என் மலர்
அறிந்து கொள்ளுங்கள்
- இந்தியாவில் தடை செய்யப்பட்டு இருந்த பி.ஜி.எம்.ஐ. கேமிற்கு கடந்த வாரம் அனுமதி அளிக்கப்பட்டது.
- மே 27 ஆம் தேதி முதல், கூகுள் பிளே ஸ்டோரில் பி.ஜி.எம்.ஐ. கேம் டவுன்லோடு செய்ய கிடைக்கிறது.
பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் இந்தியா (பி.ஜி.எம்.ஐ.) கேம் இந்திய சந்தையில் விளையாட கிடைக்கிறது. இந்தியாவில் இந்த கேமினை மீண்டும் வெளியிட பல்வேறு நிபந்தனைகளுடன் மத்திய அரசு கடந்த வாரம் அனுமதி அளித்து இருந்தது. அந்த வரிசையில், கடந்த 27 ஆம் தேதி கூகுள் பிளே ஸ்டோரில் பட்டியலிடப்பட்ட பி.ஜி.எம்.ஐ. கேம் டவுன்லோடு மற்றும் இன்ஸ்டால் செய்ய கிடைத்தது.
எனினும், கேமினை விளையாட முடியாத நிலை இருந்து வந்தது. பி.ஜி.எம்.ஐ. கேம் இன்று (மே 29) முதல் விளையாட கிடைக்கும் என்று தகவல்கள் வெளியாகி வந்தன. அதன் படி, இணையத்தில் வெளியான தகவல்களை உண்மையாக்கும் வகையில், தற்போது கேமினை அனைவரும் விளையாட முடியும்.
பி.ஜி.எம்.ஐ. கேமில் புதிதாக சேர்க்கப்பட்டு இருப்பவை என்ன?
- இந்தியாவில் மீண்டும் வெளியாவதை கொண்டாடும் வகையில், பி.ஜி.எம்.ஐ. பயனர்களுக்கு நான்கு இலவச மற்றும் நிரந்தர ரிவார்டு அவுட்ஃபிட்கள் (outfit) வழங்கப்படுகின்றன.
- அதிக ஆயுதங்கள் மற்றும் பொருட்கள், எலிவேட்டர்கள், ஹட்ஸ் ஆன் ஃபயர், டேக்டிக்கல் கிராஸ்போக்கள் மற்றும் ஜிப்லைன்களை கொண்ட புதிய மேப் பி.ஜி.எம்.ஐ. கேமில் தற்போது வழங்கப்படுகிறது. இந்த மேப் நுசா (Nusa) என்று அழைக்கப்படுகிறது.
- நுசா மேப்-இல் டேக்டிக்கல் கிராஸ்போ மற்றும் SN200 ஷாட்கன், குவாட் 2 இருக்கை கொண்ட வாகனம் உள்ளது.
- மிக விரைவில் உயிரிழப்போருக்காக 'சூப்பர் ரிகால்' (Super Recall) எனும் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
- புதிய பி.ஜி.எம்.ஐ. கேமிலும், முன்பை போன்றே இன்-கேம் இவென்ட்கள் (Event) உள்ளன.
- 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் இந்த கேமினை நாள் ஒன்றுக்கு மூன்று மணி நேரங்களும், 18 வயதுக்கும் மேற்பட்டோர் ஆறு மணி நேரங்களுக்கு மட்டுமே விளையாட முடியும்.
- மைனர்களுக்காக பி.ஜி.எம்.ஐ. கேமில் பேரண்டல் கண்ட்ரோல் மற்றும் பணம் செலுத்துவதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
பி.ஜி.எம்.ஐ. கேமினை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த பயனர்கள், தற்போது கேமினை விளையாட முடியும். இதற்கு உங்களின் ஆண்ட்ராய்டு சாதனத்தில் கூகுள் பிளே ஸ்டோர் சென்று பி.ஜி.எம்.ஐ. கேமினை டவுன்லோடு மற்றும் இன்ஸ்டால் செய்தாலே போதும்.
- மறுகட்டமைப்பு செலவீனங்களுக்காக மெட்டா நிறுவனம் ஏற்கனவே பல மில்லியன் டாலர்களை செலவிட்டுள்ளது.
- மெட்டா நிறுவனம் பணிநீக்க நடவடிக்கைக்கு செலவிட்டுள்ள தொகை பற்றிய விவரங்கள் வெளியானது.
மெட்டா நிறுவனம் தனது ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. பல கட்டங்களாக நடைபெற்று வரும் பணிநீக்க நடவடிக்கையில் உலகம் முழுக்க பணியாற்றி வந்த ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், மெட்டா நிறுவனம் 2023 காலாண்டு முடிவுகளை பத்திரங்கள் மற்றும் பரிமாற்ற அறிக்கையில் சமர்பித்து இருக்கிறது. இதில் மெட்டா நிறுவனம் பணிநீக்க நடவடிக்கைக்கு செலவிட்டுள்ள தொகை பற்றிய விவரங்கள் இடம்பெற்றுள்ளது.
பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு எவ்வளவு தொகை செலவிடப்பட்டு உள்ளது என்ற விவரங்களை மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி மெட்டா நிறுவனம் பணிநீக்க ஊதியம் மற்றும் தனிப்பட்ட செலவீனங்களுக்கு மட்டும் 1 பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 8 ஆயிரம் கோடி) செலவாகும் என்று அறிவித்து இருக்கிறது.

மறுகட்டமைப்பு செலவீனங்களுக்காக மெட்டா நிறுவனம் ஏற்கனவே பல மில்லியன் டாலர்களை செலவிட்டுள்ளது. இதில் பணிநீக்க ஊதியம், பாதிக்கப்படும் ஊழியர்களுக்கு நிறுவனம் சார்பில் கொடுப்பதாக அறிவிக்கப்பட்ட இதர பலன்களும் அடங்கும்.
பணிநீக்க நடவடிக்கைக்கு பெரும் தொகை செலவிடப்பட்டு இருக்கும் நிலையிலும், மெட்டா நிறுவன வருவாயில் இது நல்ல பலன்களை ஏற்படுத்தி இருக்கிறது. பணிநீக்க நடவடிக்கைகள் காரணமாக 2023 முதல் காலாண்டில் மட்டும் மெட்டா நிறுவன வருவாய் 28.65 பில்லியன் டாலர்கள் ஆகும். இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது மூன்று சதவீதம் அதிகம் ஆகும். வருடாந்திர அடிப்படையில் இது ஆறு சதவீதம் அதிகம் ஆகும்.
"2022 ஆண்டில் நிறுவனத்தில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய திட்டங்கள் மற்றும் வியாபார கவனம் உள்ளிட்டவைகளை மாற்றியமைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறோம். மார்ச் 31, 2023 வரையிலான காலக்கட்டத்தில் 2022 பணிநீக்க நடவடிக்கைகளை நிறைவு செய்து, டேட்டா செண்டர் மறுகட்டமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கிறோம்," என்று மெட்டா தெரிவித்து உள்ளது.
- வாட்ஸ்அப் செயலியில் இரண்டு புதிய அம்சங்கள் விரைவில் வழங்கப்பட இருக்கின்றன.
- முன்னதாக குறுந்தகவல்களை எடிட் செய்யும் வசதி வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட்டது.
வாட்ஸ்அப் செயலியில் இரண்டு புதிய அம்சங்கள் வழங்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை WABetainfo தெரிவித்து இருக்கிறது. வாட்ஸ்அப் யூசர்நேம் (Whatsapp Username) மற்றும் ரிடிசைன்டு செட்டிங்ஸ் இண்டர்ஃபேஸ் உள்ளிட்ட அம்சங்கள் விரைவில் வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட இருக்கிறது.
சமீபத்தில் தான் அனுப்பிய குறுந்தகவல்களை எடிட் செய்யும் வசதி மற்றும் சாட் லாக் போன்ற அம்சங்களை வாட்ஸ்அப் வழங்கி இருந்தது.
வாட்ஸ்அப் யூசர்நேம்:
புதிய வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.23.11.15 வெர்ஷனில் உள்ள புதிய அம்சம் கொண்டு பயனர்கள் தங்களது அக்கவுண்ட்களில் யூசர்நேம் வைத்துக் கொள்ள செய்கிறது. இதனை வாட்ஸ்அப் செட்டிங்ஸ் -- ப்ரோஃபைல் ஆப்ஷன்களில் இயக்க முடியும்.

இந்த அம்சம் மூலம் பயனர் தனியுரிமை பாதுகாக்கப்படுவதோடு, மொபைல் நம்பர் மூலம் காண்டாக்ட்களை அறிந்து கொள்வதற்கு மாற்றாக யூசர்நேம் மூலம் அறிந்து கொள்ள செய்கிறது. பயனர்கள் தாங்கள் விரும்பும் வித்தியாசமான அல்லது எளிதில் நினைவில் வைத்துக் கொள்ளும் யூசர்நேமை செட் செய்து கொள்ளலாம். இதன் மூலம் பயனர்கள் தங்களது மொபைல் நம்பர் இல்லாமல், காண்டாக்டை மற்றவர்களுக்கு ஷேர் செய்ய முடியும்.
ரிடிசைன்டு செட்டிங்ஸ்:
வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு 2.23.11.16 மற்றும் 2.23.11.18 வெர்ஷன்களில் ரிடிசைன்டு செட்டிங்ஸ் பக்கம் உள்ளது. இதில் மூன்று ஷாட்கட்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. ஷாட்கட்-ஐ க்ளிக் செய்ததும், பயனர்கள் ரிடிசைன்டு செட்டிங்ஸ் பக்கத்தை பார்க்க முடியும். தற்போது இந்த பக்கத்தில் ப்ரோஃபைல் போட்டோ மற்றும் கியூஆர் கோடுகளை பார்க்க முடியும்.
