவம் என கிரைம் திரில்லர் பாணியில் படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ். இப்படத்தை பார்க்கும் போது, ஏற்கனவே வெளியான சத்யராஜ் நடித்த படத்தின் சாயலாகவும், கமலின் பாபநாசம் சாயலாகவும் தோன்றுகிறது. 

    விஜய் ஆண்டனி இசையில் பாடல்கள் படத்திற்கு ஒட்டவில்லை. ஆனால், பின்னணி இசையில் விறுவிறுப்பை கூட்டியிருக்கிறார். முகேஷின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘கொலைகாரன்’ சுமாரானவன்.
    நிசார் சபி இயக்கத்தில் ரகுமான், ஹவிஷ், ரெஜினா, நந்திதா, அனிஷா, அதிதி நடிப்பில் வெளியாக இருக்கும் படம் ‘7’ திரைப்படத்தின் விமர்சனம்.
    ஹவிஷும் நந்திதாவும் ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரியும்போது காதலர்கள் ஆகிறார்கள். இருவரும் ரகசிய திருமணம் செய்துகொள்கிறார்கள்.

    இந்த சூழ்நிலையில் திடீர் என்று ஹவிஷ் காணாமல் போகிறார். ரகுமான் உதவி கமி‌ஷனராக இருக்கும் போலீஸ் ஸ்டே‌ஷனுக்கு தனது கணவர் ஹவிஷை காணவில்லை என்று புகார் கொடுக்கிறார் நந்திதா. இதை கேட்கும் ரகுமான் அதேபோல் இன்னும் ஒரு பெண் ஹவிஷை தன் கணவர் என்றும் கண்டுபிடித்து தருமாறும் புகார் கொடுத்துள்ளதை கூறுகிறார். அடுத்து இன்னொரு பெண்ணும் அதே போல் புகார் கொடுக்கிறார். 

    ஹவிஷை போலீஸ் தேடுகிறது. ஒரு கட்டத்தில் போலீசிடம் சிக்கும் ஹவிஷ் இந்த 3 பெண்களையுமே யார் என்றே தெரியாது என்கிறார். இதற்கிடையே ஹவிஷின் பெயர் கார்த்திக் அல்ல கிருஷ்ணமூர்த்தி என்று சொல்லும் பைத்தியத்தை யாரோ கொடூரமாக கொலை செய்கிறார்கள். அந்த பழியும் ஹவிஷ் மீது விழுகிறது. உண்மையில் ஹவிஷ் யார்? அவர் 3 பெண்களை ஏமாற்றியது உண்மையா? அவர் கார்த்திக்கா? கிருஷ்ணமூர்த்தியா? போன்ற கேள்விகளுக்கு விடை சொல்கிறது படம்.



    டைட்டிலுக்கு முன்பே ஒரு குடும்பம் கொல்லப்படுகிறது. அந்த காட்சியில் தொடங்கும் சஸ்பென்ஸ் கிளைமாக்ஸ் வரை நீடிக்கிறது. முக்கியமாக இரண்டாம் பாதி முழுக்கவே திருப்பங்கள் கொண்ட திரைக்கதையை எழுதி இயக்கி இருக்கிறார் நிசார் சபி.

    கார்த்திக், கிருஷ்ணமூர்த்தி என 2 மாறுபட்ட தோற்றத்தில் நடித்திருக்கிறார் ஹவிஷ். தமிழுக்கு நல்ல அறிமுகம். காதல் காட்சிகளிலும் தன் மீது விழுந்த பழிகளுக்கு காரணம் தெரியாமல் தவிக்கும்போதும் கவர்கிறார். நந்திதா, அனிஷா, அதிதி, திரிதா சவுத்ரி ஆகிய நால்வருமே போட்டி போட்டு கவர்ச்சி விருந்து படைக்கிறார்கள். இவர்களது உண்மையான பின்னணி தெரிய வரும்போது ரசிகர்கள் நிமிர்ந்து உட்கார்கிறார்கள்.

    ரெஜினா கசண்ட்ராவுக்கு ஆச்சர்யமான வேடம். சைக்கோ வில்லி வேடத்தில் மிரட்டி இருக்கிறார். விரும்பியவனை அடைவதற்காக அவர் செய்யும் செயல்கள் பதற வைக்கின்றன.



    ரகுமானுக்கு வழக்கமான போலீஸ் வேடம்தான். அவர் வேலை நேரத்தில் குடிக்கும் காட்சிகளை தவிர்த்து இருக்கலாம்.

    ரமேஷ் வர்மாவின் கதை, திரைக்கதை ஒரு நாவலை படிப்பது போல் விறுவிறுப்பாக இருக்கிறது. அதை சுவாரசியமான படமாக நிசார் சபி இயக்கி இருக்கிறார். ஒவ்வொரு மர்மமாக அவிழும் காட்சிகள் திகில் கூட்டுகின்றன.

    நிசாரின் ஒளிப்பதிவும் சைத்தன் பரத்வாஜின் இசையும் படத்துக்கு விறுவிறுப்பை கூட்டுகின்றன. கே.எல்.பிரவீனின் படத்தொகுப்பு கச்சிதம். தெலுங்கு நாயகன் என்பதும் பிற மொழி நடிகர்களும் ஆங்காங்கே வருவதும் படத்தின் பலவீனம்.

