என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ‘இம்சை அரசன் 24 ம் புலிகேசி’ படத்தில் இருந்து முழுமையாக வெளியே வந்துள்ள வடிவேலு, வலுவான கூட்டணியுடன் அடுத்த படத்தில் நடிக்க போவதாக கூறினார்.
    ‘இம்சை அரசன் 24 ம் புலிகேசி’ படத்தில் இருந்து முழுமையாக வெளியே வந்துள்ள நடிகர் வடிவேலு, அதுதொடர்பாக நடந்த பேச்சு வார்த்தைகள், சமரசங்கள், கருத்து வேறுபாடுகள் அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். வடிவேலு நடிப்பில் உருவாகும் படம் அடுத்த மாதம் தொடங்க இருக்கிறது. 

    இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- ’கொஞ்ச நாள் அமைதியா இருப்போம் என்று நான்தான் நடிக்காம இருந்தேன். ஆனால், இந்த சினிமா என்னை ஒருபோதும் ஒதுக்கியது இல்லை. ஒதுக்கவும் ஒதுக்காது. என்னை சார்ந்த எல்லோருக்கும் அது தெரியும். 

    வடிவேலு

    எனது அடுத்த பட வேலைகளை செப்டம்பர் இறுதியில் அறிவிக்கப்போறேன். அந்த அறிவிப்பே ரொம்ப சுவாரசியமாக இருக்கும். அதை கேட்டாலே, ஜனங்க ஜாலியாகிடுவாங்க. வலுவான கூட்டணி, அசத்தலான கதைக்களம், மிரட்டுற பர்ஸ்ட் லுக் என்று தாரை தப்பட்டைகள் கிழிஞ்சு தொங்கறமாதிரி பிச்சு உதறப்போறோம்’ என்று கூறியிருக்கிறார்.
    தேசிய விருதில் தமிழ் படங்கள் புறக்கணிக்கப்பட்டதற்கு அரசியல் தலைவர்கள் குரல் கொடுக்க வேண்டும் என இயக்குனர் வசந்தபாலன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    ஒவ்வொரு ஆண்டும் திரைப்படத்துறைக்கான தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. 66-வது தேசிய திரைப்பட விருதுக்கான பட்டியல் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது. தமிழில் ’பாரம்’ படத்திற்கு மட்டுமே விருது கிடைத்துள்ளது. மற்ற பிரிவுகளில் தமிழ் படங்கள் இடம் பெறாதது சினிமா ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

    பரியேறும் பெருமாள், சர்வம் தாளமயம், இரும்புத்திரை, ராட்சசன், 96, 2.0, சீதக்காதி, கனா, சூப்பர் டீலக்ஸ், வட சென்னை ஆகிய படங்கள் தமிழ் ரசிகர்களை அதிக கவர்ந்த படங்கள். மேலும் பல திரைப்பட விழாக்களில் இப்படங்கள் கலந்துக் கொண்டு விருதுகள் பெற்றுள்ளது.  ஆனால், இந்தப்படங்கள் தேசிய விருது பட்டியலில் இடம் பெறாதது ரசிகர்கள் மட்டுமல்லாது திரைப்படத் துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தேசிய விருது லோகோ

    இந்நிலையில், தேசிய விருது வழங்குவதில் தமிழ் திரைப்படங்களும், தமிழ் கலைஞர்களும் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்பட்டு உள்ளதாக இயக்குநர் வசந்தபாலன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் கருத்து தெரிவித்தள்ள அவர், தமிழ் உச்ச நட்சத்திரங்களும், திரை ஆளுமைகளும், தமிழக அரசியல் தலைவர்களும் இந்த அநீதிக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
    30 ஆண்டுகளுக்கு பின் பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவுடன் இணைந்து சரிலேறு நீகெவரு என்ற படத்தில் விஜயசாந்தி நடித்துள்ளார்.
    பாரதிராஜாவின் ‘கல்லுக்குள் ஈரம்’ படத்தில் அறிமுகமான விஜயசாந்தி 1980-களில் தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருந்தார். இரண்டு மொழிகளிலும் வெளியான வைஜயந்தி ஐ.பி.எஸ் படத்தில் அதிரடி சண்டை காட்சிகளில் நடித்து பேசப்பட்டார் விஜயசாந்தி. இந்த படம் வசூல் சாதனை நிகழ்த்தியது. அவருக்கு தேசிய விருதும் கிடைத்தது.

