search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மு.க.ஸ்டாலின்"

    • 2026 சட்டமன்ற தேர்தலை முன் வைத்து இந்த மாற்றங்கள் இருக்கும் என கூறப்படுகிறது.
    • அடுத்த மாதம் ஆட்சியிலும், கட்சியிலும் அதிரடி மாற்றங்கள் நிகழும் என்று அறிவாலய வட்டாரத்தில் பரவலாக பேசப்படுகிறது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ந்தேதியே முடிந்து விட்டாலும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக வாக்குப் பதிவுகள் நடைபெற்று வருகிறது.

    இதில் தமிழ்நாட்டில் தி.மு.க., காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியே அதிக தொகுதிகளை கைப்பற்றும் என தெரிகிறது. ஆனால் பிரமாண்ட் வெற்றிக்கான வாய்ப்புகள் இருந்தும் சில தொகுதிகளில் முக்கிய தி.மு.க. நிர்வாகிகளே சரியாக வேலை செய்யாமல் உள்ளடி வேலை செய்ததாக கட்சி மேலிடத்துக்கு புகார்கள் சென்றுள்ளது.

    இதனால் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சம்பந்தப்பட்ட தொகுதியில் என்னென்ன பிரச்சனை நடந்தது என்பது பற்றி விசாரித்து வைத்துள்ளார். சம்பந்தப்பட்ட தொகுதிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் சிலர் மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

    இதனால் தேர்தல் முடிவு வந்ததும் கட்சிக்குள்ளும், ஆட்சியிலும் குறிப்பிடத்தகுந்த மாற்றங்களை செய்ய அவர் முடிவெடுத்துள்ளார் என்று தி.மு.க. நிர்வாகிகள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. 2026 சட்டமன்ற தேர்தலை முன் வைத்து இந்த மாற்றங்கள் இருக்கும் என கூறப்படுகிறது.

    பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியானதும் மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும் சூழல் உருவானால் மத்தியில் ஆட்சியில் பங்கெடுப்பது குறித்த வேலைகளில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கவனம் செலுத்து வார். இந்த பணிகள் ஜூன் 10-ந்தேதி வரை இருக்க வாய்ப்புள்ளது.

    அப்படி இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும் பட்சத்தில் டி.ஆர்.பாலுவுக்கு ரெயில்வே இலாகாவும், கனிமொழி, ஆ.ராசா போன்றோருக்கு முக்கிய இலாகா கிடைக்கும் என்றும் கட்சி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

    ஒருவேளை பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்து விட்டால் ஜூன் முதல் வாரமே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக அமைச்சரவையை அதிரடியாக மாற்றி அமைத்து விடுவார் என்றும் கூறப்படுகிறது.

    தற்போதைய அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து ஏற்கனவே உளவுத்துறை அளித்துள்ள ரிப்போர்ட் மற்றும் பல்வேறு தகவல்களின் அடிப்படையில் கிடைத்துள்ள விசயங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையில் உள்ளது. அதன்படி அமைச்சரவையில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட இருக்கிறது. 4 பேர் நீக்கப்பட்டு 4 பேர் புதிதாக சேர்க்கப்பட உள்ளதாக தெரிகிறது.

    2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலை மனதில் வைத்து சில புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுக்க முதலமைச்சர் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.

    அது மட்டுமின்றி உட்கட்சி பிரச்சனைகளை சரி செய்யும் வகையில் தி.மு.க.வில் புதிய மாவட்டச் செயலாளர்கள் நியமனம் ஜூன் 2-வது வாரம் இருக்கும் என்று தி.மு.க.வினர் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

    கட்சி நிர்வாகிகள் பலர் பொறுப்புகளை எதிர் பார்ப்பதால் கட்சி ரீதியில் மாவட்டங்களை அதிகப்படுத்தி, தி.மு.க.வின் மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது. இதன் மூலம் 2026 சட்டசபை தேர்தலில் அதிக இடங்களில் தி.மு.க. வெற்றி பெற முடியும் என கருதுகின்றனர்.

    எனவே அடுத்த மாதம் ஆட்சியிலும், கட்சியிலும் அதிரடி மாற்றங்கள் நிகழும் என்று அறிவாலய வட்டாரத்தில் பரவலாக பேசப்படுகிறது.

    • படைப்பாற்றல் மிக்க இளந்தலைவராக, எந்நாளும் மக்களுடன் இணைந்திருப்பவராகத் திகழ்ந்தவர் தலைவர் கலைஞர்.
    • ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு சராசரியாக 50 ஆயிரம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    சென்னை:

    தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு "முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா மடல்" என்ற தலைப்பில் எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

    நம் இதயத்துடிப்பாகவும், குருதி ஓட்டமாகவும் இருந்து ஒவ்வொரு நாளும் நம்மை இயக்கிக் கொண்டிருப்பவர் தலைவர் கலைஞர். அவர் நம்மை இயக்குவதால்தான் திராவிட முன்னேற்றக் கழகம் எனும் அரசியல் பேரியக்கத்தை நம்மால் அவர் வகுத்துத் தந்த பாதையில் வெற்றிகரமாக இயக்க முடிகிறது.

    தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் மட்டுமல்ல, இந்திய அரசியல் வரலாற்றிலேயே முத்தமிழறிஞர் கலைஞரைப் போன்ற பொதுவாழ்வில் சளைக்காமல் உழைத்து, சாதனைகள் பல படைத்த தலைவரைக் காண்பது அரிது. இந்திய வரைபடத்தில் தேட வேண்டிய ஒரு குக்கிராமமான திருக்குவளையில் பிறந்து, திருவாரூர் எனும் சிறிய நகரில் பயின்று, 14 வயதில் மாணவப் பருவத்திலேயே மொழி-இன உணர்வுடனான கொள்கை வழி நடந்து, பெரியார்-அண்ணா எனத் தன் தலைவர்களின் நன்மதிப்பைப் பெறும் வகையில் கடுமையாக உழைத்து, போராட்டக்களத்திற்கு அஞ்சாத வீரனாக, சிறைத் தண்டனையைச் சிரித்த முகத்துடன் ஏற்கும் தீரனாக, படைப்பாற்றல் மிக்க இளந்தலைவராக, எந்நாளும் மக்களுடன் இணைந்திருப்பவராகத் திகழ்ந்தவர் தலைவர் கலைஞர்.

    முதன் முதலில் தேர்தல் களம் கண்ட 1957 முதல், இறுதியாகத் தேர்தல் களம் கண்ட 2016 வரை 13 தேர்தல்களில் தொடர் வெற்றியைப் பெற்ற இந்திய அரசியல் தலைவர் கலைஞர் மட்டுமே. 5 முறை தமிழ் நாட்டின் முதலமைச்சர். அளப்பரிய திட்டங்கள், இந்தியாவுக்கே முன்னோடியான சாதனைகள், இந்திய அரசியலில் முக்கியப் பங்காற்றிப் பல குடியரசுத் தலைவர்களையும் பிரதமர்களையும் தேர்ந்தெடுக்கத் துணைநின்ற அரசியல் ஆளுமை. இத்தனைத் திறமைகளும் இவ்வளவு சாதனைகளும் ஒருங்கே பெற்ற ஒரே தலைவர் நம் முத்தமிழறிஞர் கலைஞர்தான்.

    அவர் நம்மை நாள்தோறும் இயக்கும்போது, நம் உழைப்பும் அவரிடம் பெற்றதாகவே இருக்கும். நம் இயக்கமும் அவர் வழிகாட்டிய திசையில் நடக்கும். நமது கழக ஆட்சியும் அவரது ஆட்சி போலவே சாதனைத் திட்டங்களால் வரலாறு படைக்கும். அதனால்தான் 2023 ஜூன் 3-ம் நாள் தொடங்கிய தலைவர் கலைஞரின் நூற்றாண்டு 2024 ஜூன் 3 அன்று நிறைவடையும் நிலையில் கடந்த ஓராண்டு முழுவதும் சாதனைத் திட்டங்களாலும், மக்களுக்குப் பயன் அளிக்கும் செயல்களாலும் அவரது நூற்றாண்டைக் கொண்டாடியிருக்கிறோம்.

    2023 மார்ச் 22-ம் நாள் நடந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில், தமிழினத் தலைவர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை, இந்தியாவையே திரும்பிப் பார்க்கச் செய்யும் வகையில் கொண்டாடுவோம் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதற்கேற்ற வகையில் செயல்திட்டங்கள் வகுக்கப்பட்டன.