    மொத்தத்தில் ‘7’ சஸ்பென்ஸ் திரில்லர்.
    2014ம் ஆண்டு வெளியான காட்ஸில்லா படத்தின் தொடர்ச்சியாக வெளியாகி இருக்கும் காட்ஸில்லா 2 - கிங் ஆப் தி மான்ஸ்டர்ஸ் படத்தின் விமர்சனம்.
    டைட்டன்ஸ்கள் பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக அனைத்து நாட்டு விஞ்ஞானிகளும் சேர்ந்து உருவாக்கிய அமைப்பு மோனார்க் (Monarch) என்ற அமைப்பை இயங்கி வருகிறது. இந்த அமைப்பு உலகில் பல வகையான டைட்டன்ஸ்கள் இன்னமும் உறைந்து போய் உயிரோடு இருப்பதை கண்காணித்து வருகிறார்கள். 

    இந்த அமைப்பில் இருக்கும் வேரா பார்மிகா, டைட்டன்ஸ்களை எழுப்பும் கருவியை கண்டுபிடிக்கிறார். இந்த கருவி மூலம் டைட்டன்ஸ்களை கட்டுப்படுத்த முடியும். இந்த கருவி இருப்பதை அறிந்த வில்லன், வேரா பார்மிகா மற்றும் அவரது குழந்தையை கடத்தி விடுகிறார். 



    மோனார்க் குழு, வேரா பார்மிகாவின் முன்னாள் கணவரான கைல் சாண்ட்லரை காப்பாற்ற சொல்லி நாடுகிறார்கள். இந்நிலையில், அந்த கருவியை வைத்து ’கிடோரா’ எனப்படும் மூன்று தலை ட்ராகன் எழுப்பி விடுகிறார்கள். இந்த ட்ராகன் உலகில் உள்ள இடங்களை நாசம் செய்கிறது. 

    இது காட்ஸில்லாவிற்கு தெரிந்து அதை அழிக்க வருகிறது. இதே நேரத்தில் அடுத்தடுத்து ஒவ்வொன்றாக டைட்டன்ஸ்களை எழுப்பி விடுகிறார்கள். இறுதியில் காட்ஸில்லா, கிடோரா ட்ராகன் மற்றும் மற்ற டைட்டன்ஸ்களை அழித்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.



    2014ம் ஆண்டு வெளியான காட்ஸில்லா படத்தின் தொடர்ச்சியாக காட்ஸில்லா 2 - கிங் ஆப் தி மான்ஸ்டர்ஸ் படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். குழந்தைகளின் கோடை விடுமுறை முடியும் இந்த நேரத்தில் வெளியானாலும் குழந்தைகள் கொண்டாடும் படமாக அமைந்திருக்கிறது. 

    ட்ராகன் பல இடங்களை நாசப்படுத்துவதும் காட்சிகளும், காட்ஸில்லா வரும் காட்சிகளும் மெய்சிலிர்க்க வைக்கிறது. குறிப்பாக இறுதி காட்சி பிரம்மாண்டத்தின் உச்சம் என்றே சொல்லலாம். பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.

    மொத்தத்தில் ‘காட்ஸில்லா 2 - கிங் ஆப் தி மான்ஸ்டர்ஸ்’ கொண்டாட்டம்.
    தேவி படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘தேவி 2’ படத்தின் விமர்சனம்.
    தேவி படத்தின் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக படம் ஆரம்பிக்கிறது. ரூபி பேயிடம் போட்ட ஒப்பந்தம் காரணமாக இரண்டு வருடங்களுக்கு மேலாக வீட்டிற்குள்ளேயே தமன்னாவை வைத்திருக்கிறார் பிரபுதேவா. மீண்டும் பேய் தொல்லை இல்லாமல் இருப்பதற்காக ஜோசியர் ஒருவர் அறிவுரையின் படி தமன்னாவை மொரிசியஸ் அழைத்து சென்று வேலை பார்த்து வருகிறார் பிரபுதேவா.

    அங்கு ரூபி மீண்டும் தமன்னா உடம்பில் இருக்கிறதா என்று சில சோதனைகளை பிரபுதேவா செய்கிறார். ஆனால், ஏதும் இல்லாததால் மகிழ்ச்சியாக வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் பிரபுதேவாவை இரண்டு பேய் பிடிக்கிறது. இதையறிந்த தமன்னா, பிரபுதேவாவை எப்படி காப்பாற்றினார்? பேயின் நோக்கம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.



    படத்தின் நாயகனாக நடித்திருக்கும் பிரபுதேவா, தனக்கே உரிய பாணியில் நடிப்பு, காமெடி, நடனம் என அசத்தி இருக்கிறார். குறிப்பாக, பேய் தன்னுள் புகுந்தவுடன், அதற்கேற்ப அவர் காட்டும் உடல் மொழி அசத்தல்.

    நாயகியாக வரும் தமன்னா, மாறுபட்ட நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். குறிப்பாக பாடல் காட்சிகளில் ரசிகர்களை சீட்டிலேயே கட்டி வைத்திருக்கிறார். அவருடைய நடிப்புக்கு தீனி போடும் படமாக அமைந்திருக்கிறது. அதுபோல், மற்ற கதாநாயகிகளாக வரும் நந்திதா சுவேதா, டிம்பிள் ஹயாதி ஆகியோரும் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள். கோவை சரளா மற்றும் ஆர்.ஜே.பாலாஜி இருவரும் ஆங்காங்கே ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார்கள். 