    2006-ல் சினிமாவை விட்டு ஒதுங்கி ஆந்திர அரசியலில் குதித்த அவர் 12 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். மகேஷ்பாபு கதாநாயகனாக வரும் தெலுங்கு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜயசாந்தி நடிக்கிறார். தமிழிலும் இதை வெளியிடுகின்றனர். இந்த படத்தில் நடிக்க அவருக்கு ரூ.2 கோடி சம்பளம் என்று கூறப்படுகிறது. இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கி உள்ளது. விஜயசாந்தி மேக்கப் போடும் தனது படத்தை டுவிட்டரில் வெளியிட்டு உள்ளார். 

    மகேஷ் பாபு, விஜயசாந்தி

    கடந்த 1989-ம் ஆண்டு வெளியான கொடுக்கு டிட்டின்னா கபூரம் படத்தில் விஜய் சாந்தியின் மகனாக மகேஷ் பாபு நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    நடிகை ஜெனிலியாவும் அவரது கணவர் ரிதேஷ் தேஷ்முக்கும் மகாராஷ்டிரா வெள்ள நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் வழங்கினர்.
    மகாராஷ்டிரா மாநிலத்தில் கனமழை கொட்டி தீர்த்ததால் நகரமெங்கும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. சாலைகள் ஆறுகளாக மாறி உள்ளன. பொதுமக்களின் உடமைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுகின்றன. பெரும்பாலான கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. சுமார் 4 லட்சம் மக்கள் அரசு அமைத்துள்ள தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பேரழிவை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. அங்குள்ள கொய்னா அணை 890 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும் 100 டி.எம்.சி கொள்ளளவும் கொண்டது. அந்த அணை பாதிக்கும் மேல் நிரம்பி விட்டது.

    முதல்-மந்திரியிடம் வெள்ள நிவாரண நிதி அளித்த ஜெனிலியா

    வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ தாராளமான நிதி வழங்கும்படி மகாராஷ்டிரா அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதனை ஏற்று நடிகை ஜெனிலியாவும் அவரது கணவர் ரிதேஷ் தேஷ்முக்கும் மகாராஷ்டிரா மாநில முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசை சந்தித்து ரூ.25 லட்சம் நன்கொடை வழங்கினர். அவர்கள் காசோலை வழங்கும் புகைப்படத்தை முதல்-மந்திரி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். 

    அதில், “மராட்டிய மாநில வெள்ள நிவாரணத்துக்கு ரூ.25 லட்சம் நன்கொடை வழங்கிய ஜெனிலியா தேஷ்முக்குக்கு நன்றி” என்று பதிவிட்டு உள்ளார். மேலும் பல நடிகர்-நடிகைகள் நிதி உதவி வழங்கி வருகிறார்கள்.
    இந்தியாவில் கூகுளில் அதிகமாக தேடப்பட்டோர் பட்டியலில் பாலிவுட் நடிகை சன்னி லியோன் முதலிடத்தை தக்கவைத்துள்ளார்.
    ஆகஸ்ட் 2019 புள்ளிவிபரப்படி, இந்தியாவில் அதிகளவு தேடப்பட்ட பிரபலங்கள் பட்டியலில் சன்னி லியோன் முதலிடம் பிடித்து உள்ளார். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்தி திரையுலக சூப்பர் ஸ்டார்கள் சல்மான்கான் மற்றும் ஷாருக்கானை பின்னுக்கு தள்ளியுள்ளார்.

    சன்னி லியோனின் பயோபிக், வீடியோக்கள் அதிகமாக தேடப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூர் மற்றும் அசாமில் இருந்தே அதிகமாக சன்னிலியோன் தேடப்பட்டுள்ளார் என டிரெண்டிங் கூறுகிறது. கடந்த வருடமும் சன்னி லியோனே இந்தியாவில் அதிகமாக தேடப்பட்ட பிரபலங்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார். 