    எளிய மக்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா, கழகத்தின் இரு வண்ணக் கொடி ஏற்றும் விழாக்கள் ஆகியவை மாவட்ட அளவில் தொடங்கி, கிளைகள்தோறும் நடத்தப்பட வேண்டும். ஒரு நாளோடு முடிந்துவிடுவதில்லை நம் உயிர்நிகர் தலைவர் கலைஞரின் பிறந்தநாள். அவர் நிறைவேற்றிய சிறந்த திட்டங்களையும், அவர் கற்றுத் தந்த ஆட்சிக்கான இலக்கணத்தின்படி தொடர்கின்ற 'திராவிடல் மாடல்' அரசின் கடந்த ஓராண்டு கால சாதனைகளையும் மக்களிடம் ஒவ்வொரு நாளும் எடுத்துச் சென்றிட வேண்டும். கழகத்தின் இளைய தலைமுறையினரின் நெஞ்சில் அவற்றைப் பதியச் செய்திட வேண்டும்.


    என்றென்றும் கலைஞர்-எங்கெங்கும் கலைஞர் என்பதுதான் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் நூற்றாண்டின் மைய நோக்கமாக அமைந்திருந்தது. தலைமைக் கழகம் தொடங்கி மாவட்டக் கழகம், கழகத்தின் சார்பு அணிகள் என ஒவ்வொருத் தரப்புக்குமான பணிகள் திட்டமிடப்பட்டு, அவற்றை ஆண்டு முழுவதும் நிறைவேற்றிடச் செய்வதே முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டின் செயல்பாடாக அமைந்தது.

    மாவட்டக் கழகத்தின் சார்பில் 'ஊர்தோறும் கலைஞர்' என்ற தலைப்பில் அனைத்து ஊர்களிலும், கிளைகளிலும் கழகத்தின் இருவண்ணக் கொடியை ஏற்றுதல், கலைஞர் செய்த சாதனைகளையும், தற்போதைய திராவிட மாடல் அரசின் சாதனைகளையும் மக்களிடம் கொண்டு சேர்த்தல் ஆகியவற்றுடன் தொகுதிகள்தோறும் தலைவர் கலைஞரின் மார்பளவுச் சிலையினை நிறுவுதல் என்ற திட்டமும் வகுத்தளிக்கப்பட்டு, பல மாவட்டங்களிலும் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்களின் சிலை கம்பீரமாக உயர்ந்து நிற்பதை அவரது உடன்பிறப்புகளான நீங்கள் அறிவீர்கள்.

    கழகத்தினர் மட்டுமின்றி, பொதுமக்களும் தலைவர் கலைஞரின் சாதனைகளை எடுத்துரைத்து, சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருவதைக் காண முடிகிறது.

    #கலைஞர் 100 என்ற ஹேஷ்டேக்கில் இவற்றைப் பார்வையிட முடியும் என்பதோடு, 2023 ஜூன் 3 முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாளன்று எக்ஸ் (டுவிட்டர்) தளத்தில் அவரை வாழ்த்திப் பதிவிட்ட இந்த ஹேஷ்டேக் ஒரு மில்லியனைக் கடந்து சாதனைப் படைத்தது.

    பேரறிஞர் அண்ணா உருவாக்கிய திராவிட முன்னேற்றக் கழகத்தை ஊர்கள் தோறும் வளர்த்தெடுத்தவர் தலைவர் கலைஞர். அண்ணாவின் மறைவுக்குப் பிறகு கழகத்தை அரை நூற்றாண்டு காலம் கட்டிக்காத்து வலிமைப் படுத்தியவரும் தலைவர் கலைஞர்தான். அவருடைய நூற்றாண்டில் கழகத்தை மேலும் வலிமைப்படுத்தும் வகையில், புதிதாக ஒரு கோடி உறுப்பினர்களைச் சேர்க்கும் செயல்திட்டமும் வகுக்கப்பட்டு, ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு சராசரியாக 50 ஆயிரம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.


    தன்னால் கழகத்திற்கு என்ன நன்மை என்று நினைப்பவர்கள்தான் கழகத்தின் ரத்தநாளங்கள் என்றவர் கலைஞர். அத்தகைய ரத்த நாளங்களாகக் கழகத்தின் அனைத்து நிர்வாகிகளும் செயலாற்றி, ஒரு கோடி புதிய உறுப்பினர்களைச் சேர்த்து, கழகத்தின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கையை இரண்டு கோடிக்கு மேல் உயர்த்தியிருப்பது உயிர்நிகர் தலைவர் கலைஞரின் நூற்றாண்டில் நாம் மேற் கொண்டுள்ள அரிய பணியாகும்.

    பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டியிருந்ததாலும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்ததாலும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டினையொட்டி நாம் திட்டமிட்டிருந்த ஒரு சில செயல்பாடுகள் முழுமை பெற இயலவில்லை. எனினும், தேர்தல் பணியும்கூட தலைவர் கலைஞரின் புகழ் போற்றும் பணியாகவே இருந்தது.

    இந்தியாவில் ஜனநாயகத்திற்கு நெருக்கடிகள் ஏற்பட்டபோதெல்லாம் வடஇந்தியத் தலைவர்களின் பார்வை தெற்கை நோக்கித் திரும்பியதும், அவர்களின் எதிர்பார்ப்பிற்குரிய தலைவராக நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் செயலாற்றியதும், அதன் காரணமாக ஜனநாயகம் மீட்கப்பட்டு, ஆட்சியில் நிலைத்தன்மை ஏற்பட்டதையும் எவரும் மறுக்க முடியாது. கூட்டாட்சித் தத்துவத்தை வலியுறுத்தி, மாநில சுயாட்சியின் குரலை இந்திய அளவில் முன்னெடுத்தவர் தலைவர் கலைஞர்.

    திராவிட முன்னேற்றக் கழகம் என்றாலே சமூகநீதி, மத நல்லிணக்கம், எளிய மக்களின் வாழ்வுரிமை, மாநில சுயாட்சி, ஆதிக்க மொழிகளிடமிருந்து தாய் மொழியைப் பாதுகாத்தல், இந்தியாவுக்கே முன்னோடியான திட்டங்கள் என்ற எண்ணத்தைத் தன் செயல்களால் பதிவு செய்திருக்கிறார் கலைஞர். அதனால்தான் சமூகநீதிக்கு எதிராகவும், மாநில உரிமைகளைப் பறிக்கின்ற வகையிலும், ஏழை-எளிய மக்களைப் பற்றி அக்கறையில்லாதவர்களாகவும் இருக்கக்கூடிய மதவெறி அரசியல் நடத்துவோர் இந்தியாவின் எந்த மாநிலத்தில் பேசினாலும் தி.மு.க. மீது தாக்குதலை நடத்துகிறார்கள். வன்மத்தைக்கக்குகிறார்கள். வதந்திகளைப் பரப்புகிறார்கள். தோல்வி பயத்தில் நடுங்குவதை அவர்களின் குரல் வெளிப்படுத்துகிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோழமையில் புதிய இந்தியா உருவாகப் போவதை உள்ளூர உணர்ந்து அவர்கள் புலம்புவதைக் காண முடிகிறது.

    ஜூன்-3 அன்று முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாள். தேர்தல் நடத்தை முறைகளைக் கவனத்தில் கொண்டு, மக்கள் நலன் சார்ந்த நிகழ்வுகளை ஒவ்வொரு மாவட்டக் கழகம் சார்பிலும், ஒன்றிய-நகர-பேரூர்-கிளைக் கழகங்கள் சார்பிலும் நடத்தப்பட வேண்டும். கலைஞர் நூற்றாண்டு நிறைவுறும் இந்த ஜூன்-3 அன்று மக்கள் கூடும் இடங்களில் முத்தமிழறிஞர் கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மாலையிட்டு, அனைத்துக் கொடிக்கம்பங்களிலும் கொடிகளைப் புதுப்பித்துக் கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி, மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கிட வேண்டும்.

    கழகத்தினர் தங்கள் இல்லங்களுக்கு முன்பாக 'கலைஞர் 100' என்ற வரியுடன் கோலமிட்டு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளைக் கொண்டாட வேண்டும். உள்ளூர் மைதானங்களில் இளைஞர்கள், பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகளை நடத்திப் பரிசுகளை வழங்கி ஊக்குவிக்க வேண்டும்.

    ஜூன்-4 பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன. அன்றைய நாளில் வெற்றிக் கொடி ஏற்றுவோம். 'இந்தியா'வின் வெற்றியைத் தலைவர் கலைஞருக்கு காணிக்கையாக்குவோம். தமிழ் உள்ளவரை புகழ் நிலைத்திருக்கும் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞரின் நூற்றாண்டின் தொடர்ச்சியை இந்திய அளவில் கொண்டாடுவோம்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

    • பட்டியல் இன, பழங்குடி இன இளைஞர்களைத் தொழில் முனைவோராக்கும் திட்டமாகும்.
    • 33.09 கோடி ரூபாயை மானியமாகப் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    சென்னை:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 2030-க்குள், ஒரு டிரில்லியன் பொருளாதாரமாக உயர்த்திட உறுதி பூண்டுள்ளார். அதற்காக, பல்வேறு திட்டங்களைப் புதிதுபுதிதாக உருவாக்கி செயல்படுத்தி வருகிறார்.

