என் மலர்tooltip icon

    செய்திகள்

    • மோசமான வானிலை காரணமாக பிரதமர் மோடி பயணித்த ஹெலிகாப்டரை தரையிறக்க முடியவில்லை.
    • அதன்பின், பிரதமர் மோடி பயணித்த ஹெலிகாப்டர் மீண்டும் கொல்கத்தாவுக்கு திருப்பி விடப்பட்டது.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காளத்தின் நாடியா மாவட்டத்தில் உள்ள தாஹேர்பூரில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க இன்று ஹெலிகாப்டர் மூலம் பயணம் மேற்கொண்டார். ஆனால் அங்கு நிலவிய மோசமான வானிலை காரணமாக, ஹெலிகாப்டரை தரையிறக்க முடியவில்லை.

    அதன்பின், பிரதமர் மோடி பயணித்த ஹெலிகாப்டர் மீண்டும் கொல்கத்தாவுக்கு திருப்பி விடப்பட்டது. பிரதமரின் வருகைக்காக மாநாட்டுத் திடலில் ஆயிரக்கணக்கானோர் காத்திருந்தனர்.

    இந்நிலையில், மாநாட்டுத் திடலில் காத்திருந்தவர்களுக்கு மத்தியில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

    பீகார் தேர்தல் முடிவுகள் மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க. வெற்றிக்கான கதவுகளைத் திறந்து விட்டுள்ளன. இப்போது மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் காட்டு ராஜ்ஜியத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும்.

    ஊடுருவல்காரர்களை அடையாளம் காண உதவும் எஸ்.ஐ.ஆரை திரிணமுல் காங்கிரஸ் எதிர்க்கிறது. ஊடுருவல்காரர்கள் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவில் உள்ளனர்.

    அந்தக் கட்சி என்னையும், பா.ஜ.க.வையும் எவ்வளவு வேண்டுமானாலும் எதிர்க்கட்டும், பேசட்டும். ஆனால் மாநிலத்தின் முன்னேற்றத்தை தடுக்கக்கூடாது.

    பின்தங்கிய, மேற்கு வங்கத்தின் தொலைதூர பகுதிகளுக்கு நவீன வசதிகளை உறுதி செய்வதே எங்களின் நோக்கம். இங்கு வளர்ச்சியைக் கொண்டு வர அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்.

    மாநிலத்தில் இரட்டை எஞ்சின் அரசாங்கத்தை அமைக்க பா.ஜ.க.வுக்கு வாய்ப்பு அளியுங்கள் என தெரிவித்தார்.

    • டெல்லி வந்த அதிபர் புதினை, பிரதமர் நரேந்திர மோடி விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்றார்.
    • அதிபர் புதினுக்கு தனது இல்லத்தில் பிரதமர் மோடி இரவு விருந்தளித்தார்.

    புதுடெல்லி:

    சுகுமார் தஞ்சையில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தான். ஒரு வாரம் கழித்து மீண்டும் ஊர் திரும்பினான்.

    கடைக்குச் சென்று கொண்டிருந்த சுகுமாரை எதிரில் வந்த அவனது நண்பன் சுந்தர் பார்த்தான். உடனே, வாடா சுகுமார் எப்படி இருக்கே என கேட்டான் சுந்தர்.

    நான் நல்லா இருக்கேன், நீ எப்படி இருக்கே என்றான் சுகுமார்.

    ஊருக்குப் போயிருந்தியே என்ன விஷயம்? ஊருல எல்லாம் நல்லா இருக்காங்களா என்றான் சுந்தர்.

    எல்லாம் நல்லா இருக்காங்க. சரி, நாட்டு நடப்புல என்ன முக்கியமான விஷயம் சொல்லு என ஆரம்பித்தான் சுகுமார்.

    கடந்த சில ஆண்டுகளாக வெளிநாடுகளில் இந்திய நாட்டின் மதிப்பு அதிகரித்து வருகிறது. வெளிநாடுகளில் பிரதமர் மோடிக்கும் நல்ல வரவேற்பு அளிக்கிறார்கள். பிரதமரின் வெளிநாட்டு பயணங்களிலும் அந்நாட்டு உயரிய விருதுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இவை எல்லாம் இந்தியாவுக்கு பெருமைதானே என்றான் சுந்தர்.

