என் மலர்
சினிமா செய்திகள்
தமிழில் ரட்சகன் படம் மூலம் அறிமுகமான பிரபல இந்தி நடிகை சுஷ்மிதா சென் தற்போது ஜிம்னாஸ்டிக் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
முன்னாள் உலக அழகி சுஷ்மிதாசென், நாகார்ஜூனா நடித்த ‘ரட்சகன்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். பின்னர் இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் நடித்துவந்தார்.
சமீபகாலமாக இவருக்கு சினிமாவில் பெரிய வாய்ப்பு இல்லை. என்றாலும், தனது சமூக வலைத்தள பக்கத்தில் கவர்ச்சியான படங்கள் மற்றும் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் படங்கள் ஆகியவற்றை வெளியிட்டு வருகிறார்.
It’s not enough to have wings, you gotta train them to fly👊 #TuesdayMotivation#MyDiscipline#GymnasticRings#Fly 😊❤️I love you guys!!! pic.twitter.com/Uc7GrSblp0
— sushmita sen (@thesushmitasen) July 22, 2019
தற்போது ஜிம்னாஸ்டிக் செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். இதைப் பார்த்த ரசிகர்கள் இவ்வளவு வயதிலும் இப்படி உடற்பயிற்சி வருகிறீர்கள். இன்னும் இளமையுடனே இருக்கிறீர்கள் என்று வியந்து பாராட்டி வருகிறார்கள்.
மார்வெல் சூப்பர் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று தனக்கு மிகுந்த ஆசை உள்ளதாக பிரபல நடிகை விருப்பம் தெரிவித்துள்ளார்.
பாலிவுட்டில் முன்னணி நாயகிகளில் ஒருவராக வலம்வரும் டாப்சி, தற்போது சாந்த் கி ஆங்க், மிஷன் மங்கல் படங்களில் நடித்துவிட்டு அதன் ரிலீசுக்காக காத்திருக்கிறார். சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான கேம் ஓவர் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், இந்தி மீடியாவுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது: ’எனக்கு அவெஞ்சர்ஸ் திரைப்படம் மிகவும் பிடிக்கும். முக்கியமாக அயர்ன் மேனுக்கு நான் மிகப்பெரிய ரசிகை. மார்வெல் சூப்பர் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று எனக்கு மிகுந்த ஆசை.

கேப்டன் மார்வெல் படம் பார்த்தபோது என்னால் அந்தக் கதாபாத்திரத்தைச் சிறப்பாக செய்ய முடியும் என்று தோன்றியது. மார்வெல் கதாபாத்திரங்களில் இந்திய சூப்பர் ஹீரோ கதாபாத்திரம் ஏதாவது இருந்து அதில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன்” என்றார்.
தமிழ், தெலுங்கு, இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கும் தமன்னா, அடுத்ததாக லட்சுமி மேனன் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 2014-ம் ஆண்டு மதுரையை களமாக கொண்டு உருவாகிய படம் ஜிகர்தண்டா. சித்தார்த் கதாநாயகனாக நடித்த இந்த படத்தில் லட்சுமி மேனன் அவருக்கு ஜோடியாக நடித்தார். முக்கிய கதாபாத்திரத்தில் பாபி சிம்ஹா நடித்திருந்தார். அந்த படத்துக்காக 2014-ம் ஆண்டின் தேசிய விருதை பெற்றார் அவர்.