மேம்பட்ட இண்டர்ஃபேசில்: ப்ரோஃபைல், பிரைவசி மற்றும் காண்டாக்ட்கள் உள்ளன. வாட்ஸ்அப் செட்டிங்ஸ் பக்கத்தில் ஸ்டார்டு மெசேஞ்சஸ் ஷாட்கட் வழங்கப்பட இருக்கிறது. இந்த அம்சம் வாட்ஸ்அப் ஐஒஎஸ் வெர்ஷனில் வழங்கப்பட்டுள்ளது. இதன் செட்டிங்ஸ் பகுதியில் சிறு மாற்றங்கள் செய்யப்படும் என்று தெரிகிறது.
Photo Courtesy: WABetaInfo
- பணிநீக்கம் செய்யப்பட்ட மெட்டா ஊழியர்கள் லின்க்டுஇன் தளத்தில் பணிநீக்க நடவடிக்கை குறித்து பதிவிட்டுள்ளனர்.
- மார்க் ஜூக்கர்பர்க் 10 ஆயிரம் பேர் பணிநீக்கம் செய்யப்பட உள்ளனர் என்று தெரிவித்து இருந்தார்.
மெட்டா நிறுவனம் இறுதிக்கட்ட பணிநீக்க நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இந்த முறை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனை உறுதிப்படுத்தும் வகையில், பணிநீக்கம் செய்யப்பட்ட மெட்டா ஊழியர்கள் லின்க்டுஇன் தளத்தில் பணிநீக்க நடவடிக்கை குறித்து பதிவிட்டு வருகின்றனர்.
சுமார் 5 ஆயிரம் பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர் என்று இன்ஸ்டாகிராம் தளத்தில் கிரியேட்டர் மார்கடிங் பிரிவில் பணியாற்றி வந்த ஊழியர் தெரிவித்துள்ளார். இவரது பதிவு மட்டுமின்றி, மேலும் பலர் வெளியிட்டு இருக்கும் பதிவுகளில் இந்த முறை பணிநீக்க நடவடிக்கையில் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் மற்றும் இதர நிறுவனங்களில் பணியாற்றி வந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அறிந்து கொள்ள முடிகிறது.

கடந்த மார்ச் மாதத்தில் மெட்டா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் 10 ஆயிரம் பேர் பணிநீக்கம் செய்யப்பட உள்ளனர் என்று தெரிவித்து இருந்தார். செலவீனங்களை குறைக்கும் நோக்கில் இந்த கடின முடிவை எடுக்க வேண்டிய சூழல் உருவாகிவிட்டது என்று அவர் மேலும் தெரிவித்தார். இந்த அறிவிப்பின் அங்கமாகவே தற்போதைய பணிநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த முறை பணிநீக்க நடவடிக்கையில் விளம்பரங்கள் விற்பனை, மார்கடிங், தகவல் பரிமாற்றம் மற்றும் கூட்டணிகள் உள்ளிட்ட பிரிவுகளில் பணியாற்றி வந்த ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். கடந்த ஆண்டு நவம்பர் மாத வாக்கில் 11 ஆயிரம் பேர், அதாவது 13 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருப்பதாக மெட்டா நிறுவனம் முதல் முறையாக அறிவித்து இருந்தது.
- ஜெஃப் பெசோஸ் மற்றும் மெக்கன்சி ஸ்காட் தம்பதி 25 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.
- கையில் இதய வடிவ மோதிரம் இருப்பதை தொடர்ந்து, இவருக்கு நிச்சயதார்த்தம் முடிந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் மற்றும் அவரின் தோழி லாரென் சன்செஸ் இடையே நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது இந்த தம்பதி ஃபிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.
கடந்த சில மாதங்களாகவே ஜெஃப் பெசோஸ் மற்றும் லாரென் சன்செஸ் இடையே திருமணம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தது. இந்த நிலையில், சன்செஸ் கையில் இதய வடிவம் (ஹார்டின்) மோதிரம் இருப்பதை தொடர்ந்து, இவருக்கு நிச்சயதார்த்தம் முடிந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

முன்னாள் செய்தியாளரான லாரென் சன்செஸ் மற்றும் ஜெஃப் பெசோஸ் ஜோடி, கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் டேட்டிங் செய்து வருகின்றனர். எனினும், இதுபற்றிய தகவல்கள் 2019 ஆண்டு ஜெஃப் பெசோஸ் மற்றும் மெக்கன்சி ஸ்காட் இடையே விவாகரத்து நடக்கும் வரை வெளியில் தெரியாத ரகசியமாக இருந்து வந்தது.
ஜெஃப் பெசோஸ் மற்றும் மெக்கன்சி ஸ்காட் தம்பதி 25 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இந்த தம்பதிக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். விவாகரத்து வழங்குவதற்காக மெக்கன்சி 38 பில்லியன் டாலர்களை ஜீவனாம்சமாக பெற்றுக் கொண்டார். இதன் மூலம் அவர் உலகின் மூன்றாவது பெரிய பணக்காரர் என்ற பெருமையை பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
- தற்போது இந்த அம்சம் டெக்ஸ்ட் மெசேஞ்ச்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது.