    ஆமாம், அதுபோலவே இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு தலைவர்களுக்கும் நாம் அளிக்கிற மரியாதை உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது தெரியுமா என கூறினான் சுகுமார்.

    இந்த ஆண்டு இந்தியா வந்த அதிபர் புதினின் பயணம் உலக அளவில் பெரும் கவனத்தைப் பெற்றது எனக்கூறிய சுந்தர், அதிபர் புதினின் இந்திய பயணம் குறித்து சொல்லியதன் சாராம்சம் பின்வருமாறு:

    உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 3 ஆண்டுகளைக் கடந்துள்ளது. அதன் காரணமாக உலக அரங்கில் ரஷியா மிகவும் தனிமைப்படுத்தப்பட்டது.

    இதற்கிடையே, இந்த ஆண்டு தொடக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி ரஷியா சென்றார். அப்போது, இந்தியாவுக்கு வருமாறு அதிபர் புதினுக்கு அழைப்பு விடுத்தார். அதிபர் புதினும் பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று வருவதாக உறுதியளித்தார்.

    இந்நிலையில், ரஷிய அதிபர் விளாடிமர் புதின் டிசம்பர் 4, 5 ஆகிய இரு தினங்கள் இந்தியாவிற்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டார்.


    டிசம்பர் 4-ம் தேதி டெல்லி வந்த அதிபர் புதினை, பிரதமர் நரேந்திர மோடி விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்றார். அதிபர் புதினுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பும், அணிவகுப்பு மரியாதைம் வழங்கப்பட்டது. இருவரும் ஒரே காரில் பயணம் செய்தது உலக அளவில் கவனம் பெற்றது. அதிபர் புதினுக்கு தனது இல்லத்தில் பிரதமர் மோடி இரவு விருந்தளித்தார்.

    தலைநகர் டெல்லியில் நடந்த இந்தியா-ரஷியா இடையிலான 23-வது உச்சி மாநாட்டில் அதிபர் புதினும், பிரதமர் மோடியும் பங்கேற்றனர். அதன்பின், இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். இந்தப் பயணத்தின்போது இந்தியா-ரஷியா இடையே பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

    ரஷிய அதிபர் விளாடிமர் புதினுக்கு ஜனாதிபதி மாளிகையில் அரசு சார்பில் விருந்து அளிக்கப்பட்டது.

    இந்த விருந்தில் பங்கேற்க காங்கிரஸ் மூத்த எம்.பி.யான சசி தரூருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்திக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

    வெளிநாட்டு தலைவர்கள் அரசுமுறை பயணமாக இந்தியா வரும்போது, ஜனாதிபதி அளிக்கும் விருந்தில் எதிர்க்கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் மற்றும் மூத்த எம்.பி.க்கள் அழைக்கப்படுவது வழக்கம். இந்த நடைமுறையில் ராகுல் காந்தி அழைப்பில் இடம்பெறாதது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.

    ரஷிய அதிபர் புதினுக்கு பிரதமர் மோடி அளித்திருந்த பரிசுப் பொருட்கள்:

    காஷ்மீர் குங்குமப்பூ, அசாமின் கருப்பு தேயிலை, ஆக்ராவின் பளிங்கு செஸ் செட், கைகளால் வடிவமைக்கப்பட்ட வெள்ளி குதிரை சிற்பம், முர்ஷிதாபாத் வெள்ளி தேநீர் கோப்பைகள், ரஷிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட பகவத் கீதை புத்தகம் ஆகியவை.

    இந்தியாவின் பாரம்பரியம், கலாசாரத்தை பிரதிபலிக்கும் இந்த பரிசுப் பொருட்கள் பலரது கவனத்தை ஈர்த்தன.


    இந்தியாவில் தனது அரசுமுறை பயணத்தை நிறைவு செய்த அதிபர் புதின் ரஷியா புறப்பட்டுச் சென்றார். வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் விமான நிலையத்திற்கு நேரில் சென்று அதிபர் புதினை வழியனுப்பி வைத்தார்.