    தேவி படத்தின் வெற்றி கொடுத்த உற்சாகத்தில், 2வது பாகத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் விஜய். ஆனால், முதல் பாகம் அளவிற்கு இரண்டாம் பாகம் வெற்றி பெறுமா என்பது சந்தேகம் தான். படத்தை ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை காமெடி படமாகவே எடுத்திருக்கிறார். ஆனால், பார்க்கிற நமக்குத்தான் ஏனோ சிரிப்பு வரவில்லை. கதாபாத்திரங்களை சிறப்பாக கையாளத் தெரிந்த விஜய், திரைக்கதையில் கவனம் செலுத்த மறந்திருக்கிறார். 



    அயனன்கா போஸின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது. சாம் சி.எஸ்.-யின் இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. பின்னணி இசையிலும் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார்.

    மொத்தத்தில் ‘தேவி 2’ மிரட்டல் குறைவு.
    செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா - சாய் பல்லவி - ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் வெளியாகி இருக்கும் `என்ஜிகே' படத்தின் விமர்சனம்.
    சுற்றுச்சூழல் சம்பந்தப்பட்ட படிப்பில் முதுகலை பட்டம் பெற்ற சூர்யா, தனது கிராமத்தில் இயற்கை விவசாயம் செய்து வருவதுடன், சமூக சேவைகளிலும் ஈடுபடுகிறார். இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் சூர்யாவால் பாதிக்கப்படும் உள்ளூர் வணிகர்கள் அவருக்கு குடைச்சல் கொடுக்கிறார்கள். ஒரு கட்டத்தில் அவரது நிலங்களை நாசப்படுத்திவிடுகின்றனர்.

    இந்த பிரச்சனைகளை தீர்ப்பதற்காக பாலா சிங் மூலமாக சட்டமன்ற உறுப்பினரான இளவரசுவை சந்திக்கிறார் சூர்யா. அரசியலுக்கு வந்தால் தான் மக்களுக்கு நல்லது செய்ய முடியும் என்பதை உணரும் சூர்யா, இளவரசுவின் கட்சியிலேயே அடிப்படை உறுப்பினராக சேர்கிறார்.



    இவ்வாறாக வேறு வழியின்றி அரசியலில் நுழையும் சூர்யா சந்திக்கும் சிக்கல்கள் என்னென்ன? அவரது ஆசை நிறைவேறியதா? முழு அரசியல்வாதி ஆனாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தில் சூர்யா இதுவரை இல்லாத மாதிரியான வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். சமூக சேகவர், அரசியல் நுழைவு, அரசியல் எழுச்சி என இடங்களுக்கு ஏற்ப சூர்யா நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார். சூர்யாவின் மனைவியாக சாய் பல்லவிக்கும், அரசியல் ஆலோசகராக ரகுல் ப்ரீத் சிங்குக்கும் பெரிய கதாபாத்திரங்கள் இல்லை என்றாலும், நடிப்பில் ஒரளவுக்கு திருப்திபடுத்தியிருக்கின்றனர்.



    அரசியல்வாதி கதாபாத்திரங்களில் இளவரசு, பொன்வண்ணன், பாலா சிங், வேல ராமமூர்த்தி அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர். சூர்யாவின் அம்மாவாக உமா பத்மநாபன், கிடைத்த இடங்களில் சிக்ஸர் அடித்துவிட்டுச் செல்கிறார். அப்பாவாக நிழல்கள் ரவி அலட்டல் இல்லாமல் நடித்திருக்கிறார்.

    இயற்கை விவசாயம் செய்யும் நடுத்தர குடும்பத்து இளைஞன், அரசியலுக்கு வர விரும்புவதும், அதனால் அவன் சந்திக்கும் பிரச்சினைகளையும் விதையாக வைத்து கதையை உருவாக்கி இருக்கிறார். செல்வராகவனின் வழக்கமான படங்களை போல இல்லை, அதாவது அவரது ஸ்டைலில் இல்லை என்பதே வருத்தம். திரைக்கதையில் பல இடங்களில் தொய்வு இருப்பது போல தோன்றுகிறது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியிருக்கும் இந்த படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்பது தான் நிதர்சனம். பாடல்களும் ஒட்டவில்லை. 



    பின்னணி இசையில் யுவன் ஷங்கர் ராஜா அதிரடியாக மிரட்டியிருக்கிறார். சிவகுமார் விஜயனின் ஒளிப்பதிவு வண்ணமயமாக இருப்பது படத்திற்கு பலம்.

    மொத்தத்தில் `என்ஜிகே' நழுவலானது கெத்து கூட்டணி.



    ரமணி இயக்கத்தில் நேதாஜி பிரபு தயாரிப்பு மற்றும் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘ஔடதம்’ படத்தின் விமர்சனம்.
    நாயகன் நேதாஜி பிரபு வக்கீலாக இருக்கிறார். வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட காலாவாதியான மூலப் பொருட்கள் இந்தியாவிற்கு வருகிறது. இதையறிந்த அரசு, இந்த மூலப் பொருட்களை அழிக்க சொல்லி ஆணையிடுகிறது. ஆனால், மர்ம கும்பல் ஒன்று இந்த மூலப் பொருட்களை வைத்து மாத்திரைகளை தயாரித்து இந்தியாவில் விற்பனை செய்து வருகிறார்கள்.

    தடைசெய்யப்பட்ட மருந்துகள் விற்கப்படுவதை நண்பர் மூலமாக அறிந்துக் கொள்ளும் நேதாஜி பிரபு அதை தடுக்க நினைக்கிறார். இதனால் பல்வேறு பிரச்சனைகளில் சிக்குகிறார். இறுதியில் நாயகன் நேதாஜி பிரபு, பிரச்சனைகளில் இருந்து மீண்டு, மர்ம கும்பலையும், காலாவதியான மூலப் பொருட்களையும் அழித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.