- முதற்கட்டமாக இந்த அம்சம் வாட்ஸ்அப் பீட்டா டெஸ்டர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு இருந்தது.
வாட்ஸ்அப் செயலியில் மெசேஞ்ச்களை எடிட் செய்யும் வசதி சேர்க்கப்பட்டு இருக்கிறது. வாட்ஸ்அப்-இல் மெசேஞ்ச்களை அனுப்பிய 15 நிமிடங்களில் அவற்றை எடிட் செய்து கொள்ள முடியும். இந்த வசதி வாட்ஸ்அப் செயலியில் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது வழங்கப்பட்டு இருக்கிறது. பயனர்கள் அனுப்பிய மெசேஞ்ச்களை எடிட் செய்யும் போது, 'edited' என்று வார்த்தை இடம்பெற்று இருக்கும்.
பயனர்கள் ஏற்கனவே அனுப்பிய மெசேஞ்ச்களை எடிட் செய்யும் போது, அதற்கான நோட்டிஃபிகேஷன் தனியாக அனுப்பப்படாது. தற்போது இந்த அம்சம் மெசேஞ்ச்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது. இது புகைப்படம், வீடியோக்கள் மற்றும் இதர மீடியா அல்லது அவற்றுக்கான தலைப்பு (கேப்ஷன்) உள்ளிட்டவைகளுக்கு பொருந்தாது.

வாட்ஸ்அப் மெசேஞ்ச்-ஐ எடிட் செய்வது எப்படி?
- எடிட் செய்ய வேண்டிய மெசேஞ்ச்-ஐ அழுத்திப் பிடிக்க வேண்டும்
- இனி ஆண்ட்ராய்டில் மோர் (More) ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள்
- ஐபோனில் எடிட் (Edit) ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்
- எடிட் செய்ய வேண்டிய மெசேஞ்சில் மெனு (Menu) - எடிட் மெசேஞ்ச் (Edit Message) ஆப்ஷனை க்ளிக் செய்யவும்
- எடிட் ஆப்ஷனில் மெசேஞ்ச்-ஐ அப்டேட் (Update) செய்யுங்கள்
- மெசேஞ்ச்-ஐ அப்டேட் செய்து முடித்ததும், அதனை அப்டேட் செய்தால் குறுந்தகவல் எடிட் செய்யப்பட்டு விடும்.
முதற்கட்டமாக இந்த அம்சம் வாட்ஸ்அப் பீட்டா டெஸ்டர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு இருந்தது. இன்று முதல் இந்த அம்சம் ஆண்ட்ராய்டு, ஐபோன், டெஸ்க்டாப் தளங்களில் வரும் நாட்களில் வழங்கப்படும்.
- சில மணி நேரங்கள் வரை முடங்கியிருந்த இன்ஸ்டாகிராம் செயலி, மீண்டும் செயல்பாட்டு வந்தது.
- தொழில்நுட்ப குறைபாடு காரணமாக எத்தனை பேர் பாதிக்கப்பட்டனர் என்ற விவரங்கள் மர்மமாகவே உள்ளது.
மெட்டாவினை தாய் நிறுவனமாக கொண்டிருக்கும் இன்ஸ்டாகிராம் உலகளவில் செயல்படாமல் முடங்கி போனது. இதனால் பயனர்கள் இன்ஸ்டாகிராம் தளத்தை பயன்படுத்த முடியாமல் தவித்தனர். மேலும் இது பற்றிய தகவல்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
சில மணி நேரங்கள் வரை முடங்கியிருந்த இன்ஸ்டாகிராம் செயலி, தற்போது மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது. தொழில்நுட்ப குறைபாடு காரணமாக சேவை முடங்கியதாக இன்ஸ்டாகிராம் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
"தொழில்நுட்ப குறைபாடு காரணமாக பலர் இன்ஸ்டாகிராம் செயலியை பயன்படுத்தாத நிலையை எதிர்கொண்டனர். இந்த குறைபாடு மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு, விரைந்து பிரச்சினைகளை சரி செய்துவிட்டோம்," என்று மெட்டா நிறுவன செய்தி தொடர்பாளர் தனயார் செய்தி நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்ப குறைபாடு காரணமாக எத்தனை பேர் பாதிக்கப்பட்டனர் என்ற விவரங்கள் மர்மமாகவே உள்ளது. இது குறித்து முடங்கிய வலைதளங்கள் பற்றிய விவரங்களை வெளியிடும் டவுன்டிடெக்டர் வலைதளத்தில், இன்ஸ்டாகிராம் செயலி சுமார் ஒரு லட்சத்து 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர் என்று குறிப்பிட்டு இருக்கிறது.
- சமீப காலங்களில் குழந்தைகளிடம் ஸ்மார்ட்போன்களை கொடுப்பது மிகவும் சாதாரண விஷயமாகி விட்டது.
