என் மலர்
சினிமா செய்திகள்
கார்த்தி, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் சுல்தான் படத்தின் தயாரிப்பாளரை ஒருவர் கோபப்படுத்தி இருக்கிறார்.
கார்த்தி நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘சுல்தான்’. பாக்கியராஜ் கண்ணன் இயக்கியுள்ள இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். ட்ரீம் வாரியர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ள இப்படம் கடந்த வெள்ளிக்கிழமை தியேட்டரில் வெளியானது.
இந்நிலையில், எஸ்.ஆர்.பிரபுவின் சமூக வலைத்தள பக்கத்தில் ஒருவர், சுல்தான் திரைப்படம் தற்போது என்னுடைய டெலிகிராம் சேனலில் இருக்கிறது என்று பதிவு செய்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, ‘அடேய், என் கமெண்ட்ல வந்து என் படத்துக்கே பைரசி பிரமோட் பண்ற அளவுக்கு வளர்ந்துட்டீங்களா, இதோ வரேன்டா’ என்று பதிவு செய்திருக்கிறார்.

புதிய படங்கள் திரைக்கு வந்து சில மணி நேரங்களிலேயே பைரசி தளங்களில் வெளிவந்ததும், தயாரிப்பாளர் பக்கத்திலேயே பதிவு செய்ததும் திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கமலுக்காக அவரது மகள் அக்ஷரா ஹாசன் வீதியில் இறங்கி குத்தாட்டம் போட்டு வாக்கு சேகரித்து இருக்கிறார்.
நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் முதன்முதலாக வேட்பாளராக போட்டியிடுகிறார். கமலுக்கு ஆதரவாக திரையுலகினர் யாரும் பிரச்சாரம் செய்யவில்லை என்றாலும் அவரது அண்ணன் மகள் சுகாசினி கடந்த சில நாட்களாக கோவையின் ஒவ்வொரு தெருவிலும் பிரச்சாரம் செய்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது கமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்ஷரா ஹாசனும் கோவையில் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துள்ளார். அக்சராவும் சுஹாசினியும் தெருவில் குத்தாட்டம் போட்டு வாக்குகளை திரட்டிய வீடியோ வெளியாகி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவரது ஆட்டத்தை பார்த்த அந்த பகுதியில் உள்ள பெண்களும் அவருடன் சேர்ந்து ஆடினார்கள்.
என்னைவிட வயது குறைவான சின்ன பையனை தான் திருமணம் செய்வேன் என்று பிரபல கவர்ச்சி நடிகை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்து இருக்கிறார்.
ஜெயம் ரவி, காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான படம் ‘கோமாளி’. இந்த படத்தில் பஜ்ஜி போடும் பெண்ணாக நடித்தவர் நடிகை கவிதா ராதேஷ்யம். பாலிவுட் நடிகையான இவர் தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே கவர்ச்சியாக நடித்திருப்பார்.

சமூக வலைத்தளத்தில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் கவிதா ராதேஷ்யம், தற்போது அவர் மேலாடை மட்டுமே அணிந்த ஒரு கிளாமர் புகைப்படத்தை பதிவு செய்து இருக்கிறார்.

மேலும், எனக்கு யாருடனும் எந்த விதமான ரிலேஷன்ஷிப் இல்லை, எனக்கு நிச்சயதார்த்தமோ, திருமணமோ ஆகவில்லை. நான் இன்னும் 5 வருடங்கள் கழித்து திருமணம் செய்து கொள்வேன். ஆனால் கண்டிப்பாக என்னை விட வயது குறைவானவரைதான் திருமணம் செய்து கொள்வேன். எனவே என்னை பற்றி பரப்பும் வதந்தியை நிறுத்துங்கள்’ என்று பதிவு செய்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி உருவாகி இருக்கும் ‘தலைவி’ படத்தின் பாடலுக்கு நடன இயக்குனர் நடனம் ஆடிய வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி ‘தலைவி’ என்ற திரைப்படம் உருவாகி இருக்கிறது. ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத் நடித்துள்ளார். எம்ஜிஆராக அரவிந்த் சாமி நடித்துள்ளார். மேலும், பிரகாஷ் ராஜ், சமுத்திரகனி, பூர்ணா, மதுபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்ளிடையே அதிக வரவேற்பு பெற்றது. இதனைத்தொடர்ந்து மழை மழை என்னும் முதல் பாடலை ஏப்ரல் 2 ஆம் தேதி படக்குழுவினர் வெளியிட்டார்கள். இந்த பாடல் சமூக வலைத்தளத்தில் வைரலானது.