    "அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்" எனும் புதிய திட்டத்தை 2023-2024-ம் ஆண்டு அறிவித்து, ரூ.100 கோடி அனுமதித்தார்.

    இந்த திட்டம் பட்டியல் இன, பழங்குடி இன இளைஞர்களைத் தொழில் முனைவோராக்கும் திட்டமாகும். இதில் தொழில் முதலீட்டில் 35 சதவீதத் தொகையை அரசு மானியமாகவும், 65 சதவீத, மூலதன தொகைக்குரிய வங்கிக் கடன் வட்டியில் 6 சதவீத வட்டி மானியமும் அளிக்கப்படுகிறது.

    அவற்றின் பயனாகப் தொழில்கள் தொடங்குவதற்காக மொத்தம் 12,472 விண்ணப்பங்கள் பெறப்பட்டதில் 7,365 விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டுப் பல்வேறு வங்கிகளுக்குப் பரிந்துரைகள் செய்யப்பட்டது.

    மிகவும் குறுகிய காலத்திற்குள்ளாகவே 2,136 பயனாளிகளுக்கு வங்கிகளால் கடன்கள் அனுமதிக்கப்பட்டன. அத்துடன், முனைவு

    பயிற்சிகளும் அளிக்கப்பட்டன. 1,303 தொழில் முனைவோர்க்கு அரசு மானியமாக மட்டும் 159.76 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. இதில் ௨௮௮ மகளிர் தொழில் முனைவோர் 33.09 கோடி ரூபாயை மானியமாகப் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    அரசு மானிய உதவியுடன் வங்கிக் கடன்கள் பெற்று ஆதிதிராவிட, பழங்குடியின இளைஞர்கள் பலர், பல்வேறு தொழில்களைத் தொடங்கித் தொழில் அதிபர்களாக உயர்ந்துள்ளனர்.

    இதுபற்றி சிவகங்கை மாவட்ட தொழில் மையம் மூலம் பயன்பெற்ற எஸ்.அஞ்சலி கூறுகையில், "அண்ணல் அம்பேத்கர் தொழில்

    முன்னோடிகள் திட்டம் பற்றி அறிந்து சிவகங்கை மாவட்டத் தொழில் மையம், அலுவலகம் சென்று எனது நார் இழை பைகள் நெய்யும் தொழில் தொடங்குவது குறித்துத் தெரிவித்தேன்.

    அதனைத்தொடர்ந்து, இத்திட்டத்தில் விண்ணப்பித்து ரூ.32 லட்சத்து 70 ஆயிரம் வங்கி கடன் பெற்று, அதற்கு 35 சதவீத மானியமும் 6 சதவீத வட்டி மானியமும் பெற்றுத் தொழில் தொடங்கினேன். தற்போது 10 பணியாளர்கள் எனது நார் இழை பைகள் நெய்யும் நிறுவனத்தில் பணியாற்றுகின்றனர்.

    இதன்மூலம் மாதம் 4 லட்சம் ரூபாய் வருவாயும், ரூ.70 ஆயிரம் லாபமும் பெறுகிறேன். இத்திட்டத்தை நடைமுறைப் படுத்திய முதல்-அமைச்சருக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பெருமிதத்துடன் கூறி உள்ளார்.

    • தமிழ்நாட்டை இந்தியாவின் முதல் மாநிலமாக உயர்த்தியுள்ளது.
    • தமிழ்நாட்டு மக்களால் போற்றிப் பாராட்டப்படுகின்றன.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு பொறுப்பேற்று 3 ஆண்டு நிறைவு பெற்று 4-ம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதையொட்டி தி.மு.க. தலைமை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தி.மு.க. தலைவர், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிகார பலத்துடன் பி.ஜே.பி., பணபலத்துடன் அ.தி.மு.க. வந்த போதிலும், அஞ்சாத சிங்கமாய்ச் சீறி எழுந்து, மக்களைச் சந்தித்து தமிழ்நாடு முழுவதும் சென்றார். வென்றார்.

    தமிழ்நாட்டு, மக்கள் நம் தளபதியின் தலைமையில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டார்கள்.

    2021 சட்டமன்றத் தேர்தலில் கழகத்திற்கு 165 இடங்களைத் தந்து ஆட்சியை மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைத்தார்கள்.

    7.5.2021 அன்று காலை, கவர்னர் மாளிகையில் "முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்" எனக்கூறி நிமிர்ந்த தலையுடன் உறுதி மொழிகள் ஏற்றுத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூன்றாம் முதலமைச்சராக-பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோருக்குப் பின் முதல் முறையாகத் தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.

    முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின், நேரே கோட்டைக்குச் சென்று முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்தவுடன் தமிழ்நாட்டு மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தொடங்கி, "விடியல் பயணத் திட்டம்" கொரோனா நிவாரண உதவித் தொகை ரூ.4,000/-வழங்கும் திட்டம், முதல்வரின் முகவரித்துறை உருவாக்கும் திட்டம், பால்விலை லிட்டருக்கு 3 குறைப்புத் திட்டம், பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 குறைப்புத் திட்டம் ஆகிய 5 கோப்புகளில் முதன் முதல் ஆணைகள் பிறப்பித்து, நிறைவேற்றி, "சொன்னதைச் செய்வோம் செய்வதைச் சொல்வோம்" என்பதுடன், "சொல்லாததையும் செய்வோம்" எனக் கூறி மக்களுக்கு மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் வழங்கினார்.

    அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டு மக்களுக்காக அவர் ஆற்றிய சாதனைகள் எல்லாம் தமிழ்நாட்டை இந்தியாவின் முதல் மாநிலமாக உயர்த்தியுள்ளது. இதனை ஒன்றிய அரசின் ஆய்வு நிறுவனங்களே உறுதிப்படுத்தியுள்ளன.

    உற்பத்தி பொருள்களை ஏற்றுமதி செய்வதற்கான ஆயத்த நிலைகள் குறித்து ஒன்றிய அரசின் நிதி ஆயோக் நிறுவனம் ஆய்வு செய்து தமிழ்நாடு அரசைப் பாராட்டியுள்ளது.

    அதில் 80 முதல் 100 விழுக்காடு அளவுக்கு ஏற்றுமதி செய்து தமிழ்நாடே முதலிடம் பெற்றுள்ளது என்று கூறிப் பாராட்டியது.

    அதேபோல, கர்ப்பிணிப் பெண்கள் சுகாதாரம் மற்றும் தேசிய ஏழ்மைக் குறியீடுகள் குறித்த 2023-ம் ஆண்டுக்கான அறிக்கையில்; கர்ப்பிணிப் பெண்கள் சுகாதாரக் குறியீடுகளில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது என்று கூறியது.

    கர்ப்பிணிப் பெண்கள் பராமரிப்புடன் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு 3.31 புள்ளிகளைப் பெற்று இந்தியாவில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    நாட்டில் நடைபெறும் பிரசவங்களில் மருத்துவமனைகளில் பாதுகாப்புடன் நடைபெறக்கூடியது தமிழ்நாட்டில் தான் அதிகம்.

    அதாவது 99 சதவீதப் பிரசவங்கள் மருத்துவமனைகளில்தான் நடைபெறுகின்றன என்று தமிழ்நாடு அரசை வெகுவாகப் பாராட்டியுள்ளது.

    குழந்தை பிறந்த பின் சிசு கவனிப்பில் அனைத்து வசதிகளுடனும் குழந்தைகளைப் பராமரித்துக் காப்பதிலும் தமிழ்நாடுதான் முன்னணியில் உள்ளது.

    ஜவுளித்துணிகள் ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடம், ஆயத்த ஆடைகள், தோல் பொருட்கள், எலக்ட்ரானிக் துறை மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதியிலும் தமிழ்நாடு முதலிடம் பிடித்து புதிய சாதனை படைத்துள்ளது.

    இப்படி ஒன்றிய அரசின் ஆய்வு அறிக்கைகளே தமிழ்நாடு பெரும்பாலான முக்கியத் துறைகளில் இந்தியாவில் முதலிடத்தில் உள்ளதை உறுதிப்படுத்துகின்றன.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை, கோவை , தூத்துக்குடி ஆகிய இடங்களிலும், மலேசியா, சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் ஆகிய நாடுகளிலும் நடத்தப்பட்ட முதலீட்டாளர்கள் மாநாடுகள் வாயிலாக மொத்தம் 9.61 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு ஏறத்தாழ 30 இலட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான ஒப்பந்தங்கள் நடைபெற்று இதுவரை தொழில் வளர்ச்சி வரலாற்றில் இல்லாத ஒரு மாபெரும் புரட்சி நிகழ்த்தப்பட்டுள்ளது.