    படத்தின் நாயகனாக நடித்திருக்கும் நேதாஜி பிரபு வக்கீலாகவும், காலாவதியான மூலப் பொருட்கள் பயன்படுத்தப்படுவதை தெரிந்ததும், அதை தட்டிக்கேட்டும் துடிப்பான இளைஞராகவும் நடித்திருக்கிறார். ஆக்‌ஷன், பாடல்கள் காட்சிகளிலும் சிறப்பாக நடித்திருக்கிறார். 

    நாயகியாக நடித்திருக்கும் சமைரா டாக்டராக நடித்திருக்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் கொடுத்த வேலையை செய்து விட்டு சென்றிருக்கிறார்கள்.



    மெடிக்கல் கிரைம் திரில்லரில் நிறைய படங்கள் வந்திருந்தாலும், இப்படம் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் ரமணி. குறைந்த பட்ஜெட்டில் என்ன கொடுக்க முடியுமா அதை கொடுத்திருக்கிறார்கள். மெதுவாக நகரும் திரைக்கதை, பிற்பாதியில் விறுவிறுப்பாக முடித்திருக்கிறார்கள். ஒரு சில தேவையற்ற காட்சிகளை தவிர்த்திருக்கலாம்.

    தஷி இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணியில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். ஸ்ரீரஞ்சன் ராவின் ஒளிப்பதிவை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.

    மொத்தத்தில் ‘ஔடதம்’ பார்க்கலாம்.
    கய் ரிட்சி இயக்கத்தில் மெனா மசூத் - நாமி ஸ்காட் - வில் சுமித் நடிப்பில் வெளியாகி இருக்கும் `அலாதின்' படத்தின் விமர்சனம்.
    நாயகன் மெனா மசூத், அவரது குரங்குடன் சேர்ந்து சிறிய அளவில் திருடி தனது பிழைப்பை நடத்தி வருகிறார். இந்த நிலையில், அக்ரபா ராஜ்ஜியத்தின் இளவரசியான நாமி ஸ்காட் மாறுவேடத்தில் ஊருக்குள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறாள். அப்போது மெனா மசூத்துடன், நாமி ஸ்காட்டுக்கு பழக்கம் ஏற்படுகிறது. 

    நாமி ஸ்காட் இளவரசி என்று அறியாமல் அவருடன் பழக ஆரம்பிக்க, இருவரும் புரிதலில் வரும் வேளையில் இளவரசியின் காப்பு காணாமல் போகிறது. இளவரசியின் காப்பை தனது குரங்கு திருடியதை அறிந்து மெனா மசூத் அதனை திரும்ப கொடுப்பதற்காக அரச காவல்களை தாண்டி அரண்மனைக்குள் செல்கிறார்.



    இது அந்த நாட்டு சுல்தானின் முக்கிய ஆலோசகரான மர்வான் கென்சாரிக்கு தெரிய வருகிறது. இதையடுத்து மெனா மசூத் மூலம் குகையில் இருக்கும் அற்புத விளக்கை எடுக்க மர்வான் முடிவு செய்கிறார். அவர் மூலமாக நாமி ஸ்காட் இளவரசி என்பதும் தெரியவருகிறது. பின்னர் மர்வானின் ஆலோசனையின் பேரில், அந்த குகைக்கு செல்லும் மெனா மசூத், விளக்கை எடுத்துக் கொண்டு வெளியே வர, அற்புத விளக்கை வாங்கிவிட்டு நாயகனை குகைக்குள் தள்ளிவிடுகிறார் மர்வான்.

    இதற்கிடையே மர்வான் வாங்கிய விளக்கை குரங்கு திருடி விடுகிறது. அந்த விளக்கை தேய்க்க விளக்கில் இருந்து வெளியே வரும் வில் சுமித் மெனா மசூத்துக்கு மூன்று வரங்களை அளிக்கிறார்.



    இளவரசியை கரம்பிடிக்க நினைக்கும் மெனா மசூத், அதில் ஒரு வரத்தின் மூலம் ராஜாவாகிறார். பின்னர், மெனா மசூத், இளவரசியை பெண் பார்க்க செல்ல அந்த அற்புத விளக்கு மெனா மசூத்திடம் இருப்பது மர்வானுக்கு தெரிய வருகிறது.

    கடைசியில், மெனா மசூத் - இளவரசியுடன் சேர்ந்தாரா? மர்வான் தனது ஆசையை நிறைவேற்றிக் கொண்டாரா? ஜீனியான வில் சுமித்துக்கு விடுதலை கிடைத்ததா? என்பதே அலாதின் படத்தின் மீதிக்கதை.



    மெனா மசூத், நாமி ஸ்காட் கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்து மனதில் பதிகின்றனர். வில் சுமித் தனது அலாதியான காமெடி பேச்சால் ரசிக்க வைக்கிறார். மர்வான் கென்சாரி ஆசை கலந்த வில்லத்தனத்தில் மிரட்டுகிறார்.

    அலாவுதீன் கதையை தற்போதைய தொழில்நுட்பத்தின் மூலம் வண்ணமயமாக கொடுத்திருக்கிறார் கய் ரிட்சி. படத்தில் வசனங்கள் கூட பாடல்களாகவே நகர்கின்றன. படத்தின் தொடக்கமும், முடிவும் ஒரே புள்ளியில் இருப்பது சிறப்பு. தமிழ் வசனங்கள், பாடல் வரிகள் என அனைத்துமே ரசிக்கும்படியாக உள்ளன.