இந்நிலையில், இப்பாடலுக்கு நடனம் அமைத்திருந்த பிருந்தா மாஸ்டர், தனது சமூக வலைத்தள பக்கத்தில், மழை மழை பாடலுக்கு நடனம் ஆடி வெளியிட்டிருக்கிறார். இந்த வீடியோ தற்போது ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
Beautiful and gorgeous Kangana dancing so gracefully and bringing out the best as Jaya amma. Huge fan of Jaya amma. #Thalaivithemovie Let’s all do the #hookstepchallenge and see the best ones!!
— Brindha Gopal (@BrindhaGopal1) April 3, 2021
This is mine!! @KanganaTeam pic.twitter.com/N3jci6P4Wq
ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள தலைவி படம் வருகிற ஏப்ரல் 23-ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் உறவினர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளும்படி அக்சய் குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மும்பை:
இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. புதிய பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்தவண்ணம் உள்ளது. பொது நிகழ்வுகளில் பங்கேற்கும் பிரபலங்கள் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர்.
அவ்வகையில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அக்சய் குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவர்களின் ஆலோசனையின்பேரில், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அவர் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.

நடிகர் அக்சய் குமார், ராம்சேது என்கிற படத்தில் நடித்துவருகிறார். ராமஜென்ம பூமியை மையமாக வைத்து உருவாகும் இந்தப்படத்தின் பெரும்பாலான காட்சிகளை நிஜமான கதைக்களமான அயோத்தியில் படமாக்க இருக்கிறார்கள். சமீபத்தில் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், அக்சய் குமாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளும்படி அக்சய் குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நடிகர் விஜயகுமாரின் மகன் அருண்குமாருக்கு சினிமா வாய்ப்பு தேடி வந்தது. `அன்பாலயா' பிரபாகரன் தயாரித்த "முறை மாப்பிள்ளை'' படம் மூலம் ஹீரோவானார்.
நடிகர் விஜயகுமாரின் மகன் அருண்குமாருக்கு சினிமா வாய்ப்பு தேடி வந்தது. `அன்பாலயா' பிரபாகரன் தயாரித்த "முறை மாப்பிள்ளை'' படம் மூலம் ஹீரோவானார்.
நடிகர் விஜயகுமாருக்கு ஒரே ஆண் வாரிசு அருண்குமார். சென்னை லயோலா கல்லூரியில் "பி.காம்.'' இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்தபோது சினிமா வாய்ப்பு தேடி வந்தது. அதனால் "எம்.பி.ஏ.'' படிக்க அமெரிக்காவுக்கு போக இருந்த திட்டத்தை கைவிட்டு, முழுநேர நடிகராகி விட்டார், அருண்குமார்.
மகன் அருண்குமார் சினிமாவுக்கு வந்தது பற்றி விஜயகுமார் கூறியதாவது:-
"அருண்குமார் படிப்பில் முழு கவனம் செலுத்தி படித்துக் கொண்டிருந்தார். அவரது பள்ளி வாழ்க்கையே, பல பள்ளிகளில் தொடர்ந்தது. ஒரு கட்டத்தில் நாடு விட்டு நாடும் தொடர்ந்தது.
ஆரம்பப் படிப்பு சென்னை டான்போஸ்கோவில் தொடங்கியது. அதன் பிறகு `சோ'வின் சகோதரர் நடத்தி வரும் "லா சாட்டலின்'' பள்ளி. அதன் பின்னர் அமெரிக்காவில்
2 வருடம் என உலகம் சுற்றியது. நான் நடிப்பை நிறுத்திவிட்டு அமெரிக்காவில் 2 வருடம் ரெஸ்டாரெண்ட் நடத்திய நேரத்தில், அருண் 2 வருடமும் அமெரிக்காவில் படித்தார். அதன் பிறகு சென்னை வந்தபோது மறுபடியும் `லா சாட்டலின்' பள்ளியில் படிப்பு.
அரசு ஊழியர்களின் பிள்ளைகளுக்குத்தான் பெற்றோர்களின் டிரான்ஸ்பரை பொறுத்து, இப்படி ஊர்ஊராய் பள்ளிகளில் மாறி மாறி படிக்க வேண்டியிருக்கும். அருணுக்கும் இந்த மாதிரியான அனுபவம் கிடைத்தது.