    சன்னி லியோன்

    இவ்வாண்டும் அதனை தக்கவைத்துள்ளார். இதுதொடர்பாக சன்னி லியோன் கருத்து தெரிவிக்கையில், என்னுடைய குழு இவ்விவரத்தை என்னிடம் கொண்டுவந்தனர். எனக்காகவே உள்ள ரசிகர்களால், சிறந்த உணார்வை கொண்டிருக்கிறேன் எனக் கூறியுள்ளார். இந்தி சினிமாவில் பிசியாகியுள்ள சன்னி லியோன் கோககோலா படத்தில் போஜ்புரி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
    காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள அத்திவரதரை நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவியுடன் சென்று தரிசனம் செய்தார்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலிலுள்ள அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டிருக்கும் அத்திவரதரின் திருவுருவம் நாற்பதாண்டுகளுக்கு ஒரு முறை நீரிலிருந்து வெளியில் எடுக்கப்பட்டு பக்தர்களுக்குக் காட்சியளிப்பது வழக்கம்.

    அதன்படி ஜூலை ஒன்றாம் தேதியிலிருந்து வரதராஜ பெருமாள் கோவிலின் வசந்த மண்டபத்தில் பக்தர்கள் தரிசனத்திற்காக அத்திவரதர் வைக்கப்பட்டார்.

    குளத்திலிருந்து எடுக்கப்படும் அத்திவரதர் மொத்தம் 48 நாட்கள் பக்தர்களுக்குத் தரிசனம் தருவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. 24 நாட்கள் சயன திருக்கோலத்திலும் 24 நாட்கள் நின்ற திருக்கோலத்திலும் காட்சி தருவார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    ஆனால், சயன திருக்கோலத்திலேயே 31 நாட்கள் காட்சியளித்த அத்திவரதர், இம்மாதம் ஒன்றாம் தேதி முதல் நின்ற திருக்கோலத்தில் காட்சியளித்து வருகிறார்.

    அத்திவரதரை நிரந்தரமாக தரிசனத்திற்கு வைக்க வேண்டும், கூடுதலாக 48 நாட்கள் தரிசனத்திற்கு வைக்க வேண்டுமென கோரிக்கைகள் எழுந்துவரும் நிலையில், திட்டமிட்டபடி ஆகஸ்ட் 17-ம் தேதி அத்திவரதரின் திருவுருவம் மீண்டும் அனந்தசரஸ் குளத்தின் நீருக்குள் வைக்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் பொன்னைய்யா நேற்று அறிவித்தார்.

    திருவுருவம் குளத்திற்குள் வைக்கப்படும்போது கோவிலின் அர்ச்சகர்கள், ஊழியர்களைத் தவிர வேறு யாருக்கும் கோவிலுக்குள் அனுமதியில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

    இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த், அவரது மனைவி லதாவுடன் சேர்ந்து அத்திவரதரை தரிசனம் செய்தார்.

    வருகின்ற 16-ந் தேதி வரை மட்டும் அத்திவரதரை தரிசிக்க முடியும் என்பதால், நாட்கள் நெருங்க நெருங்க லட்சக்கணக்கான பக்தர்கள் காஞ்சிபுரத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர். வருகின்ற 17-ந் தேதி அன்று வேத மந்திரங்கள் முழங்க கோவில் வளாகத்தில் உள்ள அனந்தசரஸ் குளத்தில் உள்ளே மீண்டும் அத்திவரதர் வைக்கப்படுகிறார்.
    குருக்ஷேத்ரம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துக் கொண்ட நடிகர் அர்ஜூன், அஜித்தின் 50தும், தர்சனின் 50தும் பற்றி பேசியிருக்கிறார்.
    முனி ரத்னா எழுதி தயாரித்துள்ள குருக்ஷேத்ரம் படத்தினை இயக்குனர் நாகன்னா இயக்கியுள்ளார். இப்படத்தை தமிழில் கலைப்புலி தாணு வெளியிடும் பிரமாண்ட படைப்பு ஆகும். இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.