    ஆலன் மென்கெனின் இசையும், ஆலன் ஸ்டீவார்ட்டின் ஒளிப்பதிவும் படத்திற்கு பெரிய பலம்.

    மொத்தத்தில் `அலாதீன்' அற்புதம்.

    நடிகர்கள் அஞ்சலி, சாம் ஜோன்ஸ், யோகி பாபு நடிப்பில் ராஜூ விஸ்வநாத் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் ‘லிசா’ படத்தின் விமர்சனம்.
    சிறுவயதிலேயே அப்பாவை இழந்த நாயகி அஞ்சலி விதவை தாயுடன் வளர்கிறாள். இளம் பெண்ணான அஞ்சலி தனது தாய்க்கு மறுமணம் செய்து வைக்க வேண்டும் என்பது விருப்பம். ஆனால் மறுப்பு தெரிவிக்கும் அம்மா, காதல் திருமணம் செய்து கொண்டதால், தனது அம்மா, அப்பாவின் தொடர்பு இல்லாமல் போய்விட்டதாகக் கூறுகிறார். 

    இதையடுத்து தாத்தா, பாட்டியை தேடி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள அவர்களது வீட்டிற்கு செல்கிறார் அஞ்சலி. கூடவே தனது கல்லூரி ஜூனியர் சாம் ஜோன்சையும் அழைத்து செல்கிறார். அங்கு ஒரு வயதான தம்பதி வாழ்ந்து வருகிறார்கள். அவர்களை தனது தாத்தா, பாட்டி என நினைத்துக் கொள்கிறார் அஞ்சலி.



    அந்த வயதான தம்பதியின் நடவடிக்கைகள் அஞ்சலிக்கு சந்தேகத்தை வரவைக்கிறது. அந்த வீட்டில் ஒரு பேயும் இருக்கிறது. ஒரு நாள் அந்த பேய் அஞ்சலி முன் வந்து பயமுறுத்துகிறது. ஆனால் எதற்கும் அஞ்சாத அஞ்சலி, அந்த பேய் குறித்து அறிய நினைக்கிறார். மேலும் வயதான தம்பதியின் பின் உள்ள மர்மத்தை கண்டுபிடிக்க பார்க்கிறார். இறுதியில் அந்த பேய் என்பதை அஞ்சலி கண்டுபிடித்தாரா? அஞ்சலியின் உண்மையான தாத்தா, பாட்டி என்ன ஆனார்கள்? என்பதே படத்தின் மீதிக்கதை. 

    முதல் காட்சியில் இருந்து கடைசி காட்சி வரை அஞ்சலி தான் படத்தை தோளில் தாங்கியிருக்கிறார். அஞ்சலி ரசிகர்களுக்கு இந்த படம் பிடிக்கும். அஞ்சலி ஒல்லியான அழகு தேவதையாக ஜொலிக்கிறார். சாம் ஜோன்ஸ் அழகாகவும் இளமையாகவும் இருக்கிறார். பயப்படும் காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளார். நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்தால் ஒரு சுற்று வரலாம்.



    வில்லனாக மார்கரந்த் தேஷ்பாண்டே பயமுறுத்தி இருக்கிறார். பாட்டியாக வருபவரை பார்த்தாலும் பயமாக இருக்கிறது. யோகி பாபுவும், பிரம்மானந்தமும் சிரிக்க வைக்க முயன்று இருக்கிறார்கள்.

    அறிமுக இயக்குனர் ராஜூ விஸ்வநாத்தின் 3டி முயற்சிக்கு பெரிய பாராட்டு கொடுக்கலாம். முதல் பாதியில் எதிர்பார்ப்பு ஏற்படுத்தும் கதை இரண்டாம் பாதியில் ஏமாற்றத்தை தருகிறது. பிளாஷ்பேக் காட்சிகளில் அழுத்தம் இல்லாமல் இருக்கிறது. 3டி தொழில்நுட்பம் படத்திற்கு பெரும் பலமாக அமைந்திருக்கிறது.



    எதிர்பாராத வேளையில் வரும் டிவிஸ்ட் கொஞ்சம் ஆர்வத்தை கூட்டுகிறது. ஆனால், முடியப்போகும் நேரத்தில் மேலும் பிளாஷ் பேக் வருவது கொஞ்சம் வருத்தம் அளிக்கிறது. அழுத்தமான கதையும் சுவாரசியமான திரைக்கதையும் அமைத்து இருந்தால் குழந்தைகளையும் குடும்ப ரசிகர்களையும் இன்னும் ஈர்த்து இருக்கலாம்.

    பிஜி.முத்தையா ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் தரம். சந்தோஷ் தயாநிதி இசை ஓரளவிற்கு மிரட்டியிருக்கிறது.

    மொத்தத்தில் ‘லிசா’ மிரட்டல் குறைவு.
    எல்.கே.சுரேஷ் இயக்கத்தில் ஜெய் - கேத்தரின் தெரசா, ராய் லட்சுமி, வரலட்சுமி நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘நீயா 2’ படத்தின் விமர்சனம்.
    நடிகர் ஜெய், பால சரவணன் இருவரும் ஒன்றாக வேலை பார்க்கிறார்கள். ஜெய்யை பார்க்கும் கேத்தரின் தெரசாவுக்கு ஜெய் மீது காதல் வந்து, அவரை திருமணம் செய்துகொள்ள விருப்பப்படுகிறார். கேத்தரின் தனது காதலை ஜெய்யிடம் தெரிவிக்க, ஜெய் கேத்தரினை திருமணம் செய்ய மறுக்கிறார். கேத்தரின் விடாப்பிடியாக இருக்க, தனக்கு நாக தோஷம் இருப்பதால், நாக தோஷம் இருக்கும் பெண்ணை தான் தன்னால் திருமணம் செய்து கொள்ள முடியும் என்று ஜெய் கூறுகிறார்.