பள்ளிப்படிப்பை முடித்து சென்னை லயோலா கல்லூரியில் "பி.காம்.'' பட்டப்படிப்பில் சேர்ந்த பிறகு கூட, அருணுக்குள் சினிமா ஆர்வம் இருந்ததாக தெரியவில்லை. அந்த வாய்ப்பை தேடி வந்து ஏற்படுத்திக் கொடுத்தவர் தயாரிப்பாளர் `அன்பாலயா' பிரபாகரன்.
அருண் "பி.காம்.'' இரண்டாம் ஆண்டு படிப்பை தொடர்ந்த நேரத்தில் `அன்பாலயா' பிரபாகரன், என்னை வந்து சந்தித்தார். அவரது படத்தில் நான் நடிப்பது தொடர்பாகத்தான் பேச வந்திருக்கிறார் என்று எண்ணினேன். அவரோ வந்ததும் வராததுமாக, "ஒரு நல்ல லவ் ஸ்டோரி. ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். உங்க மகன் அருணை ஹீரோவாக அறிமுகப்படுத்தலாம் என்றிருக்கிறேன்'' என்றார்.
எனக்கு அதிர்ச்சி. சினிமா பற்றியும், நடிப்பு பற்றியும் எந்த எண்ணமும் இல்லாத மகனுக்குள் வலுக்கட்டாயமாக சினிமாவை திணிக்கக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். அதனால் அவரிடம், "பையன் பி.காம். முடித்து விட்டு, அமெரிக்காவில் எம்.பி.ஏ. படிக்க இருக்கிறான். அதனால் சினிமா வேண்டாமே'' என்று தவிர்க்கப்பார்த்தேன்.
ஆனால் நடந்ததை தனது அம்மா மூலம் தெரிந்து கொண்ட அருண், "நான் நடிக்கிறேன். தயாரிப்பாளர் கிட்ட `சரி'ன்னு சொல்லும்படி அப்பாகிட்ட சொல்லுங்க'' என்று கூறியிருக்கிறார்.
மகனின் விருப்பம் அதுவென தெரிந்த பிறகு தடைபோட விரும்பவில்லை. அதோடு லவ் ஸ்டோரி, ஏ.ஆர்.ரகுமான் இசை என்று தயாரிப்பாளர் பிரமாண்டம் காட்டி விட்டுப் போவதால், "சரி; நடிக்கட்டும்'' என்ற முடிவுக்கு வந்தேன். ஆனால் படத் தயாரிப்பு தாமதித்துக் கொண்டே போனது. தயாரிப்பாளரைக் கேட்டால், "ஏ.ஆர்.ரகுமான் 3 பாட்டுக்கு டிïன் தந்துவிட்டார். இன்னும் 2 பாட்டுக்கு டிïன் தந்து விட்டால் படத்தை முழு வீச்சில் தொடங்கி முடிக்க ஏதுவாக இருக்கும்'' என்று சொன்னார்.
எனக்கு நம்பிக்கை குறைந்தது. அவசரப்பட்டு சரி சொல்லிவிட்டோமோ என்று கூட நினைத்தேன்.
இந்த நிலையில் திடுமென ஒரு நாள் வந்து நின்றார், தயாரிப்பாளர். ரகுமான் இசை தாமதமாவதால் வேறு ஒரு படத்தைத் தயாரிக்கப் போகிறேன். சுந்தர் சி. இயக்குகிறார். படத்துக்கு "முறை மாப்பிள்ளை'' என்று பெயர் வைத்திருக்கிறேன். முதலில் அருண் இந்தப் படத்தில் நடிக்கட்டும். அடுத்து ரகுமான் பாட்டை முடித்துக் கொடுத்ததும் `லவ் ஸ்டோரி' எடுக்கலாம்'' என்றார்.
சரி! நடிக்க வேண்டும் என்று முடிவு செய்து சினிமாவுக்குள் அருண் காலெடுத்து வைத்தாயிற்று. இனி பின்வாங்கினால் சரியாக இருக்காது. நடப்பது நல்லதாக இருக்கட்டும் என்றபடி "முறை மாப்பிள்ளை'' படத்துக்கு அருணை ஹீரோவாக்க சம்மதித்தேன்.