- ஸ்மார்ட்போன் கேமிங், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் குழந்தைகளின் வெளியுலக ஆர்வத்தை குறைக்கின்றன.
ஸ்மார்ட்போன்கள் இன்று நம் வாழ்க்கையை புரட்டி போட்டுவிட்டன என்று கூறலாம். ஸ்மார்ட்போன்களால் ஏராளமான நன்மைகள் உண்டு என்று கூறினாலும், இவற்றை குழந்தைகளுக்கு கொடுக்கலாமா? என்ற கேள்வி அனைவரின் ஆழ்மனதில் எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கும். சமீப காலங்களில் குழந்தைகளிடம் ஸ்மார்ட்போன்களை கொடுப்பது மிகவும் சாதாரண விஷயமாகி விட்டது.
90-ஸ் கிட்ஸ் போன்றில்லாமல், இந்த காலத்து குழுந்தைகள் வெளியில் விளையாடுவதை தவிர்த்து ஸ்மார்ட்போன் பயன்படுத்தவே ஆர்வம் செலுத்தி வருகின்றனர். ஸ்மார்ட்போன்களில் கேமிங் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் குழந்தைகளின் வெளியுலக ஆர்வத்தை குறைத்துவிடுகின்றன. குழந்தைகள் அளவுக்கு அதிகமாக ஸ்மார்ட்போன் பயன்படுத்துவது, பெற்றோருக்கு மிகவும் கவலை தரும் செயலாகவே இருக்கிறது.

இந்த நிலையில், சியோமி இந்தியா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் மனு குமார் ஜெயின் வெளியிட்டு இருக்கும் சமீபத்திய அறிவிப்பு அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. லின்க்டு-இன் தளத்தில் அவர் வெளியிட்டிருக்கும் பதிவு, குழந்தைகளின் நன்மைக்காக பெற்றோர் செய்ய வேண்டிய மறுபரிசீலனைகளை கொண்டுள்ளது.
இந்திய சந்தையில் முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனம் சியோமி. இந்த நிறுவனத்தின் முன்னாள் தலைவர் தான் மனு குமார் ஜெயின். இவரே ஸ்மார்ட்போனுக்கு எதிரான கருத்துக்களை பகிர்ந்து இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இவரது லின்க்டு-இன் பதிவு, "குழந்தைகளிடம் உங்களின் ஸ்மார்ட்போன்களை கொடுப்பதை நிறுத்துங்கள்" எனும் தலைப்பு கொண்டுள்ளது.

சேபியன் லேப்ஸ் வெளியிட்டு இருக்கும் அறிக்கையை நண்பர் ஒருவர் பகிர்ந்து இருக்கிறார். அதில், "குழந்தைகளிடம் இளம் வயதிலேயே ஸ்மார்ட்போன் ( மற்றும் டேப்லட்களை) கொடுப்பதால், அவர்களது இளமை காலம் பாதிக்கப்படுவதோடு, பெரியவர்கள் ஆகும் போது அவர்களுக்கு மனநிலை சார்ந்த குறைபாடுகள் ஏற்படுகிறது. இந்த ஆய்வின் மூலம் வெளியாகி இருக்கும் முடிவுகள் அதிர்ச்சி அளிக்கின்றன."
"பத்து வயதிலேயே ஸ்மார்ட்போன் பயன்படுத்த துவங்கிய பெண்களில் 60 முதல் 70 சதவீதம் பேர், பெரியவர்கள் ஆனதும் மனநிலை சார்ந்த பிரச்சினைகளை சந்தித்துள்ளனர். ஆண்களில் இதுபோன்ற பாதிப்பு 45 முதல் 50 சதவீதம் பேருக்கு ஏற்பட்டுள்ளது," என்று மனு குமார் ஜெயின் பதிவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக பெற்றோர் தங்களது குழுந்தைகள் அழும் போது, உணவு சாப்பிடும் போது அல்லது பயணத்தின் போது ஸ்மார்ட்போன்களை வழங்குவதை தவிர்க்க வேண்டும். இதற்கு மாற்றாக பெற்றோர் குழந்தைகளை வெளியுலக செயல்களில் ஈடுபட வைக்கலாம். இது போன்ற செயல்பாடுகள் குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்க்கச் செய்வதோடு, கல்வி மற்றும் சமூக உரையாடல்களில் அவர்களை அதிகளவில் ஈடுபட வைக்கும்.
மனு குமார் ஜெயின் பதிவு, குழுந்தைகளை மனநல பாதிப்பில் சிக்காமல் பாதுகாக்க வேண்டிய பெற்றோரின் பொறுப்புணர்வை வெளிப்படுத்துகிறது. அதிக நேரம் ஸ்மார்ட்போன் போன்ற சாதனங்களை பயன்படுத்துவதால், குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை அவரது பதிவு எடுத்துரைக்கிறது. குழந்தைகளுக்கு ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்க வேண்டியது பெற்றோரின் கடமை என்றும் மனு குமார் ஜெயின் தெரிவித்துள்ளார்.