    பின்னர் தனக்கும் நாக தோஷம் இருப்பதாக கேத்தரின் கூற, இருவருக்கும் திருமணம் நடக்கிறது. திருமணத்திற்கு பிறகு கேத்தரினுக்கு நாக தோஷம் இல்லை என்பது தெரிய வர, பரிகாரம் செய்வதற்காக இருவரும் கொடைக்கானல் செல்கின்றனர்.



    அங்கு கடந்த ஜென்மத்தில் கிடைத்த சாபத்தால், பிரிந்த தனது காதலனான ஜெய்யுடன் சேருவதற்காக காத்திருக்கிறார் பாம்பு பெண்ணாகிய ராய் லட்சுமி.

    கடைசியில், ஜெய்யின் நாக தோஷம் நீங்கியதா? கேத்தரினுடன் இணைந்தாரா? ராய் லெட்சுமியுடன் இணைந்தாரா? ராய் லட்சுமியின் முன் வாழ்க்கைக் கதை என்ன? அவருக்கு சாபம் வழங்கியது யார்? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.



    நடிகர் ஜெய் இரண்டு விதமான கதாபாத்திரங்களில் வந்து கொடுத்த வேலையை சிறப்பாக செய்துவிட்டுச் சென்றிருக்கிறார். காதல், ஆக்‌ஷன் என தனது வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். 

    ஜெய்யை துரத்தி துரத்தி காதலிக்கும் கதாபாத்திரத்தில் கேத்தரின் தெரசா ரசிகர்களை கவர்கிறார். காதல், கவர்ச்சி என கிறங்கடிக்கிறார். பாம்பு பெண்ணாக ராய் லட்சுமி ராயலான பாம்பாக வலம் வருகிறார். குறைவான காட்சிகளில் வந்தாலும் வரலட்சுமி தனது கதாபாத்திரத்திற்கு மெருகேற்றிவிட்டு சென்றிருக்கிறார். பால சரவணன் காமெடியில் ஓரளவு சிரிக்க வைக்கிறார்.



    நாக தோஷத்தை மையமாக வைத்து படத்தின் கதையை நகர்த்தியிருக்கிறார் எல்.கே.சுரேஷ். முதல்பாதியில் இருந்த வேகம் இரண்டாவது பாதியிலும் தொடர்ந்திருந்தால் இன்னமும் நன்றாக இருந்திருக்கும். பாம்பு வரும் கிராபிக்ஸ் காட்சிகள் விறுவிறுப்பை தூண்டுகின்றன. படத்தில் எந்த அளவுக்கு விறுவிறுப்பு இருக்கிறதோ அந்த அளவுக்கு கவர்ச்சியும் இருக்கிறது.

    ஷபீரின் பின்னணி இசையும், ராஜவேல் மோகனின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலமாக இருந்துள்ளன.

    மொத்தத்தில் ‘நீயா 2’ கவர்ச்சி.

    சி.விஜயன் இயக்கத்தில் விவேக் - ஷில்பா மஞ்சுநாத் - சச்சு நடிப்பில் வெளியாகி இருக்கும் `பேரழகி ஐ.எஸ்.ஓ' படத்தின் விமர்சனம்.
    சச்சுவின் மகன் லிவிஸ்டன், பேத்தி ஷில்பா மஞ்சுநாத். வயதானாலும் இளமையோடு இருப்பதாக நினைத்துக் கொண்டு ஜாலியாக இருக்கிறார் சச்சு. 

    அதே பகுதியில் வசித்து வரும் நாயகன் விவேக் ஒரு போட்டோகிராபர். அழகான பெண் ஒருவரை தேர்வு செய்து அவரை வைத்து மாடலிங் போட்டோக்கள் எடுத்து பெரிய ஆளாக வேண்டும் என்று விரும்புகிறார். இந்த நிலையில், ஷில்பாவை பார்த்து அவருடன் பழக்கம் ஏற்படுத்திக் கொள்கிறார்.



    இதற்கிடையே, சச்சுவின் லூட்டியை தாங்க முடியாத லிவிங்ஸ்டன் அவரை திட்ட, சச்சு வீட்டை விட்டு வெளியேறி கார்பரேட் நிறுவனம் ஒன்றின் பிடியில் சிக்கிக் கொள்கிறார். இளமையுடன் வாழ்வதற்கான மருந்தை சச்சுவை வைத்து அவர்கள் சோதிக்கிறார்கள். அழகிலும் இளமையிலும் அதிக கவனம் செலுத்தும் சச்சு, இந்த கும்பலிடம் சிக்கி தன் பேத்தி ஷில்பா மஞ்சுநாத் போன்ற உருவத்துக்கு மாறிவிடுகிறார். இதற்கிடையே விவேக் - ஷில்பா இடையே காதல் ஏற்படுகிறது. தோற்றத்தில் ஒரே மாதிரியாக இருக்கும் இவர்களுக்கிடையே விவேக் சிக்கித் தவிக்க, ஒரு கட்டத்தில் இவர்களது காதலில் பிளவு ஏற்படுகிறது. 