    அதிபர் புதினின் இந்திய பயணம் இரு நாடுகளின் உறவை மேலும் வலுப்படுத்துவதாக உள்ளது. உக்ரைன் போர் தொடங்கிய பிறகு ரஷிய அதிபர் புதின் இந்தியாவுக்கு மேற்கொண்ட முதல் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது என தெரிவித்தான்.

    பரவாயில்லையே, அதிபர் புதின் - பிரதமர் மோடி இடையிலான நட்பு இரு நாடுகளுக்கும் நல்ல பலனை அளித்தால் சரிதான் என சொன்னபடியே வீட்டுக்குப் புறப்பட்டான் சுகுமார்.

    • சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக, 370-க்கும் மேற்பட்ட தமிழ் குடும்பங்கள் இங்கு வசித்து வந்தனர்.
    • 215 குடும்பங்கள் மட்டுமே மாற்று இடத்திற்கு தகுதியானவர்கள் என அரசு அறிவித்தது.

    டெல்லியில் தமிழர்கள் குடும்பங்களாய் வாழ்ந்து வந்த மதராஸி கேம்ப் இடிப்பு சம்பவத்தை தமிழ் மக்கள் யாரும் மறந்திருக்க மாட்டார்கள். தமிழகத்தில் இருந்து குடிபெயர்ந்த 350 தமிழ் குடும்பங்கள் நடுத்தெருவில் தள்ளப்பட்ட சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சியடைய வைத்தது.

    ஆம்.. மதராஸி கேம்ப் இடிப்பு என்பது அங்கு பல தசாப்தங்களாக வசித்து வந்த தமிழ் வம்சாவளி மக்களின் வாழ்வாதாரத்தைப் கடுமையாக பாதித்தது.

    தெற்கு டெல்லியின் ஜாங்புரா (Jangpura) பகுதியில், 'பாரபுல்லா' வடிகால் அருகே இந்த மதராஸி கேம்ப் அமைந்திருந்தது. சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக, 370-க்கும் மேற்பட்ட தமிழ் குடும்பங்கள் இங்கு வசித்து வந்தனர். இவர்கள் பெரும்பாலும் வீட்டு வேலை செய்பவர்களாகவும், கூலித் தொழிலாளர்களாகவும் அப்பகுதியில் பணியாற்றி வந்தனர். 

    இந்த நிலையில், டெல்லி உயர் நீதிமன்றம், பாரபுல்லா வடிகால் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது. இந்த குடியிருப்புகள் வடிகால் பாதையை அடைப்பதாகவும், இதனால் பருவமழைக் காலங்களில் அப்பகுதியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்படுவதாகவும் காரணம் கூறப்பட்டது.

    மழைநீர் தடையின்றி செல்வதற்கு ஏதுவாக, வடிகால் ஓரங்களில் உள்ள கட்டுமானங்களை அகற்ற வேண்டியது அவசியம் என பொதுப்பணித்துறை (PWD) வாதிட்டது.

    இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பலமுறை ஒத்திவைக்கப்பட்ட பிறகு, கடந்த ஜூன் 1ம் தேதி அன்று காலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இடிப்புப் பணி தொடங்கியது.

    50-60 ஆண்டுகளாக அங்கேயே வாழ்ந்து வந்த மக்கள், தங்கள் உடமைகளைச் சேகரிக்கக் கூட போதிய அவகாசம் வழங்கப்படவில்லை என்று கூறி கண்ணீருடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இருப்பினும், எதையும் கண்டுக்கொள்ளாமல், வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. 

    இதைதொடர்ந்து, இடிக்கப்பட்ட 370 குடும்பங்களில், 215 குடும்பங்கள் மட்டுமே மாற்று இடத்திற்கு தகுதியானவர்கள் என அரசு அறிவித்தது. அவர்களுக்கு டெல்லியின் ஓரத்தில் உள்ள நரேலா (Narela) பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டன.