ஏற்கனவே அதர்வா நடிப்பில் தெலுங்கில் ரீமேக்காகி வரும் படம், தற்போது பாலிவுட்டிலும் ரீமேக்காக உருவாக உள்ளது. அதற்கான நடிகர்கள் தேர்வு தீவிரமாக நடைபெற்று வருகிறது. சித்தார்த் நடித்த பாத்திரத்தில் இயக்குனரும் நடிகருமான பர்கான் அக்தர் நடிப்பதாக இருந்தது. ஆனால், தற்போது அவர் இந்தப் படத்தில் நடிக்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

வளர்ந்து வரும் நடிகரான கார்த்திக் ஆர்யன் இந்த பாத்திரத்தில் நடிக்க உள்ளார். பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் தயாரிப்பில் இந்த படத்தை அபிஷேக் இயக்க உள்ளார். மேலும் படத்தில் முக்கிய கதாபாத்திரமாகக் கருதப்படும் பாபி சிம்ஹா ரோலில் சஞ்சய் தத், லட்சுமி மேனன் நடித்த வேடத்தில் தமன்னா நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது தமன்னா, நவாசுதீன் சித்திக் ஜோடியாக போலே சுதீயா என்ற பாலிவுட் படத்தில் நடித்து வருகிறார்.
டி.ரமேஷ் செல்வன் இயக்கத்தில் புதுமுகங்கள் மனோ, ஐரா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘நுங்கம்பாக்கம்’ படத்தின் முன்னோட்டம்.
விஜயகாந்த் நடித்த ‘உளவுத்துறை’, சத்யராஜ் நடித்த ‘கலவரம்’, அருண்விஜய் நடித்த ‘ஜனனம்’ உட்பட பல படங்களை இயக்கிய டி.ரமேஷ் செல்வன், இப்போது ரவிதேவன் தயாரிப்பில் புதுமுகங்கள் மனோ, ஐரா நடிப்பில் ‘நுங்கம்பாக்கம்’ என்கிற படத்தை இயக்கி இருக்கிறார். முக்கிய வேடத்தில் அஜ்மல் நடித்திருக்கிறார்.
ஒளிப்பதிவு : ஜோன்ஸ் ஆனந்த், இசை : ஷாம் டி ராஜ், கலை : ஜெய்சங்கர், எடிட்டிங் : மாரி, தயாரிப்பு நிர்வாகம் : கே.சிவசங்கர், கதை, வசனத்தை ஆர்.பி.ரவி எழுதி இருக்கிறார். திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கிறார் டி.ரமேஷ் செல்வன்.

நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண் கொலை செய்யப்பட்ட கொடூரத்தை தான் இயக்குனர் படமாக்கியுள்ளார். இப்படத்தில் நடந்த சம்பவங்கள் அப்படியே பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் மேலும், மக்களுக்கு தெரிவிக்கப்படாத நிறைய சம்பவங்கள் படத்தில் இடம்பெற்றுள்ளது என இயக்குநர் ரமேஷ் செல்வன் தெரிவித்துள்ளார்.
காசோலை மோசடி வழக்கில் தமிழ்ப்பட துணை நடிகைக்கு 6 மாதம் ஜெயில் தண்டனை வழங்கி மும்பை கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.
தமிழில் அஜித் நடித்து வெளியான ‘அசல்' படத்தில் சிறு வேடத்தில் நடித்து இருப்பவர் துணை நடிகை கோய்னா மித்ரா. சூர்யா நடித்த ‘அயன்' படத்தில் வரும் ‘ஹனி, ஹனி' பாடல் மற்றும் தூள் படத்தில் வரும் ‘கொடுவா மீசை' பாடலிலும் நடனமாடி இருப்பார். இவர் பூனம் செதி என்ற மாடல் அழகியிடம் கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது.
கடனை திருப்பி கொடுக்க 2013-ம் ஆண்டு நடிகை கோய்னா மித்ரா அவருக்கு ரூ.3 லட்சத்துக்கான காசோலையை கொடுத்து உள்ளார். ஆனால் நடிகையின் வங்கிக்கணக்கில் பணமில்லாமல் காசோலை திரும்பி வந்தது.

இந்த காசோலை மோசடி குறித்து மாடல் அழகி, நடிகை கோய்னா மித்ரா மீது மும்பை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு நடிகை கோய்னா மித்ராவுக்கு 6 மாதம் ஜெயில் தண்டனை விதித்து உத்தரவிட்டது. மேலும் மாடல் அழகி பூனம் செதிக்கு ரூ.1 லட்சத்து 64 ஆயிரம் வட்டியுடன் சேர்த்து ரூ.4 லட்சத்து 64 ஆயிரத்தை நடிகை கோய்னா மித்ரா கொடுக்க வேண்டும் என தீர்ப்பு கூறியது.