    ஆட்சிப்பொறுப்பேற்ற பின், 45 தொழிற்சாலைகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. 27 தொழிற்சாலைகள்திறந்துவைக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலமாக 74 ஆயிரத்து 757 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.

    இவைகள் அல்லாமல், கடந்த மூன்றாண்டுகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி நிறைவேற்றியுள்ள திட்டங்கள் படைத்துள்ள சாதனைகள் எண்ணிலடங்காதவை.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் நடைமுறை படுத்தியுள்ள காலை உணவுத்திட்டத்தின் சிறப்புகளை, தெலுங்கானா மாநில அரசு அறிந்து நேரில் பார்வையிட்டு தெலுங்கானா மாநிலத்திலும் இந்த காலை உணவு திட்டத்தை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்தக் காலை உணவுத் திட்டம் இந்தியாவைக் கடந்து வெளிநாடுகளிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக கனடா நாட்டில் அதன் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் 2.4.2024 அன்று "கனடா நாட்டில் பள்ளிக் குழந்தைகளுக்குத் தேசிய உணவுத் திட்டத்தினை அறிமுகம் செய்து வைக்கப்போகிறோம்" எனப் பதிவிட்டுள்ளார்.

    இதே போல இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் மற்ற மாநில அரசுகளையும் கவர்ந்துள்ளது. குறிப்பாக கர்நாடக மாநிலத்தில் தமிழ்நாட்டை பின்பற்றி இத்திட்டம் நடைமுறை படுத்தப்பட்டுள்ளது. வேறு பல மாநிலங்களில் இத்திட்டத்தினை நடைமுறை படுத்திட பரிசீலித்து வருகின்றன.

    இப்படி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மூன்றாண்டுகளாகப் படைத்துவரும் சாதனைகள் தமிழ்நாட்டு மக்களால் போற்றிப் பாராட்டப்படுகின்றன. இந்தியாவின் மற்ற மாநிலங்களின் தலைவர்களும் முதல்-அமைச்சரின் திட்டங்களை அறிந்து வியந்து அவற்றைத் தத்தம் மாநிலங்களில் செயல்படுத்திடவும் முனைப்புடன் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    இவையெல்லாம் சாதனைச் சிகரங்கள் பல படைத்த சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் புகழை இந்த புவி என்றும் பாராட்டிக்கொண்டே இருக்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இம்மாணவர்களின் உயிரிழப்பு உண்மையிலேயே மருத்துவ உலகிற்கும் தமிழ்நாட்டிற்கும் பேரிழப்பாகும்
    • மருத்துவக் கல்லூரி மாணவர்களின் பெற்றோர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார்

    கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் அருகே இராஜாக்கமங்கலம் கிராமம் லெமூர் கடற்கரையில் கடல் அலையில் சிக்கி உயிரிழந்த மருத்துவக் கல்லூரி மாணவர்களின் பெற்றோர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கன்னியாகுமரி மாவட்டம். அகஸ்தீஸ்வரம் வட்டம் இராஜாக்கமங்கலம் கிராமம் மெமூர் கடற்கரையில் இன்று காலை சுமார் 10 மணியளவில் திருச்சி தனியார் மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் கால் நனைப்பதற்காக கடலில் இறங்கியபோது. கடல் அலை அதிகமாக இருந்ததால் எதிர்பாராதவிதமாக கடல் அலை இழுத்துச் சென்றதில் நெய்வேலியை சேர்ந்த காயத்ரி (25), கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சர்வதர்ஷித் (23), திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பிரவின்சாம் (23), தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த சாருகவி (23) மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் (24)ஆகிய 5 மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

    மருத்துவக் கல்வி பயின்று உயிர்காக்கும் மருத்துவராகி மருத்துவச் சேவையில் ஈடுபடவிருந்த இம்மாணவர்களின் உயிரிழப்பு உண்மையிலேயே மருத்துவ உலகிற்கும் தமிழ்நாட்டிற்கும் பேரிழப்பாகும்.

    விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் உடனடியாக மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு மீட்பு நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொள்ள அறிவுறுத்தியதோடு, காயமடைந்தவர்களுக்கு தேவையான அனைத்து உரிய உயிர்காப்பு சிகிச்சைகளும் அளிக்கப்படுவதை உறுதி செய்யயும் உத்தரவிட்டிருக்கிறேன்.

    இந்தத் துயரகரமான சம்பவத்தில் தம் பிள்ளைகளை இழந்து வாடும் பெற்றோர்களுக்கும். அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிகள் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்ற வழங்கப்படும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • எதிர்க்கட்சியினர் பிரதமர் பதவியை ஏலம் விடுவதில் மும்முரமாக உள்ளனர்
    • இந்தியா கூட்டணியில் ஒரு வருடத்திற்கு ஒரு பிரதமர் என்ற பார்முலாவை உருவாக்க திட்டமிட்டு வருகின்றனர்

    பீகாரின் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய அமித் ஷா, "பாஜக 2014-ல் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 30 ஆண்டுகளாக இந்த நாட்டில் ஸ்திரமற்ற அரசாங்கங்கள் இருந்தன. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் நாடு வலுவான தலைமையைப் பெற்றுள்ளது, ஸ்திரத்தன்மையைப் பெற்றுள்ளது. அரசியல் ஸ்திரத்தன்மை மட்டுமல்ல, கொள்கைகளிலும் வளர்ச்சித் திட்டங்களிலும் ஸ்திரத்தன்மை பெற்றுள்ளது.

    இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் ஓராண்டுக்கு ஸ்டாலின் பிரதமராக இருப்பார். அதேபோல மம்தா, சரத் பவாரும் தலா ஓராண்டுக்கு பிரதமராக இருப்பார்கள். ஏதேனும் ஒரு ஆண்டு மிச்சமிருந்தால் ராகுல் பிரதமராவார்" என்று பேசியுள்ளார்.

    இதற்கு முன்னதாக, "எதிர்க்கட்சியினர் பிரதமர் பதவியை ஏலம் விடுவதில் மும்முரமாக உள்ளனர். இந்தியா கூட்டணி கட்சியினர் ஒரு வருடத்திற்கு ஒரு பிரதமர் என்ற பார்முலாவை உருவாக்க திட்டமிட்டு வருகின்றனர்" என்று பிரதமர் மோடி பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அடுத்த 5 நாட்களுக்கு வடதமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் அதிக வெப்பமும் வெப்ப அலையும் ஏற்படக்கூடும்
    • பொதுமக்கள் கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்

    அடுத்த 5 நாட்களுக்கு வடதமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் அதிக வெப்பமும் வெப்ப அலையும் ஏற்படக்கூடும்' என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. பொதுமக்கள் கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வெப்ப நிலை அதிகரிக்கும், வெப்ப அலை வீசும், என்பது போன்ற செய்திகள் தினந்தோறும் வெளிவந்து கொண்டு இருக்கிறது. இதனை உணர்த்தும் வகையில் கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 'அடுத்த 5 நாட்களுக்கு வடதமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் அதிக வெப்பமும் வெப்ப அலையும் ஏற்படக்கூடும்' என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இத்தகைய சூழலில் பொதுமக்கள் கவனத்துடனும் மிகுந்த எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    பொதுவாக கோடை காலம் என்பது வெப்பம் அதிகம் உள்ள மாதங்களாக இருந்தாலும், நாளுக்கு நாள் வெப்ப அளவு அதிகமாகி வருகிறது. இதில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை ஆகும். அதனால்தான் நேற்றைய தினம் தலைமைச் செயலகத்தில் அரசுத்துறை அதிகாரிகளுடன் இது தொடர்பாக விரிவான ஆலோசனை நடத்தினேன்.

    இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், மருத்துவர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் ஆகியோரின் ஆலோசனையை அரசு அதிகாரிகள் கேட்டுத் தெரிந்து கொண்டதன் அடிப்படையில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த அறிக்கையை வெளியிடுவது மிக மிக அவசியமானதாகக் கருதுகிறேன்.