    மதராஸி கேம்பிலிருந்து நரேலா சுமார் 40 - 50 கி.மீ தொலைவில் உள்ளது. இதனால் மக்களின் வேலைவாய்ப்பு, குழந்தைகளின் கல்வி ஆகியவை முற்றிலுமாக பாதிக்கப்பட்டன.

    ஒதுக்கப்பட்ட வீடுகளில் மின்சாரம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் முறையாக இல்லை என்றும், அந்த வீடுகள் வசிக்கத் தகுதியற்ற நிலையில் இருப்பதாகவும் புகார்கள் எழுந்து வருகின்றன.

    இந்தச் சம்பவம் குறித்து அறிந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ₹8,000 நிதியுதவி மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்க உத்தரவிட்டார். 

    டெல்லியில் உள்ள தமிழக அரசின் பிரதிநிதிகள் மற்றும் டெல்லி தமிழ் சங்கத்தினர் மூலம் இந்த உதவிகள் நேரடியாக பாதிக்கப்பட்ட மக்களைச் சென்றடைந்தன. அங்குள்ள மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க, டெல்லி மாநகராட்சிப் பள்ளிகளில் தடையின்றி சேர்க்கை பெறவும் தமிழக அரசு வலியுறுத்தியது.

    இதற்கிடையே, செப்டம்பர் 2024 முதல் நிலுவையில் இருந்த இந்த வழக்கில், பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான மாற்று இடங்களை வழங்காதது குறித்து டெல்லி உயர் நீதிமன்றம் அதிகாரிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்திருந்தது. மேலும், 370 குடும்பங்களில் 215 குடும்பங்கள் மட்டுமே தகுதியானவர்கள் என்று டெல்லி நகர்ப்புற தங்குமிடம் மேம்பாட்டு வாரியம் கூறியதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், விடுபட்ட தகுதியான குடும்பங்களையும் மறுபரிசீலனை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.

    பெரும்பாலான குடும்பங்கள் நரேலாவிற்கு மாற்றப்பட்டாலும், தகுதியற்றவர்கள் என நிராகரிக்கப்பட்ட பல குடும்பங்கள் இப்போதும் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.

    • இலங்கையின் மூத்த இசையமைப்பாளர் எம்.பி.பரமேஷின் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது
    • இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திமுக எம்.பி. திருச்சி சிவா கலந்துகொண்டார்.

    சென்னை சாலிகிராமத்தில் இலங்கையின் மூத்த இசையமைப்பாளர் எம்.பி.பரமேஷின் புத்தக வெளியீட்டு விழா மற்றும் அவரது 60 ஆண்டு இசை சேவையை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திமுக எம்.பி. திருச்சி சிவா கலந்துகொண்டார். அப்போது அவரிடம் இந்தி பாடல் பாடுமாறு அங்கிருந்தவர்கள் கேட்டுள்ளனர்.

    ஆனால் அதற்கு இந்தி பாடல் பாடாமல் "மௌனமே பார்வையால்..." என்ற தமிழ் பாடலை பாடி அங்கிருந்தவர்களை மகிழ்வித்தார்

    • பொருநை அருங்காட்சியகம் ஆதிச்சநல்லூர், கொற்கை, சிவகளை என 3 ஆக பிரிக்கப்பட்டுள்ளது.
    • ஐந்திணை நிலங்களின் வாழ்வியலை 5டி திரையரங்கில் காணலாம்.

    நெல்லை ரெட்டியார்பட்டியில் உள்ள பொருநை அருங்காட்சியகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கிய பொருநை அருங்காட்சியகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    நெல்லை ரெட்டியார்பட்டியில் உள்ள பொருநை அருங்காட்சியகம் ஆதிச்சநல்லூர், கொற்கை, சிவகளை என 3 ஆக பிரிக்கப்பட்டுள்ளது. பொருநை அருங்காட்சியகத்தில் உள்ள ஆதிச்சநல்லூர் கட்டிடத்தில் 1,585 பழங்கால பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

    கொற்கை கட்டிடத்தில் பாண்டியர்களின் கடல் வணிகம், முத்துக்குளித்தல் தொடர்பாக பழங்கால பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. சிவகளை கட்டிடத்தில் 5,300 ஆண்டுக்கு முந்தைய இரும்பு உருக்கும் தொழில்நுட்பம், நெல் மணிகள், பழங்கால பொருட்களை காணலாம்.