புதிய கல்விக்கொள்கை தொடர்பாக கருத்து தெரிவித்த சூர்யாவுக்கு நடிகர் சத்யராஜ் ஆதரவு தெரிவித்துள்ளார்.
புதிய கல்விக்கொள்கை தொடர்பாக சமீபத்தில் கருத்து தெரிவித்த நடிகர் சூர்யா, மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை அம்சங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். மேலும் ‘அனைவருக்கும் சமமான கல்வியை வழங்காமல் நீட் போன்ற நுழைவு தேர்வுகள் நடத்துவது ஏன்?’ என்று கேள்வியெழுப்பி நீட் தேர்வையும் விமர்சித்திருந்தார். சூர்யாவின் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியது. சூர்யாவின் இந்த பேச்சுக்கு எதிர்ப்புகள் வந்தாலும், பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், புதிய கல்விக்கொள்கை தொடர்பாக கருத்து தெரிவித்த சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்து நடிகர் சத்யராஜ் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:- சமூக நீதிக்காக குரல் கொடுத்த சூர்யாவை பார்த்து பெருமைப்படுகிறேன். முன்னணி நடிகராக இருந்து கொண்டு சமூக பிரச்னைக்கு குரல் கொடுக்கும்போது பல்வேறு சங்கடங்கள் வரும். பல்வேறு சங்கடங்களையும் கடந்து சூர்யா குரல் கொடுத்திருப்பது வரவேற்கத்தக்கது. சூர்யாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
@Suriya_offl Heartfelt wishes from Appa and our entire family anna!🙏🏻 #HappyBirthdaySURYApic.twitter.com/igqGTne4oY
— Sibi Sathyaraj (@Sibi_Sathyaraj) July 23, 2019
சத்யராஜின் இந்த வீடியோவை அவரது மகனும் நடிகருமான சிபி சத்யராஜ் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
சாந்தகுமார் இயக்கத்தில் ஆர்யா, மகிமா நம்பியார், இந்துஜா நடிப்பில் உருவாகி வரும் ‘மகாமுனி’ படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
`கஜினிகாந்த்' படத்திற்கு பிறகு ஆர்யா கதாநாயகனாக நடித்திருக்கும் படம் ‘மகாமுனி’. சாந்தகுமார் இயக்கி இருக்கும் இப்படத்தில் மகிமா நம்பியார், இந்துஜா நாயகிகளாக நடித்துள்ளனர். ஜூனியர் பாலையா, ஜெயபிரகாஷ், அருள்தாஸ், ஜி.எம்.சுந்தர், காளி வெங்கட் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வந்தது. தற்போது இப்படத்தை செப்டம்பர் மாதம் வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
Meet the #MagaMuni in September!#SanthaKumar to take you on an Intense Ride with @arya_offl 🔥
— Studio Green (@StudioGreen2) July 23, 2019
Can't wait for it to hit the Screens 🌟@Actress_Indhuja@Mahima_Nambiar@MusicThaman#ArunPadmanabhan@editorsabu@proyuvraaj#TarunPicturespic.twitter.com/qqQ1pi6hDH
அருண் பத்மநாபன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு எஸ்.எஸ்.தமன் இசையமைக்கிறார். பாடல்களை கவிஞர் முத்துலிங்கம் எழுதுகிறார். தேசிய விருதுப்பெற்ற வி.ஜே. சாபு ஜோசப் படத்தொகுப்பை கவனிக்கிறார். மௌன குரு படத்திற்கு பிறகு சாந்தகுமார் இயக்கியிருப்பதால் இப்படம் மீது அதிக எதிர்ப்பார்ப்பு நிலவியுள்ளது.