தான் ஸ்மார்ட்போன் அல்லது டேப்லட் போன்ற சாதனங்களுக்கு எதிரானவன் இல்லை என்றும், இவை நம் சமூகத்திற்கு பல்வேறு வழிகளில் பயனுள்ளதாகவே இருந்து வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இவற்றை தானும் அன்றாட வாழ்வில் பயன்படுத்தி வருவதாக மனு குமார் ஜெயின் தெரிவித்து இருக்கிறார். எனினும், இவற்றை குழந்தைகள் பயன்படுத்த ஆரம்பிக்கும் போது எச்சரிக்கை அவசியம் என்று மனு குமார் ஜெயின் தெரிவித்துள்ளார்.
- புதிய வலைதளம் இன்ஸ்டாகிராமை அடித்தளமாக கொண்டு உருவாக்கப்படுகிறது.
- புதிய சமூக வலைதளம் டெக்ஸ்ட்-ஐ மையமாக கொண்டு உருவாக்கப்படுகிறது.
சமூக வலைதள உலகில் மாற்றம் எப்போதும் மாறாத ஒன்று. முன்னணி சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம், P92 அல்லது பிராஜக்ட் 92 பெயரில் புதிய திட்டத்தில் பணியாற்றி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் புதிய சமூக வலைதள சேவை உருவாக்கப்பட இருக்கிறது.
இந்த சமூக வலைதளம், "Instagram for your thoughts" எனும் டேக்லைன் கொண்டிருக்கிறது. இந்த வலைதளம் பிரத்யேக அம்சங்கள் மற்றும் பயனர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கும் என்று கூறப்படுகிறது. இன்ஸ்டாகிராம் தாய் நிறுவனம் மெட்டா மற்றும் தேர்வு செய்யப்பட்ட கிரியேட்டர்களிடையே நடைபெற்ற ரகசிய உரையாடல்களை தொடர்ந்து இந்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதன்படி புதிய வலைதளம் இன்ஸ்டாகிராமை அடித்தளமாக கொண்டு உருவாக்கப்படுகிறது. இந்த தளம் மாஸ்டோடான் போன்ற சேவைகளில் இயங்கும் திறன் கொண்டிருக்கும். இன்ஸ்டாகிராம் ஐடி மற்றும் பாஸ்வேர்டு கொண்டு புதிய தளத்திலும் சைன்-இன் செய்து கொள்ளலாம். இதன் மூலம் இன்ஸ்டாவில் உள்ள ஃபாலோயர்களை புதிய தளத்திலும் சின்க் செய்து கொள்ள முடியும்.
புதிய சமூக வலைதளம் டெக்ஸ்ட்-ஐ மையமாக கொண்டு உருவாக்கப்படுகிறது. மெட்டாவின் கீழ் இயங்கும் இன்ஸ்டாகிராமின் கிளை நிறுவனமாக புதிய வலைதளம் செயல்பட இருக்கிறது. இந்த வலைதளம் டுவிட்டர் தளத்திற்கு போட்டியாக இருக்கும் என்று தெரிகிறது. மெட்டாவின் இன்ஸ்டாகிராம் தளத்தினை உலகம் முழுக்க பெரும்பாலானோர் பயன்படுத்தி வருகின்றனர். இது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பகிரும் தளமாகவே இருந்து வருகிறது.
இந்த நிலையில், டுவிட்டர் போன்று செய்திகளை பகிரும் நோக்கில், எழுத்துக்களை அடிப்படையாக கொண்டு இயங்கும் புதிய வலைதளம் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த வலைதளத்தின் ஆரம்பக்கட்ட சோதனைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஜூன் மாத வாக்கில் இந்த வலைதளம் பயன்பாட்டுக்கு வரும் என்று கூறப்படுகிறது.
புதிய வலைதளத்தில் பயனர்கள் அதிகபட்சம் 500 வார்த்தைகள் கொண்ட பதிவுகளை மேற்கொள்ள முடியும். இத்துடன் இணைய முகவரிகளை பகிர்வது, புகைப்படம் அல்லது ஐந்து நிமிடங்கள் வரை ஓடும் வீடியோக்களை பதிவேற்றம் செய்வது போன்ற வசதிகள் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இத்துடன் மற்ற சமூகவலைதளங்களில் இருப்பதை போன்றே, இதிலும் லைக், ரிப்ளை மற்றும் ரிபோஸ்ட் போன்ற வசதிகளும் வழங்கப்படுகிறது.
- டுவிட்டர் புளூ சந்தா முறையில், பயனர்களுக்கு ஏற்கனவே ஏராளமான அம்சங்கள் வழங்கப்படுகிறது.
- இந்த அம்சம் டுவிட்டர் ஐஒஎஸ் வெர்ஷன் மற்றும் வலைதளத்திற்கு மட்டும் வழங்கப்படுகிறது.