    தமிழர்களின் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்திணை நிலங்களின் வாழ்வியலை 5டி திரையரங்கில் காணலாம். பொருநை அருங்காட்சியகத்தில் கடல் வழி வணிகம், முத்துக்குளித்தல் போன்றவற்றை திரைப்பட பாணியில் 3டி தொழில்நுட்பத்தில் காணலாம்.

    பண்டைய தமிழர்களின் பாரம்பரிய முறையில் முற்றம், தாழ்வாரம் அமைத்து பொருநை அருங்காட்சியகம் கட்டப்பட்டுள்ளது. பொருநை அருங்காட்சியகத்தில் திறந்தவெளி திரையரங்கு, மூலிகை தோட்டம், கைவினைப்பொருட்கள் விற்பனையகம் உள்ளது.

    மலையடிவாரத்தில் அருங்காட்சியகம் அமைந்துள்ளதால் அங்கிருந்து நெல்லை மாநகர் அழகை பார்க்கும் வசதியும் உள்ளது.

    • பராசக்தி படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணி நடைபெற்று வருகிறது.
    • பராசக்தி படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் சிவகார்த்திகேயன் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

    சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் நடித்துள்ள படம், 'பராசக்தி'. இது சிவகார்த்திகேயனின் 25வது படம்.

    இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணி நடைபெற்று வருகிறது. அடுத்தாண்டு பொங்கல் விடுமுறையையொட்டி ஜனவரி 14-ல் ஜனநாயகனுக்கு போட்டியாக இப்படம் ரிலீஸாக உள்ளது.

    இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் சிவகார்த்திகேயன் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் நடிகர் சிவகார்த்திகேயன் சென்ற கார் விபத்துக்குள்ளானது.

    சிவகார்த்திகேயன் வந்த கார், முன்னால் சென்ற கார் மீது லேசாக மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

    விபத்து தொடர்பாக இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், போலீசார் சமரசம் பேசி உள்ளனர். இது தொடர்பாக மயிலாப்பூர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • சகோதர உணர்வுமிக்க சமுதாயம் தான் இன்றைய இந்தியாவுக்கு தேவை.
    • சிறுபான்மையினர் நலனுக்காக திமுக அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது.

    நெல்லை மாவட்டம் டக்கரம்மாள்புரத்தில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    அனைவரும் ஒற்றுமையாக ஒருவர் மீது ஒருவர் அன்போது இருக்க வேண்டும்.

    வெறுப்புணர்வு பாவங்களை செய்ய தூண்டும்; அன்பு என்பது அத்தனை பாவங்களை போக்கும்.

    இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சகோதரர்கள் ஒருதாய் வயிற்று பிள்ளையாய் ஒற்றுமையாய் வாழ வேண்டும்.

    சகோதர உணர்வுமிக்க சமுதாயம் தான் இன்றைய இந்தியாவுக்கு தேவை.

    சிறுபான்மையினர் நலனில் எப்போதும் உண்மையான அக்கறை கொண்ட இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். சிறுபான்மையினர் நலனுக்காக திமுக அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது.

    ராமநாதபுரம் மூக்கையூர் கிராமத்தில் உள்ள தொன்மை வாய்ந்த புனித யாக்கோபு தேவாலயம் ரூ.1.42 கோடியில் புனரமைக்கப்படும்.

    தமிழக அரசின் அணுகுமுறையால் சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் 1,439 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் 11 மாவட்டங்களில் ரூ.597 கோடியில் கூடுதல் உட்கட்டமைப்பு வசதி செய்யப்படும்.

    திமுக ஆட்சியில் தமிழகத்தில் உள்ள 16 தேவாலயங்களில் ரூ.2.16 கோடியில் புனரமைக்கப்பட்டுள்ளது.

    கிறிஸ்தவர்களின் ஜெருசலேம் புனித பயணத்திற்கான நிதி உதவி கூடுதலாக்கப்பட்டுள்ளது.