படத்தின் பூஜை ஏவி.எம். ஸ்டூடியோ பிள்ளையார் கோவிலில் நடந்தது. நண்பர் ரஜினி வந்து அருணுக்கு பொட்டு வைத்து வாழ்த்தி படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். அப்போது அவர், "என் இனிய நண்பர் விஜயகுமாரின் மகன் அருண் சினிமாவுக்கு வருவதை வாழ்த்துகிறேன். அவர் நல்லா வரவேண்டும். நல்லா வருவார்'' என்று வாழ்த்தினார்.
அவர் வாழ்த்து பலித்தது. "முறை மாப்பிள்ளை'' படம் மூலம் அருண் நிலையான ஹீரோ ஆனார். தொடர்ந்து "பிரியம்'', "காத்திருந்த காதல்'', "கங்கா கவுரி'', "துள்ளித்திரிந்த காலம்'', "கண்ணால் பேசவா'', "அன்புடன்'', "பாண்டவர் பூமி'', "முத்தம்'', "இயற்கை'', "ஜனனம்'', "அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது'' என தொடர்ந்து இப்போது ரிலீசான "தவம்'' வரை நடிப்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இப்போதும் "வேதா'', "துணிச்சல்'' என திரைக்கு வரத் தயாராகிக் கொண்டிருக்கும் படங்களும் உண்டு.''
இப்படிச் சொன்ன விஜயகுமார், நடிகர் அர்ஜ×ன், அருணை வைத்து தயாரித்த "தவம்'' படம் பற்றிய தகவல்களையும் பகிர்ந்து
கொண்டார்.
"அர்ஜ×ன் சார் என்னிடம் அடிக்கடி அருண் பற்றி கேட்பார். "நன்றாக நடிக்கவும் செய்கிறார். `பைட்'டும் சூப்பரா போடறார். பிறகு ஏன் விஜய், அஜித் மாதிரி இன்னும் அருண் பேசப்படவில்லை?'' என்று கவலை தெரிவிப்பார்.
"எல்லாத்துக்குமே நேரம்னு ஒண்ணு இருக்கே'' என்பேன் நான்.
ஒருநாள் திடுமென என்னை சந்தித்த அர்ஜ×ன், "அருண் விஷயத்தில் நீங்கள் சொன்ன `நேரம்' இப்போது வந்து விட்டதாக எண்ணிக் கொள்ளுங்கள். நான் அருணை ஹீரோவாகப்போட்டு ஒரு படம் தயாரிக்கிறேன். `தவம்' என்பது படத்துக்கு பெயர்'' என்றார்.
எனக்கு ஆனந்த அதிர்ச்சி. தமிழ் சினிமாவில் ஒரு முதல் தர நடிகர்; `ஆக்ஷன் கிங்' என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர். இவர் மாதிரி ஹீரோக்கள் தொடர்ந்து படம் எடுத்து தங்களை வளர்த்துக் கொள்ளவே நினைப்பார்கள். மாறுபட்டு என் மகனை ஹீரோவாகப் போட்டு படம் தயாரிக்கப்போகிறேன் என்று சொல்கிறாரே! இப்படியும் ஒரு அபூர்வ மனிதரா?'' என்ற வியப்புதான் ஆனந்த
அதிர்ச்சியாகியிருந்தது.சொன்னபடியே `தவம்' படத்தை தயாரித்து ரிலீஸ் பண்ணி அருணுக்கு ஒரு வெற்றிப்படம் கொடுத்த தயாரிப்பாளராகவும் எனக்குள் நிலைத்து விட்டார்.
படத்தில் அருணை வித்தியாசமான கதைக் களத்தில் நடிக்க வைத்திருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சியில் தற்கொலைக்கு முயலும் கதாநாயகியை, "எங்கே என் கண்ணைப் பார்த்து சொல்லு'' என்று அருண் கேட்கிறபோது, அருணின் அப்பா, ஒரு நடிகர் என்பதையெல்லாம் நான் மறந்து ஒரு ரசிகனாக அந்தக் காட்சியில் அருணின் நடிப்போடு ஒன்றிவிட்டேன்.
அருண்குமார் இந்தப்படம் முதல் `அருண் விஜய்' என்று, பெயரை மாற்றிக் கொண்டிருக்கிறார். புதிய பெயரில் வெற்றியும் அவரோடு கைகோர்த்துக்கொள்ள விரும்புகிறேன். அதற்கு ரசிகர்களின் ஆதரவு தேவை.