    கடைசியில், இளமையான தோற்றத்தில் இருக்கும் சச்சு தனது பழைய தோற்றத்துக்கு மாறினாரா? ஷில்பா - விவேக் இணைந்தார்களா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.



    ஷில்பாவிற்கு வித்தியாசமான இரட்டை வேடம். அசத்தி இருக்கிறார். பாட்டி குரலில் அவர் பேசிக்கொண்டு அடிக்கும் கலாட்டாக்கள் சிரிப்பை வரவைக்கின்றன. படத்தின் இன்னொரு நாயகியாக சச்சு. அனுபவ நடிப்பால் கவர்கிறார். தனது கதாபாத்திரத்தை உணர்ந்து இறங்கி அடித்துள்ளார்.

    பாட்டி யார், பேத்தி யார் என்பது தெரியாமல் குழம்பும் ஷில்பாவின் காதலர் பாத்திரத்தில் விவேக், சச்சுவின் மகனாக லிவிங்ஸ்டன், கார்ப்பரேட் அதிபராக சரவண சுப்பையா, போட்டோவில் மட்டும் வாழ்ந்துகொண்டு அடிக்கடி பாட்டியுடன் உரையாடும் கணவர் டெல்லி கணேஷ், ஆர்.சுந்தர்ராஜன் ஆகியோரும் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளனர்.



    புதுமையான ஒருவரிக்கதையை எடுத்து அதில் சரியான கதாபாத்திரங்களை உருவாக்கி கவனிக்க வைக்கிறார் இயக்குனர் சி.விஜயன். முன்பாதியில் உள்ள வேகமும் விறுவிறுப்பும் பின்பாதியிலும் தொடர்வது சிறப்பு. திரைக்கதை, வசனத்திலும் தொழில்நுட்ப வி‌ஷயங்களிலும் இன்னும் கவனம் செலுத்தி இன்னும் நன்றாக சிரிக்க வைத்து இருக்கலாம். வித்தியாசமான கதைக்களத்தில் ஷில்பா, சச்சுவின் நடிப்பால் இந்த பேரழகி கவர்கிறாள்.

    இ.ஜே.நவ்‌ஷத்தின் ஒளிப்பதிவு தரம். சார்லஸ் தனாவின் இசையில் பாடல்கள் முணுமுணுக்க வைக்கின்றன. ஆனால் பின்னணி இசை சில இடங்களில் ஒட்டவில்லை.

    மொத்தத்தில் `பேரழகி ஐ.எஸ்.ஓ' அழகு தான்.

    ராஜதுரை இயக்கத்தில் சஞ்ஜெய் - ஓவியா நடிப்பில் வெளியாகி இருக்கும் `ஓவியாவ விட்டா யாரு சீனி' படத்தின் விமர்சனம்.
    மனோஜ்குமார்-மீராகிருஷ்ணன் தம்பதியின் மகன் சஞ்ஜெய். தன் அப்பாவை போல மாத சம்பளத்துக்கு வேலை செய்ய விரும்பாமல் சுயமாக தொழில் செய்து பெரிய ஆளாக வேண்டும் என்று ஆசைப்படுகிறார். இவரும், பக்கத்து வீட்டுப்பெண்ணான ஓவியாவும் காதலிக்கிறார்கள்.

    இந்த நிலையில், பணம் சம்பாதிப்பற்கான வழியை காட்டுவதாக கூறி ஆசை வளர்க்கிறார் ராதாரவி. மண்ணுளி பாம்பு, சஞ்சீவி குச்சி, நாகரத்னம், நட்சத்திர ஆமை ஆகியவை மூலம் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம் என்று சஞ்ஜெய்யின் தொழிலதிபராகும் ஆசையை தூண்டிவிடுகிறார்.



    ராதாரவி-சஞ்ஜெய் இருவரும் சொல்வதை நம்பி, மாவட்ட கலெக்டரான அருள்தாஸ், போலீஸ் அதிகாரி ரவிமரியா உள்ளிட்டோர் ஏமாறுகிறார்கள். இதற்கிடையே வியாபாரியான சரவணனும், ஓவியாவை ஒருதலையாக காதலிக்கிறார். அவருக்கு சஞ்ஜெய்-ஓவியாவின் காதல் தெரியவர சஞ்ஜெய்யை கொலை செய்ய எண்ணுகிறார். மறுபக்கம் ஏமாந்தவர்கள் சஞ்ஜெய்யை துரத்துகிறார்கள்.

    இவர்களிடம் இருந்து சஞ்ஜெய் எப்படி தப்புகிறார்? தொழிலதிபர் ஆனாரா? ஓவியாவுடன் சேர்ந்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.



    வேலை வெட்டி எதுவும் செய்யாமல் நண்பர்களுடன் சுற்றும் சஞ்ஜெய் ஓவியாவுடன் காதல்-டூயட், ரவுடிகளுடன் சண்டை என ஒரு கதாநாயகனுக்கு உரிய வேலைகளை சுறுசுறுப்பாக செய்திருக்கிறார். ஓவியா டைட்டிலில் ஆரம்பித்து, படம் முழுக்க வருகிறார். பாடல் காட்சிகளில் உள்ளாடை தெரியும்படி ஆடி, கவர்ச்சி விருந்து கொடுக்கிறார். டைட்டிலைப்போல் பாடல்களிலும் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

    படத்தின் கூடுதல் அம்சமாக ராதாரவியின் நகைச்சுவை கலந்த வில்லத்தனம் அமைந்திருக்கிறது. அவர் தொடர்பான காட்சிகளில், தியேட்டரில் கலகலப்பும், எதிர்பார்ப்பும் அதிகமாகின்றன. இன்னொரு வில்லனாக ரவிமரியா காமெடி செய்கிறார். கடைசி சண்டை காட்சியில், மிரட்டுகிறார். வியாபாரி சரவணன் திடீர் வில்லனாக மாறுவது, எதிர்பாராத திருப்பம். யானைப்பாகனாக செந்தில், சஞ்ஜெய்யின் தாத்தாவாக டி.பி.கஜேந்திரன் ஆகியோரும் சிரிக்க வைக்கிறார்கள்.