    சிறுபான்மையினர் மூலம் நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கு நிரந்தர சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

    அரசு உதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளும் காலை உணவு திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • அரசன் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கோவில்பட்டியில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • படப்பிடிப்பு தளத்தில் சிம்புவுடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

    வெற்றி மாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் 'அரசன்'. இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் புரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. வடசென்னை கதைகளத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் சமுத்திரகனி , கிஷோர் , விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

    கோவில்பட்டியில் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் சிம்புவுடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அப்போது, ரேஸிங் களத்தில் அஜித்குமாருடன் சிம்பு எடுத்த புகைப்படத்தை பிரேம் செய்து சிம்புவிடம் ரசிகர்கள் ஆட்டோகிராப் வாங்கினர்.

    அண்மையில் மலேசியா சென்ற சிம்பு அங்கு ரேஸிங் களத்தில் அஜித்குமாரை சந்தித்து பேசி புகைப்படம் எடுத்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • கட்சியின் கொள்கைக்கு முரணாக செயல்பட்டதாக கூறி 4 பேர் நீக்கம்.
    • ஐ.டி.பிரிவு இணைச்செயலாளர் ஹமீது நக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் நான்கு பேரை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

    கட்சியின் கொள்கைக்கு முரணாக செயல்பட்டதாக கூறி 4 பேரை அதிமுகவில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

    மண்டபம் பேரூராட்சி அதிமுக செயலாளர் சீமான் மரைக்காயர், மண்டபம் பேரூராட்சி ஐ.டி.பிரிவு இணைச்செயலாளர் ஹமீது நக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    மாவட்ட மீனவர் பிரிவு இணைச்செயலாளர் காதர் மொய்தீன், மாவட்ட மீனவர் பிரிவு இணைச்செயலாளர் பக்கர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    • தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    • செந்தில்நாதன் மீது பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    தவெக நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளர் செந்தில்நாதனின் பதவி பறிக்கப்பட்டுள்ளது.

    கட்சியின் மகளிர் அணி நிர்வாகியுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக சர்ச்சை எழுந்த நிலையில், அவர் மீது பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    கட்சிக்கு எந்த விதமான களங்கத்தை யார் விளைவித்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என புஸ்ஸி ஆனந்த் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி வாயிலாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
    • SIR-க்குப் பிறகான வரைவு வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது.

    தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை மாலை 6 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி வாயிலாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

    இக்கூட்டத்தில் SIR-க்குப் பிறகான வரைவு வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை நடைபெற இருந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    திமுக மாவட்ட செயலாளர் கூட்டத்திற்கான மாற்று தேதி விரைவில் அறிவிக்கப்படும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    • வடமாநிலத்தவர்கள் கும்பலாக இருக்கைகளை ஆக்கிரமிப்பதாக பயணிகள் புகார்
    • டிக்கெட் இல்லாமல் பயணித்த 80 பேருக்கு 300 வீதம் ரூ.24,000 அபராதம் விதிக்கப்பட்டது.

    மதுரையில் இருந்து ராமேஸ்வரம் சென்ற ரெயிலில் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பக்தர்கள் டிக்கெட் எடுக்காமல் பயணித்துள்ளனர்.

    வடமாநிலத்தவர்கள் கும்பலாக இருக்கைகளை ஆக்கிரமிப்பதாக டிக்கெட் எடுத்த பயணிகள் டிக்கெட் பரிசோதகருக்கு புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து டிக்கெட் இல்லாமல் பயணித்த 80 பேருக்கு 300 வீதம் ரூ.24,000 அபராதம் விதிக்கப்பட்டது.

    அதில், ஒருசிலர் மட்டும் அபராதத்தை செலுத்தியுள்ளனர்; மற்றவர்கள் ஜெய்கோ என முழக்கமிட்டவாறு அபராதம் செலுத்தாமல் தப்பி ஓடினர்.

    ரெயிலில் 400க்கும் மேற்பட்ட உ.பி. பக்தர்கள் வந்த நிலையில் சுமார் 100 பேரிடம் மட்டுமே டிக்கெட் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

    ×