    இதில் நடிகர் அர்ஜூன் பேசும்போது, ‘இந்தப்படம் கன்னடத்தில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. நான் விரும்பிய பாத்திரத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது என்னுடைய பாக்கியம். நான் உழைத்ததை விட தர்ஷன் அதிகம் உழைத்துள்ளார். அஜித் படத்தின் 50வது படத்தில் நான் இருந்தது போல, தர்சனின் 50வது படத்திலும் நான் நடித்துள்ளேன். 

    படத்தில் நான் நடித்ததை விட வெற்றி பெற்ற ஒரு படத்தில் நான் நடித்தேன் என்பது எனக்கு பெருமை. கிளைமாக்ஸ் கதாயுதம் மூலம் நடக்கும் சண்டை வியக்கத்தக்க அளவில் வந்துள்ளது. இந்தப் படம் வளரும் தலைமுறையினர் பார்க்க வேண்டிய படம், ஏனெனில் இது நம் கலாச்சாரத்தை விவரிக்கும் படம்’ என்றார்.
    நடிப்புக்காக தேசிய விருது வென்ற காஷ்மீர் சிறுவனை படக்குழுவினர் தொடர்பு கொள்ள முடியாமல் திணறி வருகின்றனர்.
    காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தும், அம்மாநிலத்தை இரண்டாக பிரித்தும் மத்திய அரசு மசோதா நிறைவேற்றியது.

    காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது தெரியவந்தால் மாநிலத்தில் கலவரம் உண்டாகும் என அறிந்து, தொலை தொடர்பு சேவைகளை முடக்கியும், ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

    இதற்கிடையில், 2018-ம் ஆண்டில் வெளியான திரைப்படங்களுக்கான தேசிய விருதுகள் தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. இதில், சிறந்த உருது மொழி படத்துக்கான விருதுக்கு ‘ஹமீத்’ என்ற படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ‘ஹமீத்’ படத்தில் நடித்த காஷ்மீரைச் சேர்ந்த தல்ஹா அர்ஹத் ரேஷி என்ற சிறுவன் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளான்.

    சிறுவன் தல்ஹா அர்ஹத் ரேஷி

    இது தொடர்பாக, அச்சிறுவனுக்கு தகவல் தெரிவிப்பதற்காக படக்குழுவினர் தொடர்பு கொண்டபோது, தொலை தொடர்பு சேவை இல்லாததால் என்ன செய்வதென தவித்தனர்.

    இது தொடர்பாக பேசிய இயக்குநர் இஜாஸ் கான், “தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது குறித்து சிறுவனுக்கு தகவலளிக்க முடியாதது வேதனையாக இருக்கிறது” என கூறியுள்ளார்.
    புதிய படங்களை சட்ட விரோதமாக பதிவேற்றும் செய்யும் தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட இணையதளங்களுக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
    திருட்டு வி.சி.டி.யை தொடர்ந்து இணையதளத்தில் புதிய படங்கள் உடனுக்குடன் வெளியாவது தயாரிப்பாளர்களுக்கு பெரிய தலை வலியாக உள்ளது. இதை தடுக்க தயாரிப்பாளர் சங்கம் கடும் நடவடிக்கை எடுத்தது. தியேட்டர்களில் கேமரா கொண்டு செல்ல தடை விதித்தனர். கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்பட்டன.

    ஆனாலும் பலன் இல்லை. ரஜினிகாந்தின் கபாலி, காலா, பேட்ட ஆகிய படங்கள் திரைக்கு வந்த உடனேயே இணையதளத்திலும் வெளியானது. இதுபோல் விஜய், அஜித்குமார், சூர்யா, விக்ரம், கார்த்தி, விஷால் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் படங்களும் திரைக்கு வந்த உடனேயே இணையதளத்திலும் வெளிவந்தன. இதை கட்டுப்படுத்த முடியாமல் தயாரிப்பாளர்கள் தவிக்கின்றனர்.