    வெப்பநிலை அதிகமாகும் காலங்களில் குழந்தைகள், பள்ளி மாணவ, மாணவிகள், வயதானவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், உடல்நலக் குறைபாடுகள் உடையவர்கள் அதிகமாகப் பாதிக்கப்படலாம் இவர்களை மிகக் கவனமாக பாதுக்காக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    கோடை வெயிலினால் அதிக வியர்வை வெளியேறும்போது, உடலில் உப்புச்சத்து மற்றும் நீர்ச்சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் அதிக தாகம், தலைவலி, உடல் சோர்வு, தலைசுற்றல், தசைப்பிடிப்பு, மயக்கம் மற்றும் வலிப்பு போன்ற அறிகுறிகள் ஏற்படலாம் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

    பணிநேரங்களில் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். தாகம் இல்லை என்றாலும், போதிய அளவு நீரை தொடர்ந்து பருகவேண்டும். அதிக அளவில் மோர், அரிசிக்கஞ்சி, இளநீர், எலுமிச்சை பழச்சாறு போன்றவற்றை பருகவேண்டும். உணவுப் பழக்க வழக்கங்களில் மாறுதல்களைச் செய்து கொள்ள வேண்டும். நீர்ச்சத்து காய்கறிகளைச் சாப்பிட வேண்டும். பழச்சாறுகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.

    வெளியே செல்லும்போதும், திறந்த வெளியில் வேலை செய்யும் போதும் தலையில் பருத்தித் துணி,துண்டு,தொப்பி அணிந்துகொள்ள வேண்டும். பயணத்தின்போது குடிநீர் எடுத்துச் செல்லவேண்டும். தேவையில்லாமல் வெயிலில் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

    வியர்வை எளிதாக வெளியேறும் வகையில் மிருதுவான, தளர்ந்த, காற்றோட்டமான பருத்தி ஆடைகளை அணிவது நல்லது. வயது முதிர்ந்தவர்கள் நடந்து செல்லும் போது களைப்பாக இருந்தால் நிழலில் சற்று ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். வெப்பம் அதிகமாக உள்ள திறந்த வெளியில் வேலை செய்யும்போது, களைப்பு, தலைவலி, தலைசுற்றல் போன்ற அறிகுறிகள் ஒருவருக்கு ஏற்பட்டால், உடனடியாக நிழலுக்குச் செல்ல வேண்டும்.

    மேலும், தண்ணீர், எலுமிச்சைப் பழச்சாறு, ஓ.ஆர். எஸ். பருக வேண்டும். மயக்கம், உடல் சோர்வு, அதிக அளவு தாகம், தலைவலி, கால், மணிக்கட்டு அல்லது அடிவயிற்றில் வலி ஏற்பட்டால் அருகிலுள்ள நபரை உதவிக்கு அழைக்கவும். மிகவும் சோர்வாகவோ, மயக்கமாகவோ இருந்தால் மருத்துவ உதவியை நாடவேண்டும். சிறுபிரச்சினை என்றாலும் அதனை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று அனைத்து பொதுமக்களையும் கேட்டுக் கொள்கிறேன்.

    இத்தகை சூழலில் அரசு நிர்வாகமானது கவனத்துடனும் பாதுகாப்பு உணர்வுடனும் செயல்பட அனைத்து அதிகாரிகளுக்கும், அரசு அலுவலர்களுக்கும் நான் அறிவுறுத்தி இருக்கிறேன். தமிழ்நாடு பேரிடர் அபாயக் குறைப்பு முகமை, மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் இணைந்து பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    தொழிற்சாலைகள், கட்டடப் பணி, கல் குவாரி மற்றும் சாலை அமைத்தல் போன்ற திறந்த இடங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் நலன் கருதி பணி இடத்தில் போதுமான குடிநீர், நிழற்கூடங்கள் மற்றும் முதலுதவி வசதி ஏற்பாடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்பணியாளர்கள் வெயிலின் தாக்கத்தால் பாதிப்படையாத வகையில், பணி நேரத்தை மாற்றி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    வனத்துறையினர் காட்டுத் தீ பரவுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மலையேறுபவர்கள் அனுமதியின்றி வனப்பகுதிக்குள் நுழைவதைத் தடுக்க தீவிர ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும். வன விலங்குகளுக்கு போதுமான அளவு தண்ணீர் கிடைப்பதை உறுதிசெய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடங்களான பேருந்து நிலையம், சந்தை உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் பந்தல்கள் மூலம் சுகாதாரமான குடிநீர் வழங்கிட உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவிட்டு இருந்தேன்.

    அதன்படி நகர்ப்புறங்களில் இயங்கிவரும் 299 பேருந்து நிலையங்கள், 68 சந்தைகள், 338 சாலையோரங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் கூடக்கூடிய 277 இடங்கள், நகர்ப்புறங்களை ஒட்டியுள்ள 56 கிராம ஊராட்சிகள் என மொத்தம் 1038 இடங்களில் நிழலுடன் கூடிய தண்ணீர் பந்தல்களில் வெப்பத்தைத் தணிக்க குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. பேரூராட்சிகளுக்கு உட்பட்ட 842 இடங்களில் கூடுதல் தண்ணீர் பந்தல் வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேற்கண்ட தண்ணீர் பந்தல்களில் பொதுமக்களுக்கு கூடுதலாக ஓ.ஆர்.எஸ். உப்புக்கரைசல் விநியோகிக்கப்பட உள்ளது. இதற்கு தேவையான ஓ.ஆர்.எஸ். பாக்கெட்டுகள் பொது சுகாதாரத்துறையின் கையிருப்பில் போதிய அளவில் உள்ளது.

    அதிகரித்துவரும் கோடை வெப்பத்தை எதிர்கொள்ளும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் மூலமாகவும், அரசால் தெரிவிக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவதன் மூலமாகவும், பொதுமக்கள் திறந்த இடங்களில் பணிபுரிவோர், நீண்டதூரம் சாலை பயணங்களை மேற்கொள்வோர் பாதுகாப்பாக இருக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன். அரசு அதிகாரிகள், அலுவலர்கள் அனைவரும் மக்கள் பாதுகாப்பில் முழு அக்கறை செலுத்தி பாதுகாப்பை உறுதி செய்யுமாறும் கேட்டுக் கொள்கிறேன். வெப்ப அலை காலத்தை விவேகமான செயற்பாடுகளால் வெல்வோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டை காக்கின்ற ஒரு புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்க 'இந்தியா' கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும்
    • யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதைவிட, யார் ஆட்சி தொடர்ந்துவிடக் கூடாது என்பதை முடிவெடுப்பதற்கான தேர்தல் இது

    உங்களில் ஒருவனான முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் உரிமையோடு கேட்கிறேன். நீதியின் பக்கம் நின்று, இந்தியா கூட்டணிக்கு வரலாறு காணாத வெற்றியைத் தேடித் தாருங்கள். நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில்,

    "இந்திய நாட்டின் இரண்டாவது விடுதலைப் போர் என்று அழைக்கப்படுகின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழ்நாடு, புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளில் ஏப்ரல் 19-ஆம் நாள் நடைபெற இருக்கிறது.

    ஜனநாயகத்தையும் - மக்களாட்சி மாண்புகளையும் மதிக்கின்ற, கூட்டாட்சித் தத்துவத்தைப் போற்றி இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டை காக்கின்ற ஒரு புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்க 'இந்தியா' கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று வாக்காளப் பெருமக்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். பத்தாண்டு கால இருள் சூழ்ந்த ஆட்சியை அகற்றி, புதிய இந்தியாவுக்கான விடியலுக்கு அச்சாரம் இடும் நாள்தான் - ஏப்ரல் 19.

    யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதைவிட, யார் ஆட்சி தொடர்ந்துவிடக் கூடாது என்பதை முடிவெடுப்பதற்கான தேர்தல் இது. குஜராத் மாடல், வளர்ச்சியின் நாயகன் என்ற முகமூடிகளுடன் இதுவரை தேர்தல் களத்தில் மோடி நின்றார். அவரது குஜராத் மாடல் என்பது போலியானது என்பதும், வளர்ச்சியின் நாயகன் என்பது பொய்யானது என்பதும் பத்தாண்டுகளில் தெரிந்து விட்டது. மக்கள் தெளிந்து விட்டார்கள். இப்போது அனைவருக்கும் தெரிவது, 'ஊழல் மோடி' தான். அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகளை முறைகேடாகப் பயன்படுத்தி பல்லாயிரம் கோடி பணத்தை பாஜக குவித்திருப்பதை தேர்தல் பத்திர ஊழல் அம்பலப்படுத்திவிட்டது.