அர்ஜ×ன் என் மகன் அருண் விஜய்யை ஹீரோவாக்கியது என்னை ரொம்பவே நெகிழ்ச்சியாக்கி விட்டது. இதன் விளைவு `தவம்' பட பாடல் கேசட்டு வெளியீட்டு விழாவின்போது என்னில் எதிரொலித்தது. அந்த விழாவில், "இனி நானும் வருஷம் 2 படம் தயாரிப்பேன். அதில் ஒரு படத்தில் அருண் விஜய் நடிப்பார். அடுத்த ஆண்டு முதல் தயாரிப்பு தொடங்கும்'' என்று கூறினேன். சொன்னபடி அடுத்த ஆண்டு படத்தயாரிப்பு தொடர்பான வேலைகளை இப்போதே தொடங்கி விட்டேன்.
அருண் விஜய்யிடம் நான் அடிக்கடி சொல்லும் வாசகம்: "எப்போதும் `பிரஷ்' ஆகவே இரு! எந்தப்படம் பண்ணினாலும் அதை முதல் படமாக நினைத்து சிரத்தையோடு பண்ணு! உழைப்பு இருக்கிறது; தொழில் அக்கறை இருக்கிறது. இதோடு முழு ஈடுபாடும் கலந்து கொள்ளும்போது வெற்றியும் உன்னுடன் பின்னிப் பிணைந்திருக்கும்'' என்பதுதான்.
சினிமா மீதான அவரது `தவம்' தொடர்ந்து நல்லவிதமாகவே கைகூடும் என்பது அவரது அப்பாவாக என் நம்பிக்கை.''
இவ்வாறு விஜயகுமார் கூறினார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருந்த மாஸ்டர் படம் உலகம் முழுவதும் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது
கொரோனா பரவலுக்கு பின் களையிழந்து காணப்பட்ட திரையரங்குகளுக்கு, புத்துயிர் கொடுக்கும் வகையில் பொங்கலுக்கு ரிலீசான படம் தான் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடித்திருந்த இப்படம் உலகம் முழுவதும் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது. வசூலையும் வாரிக் குவித்தது. இப்படம் திரையரங்குகளில் வெளியான 16 நாட்களில் ஓடிடியில் வெளியிடப்பட்ட போதிலும் நிறைய இடங்களில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடின.
மாஸ்டர் படம் இந்தியில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டாலும், அதனை தற்போது இந்தியில் ரீமேக் செய்ய உள்ளனர். இதற்கான உரிமையை பெற இந்தி தயாரிப்பாளர்களிடையே கடும் போட்டி நிலவி வருகிறதாம். விரைவில் இது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானவுடன் அதிகாரபூர்வமாக அறிவிக்க மாஸ்டர் படக்குழு திட்டமிட்டுள்ளது.

ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம், கைதி ஆகிய படங்கள் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது மாஸ்டர் படமும் அந்த லிஸ்டில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
திரிஷா நடிப்பில் உருவாகி, நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருந்த படத்தை பண்டிகை தினத்தன்று நேரடியாக ஓடிடி-யில் வெளியிட உள்ளனர்.
திரிஷா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘பரமபதம் விளையாட்டு’. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்தை திருஞானம் இயக்கி இருக்கிறார். நந்தா, ரிச்சர்ட், வேலராமமூர்த்தி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.
கடந்த வருடம் மார்ச் மாதமே இப்படத்தை வெளியிட திட்டமிட்டு இருந்தனர். ஆனால், கொரோனா வைரஸ் காரணமாக லாக்டவுன் போடப்பட்டதால் இப்படம் திட்டமிட்டபடி வெளியாகவில்லை. சுமார் ஓராண்டாக ரிலீசாகாமல் இருந்த இப்படத்தை தற்போது நேரடியாக ஓடிடி-யில் வெளியிட உள்ளதாக கடந்த மாதம் அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற ஏப்ரல் 14-ந் தேதி தமிழ் புத்தாண்டன்று ‘பரமபதம் விளையாட்டு’ படத்தை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கார்த்திக் தாஸ் இயக்கத்தில் சப்னா தாஸ், கிருஷ்ணா, துஷாரா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வரிசி’ படத்தின் முன்னோட்டம்.
கார்த்திக் தாஸ் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘வரிசி’. இதில் கார்த்திக் தாஸ் உடன் சப்னா தாஸ், கிருஷ்ணா, துஷாரா, அனுபமா குமார் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை சுவாஜொகர், சந்திரசேகர் மாணிக்கம், ப்ரியா சீனிவாசன், கார்த்திக் கணபதி ஆகியோர் தயாரிக்கிறார்கள்.