    தமிழ் ராக்கர்ஸ்

    சமீபத்தில் வெளியான அஜித்குமாரின் நேர்கொண்ட பார்வை படமும் இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியாகி படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் புதிய படங்களை சட்டவிரோதமாக பதிவேற்றும் தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட இணையதளங்கள் பெயர்களில் பதிவு செய்யபட்டுள்ள இணைய முகவரிகளை முடக்குவதற்கு மத்திய தொலைத் தொடர்பு துறை மற்றும் மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் ‘பிகில்’ படக்குழுவினருக்கு நடிகர் விஜய், இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.
    விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் 'பிகில்'. அட்லீ இயக்கி வரும் இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார்.

    ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில், நயன்தாரா, விவேக், டேனியல் பாலாஜி, ஜாக்கி ஷெராப், கதிர், சவுந்தரராஜா, யோகி பாபு, இந்துஜா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

    பிகில் மோதிரம்

    இந்நிலையில், இப்படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களுக்கு நடிகர் விஜய் பிகில் என்று பெயர் எழுதப்பட்ட மோதிரத்தை பரிசாக வழங்கியுள்ளார். இது படக்குழுவினருக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்திருக்கிறது.
    2011 முதல் 2018 வரையிலான கலைமாமணி விருதுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் நடந்த விழாவில் வழங்கி இருக்கிறார்.
    2011 முதல் 2018 வரையிலான கலைமாமணி விருது பெறும் கலைஞர்களின் பெயர் பட்டியலை தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்டது. தற்போது அவர்களுக்கு விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பட்டியலில் இடம் பெற்றவர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விருதுகளை வழங்கி கவுரவப்படுத்தினார்.

    சினிமாத்துறையில், ஆர்.ராஜசேகர், பாண்டு, குட்டி பத்மினி, பிரசன்னா, நளினி, வேல்முருகன், கார்த்தி, சரவணன், பொன் வண்ணன் உள்ளிட்ட பலருக்கு வழங்கப்பட்டுள்ளது.

    கலைமாமணி விருது

    இவ்விழாவில் மூத்த கலைஞர்களுக்கான உதவித்தொகை ரூ.2000-லிருந்து, ரூ.3000-மாக உயர்த்தி வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார்.
    கன்னிராசி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய நடிகர் விமல், முதல் முறையாக ஒரு ஆம்பளயோட நடித்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
    விமல் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘கன்னி ராசி’. இதில் இவருக்கு ஜோடியாக வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார். இவர்களுடன் பாண்டியராஜன், ரோபோ சங்கர், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளார்கள். கிங் மூவி மேக்கர்ஸ் ஷமீம் இப்ராகிம் தயாரித்திருக்கும் இப்படத்தை எஸ்.முத்துக்குமரன் இயக்கியிருக்கிறார்.

    இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில், தயாரிப்பாளர் ஷமீம் இப்ராகிம், இயக்குனர் எஸ்.முத்துக்குமரன், நடிகர் விமல், நடிகை வரலட்சுமி சரத்குமார், நடிகர் ரோபோ சங்கர், இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர், ஒளிப்பதிவாளர் எஸ்.செல்வகுமார், பாடலாசிரியர் யுகபாரதி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.

    விமல், வரலட்சுமி

    இதில் விமல் பேசும்போது, ‘இந்தப்படம் மிக அருமையாக வந்திருக்கு. யோகிபாபு, ரோபோசங்கர், காளிவெங்கட் எல்லோர் கூடவும் எனக்கு காம்பினேஷன் சீன்ஸ் இருக்கு. படம் ரொம்ப ஜாலியாக இருக்கும். இயக்குநர் முத்துக்குமரன் எப்போதும் பத்து பெண்களோடு தான் இருப்பார். அதனால் அவர் அடுத்த வருடம் கண்டிப்பாக கல்யாணம் செய்துவிடுவார். மேலும் அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகிறேன். பல படங்களில் பல கதாநாயகிகளுடன் நடித்துள்ளேன். ஆனால், இந்த படத்தில் முதல்முறையாக ஒரு ஆம்பளயோட நடித்திருக்கிறேன் என்று வரலட்சுமியை பற்றி கலகலப்பாக கூறினார்.


    ×