டுவிட்டர் நிறுவன தலைவர் எலான் மஸ்க், தனது சமூக வலைதள சேவையில் புது வசதியை அறிமுகம் செய்து இருக்கிறார். இந்த வசதி டுவிட்டர் புளூ பயனர்களுக்கு மட்டும் பிரத்யேகமாக வழங்கப்படுகிறது. டுவிட்டர் புளூ சந்தா முறையில், பயனர்களுக்கு ஏற்கனவே ஏராளமான அம்சங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த வரிசையில் புதிய அம்சம் டுவிட்டர் புளூ சந்தாவின் கீழ் இணைக்கப்பட்டு உள்ளது.
அதன்படி பயனர்கள் 2 மணி நேரத்திற்கு ஓடும் அல்லது 8 ஜிபி வரையிலான அளவு கொண்ட வீடியோக்களை டுவிட்டர் தளத்தில் பதிவேற்றம் செய்து கொள்ளலாம். தற்போது இந்த அம்சம் டுவிட்டர் ஐஒஎஸ் வெர்ஷன் மற்றும் வலைதளத்திற்கு மட்டும் வழங்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு சாதனஙகளில் டுவிட்டர் பயன்படுத்துவோர் பத்து நிமிடங்கள் வரையிலான வீடியோக்களை பதிவேற்றம் செய்ய முடியும்.
டுவிட்டரில் அதிக நேரம் கொண்ட வீடியோக்களை பதிவேற்றம் செய்வது எப்படி?
டுவிட்டர் புளூ சந்தாதாரர்கள் அதிக நேரம் ஓடும் வீடியோக்களை பதிவற்றம் செய்ய கம்போஸ் (compose) பட்டனை க்ளிக் செய்து, சாதனத்தில் இருந்து பதிவேற்றம் செய்ய வேண்டிய வீடியோவை க்ளிக் செய்ய வேண்டும். இனி டுவிட் செய்யக்கோரும் பட்டனை க்ளிக் செய்தால், வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டு விடும். ஒரு நாளில் எத்தனை வீடியோக்களை வேண்டுமானாலும் அப்லோடு செய்து கொள்ளலாம்.
முன்னதாக டுவிட்டர் நிறுவனத்திற்கு புதிய தலைமை செயல் அதிகாரியாக லிண்டா யாக்கரினோ பதவியேற்க இருப்பதாக எலான் மஸ்க் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தார். லிண்டா யாக்கரினோ என்பிசியுனிவர்சல் நிறுவனத்தின் விளம்பர பிரிவு தலைவராக பணியாற்றி வந்தார். இவர் பதவியேற்ற பின், எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தின் பிராடக்ட் டிசைன் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் பிரிவு தலைவராக பணியாற்ற இருக்கிறார்.
- காணாமல் போன மொபைல் போனின் IMEI நம்பர் மற்றும் காவல் துறை அறிக்கைகளை தளத்தில் சமர்பிக்க வேண்டும்.
- தகவல் உறுதிப்படுத்தப்பட்டு, டெலிகாம் சேவை நிறுவனங்கள் மற்றும் சட்டத்துறை நிறுவனங்களுடன் பகிரப்படும்.
மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் சார்பில் சஞ்சர் சாதி (Sanchar Saathi) எனும் முனையம் துவங்கப்பட்டு இருக்கிறது. இதை கொண்டு பயனர்கள் தங்களது மொபைல் போன்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள முடியும். மத்திய தகவல் தொடர்பு, ரெயில்வே மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை மந்திரி அஸ்வினி வைஷ்னவ் இந்த முனையத்தை துவங்கி வைத்தார்.
இதில் பயனர்கள் பதிவு செய்யப்பட்ட இணைப்புகளை சரிபார்ப்பது, தேவையற்ற அல்லது சந்தேகத்திற்குரிய இணைப்புகளை சரிபார்ப்பது, தொலைந்து போன மொபைல் போன்களை பிலாக் செய்வது, IMEI நம்பர்களின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்துவது போன்ற சேவைகளை பெற முடியும்.

சஞ்சர் சாதி முனையத்தின் மிக முக்கிய அங்கம் தான் மத்திய உபகரணங்கள் அடையாள பதிவு (CEIR). இதில் காணாமல் போன மொபைல் போனின் IMEI நம்பர் மற்றும் காவல் துறை வழங்கிய அறிக்கைகளை தளத்தில் சமர்பிக்க வேண்டும். இந்த தளத்தில் பதிவிடப்படும் தகவல் உறுதிப்படுத்தப்பட்டு, டெலிகாம் சேவை நிறுவனங்கள் மற்றும் சட்டத்துறை நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படும்.
இந்த தகவல்கள் முழுமையாக ஆய்வு செய்தபின், திருடப்பட்ட மொபைல் போன்கள் இந்திய நெட்வொர்க்குகளில் இயங்க முடியாத அளவுக்கு மாற்றப்பட்டு விடும். சட்டத் துறை நிறுவனங்கள் திருடப்பட்ட சாதனத்தை டிராக் செய்யும். திருடப்பட்ட சாதனம் மீட்கப்பட்டதும், பயனர்கள் சஞ்சர் சாதி முனையத்தில் வைத்து, அதனை அன்லக் செய்துவிடும்.