    மூடநம்பிக்கையை மூலதனமாக வைத்து மோசடி செய்யும் ஆசாமிகளை நம்ப வேண்டாம் என்ற கருத்தை காமெடி கலந்து சொல்லியிருக்கிறார், இயக்குனர் ராஜதுரை. படத்தின் முதல் பாதி மெதுவாகவும், இரண்டாம் பாதி விறுவிறுப்பாகவும் நகர்கிறது.

    ஸ்ரீகாந்த் தேவா இசையில் பாடல்கள் செம குத்து. ஈ.கே.நாகராஜின் ஒளிப்பதிவு ரசனை.

    மொத்தத்தில் `ஓவியாவ விட்டா யாரு சீனி' ஆசை.

    ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, சதீஷ், ரோபோ சங்கர், யோகிபாபு நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘மிஸ்டர்.லோக்கல்’ படத்தின் விமர்சனம்.
    நாயகன் சிவகார்த்திகேயன் கார் ஷோரூமில் வேலை பார்த்து வருகிறார். இவருடன் சதீஷ், ரோபோ சங்கர் ஆகியோர் வேலை பார்த்து வருகிறார்கள். சிவகார்த்திகேயனின் அம்மாவான ராதிகா, டி.வி.சீரியல் நடிகையிடம் ஒரு போட்டோ எடுக்க வேண்டும் என்று கேட்கிறார். அம்மாவின் ஆசை நிறைவேற்றுவதற்காக டி.வி. நடிகையிடம் பேசி போட்டோ எடுக்க அனுமதி வாங்குகிறார்.

    டி.வி. நடிகையை பார்க்க படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு சென்ற சிவகார்த்திகேயன் அங்கு டி.வி. தொடர் தயாரிப்பாளர் நாயகி நயன்தாராவை சந்திக்கிறார். இவர்களின் முதல் சந்திப்பே மோதலில் ஆரம்பிக்கிறது. இந்த மோதலில் டி.வி. நடிகைக்கு பாதிப்பு ஏற்படுகிறது. பின்னர் டி.வி. நடிகைக்காக பேச போய், மீண்டும் சிவகார்த்திகேயனுக்கும் நயன்தாராவிற்கும் மோதல் ஏற்படுகிறது.



    அடிக்கடி நடக்கும் மோதலால் சிவகார்த்திகேயனுக்கு நயன்தாரா மீது காதல் ஏற்படுகிறது. மிகவும் செல்வந்தராக இருக்கும் நயன்தாராவிடம் மிடில் கிளாசை சேர்ந்த சிவகார்த்திகேயன், தன்னுடைய காதலை சொன்னாரா? இருவரும் இணைந்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தின் நாயகனாக நடித்திருக்கும் சிவகார்த்திகேயன், தனக்கே உரிய பாணியில் காமெடி, ஆக்‌ஷன், நடனம் என அனைத்திலும் சிறப்பாக ஸ்கோர் செய்திருக்கிறார். இவரின் டைமிங் காமெடி பெரிதும் உதவி இருக்கிறது. நாயகியாக நடித்திருக்கும் நயன்தாரா படம் முழுவதும் அழகு பதுமையாக வருகிறார். சிவகார்த்திகேயன் மீது கோபம் காட்டும் போதும், அன்பு காட்டும் போதும் அழகாகவே நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.



    சிவகார்த்திகேயனுடன் வேலை பார்க்கும் சதீஷ், ரோபோ சங்கர், ஆட்டோ ஓட்டுநராக வரும் யோகிபாபு ஆகியோர் காமெடியில் கலக்கி இருக்கிறார்கள். வெகுளியான தாயாக நடித்து மனதில் பதிந்திருக்கிறார் ராதிகா. அனுபவ நடிப்பால் கைத்தட்டல் பெற்றிருக்கிறார் மேனேஜராக வரும் தம்பிராமையா. 

    காமெடி படங்களுக்கு மிகவும் பெயர் பெற்ற இயக்குனர் ராஜேஷ், இந்த படத்தையும் தன்னுடைய வழக்கமான பாணியிலேயே இயக்கி இருக்கிறார். கதாபாத்திரங்களிடையே சிறப்பாக வேலை வாங்கி இருக்கிறார். குடிப்பது, புகைப்பிடிக்கும் காட்சிகள் இல்லாமல் எடுத்தது சிறப்பு. திரைக்கதையின் நீளம் படத்திற்கு பலவீனமாக அமைந்திருக்கிறது. அதுபோல் நகைச்சுவை இன்னும் அதிகமாக இருந்திருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம்.



    வில்சன் மற்றும் தினேஷ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது. ஆதியின் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர். பின்னணி இசையில் மிரள வைத்திருக்கிறார்.

    மொத்தத்தில் ‘மிஸ்டர்.லோக்கல்’  பொழுதுபோக்கு.
    ×