    உலகத்திலேயே மிகப்பெரிய ஊழல், சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய முறைகேடு என்று வர்ணிக்கப்படுகிற தேர்தல் பத்திர ஊழல், பாரதீய ஜனதா கட்சியும் நரேந்திர மோடியும் ஊடகங்களின் துணையோடு உருவாக்கி வைத்திருந்த போலி பிம்பத்தைச் சுக்கு நூறாக்கி, முகத்திரையைக் கிழித்துவிட்டன. தேர்தல் பத்திர நடைமுறையே முறைகேடானது, சட்ட விரோதமானது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும், ஊழல் மலிந்த தேர்தல் பத்திரத் திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி நியாயப்படுத்தி பேசி வருவது, இதுவரை பாஜகவை ஆதரித்தவர்களையே அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. வேறு எந்த நாட்டிலாவது இதுபோன்ற இமாலய ஊழல் அரங்கேறி இருந்தால், அந்த நாட்டின் பிரதமர் பதவி விலகி இருப்பார்.

    தனது சுயநல அரசியலுக்காக ஒட்டுமொத்த இந்தியாவையும் மோடி நாசப்படுத்தி விட்டார். கருப்புப் பணத்தை மீட்பது, ஊழலற்ற ஆட்சியைத் தருவது, வேலை வாய்ப்புகளை உருவாக்குவது, தொழில் வளர்ச்சியை பெருக்குவது, வறுமையை ஒழித்து மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது, சமூகநீதித் திட்டங்களைச் செயல்படுத்தி சமத்துவ சமுதாயத்தை உருவாக்குவது, பாதுகாப்பை உறுதிசெய்து மகளிர் வாழ்வை மேம்படுத்துவது என்ற எல்லா தளங்களிலும் படுதோல்வியை மோடியின் அரசு சந்தித்து இருக்கிறது.

    வரலாறு காணாத வேலையில்லாத் திண்டாட்டம் கோடிக்கணக்கான இளைஞர்களின் கனவுகளைச் சிதைத்து விட்டது. விஷம் போல் ஏறிய விலைவாசி உயர்வு ஏழை மக்களின் வாழ்க்கையைப் பாழ்படுத்திவிட்டது. பெட்ரோல், டீசல், சுங்கக் கட்டணக் கொள்ளை நடுத்தர மக்களை வதைத்துவிட்டது. இரக்கமற்ற ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு சிறு, குறு தொழில்களை சிதைத்துவிட்டது. மதச்சார்பின்மையைக் குழிதோண்டிப் புதைத்து, எப்போதும் மதப் பகையை வளர்க்கும் வெறுப்புப் பேச்சின் மூலம் சமுதாயத்தில் பதற்றத்தை ஏற்படுத்திக் குளிர்காய நினைக்கிறார்கள்.

    அண்ணல் அம்பேத்கர் இயற்றி அளித்த அரசியலமைப்புச் சட்டம், மிகப்பெரிய நெருக்கடிக்கு ஆளாகி இருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர்கள், மாநிலங்களின் முதலமைச்சர் பதவியில் இருந்தாலும் கைது செய்து சிறையில் அடைக்கும் கொடுமையும், ஆளுநர்களை வைத்துப் போட்டி அரசாங்கம் நடத்தி, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்த விடாமல் முடக்கும் அநியாயம், மாநிலங்களுக்கு வரி மற்றும் நிதிப் பகிர்வில் பாரபட்சம் அரங்கேறாத நாளே இல்லை. இதுவரை இந்தியத் திருநாடு சந்திக்காத அளவு மாநில உரிமைப் பறிப்பு நடவடிக்கைகள் மோடி அரசால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வந்தன. சுதந்திர இந்தியாவில், பெட்ரோல் – டீசல் மீது மிக அதிகமான வரியை செஸ், சர்சார்ஜ் என்ற பெயரில் வசூலித்து, மாநிலங்களுக்குப் பகிர்ந்து தராமல், மக்களிடம் சுரண்டி மாநிலங்களையும் வஞ்சித்த மோசமான ஆட்சி, மோடியின் ஆட்சி!

    வெள்ள நிவாரணம், வறட்சி நிவாரணம், சட்ட மசோதாக்களுக்கு அனுமதி, அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பது, துணைவேந்தர்களை நியமனம் செய்வது போன்ற அன்றாட, இயல்பான நிர்வாக நடைமுறைகளுக்குக்கூட உச்ச நீதிமன்றத்தை நாடுவதற்கு மாநிலங்களுக்கு நிர்பந்தம் தருகிற கொடுங்கோல் ஆட்சியாக, மோடி தலைமையிலான ஆட்சி இருப்பதை நாட்டு மக்கள் அறிவார்கள். மாநிலங்களின் வயிற்றில் அடிப்பது, மாநில உரிமைகளை நசுக்குவதைப் பெருமையான செயல் என்று கருதிக்கொள்கிற அளவு அதிகார மமதையில் ஆட்டம் போடும் ஆட்சியாளர்களுக்குத் தக்க பாடம் புகட்டுவதற்கான தேர்தல் இது.

    இந்தியா போன்ற மகத்தான, மாபெரும் ஜனநாயக நாட்டின் பிரதமராக, தனது கடமையில் நரேந்திர மோடி தோற்றுவிட்டார். எனவே, அவர் அந்த நாற்காலியில் இருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டும். மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அதை நாடு தாங்காது. நாடாளுமன்ற ஜனநாயகத் தேர்தல் முறையே இல்லாமல் போய்விடும், சர்வாதிகார அதிபர் ஆட்சி முறை கொண்ட நாடாக ஆர்எஸ்எஸ் – பாஜக ஆட்சியாளர்கள் இந்தியா மாற்றிவிடுவார்கள். இன்னொரு வாய்ப்புக் கிடைத்தால் இந்த நாட்டில் ஜனநாயகத்தை ஒழித்துக்கட்டி, மாநிலங்களின் எல்லைக் கோடுகளை மாற்றி, ஒற்றையாட்சி நாடாக மாற்றிவிடுவார்கள் என்ற அச்சம் நாடு முழுவதும் மக்கள் மனங்களில் இருக்கிறது. இந்தியாவைப் பாதுகாக்க மோடி ஆட்சி அகற்றப்பட வேண்டும்.

    கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்கு, தமிழர்களின் வளர்ச்சிக்கு மோடி அரசு தீட்டிய ஒரேயொரு சிறப்புத் திட்டத்தையாவது கூறுங்கள் என்று கடந்த ஒரு மாத காலமாகப் பரப்புரைக் கூட்டங்களில் ஒன்றிய அரசை நோக்கிக் கேள்வி எழுப்பி வந்தேன். தேசியப் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ஒரு பைசா கூட தராமல் தமிழ்நாட்டை வஞ்சிப்பது நியாயமா என்றும் கேட்டு வந்தேன். ஆனால், அதற்கு எந்த நேர்மையான பதிலையும் பிரதமர் மோடியோ, அவரது அமைச்சரவை சகாக்களோ கூறவில்லை. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் மோடியும் பாஜகவும் எதிரிகள் என்பது இதில் இருந்தே உறுதியாகிவிட்டது. தமிழ்நாட்டில் அமைய இருந்த மாபெரும் முதலீட்டை, மிரட்டி குஜராத்துக்கு மடை மாற்றியவர்கள், மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு முன்னேறுவதை அனுமதிக்கவே மாட்டார்கள். தமிழ்நாட்டின் வளமான எதிர்காலத்துக்கும், மாநிலத்தின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரவே கூடாது.

    இவர்கள் ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கத்தில் அடிமை பழனிசாமியின் கட்சியானது பாஜக போட்டுத் தந்த திட்டப்படி கள்ளக் கூட்டணி அமைத்து தனியாக நிற்கிறது. தமிழ்நாட்டை வஞ்சித்த பாஜக, பாழ்படுத்திய அதிமுக ஆகிய இரண்டு கூட்டணியையும் புறக்கணிக்குமாறு தமிழ்நாட்டு மக்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

    பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் ஒருவரை ஒருவர் எதிர்ப்பது போல நாடகமாகிக் கொண்டிருந்தாலும், தேர்தலுக்குப் பிறகு கைகோத்து விடுவார்கள். பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியை விமர்சிக்காதது மட்டுமல்ல, தேர்தலுக்குப் பிறகு பா.ஜ.க-வுக்குத் தேவையென்றால் நேரடியாக ஆதரிப்பார்கள்.

    2019-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் வலுவான கூட்டணியை அமைத்தது திராவிட முன்னேற்றக் கழகம். அன்று முதல் நடந்த அனைத்து தேர்தல்களிலும் தொடர் வெற்றிகளைக் குவித்த சிறப்பும் பெருமையும் திமுக கூட்டணிக்கு உண்டு.

    திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான 'இந்தியா' கூட்டணியில் அகில இந்திய காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்தியக் கம்யூனிஸ்ட், ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி ஆகிய கட்சிகளுக்கு தொகுதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. நண்பர் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யமும் நம் அணியில் இணைந்துள்ளது. திராவிடர் கழகம், மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, ஆதித்தமிழர் பேரவை உள்பட பல்வேறு கட்சிகள், அமைப்புகள், சமுதாய இயக்கங்கள் நமது அணிக்கு ஆதரவைத் தெரிவித்து உள்ளன. இந்தத் தொண்டர்களின் சலிக்காத உழைப்பைத் தமிழ்நாடு முழுவதும் நான் பார்த்தேன். அவர்களது முகங்களில் தெரிந்த நம்பிக்கை, என்னை மேலும் மேலும் உற்சாகம் அடைய வைத்துள்ளது.

    தேர்தலுக்கு முன்னதாக நான் வெளியிட்ட அறிக்கையில், '' புதுவை உள்ளிட்ட தமிழ்நாட்டின் 40 தொகுதிகளிலும் யார் வேட்பாளர், எந்தச் சின்னம் என்பதை மறந்து விட்டு , 'வேட்பாளர் மு.க.ஸ்டாலின்' என்பதை மனதில் வைத்து அனைவரும் பணியாற்ற வேண்டும். அனைத்துத் தொகுதியிலும் நானே போட்டியிடுகிறேன் என்பதை உள்ளத்தில் தாங்கி அனைத்து உடன்பிறப்புகளும் பணியாற்ற வேண்டும்" என்று உரிமையோடு நான் கேட்டுக் கொண்டேன். அந்தச் சொல்லுக்கு கட்டுப்பட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் அனைத்து உடன்பிறப்புகளும் தேர்தல் பணியாற்றி வரும் காட்சியை நான் பார்த்தேன். 'இவர்களைத் தொண்டர்களாகப் பெற என்ன தவம் செய்துவிட்டேன்' என்ற பெருமித உணர்வை நான் அடைகிறேன்.

    இதே ஆர்வமும் சுறுசுறுப்பும் தேர்தல் முடியும் வரை இருந்தாக வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். பொதுமக்களை வாக்குச்சாவடிக்கு வர விழிப்புணர்வு ஏற்படுத்துவது முதல், வாக்குப் பெட்டிகள் உரிய பாதுகாப்பான இடங்களுக்கு எடுத்துச் செல்லப்படுவது வரையிலும் கண்துஞ்சாது கண்காணிக்க வேண்டும் என்று கழக உடன்பிறப்புகளைக் கேட்டுக் கொள்கிறேன். உங்களது உழைப்பின் பயன்தான் இந்தியாவையும் தமிழ்நாட்டையும் காக்கும் என்பதை மறந்து விடாதீர்கள்.

    தமிழ்நாட்டில் தனக்கு பிடித்த ஊர்ப் பெயர்களில் ஒன்று 'எப்போதும் வென்றான்' என்று தலைவர் கலைஞர் அவர்கள் அடிக்கடி குறிப்பிடுவார்கள். திராவிட முன்னேற்றக் கழகமும் எப்போதும், எல்லாத் தேர்தல்களிலும் வென்றான் என்பதை மெய்ப்பிக்கும் தேர்தல் இது.

    ஊடகங்களின் கருத்துக் கணிப்புகளைக் கண்டு நம் கவனம் துளியும் சிதறிவிடக்கூடாது. அவற்றைக் கடந்த காலங்களிலும் நாம் பொருட்படுத்தியது இல்லை. கடைசி வாக்கு பதிவாகி, வெற்றிக் கனி நம் கைகளில் வந்து சேரும் வரை, கண் துஞ்சாது – பசி நோக்காது – கருமமே கண்ணாயினர் என நாம் கவனத்தோடும் உற்சாகம் குன்றாமலும் உழைத்திட வேண்டுகிறேன். கருத்துக்கணிப்புகளை எல்லாம் விஞ்சுகிற, நாடே தமிழ்நாட்டைத் திரும்பிப் பார்க்கிற வெற்றியாக நம் வெற்றி இருக்க வேண்டும்.

    தேர்தல் விதிகளை முறையாகப் பின்பற்றி, வாக்காளப் பெருமக்கள் ஒவ்வொரையும் மீண்டும் தேடிச் சென்று சந்தித்து, அவர்களிடம் மோடி ஆட்சியில் நாடு எதிர்கொண்டுள்ள ஆபத்துகளை விளக்கிச் சொல்லி, திராவிட மாடல் ஆட்சியில் நிறைவேற்ற மகத்தான மக்கள் நலத்திட்டங்களையும் சாதனைகளையும் எடுத்துரைத்து, நம் அணியின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும்.

    இரண்டு முறை இருண்ட காலத்தைக் காட்டிய பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம். இந்தியா கூட்டணியின் வெற்றியில்தான் இந்திய நாட்டின் சிறப்பான எதிர்காலமும் தமிழ்நாட்டின் முன்னேற்றமும் இருக்கிறது. திமுக தேர்தல் அறிக்கையும், அதை வழிமொழிந்தும் வலு சேர்த்தும் காங்கிரஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கையும் திட்டங்களாக மாற வேண்டும்.

    தமிழ்நாட்டின் வாக்காளப் பெருமக்களுக்கு பணிவான வேண்டுகோளை கரம் கூப்பி முன்வைக்கிறேன். இந்தியா என்றென்றும் மதச்சார்பின்மையும் கூட்டாட்சியும் சகோதரத்துவமும் கொண்ட நாடாகத் திகழ, தமிழ்நாட்டின் தனித்தன்மையை நிலைநாட்டுவதற்கு நம் முன் உள்ள ஒரே வாய்ப்பும் ஆயுதமும் உங்கள் வாக்குதான். உங்கள் பொன்னான வாக்குகள், இந்தியாவைக் காக்கட்டும், சர்வாதிகாரத்தில் இருந்து நாட்டை மீட்கட்டும். தமிழ்நாட்டின் தனித்தன்மையை உறுதி செய்யட்டும்.

    தமிழ்நாட்டின் மக்கள் நலத் திட்டங்கள் தொய்வின்றித் தொடர, எங்கும் எதிலும் தமிழ்நாடு முன்னோடி என்ற பெருமை நிலைத்திட, தமிழர்களின் அரசியல் உரிமைகளுக்கு மதிப்பளிக்கிற அரசு டெல்லியில் அமைந்தாக வேண்டும். நாட்டின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு, ஒன்றியத்தில் ஆட்சி மாற்றமே ஒன்றே தீர்வு. தமிழ்நாட்டின் பகைவர்களை, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் எதிரிகளை வீழ்த்துவோம்.

    ஜனநாயகத்தைக் காக்கும் போர்க்களத்தில், நீதியின் பக்கம் நின்று, இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வரலாறு காணாத வெற்றியைத் தமிழ்நாட்டு மக்கள் தேடித் தர வேண்டும் என்று உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன்" என்று அவர் எழுதியுள்ளார்.

    • மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்டோர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.
    • இது வெறும் தேர்தல் கூட்டணி அல்ல; கொள்கையால் ஒன்றிய கூட்டணி - மு.க.ஸ்டாலின்

    மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை அக்கட்சியின் தலைமைக் கழகத்தில் இன்று வெளியிடப்பட்டது.

    காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.

    இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை பாராட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

    "அடிமை அதிமுக அடகு வைத்த, பாசிச பாஜக பறித்த தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்க இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள்.

    நாம் வலியுறுத்திய வாக்குறுதிகள் அனைத்தையும் உள்ளடக்கி, மாநிலக் கட்சியான தி.மு.க.வால் நிறைவேற்ற முடியுமா எனக் கேள்வி எழுப்பியோருக்கான தக்க பதிலாக அமைந்துள்ளது காங்கிரஸ் வெளியிட்டுள்ள 2024 தேர்தல் அறிக்கை.

    அதனால்தான் சொல்கிறோம். இது வெறும் தேர்தல் கூட்டணி அல்ல; கொள்கையால் ஒன்றிய கூட்டணி" என்று பதிவிட்டுள்ளார்.

    காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள் விவரம் வருமாறு:-

    * கடந்த 5 ஆண்டுகளில் ஜனநாயகம் பலவீனம் அடைந்து விட்டது.

    * நாடு முழுவதும் சமூக, பொருளாதார, சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.

    * மத்திய அரசு பணியிடங்களில் 30 லட்சம் காலி பணியிடங்களை நிரப்புவோம்.

    * அரசு பொதுத்துறை நிறுவனங்களில் ஒப்பந்த பணிமுறை நீக்கப்படும்.

    * மத்திய அரசு பணிகளில் ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட பணியிடங்கள் ஓராண்டில் நிரப்பப்படும்.

    * பா.ஜ.க. ஆட்சியில் நீதி மறுக்கப்பட்ட அனைவருக்கும் நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    * மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்து புதிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்படும்.