சூர்யா பிறந்தநாளான இன்று அவரது மனைவி ஜோதிகா டுவிட்டர் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கும் சூர்யா இன்று தனது 44-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையடுத்து அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. ரசிகர்களும் பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அவரது ரசிகர்கள் பலர் நற்பணிகள் செய்து சூர்யா பிறந்த்நாளை கொண்டாடி வருகின்றனர். இன்று காலை வரை #HappyBirthdaySURYA என்கிற ஹேஷ்டாக் டுவிட்டரில் டிரெண்டாகி வந்தது.
இந்த நிலையில் இன்று காலை 11 மணிக்கு ஜோதிகா நடிப்பில் வெளியாக இருக்கும் ‘ஜாக்பாட்’ படத்தின் டிரைலரை சூர்யா வெளியிட்டார். டிரைலர் வெளியான சில நிமிடங்களில் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்தது.

ஆக்ஷன் கலந்த காமெடி படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் ரேவதி, யோகி பாபு, ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன், ஜெகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். `குலேபகாவலி' படத்தை இயக்கிய கல்யாண் இப்படத்தை இயக்கியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா, தனது மகள்கள் ஐஸ்வர்யா மற்றும் சவுந்தர்யாவுடன் சென்று அத்திவரதரை வழிபட்டார்.
காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நடைபெறும் அத்திவரதர் தரிசனத்திற்கு தினமும் லட்சக்கணக்கானோர் வருகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் வசதிகளை கண்காணிக்க இரு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்து தலைமை செயலர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார். அவர்கள் காஞ்சீபுரம் கலெக்டர் பொன்னையாவுடன் சேர்ந்து பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், அறநிலையத் துறை நிர்வாகம் விரைவு தரிசனத்திற்காக அறிமுகப்படுத்திய 300 ரூபாய் 'ஆன்லைன்' டிக்கெட்டில் மாற்றத்தை செய்துள்ளது. மாலை 6:00 மணி முதல் இரவு 9:30 மணி வரை அத்திவரதரை விரைவாக தரிசிக்க முதலில் 500 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டது. இரு நாட்களுக்கு முன் 1000 பேராக உயர்த்தப்பட்டு தற்போது ஒரு நாளைக்கு 2000 பேர் விரைவு தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்படுவதாக அறநிலையத் துறை இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு தனது மகள்களுடன் சென்ற நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதாவுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டது. தனது மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா மற்றும் பேரக் குழந்தைகளுடன், லதா ரஜினிகாந்த் அத்திவரதரை மனமுருக வழிபட்டார். நடிகர் ரஜினிகாந்த் விரைவில் அத்திவரதரை தரிசிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு சினிமாவில் கவனம் செலுத்தி வரும் ஸ்ருதிஹாசன், சினிமா என்னை தத்தெடுத்துக் கொண்டது என்று கூறியிருக்கிறார்.
ஸ்ருதிஹாசன் 2017-ல் திரைக்கு வந்த 3 படத்துக்கு பிறகு சினிமாவில் நடிக்காமல் இருந்தார். லண்டன் காதலர் மைக்கேலை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகப் போகிறார் என்று பேசப்பட்டது. ஆனால், சமீபத்தில் அவர்கள் காதலில் முறிவு ஏற்பட்டதாக தகவல் வெளியானது. இப்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார்.
ஜனநாதன் இயக்கும் ‘லாபம்’ படத்தில், விஜய் சேதுபதி ஜோடியாக வருகிறார். ஒரு இந்தி படத்திலும் நடிக்கிறார். ஸ்ருதிஹாசன் அளித்த பேட்டி வருமாறு:-
“நடிக்க வேண்டும் என்பது உங்கள் சிறுவயது கனவா இல்லை உங்கள் பெற்றோர் சினிமாவில் இருந்ததால் இந்த துறைக்கு வந்தீர்களா?” என்று பலரும் என்னிடம் கேட்கிறார்கள். கோழி முதலில் வந்ததா, முட்டை முதலில் வந்ததா? என்ற பழமொழியை சிறுவயதில் இருந்தே கேட்டு இருக்கிறேன். அந்த பழமொழிதான் இதற்கு பதில்.