படத்தை பற்றி இயக்குனர் கார்த்திக் தாஸ் கூறியதாவது: “ஒரு ஊரில் மென்பொருள் பணியாளர், சமூக ஊடகத்துக்கு அடிமையான ஒருவர், சி.பி.ஐ. அதிகாரி ஆகியோர் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள். எதிர்பாராத ஒரு அதிர்ச்சியான சம்பவம் அவர் களின் வாழ்வை புரட்டிப் போடுகிறது. அதில் இருந்து அவர்கள் எப்படி வெளிவருகிறார்கள்? என்பதை திகிலாக சொல்வதே, ‘வரிசி’ என்கிறார், அந்த படத்தின் இயக்குனர் கார்த்திக் தாஸ்.

அவர் மேலும் கூறுகையில், “பொதுவாகவே திகில் படங்கள் வெற்றிக்கு உத்தரவாதம் அளிக்கும். அந்த வகையில், ‘வரிசி’யும் ரசிகர்கள் மனதில் இடம்பிடிக்கும்” என்றார்.
வீரப்பனின் இளைய மகளான விஜயலட்சுமி சினிமாவில் நடிகையாக அறிமுகமாகும் படத்தை கே.என்.ஆர்.ராஜா இயக்கி உள்ளார்.
தமிழக அதிரடிப் படையால் 2004-ல் சுட்டுக்கொல்லப்பட்ட சந்தன கடத்தல் வீரப்பனுக்கு வித்யாராணி, விஜயலட்சுமி என்று 2 மகள்கள் உள்ளனர். இதில் வித்யாராணி கடந்த வருடம் பா.ஜனதா கட்சியில் இணைந்தார். இளைய மகளான விஜயலட்சுமி சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி இருக்கிறார்.
விஜயலட்சுமி நடிக்கும் படத்துக்கு ‘மாவீரன் பிள்ளை’ என்று பெயர் வைத்துள்ளனர். இப்படத்தை இயக்கி உள்ள கே.என்.ஆர்.ராஜா, கதாநாயகனாகவும் நடித்துள்ளார். விஜயலட்சுமி தோற்றம் அடங்கிய பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர். அதில் கையில் துப்பாக்கியுடன் போஸ் கொடுத்தபடி நிற்கிறார் விஜயலட்சுமி.

மது ஒழிப்பு மற்றும் தண்ணீர், விவசாயிகள் பிரச்சினை பற்றிய போராட்டங்களை மையப்படுத்தி இந்தப் படம் தயாராகி உள்ளது. போராட்டங்களை முன்நின்று நடத்தும் போராளி கதாபாத்திரத்தில் விஜயலட்சுமி நடித்து இருக்கிறார். வீரப்பனின் மகள் நடிப்பதால் இப்படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.
பாலிவுட்டில் விஜய் சேதுபதி அறிமுகமாகும் மும்பைகார் எனும் படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்குகிறார்.
தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம் மாநகரம். இப்படம் தற்போது இந்தியில் ரீமேக் ஆகிறது. மும்பைகார் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்குகிறார். இப்படத்தின் மூலம் நடிகர் விஜய் சேதுபதி பாலிவுட்டில் அறிமுகமாகிறார். தமிழில் முனீஸ்காந்த் நடித்த கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தின் நாயகனான விக்ராந்த் மஸ்ஸேவின் பிறந்தநாளான இன்று, மும்பைக்கார் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. விக்ராந்த் மஸ்ஸே, விஜய் சேதுபதி உள்பட சில நடிகர்களின் தோற்றங்களுடன் கூடிய இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள கர்ணன் படம் வருகிற ஏப்ரல் 9-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். இதில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, லால், கவுரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பாக தாணு தயாரித்துள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் 9-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.
இதுவரை வெளியான இப்படத்தின் பாடல்களும், டீசரும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்ததோடு மட்டுமின்றி, சர்ச்சைகளிலும் சிக்கியது. குறிப்பாக பண்டாரத்தி என்ற பாடலால் உருவான சர்ச்சையால், அதனை மஞ்சனத்தி என மாற்றிவிட்டனர்.

படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால் இதற்கு மேல் சர்ச்சைகளில் சிக்கிவிட வேண்டாம் என்பதற்காக, கர்ணன் படக்குழு அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளதாம். அதன்படி, படத்தின் டிரெய்லரை வெளியிட வேண்டாம் என முடிவு செய்துள்ளார்களாம்.