    * மூத்த குடிமக்கள், விதவைகள், மாற்றுத் திறனாளிகளுக்கு ஓய்வூதியம் மாதம் ரூ.1000 வழங்கப்படும்.

    * 2025-ம் ஆண்டு முதல் மத்திய அரசு பணிகளில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும்.

    * 2024 மார்ச் மாதம் வரையில் பெறப்பட்ட கல்விக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.

    • தமிழ்நாட்டில் முதலமைச்சரின் 'காலை உணவுத் திட்டம்’ இந்தியா முழுவதும் வரவேற்பை பெற்றுள்ளது
    • தமிழ்நாட்டை பின்பற்றி தெலுங்கானா மாநிலத்தில் தற்போது 6500000 உணவுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது

    கனடா நாட்டிலும் 'காலை உணவுத் திட்டம்' நடைமுறைக்கு வந்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.

    தமிழ்நாட்டில் முதலமைச்சரின் 'காலை உணவுத் திட்டம்' இந்தியா முழுவதும் வரவேற்பை பெரும் நிலையில், வெளிநாடுகளிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தொலைநோக்குப் பார்வைக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி என திமுக பெருமிதமாக தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக திமுக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்,

    "மாண்புமிகு தமிழ்நாடு அவர்களின் கனவுத் திட்டமாக முதலமைச்சர் திரு.மு.கூ.ஸ்டாலின் தமிழ்நாடு அரசு தொடக்கப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் வெகு சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் சட்டப் பேரவையில் 7.5.2022 அன்று விதி 110 ன் கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இனிமேல் காலை சிற்றுண்டி வழங்கப்படும் அறிவித்தார்.

    நகரப் பகுதிகளிலும், கிராமப் பகுதிகளிலும், பள்ளிக்குச் செல்லக் கூடிய குழந்தைகள் காலையிலேயே புறப்பட்டு விடுகிறார்கள். இதனால் பெரும்பாலான குழந்தைகள் காலை உணவு சாப்பிடுவது இல்லை என்ற தகவல் அரசுக்குக் கிடைத்திருக்கிறது என்றும். ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலக்கூடிய தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு அனைத்துப் பள்ளி நாட்களிலும் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும் என்றும் இதனை உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக வழங்குவோம். படிப்படியாக அனைத்து பகுதிகளுக்கும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றும் அறிவித்தார்கள்.

    இந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் விதத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளான 15.92022 அன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இத்திட்டத்தினை மதுரையில் தொடங்கி வைத்தார்கள். மேலும், 258.2023 அன்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பிறந்த திருக்குவளை கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கி உணவுத் திட்டத்தினை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தினார்கள். அதன் மூலம் 31000 அரசுப் பள்ளிகளில் 17 இலட்சம் குழந்தைகள் நாள்தோறும் காலை உணவு உண்டு வகுப்பறைகளில் சிறப்பாகக் கல்வி பயின்று வருகின்றனர்.

    இத்திட்டத்தின் சிறப்புகளை, தெலுங்கானா மாநில அரசு அறிந்து அதன் அலுவலர்கள் தமிழ்நாட்டிற்கு வருகைபுரிந்து காலை உணவு தயாரிக்கப்படும் இடம், பள்ளிகளுக்கு வாகனங்கள் மூலம் அனுப்பப்படுதல், பள்ளிகளில் குழந்தைகள் சாப்பிடுதல் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு தமிழ்நாடு இத்திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது. தெலுங்கானா மாநிலத்திலும் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என்று கூறிச் சென்றனர். அவ்வாறே தெலுங்கானா மாநிலத்தில் தற்போது உணவுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்தக் காலை உணவுத் திட்டம் இந்தியா முழுவதும் புகழடைந்து வருகின்ற நிலையில், இந்தியாவைக் கடந்து வெளிநாடுகளிலும் நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிமுகப்படுத்திய காலை உணவுத் திட்டம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் இன்று கனடா நாட்டில் பள்ளிக் குழந்தைகளுக்கு தேசிய உணவுத் திட்டத்தினை அறிமுகம் செய்து வைக்கப்போகிறோம் எனப் பதிவிட்டுள்ளார்.

    தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டுள்ள காலை உணவுத் திட்டம் இந்தியாவில் உள்ள மாநிலங்களில் மட்டுமல்லாமல், வெளிநாடுகளிலும் நடைமுறைப்படுத்தப்படுவது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தொலைநோக்குப் பார்வைக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றியாகும்" என திமுக தெரிவித்துள்ளது.

    • குடியுரிமை என்ற மனிதநேயக் கொள்கையை மதம், இனத்தால் வேறுபடுத்தும் பிளவுவாதக் கொள்கையாக ஒன்றிய பாஜக அரசு மாற்றியது
    • இஸ்லாமியர்களையும், இலங்கை தமிழர்களையும் வஞ்சிக்கும் சட்டத்தை பாஜக அரசு நிறைவேற்றியது

    குடியுரிமை திருத்தச்சட்டத்தை மத்திய அரசு இன்று அமல்படுத்தியுள்ளதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

    அதில், "குடியுரிமை என்ற மனிதநேயக் கொள்கையை மதம், இனத்தால் வேறுபடுத்தும் பிளவுவாதக் கொள்கையாக ஒன்றிய பாஜக அரசு மாற்றியது. இஸ்லாமியர்களையும், இலங்கை தமிழர்களையும் வஞ்சிக்கும் சட்டத்தை பாஜக அரசு நிறைவேற்றியது.

    அதனை திமுக உள்ளிட்ட ஜனநாயகச் சக்திகள் கடுமையாக நாடாளுமன்றத்தில் எதிர்த்தன. ஆனால் பா.ஜ.க.வின் பாதம் தாங்கியான அ.தி.மு.க. ஆதரித்து வாக்களித்ததால்தான் அச்சட்டம் நிறைவேறியது. மக்கள் எதிர்ப்பு காரணமாக அந்தச் சட்டத்தை இதுநாள் வரையில் அமல்படுத்தாமல் வைத்திருந்தது பா.ஜ.க.

    திராவிட முன்னேற்றக் கழக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, கடந்த 2021-ஆம் ஆண்டு செப்டம்பர் 8-ஆம் நாள், இந்திய நாட்டின் ஒற்றுமையையும், மத நல்லிணக்கத்தையும் போற்றிப் பாதுகாக்கவும், அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மதச்சார்பின்மைக் கோட்பாட்டினை நிலைநிறுத்தவும், இந்திய குடியுரிமைத் திருத்தச் சட்டம் - 2019-ஐ, இரத்து செய்திட ஒன்றிய அரசை வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டமன்றத்தில் அரசினர் தனித் தீர்மானத்தை நிறைவேற்றினோம்.

    இப்போது, தேர்தலில் தனது அனைத்து அஸ்திரங்களும் எடுபடாமல் போன நிலையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதன் மூலமாகக் கரையேற முயற்சிக்கிறார் பிரதமர் மோடி. தேர்தல் நேரத்தில் மக்களின் உணர்ச்சிகளைச் சீண்டி அரசியல் ஆதாயம் அடையப் பார்க்கிறார் பிரதமர்.

    அமைதிமிகு இந்தியாவில் பிளவுமிகு சட்டத்தைக் கொண்டு வந்த பா.ஜ.க.வையும், அந்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த அடிமை அ.தி.மு.க.வையும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள். தக்க பாடம் புகட்டுவார்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

    • ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க ஒவ்வொரு ஆண்டும் பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
    • நோன்பு கடைபிடிக்கப்படும் நாட்களுக்கு மட்டும் பச்சரிசி வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    நோன்பு நோற்கும் இஸ்லாமிய மக்களுக்கு புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க ஒவ்வொரு ஆண்டும் பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

    கடந்த ஆண்டுகளைப் போலவே. 2024-ஆம் ஆண்டிலும் ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்க வேண்டும் என்று இஸ்லாமிய மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.

    2024-ஆம் ஆண்டு. ரமலான் மாதத்தில் நோன்பு நோற்கும் இஸ்லாமிய மக்களுக்கு நோன்பு கஞ்சி தயாரிப்பதற்கு ஏதுவாக பள்ளிவாசல்களுக்கு மொத்த அனுமதியின்கீழ் நோன்பு கடைபிடிக்கப்படும் நாட்களுக்கு மட்டும் பச்சரிசி வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    பள்ளிவாசல்களுக்குத் தேவைப்படும் அரிசிக்கான மொத்த அனுமதியை வழங்க மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்குத் தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி,7,040 மெட்ரிக் டன் அரிசி மொத்த அனுமதி மூலம் பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும். இதனால் அரசுக்கு 26 கோடியே 81 இலட்சத்து 53 ஆயிரத்து 600 ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும்.

    ×