நான் சினிமா குடும்பத்தில் வளர்ந்தேன். ஆனால் உனது முதல் தேர்வு எது என்று கேட்டால் இசை என்றுதான் சொல்வேன். சினிமா என்னை தத்தெடுத்துக் கொண்டது. சிறுவயதில் பள்ளியில் இருந்து வந்ததும் எனது தந்தையுடன் சினிமா படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்கு போய்விடுவேன்.
ஜெனரேட்டர் வேன் அருகில் உட்கார்த்து வீட்டுபாடம் எழுதுவேன். தயாரிப்பு நிர்வாகிகள் என்னை அன்பாக கவனித்துக்கொள்வார்கள். அதனால்தான் எனக்கு சினிமா மீது பற்று வந்ததா? என்று தெரியவில்லை. சினிமா துறைதான் என்னை அழைத்தது. ஆனால் ஒன்று மட்டும் நிஜம். எனது வாழ்க்கையை சினிமாவில் இருந்து பிரித்து பார்க்கவே முடியாது.”
இவ்வாறு ஸ்ருதிஹாசன் கூறினார்.
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, குடிநீர் பிரச்சனையை தீர்க்க யோசனை ஒன்றை சொல்லியுள்ளார்.
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர், சமந்தா. சென்னை பெண்ணான இவர் திருமணத்துக்குப்பின், ஐதராபாத்தில் குடியேறிவிட்டார். தற்போது சென்னை, ஐதராபாத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினையை சமாளிக்க சமந்தா யோசனை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-
“குடிநீர் பிரச்சினையில் சென்னை மாநகரம் அல்லாடுகிறது. மக்கள் தண்ணீருக்காக வேலைக்கு செல்லாமல் நீண்ட வரிசையில் காத்து நிற்கிறார்கள். மழை இல்லாததால், நீர் தேக்கங்கள் காய்ந்து கிடக்கின்றன. நிறைய இடங்களில் இந்த நிலைமை இருக்கிறது. ஐதராபாத்திலும் குடிநீர் பிரச்சினை நிலவுகிறது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பது நமது கையில் இருக்கிறது. தண்ணீரை வீணாக்காமல் இருந்தால் தண்ணீர் பற்றாக்குறையை தடுக்கலாம்.

வெறும் வார்த்தைகளால் மட்டும் இதை சொல்லவில்லை. எனது ரசிகர்களுக்கு ஒரு சவாலை விடுக்கிறேன். அதை நானும் கடைபிடிக்கப் போகிறேன்.
மாநிலங்கள் மட்டுமல்ல, இந்த நாடு முழுவதுமே எதிர்காலத்தில் தண்ணீர் பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். ஒரு பக்கெட் சவாலை ஏற்க வேண்டும். ஒரே பக்கெட் தண்ணீரோடு காலை கடன்கள் அனைத்தையும் முடிக்கப் போகிறேன். தண்ணீரை எப்படி சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்பதையும் தெரிவிக்கிறேன். எல்லோரும் இதை கடைபிடிக்க வேண்டும். ஒரு பக்கெட் தண்ணீரை எப்படி பயன்படுத்தினீர்கள்? என்பதை சமூக வலைத்தளத்தில் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.”
இவ்வாறு சமந்தா கூறினார்.
சர்வதேச கிரிக்கெட்டில் புகழ் பெற்ற ஒரு வீரரின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் விஜய்சேதுபதி நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தோனி, சச்சின் உள்பட பல கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்களாக உருவாகி வெற்றி பெற்று வரும் நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் புகழ் பெற்ற ஒரு வீரரின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் விஜய்சேதுபதி நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகவிருப்பதாக கூறப்படுகிறது. இதில் முரளிதரன் கதாபாத்திரத்தில் விஜய்சேதுபதி நடிக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முத்தையா முரளிதரன் சர்வதேச கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுக்களை வீழ்த்தி சாதனை புரிந்துள்ளதால் இந்த படத்திற்கு '800' என பெயரிடப்பட உள்ளதாகவும், இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.