திருடப்பட்ட மொபைல் போன்கள் மட்டுமின்றி, தவறான அல்லது ஃபோர்ஜ் செய்யப்பட்ட IMEI கொண்ட சாதனங்கள் பயன்படுத்தப்படுவதை இந்த சிஸ்டம் தடுத்துவிடும். இத்துடன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் "Know Your Mobile" அம்சம் கொண்டு IMEI நம்பர் மூலம் மொபைல் சாதனங்களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த முடியும்.
திருடுபோன மொபைல் போனை டிராக் அல்லது பிலாக் செய்வது எப்படி?
- சஞ்சர் சாதி CEIR வலைதளம் செல்ல வேண்டும்.
- இனி Block Stolen/Lost Mobile ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
- உங்களின் பெயர், மொபைல் நம்பர், IMEI நம்பர் மற்றும் சாதனத்தின் விவரங்களை பதிவிட வேண்டும். மொபைல் வாங்கியதற்கான இன்வாய்ஸ்-ஐ அப்லோடு செய்ய வேண்டும்.
- நகரம், மாவட்டம், மாநிலம் மற்றும் சாதனம் தொலைந்து போன தேதி உள்ளிட்ட விவரங்களை பதிவிட வேண்டும்.
- மொபைல் நம்பர் ஒடிபி மூலம் விவரங்களை உறுதிப்படுத்த வேண்டும்.
- இனி Submit பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.
- முதற்கட்டமாக டோக்கன் மற்றும் ஸ்மார்ட் கார்டுகளே டிக்கெட்களாக வினியோகம் செய்யப்பட்டு வந்தன.
- பயனர்கள் டெபிட், கிரெடிட் கார்டுகள் அல்லது கூகுள் பே சேவைகளை பயன்படுத்தி பணம் செலுத்தலாம்.
சென்னை மெட்ரோ ரெயில் (சிஎம்ஆர்எல்) சேவையை பயன்படுத்துவோர் இன்று (மே 17) முதல் ரெயில் டிக்கெட்களை வாட்ஸ்அப் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டது. நேஷனல் காமன் மொபிலிட்டி கார்டு அறிமுகம் செய்த இரண்டு மாதங்கள் கழித்து வாட்ஸ்அப் மூலம் இ-டிக்கெட்களை வினியோகம் செய்யும் பணிகளை சிஎம்ஆர்எல் துவங்கி இருக்கிறது.
பயனர்கள் வாட்ஸ்அப் மூலம் சென்னை மெட்ரோ ரெயில் டிக்கெட் எடுக்க மெட்ரோ ரெயில் நிலையங்களில் உள்ள வாட்ஸ்அப் எண்ணிற்கு மெசேஞ்ச் அனுப்ப வேண்டும். இவ்வாறு செய்ததும், அந்த எண்ணில் இருந்து மெட்ரோ ரெயில் நிலைய விவரங்கள் பட்டியலிடப்பட்டு இருக்கும். அதில் செல்ல வேண்டிய ரெயில் நிலையத்தை தேர்வு செய்ய வேண்டும்.

இனி, டிக்கெட்டுக்கான பணம் செலுத்தும் ஆப்ஷன்கள் திரையில் தோன்றும். அதன்படி பயனர்கள் டெபிட், கிரெடிட் கார்டுகள் அல்லது கூகுள் பே போன்ற சேவைகளை பயன்படுத்தி பணம் செலுத்தலாம். புதிய வசதி மூலம் பயனர்கள் அவசர கால பயணத்திற்கோ அல்லது, எப்போதாவது பயணம் செய்பவருக்கு பயனுள்ளதாக இருக்கும்.
மெட்ரோ ரெயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட்ட சமயத்தில், முதற்கட்டமாக டோக்கன் மற்றும் ஸ்மார்ட் கார்டுகளே டிக்கெட்களாக வினியோகம் செய்யப்பட்டு வந்தன. பின் டோக்கன்கள் வரிசையில், ஸ்மார்ட் கார்டுகளின் பயன்பாடு அதிகரித்தது. இதைத் தொடர்ந்து கியூஆர் கோடு முறையில் டிக்கெட் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த வரிசையில் தான் தற்போது வாட்ஸ்அப் சார்ந்த இ டிக்கெட்கள் வினியோகம் செய்யப்படுகின்றன. "கியூஆர் கோடு டிக்கெட்களை தவிர வாட்ஸ்அப் சார்ந்த இ டிக்கெட்கள் அவசர கதியில் மெட்ரோ சேவையை பயன்படுத்துவோருக்கும், வரிசையில் நின்று டிக்கெட் வாங்க நேரமில்லாத பயணிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும். பயண அட்டையை ரிசார்ஜ் செய்ய நேரமில்லாதவர்களும் அவசரத்திற்கு இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்," என்று மெட்ரோ ரெயில் அதிகாரி தெரிவித்துள்ளார்.






